Friday, September 28, 2018

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று 


न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे॥२०॥

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||

ந = இல்லை

ஜாயதே = பிறப்பது

ம்ரியதே = இறப்பது

வா = மாறாக

கதா³சிந் = எப்போதும்

ந = இல்லை

அயம் = அவன்

பூ⁴த்வா = தோன்றிய பின்

ப⁴விதா= நிலைத்து இருத்தல்

வா = மேலும்

ந = இல்லை

பூ⁴ய:| = மறுபடியும்

அஜோ = பிறப்பது இல்லை

நித்ய: = நிரந்தரமான

ஸா²ஸ்²வத = அநாதியான

அயம் = அவன்

புராணோ  = பழமையானது

ந = இல்லை

ஹந்யதே = கொல்லப் படுவது

ஹந்யமாநே = கொல்வதும்

ஸ²ரீரே = உடல்

அவன் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. கொல்வதும் இல்லை. கொல்லப் படுவதும் இல்லை. அவன் பழமையானவன். என்றும் நிரந்தரமாக இருப்பவன். உடல் அழியும் போது இவன் அழிவது இல்லை. 


இதெல்லாம் பல முறை கேட்டாச்சு , கேட்டாச்சு. ஆத்மா அழியாது, பிறக்காது, கொல்லாது, கொல்லப் படாது என்று எத்தனை முறை கேட்பது. நடை முறை வாழ்க்கையில் நாம் உடல்களோடுதானே உறவு கொள்கிறோம். ஆத்மா எங்கே வந்தது ?  யாராவது இறந்து போனால் துக்கம் வரத்தானே செய்கிறது? நெருங்கியவர்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால், "உடம்பு தானே சரி இல்லை, ஆத்மாவுக்கு ஒன்றும் இல்லை" என்று இருக்க முடியுமா ? இதெல்லாம் கேட்க நல்லா இருக்கும், தத்துவ விசாரம் எல்லாம் சரி...நடை முறையில் இதனால் என்ன பயன்?

இது சரி தானா ?

நடை முறையில், அன்றாட வாழ்வில் நாம் ஆத்மாவை உணர்வது இல்லையா?

தெருவில் போகும் போது, செருப்பின் வார் அறுந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்லுவோம் "எனக்கு வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா "என்னுடய செருப்பின் வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா ?

வீட்டில் உள்ள கிரைண்டர் இல் ஒரு நட்டு (nut ) கொஞ்சம் லூசாக இருந்தால் என்ன சொல்லுவோம்?  எனக்கு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா அல்லது இந்த கிரைண்டருக்கு ஒரு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா ?

நாம் வேறு, நாம் உபயோகப் படுத்தும் பொருள்கள் வேறு என்று தெரிகிறது அல்லவா ?

எனக்கு பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவது இல்லை, என்னுடைய கார் வரும் வழியில் பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவோம்.

சரி. அதனால் என்ன ?


நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக்  கொள்வதுதான்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு போய்  விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான்காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண்படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் எதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இரசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?

இருந்தும் அடிக்கடி மறந்து விடுகிறோம். அது தான் சிக்கல்.

இந்த உடல் பிறக்கும், வளரும். மூப்பு அடையும். நோய்வாய் படும், இறக்கும். இது உடலின் இயல்பு.

நான் என்பது இந்த உடல் இல்லை என்றால், இந்த உடலை இயக்கம் அதற்கு இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு என்பதெல்லாம் இல்லை.


இதை வேறு ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

மின்சாரம் இருக்கிறது. அது டிவி யில் போனால் படம் தெரிகிறது, பல்பில் போனால் வெளிச்சம் வருகிறது, microwave இல் போனால் உணவு சூடாகிறது....இப்படி எந்த பொருளில் செல்கிறதோ அதை செயல் படுத்துகிறது.

பொருள்கள் அழியும். பல்பு பியூஸ் ஆகி விடும். மாற்றிவிடலாம்.

மின்சாரம் அழியாது. அதற்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. மூப்பும் இல்லை, பிணியும் இல்லை. அது ஒரு சக்தி. அவ்வளவுதான்.

தண்ணீர் மேலிருந்து கீழே விழுகிறது. விழும் போது turbine ஐ சுற்றுகிறது. அது டையனமோவை  சுற்றுகிறது. அதில் இருந்து மின்சாரம் வருகிறது.

நீரில் இருந்து மின்சாரத்தை எடுத்து விட்டால் நீரில் ஒன்றும் குறைவது இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.

வீட்டில் பல்பில் ஒளி தந்து விட்டு அந்த மின்சாரம் எங்கே போகிறது ? எங்கும் போவது இல்லை.  ஒளியாக மாறியது. அவ்வளவுதான்.

அது போல ஒரு சக்தி எனக்குள் இருந்து என்னை எழுத வைக்கிறது. உங்களுக்குள் இருந்து இதை வாசிக்க வைக்கிறது.

ஒவ்வொரு கருவியில் மின்சாரம் ஒவ்வொரு வேலையை செய்விப்பது போல.

நீங்கள் அந்த மின்சாரம் போல. எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பரிணமிக்கலாம்.

சிந்தியுங்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/220.html



Wednesday, September 26, 2018

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர்

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர் 



य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते॥१९॥

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||

ய = அவன்

ஏநம் = இந்த

வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)

ஹந்தாரம் = கொலை செய்வதாக

ய = அவன்

ஸ்அ = மேலும்

ஏநம் = இந்த

மந்யதே = நினைக்கிறான்

ஹதம்| = கொன்றதாக

உபௌ = இருவரும்

தௌ = இரண்டு

ந = இல்லை

விஜாநீதோ = அறிவது

ந = இல்லை

அயம் = அவன்

ஹந்தி= கொல்லப் படுவது

ந = இல்லை

ஹந்யதே = கொல்வதும்

எவன் ஒருவன் தான் கொல்வதாகவும் அல்லது கொல்லப் படுவதாகவும் நினைக்கிறானோ, அவர்கள் இருவரும் ஒன்றும் அறியாதவர்கள். அவன் கொல்வதும் இல்லம், கொலை செய்யப் படுவதும் இல்லை. 

குழந்தைகள் சோப்பு குமிழ் (bubble ) விட்டு விளையாடும். அந்தக் குமிழ் வண்ண மயமாக மிதக்கும். அவர்கள் ஓடிச் சென்று அதை தொடுவார்கள். அந்த குமிழ் சட்டென்று வெடித்து மறையும்.

முதலில் சோப்புத் தண்ணீராக இருந்தது, பின் சோப்பு குமிழாக மாறியது, தொட்டவுடன் மீண்டும் சிறு நீர் திவலைகளாக சிதறி மறைகிறது.

நீர் மீண்டும் நீராக மாறியது. நடுவில் ஒரு வண்ண மய விளையாட்டு. சோப்புக் குமிழை யாராவது கொன்று விட்டேன் என்று சொல்லுவார்களா?

ஒரு நிமிடம் நீங்கள் அந்த சோப்புக் குமிழாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை அந்த சோப்புக் குமிழ் என்று நினைக்கும் வரை, அந்த குமிழ் வெடித்துச் சிதறும் போது , நீங்கள் கொலை செய்யப்பட்டதாகவே நினைப்பீர்கள். மாறாக, நீங்கள் உங்களை அந்த தண்ணீர் என்று நினைத்தால் , கொலை குமிழ் வெடிக்கும் போது கொலை நடந்ததாக நினைக்க மாட்டீர்கள். நான் தண்ணீராக இருந்தேன், இப்போது மீண்டும் தண்ணீராக இருக்கிறேன். நடுவில் கொஞ்சம் வடிவம் மாறினேன் என்று நினைப்பீர்கள் அல்லவா.

உண்மையில் நீங்கள் யார் ?

தண்ணீரா அல்லது சோப்புக் குமிழா ?

சோப்புக் குமிழ் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இறப்பும் உண்டு.

தண்ணீர் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

நீங்கள் யார் என்று அறிவது தான் இங்கே சிக்கல்.

சோப்புக் குமிழுக்குத் தெரியாது தான் தண்ணீர் என்று.

யார்? நானா ? தண்ணீரா ? இல்லவே இல்லை. பார் நான் எவ்வளவு வண்ண மயமாக இருக்கிறேன். எப்படி காற்றில் மிதக்கிறேன். என்னைப் போல் எத்தனை சோப்பு குமிழ்கள் காற்றில் மிதக்கின்றன. நாங்கள் எல்லாம் ஒரு இரகம் . தண்ணீராம் தண்ணீர். அப்படி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது. அது இப்படி உருண்டையாக இருக்குமா, வண்ண மயமாக இருக்குமா ? காற்றில் மிதக்குமா ?

என்றெல்லாம் கேட்கும்.

கேட்கிறீர்கள்.

நீங்கள்  இந்த உடல் இல்லை என்று ஒரு நிமிடம் யோசித்துத் தான் பாருங்களேன்.

வாழ்க்கை தத்துவம் அனைத்தும் மாறும்.

உங்களை, உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் வேலை.

எப்படி என்று மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/219.html

Tuesday, September 25, 2018

பகவத் கீதை 2.18 - எனவே போர் செய்

பகவத் கீதை  2.18  - எனவே போர் செய் 



अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥१८॥

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய

இமே = இவை

தே³ஹா = வடிவங்கள்

நித்யஸ்ய = நிரந்தரமான

உக்தா: = சொல்லப் பட்டது

ஸ²ரீரிண:| = வடிவங்களை  தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்

அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற

அப்ரமேயஸ்ய = அளவற்ற

தஸ்மாத் = எனவே

யுத்⁴யஸ்வ = போர் செய்

பா⁴ரத = பாரத குல தோன்றலே


உடலை தாங்கும் அது அழிவற்றது. நிரந்தரமானது. அளவிட முடியாதது. எனவே போர் செய். 


நடை முறை வாழ்க்கையில் பல முறை நமக்கு சோர்வும் சலிப்பும் வருவது இயற்கை. என்ன வாழ்க்கை இது. என்ன வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்? நம்மால் யாருக்கு என்ன பயன்? நாம இல்லாவிட்டால் இந்த உலகம் என்ன நின்றா விடும்? சாதித்தது எல்லாம் போதும் என்ற அலுப்பும் சலிப்பும் வருவது இயற்கை.

கீதை சொல்கிறது "எனவே போர் செய்" என்று.

இங்கே போர் என்பது எதிரிகளை கொன்று குவிப்பது அல்ல.  நம் சோர்வை, நம் சோம்பேறித்தனத்தை, நம்  அலுப்பை,சலிப்பை நாம் போராடி வெல்ல வேண்டும்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தோன்றும். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும். மீதியை நாளைக்கு பார்க்கலாம் என்று தோன்றும்.

அந்த நநேரத்தில் கீதையை நினைக்க வேண்டும். "எனவே போர் செய்" . வாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்றால், போராட வேண்டும்.

வெளி உலகோடு அல்ல. நம்மோடு போராட வேண்டும்.

அலையும் மனதை , போராடி இழுத்துக் கொண்டு வர வேண்டும். சோம்பும் உடலை போராடி வேலை செய்யச் செய்ய வேண்டும்.

அப்படிச் சொன்னால் "ஐயோ என்னால் முடியலையே. தூக்கம் தூக்கமா வருதே. உடம்பெல்லாம் வலிக்கிறதே..." ஆயிரம் சாக்கு சொல்வோம்.

தூக்கம் யாருக்கு வருகிறது ? யாருக்கு சோர்வு வருகிறது ? யார் அலுத்துக் கொள்வது?

எல்லாம் இந்த உடல் படுத்தம் பாடு.

உடலை கருவியாக உபயோகப் படுத்தாமல், அதை நம் எஜமானனாக ஆக்கி அது சொல்வதை கேட்டுக் கொண்டு ஆடுகிறோம்.

"நீங்கள் " என்பது உங்கள் உடல் அல்ல. உலகில் கோடிக்கணக்கான உடல்கள் இருக்கின்றன. உடல்கள் தோன்றி தோன்றி மறையும் இயல்பு உடையன. இந்த கணக்கற்ற வடிவங்களுக்கு பின்னால் இருக்கும் அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது அநாதியானது.

இலட்டு, ஜிலேபி, மைசூர் பாகு என்று இனிப்பு பதார்த்தங்கள் பல இருந்தாலும் அவற்றிற்கு சுவை தரும் சர்க்கரை ஒன்று தான்.

வளையல், மோதிரம், சங்கிலி என்று பல ஆபரணங்கள் இருந்தாலும், அவற்றிக்கு பின்னால் இருக்கும் தங்கம் ஒன்றுதான்.

எத்தனை ஆயிரம் அலைகள் தோன்றி மறைந்தாலும் அவற்றிற்கு பின்னால் இருக்கும் கடல் ஒன்றுதான்.

வடிவங்கள் பலவாக இருக்கலாம். அவை அனுபவிக்கும் இன்ப/துன்பங்கள் பலவாக இருக்கலாம். அவற்றிற்கு அடியில் இருக்கும் அது ஒன்றுதான்.

அது தான் நீங்கள். அது தான் நான். அது தான் அனைத்தும்.

சரி, அது அது என்று சொல்லிக் கொண்டே போனால் எப்படி. அது என்ன ? அது எப்படி இருக்கும்? அதை எப்படி அறிவது ?

அதை அறிய முடியும். எப்படி ?

தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க telescope உபயோகப் படுத்துகிறோம். வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.

மிக நுண்ணிய பொருள்களை பார்க்க microscope உபயோகப் படுத்துகிறோம்.  வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.

கண் முன் இருக்கிறது. இருந்தாலும் அந்த கருவிகளின் துணை இல்லாமல் பார்க்க முடியாது.

புலன்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது. ஓரளவுக்குத் தான் பார்க்க, கேட்க, உணர முடியும். அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ளவற்றை அவற்றால் அரிய முடியாது.

நமது மோப்ப சக்தியை விட நாயின் மோப்ப சக்தி பல மடங்கு நுண்ணியது. நம்மால் நுகர முடியவில்லை என்பதால், அப்படி ஒரு வாசம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா ?

அது போல, நமது புலன்களுக்கு இன்னும் ஒரு எல்லை இருக்கிறது.

அதாவது, ஒரு வரையறைக்கு உட்பட்ட ஒன்றைத்தான் நம் புலன்களால் அரிய முடியும். அளவற்ற ஒன்றை புலன்களால் அறிய முடியாது. முடிவில்லா ஒன்றை புலன்கள் அறிய முடியாது.

அடுத்த சிக்கல் என்ன என்றால், புலன்கள், பொறிகள், அறிவு, மனம் என்று இவை எல்லாம் சேர்ந்து வெளி உலகை அறிகின்றன. வெளியில் இருந்து வரும் செய்திகளை ஆராய்ந்து இது இன்னது என்று சொல்கின்றன.

இவற்றை இயக்கம் "அதை" அவற்றால் அறிந்து கொள்ள முடியாது.

வீட்டில், அடுப்படியில், சூடான பொருள்களை பற்றி தூக்க இடுக்கியை பயன் படுத்துவோம். அது எல்லா பொருளையும் பற்றி தூக்கப் பயன்படும். அது தன்னைத் தானே தூக்குமா ?

நுண்ணோக்கி (microscope) அனைத்தையும் நுணுக்கி ஆராய பயன் படும். அது தன்னை தானே நோக்கிக் கொள்ளுமா ?

இந்த புலன்கள் வெளியில் உள்ளவற்றை அறிய பயன்படும். அதை இயக்கம் அந்த சக்தியை அதனால் அறிந்து கொள்ள முடியாது.

எனவே தான் கீதை சொல்கிறது "அது அளவிட முடியாதது" என்று. அளக்க முடியாது என்றால், புலன்களுக்கு அகப்படாது.

பின் எப்படித்தான் அறிவது?

http://bhagavatgita.blogspot.com/2018/09/218.html

Tuesday, September 18, 2018

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது 


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति॥१७॥

அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது

து = ஆனால்

தத்= அது

வித்³தி= நீ உணர்வாய்

யேந = அதன் மூலம்

ஸர்வம் = அனைத்தும்

இதம் = இது

ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள


விநாஸம் = அழியும்

அவ்யயஸ்யா = மாறாத

அஸ்ய = அதன்

ந = இல்லை

கஸ்²சித் = அவன்

கர்தும் = செய்பவன்

அர்ஹதி  = இயலும் , முடியும்


எங்கும் நிறைந்த அந்தப் பொருள் அழிவற்றது என்று அறிந்து கொள். அது கெடாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. 

உலகிலேயே பெரிய பயம் மரண பயம். நாம் இறந்து போவோமோ என்ற பயம். நம்மைச் சார்ந்தவர்கள் இறந்து போவார்களோ என்ற பயம்.  மரண பயத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் இல்லை.

மரணம் என்பது என்ன ?

மரணம் என்பதன் உண்மையான பொருள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். உங்களை பொறுத்தவரை மரணம் என்றால் என்ன ?

தொடர்பு விட்டுப் போதல், தொடர்பு மறைந்து போதல், இருப்பது இல்லாது போதல்...இவை தானே மரணம் ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வீட்டில் பெண்கள் நகை வைத்து இருப்பார்கள். வளையல், சங்கிலி, மோதிரம், ஒட்டியாணம் என்று பலவிதமான நகைகள் இருக்கும். வாங்கி பல காலம் ஆன பின், அவை பழசாகப் போய் விடும். மார்க்கெட்டில் புதிது புதிதாக நகைகள் வந்து இருக்கும். புதுப் புது வடிவத்தில் வந்து இருக்கும். பழைய நகைகளை  அழித்து விட்டு புது நகைகள் செய்வார்கள். புதுப் பொலிவோடு, புது மெருகோடு இருக்கும்.

பழைய நகை மறைந்து போய் விட்டது. புது நகை வந்து விட்டது.

நகையை அழித்துச் செய்தற்காக எந்த பெண்ணும் அழுவது இல்லை.

ஐயோ அந்த பழைய நகை போய் விட்டதே என்று யாரும் வருந்துவது இல்லை.

நகை அழியும். தங்கம் அழிவது இல்லை.

பானை, சட்டி, குடம் அழியும். அது செய்யப்பட்ட களி மண் அழிவது இல்லை.

அலை அழியும். கடல் அழிவது இல்லை.

தோற்றங்கள் மாறும். அதன் அடியில் உள்ள அந்த ஒன்று அழிவது இல்லை.

அது சாஸ்வதமானது. அதை யாரும் அழிக்க முடியாது.

மோதிரத்தை அழித்து வளையல் செய்யலாம்.

ஆனால் மோதிரம் செய்யப்பட்ட தங்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

வடிவங்கள் பலவாக இருக்கும் போதே நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்த பல வடிவங்கள் ஏதோ ஒன்றில் இருந்து செய்யப்பட்டது என்று. அந்த ஏதோ ஒன்று அழிவற்றது.

பீஷ்மராக, த்ரோணாராக, துரியோதனனாக விளங்கும் இந்த வடிவங்களுக்கு அடி நாதமாக இருக்கும் அது அழிவற்றது. அதை எந்த அர்ஜுனனாலும் அழிக்க முடியாது.

அழிகின்ற வடிவங்கள் உண்மை இல்லை.

இன்று இருக்கும் என் வடிவம் நேற்று இல்லை. இது நாளை இருக்காது. நேற்று இல்லாத ஒன்று, இன்று எங்கிருந்து வந்தது. இன்று இருக்கும் ஒன்று நாளை எப்படி இல்லாமல் போகும் ?

நிஜம் என்றால் அது நிலைத்து நிற்கும். நிஜம் இல்லாதது தோன்றுவது போல தோன்றி மறைவது போல மறையும். அது உண்மை இல்லை.

வடிவங்களைத் தாண்டி அதன் உண்மையை அறிய வேண்டும். அதுவே மிக உயரிய ஞானம்.

புற வடிவங்களை கடந்து செல்ல வேண்டும்.

அலை தாண்டி கடல் காண்பவன் அறிஞன்.

தோற்றங்களின் மறைவு மரணம் இல்லை.

தோற்றங்களுக்கு பின்னால் இருக்கும் அதற்கு மரணம் என்பதே இல்லை.

இதை அறிந்தவனுக்கு மரண பயம் இருக்காது.

கீதை இதைப் பற்றி இன்னும் விரிவாக சொல்ல இருக்கிறது. மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/217.html

Saturday, September 15, 2018

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?


नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥

நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||

ந = இல்லை

அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது

வித்³யதே = உள்ளது

பா⁴வோ = இருப்பது

ந = இல்லை

அபாவோ = இல்லாதது

வித்³யதே = அது

ஸத:|  = உண்மையில்

உப⁴யோ = இரண்டிலும்

அபி = அது அன்றி

த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்

அந்த  = அந்தம், முடிவு, இறுதி

து = ஆனால்

அநயோ = அந்த இரண்டில்

தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.


இதற்கு முன் இல்லாதது உண்மையாகாது. உண்மையானது இனிமேல் இல்லாமல் போகாது. ஞானிகள் இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிவார்கள். 


என்னவோ கண்ணன் பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறான் என்று பார்த்தால், பழையபடி குழப்புகிறானே. இல்லாதது உண்மையானது. உண்மையானது இல்லாமல் போகாது என்று. அப்படினா என்ன அர்த்தம்? தல சுத்ற  மாதிரி இருக்கா ?

கீதையில் எவ்வளவோ முக்கியமான, ஆழமான ஸ்லோகங்கள் இருக்கின்றன. நீங்கள் இந்த ஒரு ஸ்லோகத்தை முழுமையாக அறிந்து கொண்டால், முழு கீதையையும் அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.

அவ்வளவு அர்த்தம் செறிந்த ஸ்லோகம்.

இந்த சுலோகத்தின் உள்ளே ஒரு மிகப் பெரிய உண்மை புதைந்து கிடக்கிறது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மையாகாது. எது உண்மையோ, அது இல்லாமல் போகாது.

இது சுலோகம்.

மூன்று காலங்களை எடுத்துக் கொள்வோம்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.

நாம் நிகழ் காலத்தில் எவ்வளவோ பார்க்கிறோம். கேட்கிறோம். தொட்டு உணர்கிறோம். நம் புலன்கள் இந்த உலகை நிகழ் காலத்தில் அனுபவிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை இதுதான் நிஜம். யதார்த்தம். உண்மை எல்லாம்.

என் மனைவி, கணவன், பிள்ளைகள், நான் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், உறவுகள் எல்லாம் நிகழ் காலத்தில் நிகழ்கின்றன. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவை தான் உண்மை.

சரி தானே ? அதில் சந்தேகம் இல்லையே. கடந்த காலம் இப்போது இல்லை. எதிர் காலம் இனி மேல் வரப் போவது.  இறந்த காலமும், எதிர் காலமும் கற்பனையில் உள்ளவை. நிகழ் காலம் மட்டும்தான் நிஜம்.

சரி தானே ?

இல்லை என்கிறது கீதை.

எது இல்லாமல் இருந்ததோ, எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அது ஒரு போதும் உண்மையாக இருக்காது.

எது இறந்த காலத்தில் இல்லாமல் இருந்து, எதிர் காலத்திலும் இல்லாமல் போகப் போகிறதோ, அது நிகழ் காலத்திலும் இருக்க வாய்ப்பில்லை.

இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் இல்லை என்றால், நிகழ் காலத்தில் மட்டும் எப்படி இருக்கும் ?

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம்.

தெருவில், இருட்டில் ஒரு கயிறு கிடக்கிறது. அதை பாம்பு என்று நினைக்கிறோம். சற்று அருகில் சென்று உற்று பார்த்த பின், அது பாம்பு அல்ல ஒரு கயிறு என்று அறிகிறோம்.

சற்று முன் வரை (இறந்த காலத்தில்) பாம்பு இருந்தது. அது கயிறு என்று அறிந்த பின், எதிர் காலத்தில் அந்த பாம்பு இல்லை, கயிறு மட்டும் தான் இருக்கிறது.  எனவே, பாம்பு என்பது உண்மை இல்லை என்று தெரிகிறது அல்லவா ?

அது மட்டும் அல்ல, கயிறு என்பது எதிர் காலத்தில் இருக்கிறது. அது இறந்த காலத்தில் இல்லை. இறந்த காலத்தில் நம்முடைய உண்மை என்பது அது ஒரு பாம்பு என்பதே. எனவே, கயிறு என்பதும் உண்மை இல்லை. இப்போது கயிறு என்று நினைக்கிறோம். இன்னும் சற்று அருகில் சென்று, வெளிச்சம் அடித்துப் பார்த்தால் அது ஒரு வேளை துணியாக இருக்கலாம், அல்லது உதிர்ந்த மாலையாக இருக்கலாம். தெரியாது. எது கடந்த காலத்தில் இல்லையோ, அது நிஜமாக இருக்க முடியாது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மை இல்லை.

எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அதுவும் உண்மை இல்லை.

எது உண்மை என்றால், அது இறந்த காலத்திலும் இருக்க வேண்டும், எதிர் காலத்திலும் இருக்க வேண்டும்.  அதுவே உண்மை. அதுவே நிரந்தரமானது.

கனவு காண்கிறோம். புலி துரத்துவது போல பயங்கர கனவு. புலி நம் மேல் பாய்கிறது. அந்த இறுதி நொடியில் நாம் விழித்துக் கொள்கிறோம். வியர்த்து கொட்டுகிறது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொள்கிறது.

அந்த புலி நிஜமில்லை. ஏன் ?

நாம் படுக்கப் போகும் போது அந்த புலி இல்லை. நாம் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டவுடன் , அந்த புலி இல்லை.

அந்தப் புலி நிகழ் காலத்தில் இருந்தது. ஆனால், அது இறந்த காலத்திலும் இல்லை, எதிர் காலத்திலும் இல்லை. எனவே அது நிஜம் இல்லை.

நிகழ் காலத்தில் இருப்பது எல்லாம் நிஜம் அல்ல.

இந்த கனவு, கயிறு, பாம்பு எல்லாம் பழைய கதை. அதெல்லாம் சரி, அதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் ?

நாம் குழந்தையாக இருந்தோம். இப்போது குழந்தையாக இல்லை. எதிர் காலத்தில் குழந்தையாக இருக்கப் போவது இல்லை. இப்போது உங்களைப் பார்த்து நீங்கள் குழந்தையா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லுவீர்கள். "ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தீர்களே , இப்போது எப்படி இல்லாமல் போவீர்கள் " என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

"ஆமாம் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தேன். அது ஒரு கால கட்டம். அதற்காக எப்போதுமே குழந்தையாகவே இருக்க முடியுமா. அது அந்தக் காலம். இப்போது நான் ஒரு நடு வயது ஆண் / பெண் . அது தான் உண்மை " என்று சொல்லுவீர்கள் அல்லவா ?

இப்போது நடு வயதில் இருக்கிறோம்.  இது உண்மையா ? இதுவும் உண்மை இல்லை.

இதுவும்  மாறும். இல்லையா.

அப்படி எது மாறிக் கொண்டே இருக்கிறதோ, அது உண்மையானது அல்ல.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற மூன்று கட்டத்திலும் மாறாமல் இருப்பது எது ?

உடல் மாறுகிறது. எனவே அது உண்மை இல்லை.

அறிவு மாறுகிறது. அதுவும் உண்மை இல்லை.

மனம் மாறுகிறது. எனவே அதுவும் உண்மை இல்லை.

பின், அனைத்து நிலைகளிலும் மாறாமல் இருப்பது எது ? அதுதான் உண்மை.

"நான்" குழந்தையாக இருந்தேன். "நான்" இளைஞனாக இருக்கிறேன். "நான்" வயோதிகனாக மாறுவேன் என்று சொல்லும் போது, அந்த "நான் " யார் ?

இத்தனை மாற்றத்திலும் மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அலை எழுகிறது, வீழ்கிறது. அது உண்மை இல்லை. அதற்கு அடியில் இருக்கும் கடல் உண்மை.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற இந்த எழும், விழும் அலையின் அடியில் இருக்கும் அந்த  கடல் எது ?

மாறிக் கொண்டே இருக்கும் உடல், அறிவு, மனம் என்ற மாற்றத்தின் அடியில் அதை தாங்கிப் பிடிக்கும் அந்த ஒன்று எது ?

பாம்போ, கயிறோ, துணியோ, மாலையோ ...இந்த அனைத்துக்கும் அடியில் ஏதோ ஒன்று இருக்கிறதே , அது எது. அதுவே உண்மை.

பொய்யாயின வெல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானமாய்  நின்று மிளிர்கின்ற மெய் சுடரே

என்பார் மணிவாசகர்.

பொய் எல்லாம் போய் விட்டால், எது நிற்கிறதோ, அதுவே மெய்.

அது தான் மெய் ஞானம் என்று சுடர். தீபம். ஜோதி.

ஒளி வீசும் அந்த அறிவு. மெய் உணர்வு.

கணவன்/மனைவி என்பவர்கள் திருமணத்துக்கு முன் இல்லை, திருமணத்துக்குப் பின் இருக்கிறார்கள். முன் இல்லாத ஒன்று உண்மை அல்ல.

பிள்ளைகள் , பிறக்கும் முன் இல்லாமல் இருந்தார்கள். பின் வந்தார்கள். அதுவும் உண்மை இல்லை.

அனைத்து அனுபவங்களும் அப்படியே. தோன்றி மறைவன . உண்மை இல்லை.

எது உண்மை ?

அனுபவங்களை அறியும் , உணரும் அந்தத் தன்னுணர்வு (Consiousness, awareness ) அது தான் உண்மை.

உறவுகளை, உணர்வுகளை, அனுபவங்களை அறியும் அந்த மெய் ஞானம் , அது மட்டும் தான் உண்மை.

இதை ஆழமாக பதிவு செய்து   கொள்ளுங்கள். இதைப் பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

போக்கும் வரவும் புணர்வுமில்லா புண்ணியனே .....(திருவாசகம்)

http://bhagavatgita.blogspot.com/2018/09/216.html













Friday, September 14, 2018

பகவத் கீதை – 2.15 – சாகாமல் இருக்க வழி

பகவத் கீதை – 2.15 – சாகாமல் இருக்க வழி 


यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते॥१५॥

யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||

யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
யேதே = அவை
புருஷம் =  மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துகஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்

இன்பத்தையும், துன்பத்தையும் எவன் சரி சமமாக பார்கிறானோ, அவன் சாவை வென்று நிலைத்து நிற்பான். 

இது என்ன ஒண்ணும் புரியலையே. இன்பத்தையும், துன்பத்தையும் எப்படி சரி சமமாக  பார்ப்பது? அப்படியே பார்த்தாலும், எப்படி இறவா நிலை அடைய முடியும் ? சரி அப்படியே அடைந்தாலும், அதனால் என்ன பலன் கிடைக்கும்? இன்பமும் துன்பமும் ஒன்று என்றால், அது ஒரு வாழ்க்கையா ? கல்லு மாதிரி, மரக் கட்டை மாதிரி...அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?

வாழ்க்கை நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாம் சரியாக படிக்கும் வரை, பாடங்கள் தொடரும்.

சில பேர் துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன காரணம்? வாழ்க்கை தரும் பாடத்தை படிப்பது இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்ற ஆசிரியன் சலிப்பதே இல்லை. எத்தனை முறை தவறு செய்தாலும், பொறுமையாக முதலில் இருந்து ஆரம்பிக்கும். நம்மால் தான் தாங்க முடிவது இல்லை.

சரி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

நாம் தவறுகளை திருத்திக் கொண்டே போனால், ஒரு நாள் நாம் முழுமை (perfection ) அடைவோம். முழுமை அடைந்த பின், மீண்டும் ஒன்றைச் செய்யத் தேவை இல்லை. அது தான் உச்சம். அது தான் உன்னதம்.

தவறு செய்வதும், அதை திருத்துவதும் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து  வாழ்வதைப் போல.

வாழ்க்கை என்பது என்ன ? அனுபவங்களின் தொகுப்பு.

அனுபவம் என்பது என்ன, புலன்கள் மூலம் நாம் பெறும் உணர்வு.

இங்கே பிறப்பு இறப்பு என்பது ஒரு அனுபவம் பிறப்பதும், பின் அந்த அனுபவம் மறைந்து இன்னொரு புதிய அனுபவம் பிறப்பதும் ஆகும்.

இந்த அனுபவச் சங்கலி எப்போது மறையும் ? அதுவே இறப்பற்ற நிலை.

முந்தைய ஸ்லோகத்தில் வெப்பம் குளிர் , இவை இயற்கையானவை. இவற்றைப் பொருட்படுத்தாதே  என்றான் கண்ணன்.

இங்கே, இன்பம் துன்பம் இவற்றை பொருட்படுத்தாதே என்கிறான்.

ஒரு உன்னத நிலையை நோக்கி நாம் நகரும் போது நமக்கு துன்பங்கள் ஒரு  பொருட்டாகத் தெரிவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த துன்பமே  கூட சுகமாகத் தெரியும்.

இது என்ன புது கதையாக இருக்கிறதே என்கிறீர்களா ? துன்பம் எப்படி இன்பமாக முடியும் ?

முடியும்.

எந்த ஒரு தாயையும் கேட்டுப் பாருங்கள். பிள்ளை பெறுவது சுகமா, துக்கமா என்று. துன்பம்தான், வலி தான், தாங்க முடியாத வலிதான். இருந்தும் அவள் அதை ஏன் ஏற்றுக் கொள்கிறாள்? அதுவும் சந்தோஷமாக? நோக்கம்  உயரியதாக இருக்கும் போது வலி தெரியாது.

எந்த தகப்பனையும் கேட்டுப் பாருங்கள். நாலு காசு சம்பாதிக்க என்ன பாடு பட வேண்டி இருக்கிறது என்று. வலி தான். துக்கம் தான். அவமானம் தான். இருந்தும் தன் குடும்பத்தின் எதிர்காலம் கருதி அவன் அவன் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான்.

நோக்கம் உயர்வனாதாக இருக்கும் போது, துன்பம் தெரிவதில்லை.

அந்தத் துன்பங்களை சரி சரி என்று ஏற்றுக் கொண்டு சென்றால், நோக்கத்தை அடையலாம்.

இதெல்லாம் சின்ன சின்ன உயரிய நோக்கங்கள். பிள்ளை பெறுவது, வீட்டுக்காக சம்பாதிப்பது எல்லாம். ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்.

வாழ்க்கையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நோக்கி செல்வபர்கள், வழியில் வரும் துன்பங்களை பெரிதாக நினைக்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட தந்த உதாரணங்கள்.

பிள்ளை பெற்ற பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தாய்க்கு.

குடும்பம் தலை எடுத்த பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தந்தைக்கு.

வாழ்வின் உன்னத இலட்சியங்களை அடைந்த பின், அதற்காக பட்ட துன்பங்கள் மறந்து  போய் விடும்.

எனவே, துன்பத்தைக் கண்டு கலங்கி நிற்க்கக் கூடாது. அப்படி கலங்கி நின்றால், ஒன்றும் செய்ய முடியாது. உயர்ந்தவற்றை அடைய முடியாது.

சரி, அப்படி என்ன பெரிய உயர்ந்த இலட்சியம் இருக்கிறது ?

இருக்கிறதே. 

http://bhagavatgita.blogspot.com/2018/09/215.html