Wednesday, July 5, 2017

பகவத் கீதை - 16.15 - யான், எனது என்ற ஆணவம்

பகவத் கீதை - 16.15 - யான், எனது என்ற ஆணவம் 


आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥

ஆட்யோபிஜநவாநஸ்மி கோந்யோஸ்தி ஸத்ருஸோ மயா |
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15||

ஆட்யோ = செல்வந்தன்

அபிஜநவான் = அபி ஜனவான் = உயர் குடியில் பிறந்தவன்


அஸ்மி = நான்

க(ஹ் ) = எவன்

அந்யா = மற்றவர்கள்

சதிர்ஷ = ஒப்பிட்டு

மய  = எனக்கு

யக்சேய  = நான் யாகம் செய்கிறேன் 

தஸ்யாமி = நான் கொடுக்கிறேன் , தானம் செய்கிறேன்

மோடிசேய = நான் இன்பங்களை அனுபவிக்கிறேன்

அஜ்ஞாந  = அறிவீனத்தால்

விமோஹிதா:  = அழுந்துகிறார்கள் || 16- 15||


நான் செல்வம் உடையவன். உயர் குடியில் பிறந்தவன். மற்றவர்களை காட்டிலும் உயர்ந்தவன். நான் யாகம் செய்கிறேன். தானம் செய்கிறேன். நான் இன்பங்களை அனுபவிக்க பிறந்தவன் என்று அறிவீனத்தில் கிடந்து அழுந்துகிறார்கள். 

அரக்க அல்லது கெட்ட குணம் உள்ளவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு வருகிறான் கண்ணன். 

ஆணவம் பெரிய அரக்க குணம். 

ஆணவம் எங்கிருந்து வருகிறது ?

செல்வம் - குடிப் பிறப்பு - மற்றவர்களை விட அதிகம் அதிகாரம், செல்வாக்கு இருப்பது - பூஜை / புனஸ்காரம் செய்வது - மற்றவர்களுக்கு தானம் செய்வது இவற்றில் இருந்து ஆணவம் பிறக்கிறது. 

இந்த ஆணவம் அரக்க குணம். 

இவை வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. செல்வம் அவசியம். இறை தொண்டு அவசியம். தான தர்மம் செய்வது அவசியம். 

ஆனால், அதையே காரணமாகக் கொண்டு, ஆணவம் அடையக் கூடாது. 

நான் மூன்று வேளை குளிக்கிறேன், பூஜை செய்கிறேன், கோவிலுக்குப் போகிறேன், தீர்த்த யாத்திரை போகிறேன் என்று பெருமை கொள்ளும் ஆட்களும் இருக்கிறார்கள். 

பக்தி , தன்னைத் தான் அறிய ஒரு வழி. அவ்வளவு தான். அதில் ஆணவம் வந்தால் பின் அந்த  பக்தியில் என்ன பயன். 

நம் புராணங்களில் வரும் அரக்கர்களை பார்த்தால் தெரியும். 

பெரிய பக்திமானாக இருப்பார்கள். கடுமையான தவம் செய்து, இறைவனையே நேரில் கொண்டு வருவார்கள். அளவற்ற வரங்களைப் பெறுவார்கள். அவற்றைக் கொண்டு , தன்னை யாரும் வெல்ல முடியாது என்று இல்லாத அட்டகாசம் எல்லாம் செய்து அழிந்து போவார்கள். 

உங்கள் பக்தி ஆணவத்தில் கொண்டு போய் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

தானம் கொடுப்பதில் கூட தற்பெருமை கொள்ளுவார்கள் அரக்க குணம் கொண்டவர்கள். 

கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவேனும் பகிர்மின்கள் என்பர் அருணகிரிநாதர்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

தானம் கொடுக்கும் போது ,  முருகனை வாழ்த்தி , தானம் கொடுங்கள் என்பார் அருணகிரிநாதர். 

ஏன் முருகனை வாழ்த்த வேண்டும் ?

தானம் கொடுக்கும் அளவுக்கு நமக்கு செல்வத்தை தந்ததற்காக.

தானம் கொடுக்கும் மனதை தந்ததற்காக.

சிலருக்கு பணம் இருக்கும். கொடுக்க மனம் இருக்காது. 

இவை எல்லாம் என்னால் ஆகிறது என்று நினைக்காமல் செய்ய வேண்டும்.

நல்ல காரியத்தின் மூலம் கெடுதலை ஏன் தேடிக் கொள்ள வேண்டும் ?

Thursday, June 29, 2017

கீதை - 16.14 - நானே பலவான், சுகவான்

கீதை - 16.14 - நானே பலவான், சுகவான் 


असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥१६- १४॥

அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி |
ஈஸ்வரோஹமஹம் போகீ ஸித்தோ ஹம் பலவாந் ஸு கீ || 16- 14||

அஸௌ = அந்த

மயா = என்னால்

 ஹத: = அழிக்கப்பட்டது

ஸத்ரு = எதிரிகளை

ஹநிஷ்யே = நான் கொல்வேன்

ச = மேலும்

அபரன்  = மற்றவர்களையும்

அபி  = மேலும்

ஈஸ்வர = ஈஸ்வரன், தலைவன்

அஹம் = நான்

அஹம்  = நான்

போகி = அனுபவிக்கப் பிறந்தவன்

சித்தா = சித்தன்

அஹம்  = நான்

பலவான் = பலம் உள்ளவன்

ஸுகி = சுகங்களை அனுபவிப்பவன்


என் எதிரிகளை வெல்லுவேன். நானே ஈஸ்வரன். நானே பலவான். நான் சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவன். நான் சித்தன் என்று அவர்கள் சொல்கிறார்கள். 


தீயவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா என்று வியாசர் தொடர்கிறார்.

அவர்கள் வாழ் நாள் முழுவதும் யாரிடமாவது சண்டை இட்டு வெற்றி கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

யாரோ என்றால் ஏதோ எதிரிகள் என்று நினைத்து விட வேண்டாம்.

சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாதத்தில் வெல்ல வேண்டும். அதனால் உறவில் விரிசல் வந்தால் கூட பரவாயில்லை. யார் காயப் பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு வாதத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள், பிள்ளைகள் , கணவன், மனைவி என்று யாரிடமாவது ஏதாவது வாதம் இருக்கும். ஏதாவது வாதத்தில் தோற்றுவிட்டால் ஏதோ இழந்த மாதிரி உணர்வார்கள். தோல்வி என்பது சகிக்க முடியாது அவர்களால்.

எப்போதும் யாரையாவது வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது சதா சர்வ காலமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இது ஒரு அசுர குணம்.


தானே எல்லாம் என்று நினைப்பார்கள்.

எல்லா சுகமும் தனக்கே வேண்டும் என்று சுயநலம் கொண்டு அலைவார்கள். மற்றவர்களுக்குத் தந்து, அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டு தாங்கள் மகிழ மாட்டார்கள். தான், தன் சுகம் என்று இருப்பார்கள்.

அது மட்டும் அல்ல, தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் கொண்டு இருப்பார்கள். நான் சித்தன்  என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும். எனக்குத் தெரியாதா, நான் பார்க்காததா என்று இறுமாப்புடன் அலைவார்கள்.

சுயநலம் - ஆணவம் - எந்நேரமும் சண்டை பிடிக்கும் குணம்....இவை எல்லாம் நம்மிடமும் கூட இருக்கலாம்.

இருந்தால் , என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

Tuesday, June 27, 2017

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும்

பகவத் கீதை - 16.13 - பெற்றதும், பெறப் போவதும் 



इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥१६- १३॥

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் |
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் || 16- 13||


இதம் = இந்த

அ த்ய = இன்று

மயா = என்னால்

லப்தம் = அடையப் பெற்றது

இதம் = இன்று

ப்ராப்ஸ்யே = அடைவேன்

மநோரதம்  = மனோ ரதம் - கற்பனையில்

இதம்இ = இன்று

அஸ்தி = அது

இதம் = இன்று

அபி = மேலும்

மே = என்னால்

பவிஷ்யதி = அடையப்படும்

புனர்பு தனம்  = பெரிய செல்வம்

இவற்றை எல்லாம்  அடைந்து விட்டேன். இன்னும் பலவற்றை அடைய எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவற்றையும் அடைவேன்.

பெரிய பங்களாவில் இருப்பவன் , குடிசை வீட்டுக்கு ஆசைப் படுவானா ? ஆடி கார் வைத்து இருப்பவன் , சைக்கிளுக்கு ஆசைப்படுவானா ? பட்டம் படித்து முடித்தவன், ஆறாம் வகுப்பு தேற வேண்டும் என்று நினைப்பானா ?

மாட்டான் அல்லவா ?

 ஆனால் ஒரு காலத்தில் சிறிய வீட்டுக்கும், சைக்கிளுக்கும் , ஆறாம் வகுப்புக்கும் ஆசை பட்டவன் தானே ? ஆசை பட்டதை அடைந்தாகி விட்டதே. பின் என்ன ?

ஒவ்வொரு ஆசையும், அவை நிறைவேறிய பின், அதை விட பெரிய ஆசையை கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போகின்றன.

ஒரு ஆசை முடிந்தவுடன், மனிதன் நிறுத்துவது இல்ல. அதை விட பெரிய ஆசை வருகிறது. அதை நிறைவேற்ற மேலும் முயற்சி செய்கிறான்.

மனிதன் புரிந்து கொள்வதே இல்லை. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என்பதை.

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பயப்பட வேண்டும். ஏன்  என்றால், இப்போது இருக்கும் ஆசை நிறைவேறி விட்டால், அடுத்து என்ன பெரிய ஆசை வருமோ ? அது என்ன என்ன சிக்கல்களை கொண்டு வருமோ, என்று மனிதன் நினைத்து பயப்பட வேண்டும்.

 மாறாக,மனிதன் ஒவ்வொரு ஆசை நிறைவேறிய பின்னும், "ஆகா, நான் இதை சாதித்து விட்டேன், இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அதையும் அடைவேன் " என்று விளக்கி தேடும் விட்டில்களைப் போல ஆசைகளின் பின்னால் சென்று உழல்கிறான்.

அப்படி என்றால் ஆசையே இல்லாமல் இருக்க வேண்டுமா ? எதார்க்குமே ஆசைப்படக் கூடாதா ? அப்படி ஒரு வாழ்க்கையில் என்ன சுகம் , சுவாரசியம் இருக்கும் ? என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.

அதற்கும் விடை காண வேண்டும்.

கீதை அதற்கும் விடை தருகிறது.









கீதை - 16.12 - தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள்

கீதை - 16.12 -  தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள் 


आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥१६- १२॥


ஆஸா பாஸ ஸதைர்ப³த்தா: காமக்ரோத பராயணா: |
ஈஹந்தே காமபோகார்த மந்யாயேநார்த ஸஞ்சயாந் || 16- 12||


ஆஸா பாஸ = ஆசா பாசங்களில்

சதா = சதம் என்றால் நூறு. பல வழிகளில்

பத்தா: = கட்டுண்டு

காம க்ரோத = காமத்திலும் கோபத்திலும்

ப்ரயணா: = வழிகளில் செல்வார்கள்

ஈஹந்தே = அடைய

காமபோகார்த = ஆசைகளை அனுபவிக்க

அநன்யேன  = அல்லாத வழிகளில்

அர்த = ஸ்ஸ செல்வத்தை

சஞ்சயாந்  = குவிப்பார்கள்

ஆசா பாடங்களில் பல நூறு வழிகளில் கட்டுண்டு; அவைகளை அனுபவிப்பதற்காக தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பார்கள். 

ஆசை தெரிகிறது. அது என்ன பாசம் ?

பாசம் என்பது பாசக் கயிறு. காட்டும் கயிறு. ஆசை, நம்மை ஆசைப் படும் பொருளோடு சேர்த்து கட்டிப் போட்டு விடுகிறது.


அது பொருளானாலும் சரி, மற்ற உருவானாலும் சரி, அல்லது நாய் குட்டியானாலும் சரி , ஆசை நம்மை பிணைக்கிறது. எனவே தான் அதை ஆசா பாசம் என்று குறிப்பிடுகிரார்கள்.

 ஒரு கயிறால் கட்டினாலே  .துன்பமாக இருக்கும். நூற்றுக் கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டால் , எப்படி இருக்கும் ?

இப்படி நூற்றுக்கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டு வாழும் வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில் , நாம் சுதந்திரமாக இருப்பதாக வேறு எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

பண ஆசை, செல்வாக்கு, புகழ், கவலைகளில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆசை, பிள்ளைகள் மெடல் வாங்க வேண்டும் என்ற ஆசை, அவர்களுக்கு வேலை, நல்ல திருமணம்,  ஆயுள், ஆரோக்கியம் , மதிப்பு, மரியாதை , என்று எத்தனை ஆயிரம் ஆசைகள். ஒவ்வொரு ஆசையும் நம்மை ஒவ்வொரு விதத்தில் கட்டிப் போடுகிறது.

ஆசை ஒரு பக்கம் கட்டிப் போடுகிறது என்றால், அந்த ஆசைகள் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற பயம் மறுபுறம் கட்டிப் போடுகிறது.

ஆசையும் , பயமும் இப்படி இருக்க, வேறு யாராவது நாம் ஆசைப் படுவதை கொண்டு போய் விட்டால்  , அவர்கள் மேல் கோபம் வருகிறது.


இப்படி, ஆசை, பயம், கோபம் என்ற மூன்றும் நம்மை கட்டுகின்றன . ஒவ்வொரு ஆசைக்கும் பல பயங்கள், ஒவ்வொரு பயத்துக்கும் பல கோபங்கள்.

யோசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்று.

மிகப் பெரிய சிக்கல் , முடிச்சுகள் நிறைந்து இருக்கிறது.

இந்த மஹா சிக்கலுக்கு நடுவில் , அவ்வப்போது நிறைவேறும் ஆசைகளில் மகிழ்ந்து , அவற்றை மேலும் அடைய பல் வேறு தவறான வழிகளில் பணம் சேர்ப்பார்கள் கெட்டவர்கள்.

கெட்டவர்களின் குண நலன்களை பற்றி சொல்லவந்த வியாசர் கூறுகிறார்


அவர்கள் ஆசை, பயம், கோபம் என்ற கயிறுகளால் கட்டுண்டு, தவறான வழியில் பணம் சேர்த்து வாழ்வார்கள் என்று.

நாம் தவறான வழியில் பணம் சேர்க்காமல் இருக்கலாம்.

ஆனால் எவ்வளவு ஆசைகள், பயங்கள், கோபங்கள் ?

சிந்தித்துப் பார்ப்போம்.

மெல்ல மெல்ல இந்த சிக்கல்களில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும்.


ஆசைகள் குறைய குறைய , பயம் குறையும். கோபம் குறையும். வாழ்க்கை லேசாகும்.

பயமற்ற வாழ்க்கை வாழலாம். யார்மேலும், எதன் மேலும் கோபம் இல்லாமல் எல்லோரிடமும் இதமாக பழகி வாழலாம்.

எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவு நல்லது.

முயற்சி செய்வோம்.

Sunday, June 25, 2017

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான்

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான் 



चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥१६- ११॥

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா: |
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா: || 16- 11||

சிந்தாமபரிமேயாம் = சித்தம் + அபரிமேயம் =  அளவற்ற சிந்தனைகள்

ச  = மேலும்

ப்ரலயாந்தம் = பிரளய + அந்தம் = பிரளய காலம் வரை 

உபாஸ்ரிதா: |= அடைக்கலம் கொண்டு

காமோபபோக பரமா = ஆசைகளில் திளைப்பது மட்டுமே பிரதானம் என்று

ஏதாவதிதி = இதுவே முடிவென்று

நிஸ்சிதா = நிச்சயித்துக் கொண்டு

பிரளய காலம் வரை, ஆசைகளில் மூழ்கி அவற்றை அனுபவித்தே வாழ்க்கை, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நிச்சயமாக அவர்கள் (அசுர குணம் கொண்டவர்கள்) நம்பி, அதன்படி செயல் படுகிறார்கள். 

வாழ்க்கை என்பது என்ன ?

ஆசைப் படுவதும், அவற்றை அனுபவிப்பதும் மட்டும் தானா ? அதற்கு மேல் ஏதாவது ஒன்று இருக்கிறதா ?

ஒவ்வொரு கால கட்டத்திலும், ஏதோ ஒன்றின் மேல் ஆசைப் படுகிறோம். அதை அடைய முயற்சி செய்கிறோம். பல சமயம் வெற்றி பெறுகிறோம். சில சமயம் வேண்டியது கிடைப்பது இல்லை.

ஒரு ஆசை நிறைவேறிய பின், அடுத்த ஆசை முளைக்கிறது.

வாழ்க்கை முழுவதுமே ஒரு ஆசையில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதாகவே இருக்கிறது.

எந்நேரமும் ஏதோ ஒரு ஆசையால் உந்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அது தான் வாழ்க்கை என்று நினைக்கிறோம்.

இது எப்போதும் முடியவே முடியாது. பிரளய காலம் வரை , இந்த உலகம் முடியும் வரை இது இப்படித்தான் இருக்கும். ஆசைகளை அனுபவித்து முடிக்க முடியாது.

ஒன்றில் இருந்து ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்.

இவற்றை துரத்திக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா ?

சிந்திக்க வேண்டும்.

அறிவற்ற மூடர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

ஆசைப்படுவதும், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவதும், ஒரு ஆசை நிறைவேறிய பின் அடுத்த ஆசைக்கு முயற்சி செய்வதும்...இதுவே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தாண்டி , ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர்கள் நம்புவது இல்லை.

நாம் எப்படியோ ?

Saturday, June 24, 2017

கீதை - 16.10 - அரக்க குணங்கள்

கீதை - 16.10 - அரக்க குணங்கள் 


काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्‌गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥१६- १०॥

காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா: |
மோஹாத் க்ருஹீத்வாஸத்க்ராஹாந் ப்ரவர்தந்தே ஸுசிவ்ரதா: || 16- 10||


காமம் = ஆசை

அஸ்ரித்ய = வயப்பட்டு

துஷ்பூரம் = நிறைவேறாமல்

தம்ப = ஏமாற்றி, டாம்பீகமாக

மாந = தவறான பெருமையுடன்

மதாந்விதா:=  சேர்த்துக் கொண்டு

மோஹாத் = மயக்கம் கொண்டு

க்ருஹீத்வா = அவற்றை அடைந்த பின் 

அஸத் = சத்யம் அல்லாத

கிரஹாந் = ஏற்று

ப்ரவர்தந்தே =செய்ய ஆரம்பிக்கிறார்கள்

அஸுசி வ்ரதா:  = சுத்தம் இல்லாத அந்த செயல்களை (விரதம்) || 16- 10||


நிறைவேற முடியாத ஆசைகளுடன் , படோபடமும் (டாம்பீகம்), கர்வம், மயக்கம் நிறைந்தவராய் , குழப்பத்தில் பொய்யான கொள்கைகளை கொண்டு சுத்தம் இல்லாத முடிவுகளுடன் அவர்கள் செயல் படுகிறார்கள்.

அரக்க குணம் கொண்டவர்களையும் , நல்லவர்களையும் கீதை இனம் காட்டுகிறது.

எதற்கு ? அதை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ?

அரக்கர்கள் எப்படி இருந்தால் நமக்கு என்ன ?

அரக்கர்கள் என்றால் எதோ காட்டில் , கரிய பெரிய உருவத்துடன், கோரமான பற்களுடன் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

நாம் தான் அரக்கர்கள். நாம் தான் தேவர்களும் கூட.

அரக்க குணமும், தெய்வீக குணமும் நமக்குள்ளே இருக்கின்றன.

இந்த குணம் மேலோங்கி நிற்கிறதோ, அதுவாக நாம் ஆகிறோம்.

அரக்க குணம் மேலோங்கி நின்றால், அரக்கனாக மாறுகிறோம்.

தெய்வ குணம் மேலோங்கி நின்றால், தெய்வமாக மாறுகிறோம்.

குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பார் வள்ளுவர்.

குணமும், குற்றமும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  இரண்டும் இல்லாத ஆள் யாருமே இல்லை.


சரி, இதில் எது அரக்க குணம் (கெட்ட குணம் ) என்று எப்படி கண்டு கொள்வது ? கண்டு கொண்டால், அவற்றை குறைக்க முயலலாம்.

அதற்குத்தான் கீதை உதவி கரம் நீட்டுகிறது.

அரக்க குணம் எவை என்று பட்டியல் இடுகிறது.

நிறைவேற முடியாத அல்லது நிறைவேற கூடாத ஆசைகள் - ஆசை படுவது தவறல்ல. ஆசைகளின் எல்லைகளை அறிய வேண்டும். எல்லை தாண்டும் போது ஆசை பேராசையாகி, தவறான ஆசையாக மாறி விடுகிறது.

ரம்பை, மேனகை, திலோத்தமை என்ற தேவர் உலக பெண்கள் எல்லாம் இராவணனின் காலடியில் கிடந்தார்கள். அவர்களை விட்டு விட்டு சீதையை விரும்பினான் இராவணன். அது தவறான ஆசை. அது அரக்க குணம்.

படோபடம் , டாம்பீகம் - என்னிடம் எல்லாம் இருக்கிறது என்ற தற்பெருமை. அடக்கம் இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டு செல்வது.

கர்வம் = என்னை விட்டால் யார், நான் தான் உயர்ந்தவன் , என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, என்னால் முடியாது எதுவும் இல்லை என்ற கர்வம்.

மயக்கம் = எது சரி , எது தவறு என்று அறியாமல் குழம்புவது. நல்லது / கெட்டது , சரி/தவறு என்று தெரியாமல் காரியங்களை செய்வது.

மற்றவர்கள் சொன்னாலும் மண்டையில் ஏறாது.

உண்மை இல்லாதவற்றை உண்மை என்று நினைத்து பின் பற்றுவார்கள். சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பின்னால் போவார்கள். தவறான வழியில் போவார்கள். சூது, களவு, முயற்சி இன்மை, சோம்பல் போன்ற வழிகளில் செல்வார்கள்.

இவை அரக்கர்களின் குணம்.

நம்மிடமும் கொஞ்சம் இவை எல்லாம் இருக்கலாம்.

இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால், அவற்றை மாற்ற முயற்சி செய்யுங்கள். அரக்க குணம் தேய தேய தெய்வீக குணங்கள் நிறையும்.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.

என்பார் மணிவாசகர்.

நெறியல்லாத நெறியில் செல்லக் கூடாது.


தமிழ் கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போனாள்

வழியே ஏகுக

என்று.

கெட்ட குணங்களை விடுத்து, நல்ல குணங்களை கொண்டு, நல்ல வழியில் செல்வோம். 

Monday, June 12, 2017

கீதை - 3.18 - காரியமும் பலனும்

கீதை - 3.18 - காரியமும் பலனும் 


नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः॥१८॥

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந|
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய: ||3-18||


ந = இல்லை

ஏவ = நிச்சயமாக

தஸ்ய = அவனுடைய

க்ரெத்ன = செயல்களில்

அர்த்த = பலன், செல்வம், நோக்கம்

ந = இல்லை

அ க்ரெத்ன = செயலில்லாமல் இருப்பதிலும்

இஹ = இங்கே

கஸ்சந = எதிலும்

ந = இல்லை

அஸ்ய  = அவன்

ஸர்வபூதேஷு  = அனைத்திலும்

கஸ் சித் = எதிலும்

அர்தவ்யபாஸ்ரய: = பலன்களில் தஞ்சம் புகுவது இல்லை



அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; 
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.


கீதையில் மிகவும் குழுப்பவது இந்த பலனின்றி செயலை செய்வது என்ற இந்த சித்தாந்தம் தான். புரிகிற மாதிரி இருக்கும். புரியாத மாதிரி இருக்கும். புரிந்தாலும், இதெல்லாம் நடை முறைக்கு சரி வருமா என்ற சந்தேகம் வரும்.


அந்த சந்தேகங்களும், குழப்பங்களும் ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்.

முதற் காரணம் , துணை காரணம் என்ற இரண்டு காரணங்கள்.

அது என்ன முதற் காரணம், துணை காரணம் ?

பள்ளியில் சென்று படிக்கிறோம்.

இதில் எது முதல் காரணம் ? துணை காரணம் ?

படித்து பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேற   வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது துணை காரணம். நிறைய சம்பாதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது முதல் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா , படிப்பதன் முதல் காரணம் இறைவனை தொழுவது என்கிறார். பரீட்சை, மதிப்பெண், வேலை, சம்பளம் எல்லாம் துணைக் காரணங்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

படிப்பதன் பயன் இறைவனை தொழுவது என்கிறார்.

 அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதல்ல விஷயம் இங்கு.  வள்ளுவர் போன்ற பேராசானின் கருத்து பெருவாரியான மக்களின் கருத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

நாம் ஏன் வேலை செய்கிறோம் ? ஊதியம் வேண்டும், அதன் மூலம் வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம்.

ஊதியம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று இல்லை. புகழ், பதவி,அதிகாரம், செல்வாக்கு, நட்பு,  என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு பலனை எதிர்பார்த்து செய்கிறோம்.

பலன் வேண்டும் என்றால், அதை யாராவது தர வேண்டும். அது தானாகவே வந்து விடுவது அல்ல.

அப்படி யாரோ ஒருவர் நமக்குத் தர வேண்டும் என்றால், அவர் நம்மை விட உயர்ந்த இடத்தில்  இருக்க வேண்டும். அவர் தயவு நமக்கு வேண்டும். அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர் கோப படும்படி நடக்கக் கூடாது. அவரிடம் ஒரு பயம் வேண்டும்.

அவர் அந்த பலனை தராவிட்டால்  அவர் மீது கோபம் வரும்.

வேறு யாராவது அந்த பலனை தட்டிப் பறித்துக் கொள்வார்களோ என்று பயம் வரும்.  

இப்படி நம் சுதந்திரத்தை இழந்து, பயந்து, தயங்கி, மற்றவர்களுக்கு கை கட்டி, பல்லைக் காட்டி வாழும் வாழ்வில் என்ன இன்பம் இருக்க முடியும் ?

மாறாக, என் வேலை இது. இதை நான் செம்மையாகச் செய்வேன். என்னை விட இதை வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது.  இந்த வேலையை செய்வதே ஒரு இன்பம். அதுவே அதன் பலன் என்று நினைத்து ஒரு காரியத்தை செய்தால், யாரையும் நாடி நிற்க வேண்டியது இல்லை.

அப்படி செய்யப்பட்ட வேலைக்கு பலன் தானே வரும்.

ஒரு மாணவன் நிதமும் ஒழுங்காக படிக்கிறான், கொடுத்த பயிற்சி எல்லாம் செய்கிறான் என்றால் கட்டாயம் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பலனுக்காக ஒரு வேலையை செய்யவே முடியாது. நன்றாக வேலை செய்தால் பலன் கிடைக்கும்.

ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்கு கோப்பை வேண்டும், கோப்பை வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் கோப்பை கிடைக்காது. மாறாக, அதை மறந்து  விட்டு,தினமும் ஒழுங்காக பயிற்சி செய்தால் அவருடைய திறமை கூடி, மெருகேறி கோப்பை கிடைக்கலாம்.

எனவே,  வேலை செய்வதன் முதற் காரணம் அந்த வேலையை செம்மையாகச் செய்வது. துணைக் காரணம் அதன் பலன்.

இப்போது ஸ்லோகத்தை கவனிப்போம்.


அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.

அவன் செய்கை செய்வது பலனை நோக்கி அல்ல. பலன் வரும் என்பது அவனுக்குத் தெரியும். சரி, பலன் நோக்கி அல்ல என்றால் அதற்கு ஒன்றும் செய்யாமலேயே இருந்து விடலாம் அல்லவா ? அப்படி இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் பயன் இல்லை. அவன் , தன் வேலையை , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறான். 

பலனில் மனம் போகாவிட்டால், காரியத்தில் போகும். காரியம் சிறக்கும். சிறந்த காரியம் அதற்குரிய பலனை கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும். எனவே, பலனை பற்றி கவலைப் படுவதை விடுங்கள். நல்லதை, நன்றாகச் செய்யுங்கள். 

நல்லதே நடக்கும். 

Friday, April 14, 2017

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும்

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும் 


यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते॥१७॥

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:|
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே ||3-17||

ய = எவன்

து = ஆனால்

ஆத்ம ரதி = தன்னில் இன்புற்று இருக்கிறானோ

எவ = நிச்சயமாக

ஸ்யாத் = இருக்கும்

ஆத்மத்ருப்த = ஆத்ம திருப்தி உள்ளவனாய்

ச = மேலும்

மாநவ: = அவன்

ஆத்மநி = தன்னில்

எவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸந்துஷ்ட = பூர்ண திருப்தியுடன்

தஸ்ய = அவனுடைய

கார்யம்= காரியங்களில்

ந = இல்லை

வித்யதே= இருப்பது

 ||3-17||

எவன் ஒருவன் தன்னிலே இன்புற்று, தன்னிலே திருப்தி அடைந்தவனாய் இருக்கிறானோ, அவனுக்கு காரியம் என்பது இல்லை. 

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது கர்ம யோகம்.

நாம் கர்மங்களை, வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை, கர்மத்தின் உயர்வை சொல்ல வந்த கீதை, எப்படி பலனை எதிர்பார்க்காமல் கர்மம் செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை இந்த ஸ்லோகத்தில் ஒரேயடியாக கர்மமே இல்லை என்று சொல்கிறது.

யாருக்கு கர்மம் இல்லை ? யார் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கலாம் ?

எவன் ஒருவன் தனது மகிழ்ச்சிக்காக வேலை செய்கிறானோ, அவனுக்கு வேலை என்பதே இல்லை. எவன் தன்னுடைய வேலையில் திருப்தி கொள்வானோ அவனுக்கு வேலை என்பதே இல்லை.

அது எப்படி சரியாக இருக்கும் ?

ஏனோ தானோ என்று வேலையை  செய்து விட்டு, இது தான் எனக்கு பிடித்து இருக்கிறது, இதில் தான் எனக்கு மகிழ்ச்சி என்று ஒருவன் சொல்லிக் கொண்டு திரிந்தால் , அது சரியாகுமா ?

நாம் எப்படி வேலை செய்தாலும், நமக்கு மேலே ஒரு மேலதிகாரி இருப்பான், வீட்டு வேலை  என்றால் அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் மற்றவர்கள் இருப்பார்கள். நன்றாக செய்யவில்லை என்றால் அவர்கள் முகம் சுளிப்பார்களே. அவர்களுக்காக நாம் ஒழுங்காக செய்ய வேண்டாமா ?

நாம் மற்றவர்களுக்காகவே வேலை செய்து பழகி விட்டோம்.

பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக படிக்கிறோம். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள். அலுவலகத்தில், பொது இடத்தில் என்று எல்லா இடத்திலும் மற்றவர்களுக்காகவே நாம் தொழில் செய்கிறோம்.

அப்படியே செய்தாலும், அவர்களை திருப்தி செய்யவே நாம் வேலை செய்கிறோம். நமக்கு அதில் ஒரு ஈடுபாடோ, மகிழ்ச்சியோ இல்லை. வேலை செய்யாவிட்டால் சம்பளம் வராது. எனவே ஒழுங்காக வேலை செய்வோம் என்று  இருக்கிறோம்.

கீதை அதை மாற்றுகிறது.


எந்த வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாடோடு செய்ய வேண்டும்.

இரண்டாவது, அந்த வேலை செய்வதில் நமக்கு மகிழ்ச்சி வேண்டும். செய்யும் போது இன்பமாக இருக்க வேண்டும். ஏதோ கடனே என்று செய்யக் கூடாது.

மூன்றாவது, செய்து முடித்த பின் நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி வர வேண்டும். அந்த திருப்தி வரும்வரை அந்த வேலையை செய்ய வேண்டும். மற்றவர்கள்  எதை வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போகட்டும்.

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதா ?

செய்யும் வேலையை திருப்தியாக செய்கிறீர்களா ?

அப்படி செய்தால், அந்த வேலை ஒரு பளுவாகத் தெரியாது உங்களுக்கு.

வேலை செய்வது போலவே இருக்காது. அது ஒரு வேலையே இல்லை மாதிரி இருக்கும்.

மகிழ்ச்சி தராத வேலையை செய்யாதீர்கள். எந்த வேலையை செய்தாலும் அது உங்களுக்கு  முழு திருப்தி தரும் வரை அதை விடாதீர்கள்.

முழு திருப்தி எப்போது வரும் ? எந்த தொழிலிலும் அதன் உச்சம் தொடும் போது வரும்.

அப்படி முனைந்து, மகிழ்ச்சியாக திருப்தி வரும் வரை வேலை செய்து பழகினால்  அது உங்களை மாற்றும். நீங்கள் மாறுவீர்கள். உங்களை அது ஒரு உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்லும்.






Friday, April 7, 2017

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம்

கீதை - 3.16 - சுழலும் கர்மா சக்கரம் 


एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி ||3-16||

ஏவம் = எனவே

ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்

நா = இல்லை

அனுவர்தயதி = நடக்கச் செய்தல்

இஹ = இங்கு

ய: = எவன்

அகாயு = பாவம் நிறைந்த

இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்

மோகம் = ஆசை கொண்டு

பார்த = பார்த்தனே

ஸ = அவன்

ஜீவதி = வாழ்கிறான்

 ||3-16||

இந்த சுழற்சியை பின்பற்றி வாழாதவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். புலன் இன்பங்களில் சிக்கி அலைபவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

அது என்ன சுழற்சி ?

நாம் பலவித கர்மங்களை செய்கிறோம். நாம் செய்யும் வினைகளில் இருந்து நமக்குப் போக மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும்படி  செயலாற்ற வேண்டும்.  நாம் செய்யும் வினையின் பலன் மற்றவர்களுக்குப் போக வேண்டும் என்றால் அவர்களும் ஏதோ ஒரு காரியம் செய்திருக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் , நாம் செய்த வினையின் பலனை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவரும் தனக்கென்று செயலாற்றாமல் இருந்தால் அந்த செயலின் பலன் நிறைய பேருக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தவர்கள் , ஏதோ வினை செய்வார்கள். அது மீண்டும் பலபேரை சென்றடையும். அப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக செல்லும் போது அதில் ஒரு கிளை மீண்டும் உங்களிடமே வந்து சேரும். 

அதை விடுத்து , நீங்கள் செய்த கர்மத்தின் பலன் உங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் , இந்த சுழற்சி நின்று போகும். அது ஒரு பாவகரமான செயல் என்கிறது கீதை. 

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், செயலும் பலனும் மாறி மாறி எல்லோருக்கும் கிடைக்கும். 

மாறாக எனக்கு எனக்கு என்று ஒவ்வொருவரும் நினைத்து செயலாற்றினால், அந்த சுழற்சி நின்று போகும். அதுவே பெரிய பாவமாகும். 

தனிமனிதனின் செயலை ஒழுங்கு படுத்தினால் சமுதாயம் சரியாகி விடும். சமுதாயம் சரியானால் நாடு சரியாகும். நாடு சரியானால் உலகம் அனைத்தும் சரியாகும். 


இந்த சுழற்சியின் தன்மை அறியாமல் புலன் இன்பங்களில் மூழ்கி கிடப்பவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான் என்கிறது கீதை. 

அதாவது, எல்லாம் தனக்கே என்றும் , தன்னுடைய இன்பமே பெரிது என்று நினைத்து வாழ்பவன் இந்த கர்மா - பலன் - மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மை - அதன் மூலம் தனக்கும் கிடைக்கும் நன்மை என்ற சுழற்சியை புரிந்து கொள்வதில்லை. தன் இன்பமே முக்கியம் என்று இருக்கிறான். அப்படிப்பட்டவன் பாவ வாழ்க்கை வாழ்கிறான். 

பாவமற்ற வாழ்வை வாழ வேண்டுமானால் கர்மாவின் பலன் தனக்கு மட்டுமே என்ற சுயநலம் விடுத்து எல்லோரும் இன்புற்றிருக்க வினை செய்ய வேண்டும். 


















Wednesday, April 5, 2017

கீதை - 3.15 - காரியங்களின் தன்மை

கீதை - 3.15 - காரியங்களின் தன்மை 


कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்|
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் ||3-15||

கர்ம = செயல்கள்

ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது

வித்தி = என்று உணர்

ப்ரஹ்மம் = ப்ரம்மம்

அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய)  =

ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது

தஸ்மாத் = எனவே

ஸர்வகதம் = எங்கும் நிறைந்த

ப்ரஹ்ம = பிரமம்

நித்யம் = நிரந்தரமாக இருக்கும்

யஜ்ஞே = யாகத்தில்

ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது

||3-15||

கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் இருக்கிறோம். இது கர்ம யோக அத்யாயம். 

நாம் செய்யும் வினைகளை பற்றி பேசுகிறது இந்த அத்யாயம். இதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். 

அனைத்து செயலும் பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது. பிரம்மம் அழிவற்றதில் (அமிர்தத்தில்) இருந்து தோன்றுகிறது.   எனவே, எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் யாகத்தில் நிலை கொண்டிருக்கிறது என்று உணர். 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் புனிதத் தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும்.

செயல்கள் பிரமத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொன்னால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவ்வளவு உயர்ந்தது. பிரம்மத்திர்க்கு இணையானது. இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், ஒவ்வொரு செயலின் விளைவுகளும் மிக நீண்ட காலத்திற்கு இருக்கப் போவது. சாஸ்வதமானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், இந்த உலகத்தின் போக்கை நிரந்தரமாக மாற்றி விடுகிறீர்கள். செயல்கள் தொடர் விளைவினை கொண்டவை ஒன்றிலிருந்து ஒன்றாக அவை நீண்டு கொண்டே போகும். எப்படி பிரமத்தில் இருந்து எல்லாம் தோன்றியதோ, அது போல உங்கள் செயல்கள் இனி வரப் போகும் எத்தனையோ விளைவுகளுக்கு வித்திடும்.

இது, அடுத்த வரியில் இன்னும் தெளிவாகும்.

பிரமம் அமிர்தத்தில் இருந்து தோன்றுவது.

அமிர்தம் இறவா நிலை தருவது. அதில் இருந்து வரும் பிரமமும் இறவா நிலை கொண்டது. அதில் இருந்து வரும் உங்கள் செயல்களும் இறவா நிலை கொண்டவை.

ஒரு காரியம் செய்யுமுன் அந்த காரியத்தின் நீண்ட கால விளைவு (long term effect ) என்ன என்று ஆய்ந்து செய்யுங்கள்.

ஏதோ, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள்.

நிறுத்தி, நிதானமாக, தீர ஆராய்ந்து சிறப்பாக செய்யுங்கள்.

நான் செய்யும் இந்த காரியம் யுக யுகத்திற்கும் தொடரும் என்ற நினைவோடு செய்யுங்கள்.

எத்தனையோ தலைமுறை இதனால் பாதிக்கப் படப் போகிறது என்று எண்ணி செய்யுங்கள்.

செயல்களுக்கு ஒரு புனிதத் தன்மை, ஒரு நீண்ட கால நோக்கு இவை இரண்டும்  இருக்க வேண்டும்.

இது முதலில் தீய செயல்களை விலக்கும் .

நான் செய்யும் இந்த திருட்டுத் தொழில் மிகப் புனிதமானது என்று யாராவது நினைக்க முடியுமா ?

இப்படி எந்த தவறான தொழிலும் புனிதத் தன்மை பெற முடியாது.

இரண்டாவது, ஒரு நல்ல காரியம் செய்யும் போது அது நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற  நினைவோடு செய்ய வேண்டும்.

எங்கும் நிறைந்த இந்த பிரமம் சுயநலமற்ற கடமைகளை செய்வதில் அடங்கி இருக்கிறது.

யாரவது, மக்களின் பொது நலத்திற்க்காக நான் இந்த வங்கியை கொள்ளை அடிக்கிறேன் என்றோ, பொது நலத்திற்க்காக நான் கற்பழிக்கிறேன் என்றோ சொல்ல முடியுமா.

சுயலமற்ற அந்த செயல்களில் பிரமம் நிறைந்து இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு செயலையும் நாம் அணுகும்போது சில   நிகழ்வுகள் ஏற்படும்:

1. எல்லா செயலும் புனிதமானது என்றால், அதை செய்பவர்களும் நல்லவர்கள் என்ற  எண்ணம் வரும்.

2. நல்ல காரியங்களுக்கு துணை போகும் எண்ணம் வரும்.

3. முடியாவிட்டால் அதை கெடுக்கும் எண்ணம் வராது

4 நல்ல காரியங்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். படித்தால்  முதல் மாணவனாக வர வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.

5. செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் ஏற்படும்.

6. தொழிலில் ஏற்ற தாழ்வு பாராட்ட தோன்றாது

7. தொழிலின் மகத்துவம் விளங்கும் (diginity of labour )



 நீங்கள் ஒரு மரத்தை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வளர்ந்து, பல விதைகளைத் தரும். அதில் இருந்து இன்னும் பல மரங்கள் வரும்.

நீங்கள் ஒரு மரத்தை வெட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து எத்தனையோ மரங்கள் வந்திருக்கலாம். அனைத்தையும் நீங்கள் நிறுத்தி விட்டீர்கள்.

மரம் மட்டும் அல்ல.

நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். வீடு கட்டுகிறீர்கள். இப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறீர்கள். அனைத்தும் நீண்ட கால தாக்கம் கொண்டவை.

எந்த கர்மாவும் அதோடு போய் விடுவது இல்லை. எந்த கர்மாவுக்கும் ஒரு நீண்ட தொடர்ச்சி உண்டு.

எவ்வளவு உயர்ந்த விசயங்கள் இந்த இரண்டு வரியில் இருக்கிறது. காலம் காலமாய்  வழி காட்டும் வாசகங்கள்.


Tuesday, April 4, 2017

கீதை - 3.14 - மழை போல் கர்மாவைச் செய்

கீதை - 3.14 - மழை போல் கர்மாவைச் செய் 



अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥१४॥

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:|
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: ||3-14||

அந்நாத் = உணவு

பவந்தி = இருக்கிறது

பூதாநி = உயிர்களுக்கு

பர்ஜந் = மழையின் மூலம்

அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது

யஜ்ஞாத் = வேள்வியினால்

பவதி = இருக்கிறது

பர்ஜந்யோ = மழையின்ய மூலம்

யாங்கய = வேள்வியின் மூலம்

கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது

உணவால் உயிர்கள் வாழ்கின்றன. உணவு மழையின் மூலம் வருகிறது. மழை வேள்வியின் மூலம் வருகிறது. 

உணவால் உயிர்கள் வாழ்கின்றன - சரி, புரிகிறது

உணவு மழையின் மூலம் வருகிறது - சரி , புரிகிறது.

மழை, வேள்வியின் மூலம் வருகிறது = இல்லை. இது புரியவில்லை.

வேள்விக்கு மழைக்கும் என்ன சம்பந்தம் ? வேள்வி செய்தால் மழை வருமா ?


உனவு, உயிர், மழை, வேள்வி என்பது எல்லாம் ஒரு உருவகம்.

மழையின் குணம் என்ன ?

பிரதி பலன் பாராமல் பெய்வது.  இவ்வளவு பெய்தால் , எவ்வளவு கிடைக்கும் என்று மழை எதிர் பார்ப்பதில்லை. பெய்வது அதன் குணம். அது இயற்கையாக  இருக்கிறது.

அது மட்டும் அல்ல, மழை வேண்டியவன் வேண்டாதவன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், பணக்காரன் ஏழை , படித்தவன் முட்டாள் என்று பாகு பாடு பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் ஒன்றாய் பெய்கிறது.

தன்னலமில்லாமல் எல்லோருக்கும் வேண்டி செய்யும் எந்த கர்மமும், வேலையும் மழை போன்றதுதான்.

உணவு என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.

அப்படிப்பட்ட சேவையால் வாழ்க்கைக்கு வேண்டியது கிடைக்கிறது.

அதன் மூலம் உயிர்கள் வாழ்கின்றன.

அந்த தன்னலமற்ற உழைப்பு இல்லாவிட்டால்  உற்பத்தி இல்லை. உற்பத்தி இல்லாவிட்டால் உயிர்கள் வாழ முடியாது.

உணவு உற்பத்தி மட்டும் அல்ல. எந்த உற்பத்திக்கும் இது பொருந்தும். 

தொழிற்சாலைகள், கதவடைப்பு (strike ) போன்றவை இல்லாத காலத்தில் எழுதப் பட்டது கீதை. 

தொழிலாளிகளும், முதலாளிகளும் சுயநலத்திற்காக போராடி தொழிற்சாலைகளை மூடும் போது (சம்பள உயர்வு, ஊக்கத் தொகை என்று பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு) உற்பத்தி நிற்கிறது. உற்பத்தி நின்று போனால், உயிர்கள் துன்பப்படும். 

மழை என்பது விளை பொருட்களை உருவாக்கும் ஒரு சூழ்நிலை. அந்த சூழ்நிலை  வேள்வியால் - சுயநலமற்ற சேவையால் உருவாகிறது. 

இதை படிக்கும் போது கீதை ஏதோ தொழிளார்களுக்கு எதிரான, ஒரு முதலாளித்துவ  நோக்கம் கொண்ட நூல் போல தோன்றலாம். 

சுயநலமற்ற என்று கூறிய கீதை அதை எல்லோருக்கும் பொதுவாக கூறியது. முதலாளிக்கும், தொழிலாளிக்கும் பொதுவாக கூறியது.

அவர்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொவொரு நபருக்கும் ....

பெற்றோர் , ஆசிரியர், மருத்துவர், பிள்ளைகள், அரசன், வீரர்கள் என்று எல்லோருக்கும் பொதுவாக  கூறியது. 

சுயநலம் இன்று கல்வியை, மருத்துவத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது ?

பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். 

சகோதரர்கள் நீதி மன்ற படி ஏறுகிறார்கள். 

கணவன் மனைவி விவாகரத்து கோருகிறார்கள்.

தொழிலாளிகள் வேலை செய்ய மறுக்கிறார்கள். 

முதலாளிகள் கூலி தர மறுக்கிறார்கள். 

அரசாங்க ஊழியர்கள் வேலை செய்ய இலஞ்சம் கேட்கிறார்கள்.

திருட்டு, கொள்ளை, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கற்பழிப்பு என்ற அத்தனை சமுதாய நோய்களுக்கும் காரணம் - சுயநலம். 

எல்லாம் சுயநலம். 

சமுதாய சீரழிவுக்கு காரணம் - சுயநலம். 

 இதை வேரோடு அறுக்க முயல்கிறது கீதை. 

யோசித்துப் பாருங்கள், இதை விட ஒரு சிறந்த வழி இருக்குமா என்று ?

ஆண்டாண்டு காலத்திருக்கும் பலன் தரும் முறை இது. 

எத்தனை ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் தீராத பிரச்சனைகளை ஒரே ஒரு ஸ்லோகத்தில்  தீர்கிறது கீதை. 

மழை போன்ற தன்னலமற்ற சேவையால், உணவு போல உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும்  கிடைக்கும். அதன் மூலம் உயிர்கள் வாழும். 

எப்படி சுயநலம் இல்லாமல் வேலை செய்ய முடியும் ?

மீண்டும் இந்த ஸ்லோகத்தை பார்ப்போம். 

மழை பொழிகிறது. அது பிரதி பலன் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும், பெய்த மழை ஆவியாகி மீண்டும் மேகத்திற்கே வந்து சேர்கிறது.  அது எதிர் பார்க்காவிட்டாலும் அதற்கு கிடைக்கிறது. 

அது போல,  பலனை எதிர் பார்க்காவிட்டாலும்,  சுயநலமற்ற சேவைக்கு பலன்  எப்படியோ வந்து சேரும். அதைப் பற்றி நீ கவலைப் படாதே என்கிறது கீதை. 


Monday, April 3, 2017

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள்

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள் 


यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्॥१३॥

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:|
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13|

|
யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை

ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்

ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
|
புஞ்ஜதே = உண்கிறார்கள்

தே = அவர்கள்

து = அப்புறம்

அகஹம் = பாவம், துன்பம்

பாபா = பாவம் செய்பவர்கள்

யே = அவர்கள்

பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள் 

அத்மகாரணாத் = தங்களுக்காக

||3-13|

யாகத்தின் அல்லது வேள்வியின் மிச்சத்தை உண்போர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறார்கள். தனக்கென்று மாத்திரம் உணவு சமைத்து உண்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. தினமும் எல்லோருக்கும் நாம் சமையல் செய்து போட வேண்டுமா ? நடக்கிற காரியமா இது ? என்று நாம் நினைப்போம். 

கீதையின் நோக்கம் அதுவல்ல.

யாகம் அல்லது வேள்வி என்பது நாம் அன்றாடம் செய்யும் கடமை. 

அதை தனக்கு என்று மட்டும் செய்யக் கூடாது. 


இயற்கையில் இருந்து பெற்றாலும் சரி, நாம் வாழும் சமுதாயத்தில் இருந்து பெற்றாலும் சரி, எடுத்ததை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்.

எவ்வளவோ சமயங்களில் நமக்கு ஒரு வெறுப்பும் சலிப்பும் வரும் - என்ன உழைத்து என்ன பயன் - அலுவகலத்தில் ஒரு பதவி உயர்வு கிடையாது,
ஒரு பாராட்டு கிடையாது.....

அலுவலகத்தில் தான் அப்படி என்றால் வீட்டிலும் அதற்க்கு மேலே....

யாருக்கும் ஒரு நன்றி இல்லை...நான் ஏதோ இயந்திரம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...நல்லா இருக்குனு ஒரு வார்த்தை பாராட்டு
 கிடையாது, பாவம் ரொம்ப கஷ்ட பட்டியானு ஒரு கரிசலான விசாரணை கிடையாது....ச்சே என்ன வாழ்கை இது ...என்று ஒரு சலிப்பு வரலாம்.....


கர்ம யோகம் என்ன சொல்கிறது. உனக்காக மட்டும் உழைக்காதே. உன்னையும் தாண்டி யோசி. இந்த சமுதாயம் உயர வேண்டும், அதில் வாழும்
 மக்கள் உயர வேண்டும் என்று நினைத்து பாடுபடு. குடும்பம், உறவு, நட்பு, இந்த சமுதாயம், நாடு என்று யோசி.

எனக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறதோ, அவ்வளவு தான் நான் வேலை செய்வேன் என்று ஒவ்வொருவரும்  ஆரம்பித்தால், நாளடைவில் இந்த
சமுதாயம் நின்றுபோகும்


எனக்கு கிடைக்கும் பலனை விட நான் அதிகமாகவே உழைக்கிறேன், அதிகமாகவே  இந்த சமுதாயத்திற்கு தருகிறேன் என்று ஒவ்வொருவரும்
நினைத்து வாழும்  போது  ஒரு மிக மிக இனிமையான நிலை உருவாகும்.

தனக்காக உழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. தனக்காக மட்டும் உழைக்காதே  என்கிறது.

வேள்வியின்  என்று  சொல்லுவது  அதைத்தான்.

வேள்வி என்பது சுயநலமற்று செய்யும் ஒரு செயல்.

சுயநலம் அற்று வேலை செய்த பின், அந்த உழைப்பின் ஒரு பகுதியை, வேண்டுமானால் பெரும் பகுதியை என்று வைத்துக் கொள்ளுங்கள், நீ
எடுத்துக் கொள்.

அதுகூட முதலில் நீ எடுத்துக் கொள் என்று சொல்லவில்லை...மிச்சத்தை நீ எடுத்துக் கொள் என்கிறது.

முழுக்க முழுக்க ஒரு சுயநலமற்ற ஒரு சமுதாயத்தை கீதை சிந்திக்கிறது.

கீதையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.

கடமையை செய்து, அதன் பலன் மற்றவர்களுக்கு போன பின், மீதி உள்ளதை நீ எடுத்துக் கொள் என்கிறது கீதை.

நடைமுறையில்

- முதலில் கடமையை சரி வர செய்வது இல்லை.
- அப்படியே செய்தாலும், சுயநலம் இன்றி செய்வது இல்லை
- சுயநலத்தோடு செய்தாலும், செய்ததற்கு மேல் பலன் எதிர்பார்க்கிறோம்

அதை விடுத்து

நாம் செய்யும் வேலை உலக நன்மைக்காக என்று நினைக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க  செயலாற்ற வேண்டும். அப்படி செய்யும் வேளையில்  கொஞ்சம் நமக்கும் பலன் கிடைத்தால் அதை நாம் அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறது கீதை.

என்ன ஒரு உயர்ந்த நோக்கம்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். 

Sunday, April 2, 2017

கீதை - 3.12 - எடுப்பதும் கொடுப்பதும்

கீதை - 3.12 - எடுப்பதும் கொடுப்பதும் 


इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः॥१२॥

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபா விதா:|
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||

இஷ்டாந் = வணங்கத்தக்க

போகாந் = போகங்களை

ஹி = அதனால்

வோ = உங்களுக்கு

தேவா = தேவர்கள்

தாஸ்யந்தே = தருவார்கள்

யஜ்ஞபாவிதா  = யாகத்தில்

தைஹ் =  அவர்களால்

தத்தா = தரப்பட்டவை

அப்ரதாயை = தராமல்

ப்யோ = அவர்களுக்கு

யோ = எவன்

புங்க்தே = அனுபவிக்கிறானோ

ஸ்தேந = திருடன்

ஏவ = நிச்சயமாக

ஸ:  = அவன்

||3-12||


யாகத்தில் (வேள்வியில்) அர்ப்பணிக்கப்பட்ட தேவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய போகங்களைத் தருவார்கள். அவர்களுக்கு படைக்காமல் அந்த போகங்களை அனுபவிப்பவன் திருடனுக்கு சமமாவான். 

யாகம் , தேவர்கள், படைத்தல், அர்பணித்தல் என்ற வார்த்தைகள் கொஞ்சம் அலுப்பைத் தரும்.

எங்கு போய் யாகம் செய்வது, எந்த தேவருக்கு அர்ப்பணம் செய்வது. அப்படி அர்ப்பணம் செய்யாமல் அனுபவித்தால் நாம் திருடர்கள் ஆவோம் என்று வேறு கீதை சொல்கிறது.

இவை நடைமுறை சாத்தியங்களா ?

இந்த "தேவா" என்பதை நாம் சற்று பொதுப்படையாக பார்ப்போம். தேவர்கள் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள். யார் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தால் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த தேவனையும் காணோம்.

ஆனால், நமக்கு அனைத்தும் தருவது, நம்மை சுற்றி உள்ள இயற்கை.

மழை தருகிறது. பயிர்கள் விளைகின்றன, சூரிய ஒளியால் உலகம் இயங்குகின்றது. காற்று நாம் சுவாசிக்க உதவுகிறது. இப்படி நீர், காற்று, நிலம் என்று இயற்கை நாம் வாழ வழி செய்கிறது.

அந்த இயற்கை தான் தெய்வம். நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக கொண்டாடினார்கள். வருண பகவான், அக்கினி பகவான், வாயு பகவான் என்று.

அந்த தேவர்களுக்கு யாகத்தில் அர்ப்பணம் செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வேண்டிய போகங்களைத் தருவார். அப்படி அர்ப்பணம் செய்யாமல் உண்பவன் திருடன் என்ற இந்த ஸ்லோகத்தில் தேவர்கள் என்று என்ற இடத்தில் இயற்கை என்று வைத்துப் பாருங்கள்.

கச்சிதமாக பொருந்தும்.

இதை பல கோணங்களில் நாம் அணுகலாம்.

முதலாவது....இன்று நாம் சுற்று சூழல் பற்றியும், உலகம் வெப்பமாவதை பற்றியும் விவாதிக்கிறோம். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது, மரங்கள் அழிக்கப் படுவதால் மழை குறைகிறது, வெப்பம் அதிகமாகிறது, பெட்ரோல் போன்ற எரி பொருள்கள் குறைந்து கொண்டே வருகிறது என்று பலவிதமான விவாதங்கள் நிகழ்கின்றன.

இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ன ? நாம் இயற்க்கை வளங்களை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். மரம் வெட்டும் போது புது மரம் நடுவது இல்லை. நிலத்தடி நீரை எடுக்கும் போது , அதை திருப்பி செலுத்தவேண்டும் என்று நினைப்பது இல்லை. காடுகளை அழித்து நாடாக்கும் போது, புதியதாய் காடுகளை உருவாக்குவது இல்லை.

இப்படி நமது சுற்று சூழலில் இருந்து எடுத்துக் கொண்டே இரூந்து விட்டு, திருப்பி தராவிட்டால் நாம் கள்வர்கள் ஆவோம் என்கிறது கீதை.

சரிதானே...கள்வர்கள் ஒரு வீட்டில் புகுந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறார்கள். திருப்பி எதுவும் தருகிறார்களா ? இல்லையே ? அது போல் நாமும் இந்த சுற்று சூழலில் இருந்து, இயற்கையில் இருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறோம்.  திருப்பி தருவது இல்லை.

நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து திருடுகிறோம். அவர்களுக்கு வேண்டிய பெட்ரோல், கரி, காட்டு வளம் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு பதிலுக்கு ஒன்றும் தருவதில்லை. எவ்வளவு பெரிய கள்வர்கள் நாம். நம் பிள்ளைகளிடம் இருந்தும், பேரப் பிள்ளைகளிடம் இருந்தும் திருடுகிறோம்.


இரண்டாவது சிந்தனை ....

நாம், நமது சமுதாயத்தில் இருந்து சில பொருட்களை, சேவைகளை (services ) பெற்றுக் கொள்கிறோம். அந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பி செய்கிறோமா ? நாம் எடுப்பதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். அப்படி பட்ட சமுதாயம் நாளும் வளரும். எல்லோரும் கொடுப்பதை விட எடுப்பது அதிகமானால்  அந்த சமுதாயம் நாளடைவில் சீரழியும்.

நாம் நம்மை சுற்றி பார்க்கலாம் . எந்த சமுதாயம் கடினமாக உழைத்து மேலும் மேலும் உற்பத்தி செய்கிறதோ, அது நன்றாக செழித்து வளர்கிறது. உழைக்காமல்  உண்ணும் நாடோ, சமுதாயமோ நிறைய நாட்களுக்கு அப்படி செய்ய முடியாது.

கர்ம யோகம் பற்றி சொல்ல வந்த கீதை இரண்டு விஷயங்களை சொல்கிறது ....

நீ வேலை செய்யும்போது, சுயலமற்று (வேள்வியில்) வேலை செய்யும் போது , நீ சார்ந்த இயற்கை (தேவர்கள்) மற்றும் சுற்று சூழலில் இருந்து  நீ பொருட்களை உபயோகப் படுத்த வேண்டி வரும். அது  தவறு இல்லை.இயற்கை உனக்கு வேண்டிய எல்லாம் தரும். ஆனால்   எடுத்ததை திருப்பி கொடு.

இரண்டாவது, உன்னால் உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியாது. இந்த சமுதாயத்தில் இருந்து நீ சிலவற்றை பெற்றுக் கொள்ள வேண்டி வரும். தவறில்லை. நீ பெற்றுக் கொண்டதற்கு மேலாக திருப்பி கொடு.

எது வேள்வி - சுயநலமற்ற கர்மா வேள்வி

யார் தேவர்கள் - இந்த இயற்கை - பூமா தேவி, கங்காதேவி, காவிரித் தாய், வாயு தேவன் , அக்னி தேவன், வருண தேவன், என்று நம்மை சுற்றியுள்ள இயற்கை  ஒவ்வொன்றும் ஒரு தேவர், தேவதை தான்.

அர்ப்பணம் செய்யாமல் - நமக்கு அந்த இயற்கையில் இருந்து கிடைத்ததை கொஞ்சம் திருப்பி தராமால் எடுத்துக் கொண்டே இருத்தல்.

இது உங்களுக்கு சரி என்று படாவிட்டால்....மற்றவர்களின் உறையும் தருகிறேன் . படித்துப் பாருங்கள்


மனிதன் இயற்கை மற்றும் தான் சார்ந்து வாழும் சமுதாயம் இரண்டையும் போற்ற வேண்டும். மதிக்க வேண்டும். அவற்றில் இருந்து எடுப்பதை விட கொடுப்பது அதிகம் இருக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்.

எடுப்பது அதிகமா. கொடுப்பது அதிகமா என்று.

தனி மனிதனை ஒழுங்கு படுத்துவதன் மூலம் கீதை ஒரு சமுதாயமும், நாடும் வாழ  வழி சொல்கிறது.






Friday, March 31, 2017

கீதை - 3.11 - மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள்

கீதை - 3.11 -  மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள் 


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:|
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத ||3-11||


தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை

பாவயதா = வெளிப்படும்படி

அநேந = அதன் மூலம்

தே = அவர்கள்

தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை

பாவயந்து =    செயல் பட்டு

வ: = உங்களுக்கு

பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்

பாவயந்த: = உதவி

ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை

பரம = இறுதி நிலை, உன்னத நிலை

வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்

||3-11||

இதனால் நீங்கள் தேவர்க்ளை பற்றி எண்ணுங்கள். அவர்கள் உங்களை எண்ணுவார்கள். இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி உயர்ந்த நிலையை அடைய முடியும். 

அது என்ன நீங்கள் தேவர்களை நினையுங்கள், தேவர்கள் உங்களை நினைப்பார்கள் ? யார் அந்த தேவர்கள். அவர்கள் எப்படி நமக்கு உதவி செய்வார்கள்.

தேவர்கள் என்று இங்கே கூறப்படுவது தெய்வீகத் தன்மை.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை, ஆற்றல் ஒளிந்து இருக்கிறது. Potential என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


பெரும்பாலானவர்கள் ஏதோ படித்தோம், ஏதோ ஒரு வேலை கிடைத்தது செய்கிறோம். சம்பளம் வருகிறது. அதன் மூலம் குடும்பம் நடக்கிறது என்று வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.

கீதை ஒரு மாற்று வழியை சொல்கிறது.

முதலில் உங்களின் திறமை, ஆற்றல், ஆவல் இதில் இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.

"தேவர்களை எண்ணிப் பாருங்கள் "

திறமை எது என்று கண்டு பிடித்தவுடன் அந்தத் திறமையை பயன்படுத்துங்கள்.

எப்போது உங்கள் திறமை, ஆற்றலை நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் ஒரு உற்சாகத்தை அடைவீர்கள். அது சுகமா இருக்கும். அதை மேலும் மேலும் வளர்க்க முனைவீர்கள்.

அப்படி உற்சாகமாக செய்யும் வேலையில் சம்பளம் என்ன, பதவி உயர்வு என்ன என்றெல்லாம் பார்க்க தோணாது. நல்லா செய்யணுமே, சீக்கிரம் செய்யணுமே, எப்படியாவது இதை செய்து முடிக்க வேண்டுமே என்ற ஆர்வமே மேலோங்கி நிற்கும்.

அப்படிப்பட்ட வேலை செய்வதை நீங்கள் இன்பமாக உணர்வீர்கள்.

"கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே " என்று சொன்னால் எல்லோரும் முகம் சுளிப்பார்கள். இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. ரொம்ப கஷ்டம், நடை முறைக்கு ஒத்து வராது என்று.

ஆனால், நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டால் , அந்த வேலையே அந்த வேலையின் பலன் தான்.

நிறைய பேர் hobby என்று வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதை செய்ய அவர்கள் சம்பளம் , பணம் எல்லாம் எதிர் பார்ப்பது இல்லை. புகைப்படம் பிடிப்பது, தோட்ட வேலை செய்வது, பாடுவது என்று பல இருக்கும்.

அதையே முழுநேர வேலையாக செய்யத் தொடங்கினால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

உங்களுக்குள் இருக்கும் திறமையை, ஆற்றலை நினையுங்கள்.

அந்த ஆற்றல் உங்களை உயர்த்தும். நீங்கள் அந்த ஆற்றலை வளர்ப்பீர்கள்.  அது உங்களை  உயர்ந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.

பலன் இரண்டாம் பட்சமாகும்.  வாழ்க்கை இனிமையாகும்.

சிந்தித்துப் பாருங்கள்.


Thursday, March 30, 2017

கீதை - 3.10 - தியாகம் எல்லாம் தரும்

கீதை - 3.10 - தியாகம் எல்லாம் தரும் 


सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्॥१०॥

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக் ||3-10||

ஸஹயஜ்ஞா:  = வேள்வியுடன்

ப்ரஜா: = மனித குலம்

ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு

புரோ = முன்பு

உவாச = கூறினான்

ப்ரஜாபதி:| = பிரமன்

அநேந = இதன் மூலம்

ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்

இஷா = அது

வ = உங்கள்

அஸ்து = இருக்க வேண்டும்

இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்

 ||3-10||

வேள்வியின் மூலம் உலகைப் படைத்த பிரமன் கூறினான் இதன் மூலம் நீங்கள் பல்கி பெருகுவீர்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் இது தரும். 

வேள்வி என்றால் சுயநலமின்மை என்று பார்த்தோம். யக்யம் என்ற சொல்லுக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.

இந்த உலகம் தொடங்கி , நிகழ்வது அர்பணிப்பான காரியங்களால்.

சுயநலமே அத்தனை அழிவுக்கும் காரணமாய் இருக்கிறது. ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின், ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாய் இருப்பது இந்த சுயநலமே. 

உங்களிடம் சில திறமைகள் இருக்கும் - நன்றாக பாடுவது, நன்றாக சமைப்பது, நன்றாக நிர்வாகம் பண்ணுவது, வண்டி ஓட்டுவது, இப்படி ஏதோ ஒரு திறமை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. 

இந்த திறமை எனக்குமட்டும்தான் பயன்பட வேண்டும். நான் இதன் பயனை யாருக்கும் தர மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே பாடி கேட்டு இரசித்து கொண்டும், நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டும், உங்கள் வீட்டை, உங்கள் நிதியை மட்டும் நீங்கள் நிர்வகித்து கொண்டும் இருந்தால் என்ன ஆகும் ? 

உங்களுக்கு ஒரு சந்தோஷமோ, நிம்மதியோ, பண வரவோ, புகழோ இருக்காது. 

எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் பேரும் புகழும் செல்வமும் அடைவீர்கள் 

Super Star  என்றால் உலகம் முழுவதும் நிறைய பேர் அவருடைய திறமையால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம். 

கொடுங்கள். உங்கள் திறமை உலகெங்கும் பரவட்டும். அத்தனை பேருக்கும் பயன்படட்டும்.

எவ்வளவு பேருக்கு உங்கள் திறமை பயன்படுகிறதோ, அவ்வளவு உங்களுக்கு நல்லது. 

உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படவேண்டும் என்று நினைத்துக் கொடுங்கள்.  எந்த வேலை செய்தாலும் இது பலருக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்து செய்யுங்கள்.  எனக்காக, எனக்கு கிடைக்கும் சம்பளத்துக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். 

சமுதாய நன்மைக்காக, உலக நன்மைக்காக என்று செய்யுங்கள். 

அப்படி செய்தால் என்ன நிகழும் ?


ஒன்று, தீய செயல்கள் செய்யும் எண்ணம் வரவே வராது. உலகில் யாருமே தீமை  செய்யாவிட்டால் உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். 

அடுத்தது, மற்றவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து செய்யும் செயலில் எவ்வளவு நல்லது விளைந்தாலும் அது நல்லதுதானே. அதில் வெற்றி , தோல்வி என்று ஒன்றும் கிடையாது. 

மூன்றாவது, வெற்றி தோல்வி இல்லாவிட்டால் , ஏமாற்றம், குழப்பம், பொறாமை என்று எதுவும் இருக்காது.  யாருக்கு பெயர் கிடைத்தால் என்ன என்ற எண்ணம் வரும். 

அந்த எண்ணம் கற்பக மரம், காமதேனு போல் நீங்கள் கேட்டது எல்லாம் தரும். நீங்கள் பல்கி பெருகுவீர்கள்.


சரி, இதெல்லாம் நடை முறையில் சரிப்பட்டு வருமா ? என்ற கேள்விக்கு ஒரே விடைதான் இருக்கிறது. 

நம்புங்கள். முயன்று பாருங்கள். ஒரு சில நாள் அப்படி இருந்து பாருங்கள். உங்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று பாருங்கள். முடிந்தால்  தொடருங்கள்.

கீதை சொல்கிறது. தவறாக இருக்க வழி இல்லை. முயன்று பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே ?



Tuesday, March 28, 2017

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய்

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய் 


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर॥९॥

யஜ்ஞார்தாத்கர்மணோந்யத்ர லோகோயம் கர்மபந்தந:|
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||3-9||


யஜ்ஞார்தாத் = யக்ஞய + அர்த்த = வேள்வியின் நோக்கத்தோடு 

கர்மண = காரியங்களை

அந்யத்ர = வேறுவிதமாக

லோகா = உலகில்

அயம் = இது

கர்மபந்தந: = கர்மத்துடன் இணைப்பது

ததர்தம் = தத் = அர்த்தம் = அதற்காக

கர்ம = காரியங்களை

கௌந்தேய = கௌந்தேயனே

முக்தஸங்க: = முக்த + சங்க = பற்றினை விடுத்து

ஸமாசர = செய்

வேள்விக்காக செய்யாத மற்ற அனைத்து செயல்களும் மனிதர்க்கு ஒரு விலங்கு ஆகிறது.  அதனால்,குந்தி  மகனே,பற்றை விடுத்து தொழில் செய்து கொண்டிரு 

அது என்ன வேள்வியின் பொருட்டு காரியம் செய்தல். இப்ப எல்லாம் யார் வேள்வி செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணன் இருந்த காலத்திலேயே கூட எல்லோரும் , எப்போதும் வேள்வி செய்து கொண்டிருந்தார்களா என்ன.

பின் ஏன் கண்ணன் வேள்வியின் பொருட்டு காரியம் செய்  என்கிறான்.

யங்கியம் என்ற வார்த்தைக்கு அர்ப்பணிப்பு, சுயநலம் இல்லாத என்று பொருள்.

சுயநலம் இல்லாமல், ஒரு அர்ப்பணிப்பு மனதுடன் எந்த காரியத்தையும் செய் என்கிறான்.

இது எல்லாம் நடக்கிற காரியமா ? சுயநலத்துடன் செய்தாலே நம்மை ஏமாற்றி  விடுகிறார்கள். இதில் சுயநலமும் இல்லாவிட்டால் அவ்வளவுதான். இந்த உலகத்தில் வாழ முடியுமா ?

சற்று சிக்கலான கேள்விதான்.

அர்ஜுனன் முன்னால் பெரிய படை  நிற்கிறது. அவனால் அந்த படையை வெல்ல முடியும். இருந்தும் யுத்தம் செய்ய தயங்குகிறான்.

ஏன் ?

அந்த படையில் உள்ளவர்கள் அவனுடைய சொந்தக் காரர்கள் - மாமன், மச்சான், தாத்தா, குல குரு, என்று எல்லோரும் இருக்கிறார்கள்.

"என் சொந்தக்காரர்களை எப்படி கொல்வேன் " என்று  தவிக்கிறான்.

அவர்கள் அர்ஜுனனின் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டால் அவன் எளிதாக சண்டை இட்டு அவர்கள் வென்றிருப்பான்.

சுயநலம் குறுக்கே நிற்கிறது.

அவன் என்ன செய்ய வேண்டும் ?

நீதிக்காக போராட வேண்டுமா ? அல்லது சொந்த பந்தம் என்று சுயநலத்துக்காக அநீதி நடக்கட்டும் என்று விட்டு விட்டு போய் விட வேண்டுமா ?

நீதிக்காக போராட வேண்டும் என்பது தான்  எல்லோரின் பதிலாகவும் இருக்கும்.

அவன் கடமையைச் செய்ய தடையாக  இருப்பது எது ? அவன் சுயநலம்.

 எனவே,சுயநலம் தவிர்த்து கடமையைச் செய் என்கிறான் கண்ணன்.

சரி, அது அர்ஜுனனுக்கு அந்த இடத்தில் சரியாக இருக்கும். நமக்கு சரி வருமா என்ற கேள்வி  வரும்.

 யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் கடினமாக வேலை செய்து , ஒரு பதவி உயர்வை எதிர்பார்த்து  இருக்கிறீர்கள்.உங்கள் மேலாளர் , தனக்கு பிடித்த ஒருவருக்கு பதவி உயர்வை தந்து விடுகிறார்.

அது சரியா ? இல்லை .

ஏன் சரி இல்லை. அவர் சுயநலமாக செயல் பட்டார். தனக்கு வேண்டியவனுக்கு பதவி உயர்வு  தந்தார். அது உங்களுக்கு வருத்தம்  தருகிறது.

அதே போல் நீங்கள் செய்தால் வேறு யாருக்கோ வருத்தம் வரும்  அல்லவா.எனவே, சுயநலம் தவிர்த்து கடமை செய்ய வேண்டும் என்று தெரிகிறது அல்லவா.

இலஞ்சம் கொடுக்கிறோம். எனக்கு ஒரு நன்மை வேண்டும். மற்றவன் எக்கேடு கெட்டு போனால் என்ன  பணம் கொடுத்து காரியம் செய்து கொள்ளப் பார்க்கிறோம்.

அது சரியா  ? இல்லை.

காரணம் என்ன, நம் சுயநலத்துக்காக மற்றவர்களின் உரிமையை பறிக்கிறோம்.

இப்படி எங்கு பார்த்தாலும் சுயநலத்துடன் மற்றவர்கள் செயல்படும்போது நமக்கு கோபம் வருகிறது. அது போல நாம் செயல் பட்டால் மற்றவர்களுக்கு வருத்தமும் கோபமும் வரும் அல்லவா.

அப்ப என்ன செய்ய வேண்டும் ?

சுயநலம் தவிர்த்து, பற்று அற்று காரியம் செய்ய  வேண்டும்.

Act objectively not subjectively.

காரியத்தில் குறியாக இருக்க வேண்டும். யாருக்கு நன்மை வரும், யாருக்கு கெடுதல் வரும் என்று  பாராமல்,காரியத்தை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

இது பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க  இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2017/03/39.html




Monday, March 27, 2017

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை 


नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः।
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मणः॥८॥

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: ||3-8||

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக

குரு = செய்தல்

கர்ம = கர்மங்களை

த்வம் = நீ

கர்ம = செயல்களை

ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக

ஹி = அதனால்

அகர்மண: = செயலன்றி இருப்பது

ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம் 

அபி = இருந்தும்

ச = மேலும்

தே = உன்

ந = இல்லை

ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது 

அகர்மண: = செயலன்றி இருந்தால்

உனக்கென்று விதிக்கப்பட்ட செயல்களை நீ தவறின்றி செய். உடலின் இயற்கை என்பது  செயல் செய்வது. செயல் செய்யாமல் இருந்தால் உடலைக் கூட பராமரிக்க முடியாது.  வேலை செய்வது என்பது வேலை செய்யாமல் இருப்பதை விட உயர்ந்தது. 

நமது வாழ்க்கை ஒரே சீராக போய் கொண்டிருக்கும் வரை கவலை இல்லை.

எங்காவது சிக்கல் வந்து விட்டால் , கொஞ்சம் முயன்று பார்ப்போம். நண்பர்கள் , உறவினர்கள் உதவியை நாடுவோம். அதிலும் நடக்கவில்லை என்றால், நம்மால் முடியாது என்று தளர்ந்து விடுவோம்.


"என்னால் முடியாது. எல்லா முயற்சியும் செய்தாகி விட்டது. ஒண்ணும் நடக்கல. என்ன என்ன செய்வது . என்னை விட்டு விடுங்கள் . என்னால இவ்வளவுதான் முடியும் . எல்லாம் விதி விட்ட வழி. இதுக்கு மேல என்ன செய்ய முடியும் " என்று நாம் தளர்ந்து விடும் சமயங்கள் உண்டு.

தோல்வி வரும். கஷ்டங்கள் வரும். எதிர்ப்பு வரும். தட்டுப் பாடு வரும். ஏமாற்றங்கள் வரும்.

இவை எல்லாம் வரும் போது நம் கடமையை நாம் விட்டுவிட நினைப்போம்.


அர்ஜுனனுக்கு அப்படி ஒரு சங்கடம் வந்தது. எதிரில் சண்டையிட நிற்பவர்கள் எல்லோரும் உறவினர்கள், வித்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர். அவர்களை எதிர்த்து எதிர்த்து போர் செய்ய முடியாமல் தவிக்கிறான். நான் சந்நியாசியாக போய் விடுகிறேன். ஞான மார்கத்தில் போகிறேன் . என்னை விட்டு விடு கிருஷ்ணா என்று மன்றாடுகிறேன்.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்கிறான். நமக்கும் தான்.

நீ கடமையை விட்டு செல்ல முடியாது. மற்ற எல்லாவற்றையும் விடு. கடமையை செய்யாவிட்டால் உன் உடலைக் கூட உன்னால் சரிவர போற்றி பாதுகாக்க முடியாது. வேலை செய்வது என்பது செய்யாமல் இருப்பதைவிட உயர்ந்தது என்கிறான்.


கடமையைச் செய்வது என்பது நம் இயற்கை. நாம் ஏதோ நம் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உடலின் இயற்கை வேலை செய்வது.

முடிந்தால் ஒரு நாலு நாள் ஒரு வேலையும் செய்யாமல் இருந்து பாருங்கள்.

உண்ட உணவு செரிக்காது. தூக்கம் வராது. என்னவோ போல் இருக்கும். வேலை செய்து கொண்டே இருந்தால் இந்த சிக்கல் எதுவும் வராது.

உடலை விடுங்கள்.

நமது வாழ்வில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் எங்கோ நாம் நம் கடமைகளை  சரியாக செய்யாமல் விட்டதுதான்.

படிக்காமல் விட்டதால், நல்ல மதிப்பெண், நல்ல வேலை , நல்ல சம்பளம் கிடைக்கவில்லைல்.

சரியான உடற்பயிற்சி செய்யாததால் நோய் வருகிறது.

அலுவலகத்தில் , வீட்டில், வெளியில் சரியாக செய்யாமல் விட்ட கடமைகள் நமக்கு துன்பத்தைத் தேடித் தரும்.

தூக்கம் வராத ஒவ்வொரு இரவுக்கும் பின்னால் செய்யத் தவறிய கடமை ஏதோ ஒன்று இருக்கும்.

சில சமயம் வேலை ஒன்றும் செய்யாமல், சும்மா ஜாலியாக இருப்பது சுகமாக இருப்பது  போலத் தெரியும். உண்மையில் அது அப்படி அல்ல.

வேலை செய்வதுதான் உயர்ந்தது. சிறந்தது.

எத்தனை சிக்கல் வந்தாலும். எத்தனை தடங்கல் வந்தாலும். எத்தனை ஏமாற்றங்கள், சலிப்புகள், ஏளனங்கள் வந்தாலும்...உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதிலிருந்து வேறு வழியே இல்லை.

உடலும், மனமும் செம்மையாக இருக்க வேண்டுமா ?

உங்கள் கடமை எதுவோ அதை விடாமல் செய்யுங்கள்.

வெற்றிக்கும், இன்பமயமான வாழ்வுக்கும் அது ஒன்றே வழி.

உங்கள் கர்மத்தை உங்கள் வாழ்க்கையோடு இரண்டற கலந்து விடுங்கள்.

வெற்றி வந்தாலும் சரி, தோல்வி வந்தாலும் சரி ...உங்கள் கர்மத்தை நீங்கள் செய்து கொண்டே போங்கள்.

கர்மம் தான் வாழ்க்கை. வாழ்க்கை தான் கர்மம்.

அதுதான் கர்ம யோகம். 

Sunday, March 26, 2017

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?


यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते॥७॥

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந|
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே ||3-7||


ய = எவன்

து = ஆனால்

இந்திரியாணி = புலன்களை

மநஸா = மனதால்

நியம்யா = கட்டுப்படுத்தி

ஆரம்பதே = தொடங்குகிறானோ

அர்ஜுந = அர்ஜுனா

கர்மேந்த்ரியை: = புலன்களால் காரியங்கள் செய்கிறானோ

கர்மயோக = கர்மயோகத்தின் மூலம்

அஸக்த:  = பற்றில்லாமல்

ஸ = அவன்

விஸிஷ்யதே = சிறந்தவன்


அர்ஜுனா, எவன் ஒருவன் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி , பற்றற்று கர்மங்களை செய்கிறானோ 

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

இந்த சுலோகம் ஒரு மிக முக்கியமான செய்தியை கூறுகிறது. பற்றற்று காரியம் செய் என்கிறது.  எவ்வளவு சிந்தித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இந்த பற்றற்று காரியம் செய்வது. பின் ஏன் கீதை அதை சொல்கிறது ?

யாரால் பற்றற்று செய்ய முடியும் ?

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் என்ன  வேறுபாடு ?

விலங்குகள் புலன்களால் உந்தப்பட்டு காரியங்களை செய்கின்றன. அவற்றிற்கு நேரம்,  இடம்,  பொருள், அளவு,  நல்லது கெட்டது  என்று எதுவும் கிடையாது . கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று  வாழ்பவை.

மனிதர்கள் அப்படி அல்ல. இந்த வித்தியாசங்கள் அறிந்தவர்கள்.

அவர்களின் புலன்களை அவர்கள் அறிவால் கட்டுப்படுத்த  தெரிந்தவர்கள்.

தவறு என்று அறிவு    சொன்ன பின்னும் புலன் ஆசைகளால் ஒன்றைச் செய்பவன் கீழான மனிதன்.

அறிவு  சொல்கிறது அந்த குளிர் பானத்தை குடிக்காதே என்று,  நாக்கு சொல்கிறது அதை குடி என்று.

நாக்கு சொல்வதை கேட்பவனா? அறிவு சொல்வதை கேட்பவனா ? எவன் சிறந்தவன் ?

சந்தேகம் இல்லாமல் அறிவின் சொல்படி நடப்பவன் சிறந்தவன்.

அறிவின் சொல்படி கேட்டு நடப்பதிலும், செய்யும் செயல்களின் பலன்களை எதிர்பாராமல் விருப்பு வெறுப்பு இன்றி எவன் செயல் படுகிறானோ அவன் சிறந்தவன்.

கர்ம யோகத்திற்கு உண்டான விதிகளை இந்த ஸ்லோகமும் இதற்கு முந்தைய சுலோகமும் தருகிறது

1. மனதை அடக்காமல் புலன்களை அடக்கி பலன் இல்லை.

2. அறிவு/மனம் புலன்களை செலுத்த வேண்டும்.

3. பற்று அற்று காரியங்களை செய்ய வேண்டும்.

இவற்றை செய்பவன் கர்ம யோகி.  மனிதர்களில் சிறந்தவன் என்கிறது கீதை

முதல் இரண்டும் ஒருவாறு நமக்கு புரிகிறது.

இந்த மூன்றாவதுதான் கொஞ்சம் தகராறு பண்ணுகிறது. பற்று அற்று எப்படி காரியம் பண்ண முடியும். பலனை எதிர்பார்க்காமல் எப்படி காரியம் பண்ண முடியும் ?

ஒரு குழந்தை பொம்மையை வைத்து விளையாடும். யார் கேட்டாலும் தராது. இறுகப் பற்றிக் கொள்ளும்.   கொஞ்ச நேரம் கழித்து, அந்த பொம்மையை கட்டி பிடித்தபடி உறங்கிவிடும். தூக்கம் வர வர கை நெகிழ்ந்து பொம்மையை விட்டு விடும்.

நெகிழ்வு வர பற்று விடும்.

மனம் கல்லாய் இருக்கும்போது, இறுகிக் கிடக்கும். பற்று விடாது.

மனம் நெகிழும்போது பற்று விடும்.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி.

பற்றற்று காரியம் செய்ய வேண்டுமானால் மனம் நெகிழ வேண்டும். சுயநலம் தலை தூக்கி நிற்கும் வரை பற்று விடாது..

ஒரு தாய் தன்  குழந்தைக்கு எவ்வளவோ செய்கிறாள்...பலன் எதிர்பார்த்தா செய்கிறாள் ...பலன் எதிர்பார்க்காமல் செய்கிறாள் ...ஏன் ? பிள்ளை என்ற அன்பு, மன நெகிழ்வு ....

மனதில் அன்பு ததும்பும்போது செயலில் ஆர்வம் இருக்கும், பலனில் ஆர்வம் இருக்காது.

அன்பு எல்லைகளை தள்ளிபோடும், அல்லது அழித்துப் போடும்.

தான் என்ற குறுகிய வட்டம் விரிந்து விரிந்து ஒரு நாள் இல்லாமலே போகும்.

தர்மம் பண்ணுவது, ஏழைக்கு உதவுவது, இரத்த தானம் பண்ணுவது, இப்படி ஒரு சில காரியங்களை  நாம் பலன் எதிர்பாராமல் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இந்த காரியங்களுக்கு எல்லாம் அடிப்படை அன்பு, கருணை.


அன்பு வரும்போது, இராஜ்யத்தின் மேல் பற்று இல்லாமல், தம்பியிடம் கொடுத்துவிட்டு  சிரித்துக் கொண்டே கானகம் போக முடியும்.

அன்பு இல்லாதபோது, ஊசி முனை அளவு நிலம் கூட தரமாட்டேன் என்று உலகளந்த  பெருமாளையே உதாசீனம் படுத்தி, தம்பிகளை போர் முனையில் கொண்டுவந்து  நிறுத்தும். மண்ணின் மேல் உள்ள பற்று.

கர்ம யோகத்தின் அடிப்படை அன்பு. கருணை. அருள். 

தன்னை கடந்து, தன் குடும்பத்தை கடந்து, ஊர், நாடு எல்லைகளை கடந்து எல்லோரையும் நேசிக்கும் அன்பு.

பற்றற்ற செயலின் அடிப்படை அன்பு. 

கீதை - 3.6 - அறிவும் புலனும்

கீதை - 3.6 - அறிவும் புலனும் 


कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते॥६॥

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||3-6||

கர்மேந்த்ரியாணி = இந்திரியங்களால் (புலன்கள் மூலம்) செய்யப்படும் காரியங்களை

ஸம்யம்ய = நிறுத்தி விட்டு, கட்டுப் படுத்தி விட்டு

ய = அவன்

ஆஸ்தே = இருக்கிறனானோ

மநஸா = மனதில்

ஸ்மரந் = நினைத்துக் கொண்டு

இந்த்ரியார்தாந் = புலன் இன்பங்களை

விமூடாத்மா = மூட ஆத்மா.

மித்யாசார: = களவொழுக்கம் உள்ளவன்

ஸ = அவன்

உச்யதே = சொல்லப் படுகிறான்

மனதை கட்டுப்படுத்தாமல் , புலன்களை மட்டும் கட்டுப் படுத்துபவன் , பொய் ஒழுக்கம் கொண்டவன் ஆவான். 

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள் சொல்வதை கேட்கிறோம். நாம் படிப்பது, கேட்பது எல்லாம் சரியாக இருக்கிறது என்று நம் அறிவு சொல்கிறது. அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்று முயற்சி செய்வோம். ஆனால், முடியாது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

பென்னாசை கூடாது, மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று நம் அற நூல்கள் கூறுகின்றன. நாமும் கட்டுப் பாட்டுடன் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  அப்படி இருக்கும் போது தெருவில் ஒரு அழகான பெண் போனால், மனம் அவள் பின்னால் போகிறது.

சரி, அது வேண்டாம், சில பேர், நான் அப்படி எல்லாம் இல்லை என்று வாதிக்கக் கூடும்.

உணவு கட்டுப்பாடு. மருத்துவர் சொல்லி இருப்பார் இனிப்பு, எண்ணெய் பலகாரங்களை  தவிர்க்க வேண்டும் என்று. நாமும் சரி என்று இருப்போம்.  வீட்டில் ஒரு  வடை போட்டால், ஒரு லட்டு செய்தால் முதல் ஆளாக போய் நிற்போம்.

ஏன் ?

மனம் கட்டுப் படவில்லை.

மனம் கட்டுப்படாதவரை புலன்களை கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அப்படி கட்டுப் படுத்தி விட்டேன் என்று சொன்னால் அது பொய் என்று கீதை சொல்கிறது.

களவொழுக்கம் என்கிறது.

வெளி உலகுக்கு வேண்டுமானால் துறவி, சாமியார் என்று சொல்லிக் கொள்ளலாம். உள்ளுக்குள் அவன் அனைத்துக்கும் ஆசைப் படுவான். மனம் அரித்துக் கொண்டே இருக்கும். சரியான சமயத்தில் தவறு நிகழும்.

சரி தவறு என்ற ஞானம் எவ்வளவுதான் இருந்தாலும், மனிதன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தவறு செய்வான்.

செயலில் தவறு நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்றால் அறிவு மட்டும் போதாது.

ஞானம் மட்டுமே நல்ல வழியில் செலுத்தாது . உலகில் நடக்கும் பெரும்பாலான தவறுகள் தெரிந்தே  செய்வதுதான். களவும், சூதும், கொலையும், மேலும் பல வன் கொடுமைகளும் அவை தவறென்று தெரியாமலா செய்கிறார்கள்.

எனவே, கர்ம மார்க்கம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ஞானம் மட்டும் போதாது.

வெறும் அறிவால் வாழ்க்கை முழுமை பெறாது.

பின், என்னதான் செய்வது ?


Thursday, March 23, 2017

கீதை - 3.5 - எது என் கடமை ?

கீதை - 3.5 - எது என் கடமை ?


न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः॥५॥

ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்|
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: ||3-5||

ந = இல்லை

ஹி = அதனால்

கஸ்சித் = ஒருவன்

க்ஷணம் = ஒரு நொடி கூட

அபி = இப்போது

ஜாது= ஒருபோதும்

திஷ்டதி = நிலையாக  இருத்தல்

அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்

கார்யதே = செயல் என்பது 

ஹி = அது

அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக

கர்ம = செயல்

ஸர்வ: = அனைத்து

ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்

குணை: = குணங்களில் இருந்து


செயல் புரியாமல் யாரும் ஒரு நொடி கூட இருக்க முடியாது. இயற்கை குணங்களே செயல்களை தீர்மானிக்கிறது.


இந்த சுலோகம் சில முக்கியமான, மிக முக்கியமான விஷயங்களை தெரிவிக்கிறது.

கடமையை செய், கடமையைச் செய் என்று கீதை சொல்கிறது.

எது என் கடமை ? என் கடமை எது என்று நான் எப்படி அறிந்து கொள்வது ? யார் எனக்கு சொல்வார்கள். என் கடமை என்ன என்று தெரியாமல் நான் எப்படி அதைச் செய்வது.

அதிலும் கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே என்று வேறு கீதை கூறுகிறது.

கடமையே என்ன என்று தெரியவில்லை. இதில் பலனை வேறு எதிர் பார்க்காதே என்றால் என்ன செய்வது.

கீதை அப்படி நம்மை கண்ணை கட்டி காட்டில் விடவில்லை.

நம் கடமை எது என்பதை கண்டு கொள்ள வழி சொல்கிறது.

செயல்கள், இயற்கையான குணங்களால் நிகழ்கிறது என்கிறது கீதை.

நம் செயல்கள், கர்மம் நமது இயற்கையான குணங்களால் நிகழ்கிறது.

எனவே, நமது இயற்கையான குணம் என்ன என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நாம் தான் செய்ய வேண்டும்.

என் குணம் என்ன ?

நான் உடல் உழைப்பு உள்ளவனா ?

எனக்கு படிப்பதில், சிந்திப்பதில், ஆராய்ச்சியில் எனக்கு நாட்டம் இருக்கிறதா. அதுவா என் குணம்.

எனக்கு பாடுவது, ஆடுவது, விளையாடுவது போன்றவற்றில் நாட்டம் இருக்கிறதா ? அப்படி என்றால் அதுதான் என் இயற்கை குணம்.

எனக்கு கதை எழுதுவதில், கவிதை எழுதுவதில் நாட்டம் இருக்கிறதா ... அப்படி என்றால் அதுதான் என் குணம்.

நான் என்ன செய்தாலும், என் இயற்கை குணம் என்னை இழுக்கும்.

என் இயற்கை குணத்திற்கு எதிராக நான் வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தால் என் குணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடை வெளி வந்து விடும்.

இயற்கையான குணத்தில் இருந்து நான் ஒரு வேலை செய்தால் அது எனக்கு மிக இன்பமான ஒன்றாக இருக்கும்.

புகை படம் எடுப்பது, தோட்டம் போடுவது, பாடுவது, படம் வரைவது,  ஊர் சுற்றுவது, கற்றுத் தருவது என்று எது என் இயற்கை குணமோ, அதன் அடிப்படையில் நான் காரியம் செய்தால் எனக்கு வெற்றி தோல்வி என்று ஒன்றும் கிடையாது. நான் செய்யும் தொழிலே எனக்கு இன்பமயமாகி விடுகிறது. அதன் மூலம் எனக்கு வருமானம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, புகழ் வந்தாலும் சரி , புகழ் வராவிட்டாலும் சரி நான் சந்தோஷமாக இருப்பேன்.

பலன் என்பது இரண்டாம் பட்சமாகிப் போகிறது.

வேலை ஒன்றே குறிக்கோளாகி விடுகிறது.

தியாகராஜர் , இராமன் மேல் கீர்த்தனைகள் பாடினார். காசுக்கோ, புகழுக்கோ அவர் பாடவில்லை. பாடுவது அவர் இயல்பு. இயல்பாய் இருந்தார். அவ்வளவுதான்.

நாம் நம் பிள்ளைகளை அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய விடுவது இல்லை. அதைப் படி, இதைப் படி என்று வற்புறுத்துகிறோம்.

அது தவறு.

அவர்களே கண்டுபிடிக்கட்டும். அவர்களின் இயற்கையான குணம் என்ன, அதிலிருந்து பிறக்கும் காரியம் என்ன என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

தனிமையில் இருந்து சிந்தியுங்கள். உங்கள் இயற்கையான குணம் என்ன என்று. உங்கள் செயலுக்கும், உங்கள் குணத்திற்கும் எவ்வளவு இடைவெளி என்று பாருங்கள். இடைவெளி குறைய குறைய நீங்கள் ஒரு பூர்ணத்வம் பெறுவீர்கள்.

குணம் வேறு , செயல் வேறாக பிரிந்து கிடைக்கும் நீங்கள் ஒன்று படுவீர்கள். அதுவே பூர்ணத்வம்.

என் கடமை என்ன என்று மற்றவர்களை கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படித்  தெரியும்.

உங்கள் இயற்கை குணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். மற்றவை தானே  வரும். உங்களை நீங்கள் முதலில் அறிய வேண்டும்.

சரி...

குணமும் செயலும் மாறுபட்டால் என்ன ஆகும் ?

அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான் கண்ணன்.




Wednesday, March 22, 2017

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும்

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும் 


न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥

ந கர்மணாமநாரம்பா ந்நைஷ்கர்ம்யம் புருஷோஸ்நுதே|
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||3-4||

ந = இல்லை

கர்மணாம் = கர்மம்

அந் - ஆரம்ப = தொடங்காமல் இருந்தால் 

ந்நைஷ்கர்ம்யம் = பற்றற்ற கர்மம்

புருஷ = ஒருவன்

அஸ்நுதே| =  அடைவதில்லை

ந = இல்லை

ச = மேலும்

ஸந்ந்யஸ = துறப்பதன் மூலம் 

ஏவ = நிச்சயமாக

ஸித்திம்  = வெற்றி

ஸமதிகச்சதி = அவன் அடைகிறான்


தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் முழு நிறைவு அடைய மாட்டான்.


தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம்  பெற்றுவிட மாட்டான்.

துன்பத்தின் மூலம் எது ? எதிலிருந்து துன்பம் வருகிறது ? எப்படி துன்பத்தில் இருந்து விடுபடுவது ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.

கீதை இன்னும் ஆழமாக சிந்திக்கிறது.

ஆசை எப்படி வருகிறது ?

ஒரு பொருளை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பதால் ஆசை வருகிறது.

நாம் ஒரு பொருளை பற்றி அல்லது ஒரு விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்காமல் இருந்தால் அதன் மேல் ஆசை வருவது இல்லை. ஆசை, கோபம், மறதி, மனக் குழப்பம், நிம்மதி இன்மை, துன்பம் என்று தொடர் சங்கிலியாக சிந்தனையில் இருந்து துன்பம் வருகிறது.

இதை நாம் இரண்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.

விட்ட இடத்தில் தொடர்கிறான் கிருஷ்ணன்.

நாம் எப்போது ஒரு பொருளை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம் ?

எப்போது அது நம்மிடம் தேவையான அளவு இல்லையோ அப்போது நாம் அதை பற்றி  சிந்திக்க தொடங்குகிறோம்.

பணம் இருக்கிறது நம்மிடம். ஆனால் அது போதாது என்று நினைக்கிறோம். அதை பற்றிய சிந்தனை நம் மனதை , அறிவை ஆக்கிரமிக்கிறது.

எப்படி மேலும் பணம் சேர்ப்பது என்று யோசிக்கிறோம். அதில் முதலீடு செய்வோமா? இதை வாங்குவோமா, அதை விற்போமா, என்று செயல் பட தொடங்குகிறோம்.

பணம், அன்பு, காதல், அதிகாரம், புகழ் என்று எதை எடுத்துக் கொண்டாலும் செயல்பாடு ஒன்றுதான்.

சிந்தனை, சிந்தனையில் இருந்து ஆசை, ஆசையில் இருந்து செயல் பிறக்கிறது.

வெறும் செயலை மட்டும் நிறுத்தி உபயோகம் இல்லை.. நிறுத்தவும் முடியாது.

சிந்தனை பின் புலத்தில் செயல் படுத்திக் கொண்டே இருக்கும்.

மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதைத்தான் கிருஷ்ணன் இங்கே சொல்கிறான்

தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

செயலை செய்யாமல் இருப்பதன் மூலம் ஒருவன் செயலற்ற நிலையை அடைவது இல்லை. மனமும் , அறிவும் செயல் பட்டு கொண்டு இருக்கும் வரை வெறுமனே புலன்களை அடக்கி வைபதன் மூலம்  ஒருவன் செயலற்ற நிலையை  அடைவது இல்லை.

செயலை மட்டும் துறந்தால் போதாது.      வெறும் செயலை துறந்தவன் நிலை மிகவும் துன்பமயமானது.

மனம் அது வேண்டும், இது வேண்டும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும். அறிவு , அவற்றை பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் பட தூண்டும். ஆனால், இவனோ ஞானமே சிறந்தது என்று நினைத்துக் கொண்டு செயல் படாமல் இருப்பான். தனக்குள்ளேயே பெரிய யுத்தம் நடந்து கொண்டு இருக்கும். கிடைக்கவில்லை என்றால் வருந்தும். கிடைத்தால் அதை விட அதிகமாக வேண்டும் என்று மேலும் ஆசைப் படும்.  இதற்கு ஒரு  முடிவே இல்லை.

சிந்தனை , மனம் ஓடிக் கொண்டே இருக்கும் வரை, செயல் இருக்கத்தான் செய்யும்.

எங்கே ஒரு நிமிடம், கண்ணை மூடி , செயலற்று இருந்து பாருங்கள். மனம் காற்றாக பறக்கும். ஆயிரம் எண்ணங்கள் அலை பாயும்.

கர்மயோகத்தின் முதல்படி மன அடக்கம்.

அது எப்படி முடியும் ?



கீதை - 3.3 - இரண்டு யோகங்கள்

கீதை - 3.3 - இரண்டு யோகங்கள் 


श्रीभगवानुवाच
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥

ஸ்ரீபகவாநுவாச
லோகேஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக| 
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்மயோகேந யோகி நாம் ||3-3||


ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

லோகே = இந்த உலகில்

அஸ்மிந் = இதில்

த்விவிதா = இரண்டு

நிஷ்டா = நிலைகள், வழிகள் உள்ளன

புரா  = பழமையான

ப்ரோக்தா = சொல்லப்பட்ட

மயா = என்னால்

அந் நக = பாவம் இல்லாதவனே


ஜ்ஞாநயோகேந = ஞான யோகம்

ஸாங்க்யா நாம்= சாங்கியர்களால் கூறப்பட்டது

கர்மயோகேந = கர்மயோகம்

யோகி நாம் = யோகிகளால் கூறப்பட்டது


கண்ணன் சொல்லுகிறான்...பாவம் ஒன்றும் இல்லாத அர்ஜுனா, இந்த உலகில் இரண்டு வழிகள் உள்ளன...அவை, சாங்கியர்களால் கூறப்பட்ட ஞான யோகம், யோகிகளால் கூறப்படும் கர்ம யோகம். 


ஞான மார்கமா, கர்ம மார்கமா நான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொல்லு என்று அர்ஜுனன் முந்தைய ஸ்லோகத்தில் கேட்டான்.

இதுதான் சிறந்தது என்று கிருஷ்ணன் சொல்லவில்லை.

நாம் கேட்டதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இறைவனுக்கு இருக்கிறதா என்ன ?

கேள்வியே தவறு என்றால் எப்படி விடை தருவது ?


"நான் உனக்கு இரண்டு வழிகளை சொன்னேன்....ஒன்று சாங்கியர்களின்  ஞான யோகம், மற்றது யோகிகளின் கர்ம யோகம்...."

இரண்டில் ஒன்று எது சிறந்தது என்று கிருஷ்ணன் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் இருக்கலாம்.

சொல்லவில்லை.

எனவே, எது சிறந்தது என்ற கேள்வி இன்னும் விடை இல்லாமலே  போய் கொண்டிருக்கிறது.

நமக்கென்று உள்ள கடமைகளைச் செய்கிறோம். வேலைக்குப் போகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இன்னும் நிறைய பணம் வேண்டி இருக்கிறது. பெரிய வேலை, பதவி உயர்வு, மேலும் பொறுப்புகள்..மேலும் பணம்....மேலும் உழைப்பு என்று இப்படி வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது....

இது எங்கு போய் முடியும்...ஒரு காலகட்டம் வரும்...இதுவரை என்ன செய்தோம் என்ற கேள்வி வரும்...பணம் கையில் இருக்கும், அனுபவிக்க வயதோ, உறவுகளோ இருக்காது....வாழ் நாள்  எல்லாம் இதில் போய் விட்டதே என்ற வருத்தம் வரும்.

சரி , அதுக்காக வேலைக்குப் போகாமல் , பணம் சம்பாதிக்காமல், வாழ்வில் முன்னேறாமல், அப்படியே இருக்க முடியுமா ? அதுவும் முடியாது.

பின் என்ன தான் வழி ?

இந்த வேலை, பணம், சொத்து இவற்றை எல்லாம் தாண்டி வேறு ஏதோ ஒன்று இருக்கறதா என்று  அறியத் தலைப் பட வேண்டும் ? இல்லை, அது எல்லாம் ஒன்று இல்லை...பணம், பொருள் ஒன்றுதான் வாழக்கை  என்று யாராவது சொல்லுவார்களா ?

பணம் வேண்டும். ஆனால் அதே சிந்தனையாக இல்லாமல் வேலை செய். நாளடைவில், வேலை என்பது  வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும், அதுவே வாழ்க்கையாகி விடாது.

எப்போது வேலை, கடமை, கர்மம் என்பது  வாழ்வின் ஒரு பகுதி என்ற நிலை வந்து விட்டதோ, அப்போது மனம் அதை தாண்டி யோசிக்கத் தலைப்படும்....வேறு என்ன இருக்கிறது இந்த வாழ்வில் என்ற கேள்வி பிறக்கும்

ஒன்று எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள். சேர்ப்பது.

கர்ம யோகம் என்றால் கர்மத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

ஞான யோகம் என்றால் ஞானத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இனைந்து இருப்பவை. இணைந்து இருக்க வேண்டும்.

கர்ம யோகத்தை பற்றி மேலும் மிக விரிவாக கண்ணன் சொல்லுகிறான்.

கேட்போம்.



Tuesday, March 21, 2017

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்



व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥

வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே|
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோஹமாப்நுயாம் ||3-2||


வ்யாமிஸ்ரேண = கலந்து, குழப்பமான

ஏவ = நிச்சயமாக

வாக்யேந  = வாக்கினால், உன் பேச்சால்

புத்திம் = என் புத்தியானது

மோஹயஸீவ = பேதலிக்கிறது

மே = என்

தத் = அந்த

ஏகம்தே = ஒன்றை மட்டும்

வத = பேச்சு

நிஸ்சித்ய = நிச்சயமான

யேந = அதனால்

ஸ்ரேயோ = உறுதியான, உயர்வான

அஹம்ஹ = நான்

அப்நுயாம்  = நான் அடைவேன்

அதையும் இதையும் கலந்து நீ சொல்வதானால் என் புத்தி குழம்புகிறது. எது எனக்கு நன்மை தருமோ அதை மட்டும் எனக்கு உறுதியாகச் சொல்


பொதுவாக மனிதர்கள், சொல்லுவதை கேட்பது இல்லை. தங்களுக்கு எது வேண்டுமோ, எது சரி என்று படுகிறதோ அதுதான் சொல்லப்பட்டதாக கேட்கிறார்கள்.

People hear what they want to hear என்று சொல்லுவார்களே, அது மாதிரி.

தங்களுக்கு பிடித்தது, சரி என்று படுவதைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், ஒன்று அதை கண்டு கொள்வது இல்லை...அல்லது என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று தவிப்பார்கள்.

இங்கே குழப்பத்திற்கு ஒரு அவசியமும் இல்லை.

கிருஷ்ணன் கடமையை செய்யாதே என்றோ, கர்மத்தில் ஈடு படாதே என்றோ சொல்லவில்லை.

பலன் கருதாமல் காரியம் செய் என்று தான் சொன்னான்.

உன் கடமையை, ஸ்வதர்மத்தை கை விடாதே என்று சொன்னான்.

உலகத்தின் இயற்கை பற்றி சொன்னான்.

பின் எங்கும் நிறைந்திருக்கும், மாற்றம் இலாத ஒன்றைப் பற்றி சொன்னன்.

அறிவின் மூலம் புலன்களை எப்படி கையாள்வது என்று கூறினான்.

இதில் குழப்பம் வர வழியில்லை. இருந்தாலும், அர்ஜுனன் குழம்புகிறான்.

திட சித்தம் உயர்ந்தது என்று கூறினாயே, அப்படி என்றால் எதற்கு வேலை செய்ய வேண்டும் ? அறிவு மட்டும் போதுமே. உழைப்பு எதற்கு என்று.

கர்மம் ஏன் செய்ய வேண்டும் ? ஞானம் தான் உயர்ந்தது என்றால் பேசாமல் நாள் பூராவும் படிப்பது, படித்தவர்கள் சொல்வதை கேட்பது என்று இருந்து விடலாமே. ஏன் கடமைகளை செய்ய வேண்டும் என்பது அர்ஜுனனின் கேள்வி.

நம் கேள்வியும் கூடத்தான்.

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்ததுதான். ஒன்று மட்டும் இருக்கட்டும், இன்னொன்று வேண்டாம் என்று சொல்ல முடியாது.

ஒரு முழுமையான மனிதனாக இருக்க வேண்டும் என்றால் ஞானமும் வேண்டும்,  நாட்படி கடமைகளையும் செய்ய வேண்டும், அதில் ஒரு அன்பும் அர்ப்பணிப்பும், பக்தியும் வேண்டும்.

பின் ஒரு இடத்தில் கண்ணன் சொல்லுவான் - குதிரைகளுக்கு நான் கொள்ளு தருகிறேன், தண்ணீர் வைக்கிறேன் என்று. ஏன் ? அவனிடம் இல்லாத ஞானமா  ? தேரோட்டி என்ற கடமையை கையில் எடுத்து விட்டால் அதை முழுமையாகச் செய்ய வேண்டும்.

அதில் சிக்கல்கள் வரும். முரண்கள் வரும்.  சட்டத்தோடு மோத வேண்டி வரும், அறத்தோடு மோத வேண்டி வரும்,  அன்பும் பாசமும் குறுக்கிடும்.

எது வந்தாலும் கடமையை செய்தே ஆக வேண்டும்.

உங்கள் கடமைகள் என்னென்ன என்று சிந்தியுங்கள். அவற்றில் எத்தனை நீங்கள் மிக ஒழுங்காகச் செய்கிறீர்கள் என்றும் சிந்தியுங்கள்.

மாணவனாய், ஆசிரியனாய், தகப்பனாக, தாயாக, பிள்ளையாக, குடிமகனாக, கணவனாக, மனைவியாக எத்தனை கடமைகள்...

எத்தனை சரியாக செய்தோம், எத்தனை சரியாக செய்யவிலை என்று சிந்தியுங்கள்.

பல சிக்கல்கள் , கடமையை சரியாக செய்யாமல் இருப்பதில் இருந்து தான் தொடங்குகிறது.




Monday, March 20, 2017

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ?

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ? 


अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந| 
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்

ஜ்யாயஸீ  = உயர்ந்தவனே

சேத் = அப்படியானால்

கர்மணா = காரியம் செய்வதுதான்

தே = உன்

மத = எண்ணம் என்றால்

 புத்தி = புத்தி, ஞானம், அறிவு

ஜனார்த்தன = ஜனார்தனனே

தத் = அது

கிம் = ஏன்

கர்மணி  = கர்மம் செய்வதில்

கோரே = கோரமான

மாம் = நீ

நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்

கேஸ²வ = கேசவா

அர்ஜுனன் சொல்கிறான், கேசவா, ஞானம் தான் உயர்ந்தது என்றால் இந்த கோராமன காரியத்தை செய்ய ஏன் என்னை தூண்டுகிறாய் ?

உண்மை தெரிந்தவனுக்கும், தெரியாதவனுக்கும் இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம்.

மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள தூரம்.

சொல்வதை புரிந்து கொள்ள முடியாத சீடன் இருக்கும் சங்கடம் உலகில் எல்லா ஞானிகளுக்கும் இருந்தது.

குரு சொல்ல வந்ததை புரிந்து கொள்ளும் சீடர்களை பெற்ற ஆசிரியர்கள் மிகச் சிலரே.

இயேசு நாதர் தன் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு துன்பம் செய்தவர்களை மன்னியுங்கள்" என்றார்

சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்கள் இயேசுவிடம் திருப்பி கேட்டார்கள் "எத்தனை முறை நாங்கள் மன்னிக்க வேண்டும் " என்று

இயேசு சங்கடப் பட்டிருப்பார் ...இந்த சீடர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ..."ஏழு முறை மன்னியுங்கள் " என்றார்.

சீடர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை "ஏழு முறை போதுமா " என்று கேட்டார்கள்.  ஏன்றால்   எட்டாவது முறை துன்பம் செய்தால் எதிரியை மன்னிக்காமல் அடி பின்னி விடலாம், முந்தைய ஏழு முறைக்கும் சேர்த்து என்பது அவர்கள் எண்ணம்

இயேசு "ஏழு முறை மட்டுமல்ல...ஏழ் எழுபது முறை மன்னியுங்கள் " என்றார்.

புத்தர் அந்த விதத்தில் மிக அதிர்ஷ்டசாலி.

ஒரு நாள் புத்தர் பிரசங்கம் செய்ய வந்து அமர்ந்து இருந்தார். அப்போது அவருடைய பிரதம சீடர்  மகா கஷ்யப் என்பவரும் அருகில் இருந்தார்.

புத்தர் அங்கிருந்த ஒரு தாமரை மலரை எடுத்து கஷ்யப்பிடம் தந்தார்.

அதை பெற்றுக் கொண்ட கஷ்யப் ஒரு புன்னகை பூத்தார்.

அதை கண்ட புத்தரும் ஒரு புன்முறுவல் பூத்தார்.

புத்தர் சொல்ல வந்ததை கஷ்யப் சொல்லாமலேயே புரிந்து கொண்டார்.

இங்கே கிருஷ்ணன் 72 ஸ்லோகங்கள் சொன்னான்...அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை....

ஞானம் தான் சிறந்தது என்றால், பின் ஏன் இந்த யுத்தம் செய்யச் சொல்கிறாய் என்று முதல்  அத்யாயத்தில்  முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறான்.

பரவாயில்லை, சந்தேகம் இருக்கும் போது மீண்டும் கேட்கிறானே...சில பேர் புரியாவிட்டாலும் புரிந்த  மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு போய் விடுவார்கள்..அந்தபுரம்   போய் தங்கள் மனதுக்கு தோன்றியதை செய்வார்கள்...கேட்டால்   இதுதான்  ஆசிரியர் சொன்னார், ஆசாரியர் சொன்னார் என்று சொல்லி விடுவார்கள்.

மதம் என்பதே புரியாதவர்கள், தெரியாதவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் தானே.

நல்ல மாணவனாக, அர்ஜுனன் புரியாததை ஒத்துக் கொண்டு மீண்டும் கேள்வி கேட்கிரான்.

மிகப் பொறுமையாக கிருஷ்ணன் பதில் சொல்கிறான்....மாணவனின் மேல் அன்பும் அக்கறையும்   உள்ள ஆசிரியனாக....

என்ன சொன்னான் என்பதை நாமும் கேட்போம் .....

ஞானம் என்பது வேறு, கர்மம் என்பது வேறு என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒன்று ஞான மார்கத்தில் செல்ல வேண்டும். படிப்பது, கேட்பது, அறிவை விருத்தி செய்து கொள்வது என்பது முடியாவிட்டால் கர்ம மார்கத்தில் செல்ல வேண்டும் என்று கீதை சொல்வதாக  பலர் உரை செய்வார்கள்.

ஞானம், பக்தி, கர்மம் என்ற மூன்று வழியை கண்ணன் சொல்வதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரியல்ல என்பது என் எண்ணம்.

ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு என்பது என் எண்ணம்.

அறிவு இல்லாத கர்மம் ஆபத்தில் போய் முடியும்.

குரங்கு கையில் வாளை கொடுத்து தன்னை பாதுகாக்கும்படி ஒரு இராஜா சொன்னானாம். அரசன் அசந்து தூங்கும்போது , அவன் கழுத்தில் ஒரு ஈ அமர்ந்தது.

குரங்குக்கு வந்ததே கோபம். கண்ட இடத்தில் அமரும் ஈயே , நீ அரசன் கழுத்தில் அமரலாமா  என்று , கையில் கிடைத்த வாளால் ஓங்கி ஒரு போடு போட்டது.

அரசன் தலை துண்டாகி இறந்து போனான்.

ஞானம் இல்லாத கர்மத்தால்  ஆபத்துதான் விளையும்.

சரி நிறைய படித்து ஞானம் இருக்கிறது. ஒரு செயலும் எல்லை, அன்பு இல்லை, கருணை இல்லை என்றால் அந்த ஞானத்தால் என்ன பயன்.

கற்றதனால் ஆய பயன் என் கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். ஞானம் இருந்து என்ன பயன், பக்தி இல்லை என்றால் என்று கேட்கிறார். ஞானம் மட்டுமே முடிவு அல்ல.

ஞானத்தில் இருந்து விளையும் கர்மமே உயர்ந்தது.

தெளிவான ஞானம் பிறக்கும் போது , அதில் இருந்தே கர்மமும் விளைகிறது.

ஞானம் வேறு கர்மம் வேறு அல்ல.

தெளிந்த சிந்தனையின் , அறிவின் விளைவே கர்மம்.

அந்த கர்மமே , மீண்டும் மீண்டும் பிறவிக்கு வழி வகுக்காத கர்மம். அதுவே பற்றற்ற கர்மம்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், யாரோ சொல்லி செய்கிறேன், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்கிறேன் என்று ஞானம் இல்லாதவன் காரியங்களை  செய்கிறான். அதன் வெற்றி தோல்வி அவனை பாதிக்கிறது.

ஞானத்தின் உச்சியில் இருப்பவன்  செய்யும் காரியம் அவன் வேறு, ஞானம் வேறு, கர்மம் வேறு என்று இல்லாமல் செய்வான்.

அங்கே கர்மம் மட்டும்தான் நிகழ்கிறது.

செய்பவனும் இல்லை. செய்யப் படுவதும் இல்லை. செயல் மட்டுமே இருக்கிறது.

அதில் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.

ஞானம் என்ற விதையில் இருந்து கர்மம் என்ற செயல் விளைகிறது.

மரம் வேறு , விதை வேறல்ல. மரமும் விதையும் ஒன்றுதானே.


ஞானத்தையும் கர்மத்தையும் பிரிக்கும் போது தான் குழப்பம் வருகிறது.

கீதையை முழுவதுமாக படித்தால் தெரியும் - ஒரு அத்தியாயத்தில் கண்ணன் ஞானமே  உயர்தது என்பான். இன்னொன்றில் கர்மமே உயர்தது என்பான். இன்னொன்றில்,, இது இரண்டும் இல்லை, பக்தியே எளிய வழி என்பான். படிப்பவர்கள்  குழம்பிப் போவார்கள்.

அர்ஜுனன் கேட்கிறான், ஞானம் உயர்ந்தது என்றால் ஏன் என்னை இந்த யுத்தத்தை செய்யச் சொல்கிறாய் என்று.

அதற்கு கண்ணன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.


Saturday, March 18, 2017

கீதை - கர்ம யோகம் - ஒரு அறிமுகம்

கீதை - கர்ம யோகம்  - ஒரு அறிமுகம் 


கர்மயோகம் கீதையின் மூன்றாவது அத்யாயம்.

இதற்கு முந்தைய இரண்டாவது அத்யாயத்தில் கிருஷ்ணன் இரண்டு விஷயங்களைப் பற்றி கூறினான்.

முதலாவது, இந்த உலகம் எல்லாம் நிறைந்தது, பிறப்பும் இறப்பும் அற்றது, வெட்டவும், எரிக்கவும்,நனைக்கவும், கரைக்கவும் முடியாதது எதுவோ அதை உணர் என்றான். இந்த உலகத்தில் எல்லாம் தோன்றி மறைவன. எதுவும் புதிது இல்லை. பிறந்து இறந்து ஏதோ ஒரு சுழற்ச்சியில் இருக்கின்றன. என்று  வாழ்வின் நிரந்தரமானது மற்றும் நிரந்தரம் இல்லாதது பற்றி கூறினான். இதை பல உரை ஆசிரியர்கள் ஆத்மா என்று பெயரிட்டார்கள். வியாசர் இடவில்லை. ஆத்மா என்று கொண்டதால், பல சிக்கல்கள் வந்தன. ஜீவாத்மா ,  பரமாத்மா இதில் எது என்ற முதல் குழப்பம். இந்த இரண்டு ஆத்மாவிருக்கு உள்ள தொடர்பு இரண்டவாது  சிக்கல். 

இரண்டாவது, திட சித்தம் பற்றியும் அது உள்ளவன் எப்படி இருப்பான் என்பது பற்றியும் கூறினான்.  எப்படி புலன்கள்  அறிவை மயக்கும் என்பதை படிப் படியாக விளக்கினான். இந்த அறிவு  வந்து விட்டால் வேறு ஒரு குழப்பமும் வராதுஎ என்றான்..

அர்ஜுனன் கேட்கிறான் - அறிவுதான் உயர்ந்தது என்றால் பின் என்னை எதற்கு யுத்தம் செய்ய  சொல்கிறாய் என்று. 

ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமான கேள்வி.

அறிவு முக்கியம் என்றால், அதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டு விட முடியுமா. 

அறிவு முக்கியம் என்றால், அறிவை பெறுவதும் ஒரு வேலை தானே. அந்த கர்மாவை  செய்தால்தானே   ஞானம் வரும்.

கிருஷ்ணன் ரொம்ப பொறுமையாக சொல்கிறான் - அறிவு சிறந்தது தான் அதற்காக    சாப்பிடாமல்  இருந்து விடுவாயா என்ற அளவிற்கு போய் பேசுகிறான். 

வாழ்வில் இன்பம் வேண்டும் என்றால் அறிவும் வேண்டும், உழைப்பும் வேண்டும்.....

அறிவற்ற உழைப்பு விழலுக்கு இறைத்த நீர். முட்டாள் தனமாய் காரியம் செய்தால் சில சமயம்  ஆபத்தில் கூட முடியலாம்.

உழைப்பற்ற அறிவால் ஒரு பலனும் இல்லை. படித்ததை உபயோகப்  வேண்டும். குறைந்த  பட்சம்  பிறருக்கு சொல்லியாவது தர வேண்டும். 

பூட்டி வைத்த அறிவால் யாருக்கு என்ன பலன் ?

வெறும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது ... உழைப்பும் வேண்டும் என்று பேசுகிறது...கர்ம யோகம்.

உழைப்பு, கடமையை செய்தல் ஏன் உயர்ந்தது, அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி  பேசுகிறது. 

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....அது என்னனா