Monday, April 28, 2014

பக்தி யோகம் - தொகுப்பு

பக்தி யோகம் - தொகுப்பு


பக்தி என்பது ஞானம் , விஞ்ஞானம் இரண்டும்  சேர்ந்தது. வெளி  உலகம், உள் உலகம் இரண்டும் சேர்ந்தது பக்தி. வெளி உலக  பொருள்களும்,தனி மனித  அனுபவமும்  கலந்தது பக்தி.

பக்தி என்பது செய்ய எளிதானது.  செய்து உணரக் கூடியது. அது ஏதோ தத்துவ விசாரம் அல்ல. நடைமுறையில் செய்யக் கூடிய ஒன்று.

பக்தி செய்ய இல்லறம் ஒரு தடை அல்ல.

பக்தி என்பது என்ன ?

எல்லாவற்றிலும் ஒரு புனிதத் தன்மையை காண்பது பக்தி.  அவ்வளவுதான். இது  உயர்ந்தது , இது தாழ்ந்தது  என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்திலும் ஒரு புனிதத் தன்மையை காண்பது பக்தி.

கூளத்தையும், மலத்தையும் வணங்க வேண்டும் என்று பாரதி சொன்னது போல அனைத்தும் தெய்வம் என்று அறிவது பக்தி.

மாறும் உலகில் மாறாத தன்மையை காண்பது பக்தி

பொருள்கள் ஒன்று அழிந்து இன்னொன்று  உண்டாகிறது. இது இயற்கையாக நிகழ்ந்து  கொண்டே  இருக்கிறது.இது பொருள்களின்  இயல்பு.

இறைவன் இவற்றைப் படைப்பதும்  இல்லை.அழிப்பதும் இல்லை. அவை அப்படியே  இருக்கின்றன. ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டே இருக்கிறது.

பக்தி என்பது பொருள்களின் புற வடிவங்களை பார்த்து வேறுபாடு  கொள்வது அல்ல.  புற வடிவங்களைத் தாண்டி பொருள்களின் மற்றும் மனிதர்களின் அக  வடிவை காண்பது பக்தி.


பக்தி மனதை புற வடிவங்களை நோக்கி அலைய  விடாது.எல்லாம்  ஒன்றுதான்  ஒரு நிறைந்த மன நிறைவைத் தரும்.

புற வடிவங்களை கடந்து உண்மை எது வேண்டு ஞானிகளும் யோகிகளும்  எப்போதும்    சிந்திப்பார்கள்.இதுவே பக்தி.

செயலும்,  செய்பவனும்,செயலின் பலனும் அனைத்தும் ஒன்றே. இங்கு செய்பவன்  வேறு, செய்யப்படுவது வேறு அல்ல. அனைத்தும் ஒன்றே. இதை அறிவது  பக்தி.

இந்த உலகம், அதை உணரும் நம் அறிவு, எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.  இவற்றை அறிவதே பக்தி.

 பொருள்களில்,அவை தரும் இன்பத்தில் நாட்டம் கொண்டு அவற்றின் பின்னால் போபவர்கள்  அவற்றை அடைந்து இன்புற்றாலும், மீண்டும் மீண்டும்  அந்த ஆசை வலையில் அகப்பட்டு துன்பம் அடைவார்கள். பொருளாசை முடியக் கூடியது அல்ல. என்றும் அது திருப்தி அடையாது - சொர்கமே கிடைத்தாலும்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த ஒன்றை அறிவதே உணர்வதே பக்தி.

எல்லாம் எனக்கு எனக்கு என்ற எண்ணம் இருக்கும் போது, நான் வேறு அந்த பொருள்கள்  வேறு என்ற எண்ணமும் இருக்கும். அது மட்டும் அல்ல, நான் வேறு  மற்றவர்கள் வேறு , அவர்களுக்குத் தராமல் நான் இந்த பொருள்களை வைத்துக் கொள்கிறேன் என்ற பாகு பாடும் இருக்கும். எல்லாம் , எல்லாருக்கும்  என்ற எண்ணம் வரும் போது அனைத்தும் ஒன்றே என்ற அறிவும்   பிறக்கும்.அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுவே பக்தி. கொடுபதின்  மூலம் பொருள்களின் மேல்  உள்ள பற்று  விலகும்.

எதைச் செய்தாலும் நமக்கு என்று சுயநலம் இல்லாமல் செய்வது பக்தி. அப்படி செய்யும் போது  செயல்கள் புனிதம்  அடைகின்றன.சுயநலத்தோடு செய்யப்படும்  எதுவும் புனிதம் அடைவது இல்லை.

எல்லா உயிர்களும் சமம் என்ற உணர்வே பக்தி உணர்வு.

இந்த பக்தி உணர்வு வந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த நிலையை  அடைவார்கள்.

இப்படி மனம் ஒரு உயர்ந்த பக்தி நிலையில் இலயிக்கும் போது நாம் ஒரு உயர்ந்த  உன்னத நிலையை அடைகிறோம்.


3 comments:

  1. Simple to follow, try out

    எதைச் செய்தாலும் நமக்கு என்று சுயநலம் இல்லாமல் செய்வது பக்தி. அப்படி செய்யும் போது செயல்கள் புனிதம் அடைகின்றன.சுயநலத்தோடு செய்யப்படும் எதுவும் புனிதம் அடைவது இல்லை.

    எல்லா உயிர்களும் சமம் என்ற உணர்வே பக்தி உணர்வு.

    ReplyDelete
  2. Thanks RS for helping us to understand this 9 th chapter. wonderful on Bhakthi.
    it tells us simple way for great goals. One of the best self help material.

    ReplyDelete
  3. கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பின் இப்போதுதான் பக்தி யோகம் படித்து முடித்தேன். இந்தத் தொகுப்பு மிக அருமை.

    ஒரு நூல் எல்லைகளைக் கடந்து, காலம் காலமாக விளங்க வேண்டுமென்றால், அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். சும்மா “கிருஷ்ணனுக்குப் பூசை பண்ணுங்கள்” என்று சொல்லி விடாமல், இந்து, முஸ்லிம், கிருஸ்துவன், இந்தியன், ஆப்பிரிக்கன், ஆஸ்திகன், நாஸ்திகன் என்று எல்லோருக்கும் பொருந்தும்படி, கீதையின் ஆழ்ந்த உட்பொருளைப் பற்றி எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete