Tuesday, August 23, 2016

கீதை - 16.4 - அசுர சம்பந்தம்

கீதை - 16.4 - அசுர சம்பந்தம் 



दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम् ॥१६- ४॥

த³ம்போ த³ர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச |
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||


தம்போ = தம்பம்

தர்போ = இறுமாப்பு

அபிமாந = கர்வம்

 ச = மேலும்

க்ரோத: = கோபம்

பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஜ்ஞாநம் = அறிவீனம்

சா = மேலும்

அபிஜாதஸ்ய = பிறந்தது

பார்த = பார்த்தா

ஸம்பதசம்  = சம்பந்தம் உள்ளது

அஸுரீம் = அசுர குணங்கள்

டம்பம், இறுமாப்பு, கர்வம், கோபம் , கடுமை, அஞ்ஞானம் போன்ற குணங்கள் அசுர சம்பந்தம் உள்ளவர்களிடம் காணப் படுகிறது.

முதலில் தெய்வ சம்பந்தமான குணங்களை கூறிய கீதை , அடுத்து  அசுர சம்பந்தமான குணங்களை கூறுகிறது.


நல்லதை மட்டும் சொல்லி விட்டு விட்டால், தீயதை இனம் காண முடியாமல் போகும். எனவே, தீய குணங்களையும் பட்டியல் போடுகிறது கீதை.

டம்பம் ...இதற்கு வஞ்சனை, சூது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்று சொல்லலாம்.

அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று வைத்து பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்பார் வள்ளலார்.

உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து விட்டால், நாட்டில் ஒரு குழப்பமும் இருக்காது. மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றை சொல்வதால்தான் அத்தனை சிக்கல்களும்.

உள்ளே நினைப்பதை எல்லாம் எப்போது வெளியே சொல்ல முடியும் ?

நினைவு ஒழுங்காக இருத்தால், நினைப்பதை வெளியில் சொல்ல முடியும்.

"நினைவு நல்லது வேண்டும் " என்றார் பாரதியார்.

மனம் தூய்மையாக இருந்தால், வெளிப்படும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்.

தர்பா ..இறுமாப்பு ..அகந்தை திமிர்.

நான் தான் எல்லாம், என்னால் தான் எல்லாம் என்ற அகந்தை. கர்வம் போக வேண்டும். கர்வம் வரும் போது அரக்க குணம் வெளிப்படும்.

குரோதம் - கோபம்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர். சினம் தன்னைச்  சேர்ந்தவர்களை கொல்லும் . யாரிடம் சினம் இருக்கிறதோ, அவர்களின் சுற்றத்தையும் கொல்லும்.

மற்ற அனைத்து குற்றங்களும் வெளியில் இருந்து உள்ளே வருவன. காமமும், கோபமும் உள்ளிருந்து வெளியே செல்லும் குற்றங்கள்.

தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்ட விஸ்வாமித்ரன் கூறுவான் "கானகத்தில் முனிவர்கள் செய்யும் யாகத்தை கெடுக்க காமம் மற்றும் கோபம் போன்ற தீய குணங்கள் போல அரக்கர்கள் வந்து இடையூறு செய்கிறார்கள்...."



“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.



காமமும் கோபமும் அவ்வளவு தீய குணங்கள். அசுரர்கள் யாகத்தை கலைப்பது போல நம் வாழ்க்கை என்ற தவத்தை கலைக்கும் அசுரர்கள் இந்த காமமும் கோபமும்.


பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்


கோபம் வரும் போது மற்றவர்கள் பக்கம் உள்ள ஞாயம் தெரியாது. நாம் சொல்வதே சரி என்று அடம் பிடிக்கத் தோன்றும். மற்றவர்களின்  மனதை வார்த்தைகளால் , செயல்களால் வருத்தம் அடையச் செய்வோம். 


மற்றவர்களை துன்பப் படுத்துவதுதானே அசுரர்களின் குணம். 

முரட்டுத்தனம் வரும்போது நாமும் அசுரர்கள் ஆகி விடுவோம். 

எதிலும் ஒரு மென்மையை கடைபிடிக்க வேண்டும். 


அறிவீனம்....தன்னை அறியாத அறிவீனம், தன்னை சுற்றி உள்ள உலகை அறியாத அறிவீனம், தனக்கும் தன்னை சுற்றி உள்ளவற்றிற்கும் உள்ள தொடர்பை, உறவை அறியாத அறிவீனம். இந்த அறிவு இல்லாமல்  மனிதன் பல தவறுகளை செய்கிறான். 

அனைத்து தீய குணங்களுக்கும் அடிப்படை காரணம் அறிவீனம். 

ஞானத்தை வளர்ப்போம். அசுர குணங்களை விட்டு தெய்வ சம்பத்தை அடைவோம். 

அடைய வாழ்த்துக்கள்.




Thursday, August 18, 2016

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3


तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌ²சமத்ரோஹோ நாதிமாநிதா |
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத || 16- 3||

தேஜ: = தேஜஸ், ஒளி

க்ஷமா = மன்னிக்கும் குணம்

த்ருதி: = உறுதி

ஸௌ²சமத் = தூய்மை

அ த்ரோஹ = த்ரோஹமின்மை

 நா = இல்லை

அதி மாநிதா = கர்வம் , ஆணவம்

பவந்தி = இவை

ஸம்பதம் = அடைதல்

தைவம் = தெய்வம்

அபிஜாதஸ்ய = தொடர்பு உடையவனாகிறான்

பாரத = பாரத குல தோன்றலே


ஒளி, மன்னிக்கும் மனம்,  உறுதி, சுத்தம், துரோகமின்மை , கர்வம் இன்மை  போன்ற இந்த குணங்கள் தெய்வ சம்பத்தை அடைந்தவனிடம் காணப்படுகின்றன. 


ஒளி ... உடல் ஒளி விடுமா ? விடும் என்று சொல்கிறார்கள். ப்ரதீப என்று ஒரு   இராஜா இருந்தார். தீபம் போல ஒளி விடுமாம் அவர் உடல்.

இராமன் கானகம் போகிறான். பட்டுடை இல்லை, தங்கக் கிரீடம் இல்லை, ஒரு பகட்டும் இல்லை. இருந்தும் அவன் உடல் ஒளி விட்டதாம். அந்த ஒளியில், சூரியனின் ஒளி மங்கிப் போய்விட்டதாம்.


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

வெய்யோன் ஒளி என்றால் சூரியனின் ஒளி, இராமனின் உடலில் இருந்து கிளம்பும்  ஜோதியின் தோற்றத்தில் மறைந்து போனதாம்.  இராமனின் மேனி அவ்வளவு பிரகாசம் கொண்டது. சூரிய ஒளியை மங்க வைக்கும் அளவுக்கு பிரகாசமானது.

அது சத்தியத்தின் ஒளி. அஞ்ஞானத்தை போக்கும் ஞான ஒளி.



மன்னிக்கும் குணம் ....பிறர் செய்யும் தவறுகளை, குற்றங்களை  மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள் , ஒன்று வருந்துவார்கள் அல்லது  எப்படி தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு  விடிவு காண்பது என்று பழி வாங்கத் துடிப்பார்கள்.

ஏதோ கையாலாகாமல் பொறுத்துப் போவது அல்ல பொறுமை. தனக்கு தீமை செய்தவர்களை தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தண்டிக்காமல் இருப்பது தான் மன்னிக்கும் குணம்.


பொறுமை என்பது மிகப் பெரிய வலிமையான குணம் என்கிறார் வள்ளுவர்.


இன்மையுள்  இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.


துன்பத்தில் பெரிய துன்பம், வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிக்க முடியாமல் போவது .  வலிமையான குணங்களில் பெரிய வலிமை மிக்க குணம்  பொறுமை ஆகும்.

பாரதம் காட்டும்   மிகப் பெரிய பொறுமையை.

நாடிழந்து, வீடிழந்து , தம்பியரை இழந்து , தாரத்தையும் இழந்து நிற்கிறான் தர்மன். மனைவியை மான பங்கம் செய்ய நினைக்கிறான்  துரியோதனன். அப்போதும் பொறுமையாக இருக்கிறான் தர்மன். நினைத்து பார்க்க முடியுமா ?

கொதித்து எழுந்த பீமன் சொல்லுவான், துரியோதனின் துரோக சிந்தனையை விட உன்  அற சிந்தனைக்கு அஞ்சினேன் என்று.

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான் பீமன். 

மன்னிக்கும் குணம் எதோ இயலாமையில் வந்த , பலவீனமான செயல் என்று   எண்ணி விடாதீர்கள். மிக மிக பலம் வாய்தவர்களால் தான் மன்னிக்க முடியும். 

உறுதி ...உடலில் மட்டும் அல்ல, உள்ளத்திலும். பெரும்பாலானோருக்கு படிக்க படிக்க உறுதி குறையும். குழப்பம் அதிகமாகும். எதைச் செய்வது, எப்படி செய்வது என்று  தெரியாமல் குழப்புவார்கள். அந்த குழப்பத்தில் மேலும் படிப்பார்கள். மேலும் குழப்புவார்கள். எதிலும் உறுதி கிடையாது. படித்ததை எல்லாம் ஊருக்குச்  சொல்லுவார்கள்.தங்கள் வாழ்வில் எதை கடை பிடிப்பது என்று தெரியாமல் தவிப்பார்கள். 

கீதையை வாசிப்பார்கள். பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். அதை நடை முறையில்   கடை பிடிப்பார்களா என்றால் "இதெல்லாம் நடை முறைக்கு சாத்திய படாது" என்று கூறி தள்ளி வைத்து விடுவார்கள். 

அவர்களை போன்ற முட்டாள் உலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். 

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்கா பேதையரில் பேதையர் இல் 

தீயவர்களுக்கு தீமை செய்வதில் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நன்மை செய்வதில் இருப்பது இல்லை. உலகில் உள்ள பல சிக்கல்களுக்கு அதுவே காரணம்.

சரி என்று மனதிற்குப் பட்டதை, உறுதியுடன் செயல் படுத்துங்கள். வெற்றி உங்களதே


http://bhagavatgita.blogspot.in/2016/08/163-3.html

Monday, August 15, 2016

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம் - பாகம் 2

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம் - பாகம் 2 



अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥

அஹிம்ஸா ஸத்யமக்ரோத ஸ்த்யாக: ஸாந்திரபைஸு²நம் |
த³யா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் || 16- 2||


அஹிம்ஸா = அஹிம்ஸை

ஸத்யம்ஸ = சத்யம்

அக்ரோத = கோபமின்மை

தியாகம் = தியாகம், துறவு

ஸாந்தி = அமைதி

அபைஸு²நம் = நேர் வழி, குறுக்குத் தன்மை யில்லாத

தயா = தயை

பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

அலோலுப்த்வம் = ஆசை இன்மை

மார்தவம் ஹ்ரீ = மென்மை

அரசாபலம் = சலனம் இன்மை


அகிம்சை, வாய்மை, கோபம் இல்லாமை, தியாகம்,  அமைதி, வன்மை , உயிர்கள் மேல் தயை , ஆசை இன்மை,  மென்மை, நாணுடைமை, விடா முயற்சி


எந்தெந்த நல்ல  குணங்கள் இருந்தால், அல்லது கெட்ட குணங்கள்  இல்லாவிட்டால் நாம் தெய்வ  சம்பந்தம் பெறுவோம் என்று கீதை பட்டியல் தருகிறது.

தொடரும் பட்டியல்


அமைதி...அகிம்சை, வாய்மை, கோபம் இளமை, தியாகம் என்று இவற்றை  எல்லாம் செய்தால், வாழ்வில் எதையோ இழந்த மாதிரி ஒரு   ஏக்கம் இருக்கும். தியாகம் செய்து விட்டு வாழ்வில் எதை அனுபவிப்பது ? ஒரு வேளை இந்த கீதை சொல்வது நடை முறைக்கு சரி வராதோ   என்ற  சஞ்சலம் வரலாம். சந்தேகம் வரலாம்.

அமைதி எப்போது வரும் ? தியாகமும் துறவும் மன மகிழ்வை தந்தால் , அதில் இருந்து அமைதி வரும். இல்லை என்றால் ஏக்கம் தான் வரும்.

அபைஸு²நம் = நேர் வழி, குறுக்குத் தன்மை யில்லாத


மனதில் குறுக்கு புத்தி எப்போது வரும் ? தவறான எண்ணங்களும், தீய எண்ணங்களும் மனதில் இருந்தால் குறுக்கு புத்தி வரும். எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனமும் செயலையும் ஒழுங்காக இருக்கும். 


தயா = தயை
பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

உயிர்களின் மேல் கருணை. உள்ளத்தில் அன்பிருந்தால் கருணை தானே வரும். கருணை என்பது ஏதோ ஏழைகள் மேல், துன்பப் படுபவர்கள் மேல் மட்டும் வருவது அல்ல. தவறு செய்பவர்கள் மேலும், வலிமையானவர்கள் மேலும் வருவதுதான் தயை. தன்னை சிலுவையில் வைத்து அறைந்தவர்களுக்காக பிரார்த்தித்தார் கர்த்தர். அது தயை. அது கருணை. தன்னை கொன்ற துரோகியைக் கூட "தத்தா நமர் என தடுத்து வீழ்த்தார் " மெய் பொருள் நாயனார். அனைத்து உயிர்கள் மேலும் இரக்கம் கொள்ளச் சொல்லுகிறது கீதை. 

அருட் பெருஞ் ஜோதி, தனிப் பெருங் கருணை என்பார் வள்ளலார். 


கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை ”  என்பார் மணிவாசகர்




முகம் பொழி கருணை போற்றி என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

கருணை என்பது தெய்வாம்சம்.


அலோலுப்த்வம் = ஆசை இன்மை

இதை படித்தவுடன் எல்லோருக்கும் ஒரு ஆயாசம் வரும். என்னடா இது ஆசை இல்லாமல் இரு , ஆசை இல்லாமல் இரு என்று ஒரே போதனையா போச்சு என்று.  அன்பா இரு, உயிர்கள் மேல் அன்பு செலுத்து என்று சொல்வதெல்லாம் சரி . ஆசை இல்லாமல் எப்படி இருப்பது ?

ஆசையின் மூலம் இன்பம் வரும் என்று நினைக்கிறோம். ஆசையின் மூலம் முன்னேற்றம் வரும் என்று நினைக்கிறோம். புலன் இன்பங்கள் ஒரு போதும் நிறைவைத் தருவது இல்லை. ஒன்று முடிந்தால் , அடுத்தது என்று இழுத்துக் கொண்டே போகும். அதற்கு முடிவே இல்லை. அனைத்து ஆசைகளும் நிறைவேறிய ஆள் யாரவது ஒருவன் உண்டா இந்த உலகில். ஓட்டைப் பாத்திரத்தில் நீர் விட்டு நிரப்பவும் வேலை  அறிவான செயல் தான.

கீதை சொல்கிறதே என்பதற்காக ஆசையை விடக் கூடாது. ஆசையின் அர்த்தம் அற்ற தனத்தை அறிந்து , அதை விட வேண்டும்.

எல்லா ஆசையையும் ஒரே நாளில் விட முடியாது.

கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பாருங்கள்.

விட விட இன்பம்தான்.



மார்தவம் ஹ்ரீ = மென்மை

எதையும் மென்மையாக அணுகிப் பாருங்கள். குரலை உயர்த்தாமல், சண்டை பிடிக்காமல், கோபம் கொள்ளாமல், பொறுமையாக மென்மையாக  அணுகிப் பாருங்கள். எல்லா பிரச்சனைகளும் தீரும். நாம் குரலை   உயர்த்த, எதிராளி அதற்கு மேல் போக...எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு.  ஆசை அற்றவன், மென்மையாக இருப்பான்.

நாம் நம் மேலேயே மென்மையாக இருப்பது இல்லை. அப்புறம் அல்லவா மற்றவர்கள் மேல் மென்மை வர. நாம் சரி இல்லை, இன்னும் கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம், இன்னும் கொஞ்சம் நிறமாக இருக்கலாம், இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இருக்கலாம் என்று  நம்மை நாமே மறுதலித்துக் கொண்டு இருக்கிறோம். முதலில் நம் மீதே   நாம் மென்மையாக இருக்கப் பழகுவோம். நமது பாவங்களை நாம்  மன்னிப்போம். நமது இறந்த காலத்தோடு சமரசம் செய்து கொள்வோம்.  என்னை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது  மற்றவர்களையும் ஏற்றுக் கொள்ளுவேன்.

அளவுக்கு அதிகமாக உபயோகப் படுத்தாமல் இருப்பது கூட ஒரு மென்மை தான். சுற்றுச் சூழல் மேல் மென்மை. குப்பை போடாமல் இருப்பது,



அரசாபலம் = சலனம் இன்மை.

நமது மனம் நம்  உடல் போன வழியெல்லாம் போகும். கண் எங்கே போகிறதோ, அதன் பின்னால் மனம் போகும். காது எங்கே போகிறதோ , அதன் பின்னால் மனம் போகும்.

மனதை அடக்க வேண்டும் என்றால், புலன்கள் அலைவதை நிறுத்த வேண்டும்.

பெரிய பாத்திரத்தில் சிறிய துளை இருந்தால் கூட , அதன் வழியே அனைத்து நீரும் கசிந்து வெளியேறுவதைப் போல, ஒரு புலன் வெளியே போனாலும்  , அனைத்தும் கூடவே போய் விடும்.

சீதையை காணக் கூட இல்லை இராவணன். சூர்ப்பனகை சொல்லக் கேட்டான்.  காது வழி வந்த செய்தி, அதன் மூலம் மனம் காம வசப் பட்டது. அழிந்தான்.

தவமும், கல்வியும், கேள்வியும், வீரமும் புலன் அடக்கம் இல்லாததால் அழிந்தே போனது.

சலனம் இன்றி இருக்க வேண்டும்.

இந்த இராஜ்யம் என்ற போதும் இராமன் மகிழவில்லை.

இராஜ்யம் இல்லை, கானகம் போ என்ற போதும் கலங்கவில்லை.

அது சலனம் அற்ற மனம்.

ஓடுகின்ற மனத்தை நிறுத்த முடியாது. அது ஓடுகின்ற திசையை மாற்றலாம்.

உங்கள் மனம் உங்களை எங்கே இழுத்துக் கொண்டு போகிறது என்று சற்று கவனியுங்கள். அது போகும் இடத்திற்கு போக ஆசையா ?

http://bhagavatgita.blogspot.in/2016/08/16.html




Monday, August 8, 2016

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம்

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம்



अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥

அஹிம்ஸா ஸத்யமக்ரோத ஸ்த்யாக: ஸாந்திரபைஸு²நம் |
த³யா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் || 16- 2||


அஹிம்ஸா = அஹிம்ஸை

ஸத்யம்ஸ = சத்யம்

அக்ரோத = கோபமின்மை

தியாகம் = தியாகம், துறவு

ஸாந்தி = அமைதி

அபைஸு²நம் = வன்மை , வலு

தயா = தயை

பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

அலோலுப்த்வம் = ஆசை இன்மை

மார்தவம் ஹ்ரீ = மென்மை

அரசாபலம் = விடா முயற்சி


அகிம்சை, வாய்மை, கோபம் இல்லாமை, தியாகம்,  அமைதி, வன்மை , உயிர்கள் மேல் தயை , ஆசை இன்மை,  மென்மை, நாணுடைமை, விடா முயற்சி


எந்தெந்த நல்ல  குணங்கள் இருந்தால், அல்லது கெட்ட குணங்கள்  இல்லாவிட்டால் நாம் செய்த சம்பந்தம் பெறுவோம் என்று கீதை பட்டியல் தருகிறது.

அகிம்சை - இம்ஸை செய்யாமல் இருப்பது. இம்சை என்றால் ஏதோ உடல் அளவில் துன்பம் செய்வது மட்டும் அல்ல. ஒரு பார்வையில், ஒரு வார்த்தையில்  மற்றவரின் மனதை துன்பப் படுத்தி விடலாம். மனதாலும்,  வாக்காலும், செயலாலும், செயல் இன்மையாலும் மற்றவர்களுக்குத் துன்பம் தரக் கூடாது.

"நீ எனக்கு அதை வாங்கித் தரா விட்டால் உன்னோடு பேச மாட்டேன், சாப்பிட மாட்டேன்" என்று மனைவி , கணவனிடம் அடம் பிடித்தால் அது கூட ஹிம்சை தான். மனைவி கணவனை அடிக்க வில்லை, சூடான வார்த்தை எதுவும் சொல்ல வில்லை...இருந்தாலும், கணவனின் மனம்  சங்கடப் படுகிறது. அது ஒரு ஹிம்சை.

அதே போல், மனைவி ஒன்று கேட்டு , கணவன் , அது தன்னால் முடிந்தும் வேண்டும் என்றே வாங்கித் தராமல் இருந்தால் அவள் மனம் துன்பப் படும். அதுவும் ஒரு ஹிம்சை தான்.

அகிம்சை என்பது ஏதோ அடி தடி மட்டும் அல்ல. அமைதியாக, பேசாமல், ஒரு பார்வை அசைவில், ஒரு துளி கண்ணீரில் கூட மற்றவர்களை  காய படுத்தி விடலாம்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்பது உலகப் பொதுமறை.

அப்படி கூட செய்யாமல் இருப்பதுதான் கீதை காட்டும் அகிம்சை.



சத்யம் - உண்மை. எது உண்மையோ அதையே பேசுவது, அதையே கடை பிடிப்பது.  உண்மைக்கு புறம்பாக எதையும் செய்யாமல் இருப்பது.

மெய் பொருளை கண்டு அறிவது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்பதும் அவர் வாக்கே.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி நின்று மிளிர்கின்ற மெய் சுடரே என்பார் மணிவாசகர்.

அந்த மெய் ஞானத்தை கண்டு அடைய வேண்டும்.


அக்ரோத - அக்ரோத என்பதற்கு கோபமின்மை என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. கோபத்தின் கொடுமை இல்லாமல் இருப்பது. குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் கோவப் படுவது பெற்றோரின் இயல்பு. அந்தக் கோபம் கூட இல்லை என்றால் அவர்கள் கொண்ட அன்பிற்கும் அர்த்தம் இல்லை என்றாகும். கோபம் இருக்க வேண்டும்.  கோபத்தின் கொடூரம் இருக்கக் கூடாது.


தியாகம் = தியாகம், துறவு ...கீதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் ஒரு குணம். உலக  இன்பங்களை அனுபவி. ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்காதே. அது மட்டும் அல்ல, ஒரு குடும்பம் சிறக்க வேண்டும் என்றால் அதில் உள்ள ஒவ்வொருவரும் கொஞ்சம் தியாகம் செய்ய   வேண்டும். ஒரு சமுதாயம் சிறக்க வேண்டும் என்றால்  அதில் உள்ள மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தியாக செய்யத்தான் வேண்டும்.

வரி கொடுப்பதும் ஒரு தியாகம் தான்.

சட்ட ஒழுங்கை மதித்து நடப்பது நம் சுதந்திரத்தை தியாகம் செய்வது தான்.

ஒரு வீட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர்  புரிந்து கொண்டு தியாகம் செய்து வாழ்ந்தால் அந்த வீடும், சமுதாயமும், நாடும் அமைதியுடன் , மகிழ்ச்சியுடன் திகழும்.

தனி மனித சுதந்திரம், சுயநலம் என்று போனதால் இன்று நாட்டில் அநேக குழப்பங்கள்.

கீதையை படிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு வார்த்தையும் உள் வாங்கி அதன் படி   நடந்தால், நாடும் வீடும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

நம்மி முன்னவர்கள் , நாம் நலமுடன் வாழ மிகப் பெரிய பொக்கிஷத்தை விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

அதை அறியாமல், எங்கெங்கோ அலைந்து கொண்டு இருக்கிறோம்.

கீதையை படிப்போம். நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவோம்.

 சுயநலம் துறந்து, நாடும் வீடும் செழிக்க அது தான் வழி.

முயன்றுதான் பார்ப்போமே.

(தொடரும்)

http://bhagavatgita.blogspot.in/2016/08/162.html



Wednesday, August 3, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 4

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 4


श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||


ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாய = படித்து ஆராய்ந்து 

ஸ்தப = தவம் செய்து 

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, படித்து ஆராய்ந்து, தவம் செய்து, நேர்மை மற்றும் எளிமை. 


தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

புலனடக்கம் ...புலன்களை அடக்கவில்லை என்றால் அது தன் விருப்பத்துக்கு நம்மை  இழுத்துக் கொண்டு போய் விடும். 

போனால் போகட்டுமே. அதனால் என்ன. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத்தானே. எதற்காக அதை அடக்க வேண்டும் ? 

சட்டத்திற்கு உட்பட்டு, சமுதாய எல்லைகளுக்குள் இன்பத்தை அனுபவித்தால் என்ன ?

நாம் நமது புலன்களை இரண்டு விதத்தில் பயன் படுத்தலாம். ஆக்க பூர்வமாகவும் பயன்  படுத்தலாம். அழிவு வழியிலும் பயன்படுத்தலாம். புலன்களின் தன்மை இன்பத்தை  நுகர்வது. அதை கட்டுப் படுத்தாவிட்டால் அளவுக்கு அதிகமாக இன்ப நுகர்ச்சியில் சென்று , அழிவை அடைவோம். 

சுவையான தின் பண்டங்களை உண்பது நல்லதுதான். இனிமையானது தான். அதற்காக கண்டதையும் உட்கொண்டால், ஆரோக்கிய கேடு நிகழும். 

மேலும், நமது புலன்களை இன்பம் அனுபவிக்க மட்டும் பயன் படுத்தாமல் , நம் அறிவை வளர்த்துக் கொள்ள, வாழ்வில் உயர பயன் படுத்தலாம். 

கீதை இன்பம் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. 

புலன்களை எவ்வளவு தூரம் இன்பம் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும், எவ்வளவு தூரம்  ஆக்கபூர்வமான வழியில் செலுத்துவது என்று அறிந்து அதை செலுத்துவதே புலனடக்கம் என்பது. 

தன்னலமின்மை...புலனடக்கம் எப்படி வரும் ? புலன்கள் எப்போதும் இன்பம் வேண்டும் இன்பம் வேண்டும் நம்மை தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவு நேரம் தான் அவற்றோடு சண்டை போடுவது ? புலன்களை எப்படி அடக்குவது ? புலன்களை அடக்கி , அளவோடு இன்பம் அனுபவிக்க அனுமதித்து , அவற்றை ஆக்க பூர்வமான வழியில் செலுத்துவது எப்படி ? 

அதற்கும் கீதை வழி சொல்கிறது. 

தன்னலமின்மை. எப்போது சுயநலம் தலை தூக்கி நிற்கிறதோ, அப்போது உலகில் உள்ள அனைத்து இன்பங்களும் நமக்கே வேண்டும் என்று மனம் ஆலாய் பறக்கும். அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்தும் வேண்டும் என்று தாவித் திரியும்.

புலனடக்கத்திற்கு வழி தன்னலமின்மை. நமக்கு கிடைத்த இன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது புலன் இன்பத்தில் அமிழ்ந்து போகாமல் இருக்க முடியும். 

பகிர்ந்து அனுபவிக்கும் போது , ஒன்று நாம் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க மாட்டோம். இன்னொன்று, மற்றவர்கள் சந்தோஷப் படுவதை பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. 

தானத்தின் ஒரு வகை தான் சுயநலமின்மை. தானமும், சுயநலமின்மையும் சேரும்போது புலனடக்கம் தானே வரும். 

வீட்டில் இனிப்பு செய்தால், அண்டை அயல் வீட்டுக்கு கொடுத்து உண்டால், அனைத்தும் நாமே உண்டு அதனால் வரும் ஆரோக்கிய குறைவை தவிர்க்கலாம். அவர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மோடு சினேகமாக இருப்பார்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் நட்புடன் வாழ இந்த சுயநலமின்மை உதவும். 

மேலும், சுயநலம் வருவதால் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு நடுவில் விரிசல், சகோதர்களுக்கிடையே புகைச்சல், சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கும் இன்னோர் பிரிவினருக்கும் பகை வருகிறது. சுயநலமில்லாத சமுதாயம் மிக உயர்ந்த சமுதாயமாக இருக்கும்.

அதுவே கீதை காட்டும் வழி. 


படித்து ஆராய்ந்து ...எதையும் படித்து அப்படியே கடை பிடிக்கச் சொல்லவில்லை கீதை. படித்ததை தீர ஆராய்ந்து, சரி தவறு எது என்று அறிந்து பின் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் வியாசர் சொல்கிறேன், கேள் என்று கீதை அறிவுறுத்தவில்லை.


தவம் செய்து .... நமது உடலில் ஓரளவு சக்தி உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது ? உலக இன்பங்களை அடைய அதை பயன்டுத்தலாம். அதே சக்தியை கொண்டு நான் யார், இந்தப் பிறவியின் நோக்கம் என்ன என்று அறிய முற்படலாம். பின்னது தவம் என்று சொல்லப் படுவது. தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , புற்று மேலே வளரும்படி ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் ஒன்று அல்ல. உயர்ந்த நோக்கங்களுக்காக நமது சக்தியை செலவிடுவதும் ஒரு விதத்தில் தவம் தான். 


நேர்மை மற்றும் எளிமை ...எளிமையாக இருக்கும்போது புலனடக்கம் தானே வரும். புலனடக்கம் வரும் போது தானம் கை  கூடும். சுயநலம் போகும். சுயநலம் இல்லாத இடத்தில் நேர்மை தானே வரும். 

இந்த ஸ்லோகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து சிந்தித்து வாழ்வில் நடைமுறை படுத்த வேண்டிய ஒன்று.

முடிந்தவரை முயற்சியுங்கள்.

நல்லதே நடக்கும். 

http://bhagavatgita.blogspot.com/2016/08/161-4.html