Tuesday, April 16, 2019

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு 



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

யம் = அது

இமம் = இந்த

புஷ்பிதாம் = மலர்ந்தது

வாசம் = உரை

ப்ரவத³ந் = சொல்கிறார்கள்

அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்

வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்

 பார்த² = பார்த்தா

ந = இல்லை

அந்ய = மற்றவை

அஸ்தி = இருக்கிறது

இதி  = எனவே

வாதி³ந: = சொல்பவர்கள்  ||2-42||


சிலர் வேதங்களின் வெளி உரைகளில் மகிழ்வார்கள். பூக்கள் போன்ற அலங்கார சொற்களில் அவர்கள் மயங்கி விடுகிறார்கள். தாங்கள் கொண்ட கொள்கையைத் தவிர மற்றவை எல்லாம் பிழை என்கிறார்கள். 

வேதம் பல அங்கங்களை கொண்டது. அதில் ஒரு அங்கம், யாகம், ஓமம் போன்றவை. இவற்றை செய்தால், இவை கிடைக்கும் என்று அவை சொல்கின்றன.

பிள்ளை இல்லையா, இந்த யாகம் செய்.

மழை வரவில்லையா, அதற்கு ஒரு யாகம்.

எதிரிகளை வெல்ல வேண்டுமா, உலகம் பூராவும் ஒரு குடைக் கீழ் வர வேண்டுமா - அஸ்வமேத யாகம்

என்று மளிகை கடை பட்டியல் போல, இதுக்கு இது என்று பெரிய பற்றிய பட்டியல் தருகிறது.

கீதை, வேதத்தின் அந்தப் பாகத்தை கண்டிக்கிறது. அதுவும் வன்மையாக கண்டிக்கிறது. "அலங்கார வார்த்தைகள்" என்று சாடுகிறது.

கர்மத்தை செய், பலனை எதிர் பார்க்காதே என்று கீதை ஒரு புறம் சொல்கிறது.

உனக்கு இந்த பலன் வேண்டுமா, இந்த கர்மத்தைச் செய் என்று வேதம் சொல்கிறது.

நாம் எதை கடைபிடிப்பது? நம்மவர்களை கேட்டால் "நாங்கள் வேதம் மற்றும் கீதையை கடை பிடிக்கிறோம்" என்பார்கள். பெரும்பாலும் இரண்டையுமே படிக்காதவர்களாக இருக்கும்.

அது மட்டும் அல்ல, "வேதத்தில் உள்ளது தான் சரி. மற்றவை எல்லாம் தவறு" என்று  சொல்வதையும் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு..தப்பாவா சொல்லி இருக்கப் போகிறார்கள்..பேசாமல் மண்டைய ஆட்டிவிட்டுப் போவோம்...என்றுதான் நினைக்கிறார்கள்.

கீதை, அப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அப்படி ஏற்றுக் கொள்பவர்களை "அறிவற்றவர்கள் " என்று வன்மையாக கண்டிக்கிறது.

சொல்வது கீதை.


https://bhagavatgita.blogspot.com/2019/04/242_16.html

Tuesday, April 9, 2019

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி 



व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||


வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக = ஒன்று, ஒருமித்த

இஹ = இங்கே, இந்த கர்ம யோகத்திலே

குருநந்த³ந = குரு நந்தன

ப³ஹுஸா²கா = பல கிளைகளை உடையது

ஹி = அதனால்

அநந்த = முடிவற்ற

ஸ்²ச = மேலும்

பு³த்³த⁴ய = அறிவு, புத்தி

அ வ்யவஸாயிநாம் = உறுதி இல்லாத

உறுதி உடையவர்களின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதோரின் புத்தி பல கிளைகளை உடையது. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 


கர்ம யோகத்தை சொல்லி வருகிறான் கண்ணன்.

மனம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஓடும் மனதை எப்படி நிலை நிறுத்துவது? மனச் சலனம் நிற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அது தெரிகிறது, ஆனால் மனதை எப்படி நிலைப் படுத்துவது?

வேலை - கர்மம் - ஒரு வழி.

செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றும். வேறு எங்கும் அலையாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மனதை  ஒருமுகப் பழக்கப் படுத்தி விடலாம்.

சும்மா உட்கார்ந்து கொண்டு, மனதை ஒருமுகப் படுத்துகிறேன் என்றால் அது அடங்காது.

அந்த வேலை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

சமையல் செய்வது, வீடு பெருக்குவது, வண்டி ஓட்டுவது, பூஜை செய்வது, படிப்பது, பாடுவது, உடற் பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

வேலை என்பது ஒரு சாக்கு. அதை வைத்துக் கொண்டு மனதை நிலைப் படுத்த பழக்கி விடலாம்.

கிளை கிளையாக பிரிந்து செல்லும் மனதை ஒருமுகப் படுத்த கர்மா அல்லது வேலை ஒரு வழி.

"மனதில் உறுதி வேண்டும்" என்றான் பாரதி.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்" என்பார் வள்ளலார்.


என்னை பொறுத்தவரை கர்ம யோகம் என்பது வேலை செய்வதைப் பற்றி அல்ல. கர்மத்தின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதுதான்.

மனதை ஒருநிலைப் படுத்தவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். வேலை ஒரு வழி.


சிற்றின்பத்தின் உச்சியில் மனமும் உடலும் ஒன்று பட்டுப் போகிறது. ஆனால் அது ஒரு சில வினாடிகளே நிலைக்கிறது. அதுதான் அதில் சிக்கல்.  அதை நீட்டிக்க முடிவதில்லை.

நீட்டிக்க முடிந்தால், அதுதான் பேரின்பம்.

முயன்று பாருங்கள். எந்த வேலை செய்தாலும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்,  மனதை அதில் இலயிக்க விடுங்கள்.

மெடிடேஷன் என்று சொல்லுகிறார்களே, அதுதான் அது.

தியானம்.  Meditation எல்லாம் இந்த இரகசியம் தான்.

கர்ம யோகத்தை இப்படியும் சிந்திக்கலாம். கர்மத்தின் மூலம் மனதை நிலை பெறச் செய்வது.

உங்களுக்கு இது சரி என்று படுகிறதா ?

https://bhagavatgita.blogspot.com/2019/04/242.html