Tuesday, April 28, 2020

பகவத் கீதை - 2.52 - கேட்டதும், கேட்க வேண்டியதும்

பகவத் கீதை - 2.52 - கேட்டதும், கேட்க வேண்டியதும் 



यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥

யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||

யதா = அப்போது

தே  = உன்

மோஹகலிலம் = குழப்பமான

பு³த்³தி⁴ர் = புத்தி, மனம்

வ்யதிதரிஷ்யதி| = செல்லும்

ததா³= அப்போது

க³ந்தாஸி = நீ அடைவாய்

நிர்வேத³ம் = குழப்பமற்ற

ஸ்²ரோதவ்யஸ்ய  = எதை கேட்க வேண்டுமோ

ஸ்²ருதஸ்ய ச  = எதை கேட்டாயோ

எவ்வளவோ படிக்கிறோம். கேட்கிறோம். இருந்தும் வாழ்வில் ஒரு மாற்றமும்  ஏற்பட மாட்டேன் என்கிறதே.  அப்படியே தான் இருக்கிறோம்.

கீதை, பாகவதம், இராமாயணம், பாரதம் என்று எவ்வளவோ படிக்கிறோம். பத்தா குறைக்கு  நிறைய உபன்யாசங்கள் கேட்கிறோம்.

பின் ஏன் ஒரு மாற்றமும் ஏற்ப்பட மாட்டேன் என்கிறது?

காரணம் இருக்கிறது.

நமக்கு என்று சில அபிப்பிராயங்கள் இருக்கிறது. நாம் புதிதாக எதையாவது படித்தால், கேட்டால் அது நம் எண்ணங்களோடு ஒத்துப் போனால், "ஹா...நான் நினைச்சது சரிதான்..." என்று மண்டையை ஆட்டிக் கொண்டு போய் விடுவோம்.

ஒரு வேளை நாம் படித்தது, கேட்டது நமக்கு இது வரை தெரிந்த அறிந்த ஒன்றில் இருந்து   வேறு பட்டு இருந்தால், நாம் புதிதான ஒன்றை ஏற்றுக் கொள்ளுவதில்லை.  அதோடு வாதம் பண்ணுவோம். இல்லை என்றால் , "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று  தள்ளி வைத்து விடுவோம்".

இதற்கு காரணம் என்ன?

நம் மனதில் உள்ள குழப்பங்கள்.

தெளிவற்ற மனா நிலையில் இருக்கும் போது, மற்றவர்கள் ஏதாவது சொன்னால், அதை நாம் நம் மன நிலையில் இருந்தே பார்த்து, கேட்டு அதை மாற்றி விடுகிறோம்.

In English, they say, "People hear what they want to hear" nu.

யார் என்ன சொன்னாலும் அதை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுவோம்.

மன குழப்பத்தில் இருந்து விடுபட்டால் தான், என்ன சொல்லப் பட்டதோ அதை தெளிவாக அறிய முடியும்.

இரண்டாவது,  குழப்பம் உள்ள ஒருவன், எப்படி தெளிவான முடிவை எடுக்க முடியும்.  குழப்பத்தில் எடுக்கும் முடிவும் குழப்பமாகவே போய் முடியும்.  எனவே, முதலில் மன குசப்பத்தில் இருந்து விடுபட வேண்டும்.

சலனம் உள்ள நீரில் பார்த்தால், நம் முகம் சிதறுண்டு தெரியும். அதே நீர் தெளிந்து, சலனம் அற்று இருந்தால், பிம்பம் தெளிவாக தெரியும் அல்லவா?

அது போல,

மனம் குழப்பமாக இருந்தால், என்ன சொல்லித் தந்தாலும், மண்டையில் ஏறாது. குழப்பம் தான் மிஞ்சும்.

உங்கள் மனதின் குழப்பங்களை கவனியுங்கள். அது எங்கிருந்து வருகிறது என்று  பாருங்கள். அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.

குழப்பம் நின்றால் தெளிவு பிறக்கும்.

தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்பார் அபிராமி பட்டர்.

வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும்நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


"தேற்றனே தேற்றத் தெளிவே" என்பார் மணிவாசகர்.


தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்


சித்த விருத்தி நிரோதம் என்கிறது யோக சூத்திரம்


மனதில் தெளிவு இல்லாமல் ஆயிரம் படித்தும் ஒரு பலனும் இருக்காது .

தெளிவைத் தேடுங்கள்.


https://bhagavatgita.blogspot.com/2020/04/252.html