Monday, January 28, 2019

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட 



नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥

நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||

ந = இல்லை

இஹ = இங்கு

அபி க்ரமநாஸோ  = அபி+கர்ம +நாச  = கர்மங்களில் இருந்து விடுபட

அஸ்தி = இருக்கிறது

ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,

ந= இல்லை

வித்³யதே|  = இருக்கிறது

ஸ்வல்பம் = கொஞ்சம்

அபி = இப்போது

அஸ்ய  = இதன் மூலம்

த⁴ர்மஸ்ய = தர்மத்தின் மூலம்

த்ராயதே  = காக்கிறது

மஹதோ  = பெரிய

பயாத்  = பயத்தில் இருந்து


இதில் கர்மத்தின் விளைவு மாறுவதில்லை. அது வேறு விதமாகவும் விளையாது. இதை கொஞ்சம் புரிந்து கொண்டாலும், பெரிய பயத்தில் இருந்து தப்பலாம். 

என்ன பெரிய பயம் நமக்கு? வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், வீடு, வாசல், பிள்ளை, குட்டி என்று இருக்கிறோம். என்ன பெரிய பயம் நமக்கு ?

நாம் வெளியே பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும், பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

வயதாகிறதே என்ற பயம். நோய் வருமோ என்ற பயம். கண் காண முடியாமல், காது கேட்க முடியாமல், எழுந்து நடமாட முடியாமல் போய் விடுமோ என்ற பயம்.

செல்வம் நம்மை விட்டு போய்விடுமோ என்ற பயம்.

பிள்ளைகளுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்.

எதிர் காலம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

அனைத்து பயங்களுக்கும் அடிப்படை, மரண பயம்.

ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், மரண பயமே அனைத்து பயங்களுக்கும் அடிப்படையான  பயம் என்று.

ஏன் மரண பயம் ?

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? சொர்க்கமா? நரகமா ? மறு பிறப்பா? எங்கு போய் எப்படி  பிறப்போமோ? இங்குள்ளவைகளை எல்லாம் விட்டு விட்டுப் போக வேண்டுமா ? கணவன், மனைவி, உற்றார், உறவினர், சொந்தம், பந்தம், சொத்து, சுகம், உறவு, பகை, ஞாபகங்கள், அனைத்தையும் விட்டு விட்டு போக முடியுமா ?

அந்த பயம் எப்படி எப்படியோ வெளிப் படுகிறது.

கர்ம யோகத்தை, சிறிதளவேனும் அறிந்து கொண்டால் கூட பெரிய பயத்தில் இருந்து  விடுப்படலாம் என்கிறான் கண்ணன்.

அறிந்து கொள்வோமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/240.html

Sunday, January 27, 2019

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி 



एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥

ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||


ஏஷா = இதை

தே = உனக்கு

அபிஹிதா = கூறினேன்

ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி

புத்தி = அறிவு

யோகே = யோகத்தில்

து = நீ

இமாம் = இந்த

ஸ்²ருணு| = கேட்பாய்

புத்த்யா = புத்தியுடன்

யுக்தோ = சேர்ந்து

யயா  = அதன்  மூலம்

பார்த = பார்த்தனே

 கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்

ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்


இதுவரை சாங்கிய முறைப்படி உனக்கு கூறினேன். இனி, யோக மார்கத்தை கூறுகிறேன். இதை அறிந்தால், உன் கர்ம வினைகள் உன்னை விட்டு விலகும்.

சாங்கிய முறை என்றால் என்ன ?

சாங்கிய முறை என்றால் என்ன என்று அறிந்து கொள்வவது ஒரு புறம் இருக்கட்டும்.  அதற்கு அப்புறம் வருவோம்.

நாம் உண்மையை எப்படி அறிந்து கொள்கிறோம்? அல்லது எப்படி அறிந்து கொள்ளலாம்?

உண்மையை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றிற்கு பிரமாணங்கள் என்று பெயர். சுருக்கமாக சொல்வது என்றால் வழிகள்.

முதலாவது, காட்சி பிராமணம். (பிரதிக்க்ஷம் அல்லது perception ).  நம் கண்ணால் கண்டு அறிவது. கண் என்றால் கண் மட்டும் அல்ல. நம் புலன்கள் மூலம் அறிவது.

ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் அது சூடாகி விடும்.  இந்த உண்மையை நாம் எப்படி அறிந்து கொண்டோம்? கண்ணால் பார்த்தால்  கொதிப்பது தெரியும். அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் கழித்து அதில் ஆவி அடங்கி விடும். இப்போது கண்ணால் பார்த்தால் சூடு தெரியாது. தொட்டுப் பார்த்தால் தெரியும்.   நாம் இன்னொரு உண்மையை அறிகிறோம். அடுப்பில் இருந்து இறக்கிய பின்னும் சிறிது நேரம் சூடு இருக்கும் என்று .

இப்படி, பல விஷயங்களை நாம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம்.  படிப்பு என்பது  நமக்கு நல்ல வாழ்வைத் தரும், பிள்ளைகள் நம்மை கடைசி காலத்தில் காப்பாற்றுவார்கள்.  அரசியல்வாதிகள் நல்லவர்கள்/கெட்டவர்கள், சிக்கனம் ஒரு நல்ல குணம் என்று பல விஷயங்களை நாம் அனுபவத்தில்  அறிந்து கொள்கிறோம்.

இது ஒரு ஒரு வழி.

அடுத்தது, அனுமானம். அனுமான பிரமாணம். நமக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டால்  நம் பழைய அனுபவங்களைக் கொண்டு நாம் சில உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.  உதாரணமாக, தூரத்தில் மலையில் புகை தெரிகிறது. அங்கே தீ இருக்கிறது என்று அனுமானத்தின் அறிகிறோம். நாம் நேரடியாக  பார்க்கவில்லை. வீட்டுக்கு வருகிறோம். மனைவி முகம் வாடி இருக்கிறது. அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அறிந்து கொள்ளலாம். இது அனுமானம்.

அனுபவங்களின் நீட்சி.

மூன்றாவது, ஆகம பிரமாணம் அல்லது சப்த பிரமாணம் என்று சொல்லுவார்கள். பெரியவர்கள், ஞானிகள், சான்றோர் சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது. நமக்கு நேரடி புலன் அறிவு இல்லை, அனுமானம் செய்யவும் முடியாது என்கிற போது நம்மை விட அறிவில் முதிர்ந்தவர்கள்  சொல்வதை ஏற்றுக் கொள்வது. "நேரா போகாதீங்க. அங்க சாலை சரியா இல்லை. இந்தப் பக்கமா சுத்திக் கொண்டு போங்கள் " என்று நாம் புதிதாக  ஒரு ஊருக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒருவர் வழியில் கூறுகிறார் என்று வைத்துக்  கொள்வோம்.  அது உண்மை என்றுதானே நாம் எடுத்துக் கொள்வோம். நேராக நாம் அந்த மோசமான சாலையை பார்க்கவில்லை. அனுமானம் செய்யவும் முடியாது என்கிறபோது அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது ஒரு வழியில் உண்மையை அறிய உதவும் ஒரு  சாதனம்.

இன்னும் பல வழிகள் உள்ளன.

ஆனால், சாங்கிய முறை இந்த மூன்றை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறது.

மேலும், சாங்கிய முறை கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்களுக்கு முக்குணங்கள்  உண்டு என்று சொல்கிறது (சாத்வீகம், ராஜஸம், தாமசம்).

இப்படி, மிக ஆழமாக, மனிதனின் மன நிலையை (psychology ), தர்க்கம் (logic ), தத்துவம்  (philosophy ), கடவுள், கர்மா, மறு பிறப்பு, பாவ புண்ணியம், உண்மையை அறியும்  வழிகள் என்று ஒரு பெரிய தத்துவத்தை முன்னிறுத்தியது  சாங்கியம்.

மிக மிக அறிவியல் பூர்வமானது. very scientific and logical.

சாங்கிய முறையை புரிந்து கொள்ள தீவிர முயற்சி வேண்டும். மிக ஆழமான சாஸ்திரம்.

எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நேரமும் இல்லை. அறிவும் கிடையாது. முயற்சியும் குறைவு.

எனவே, சாங்கிய வழியை பின் பற்ற முடியாதவர்கள் வேறு ஏதேதோ வழிகளை பின் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்து சமயம் ஒரு வழி முறை இல்லாமல், கரை இல்லாத ஆறு போல பிரிந்து கிடந்தது.

இங்குதான் கீதை வருகிறது.

கீதை வந்த சமயத்தில் நாட்டில் இருந்த அனைத்து வழிகளையும் கீதை ஒன்று சேர்த்தது.

சாங்கிய முறை, யோக முறை, அதில் பக்தி, கர்ம , ஞான யோகம் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்தது கீதை.

குழம்பிக் கிடந்த ஒரு பெரிய கும்பலை வழி நடத்தியது கீதை.

எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதுதான் வழி என்று சொல்லியது.

உதாரணமாக,  ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம், சீன மருத்துவம், தமிழ் மருத்துவம் , யுனானி என்று மருத்துவ முறைகள் பலவாக பிரிந்து கிடக்கிறது. மக்களுக்கு எது சரி , எது தவறு என்று புரியவில்லை. இவற்றை ஒன்று சேர்த்து இதுக்கு, இது சரி என்று கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா?

அந்த வேலையை செய்தது கீதை. யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு பெரிய வேலை என்று. அனைத்து தத்துவங்களையும் ஒரு புத்தகத்தில் அடக்குவது என்றால் எளிதா? கீதை அதைச் செய்தது. கீதையை படிக்கும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீதையில் பல மார்க்கங்களை பற்றி காண இருக்கிறோம். என்னடா இது கண்ணன் மாத்தி மாத்தி சொல்கிறானே என்று நினைக்கக் கூடாது. பல வழிகளின் சங்கமம் கீதை. இது ஒரு magnum opus of philosophy.

இது வரை சாங்கிய முறைப்படி சொன்னேன். இனி, யோக மார்கத்தைப் பற்றி கூறுகிறேன்  என்று கூறுகிறான் கண்ணன்.

என்னதான் சொல்லுகிறான் என்று கேட்போமே.

https://bhagavatgita.blogspot.com/2019/01/239.html



Thursday, January 10, 2019

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?



सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥

ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்

ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு

லாபா⁴லாபௌ⁴ = இலாபம் - அ இலாபம்

ஜயாஜயௌ| = ஜெயம் - அ ஜெயம்

ததோ = பின்

யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய

யுஜ்யஸ்வ = தயாராவாய்

ஏவம் = இவாறு

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

சுகம்  - துக்கம்
இலாபம் - நட்டம்
வெற்றி - தோல்வி

இவற்றை சரி சமமாகக் கருதி நீ காரியத்தில் ஈடுபட்டால், பாவத்தை அடைய மாட்டாய்.


இது என்ன சரியான போங்கா இருக்கே. இலாபம், நட்டம் , இன்பம், துன்பம் இது எல்லாவற்றையும் எப்படி சரி சமமாகப் பார்க்க முடியும் ? இன்பமும் துன்பமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.

இதெல்லாம் சும்மா வேலைக்கு ஆகாது, வெட்டி வேதாந்தம் என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசிப்போம்.

நம்மால் எவ்வளவோ சாதிக்க முடியும். இருந்தும் நாம் ஒன்றும் செய்வது இல்லை. அல்லது, நம்மால் செய்ய முடிந்தவற்றில் மிகச் சிறிய அளவே செய்கிறோம்.

உதாரணமாக...

உங்களால் ஒரு நல்ல புத்தகம் எழுத முடியுமா,  டாக்டர் பட்டம் வாங்க முடியுமா? ஒரு நல்ல காரியத்துக்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட முடியுமா, மாரத்தான் ஓட முடியுமா, புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியுமா ?

முடியும். அனைத்தும் முடியும். இருந்தும் நாம் செய்வது இல்லை.

ஏன்?

ஒரு வேளை புத்தகம் எழுதி, அது சரியாக வராவிட்டால், யாரும் வாங்காவிட்டால், நம்மைப் பார்த்து யாராவது எள்ளி நகையாடிவிட்டால், அவமானப் பட நேரிடும் என்று நினைத்து செய்யாமல் இருந்து விடுகிறோம்.

நம்மால எங்க டாக்டர் பட்டம் வாங்க முடியும் என்று என்று சோர்ந்து இருந்து விடுகிறோம்.

நம்மால் முடிந்த உயர்ந்த சிறந்த காரியங்களை செய்யாமல் இருக்கக் காரணம் தோல்வி பற்றிய பயம், அதனால் வரும் சங்கடங்கள்/வலிகள் / துன்பங்கள் பற்றிய சோர்வு, அதில் இருந்து வரும் இழப்புகள் இவற்றை எண்ணி  தள்ளிப் போட்டு விடுகிறோம் அல்லது செய்யாமலேயே இருந்து விடுகிறோம்.

இது ஒரு பக்கம் என்றால், செய்கின்ற காரியத்தை நாம் சிறப்பாக செய்வது இல்லை. காரணம், வெற்றி பற்றிய அதீத கற்பனை.

"என்ன செஞ்சு என்ன செய்ய...இந்த கம்பெனியில் ஒரு பதவி உயர்வு கிடையாது, சம்பள உயர்வு கிடையாது " என்று அங்கலாய்த்துக் கொண்டு சரியாய் வேலை செய்யாமல் விடுகிறோம்.

இப்படியாக வெற்றி, தோல்வி, இலாபம், நட்டம் , போன்றவை நம் முயற்சியை தடுத்து விடுகின்றன.

செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது, செய்யத் தயங்குகிறோம்.

வெற்றியோ தோல்வியோ,  நான் இதை முயன்று பார்ப்பேன், என் திறமை அனைத்தையும்  செலுத்தி வேலை செய்வேன். வருவது வரட்டும் என்று நினைத்து இறங்க வேண்டும்.

பலர் வருட ஆரம்பித்தில், "தினம் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வேன், 5 கிலோ எடையை குறைக்கப் போகிறேன் " என்று ஆரம்பிப்பார்கள்.  ஒரு மாதத்தில் எடை கொஞ்சமும் குறைத்திருக்காது. இது ஒண்ணும் சரி இல்லை என்று விட்டு  விடுவார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்று நல்ல காரியத்தை விட்டு விடுவது.

விடக் கூடாது. வெற்றியோ தோல்வியோ. தொடர்ந்து நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியவற்றை இலாப நட்டம் கருதி செய்யாமல் விடுவதுதான் பெரிய பாவம்.

Not realizing your potential is the biggest sin.

ஔவையார் இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள்

இயல்வது கரவேல் என்று. (அது பற்றி தனியாக ஒரு பிளாக் போடவும்..:))


இப்போது சொல்லுங்கள், இது வறட்டு , வெட்டி வேதாந்தமா அல்லது வாழ்க்கைக்கு  நல் வழி காட்டும் வேதாந்தமா என்று.

https://bhagavatgita.blogspot.com/2019/01/238.html

Monday, January 7, 2019

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில்

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில் 


हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||


ஹதோ = கொன்றால்

வா = மறுபக்கத்தில்

ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்

ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்

ஜித்வா = வென்ற பின்

வா = மறுபக்கம்

போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்

மஹீம் = இந்த உலகை

தஸ்மாது = எனவே

உத்திஷ்ட = எழுந்து நில்

கௌந்தேய = குந்தி புத்திரனே

யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்

க்ருதநிஸ்²சய: = துணிந்து,


இந்த யுத்தத்தில் இறந்தால் சுவர்க்கம் போவாய். வென்றால் இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். எனவே துணிந்து எழுந்து நின்று போர் செய்வாய். 


இந்த மாதிரி சில ஸ்லோகங்கள் இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு, கீதை வன்முறையை தூண்டுகிறது என்று விமரிசனம் செய்பவர்கள் உண்டு.

அர்ஜுனன், அன்பின் வயப்பட்டு, உறவினர்களை கொல்ல மாட்டேன்,  ஆசிரியரை கொல்ல மாட்டேன்  , எனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்கிறான்.

கண்ணன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? "அர்ஜுனா, நீ எவ்வளவு நல்லவன். யுத்தம் சரி இல்லை. அன்பான , அமைதியான வழியே சிறந்தது. சமாதானம் தான் நல்லது " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு...போர் செய், செத்தால் சுவர்க்கம், இல்லை என்றால் இந்த பூமி....என்று யுத்தம் வேண்டாம் என்று சொன்னவனை வலுக் கட்டாயமாக யுத்தத்தில் பிடித்து தள்ளுகிறான் கண்ணன்.

இது சரியா?

அமைதி வழியை விட்டு விட்டு, மக்களை கொன்று குவிக்கும் போர் செய்ய தூண்டும் கீதை ஒரு நல் வழி காட்டும் நூலா ?

இதற்கு உரை எழுதியவர்களும் கண்ணன் யுத்தம் செய்யத்தான் சொல்கிறான் என்று சொல்கிறார்கள்.

நான் அதை அப்படி பார்க்கவில்லை.

சற்று விரிவாக பார்ப்போம்.

ஒரு வேலையை செய்யும் போது அதில் வெற்றியும் வரலாம். தோல்வியும் வரலாம்.

தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. பெரிய வேலையை எடுத்தால், பெரிய வெற்றி வரலாம், அல்லது பெரிய தோல்வி வரலாம். தோல்விக்கு பயந்து நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

அதெல்லாம் என்னால் முடியாதுப்பா, நமக்கும் அதுக்கும் சம்பந்தம் கூட கிடையாது, எனக்கு அடைப்படையே தெரியாது..நான் எப்படி அதை செய்ய முடியும் என்று நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

மாறாக, துணிந்து ஒரு பெரிய வேலையை கையில் எடுத்து செய்ய ஆரம்பித்தால் , வெற்றி பெற்றால் நல்லது. அதில் தோல்வி அடைந்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சில உதாரணங்கள் பார்க்கலாம்.

இந்த வருடம் நான் 10 கிலோ எடை குறைக்கப் போகிறேன் என்று ஒரு பெரிய  குறிக்கோளை  கையில் எடுத்து அதற்க்காக வேலை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி என்று பல முயற்சிகள் செய்கிறேன். முடிவில் நான் 10 கிலோ எடையை குறைத்து விட்டேன் என்றால் மகிழ்ச்சி. ஒரு வேளை அதில் தோல்வி அடைந்து 8 கிலோ தான் குறைக்க முடிந்தால், அதுவும் நல்லது தானே. அது மட்டும் அல்ல இந்த உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி எல்லாம் என் உடலுக்கு பல நன்மைகளை தந்திருக்கும். என்னால் 10 கிலோ எடையை குறைக்க முடியாமல் போய் இருக்கலாம் (அது ஸ்வர்கம்). 8 கிலோ எடை குறைந்தது (இந்த உலகை ஆள்வாய்) நல்லது தானே.

ஒரு இளைஞன் வேலைக்குப் போய் கொண்டே மேலே படிக்க நினைக்கிறான். நேரம் இருக்காது. படிப்பது கடினமாக இருக்கும். ரொம்பவும் முயற்சி செய்கிறான். படித்து பட்டம் பெற்றால் நல்லது. ஒரு வேளை முடியவில்லை என்றால், படித்துப் பெற்ற அறிவு நல்லது தானே. ஸ்வர்கம் அல்லது இந்த உலகம் என்று கண்ணன் குறிப்பது நல்லது தான்.

வள்ளுவரும் இதையே கூறுகிறார்:

கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது

என்கிறார்.

குறிபார்த்து முயலை வேல் எறிந்து கொள்வதை விட யானையை எதிர்த்து போர் செய்து அதன் மேல் வேல் எறிந்து அது யானையை கொல்லாமல் போனாலும் பரவாயில்லை என்கிறார்.

யானை மேல் எறிந்த வேல் தப்பி இருக்கலாம். ஆனால், யானையோடு எப்படி போர் செய்வது, அந்த தைரியம், அந்த திட்ட மிடுதல், எல்லாம் அதில் கிடைத்த இலாபம் அல்லவா?

பெரிதாக நினையுங்கள். தோல்வியை பற்றி கவலைப் படாதீர்கள். பெரிய வேலையில் தோற்றாலும் அது கூட நல்லதுதான்.

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தால், வெள்ளியாவது கிடைக்கும். நல்லதுதானே.

என்னால் முடியாது, நான் தோற்று விடுவேன், எனக்கு திறமை இல்லை, அறிவு பத்தாது என்று நினைத்து  சோம்பி இருந்து விடாதீர்கள்.

பெரிதாக எதையாவது தொடங்குங்கள்.

வென்றாலும் தோற்றாலும் அது உங்களுக்கு நல்லதே.

என்ன செய்யப் போகிறீர்கள் ?

புது வீடு, புதிதாக எதையாவது அறிந்து கொள்வது, ஒரு கோடி பணம் சம்பாதிப்பது,  பத்து கிலோ எடை குறைப்பு ....என்று ஏதாவது தொடங்குங்கள்.

சரியா ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/237.html





Sunday, January 6, 2019

கீதை - 2.36 - பெரிய துன்பம்

கீதை - 2.36 - பெரிய துன்பம் 


अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्॥३६॥

அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||

அவாச்யவாதா = சொல்லத்தகாத

ச = மேலும்

பஹூந் = பல

வஷ்யந்தி = சொல்லுவார்கள்

தவா = உன்னை

அஹிதா:| = எதிரிகள்

நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்

தவ = உன்

ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை

ததோ = அதை விட

து³:க²தரம் = துன்பமானது

நு = இப்போது

கிம்  = வேறு எது


உன் எதிரிகள் உன் திறமையைப் பற்றி தரக் குறைவாக பேசுவார்கள். அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கிறது?

அன்றாடம் நாம் பல பொருள்களை பார்க்கிறோம். துணிமணி, நகை, நட்டு, மேஜை, நாற்காலி, டிவி, சாப்பாடு வகைகள் என்று எவ்வளவோ பார்க்கிறோம்.

ஒரு பொருள் என்பது என்ன?

உதாரணமாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம்.

மல்லிகைப் பூ என்றால் என்ன ?

அது மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்தில் இருக்கும், நல்ல மணம் இருக்கும், அதன் காம்பு பச்சை நிறத்தில் இருக்கும், சின்னதாக இருக்கும் என்று அதன் குணங்களை சொல்லுவோம்.

சரி. அதில் கொஞ்சம் குணங்களை மாற்றி பார்ப்போம்.

கருப்பாக இருக்கும். பெரிதாக இருக்கும். கரடு முரடாக இருக்கும். நாற்றம்  பக்கத்தில்  போக முடியாது என்று இருந்தால், அதை மல்லிகை என்று சொல்லுவோமா ?

மாட்டோம் அல்லவா ?

எனவே, எந்த ஒரு பொருளையும் நிர்ணயம் செய்வது அதன் குணங்கள் தான் என்று  புரிகிறது அல்லவா ?

இட்லி என்றால் இப்படி இருக்கும். ஐஸ் கிரீம் என்றால் வேறு சில குணங்கள் இருக்கும்.

பொருள்கள் என்பது குணங்களின் தொகுப்பு அல்லவா ?

பொருள்கள் மட்டும் அல்ல, மனிதர்களும் அப்படித்தான்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ? உங்கள் குணங்களை பட்டியல் இட்டால் தான் நீங்கள் யார் என்று தெரியும்.

நீங்கள் படித்த படிப்பு, வேலை, ஆணா பெண்ணா, உயரமா குள்ளமா, கறுப்பா சிவப்பா, அன்பானவரா, முணுக்கென்றால் கோபம் வருமா..என்று பல குணங்களின் தொகுதிதான் ஒவ்வொருவரும்.

அந்த குணங்கள் மாறிப் போனால், ஆள் மாறிப் போவான் ?

"அவனா இப்படிச் செய்தான்...இருக்காது...அவன் அப்படிப் பட்ட ஆள் இல்லை " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

"அவன் அப்படிச் செய்யக் கூடிய ஆள் தான்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உங்களை நிறுவுவது உங்களின் குணம்/திறமை. அந்த திறமையை அல்லது குணத்தை மாற்றி போட்டால் நீங்கள் , நீங்களாக இருக்க மாட்டீர்கள். ஆள் அடையாளம் இல்லாமல் போய் விடும். உங்களை யார் என்று அடையாளம் காட்ட முடியாமல் போய் விடும்.

அதை விட பெரிய துன்பம் கிடையாது என்கிறான் கண்ணன்.

"நீ எல்லாம் ஒரு அப்பாவா/அம்மாவா/கணவனா/மனைவியா?" என்ற சொல் உங்களை நோக்கி கூறப் பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதை விட பெரிய துன்பம் இருக்குமா ?

எது உங்களை நிலை நிறுத்துகிறதோ, அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

அது தான் உங்கள் அடையாளம். உங்கள் விலாசம்.

அதை நழுவ விட்டால், துன்பம் தான்.

யோசித்துப் பாருங்கள்.

https://bhagavatgita.blogspot.com/2019/01/236.html

Friday, January 4, 2019

கீதை - 2.35 - காரணமும் காரியமும்

கீதை - 2.35 - காரணமும் காரியமும் 



भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्॥३५॥

ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||

ப⁴யாத் = பயத்தினால்

ரணாது = போர்க்களத்தை

உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று

மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்

த்வாம் = உன்னை

மஹாரதா²:|  = மஹா இரதர்கள்


யேஷாம் = அவர்களின்

ச = மேலும்

த்வம் = உன்னை

பஹுமத் = பெருமை மிக்க

பூத்வா = செய்த பின்

யாஸ்யஸி = நீ அடைவாய்

லாக⁴வம் = சிறுமை

பயத்தினால் நீ போரை விட்டு விலகி விட்டதாக இந்த மஹா இரதர்கள் கருதுவார்கள். அவர்களின் நன் மதிப்பை பெற்ற நீ , இதனால் சிறுமை அடைவாய்.

ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  ஆனால், உலகம் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாது. கடமை தவறிய செயலை மட்டுமே பார்க்கும்.

உதாரணமாக,  தேர்வுக்கு முன்னால் உடல் நிலை மிக மோசமாக போய் இருக்கலாம், வீட்டில் நெருங்கிய உறவினர் யாராவது தவறிப் போய் இருக்கலாம். அதனால் தேர்வை சரியாகி எழுத முடியாமல் , அதில் தவறியோ அல்லது மிகக் குறைவான மதிப்பெண்ணோ வாங்கி இருக்கலாம்.

உலகம் அதை எல்லாம் கேட்காது. சரியாக படிக்கவில்லை, அதனால் நல்ல மதிப்பெண்  வாங்கவில்லை. அல்லது , அறிவு போதவில்லை எனவே மதிப்பெண் வாங்கவில்லை  என்று தான் சொல்லும்.

கடமை தவறியதற்கு காரணங்களை இந்த உலகம் கேட்டுக் கொண்டு இருக்காது.

அர்ஜுனன் போர் செய்ய மறுத்தது உறவினர்கள் மேல் உள்ள பாசத்தால், ஆசிரியர் மேல் உள்ள  மரியாதையால். ஆனால், உலகம் அதை எல்லாம் கவனிக்காது. கோழை, பயந்தாங்குள்ளி அதனால் தான் போர் செய்யவில்லை என்று தான்  தூற்றும். "அடடா, பாசக்கார பயலா இருக்கானே" என்று சொல்லாது.

கடமையை செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தையும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது.

கடமையை செய்தே ஆக வேண்டும். அதில் தவறினால், பழிச் சொல் வரும். "ஐயோ பாவம்  இந்த இந்த காரணங்களால் கடமையை செய்ய முடியவில்லை. பரவாயில்லை" என்று உலகம் ஒரு போதும் மன்னிக்காது.

கடமையை செய்யவில்லை என்றால் பழிச் சொல்லை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அர்ஜுனனுக்கே இந்தப் பாடு என்றால் நாம் எம்மாத்திரம் ?

சரிதானே?

https://bhagavatgita.blogspot.com/2019/01/235.html

கீதை - 2.34 - ஸ்வதர்மமும் இகழும்

கீதை - 2.34 - ஸ்வதர்மமும் இகழும் 



अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते॥३४॥

அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||

அகீர்திம்  - கீர்த்தி என்றால் புகழ். அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்

சா  - மேலும்

அபி  - அது மட்டும் அல்லாமல்

பூ⁴தாநி  - மக்கள்

கத²யிஷ்யந்தி  - கூறுவார்கள்

தே  - உன்னை

அவ்யயாம்|  - நீண்ட காலம் இருக்கக் கூடிய

ஸம்பா⁴விதஸ்ய - புகழுடைய

 சா  - மேலும்

அகீர்தி -  இகழ்

மரணாத³தி - மரணத்தை விட

அரிச்யதே = கொடுமையானது


இந்த உலகம் உன்னை தூற்றும். புகழ் பெற்ற நீ, அடையப் போகும் இகழ், மரணத்தை விட கொடியது.


நாம் , நமது கடமையை, ஸ்வதர்மத்தை செய்யாவிட்டால் நமக்குத் தானே துன்பம். பரவாயில்லை. நான் அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் கடமையை செய்ய மாட்டேன் என்று சிலர் இருக்கலாம்.

எனக்கு என்ன, ஏழேழு தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. எதுக்கு நான் கஷ்டப்படனும்? பேசாம உட்கார்ந்து சாப்பிடலாமே என்று நினைக்கலாம்.

நம் ஸ்வதர்மம் என்பது நம்மோடு மட்டும் முடிந்து போகக் கூடிய ஒன்று அல்ல. அதில் வரும் இலாபமோ நட்டமோ நம்மை மட்டும் பாதிப்பது அல்ல. அது மற்றவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக இந்த சமுதாயத்தை பாதிக்கிறது.

வண்டி ஓட்ட வேண்டிய ஓட்டுநர், எனக்கு சோர்வாக இருக்கிறது, தூக்கம் வருகிறது என்று வண்டியை ஓட்டும் போது தூங்கினால் என்ன ஆகும். வண்டியில் பிரயாணம் செய்பவர் அனைவரும் போய் சேர்ந்து விடுவார்கள் அல்லவா.

ஒரு ஆசிரியர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும்  கெட்டுப் போய்வ் விடுவார்கள்

மருத்துவர் தன் கடமையை செய்யவில்லை என்றால், நோயாளி மரித்துப் போவான்.

இப்படி நம் ஸ்வதர்மம் இந்த உலகோடு சேர்ந்து இருக்கிறது.

நாம் நம் கடமைகளில் இருந்து விலகினால் அது நம்மை மட்டும் அல்ல உலகையும் பாதிக்கும்.

அது மட்டும் அல்ல, நாம் இப்போது செய்யும் ஒரு தவறு வரும் காலத்தில் யார் யாரையெல்லாமோ பாதிக்கும்.

அதன் விளைவுகள் உடனடியாக இருக்காது. பின் எப்போதாவது வரும்.

எனவேதான் கண்ணன் சொல்கிறான்

" புகழ் போய் இகழ் வருவது மட்டும் அல்ல, வருங்கால சந்ததிகளும் உன்னை இகழும் "

என்று.

ஸ்வதர்மம் நம்மை இந்த உலகோடு இணைப்பது.

அதை சரியாகச் செய்தால் இந்த உலகம் கொண்டாடும். இல்லை என்றால் தூற்றும்.

ஸ்வதர்மம் பற்றி ஆழமாக சிந்தியுங்கள்.


https://bhagavatgita.blogspot.com/2019/01/234.html

Thursday, January 3, 2019

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால்

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால் 



अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि॥३३॥

அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||


அத = மேலும்

சேத் = ஆனால்

த்வம் = நீ

இமம் = இந்த

த⁴ர்ம்யம் = சரியான

ஸங்க்³ராமம் = படை, யுத்தம்

ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
 |
தத: = அதன் பின்

ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம்

கீர்திம் = புகழ்

ச = மேலும்

ஹித்வா = விட்டபின்

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

||2-33||


நீ இந்த தர்ம யுத்தத்தை செய்யவில்லை என்றால் உன் ஸ்வதர்மத்தையும் புகழையும் அழித்த பாவத்தை அடைவாய் 

எப்போதாவது நமக்கு துன்பம் வந்தால், நாம் யார் யாரையோ, எது எதையோ நொந்து கொள்கிறோம். 

நம் பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர்கள், உயர் அதிகாரி என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம். சில சமயம் கடவுளை கூட நிந்திக்கிறோம். விதியின் மேல் பழி போடுகிறோம். 

பின் எப்படியோ தத்தி தள்ளாடி அந்தத் துன்பத்தை விட்டு கரை கிடக்கிறோம்.

அந்தத் துன்பம் ஏன் வந்தது என்று நாம் என்றுமே சரியாக உணர்ந்து கொள்வது இல்லை. அது மட்டும் அல்ல, இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் அறிந்து கொள்வதில்லை. 

துன்பம் ஏன் வருகிறது ?

ஸ்வதர்மத்தை கை விடுவதால் துன்பம் வருகிறது. 

நம் கடமையை நாம் சரியாக செய்யாவிட்டால் துன்பம் கட்டாயம் வரும். 

நமக்கு துன்பம் வந்து விட்டால், எங்கோ, எப்போதோ நாம் கடமை தவறி இருக்கிறோம் என்று  உணர வேண்டும். 

யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த ஒவ்வொரு துன்பத்துக்கும் அடி நாதம்  செய்யத் தவறிய கடமைகளாகத்தான் இருக்கும். 

எப்போதோ வகுப்பை புறம் தள்ளி விட்டு சினிமாவுக்கு போனது, அதனால் மதிப்பெண் குறைந்தது, அதனால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வேலை கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வருமானம் இல்லாமல் போனது  என்று இன்றைய வறுமைக்குக் காரணம் முன்பு தவறிய கடமை. 

"ஆ" என்று வாயைத் திறக்கச் சொல்லி அதற்குள் ட்ரில் பண்ணி, ஊசியை வைத்து குத்தி, பல்லை பிடுங்கும் வலிக்கு பின்னால் இருப்பது சாப்பிட்ட பின் வாய்  கொப்பளிக்க வேண்டும், படுக்கப் போகும் முன் பல் விளக்க வேண்டும் என்ற  கடையில் இருந்து தவறிய குற்றமாக இருக்கும். 

ஆழமாக யோசித்தால் தெரியும் ஒவ்வொரு துன்பத்துக்கு பின்னாலும் ஒரு தவறிய  கடமை இருக்கும். 

சரி. அது போகட்டும்.  அதை இப்போது ஒன்றும் செய்ய முடியாது. 

இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

மிக எளிதான வழி - இனி மேல் கடமை தவறக் கூடாது. 

ஸ்வதர்மத்தை விட்டு விடக் கூடாது. 

அப்படி விட்டால், புகழ் அழியும், துன்பம் வரும்.

சரியாத்தான் இருக்கும் போல இருக்குல ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/233.html


Wednesday, January 2, 2019

கீதை - 2.32 - போராட்டம்

கீதை - 2.32 - போராட்டம் 



यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥

யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்| 
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||


யத்³ருச்ச²யா = சந்தர்ப்ப வசத்தால்

சா = மேலும்

உபபந்நம் = கிடைத்தல்

ஸ்வர்க³ த்வாரம் = சொர்க்கத்தின் நுழை வாயில்

அபாவ்ருதம்| = திறந்து இருக்கிறது

ஸுகி²ந: = மகிழ்ந்து இருப்பவனே

க்ஷத்ரியா:  = க்ஷத்ரியா

பார்த² = பார்த்தா

லப⁴ந்தே  = அடைகிறார்கள்

யுத்³தம் = போர்

இத்³ருஸ²ம்  = இந்த மாதிரி

இந்த மாதிரி போர் செய்யும் சந்தர்ப்பம் க்ஷத்ரியர்களுக்கு ஸ்வர்கத்தின் வாயில் போன்றது. அப்படி போரிடுபவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். 


இன்பமாக வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், எப்படி இன்பமாக வாழ்வது என்று தெரியவில்லை.


கீதை அதற்கு வழி காட்டுகிறது. உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமா, இன்பமாக வாழ வேண்டுமா, இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்ததும் ஒரு தரம் படியுங்கள். படித்தால் மட்டும் போதாது அதில் சொன்னவற்றை கடை பிடியுங்கள்.


போர் செய்ய விருப்பமில்லாத அர்ஜுனனை கண்ணன் போர் செய்யச் சொன்னான். அதை அர்ஜுனன் கேட்கிறான் அல்லது கேட்காமல் போகிறான். அதைப் பற்றி நமக்கு என்ன ? அதைப் படிப்பதால் நமக்கு என்ன இலாபம்? நாம் என்ன தேரில் ஏறி நம் உறவினர்களை எதிர்த்துப் போராடப் போகிறோமா ? பின் எதற்கு நாம் கீதையை படிக்க வேண்டும்?


இது ஒரு நல்ல கேள்வி. சந்தேகம்.


போர் செய்ய வேண்டியது அர்ஜுனனின் ஸ்வதர்மம், கடமை என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். போர் செய்ய வாய்ப்பு கிடைத்தது என்பது கடமையை செய்ய கிடைத்த வாய்ப்பு என்று கொள்ள வேண்டும்.


அப்படி என்றால், கடமையை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும்.


அப்படி செய்தால், அது சொர்க்கத்தை தரும்.


இல்லை என்றால் ?


நரகம் தான்.


சுவர்க்கம் , நரகம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீத கற்பனைதான்.


சுவர்க்கம் என்றால் இனிய வாழ்க்கை, இன்பமான வாழ்க்கை.


நம் முன்னால் நாள் தோறும் பல கடமைகள் காத்து கிடக்கின்றன. அர்ஜுனன் , சொந்தங்களை காட்டி கடமையில் இருந்து விலக நினைத்தான்.


நமக்கும் பல காரணங்கள். சோம்பேறித்தனம். சினிமா, whatsapp , youtube , டிவி, நண்பர்களோடு அரட்டை என்று ஆயிரம் காரணங்கள் கடமையை செய்யாமல் இருக்க.


படிக்க, மேலும் கடினமாக உழைக்க, உடற் பயிற்சி செய்ய, கணவன்/மனைவியுடன் அன்பாக பேச, பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க என்று எந்த கடமையை செய்யவும் நேரம் இல்லை.


பின் வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும் ?


காலை எழுந்தவுடன் செய்யவேண்டியவற்றை ஒரு பட்டியல் போடுங்கள். ஒவ்வொன்றாக செய்து முடியுங்கள்.ஒவ்வொரு நாளும் அப்படி செய்யுங்கள். நாளின் முடிவில் ஒரு சில வேலைகள் செய்து முடிக்காமல் இருந்தால், அடுத்த நாள் பட்டியலில் செய்து முடிக்காத வேலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.


அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று.


மாறாக, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால் என்ன ஆகிறது என்று பாருங்கள் ? நரகத்துக்கு வேறு  வழி வேண்டாம். செய்ய வேண்டிய வேலைக்ளை செய்யாமல் இருந்தால் போதும். கட்டாயம் நரகம் கிடைக்கும்.


என்ன, எப்பப்பாரு ஏதாச்சும் ஒரு வேலை. ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு ஓய்வு இல்லை, ஒழிச்சல் இல்லை என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?


கண்ணன் சொல்கிறான், கடமை என்பது ஒரு வாய்ப்பு. opportunity என்று நினைத்துப் பாருங்ககள். ஆஹா, எனக்கு இந்த வேலையை செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். இதை செய்வதன் மூலம் நானும் என் குடும்பமும் சந்தோஷமாக இருக்கப் போகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.  வேலை, கடமை என்பது ஒரு சுமையாகத் தெரியாது. அது ஒரு இனிய  வாய்ப்பாகத் தெரியும்.


மேலும் மேலும் வேலை வேண்டும் என்று கேட்பீர்கள்.


கடமை என்பது, வேலை என்பது ஒரு சுமை என்பது போய் அது ஒரு இனிய விஷயம் என்ற எண்ணம் வரும்.


வேலை செய்வதும் இனிமை. அதில் இருந்து கிடைக்கும் பலனும் இனிமை.


யோசித்துப் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.


சரி தானே ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/232.html

Tuesday, January 1, 2019

கீதை - 2.31 - ஸ்வதர்மம்

கீதை - 2.31 - ஸ்வதர்மம் 


स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते॥३१॥

ஸ்வத⁴ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|
த⁴ர்ம்யாத்³தி⁴ யுத்³தா⁴ச்ச்²ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||

ஸ்வத⁴ர்மம் = சுய தர்மம்

அபி = அதை நினைத்து , அதனால்

சா = மேலும்

அவேக்ஷ்ய = அவசியம்

ந = இல்லை

விகம்பிதும் = நடுங்குதல் , தடுமாறுதல்

அர்ஹஸி = உனக்குத் தகாது

த⁴ர்ம்யாத்³தி⁴ = தர்மமப் படி

யுத்³தா⁴ச் = யுத்தம் செய்யாமல் இருப்பது

ச்ரேயோ = நல்லது, உயர்ந்தது

அந்யத் = மற்றது

க்ஷத்ரியஸ்ய  = க்ஷத்ரியனின்

ந = இல்லை

வித்³யதே = அங்கே

ஸ்வதர்மத்தை கருதியாவது நீ தடுமாறாமல் இருக்க வேண்டும். தர்மப் படி செய்யும் போரினும் சிறந்தது ஒரு க்ஷத்ரியனுக்கு வேறு ஒன்றும் இல்லை.


படிப்பதற்கு மிகச் சாதரமான ஒரு சுலோகம் போல் இருக்கும் இதன் பின்னால் மாபெரும் உண்மை மறைந்து கிடக்கிறது.

மனித குலத்தின் அனைத்து குழப்பத்துக்கும் இந்த ஒரு சுலோகம் போதும். உங்கள் சிக்கல் அனைத்துக்கும் விடை தருவது இந்த சுலோகம்.

சற்று நிதானமாக , ஆழமாக படியுங்கள். கீதையின் பிரம்மாண்டம் புரியும்.

ஸ்வதர்மம் கருதி நீ தடுமாறாமல் இரு என்கிறான் கண்ணன்.

ஸ்வதர்மம் என்றால் என்ன என்று பக்கம் பக்கமாக உரை எழுதி இருக்கிறார்கள்.

ஸ்வ = சுய, சொந்த
தர்ம = தர்மம் என்றால் செய்யவேண்டிய கடமை.

நாம் இந்த பூமியில் பிறக்கும் போதே நமக்கான கடமையும் பிறந்து விடுகிறது. நாம் செய்ய வேண்டும் என்று சில கடமைகள் காத்து இருக்கின்றன. அந்த கடமைகள் நமக்கு முன்னால் பிறந்து நம் வருகைக்காக காத்து இருக்கும் என்று சொல்வார்கள்.

நம் கடமை அல்லது நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்படி அறிந்து கொள்வது என்று சொல்வதற்கு முன்னால் எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறேன்.

- பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது.

- புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது

- பெருமைக்காக, மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது ஸ்வதர்மம் இல்லை.

- பொருளுக்காக , வயிற்று பிழைப்புகாக செய்வது ஸ்வதர்மம் இல்லை

பின் எது தான் ஸ்வதர்மம்?

எது உங்களுக்கு இயல்பாக வருகிறதோ, எதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு சங்கடமாக இருக்குமோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.

சற்று விரிவாக பார்ப்போம்.

நம் வாழ்வில் நாம் எடுக்கும் முதல் மிகப் பெரிய முடிவு, என்ன படிப்பது என்பது.

அந்த முடிவை நாம் எப்படி எடுக்கிறோம் ?

பெரும்பாலானோரின் வாழ்வில் பெற்றோர் முடிவு செய்து விடுவார்கள். இல்லை என்றால்  நண்பர்கள் முடிவு செய்கிறார்கள்.

அது தவறு. உங்களுக்கு எது பிடிக்குமோ, எதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகுமோ, எதை நீங்கள் உங்களை மறந்து செய்வீர்களோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.

"எனக்கு psychology படிக்க ஆசை. ஆனால், பெற்றோர் இன்ஜினியரிங் படிக்கச் சொன்னார்கள் எனவே இன்ஜினியரிங் படிக்கிறேன் "

இது ஸ்வதர்மம் இல்லை.

உங்கள் ஸ்வதர்மம் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கும். அதை செய்யாவிட்டால் உங்களுக்கு மனதில் ஒரு சலனம், ஒரு  குழப்பம், ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

தெருவில் போகும் போது ஒரு பிச்சைக்காரனை பார்க்கிறீர்கள். அவனுக்கு உதவி செய்ய வேண்டும்  நினைக்கிறீர்கள். அந்த இரக்க குணம் உங்கள் ஸ்வதர்மம். ஒரு வேளை நீங்கள் அவனுக்கு உதவி செய்யாமல் போனீர்கள் என்றால், உங்களுக்குள் ஒரு சின்ன வருத்தம் இருக்கும். "சே, ஒரு அஞ்சு ரூபாயாவது போட்டிருக்கலாம் " என்று மனது அரிக்கும். அது தான் ஸ்வதர்மம்.

பொய் சொல்லிப் பாருங்கள்...ஒரு நடுக்கம் இருக்கும்,  ஒரு பதட்டம் இருக்கும். அது உங்கள் ஸ்வதர்மம் இல்லை. எனவே அதை செய்யக் கூடாது.

கொலை, கொள்ளை, போதைப் பொருள், இலஞ்சம் என்ற அனைத்து தீய செயல்களும் செய்த பின், அல்லது செய்யும் போது ஒரு நடுக்கம், தயக்கம், பயம் இருக்கும். அப்படி இருந்தால் அது உங்கள் ஸ்வதர்மம் இல்லை. அதை செய்யக் கூடாது.

நீங்கள் ஏதாவது பாட்டு பாடிப் பாருங்கள். பாடினால் ஒரு சந்தோஷம் வந்தால், பாடுவது உங்கள் ஸ்வதர்மம். அதை நீங்கள் தொடர்ந்திருந்தால் நல்ல பாடகராக  வந்திருப்பீர்கள்.

வேலைப் பளு, விசா, மனைவியின் நிர்பந்தம், பொருளாதார நெருக்கடி  காரணமாக பெற்றோரை பார்க்க முடியாமல் போய் விடலாம் அல்லது முதியோர் இல்லத்தில் விட வேண்டிய சந்தர்ப்பம் வரலாம். அப்படி செய்யும் போது ஒரு குற்ற உணர்வு இருந்தால், பெற்றோரை காப்பது என்பது உங்கள் ஸ்வதர்மம்.

ஸ்வதர்மத்தை செய்யவில்லை என்றால் வாழ்வு சந்தோஷமாக இருக்காது.

ஸ்வதரமம் அல்லாததை செய்தாலும் சந்தோஷம் இருக்காது.

மகனாக, மகளாக, மாணவனாக, மாணவியாக, கணவனாக, மனைவியாக, குடிமகனாக, பெற்றோராக..நமக்கு பல கடமைகள் இருக்கின்றன. அவை நமது ஸ்வதர்மம்.

ஸ்வதர்மத்தை செய்ய தயங்கவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதில் இருந்து  நாம் நழுவக் கூடாது.

அதை செய்வதில் எவ்வளவு சிக்கல் வந்தாலும், தடங்கல் வந்தாலும் பின் வாங்கக் கூடாது.

ஒரு வீரனாக அர்ஜுனனின் ஸ்வதர்மம் அநீதியை எதிர்த்துப் போரிடுவது. சொந்த ஆசா பாசாங்களுக்காக அந்த ஸ்வதர்மத்தில் இருந்து பின் வாங்க நினைக்கிறான்.

கண்ணன் , அப்படிச் செய்ய கூடாது என்று அர்ஜுனனுக்கும், நமக்கும் அறிவுரை கூறுகிறான்.


உலகில் இவ்வளவு குழப்பங்களுக்கும் , வருத்தங்களுக்கும் காரணம் மக்கள் தங்கள்  ஸ்வதர்மத்தை விட்டு விட்டு மற்றவற்றை செய்வதால்தான்.

அறிவியல் படித்தவன் கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான்.

மருத்துவம் படித்தவன் அரசாங்க வேலையில் இருக்கிறான்.

ஓவியம்,இசை, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள், அதை விட்டு விட்டு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

குரங்குகள் நீந்த முயன்று கொண்டிருக்கின்றன.

மீன்கள் மரம் ஏற நினைக்கின்றன.

குழப்பமும், சிக்கலும், வருத்தமும் வராமல் என்ன செய்யும் ?

தேடுங்கள். உங்கள் ஸ்வதர்மம் என்ன என்று. தயங்காமல் அதை செய்யுங்கள்.

https://bhagavatgita.blogspot.com/2019/01/231.html