Wednesday, April 30, 2014

கீதை - 10.1 - உனது நலம் வேண்டி சொல்கிறேன்


கீதை - 10.1 - உனது நலம் வேண்டி சொல்கிறேன்

பத்தாவது அத்யாயம் விபூதி யோகம்.

விபூதி என்றால் பெருமை, உயர்வு.

இறைவனின் பெருமை பற்றி கூறும் அத்யாயம்.


श्रीभगवानुवाच
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥१०- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஸ்²ருணு மே பரமம் வச: |
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா || 10- 1||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்

பூ⁴ய = மீண்டும்
ஏவ = உறுதியாக
மஹாபா³ஹோ  = வலிமையான தோள்களை உடையவனே
ஸ்²ருணு = கேள்
மே = என்னுடைய
பரமம் = உயர்ந்த
 வச: | = வசனங்களை
யத் = அது
தே = உனக்கு
அஹம் = நான்
ப்ரீயமாணாய = அன்பு கொண்டவனான நீ
வக்ஷ்யாமி = சொல்லுகிறேன்
ஹிதகாம்யயா = உன் நன்மைக்காக

மீண்டும் சொல்லுகிறேன். என்னுடைய உயர்ந்த சொல்லினைக் கேள். நீ என்மேல் அன்பு கொண்டவன். உனது நலம் நாடி இதனை உனக்கு சொல்லுகிறேன். 

இது வரை சொன்னது அர்ஜுனனுக்கு புரிந்த மாதிரி இல்லை. கர்ம யோகம் என்கிறான், பக்தி யோகம் என்கிறான், ஞான யோகம் என்கிறான் எது உயர்ந்தது, எது சரியான வழி என்ற குழப்பம் அர்ஜுனன் மனதில் கட்டாயம்   இருக்கும்.

எனவே, அந்த குழப்பத்தை போக்க மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் என்கிறான்.

சொல்வதற்கு முன்னால் இரண்டு விஷயங்களை கூறுகிறான்.

ஒன்று, நீ என்னில் அன்பு கொண்டவன்.

இரண்டாவது, உன் நன்மை கருதி கூறுகிறேன்.

அன்பு (ப்ரீத்தி) - பயம் இல்லை, பக்தி இல்லை - அன்பு இருக்கிறது.

நம்முடைய நன்மைக்காக சொல்லப் பட்ட ஒன்று கீதை.

என்ன சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.



Monday, April 28, 2014

பக்தி யோகம் - தொகுப்பு

பக்தி யோகம் - தொகுப்பு


பக்தி என்பது ஞானம் , விஞ்ஞானம் இரண்டும்  சேர்ந்தது. வெளி  உலகம், உள் உலகம் இரண்டும் சேர்ந்தது பக்தி. வெளி உலக  பொருள்களும்,தனி மனித  அனுபவமும்  கலந்தது பக்தி.

பக்தி என்பது செய்ய எளிதானது.  செய்து உணரக் கூடியது. அது ஏதோ தத்துவ விசாரம் அல்ல. நடைமுறையில் செய்யக் கூடிய ஒன்று.

பக்தி செய்ய இல்லறம் ஒரு தடை அல்ல.

பக்தி என்பது என்ன ?

எல்லாவற்றிலும் ஒரு புனிதத் தன்மையை காண்பது பக்தி.  அவ்வளவுதான். இது  உயர்ந்தது , இது தாழ்ந்தது  என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்திலும் ஒரு புனிதத் தன்மையை காண்பது பக்தி.

கூளத்தையும், மலத்தையும் வணங்க வேண்டும் என்று பாரதி சொன்னது போல அனைத்தும் தெய்வம் என்று அறிவது பக்தி.

மாறும் உலகில் மாறாத தன்மையை காண்பது பக்தி

பொருள்கள் ஒன்று அழிந்து இன்னொன்று  உண்டாகிறது. இது இயற்கையாக நிகழ்ந்து  கொண்டே  இருக்கிறது.இது பொருள்களின்  இயல்பு.

இறைவன் இவற்றைப் படைப்பதும்  இல்லை.அழிப்பதும் இல்லை. அவை அப்படியே  இருக்கின்றன. ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டே இருக்கிறது.

பக்தி என்பது பொருள்களின் புற வடிவங்களை பார்த்து வேறுபாடு  கொள்வது அல்ல.  புற வடிவங்களைத் தாண்டி பொருள்களின் மற்றும் மனிதர்களின் அக  வடிவை காண்பது பக்தி.


பக்தி மனதை புற வடிவங்களை நோக்கி அலைய  விடாது.எல்லாம்  ஒன்றுதான்  ஒரு நிறைந்த மன நிறைவைத் தரும்.

புற வடிவங்களை கடந்து உண்மை எது வேண்டு ஞானிகளும் யோகிகளும்  எப்போதும்    சிந்திப்பார்கள்.இதுவே பக்தி.

செயலும்,  செய்பவனும்,செயலின் பலனும் அனைத்தும் ஒன்றே. இங்கு செய்பவன்  வேறு, செய்யப்படுவது வேறு அல்ல. அனைத்தும் ஒன்றே. இதை அறிவது  பக்தி.

இந்த உலகம், அதை உணரும் நம் அறிவு, எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.  இவற்றை அறிவதே பக்தி.

 பொருள்களில்,அவை தரும் இன்பத்தில் நாட்டம் கொண்டு அவற்றின் பின்னால் போபவர்கள்  அவற்றை அடைந்து இன்புற்றாலும், மீண்டும் மீண்டும்  அந்த ஆசை வலையில் அகப்பட்டு துன்பம் அடைவார்கள். பொருளாசை முடியக் கூடியது அல்ல. என்றும் அது திருப்தி அடையாது - சொர்கமே கிடைத்தாலும்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த ஒன்றை அறிவதே உணர்வதே பக்தி.

எல்லாம் எனக்கு எனக்கு என்ற எண்ணம் இருக்கும் போது, நான் வேறு அந்த பொருள்கள்  வேறு என்ற எண்ணமும் இருக்கும். அது மட்டும் அல்ல, நான் வேறு  மற்றவர்கள் வேறு , அவர்களுக்குத் தராமல் நான் இந்த பொருள்களை வைத்துக் கொள்கிறேன் என்ற பாகு பாடும் இருக்கும். எல்லாம் , எல்லாருக்கும்  என்ற எண்ணம் வரும் போது அனைத்தும் ஒன்றே என்ற அறிவும்   பிறக்கும்.அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுவே பக்தி. கொடுபதின்  மூலம் பொருள்களின் மேல்  உள்ள பற்று  விலகும்.

எதைச் செய்தாலும் நமக்கு என்று சுயநலம் இல்லாமல் செய்வது பக்தி. அப்படி செய்யும் போது  செயல்கள் புனிதம்  அடைகின்றன.சுயநலத்தோடு செய்யப்படும்  எதுவும் புனிதம் அடைவது இல்லை.

எல்லா உயிர்களும் சமம் என்ற உணர்வே பக்தி உணர்வு.

இந்த பக்தி உணர்வு வந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த நிலையை  அடைவார்கள்.

இப்படி மனம் ஒரு உயர்ந்த பக்தி நிலையில் இலயிக்கும் போது நாம் ஒரு உயர்ந்த  உன்னத நிலையை அடைகிறோம்.


கீதை - 9.34 - எண்ணங்களே வாழ்கை

கீதை - 9.34 - எண்ணங்களே வாழ்கை 


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥९- ३४॥

மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: || 9- 34||


மந் மநா பவ = மனதை என்னில் நிறுத்தி
மத் பக்த = பக்தியை எனக்காக்கி
மத்³யாஜீ = என்னை தொழு 
மாம் நமஸ்குரு = என்னை வணங்கு
மாம் = என்னை
எவ = முழுவதும்
எஸ்யாசி = என்னை அடைவாய்
யுக்த்வ = முழுவதும் நிலை நிறுத்தி
எவம் = அப்படியாக
ஆத்மாநம் = நீ
மத்பராயண = என்னிடம் பக்தி கொண்டு



மனத்தை என்னில் நிலை நிறுத்தி, பக்தியை எனக்காக  ஆக்கி,  என்னை தொழுது, என்னை அடைக்கலாமாகக் கொண்டால், என்னை அடைவாய் 


நாம் எதை எப்போதும் நினைக்கிறோமோ அதையே அடைவோம்.

நம் நினைவுகள், நம் எண்ணங்கள் நம்மை செயல்பட தூண்டுகின்றன.

ஒன்றை மனதில் நினைக்காமல் நாம் அதை செய்ய முடியாது.

நம் வாழ்கை முழுவதும் நம் எண்ணங்களால் செயல்படுத்தப்  படுகிறது.

நம் வாழ்க்கை என்பது நம் எண்ணங்கள்தான்.

அப்படி என்றால் நம் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் ? எதன் மேல் இருக்க வேண்டும் ?

கண்ணன் சொல்கிறான், உங்கள் எண்ணங்கள் மிக உயர்ந்ததாக இருக்கட்டும்.  அப்படி இருந்தால்  நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

சரி, உயர்ந்தது என்றால் என்ன என்ற கேள்வி வரும்.

எது உயர்ந்தது ?

என்னை நினை. என்னை அடைவாய் என்கிறான்.

நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இறை நிலையை அடைய வேண்டும் என்றால் இறை நிலையில் இருப்பவர்களை, நினைக்க வேண்டும், அவர்கள் மேல் பக்தி கொள்ள வேண்டும், அவர்களை வணங்க வேண்டும்.

மனம் போல் மாங்கல்யம் என்று சொல்வார்களே அது போல.

உங்கள் மனம் எதை விரும்புகிறது, எதை பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறது, எதை அடைய நினைக்கிறது என்று பாருங்கள்.

எண்ணங்களை மாற்றுங்கள், வாழ்கை  மாறும்.

Saturday, April 26, 2014

கீதை - 9.33 - நிரந்தர சுகம்

கீதை - 9.33 - நிரந்தர சுகம்


किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥९- ३३॥

கிம் புநர்ப்³ராஹ்மணா: புண்யா ப⁴க்தா ராஜர்ஷயஸ்ததா² |
அநித்யமஸுக²ம் லோகமிமம் ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம் || 9- 33||

கிம்  புநர் = சொல்லவும் வேண்டுமோ ?
ப்³ராஹ்மணா:  = பிராமணர்களும்
புண்யா = மறுபடியும்
ப⁴க்தா = பக்தர்கள்
ராஜர்ஷயஸ் = இராஜ ரிஷிகள்
ததா² | = மேலும்
அநித்யம் = நித்யம் இல்லாதது 
அஸுக²ம் = சுகம் இல்லாதது
லோகம் = லோகம் 
இமம் = இந்த 
ப்ராப்ய = அடைதல்
ப⁴ஜஸ்வ =  பஜனை செய்வதன் மூலம்
மாம்  = என்னை

அப்படி இருக்க அந்தணர்களும் இராஜ ரிஷிகளும் என்னை வணங்குகிறார்கள். நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் வந்து தோன்றிய பின், நீ என்னை வழி படுவாய் 



முந்தைய ஸ்லோகத்தில் வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் பெண்கள் பர கதி அடைவதைப் பற்றி பார்த்தோம்.

இந்த ஸ்லோகத்தில், அந்தணர்களும், இராஜ இரிஷிகளும் என்னை வழி படுகிறார்கள். நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் நீயும் என்னை வழி படு என்கிறான்.

அந்தணர்களும் இராஜரிஷிகளும் என்று சொல்லவதின் அர்த்தம் என்ன ?

அந்தணர்கள் அறிவு சார்ந்த வாழ்கை வாழ்பவர்கள். பற்றற்றவர்கள்.

இராஜ ரிஷிகள் அனைத்தையும் அனுபவித்து புலன் இன்பங்களை கடந்து சென்றவர்கள்.

புலன் இன்பங்களின் மேல் ஆர்வம் இல்லாதவர்களும்,  புலன் இன்பங்களை அனுபவித்து  அவற்றை கடந்து சென்றவர்களும் என்னை வணங்குகிறார்கள்.

நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் ....

"லோகம்" என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் சொல்லப் பட்டாலும்  அதன் ஆழ்ந்த அர்த்தம் "அனுபவம்" என்பதாகும்.  காம லோகம் என்று சொல்லும்போது காம அனுபவங்களை சார்ந்த உலகம் என்றுதான் கொள்ள வேண்டும்.

அனுபவங்கள் நிரந்தரம் இல்லாதவை. மாறிக் கொண்டே இருப்பவை.

அனுபவங்கள் முதலில் இன்பத்தை , சுகத்தை தந்தாலும் நாளடைவில் சலிப்பையும் வெறுப்பையும் தருபவை.

நிரந்தரம் இல்லாத, சுகம் இல்லாத அனுபவங்களை விட்டு நிரந்தரமான, எப்போதும்  சுகம் தருவதைப் பற்றி  எப்போதும் நினை (பஜனை செய்).






Thursday, April 24, 2014

கீதை - 9.32 - எல்லோருக்கும் நல்வழி

கீதை - 9.32 - எல்லோருக்கும் நல்வழி 


मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥

மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||


மாம் = என்னை

ஹி = நிச்சயமாக
பார்த² = பார்த்தா
வ்யபாஸ்²ரித்ய = அடைக்கலம் அடைந்தோர்
யே = அவர்கள்
அபி = மேலும்
ஸ்யு: பாபயோநய: = பாவத்தில் பிறந்தவர்கள் (பாவிகள்)
ஸ்த்ரியோ = பெண்கள்
வைஸ்²யாஸ் = வியாபாரிகள்
த தா² = மேலும்
ஸூ²த்³ராஸ்தே = சூத்திரர்கள்
அபி = அவர்கள் கூட
யாந்தி = செல்கிறார்கள்
பராம் க³திம் = பர கதியை அடைகிறார்கள்


பாவிகள்,  மாதர்கள்,வைசியர், சூத்திரர் யாராயினும் என்னை பணிபவர்கள் பரகதி அடைவார்கள்.

பாவிகள்  சரி.

அது என்ன பெண்கள், வைசியர்,  சூத்திரர் என்று அவர்களையும் பாவிகளையும் ஒன்றாகச் சேர்ப்பது ?

கீதை  பிராமணர்களையும், க்ஷ்த்ரியர்களையும் உயர்ந்தவர்களாகக் கருதுகிறதா ? மற்றவர்கள் தாழ்ந்தவர்களா ? கீதை வர்ணாசிரம தர்மத்தை போதிக்கிறதா ?

இந்த சந்தேகங்கள் எழுவது இயற்கை.

கீதை என்ன சொல்ல வருகிறது ? சில பேரை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்து  இருந்தது.இன்றும் ஒதுக்கி வைத்து இருக்கிறது.

பெண்களுக்கு சமயத்தில் சம உரிமை இருக்கிறதா ?

பெண்கள் சில மந்திரங்களை சொல்லக்  கூடாது, சில சமய சடங்குகளை செய்யக் கூடாது என்று இன்றும் ஏறக்குறைய அனைத்து மதங்களும் சொல்கின்றன.சில மதங்களில் பெண்கள் வழிபடும் இடங்களுக்குக் கூட செல்லக் கூடாது. அவர்கள் மதத் தலைவர்களாக முடியாது.

கீதை சொல்கிறது, என்னை வழிபட்டால் அவர்களும் பர கதி அடையலாம் என்று.  கீதை பெண்களை ஒதுக்கி வைக்கவில்லை. சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களை கீதை கை தூக்கி விடுகிறது.


 மேலும்,பெண்கள் அன்பு, பாசம், வீடு, பிள்ளைகள், குடும்பம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வளைய  வருபவர்கள்.  முக்தி, வீடு பேறு , மோட்சம், தன்னை அறிவது போன்றவற்றிற்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை.

அவர்கள் எப்படித்தான் கரை ஏறுவது ? கை நீட்டுகிறது கீதை.

பக்தி என்ற வழியை காட்டுகிறது கீதை. இந்தப் பாதையில் போனால் அவர்களும் பர கதி அடையலாம் என்று அன்போடு சொல்லி வைக்கிறது.

அடுத்து வைசியர்கள் - வியாபாரிகள். எதை செய்தால் என்ன இலாபாம் கிடைக்கும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கும்  மனிதர்கள்.கோவிலுக்குப் போனால் கூட எவ்வளவு செலவு, என்ன இலாபம் என்று கணக்கு போடும்  மனம். வாழ்கையை வியாபாரமாகப் பார்க்கும் குணம். எல்லாவற்றையும் இலாப நட்ட கணக்குக்குள் கொண்டு வரும் புத்தி.  அவர்களும் , பக்தி கொண்டால் பர கதி அடையலாம் என்கிறது கீதை.


அடுத்து, சூத்திரர்கள்.  படிக்காதவர்கள், வேதங்கள், போன்றவற்றை அறியாதவர்கள்,உடல் உழைப்பை மட்டுமே நம்பி  வாழ்பவர்கள். கோவிலுக்கு போகக் கூடாது, உயர்ந்த நூல்களை படிக்கக் கூடாது என்று தடை விதிகப்ப் விதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் கை நீட்டுகிறது கீதை.  முந்தைய ஸ்லோகத்தில் கூறிய மாதிரி, அவர்கள் செய்யும் தொழிலையே பக்தியாக  மாற்றலாம்.அதன் மூலம் பர கதி அடையலாம்.

இதை விட எளிய வழியை எப்படி  காண்பிப்பது ?

கீதை யாரையும் ஒதுக்கித்  தள்ளவில்லை.எல்லோரையும் சேர்த்து அணைத்துக்   கொள்கிறது.  எல்லோருக்கும் நல்வழி காட்டுகிறது.



  








Wednesday, April 23, 2014

கீதை - 9.31 - அழிவற்ற அற வழி

கீதை - 9.31 - அழிவற்ற அற வழி 


क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रति जानीहि न मे भक्तः प्रणश्यति ॥९- ३१॥

க்ஷிப்ரம் ப⁴வதி த⁴ர்மாத்மா ஸ²ஸ்²வச்சா²ந்திம் நிக³ச்ச²தி |
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே ப⁴க்த: ப்ரணஸ்²யதி || 9- 31||

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது


அவன் விரைவில் அற வழியில் செல்லத்  தலைபடுவான். நிரந்தர அமைதியும்  பெறுவான். என் பக்தன் அழிவதே இல்லை 


மனித மனம் எப்போதும் வரவு செலவு கணக்கு பார்க்கும் இயல்பு உடையது.
நல்லதைச் செய்யச் சொன்னால் கூட, அதனால் எனக்கு என்ன இலாபம் என்று கேட்கும்.

ஏன் பக்தி செய்ய வேண்டும் ? பக்தி செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் ?

பக்தி என்பது ஏதோ பாடல்களை, ஸ்லோகங்களை மீண்டும் மீண்டும் சொல்லிக்  இருப்பது அல்ல. 

மனம் ஒன்றி செய்யும் எதுவும் பக்திதான். 

பஜதே என்ற வார்த்தையில் இருந்து வந்தது பக்தி. 

பஜதே என்றால் உள்ளிருப்பதை வெளியே கொண்டு வருவது. உள்ளும் புறமும்  ஒன்றி இருப்பது. 

எந்த வேலையையும் மனம் ஒன்றி, மனம் இலயித்து செய்தால் அதுவும் பக்திதான் - அது திருடு, கொள்ளை போன்றவையாக இருந்தால் கூட. 

நான் என்பது மறந்து, ஒன்றாக ஐக்கியமாவது பக்தி. 

மனம் அத்தனையும் ஒன்றி ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்த்தால் கூட அது பக்திதான். 

மனம் ஒன்றாமல் கோவிலுக்குப்  போவதும்,பூஜை செய்வதும் பக்தி ஆகாது. 

அப்படி பக்தி  செலுத்துபவன், தன்னை மறந்து, உலகோடு ஒன்று   படுகிறான். தான் வேறு இந்த உலகம் வேறு என்ற பாகுபாடு மறைந்து போகிறது. 

எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம்  வருகிறது.

அந்த எண்ணம் வரும்போது, பாவங்கள் விலகி, அற வழியில் செல்லத்  தலைப்படுகிறான்.

அப்படி செல்பவனுக்கு அழிவு ஏது ?

அவன் நித்தமும் புதியதாய்  பிறக்கிறான். ஒவ்வொரு கணமும் அவனுக்கு புதியது.ஒவ்வொரு கணமும் அவன்  வாழ்கிறான்.நாம் ஒவ்வொரு கணமும் இறக்கிறோம். 

இப்படி யோசித்துப் பாருங்கள். 

ஒரு வேலை செய்யும்போது  மனமும்,உடலும் ஒன்று படுவது பக்தி. 

உடல் வேலை செய்யும் போது மனம் அந்த வேலையினால் கிடைக்கும் பலன் பற்றி  யோசித்துக் கொண்டிருந்தால் அது பக்தி அல்ல. 

அப்படி பார்க்கும் போது கர்ம யோகமும் பக்தி யோகமும் ஒன்றுதான் என்பது உங்களுக்கே  புலப்படும்.

மனம்  அலையாமல், செய்யும் வேலையை ஒரு அர்பணிப்பு உணர்வுடன் செய்வதும் பக்திதான். 

அந்த வழி தான் அற வழி . 

அந்த வழியில் செல்பவனுக்கு அழிவே இல்லை என்று கண்ணன் உறுதிபடச் சொல்கிறான். 

சிந்திப்போம். 




Tuesday, April 22, 2014

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே - பாகம் 2

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே  - பாகம் 2


अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥

அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||


அபி = கூட
சேத் = ஆனால்
ஸுது³ராசாரோ = பாவ காரியங்களை செய்தாலும்
ப⁴ஜதே = பஜதே
மாம் = என்னை
அநந்யபா⁴க் = விலகாமல்
ஸாது = சாது
எவ = நிச்சயமாக
ஸ = அவன்
மந்தவ்ய: = கொள்ளப்படுவான்
ஸம்யக் = முழுவதும்
வ்யவஸிதோ = உறுதியுடன்
ஹி = நிச்சயமாக
ஸ:  = அவன்


பாவ காரியங்களை செய்பவனாக இருந்தாலும், விட்டு விலகாமல் என்னை வழிபடுபவனை  நல்லவன் என்றே கொள்ள வேண்டும், ஏன் என்றால் அவன் அதில் உறுதியாக இருக்கிறான். 


அது எப்படி பாவம் செய்து விட்டு பக்தி செய்தால் அது சரியாகி விடுமா ? அப்படி என்றால்  எல்லோரும் எல்லா பாவங்களையும் செய்து விட்டு, அன்புடன் இறைவனை  தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போய் விடுமா ? 

இது சரிதானா ? இது நடைமுறைக்கு சாத்தியப்பட்டு வருமா ?

முதலாவது, பாவம் என்பது வேறு, பாவம் செய்பவன் என்பவன் வேறு. பாவ காரியங்களை  செய்யாதவர்கள் யாருமே  இருக்க முடியாது. பாவம் செய்தவர்களை  ஒதுக்க வேண்டும் என்றால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டோம். 

இரண்டாவது, பாவிகளை விலக்கி வைத்து விட்டால் , அவன் பாவம் செய்து கொண்டே இருப்பான். அது அவனுக்கும் நல்லது அல்ல, அவன் இருக்கும் சமுதாயத்திற்கும் நல்லது  அல்ல. அவனை சரி செய்து அரவணைத்துக் கொள்ள  வேண்டும்.  எப்படி ?


மூன்றாவது,  பாவத்தில் இருந்து எப்படி விடுபடுவது ? பாவம் முதலில் மனதில்  சிந்திக்கப் படுகிறது. பின் செயல் படுத்தப் படுகிறது.  சிந்தனையை மாற்றினால்  செயல்  மாறும்.சிந்தனையை எப்படி மாற்றுவது ?    கீதை ஒரு வழி   சொல்கிறது - " விட்டு விலகாமல் என்னை வழிபடு " (Undivided Devotion ) என்கிறது. 

அதாவது,மனதை பாவ காரியங்களில் இருந்து விலக்கி என்னை விட்டு விடாமல்  நினை , வழிபடு என்கிறது. 

மனமும் உடலும் பாவ காரியங்களுக்கு பழகி விட்டது. அதை மாற்ற வேண்டும் என்றால், மனதை முதலில் உயர்ந்த ஒன்றில் பதிக்க வேண்டும். 

உயர்ந்த ஒன்றில், உயர்ந்த நிலையில் மனதை செலுத்த வேண்டும். எதைச் சொன்னாலும்  மனம் அதை ஆயிரம் கேள்வி கேட்கும். எனவே கிருஷ்ணன், "என்னில்  பக்தி கொண்டு" என்று மனதை திசை திருப்ப ஒரு வழி  சொல்கிறான். 

உங்களுக்கு கிருஷ்ணன் வேண்டாம் என்றால் வேறு சிறந்த எதில் வேண்டுமானாலும் மனதை திசை திருப்புங்கள். மனம் எங்கே செல்கிறதோ, உடல் அங்கே செல்லும். பாவத்தில் இருந்து விடுபட இது ஒரு வழி. 

இப்படி பாவிகளைக் கூட நல் வழிப் படுத்த முயல்கிறது கீதை. 

வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்தவர் 

அருணகிரி பெண் பித்தராக இருந்தவர் 

கண்ணப்பர் உயிர் கொலை புரியும் வேடவனாக இருந்தவர் 

பாவத்தில் இருந்து மீண்டு நல்லவர்களாக மாற முடியும். 

பாவிகள் மீதும் கருணை மழை பொழிகிறது கீதை. 
 

Monday, April 21, 2014

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே

கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே 


अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥

அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||


அபி = கூட
சேத் = ஆனால்
ஸுது³ராசாரோ = பாவ காரியங்களை செய்தாலும் 
ப⁴ஜதே = பஜதே
மாம் = என்னை 
அநந்யபா⁴க் = விலகாமல் 
ஸாது = சாது
எவ = நிச்சயமாக
ஸ = அவன்
மந்தவ்ய: = கொள்ளப்படுவான்
ஸம்யக் = முழுவதும்
வ்யவஸிதோ = உறுதியுடன்
ஹி = நிச்சயமாக
ஸ:  = அவன்


பாவ காரியங்களை செய்பவனாக இருந்தாலும், விட்டு விலகாமல் என்னை வழிபடுபவனை  நல்லவன் என்றே கொள்ள வேண்டும், ஏன் என்றால் அவன் அதில் உறுதியாக இருக்கிறான். 


Sunday, April 20, 2014

கீதை - 9.29 - பக்தி என்றால் என்ன, அதன் விளைவு என்ன ?

கீதை - 9.29 - பக்தி என்றால் என்ன, அதன் விளைவு என்ன ?


समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥९- २९॥

ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்³வேஷ்யோஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் || 9- 29||

ஸமோ = சமமாக 
அஹம் = நான் 
ஸர்வபூதேஷு = அனைத்து உயிர்களுக்கும் 
ந = ஒருவரும் இல்லை 
மே = எனக்கு 
த்³வேஷ்யோ = பகைவர்கள் 
அஸ்தி   ப்ரிய: = நண்பர்கள்  
யே = எவர் 
பஜந்தி = தொழுகிறார்களோ 
து = ஆனால் 
மாம் = என்னை 
பக்த்யா = பக்தியுடன் 
மயி  = என்னுள் இருக்கிறார்கள் 
தே = அப்படி பட்டவர்களில் 
தேஷு  = அவர்களில் 
சா = மேலும் 
அபி = நிச்சயமாக 
அஹம் = நான் 



நான் அனைத்து உயிர்களுக்கும் சமமானவன் . எனக்கு நண்பர்களும் இல்லை  பகைவர்களும் இல்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர்களில் நான் இருக்கிறேன், என்னில் அவர்கள் இருக்கிறார்கள். 


நட்பு, பகை, நல்லவன், கெட்டவன் , உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் நம் மனதைப் பொருத்தது. 

இன்று நட்பாய் இருப்பவன் நாளை பகைவனாகத் தெரியலாம். 

மாற்றம் அவனில் இல்லை. உங்களில் இருக்கிறது. 

உலகை நாம் எப்போதும் பிரித்துக் கொண்டே இருக்கிறோம். 

வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், நல்லவர்கள்,கெட்டவர்கள் என்று உலகை  நாம்  ஒவ்வொரு நாளும் ிரித்துக் கொண்டே இருக்கிறோம். 

நாம் வெளியே உலகை பிரிக்கும் போது உள்ளுக்குள்ளும் நம் மனம் பிரிந்து   போகிறது. 

நட்பு என்றால் ஒரு மாதிரி  பழகுகிறோம்.

நட்பு இல்லை என்றால் இன்னொரு மாதிரி. 

இப்படி வெளி உலகை நாம் பிரிக்கும்போது உள் உலகும்  பிரிகிறது. மனச் சிதைவு ஏற்படுகிறது. 

 மாறாக, வெளியே உலகம் சேரும்போது நம் மனமும் ஒன்று படுகிறது. 

 வேற்றுமைகள் குறையக் குறைய மனம்  .ஒருமைப்  படும்.

ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் என்பார் மணிவாசகர்.

சரி,எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை என்று சொன்ன கண்ணன், அடுத்த  வரியில் என்னை அன்போடு பூஜை செய்பவர்களுக்குள் நான் இருக்கிறேன், என்னில்  அவர்கள் இருக்கிறார்கள் என்கிறான். 

அப்படி என்றால் அன்பு செலுத்துபவர்கள், பக்தி செலுத்துபவர்கள் மற்றும் பக்தி செலுத்தாதவர்கள்  என்ற வேறுபாடு வந்து விடுகிறதே ?

பக்தி என்பதற்கு சமர்பித்த/அர்பணித்த  சிந்தனை என்பது ஒரு பொருள். ஒரு காரியத்தில், ஒரு எண்ணத்தில் முழுவதுமாக ஒன்றி விடும்போது நான் என்ற எண்ணம் மறைந்து  போகிறது. 

பக்தி என்பது நான் என்ற எண்ணம் இல்லாமல் கரைவது.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே
அயல்மாண்ட டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

"மற்றுள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்ட வா பாடி தெள்ளேணம் கொட்டாமோ "

என்று பாடுகிறார் மணிவாசகர். 

நான் என்பது மறையும் போது நீங்கள் உலகோடு ஒன்றாகக் கலக்கிறீர்கள். என்னுள்  அவனும், அவனுள் நானும் இருக்கிறேன் என்று சொல்லுவது,  வேற்றுமைகள்  மறைந்த ஒரு இறை நிலை. 

தன்னை மறக்கும் போது , உங்கள் மனதில் இறைவன் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இறைவன் மனதில் நீங்கள் இருப்பீர்கள். 

உங்களுக்கும் இறைவனுக்கும், அல்லது இறை நிலைக்கும் நடுவில் இருப்பது  நான் என்ற எண்ணம். பக்தியில் அகந்தை கரைகிறது. 

நான் என்ற அகந்தை மறையும் போது நீங்கள் வேறு உலகம் வேறு அல்ல என்ற  நிலை தோன்றும். 

மிக மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம். 



Thursday, April 17, 2014

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று  


शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥९- २८॥

ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||

ஸு²பா⁴ = மங்களமானவை

அஸு²ப = அமங்களமானது

பலைய = பலன்களை

எவம் = எனவே

மோக்ஷ்யஸே = விடுதலை பெற்று

கர்ம = வினைகளின் 

ப³ந்த⁴நை: | = தளைகளில் இருந்து

ஸம்ந்யாஸ = துறந்து

யோக³ = யோக

யுக்தாத்மா = மனதை நிலை நிறுத்தி  

விமுக்தோ = முக்தி அடைந்து

மாம் = என்னை 

உபைஷ்யஸி = நீ அடைவாய்

மங்களம் அமங்களமாகிய பலன்களைத் தரும் கர்மத் தளைகளில் இருந்து விடுபட்டு. துறவு என்ற யோகத்தில் ஈடுபட்டு, இவற்றில் இருந்து விடுதலை அடைந்து  என்னை அடைவாய்.

குரங்கை எப்படி பிடிப்பார்கள் தெரியுமா ?

ஒரு இளநீரை எடுத்து, அதன் மேலே சிறு துளை இடுவார்கள். அந்தத் துளையில்  குரங்கின் கை மட்டும் தான் போக முடியும். அந்த இளநீரில் உள்ள நீரை வெளியே ஊற்றி விட்டு, குரங்குக் பிடித்த தின் பண்டங்களை அதனுள் போட்டு வைப்பார்கள்.

குரங்கு அந்தத் தின் பண்டத்தை எடுக்க உள்ளே கை விடும். கை நிறைய எடுத்துக் கொள்ளும். மூடிய கை வெளியே வராது. எடுத்த தின் பண்டத்தை விட்டு விட்டால் கை வெளியே வந்து விடும். ஆனால் குரங்கு விடாது. உள்ளே மாட்டிக் கொண்ட கையோடு அங்கும் இங்கும் அலையும்.  சாப்பிட முடியாமல் மெலிந்து போகும். இழுத்து இழுத்து கை எல்லாம் புண்ணாகப் போகும். பின் அது  சோர்ந்து விழுந்தவுடன் அதை பிடித்துக் கொள்வார்கள்.

அந்த குரங்கில் இருந்து வந்தவர்கள் தானே நாம்.

பிடித்ததை விட மாட்டோம்.

பிறந்தோம், படித்தோம், வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், சொத்து சேர்ப்பது என்று அலைகிறோம் . இது தான் வாழ்க்கையா ? இதைத் தாண்டி வாழ்வில்  எதுவும் இருக்கிறதா ?

அதை பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லை.

ஒன்றில் இருந்து அடுத்தது என்று குரங்கு போலத் தாவிக்  கொண்டிருக்கிறோம்.

பிறந்தோம். கொஞ்ச நாள் கழித்து பள்ளிக் கூடம்  அனுப்பினார்கள். ஒரு வகுப்பு முடிந்து மறு வகுப்பு என்று சென்றோம். படிப்பு முடிந்தவுடன் வேலை. வேலை கிடைத்தவுடன் திருமணம். திருமணம் முடிந்தவுடன் பிள்ளை குட்டிகள். பின் அவற்றின் படிப்பு. அவற்றின் வேலை என்று வாழ்க்கை ஒரு தொடர் வண்டி போல் போய்க் கொண்டே இருக்கிறது.

பின் வயதாகி, மரணம் நெருங்கும்போது என்ன நடந்தது என்று யோசிக்கும் போது முழு வாழ்வும் இவ்வளவுதானா என்ற கேள்வி முன்  நிற்கும்.

இந்த வினைத் தொடர்களை எப்படி அறுப்பது ? இதில் இருந்து விடு பட்டால் தான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும். இந்த தொடர் சங்கிலியில் இருந்து எப்படி விடுபடுவது ?

முந்தைய ஸ்லோகத்தில் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் என்று செய் என்று கூறப்  பட்டது.

அப்படி செய்தால் என்ன ஆகும் என்பது இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

அப்படி, செயலில் பற்று இல்லாமல் அர்ப்பணம் என்ற நினைவோடு செய்யும் போது  செயலின் நல்லதோ கெட்டதோ , விரும்பியதோ , விரும்பாததோ உங்களைச் சாராது. வினைகளின் பலன்கள் உங்களைத் தீண்டாது.

இது வேண்டும், இது வேண்டாம் என்று இல்லாமால் எல்லா செயலையும் ஒரு அர்பணிப்பு என்ற நினைவோடு செய்யும் போது அந்த வினைகளின் பலன்கள் உங்களைத் தொடாது.


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

அப்படி என்றால் துன்பமும் (இடும்பை) இல்லை.

செயல் - அவற்றின் விளைவுகள் - விளைவுகள் தரும் சுக துக்கங்கள் - அதில் இருந்து விளையும் ஆசைகள் - பயங்கள் - கோபங்கள் - ஏமாற்றங்கள் என்று இவற்றில் இருந்து மனம் விடு பட வேண்டும். அப்போதுதான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும்.

இல்லை என்றால் இதிலேயே கிடந்து மனமும் நம் வாழ்க்கையும் உழன்று கொண்டே இருக்கும்.

அதற்காக செயலே செய்யாமல் இருக்க முடியுமா ?

படிக்காமல் இருக்க முடியுமா ? வேலை செய்யாமல் இருக்க முடியுமா ?

முடியாது. செய்யவும் வேண்டும் ஆனால் அவை நம்மை பற்றிக் கொள்ளவும் கூடாது.

அதற்குத்தான் முந்தைய சுலோகம் சொன்னது - செய், ஆனால் உனக்கு என்று செய்யாதே, செயல்களின் பலன்களை அர்பணித்து விடு. யாருக்கு அர்பணிக்க வேண்டும். நான் செய்யும் வேலையின் பலன் மற்றவனுக்கு கிடைப்பதை விட எனக்கு கிடைப்பது சிறந்தது அல்லவா ? மற்றவர்களுக்கு அர்ப்பணம் செய் என்றால் செய்ய  மாட்டோம். எனவே கிருஷ்ணன் செய்கிறான் "எனக்கு அர்ப்பணம் செய் " என்று. அவன் நம் செயல்களின் பலன்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான்.  இது வந்துதான் ஆக வேண்டும் என்று இல்லை அவனுக்கு.

ஒரு சிறந்த நன்மைக்காக அர்ப்பணம் செய் என்பதை சொல்லாமல் சொன்னது அது.

அப்படி செயல்களை செய்து முடித்த பின், அது என்ன ஆனாலும் நமக்குக் கவலை இல்லை. மனம் செயலைத் தாண்டி சிந்திக்கத் தொடங்கும். செயல் , வினை, கர்மா என்பதே வாழ்கை அல்ல. அது வாழ்வின் ஒரு கூறு அவ்வளவுதான். அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

அது என்ன என்று மனம் சிந்திக்கக் தொடங்கும்.

ஒரு புதிய பாதை  பிறக்கும்.

புதிய சிந்தனை. புதிய உற்சாகம் பிறக்கும்.

வாழ்கை, முதன் முதலாக ஒரு இயந்திரத்தனத்தில் இருந்து விடுபடும்.

வாழ்வின் அர்த்தம் விளங்கத் தொடங்கும், விரியத் தொடங்கும்.

அப்படி செய்தால் மோக்ஷம் கிடைக்கும், முக்தி கிடைக்கும். என்னை அடைவாய் என்கிறது சுலோகம்.

இறை நிலை அடைவதின் படிகள்

- அர்பணிப்பு உணர்வோடு கர்மம் செய்வது
- கர்மங்களின் பலன்களில் பற்றற்று இருப்பது
- கர்மங்களின் தலைகளில் இருந்து விடுபடுவது
- மோக்ஷம்
- முக்தி
- இறை நிலை

இதில் மோக்ஷம் முக்தி என்றால் என்ன, இரண்டுக்கும் உள்ளை ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி பல கருத்துகள் சொல்லப்  படுகிறது.

வீடு பேறு என்று மொழி மாற்றம் செய்கிறார்கள்.

அதைத் தாண்டிப் போங்கள் .  இறை நிலை அடைவது , அது தான் இலக்கு. 













கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2 



यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச்

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவம் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

அர்ப்பணம் என்று செய் !


கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது அது எந்த கடவுளாக  வேண்டுமானாலும் இருக்கட்டும் - இராமனாக இருக்கட்டும், வேறு யாராக  வேண்டுமானாலும் இருக்கட்டும்....யாருக்கு என்பது அல்ல முக்கியம்...என்ன என்பது முக்கியம்...

நம் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒன்று செய்து கொண்டுதான் இருக்கிறோம்....பிறந்ததில்  இருந்து இறக்கும் வரை ஏதோ காரியங்கள் செய்து கொண்டுதான்  இருக்கிறோம்.

நாம் செய்யும் காரியங்கள் நம்மை பாதிக்கின்றன, நம்மை பண்படுத்துகின்றன. அப்படி என்றால்  அவற்றை சரியாகச் செய்தால் நம்மிடம் சிறந்த பாதிப்பு இருக்கும்,   தவறாகச் செய்தால் தவறான பாதிப்பு இருக்கும்.

எப்படி செய்கிறோம் என்பது மட்டும் அல்ல, என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம்.

நல்லதைச் செய்ய வேண்டும், நல்ல படியாகச் செய்ய வேண்டும்....இதை எப்படி சொல்லுவது.

திருட்டையும், கொலையையும் செய்து விட்டு அதுவும் கிருஷ்ணார்ப்பணம் என்று கூட சொல்லலாம்.

வரும் கால காலத்திற்கும் சொல்லி வைக்க வேண்டும் ....

எதைச் செய்தாலும் ...அர்ப்பணம் என்று செய்....

இதுதான் அந்த மகா வாக்கியம்.

செய்யப் படும் செயல் அர்பணமாக வேண்டும் என்றால் செய்பவனும், யாருக்காக   செய்யப் படுகிறதோ அவனும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லவா ?

முதலில் நீங்கள் மிக மிக உயர்ந்தர்வர்கள் என்று உணருங்கள்.

தன்னை மதிக்காதவன்  உலகில் யாரையும் மதிக்க மாட்டான்.

"உண்ணும் உணவை எனக்கு அர்ப்பணம் என்று செய் "

நீங்கள் உண்ணும் உணவு நைவேத்தியம், அர்ப்பணம் என்ற எண்ணம் வரும் போது  இந்த உடலும், இந்த உடலை செலுத்து சக்தியும் எவ்வளவு உயர்ந்தது  என்ற  எண்ணம் வரும்.

"தானம் தரும் போதும் எனக்கு அர்ப்பணம் என்று செய்"

தன்னை உயர்வாக நினைக்கும் போது மற்றவர்களை தாழ்வாக நினைக்கக் கூடாது.  அவர்களையும் உங்களுக்கு நிகராக நினைக்க வேண்டும். எனவே, தானம் தரும் போதும்   "எனக்கு அர்ப்பணம் என்று செய் ".

பிச்சை போட்டால் கூட அதிலும் ஒரு பக்தி

உணவு உண்டால், அதிலும் ஒரு பக்தி.

அர்ப்பணம் என்று கூறும் போது சுய நலம் இல்லாதது என்ற அர்த்தம் வரும்.

உண்பதும் அர்ப்பணம் என்றால், நாம் இருப்பதும், உண்பதும் நம் நன்மைக்காக  அல்ல, மற்றவர்களுக்கு உதவி செய்ய.

தானம் தரும்போதும், நான் தருகிறேன், நான் பணக்காரன் என்ற எண்ணம் இல்லாமால்,  அதையும் அதன் பலனையும் அர்ப்பணம் என்று நினைத்துச் செய்ய வேண்டும்.



தவம் செய்தாலும், அதன் பலன் நமக்கு வேண்டும் என்று நினைத்து செய்யக் கூடாது...

தவமும் அர்ப்பணம், தவத்தின் பலனும் அர்ப்பணம்.

சுயநலம் இல்லாமல் செய்யுங்கள், சுகமாக இருக்கும்.


Monday, April 14, 2014

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1 


यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல் 
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச் 

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவமாகச் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள்.

சுற்றி இருக்கும் அனைத்திலும் நீங்கள் கொண்டு வந்தது எது, நீங்கள் செய்தது எது ?

ஒன்றும் இல்லை. நீங்கள் இந்த உலகில் வருவதற்கு முன்னே அவைகள் இருந்தன.  நீங்கள் போன பின்னும் அவை இருக்கும்.

நீங்கள் வந்து போகும் ஒரு நாடோடி. ஒரு விருந்தினர். அவ்வளவுதான்.

இதில் நீங்கள் யாருக்கு எதைச் செய்து விட முடியும் ?

நீங்கள் பொருள்களையும், மனிதர்களையும் இட மாற்றம் செய்து கொண்டு இருகிறீர்கள். அவ்வளவுதான்.

இந்த உலகம் உங்களுக்குளும் வெளியேயும் ஒரு மிகப் பெரிய சக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் இந்த மாபெரும் சக்தியின் ஒரு கூறு அவ்வளவுதான்.

இதை விட்டு நீங்கள் வெளியேற முடியாது.

உலகத்தில் இருந்து எடுத்து உலகத்திற்கே தருகிறீர்கள். இது தான் உங்கள்  வேலை.

இதில் - நான் தான் பெரிய மனிதன், நான் செய்கிறேன், என்னால் தான் முடியும் என்கிற  எண்ணம் எங்கிருந்து வந்தது ?

எதைச் செய்தாலும் அந்த சக்தி, அந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு என்ற நினைவோடு  செய்யுங்கள்.

அந்த நினைவு வரும்போது, "நான் என்ன செய்து விட்டேன்" என்ற அடக்கம் வரும்.

அது வரும்போது, கர்மாவின் பலனில் பற்று  இருக்காது.

ஒரு இரயில் வண்டியில் பயணம் செய்கிறீர்கள். போய் சேரும் இடம் வந்தவுடன்  இறங்கிக்  கொள்கிறீர்கள்.அந்த வண்டியை ஓட்டிய ஓட்டுனர், "உங்களை  இங்கே பத்திரமாக கொண்டு வந்து விட்டேனே...ஒரு நன்றி தெரிவிக்கக் கூடாதா  " என்று உங்களிடம் கேட்பது இல்லை.

ஏன் ?

இரயில் வண்டி, அந்த  நிறுவனம், பயணச் சீட்டு, அவர் சம்பளம் என்று எல்லாம் ஒரு   பெரிய இயக்கமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் ஒரு  அங்கம் அவ்வளவுதான்.

அது போல நீங்கள் என்ன செய்தாலும், இந்த மாபெரும் சக்தியில் நீங்களும் ஒரு  அங்கம் என்று  நினைத்தால், செய்யும் செயல்களில் ஒரு அர்பணிப்பு தானாகவே  வரும்.




Sunday, April 13, 2014

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம்

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம் 


पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
 ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி  = அளிக்கிறார்களோ
தத் = அதை 
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்

இலை , பூ, கனி, நீர் இவற்றை அன்புடனும் (பக்தியுடனும்) , தெளிந்த மனத்துடனும் அளித்தால் நான் ஏற்றுக் கொள்வேன் 

இறைவனிடம்தான் எல்லாம் இருக்கிறதே ? இந்த பூவும், நீரும், பழமும், இலையும்   வந்து அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

மேலும், இந்த இலையும், பூவும், நீரும், நாம் செய்தது இல்லை. அவை இயற்கையிலேயே இருக்கிறது. அதை எடுத்து இறைவனுக்கு தருவதில் நமக்கு என்ன  பெருமை ?

இவற்றை அன்புடனும், நல்ல மனதுடனும் கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன்  என்கிறான்.

சரி, அதனால் நமக்கு என்ன ?

இதை வாசித்து விட்டு, கீதை பூஜை செய்யச் சொல்கிறது. இலையும், பூவும், பழமும்  நீரும் விட்டு பூஜை செய்யச் சொல்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.


சற்று ஆழமாக யோசிப்போம்.

துன்பங்களுக்கு, கவலைகளுக்கு, மன சஞ்சலங்களுக்கு காரணமாய் இருப்பது  ஆசை.

அத்தனைக்கும் ஆசைப் படுகிறோம்.

பின் அத்தனை கவலைகளும் வரமால் என்ன செய்யும் ?

சரி, அதற்காக ஆசையை விட்டு விட முடியுமா ? ஒன்றிலும் ஆசை இல்லை விட்டால்  வாழ்கை சுவைக்குமா ? மரக் கட்டையை, கல்லைப் போல் ஆகி விட மாட்டோமா ?

பின் என்ன தான் செய்வது ?

பொருள் சேர்பதில் ஒரு சுகம்.

பொருளை  கொடுப்பதில் இன்னொரு சுகம்.

கொடுத்துப் பாருங்கள் - சுகம்  தெரியும்.

அன்பு வேண்டும், காதல் வேண்டும், என்னை நேசிப்பவர்கள் யாரும் இல்லையா  என்று அலைவதை விடுங்கள்.

நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள், அன்பை அள்ளி வழங்குங்கள் , மற்றவர்களை காதலியுங்கள்.

எப்போதும் வேண்டும் வேண்டும் என்று அலைவதை விட்டு விட்டு கொடுக்கத் தொடங்குங்கள்.

சின்ன குழந்தைகளைப் பார்த்தால் தெரியும் - அது எல்லாம் தனக்கு வேண்டும் என்று  நினைக்கும். கையில் அகப்பட்டதை எடுத்து வைத்துக்  கொள்ளும்.கேட்டால்  தராது. வலிந்து வாங்கினால் அழும்.

வேண்டும் வேண்டும் என்று அலைவது சிறு குழந்தைத்தனம்.

வளருங்கள். கொடுங்கள்.

கொடுக்க கொடுக்க பொருள்கள் மேல் ஆசை குறையும்.  மற்றவர்கள் அனுபவிப்பதை  பார்த்து மனம் மகிழும்.

"என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனின் பெற்றதன்றோ" என்று இராமன்  சொன்னது  மாதிரி.

பொருளுக்காக சிலர் அலைகிறார்கள். அன்புக்காக சிலர் அலைகிறார்கள்.

அலைச்சல் அடிப்படை.

சரி, கொடுக்கலாம்.

கொடுப்பதிலும், ஒரு ஆணவம் வந்து  விடும்.

நான் கொடுக்கிறேன், நான் பணக்காரன், என்னிடம் இருக்கிறது என்ற ஆணவம்  இல்லாமல் கொடுக்க வேண்டும் ?

அது எப்படி கொடுக்க முடியும் ?

எல்லாம் இருப்பவனிடம் போய் இலையும், நீரும், பழமும் கொடுக்கும் போது  அந்த  ஆணவம் நீங்கும்.

நான் கொண்டு வந்தது, செய்தது என்று எதுவும் இல்லை. எல்லாம் இயற்கையில் உள்ளது . நான் பொருகளை இடம் மாற்றம் செய்கிறேன், அவ்வளவுதான் என்ற எண்ணம் வரும்.


வங்கியில் ஒரு காசாளார்  இருக்கிறார். பல பேர் அவரிடம் காசோலையை கொடுத்து  பணம் பெற்றுக் கொள்கிறார்கள். "நான் இவ்வளவு பேருக்கு பணம்   கொடுத்தேன்  " என்று அவர் நினைப்பாரா ?

யாரோ ஒருவரின் கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் தருகிறார்.

பட்டுவாடா செய்வது மட்டும் தான் அவர் வேலையும்.

இந்த உலகில் நீங்களும் பட்டுவாடா செய்கிறீர்கள் . அவ்வளவுதான்.

அவ்வளவு பெரிய இறைவனிடம் இலையை கொண்டு போய் கொடுக்கும் போது  நான் தருகிறேன் என்ற எண்ணம் வராது, என்னுடையது என்று ஒன்றும் இல்லை   என்ற எண்ணம் வரும்.

முதலில் அங்கிருந்து ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து மற்றவர்களுக்கும்  கொடுக்கத் தொடங்குவீர்கள்.

கொடுக்கும் போது பற்று விடும்.

பற்று விட்டால் இருப்பதெல்லாம் சுகம் தான்.

பற்று விட்டால் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்காது.

இலையில், நீரில், பூவில், பழத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.

அன்போடு கொடுங்கள்.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்

கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

என்னது இல்லை என்று நினைத்துக் கொடுங்கள்

அவன் தந்ததை அவனுக்கே திருப்பி தருகிறேன் என்று எண்ணிக் கொடுங்கள்.

வாழ்வில் ஒரு புது இன்பம் வரும்.



Saturday, April 12, 2014

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும்

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும் 


यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥९- २५॥

யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||

யாந்தி = அடைகிறார்கள்

தேவ வவ்ரதா = தேவதைகளை வணங்குபவர்கள்

தே³வாந் = அந்த தேவதைகளை

பித்ரூந் = பித்ருக்களை

யாந்தி = அடைகிறார்கள்

பித்ருவ்ரதா: = பித்ருக்களை வணங்குபவர்கள்

பூ⁴தாநி = பூதங்களை

யாந்தி = அடைகிறார்கள்

பூ⁴தேஜ்யா = பூதங்களை வணங்குபவர்கள்

யாந்தி = அடைகிறார்கள்

மத் = என்னை

யாஜிநோ = வணங்குபவர்கள்

அபி = ஆனால் 

மாம்  = என்னை

தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள், தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருக்களை நோக்கி விரதம் இருப்பவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் 
பூதங்களை நோக்கி விரதம் இருப்பவர்கள்  பூதங்களை அடைகிறார்கள் 
என்னைத் நோக்கி விரதம் இருப்பவர்கள்  என்னை அடைகிறார்கள் 


விரதம் என்றால் விடா முயற்சி, தவம், நோன்பு என்று கூறலாம்.

தவம் என்றால் என்ன என்று சொல்ல வந்த வள்ளுவர் தவம் என்பது தன் துன்பங்களை பொறுத்தல், பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருத்தல் என்றார்.

தன் உயிருக்கு துன்பம் வராமல் தடுத்தல் என்று சொல்ல வில்லை. துன்பத்தை பொறுத்தல் என்றார்.

ஏன் ?

துன்பம் எப்போது வரும் ? முயற்சி செய்தால் துன்பம் வரும். உடல் உழைக்க வேண்டும், அசதியும் சோர்வும் வரும். சோம்பிக் கிடந்தால் துன்பம் வராது. அது தவம் இல்லை. உழைப்பு தவம். செயல் தவம்.


தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள் என்றால் இன்பங்களை வேண்டி முயற்சி செய்பவர்கள் அவற்றை அடைவார்கள். ஒவ்வொரு தேவதையும் ஏதோ ஒரு நல்லது செய்வதற்கு தானே இருக்கிறது. அவற்றை நோக்கி விரதம் இருப்பவர்கள் அந்த நன்மையை பெறுவார்கள்.

சிலருக்கு பொருகள் மேல் ஆசை. வீடு, மனை, நகை, பணம், சொத்து என்று பலவித ஆசைகள். இவற்றை அடைய முயற்சி செய்பவர்கள் அதை அடைவார்கள்.

பித்ருக்களை என்று சொல்லும் போது பழமை, சாஸ்திரம், சம்பிரதாயம் இவற்றை கடை பிடிக்க முயற்சி செய்வோர் அதை அடைவார்கள்.

என்னை நோக்கி தவம் செய்பவர்கள் என்னை அடைவார்கள்.

சுருக்கமாக சொல்வது என்றால் எது வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்கிறார்களோ அவற்றை அடைவார்கள்.

சரி, அதனால் என்ன ?

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருக்கக் காரணம் என்ன ?

உழைப்பதற்கு பெரும்பாலோனோர் தயார்தான். உழைக்கவும் செய்கிறார்கள்.

ஆனாலும் பெரிய வெற்றிகளை பெறுவது இல்லை.

ஏன் ?

நம்மால் இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லை.

மாதம் ஐந்து ஆயிரம் சம்பாதிப்பவன் மிஞ்சி மிஞ்சி போனால் பத்து ஆயிரம் பற்றி சிந்திப்பான், ஒரு இலட்சம் சம்பளம் என்று சிந்திக்க மாட்டான்.

கீதை சொல்கிறது, நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ அதை நீங்கள் அடைய முடியும்.

இன்பம், செல்வம், ஞானம் ஏன் இறை நிலையைக் கூட அடைய முடியும்.

இருக்கின்ற வாழ் நாளோ கொஞ்ச நாள்தான்.

இந்த நாளில் எது வேண்டி தவம் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

எது கேட்டாலும் கிடைக்கும் என்றால் ஏன் சின்னவற்றை கேட்க்க வேண்டும்.

பெரிதாக கேட்போமே.

பெரிதாக சிந்திப்போமே.

என்னை அடைவார்கள் என்று கண்ணன் சொல்லுவது ஏதோ அவர் கிட்ட போய் நிற்பது அல்ல.

என் நிலையை அடைவார்கள்.

அது என்ன நிலை - தன்னைத் தான் அறிந்த  நிலை, பற்றற்ற நிலை, அன்பும், கருணையும், நிறைந்த நிலை . அந்த நிலையை அடைய முடியும்.

இதை சற்று மாத்தி யோசிப்போம் ?

நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் ?

இதைத்தான் நீங்கள் விரும்பி தவம் செய்தீர்கள். எனவே அதை  அடைந்தீர்கள்.

எதை நோக்கி விரதம் செய்தாலும் அது கிடைக்கும் என்றால், எது கிடைத்ததோ அது விரதத்தின் பலன்.

நீங்கள் புத்திசாலியாக, ஆரோக்கியமானவராக, குண்டாக, ஒல்லியாக, முட்டாளாக, நல்லவராக, கெட்டவராக எப்படி இருந்தாலும் அது பிறவியில் வருவது இல்லை. நீங்கள் விரதம் இருந்து, தவம் செய்து பெற்றது.

வேறு யாரையும் குறை சொல்லாதீர்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் ஆக்கிக் கொள்ளலாம்.

அடிப்படையான புலன் இன்பங்கள், பொருள்கள், ஞானம், இறை நிலை என்று எது வேண்டுமோ அதைப் பெறலாம்.

பிறவி அல்ல.

முன் ஜன்மம் அல்ல.

உங்கள் செயல். தவம். விரதம் காரணம்.

சில பேர் விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த விரதம், இந்த விரதம், அந்த நோன்பு, இந்த நோன்பு என்று.

சாப்பிடாமல் இருந்தால் வேண்டியது கிடைக்குமா ?

விரதம் என்றால் என்ன ?

அடுத்த ஸ்லோகத்தில் சிந்திப்போம்.







Wednesday, April 9, 2014

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 2

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 2



अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||


அஹம் =  நான்

ஹி = நிச்சயமாக

ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்


நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .

இன்பம் என்பது வெளியில் இருக்கிறதா அல்லது நமக்குள் இருக்கிறதா ? 

நல்ல உணவை ருசிக்கும் போது கண்ணை மூடிக் கொண்டு "அடடா என்ன ஒரு  சுவை என்கிறோம் "

நல்ல இசையை கேட்கும் போது நம்மை அறியாமலேயே நம் கண்கள் மூடிக் கொள்கின்றன....

இன்பத்தின் அனுபவம் உள்ளே நிகழ்கிறது...

ஒரு காலகட்டத்தில் இன்பம் என்று நினைத்தது இன்னொரு சமயத்தில்  இன்பமாக  இருப்பது இல்லை.

சிறு வயதில் கோலியும் , பம்பரமும், பட்டமும் இன்பம்  தந்தன.வயதான  காலத்தில்  அதில் இன்பம் இல்லை.

இன்று இன்பம் தருபவை நாளையும் தரும் என்பது நிச்சயம் இல்லை.

மாறும்.

அது போலத் தான் துன்பமும்.

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. நமக்குள், நம்மால் நிகழ்கின்றன.

இராஜ்ஜியம் தந்த போது பெரிய இன்பம் இல்லை - இராமனுக்கு

கானகம் போ என்று சொன்ன போதும் பெரிய துன்பம் இல்லை.

ஏன் ?

எப்படி முடிந்தது ?

இன்பம் இராஜியத்தில் இல்லை

துன்பம் கானகத்தில் இல்லை.

இன்பமும் துன்பமும் தனக்குள்  இருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். எனவே இன்பத்திலும் துன்பத்திலும் சலனம் இல்லை. 

"அனைத்து வேள்விகளின் பலனை நானே பெறுகிறேன். இதை அறியாதவன் வீழ்வான் "

இன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த அலைச்சல்

துன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த கவலை

இதை அறியும் போது மனம் இலேசாகிப் போகிறது.

வாழ்க்கை எளிதாகிப் போகிறது.

யாரோடும் கோபம் இல்லை. போராடும் வேலை இல்லை.

சிந்திப்போம்.


Tuesday, April 8, 2014

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1 


अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||


அஹம் =  நான்

ஹி = நிச்சயமாக

ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும் 
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்


நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .

கண்ணன் சொல்கிறான் "நானே வேள்விகளின் பலன்களை பெற்றுக் கொள்பவன்  (அவிர் பாகத்தை உண்பவன்)"  என்று.

இது என்ன புதுச் சிக்கலாக இருக்கிறது.

வேள்வி செய்வது நாம். அதன் பலன் நமக்குத்தானே வர  வேண்டும். யாரை நோக்கி  வேள்வி செய்கிறோமோ அவர்களுக்கு போகும் என்றால் பின் நமக்கு என்ன  கிடைக்கும் ?

நல்ல கேள்வி.

சற்று வார்த்தைகளை மாத்திப் போடுவோம்.

நானே அனைத்து  வேள்விகளிலும்  பலனைப் பெற்றுக் கொள்கிறேன் என்று  வாசிப்போம். "அனைத்து" என்ற வார்த்தையை வேள்விக்கு முன்னால் போடுவோம்.

என்ன அர்த்தம் ?

யாரை நோக்கி வேள்வி செய்தாலும், யார் எந்த வேள்வியை, யாரை நோக்கி, எந்த தெய்வத்தை  நோக்கி, எதற்க்காக செய்தாலும், நானே அதன் பலன்களை பெறுகிறேன்.

அதாவது அனைத்து வேள்விகளும் என்னைக் குறித்தே என்று சொல்கிறான்.

அனைத்து வேள்விகளின் பலன்களும் எனக்கே வந்து சேருகிறது என்கிறான் கண்ணன்.

எந்த கடவுளை வணங்கினாலும் , பூஜை செய்தாலும், வேள்வி செய்தாலும், அது   என்னைக் குறித்தே என்கிறான் கண்ணன்.

இது சரியான அர்த்தமா ?

அது அப்படியே ஒரு  இருக்கட்டும்.

நமக்கு உடல் நிலை சரி இல்லை. ஒரு மருத்துவரிடம் போகிறோம். அவர் சில  சிகிச்சை முறைகளை  சொல்கிறார்.நமக்கு சந்தேகம், அது சரிதானா என்று.  இன்னொரு மருத்துவரிடம் சென்று இரண்டாவது யோசனை கேட்க்கிறோம். எத்தனை  மருத்தவரிடம் கேட்டாலும்,  சிகிச்சையின் பலன் நமக்குத்தானே. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு  தேவதை.ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வேள்வி. எப்படி நடந்தாலும், பலன் "எனக்குத் தான்".


என்னனவோ இன்பங்களை அனுபவிக்கிறோம். நல்ல உணவு, இனிய இசை, உடை, உறவுகள், நறுமணம் என்று அத்தனை இன்பங்களையும் விரட்டி விரட்டி  அனுபவிக்கிறோம். இன்பங்கள் பல வகை, அதை அனுபவிக்கும் விதங்களும்  பலவகை....இருந்தாலும் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது நாம் தானே ?

ஓடி ஆடி பணம் சம்பாதிக்கிறோம், அதை முதலீடு செய்கிறோம். அதன் பலன்களை   பெறுகிறோம்.எங்கெங்கோ வேலை என்று அலைகிறோம் . யார் யாரிடமோ சென்று  நிற்கிறோம்.  போராடுகிறோம். பலன்களைப் பெறுகிறோம். கடைசியில் இத்தனை போராட்டங்களைச்  (வேள்விகளும்) செய்தாலும், அதன் பலனை அனுபவிப்பது "நாம்" தானே.

இன்பம் நூறு வழியில் வரலாம்.

அதை அடைய பல வழிகள் இருக்காலாம்.

அதற்காக பல போராட்டங்கள்  நடக்கலாம்.

கடைசியில் அனைத்தையும் அனுபவிப்பது யார் ? - நாம்.

இது புரியாவிட்டால் நாம் அலைந்து கொண்டே  இருப்போம்.

இதைத்தான் கண்ணன் சொல்கிறான் , இதை மனிதர்கள் அறிய மாட்டார்கள், அறியாமல்  வீழ்வார்கள் என்று.

நான் என்பதை அறிந்து கொண்டால் இந்த வீழ்ச்சி  இருக்காது.

எது எனக்கு இன்பம் தருகிறது ?

ஏன் அந்த இன்பம் எனக்கு வேண்டும் ?

இதற்கு முன்னால் இந்த மாதிரி இன்பத்தை நான் அனுபவித்தது இல்லையா ?

அந்த இன்பத்தை முன் அடைந்த பின் என்ன ஆயிற்று ?

ஏன் மீண்டும் அதன் பின் அலைகிறேன் ?

இந்த இன்பத்தின் கூடவே வரும் துன்பன்கள் என்னென்ன ?

இவற்றை அறியாத மனிதன் வீழ்வான்.

இன்னும் இதில் அறிய வேண்டியது இருக்கிறது...

மேலும் சிந்திப்போம்....




Monday, April 7, 2014

கீதை - 9.23 - எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே

கீதை - 9.23 - எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே 


येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥९- २३॥

யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||

யே = அவர்கள்
அபி = மேலும்
அன்ய = வேறு
தே³வதா = தேவதைகளை
ப⁴க்தா = பக்தர்கள்
யஜந்தே = வணங்குபவர்கள்
ஸ்²ரத்³த⁴யாந்விதா:  = நம்பிக்கையுடன்
தே = அவர்கள்
பி = மேலும்
மாம் = என்னையே
எவ = மட்டும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யஜந்த்யதி = (அவர்கள்) வணங்குகிறார்கள் 
அவிதி⁴பூர்வகம் = தவறான வழியில்

மற்ற அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் வணங்குபவர்களும் , தவறான வழியில் என்னையே தொழுகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு குறிக்கோள். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிக்கோள்.

படிக்கிற காலத்தில் நல்ல மதிப்பெண் வேண்டுமே என்று,
படித்து முடித்த பின், நல்ல வேலை வேண்டும்,
பின் நல்ல துணை வேண்டும்,
பின் நல்ல குழந்தைகள் வேண்டும்,
பின் அவைகளுக்கு படிப்பு, வேலை, திருமணம்,
பின் வாழ்க்கை பற்றிய சிந்தனை, மூப்பு, மோட்சம், பிறவியில் இருந்து விடுதலை என்று எண்ணங்களும் குறிக்கோள்களும் மாறிக் கொண்டே  இருக்கின்றன.

எது தான் நிரந்தரம் ? எதுவும் இல்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை தேடி, அலைகிறோம்.

அந்த தேடல் நிறைவேற வேண்டுமே என்று ஏங்குகிறோம்.

நிறைவேறும் என்று நம்புகிறோம்.

அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.

நீங்கள் எதை நம்பினாலும், அவை எல்லாம் ஒன்றுதான்.


பொருள்களுக்குள் வேறு பாடு இல்லை - புரிகிறது
மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை -   புரிகிறது.

நம்பிக்கைகளுக்குள்ளும் வேறு பாடு இல்லை - எல்லா நம்பிக்கைகளும் ஒன்று தான்.

ஜாதி மத வேறு பாடு இல்லை.

பணக்காரன் ஏழை வேறுபாடு இல்லை

இளையவன் முதியவன் என்ற வேறுபாடு இல்லை

எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒன்றைப் பற்றிதான்.

"வேறு வேறு தெய்வங்களை தொழுதாலும், தவறான வழியில் என்னையே தொழுகிறார்கள்"

யார் எதை வழி பட்டாலும், அது என்னையே வழி படுவதற்கு சமம்.

அது எப்படி எல்லா வழிபாடுகளும், நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?

பணம் வேண்டுபவனும், பதவி வேண்டுபவனும், அதிகாரம் வேண்டுபவனும், முக்தி  வேண்டுபவனும், இறைவனை அடைய வேண்டும் என்று விரும்புவனும்  - அவற்றை அடைய வேண்டி காரியங்களை செய்து, அவை கிடைக்கும் என்று நம்புகையில், எப்படி எல்லா நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?

பின் வரும் சுலோகங்களில் அதை விளக்குகிறார் வியாசர்....

நம்புங்கள்....

Sunday, April 6, 2014

கீதை - 9.22 - செயலில் பக்தி

கீதை - 9.22 - செயலில் பக்தி


अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥९- २२॥

அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||

அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||

அநந்யா =  வேறு ஒன்றிலும்

சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்

மாம் = என்னை

யே = அவர்கள்

ஜநா:  = மக்கள்

பர் உபாஸதே  = முறையுடன் உபாசித்து

தேஷாம் = அவர்களின்

நித்யா = எப்போதும்

அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்

யோக³ = தேவைகளை

க்ஷேமம் = பாதுகாத்து

வஹாம்ய = பொறுப்பு

அஹம் = நான்




வேறு எந்தவித நினைப்பும் இன்றி என்னையே  வழிபடுவோர், அந்த நித்திய யோகிகளின் தேவைகளையும், பாதுகாப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

யோக க்ஷேம - என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் சொல்கிறார்கள். நன்மை தீமை என்று ஒரு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது பக்தர்களின்  நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பு என்ற அர்த்தத்தில். அது அவ்வளவு  சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. நன்மை சரி. தீமை ?


இன்னொரு அர்த்தம் - அவர்களின் தேவைகளைத் தந்து, அவர்களிடம் இருப்பவற்றை பாதுகாக்கிறேன் (protection ).


இந்த ஸ்லோகத்தை மேலோட்டமாக பார்த்தால் இது ஏதோ , கிருஷ்ணன் நமக்கு வேண்டிய  குளிர் சாதன பெட்டி, தொலை காட்சி பெட்டி, கணணி போன்ற பொருள்களை தந்து அவை நல்ல படியாக செயல் படவும், அதை வேறு யாரும்  திருடிக் கொண்டு போகாமல் இருக்கவும் உதவி செய்வான் என்று சொல்வது  போல  இருக்கிறது.


நடக்கிற காரியமா ? வியாசர் அப்படி சொல்வாரா ?

அப்படி அல்ல பொருள்.

நாம் எப்படி வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்று சொல்லித் தருகிறது இந்த சுலோகம்.

நாம் எந்த காரியத்தை செய்தாலும், அதில் வெற்றி பெற, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறது.


நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை பாதிக்கிறது. நம்மை மாற்றுகிறது.

அப்படி என்றால் காரியங்களை சிறப்பாகச் செய்தால் நம்மிடம் நல்ல பாதிப்பு இருக்கும். ஏனோ தானோ என்று செய்தால், அதன் பாதிப்பும் அப்படித்தான் இருக்கும்.

காரியங்களை செய்வதன் மூலம் நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்.

பக்தி யோகம் , கர்ம யோகத்துடன் இணையும் சுலோகம் இது.

செய்யும் காரியத்தை பக்தியுடன் செய்யலாம்.

எப்படி ?

மூன்று படிகள்.

முதலாவது:

"வேறு ஒன்றிலும் மனதைச் செலுத்தாமல்": (concentration ). ஒரு காரியத்தை செய்யத் தொடங்கிவிட்டால் வேறு எதிலும் மனதைச் செலுத்தக் கூடாது. எடுத்த காரியத்திலேயே கவனம் முழுவதும் இருக்க வேண்டும். படிப்பு என்றால் படிப்பில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். வேலை என்றால் அதில் மட்டும் கவனம். ஒன்றை செய்யும்போதே மற்றொன்றில் மனம் தாவக் கூடாது.

இரண்டாவது,


"முறையுடன் உபாசித்து" : ("Completely engaged "): உபாசனை என்றால் இலயித்தல். அதோடு ஒன்றி. அது வேறு தான் வேறு என்று இல்லாமல், அதனோடு இணைந்து விடுவது. மனமும், உடலும், சிந்தனையும் செய்யும் வேலையில் இணைந்து செயல் படுவது.

மூன்றாவது,

"பக்தியுடன்" (Devotion ): செய்யும் வேலையில் ஒரு அர்ப்பணிப்புடன் செய்தால் அந்த வேலை வெற்றிகரமாக முடிவது மட்டும் அல்ல, அந்த வேலை நம் மீது ஒரு சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

பொதுவாக நாம் எப்படி வேலை செய்கிறோம் ?

ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும் போதே   முதலில் அதில் ஒரு சந்தேகம். இது சரிதானா, இதை நாம் செய்ய முடியுமா என்று .

பின் குழப்பம் , இதை விட அது சிறந்ததா, அப்படி  செய்யலாமா,இப்படி செய்யலாமா என்று குழப்பம்.

பின்  பயம், சரியாக வருமா, வராவிட்டால் என்ன செய்வது என்று.

பின் ஆசை, சரியாக வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று.

இப்படி ஆயிரம் சலனங்களுக்கு நடுவே நாம் காரியம் செய்கிறோம்.

கீதை சொல்கிறது

- ஒன்று பட்ட சிந்தனையுடன்
-   முழுமையாக ஈடுபட்டு
- ஒரு அர்ப்பணிப்பு மன நிலையில் இருந்து செயல் பட வேண்டும் என்கிறது.

சரி, அப்படி செய்தால் என்ன கிடைக்கும் ?





Saturday, April 5, 2014

கீதை - 9.21 - பூஜையின் பலன்கள் கால எல்லைக்கு உட்பட்டது

கீதை - 9.21 - பூஜையின் பலன்கள் கால எல்லைக்கு உட்பட்டது 


ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥९- २१॥

தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||

தே  = அவர்கள்
தம் = அதை
பு⁴க்த்வா = அனுபவித்து
ஸ்வர்க³லோகம் = சுவர்க்க லோகத்தை
விஸா²லம் = பரந்து விரிந்த
க்ஷீணே = தீர்ந்த பின்
புண்யே = புண்ணியங்களின் பலனாக
மர்த்யலோகம் = இறக்கும் உலகமான இந்த பூமியில்
விஸ²ந்தி = மீண்டும் வருகிறார்கள் 
ஏவம் = இப்படி
த்ரயீ = மூன்று (வேதங்கள் ?)
த⁴ர்மம் = தர்மங்களை
அநுப்ரபந்நா = கடைப்பிடித்து
க³தாக³தம் = இறந்து பிறந்து
காமகாமா = உலக பொருள்களில் பற்று வைத்து
லப⁴ந்தே = அடைகிறார்கள்

பரந்து விரிந்த வானுலகில் இன்பமாக வாழ்ந்து, செய்த புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மறுபடிம்,  அழிவுடைய இந்த பூலோகத்திற்கு திரும்புகிறார்கள். இப்படி மூன்று வித்தைகளில் (வேதங்கள் ?) தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

முந்தைய ஸ்லோகத்தில், எப்படி யாகங்கள் செய்து, பாவங்கள் விலக்கி , மூன்று வித்தைகளை  அறிந்தவர்கள் எப்படி விண்ணுலகை அடைந்து இன்பம் அடைகிறார்கள் என்று  பார்த்தோம்.

அது தான் கீதை காட்டும் வழியா ?

யாகங்கள் செய்து சுவர்க்கம் அடைய  முடியும் என்றால் பின் எதற்கு கர்ம யோகமும், பக்தி யோகமும், ஞான யோகமும் என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதை இங்கே விளக்குகிறார்.

ஆசைகள், ஆசைகள் தான். ஆசை எதன் மேல் என்றாலும், அது ஆசை தான். சாதாரண  பொருள்கள் மேல் கொள்ளும் ஆசையும் ஆசை தான். விண்ணுலகம்  வேண்டும் என்று கொள்ளும் ஆசையும் ஆசைதான். இந்த இரண்டு ஆசைகளில்  ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று வித்தியாசம் இல்லை.

வேதங்களை அறிந்து, யாகங்கள் செய்து, பாவங்கள் தவிர்த்து, தூய்மையாகி விண்ணுலகை  ஆசைப் படுவோர், அதை அடைவார்கள்.

என்ன பிரயோஜனம் ?

விண்ணுலகை அடைந்தாலும், செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் மீண்டும் இங்கே  வந்து பிறப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து இந்த  சுழலில் இருந்து விடுபட மாட்டார்கள்.

பொருள் வேண்டி, சுகம் வேண்டி, பூஜை செய்வதை கீதை ஏற்றுக் கொள்ளவில்லை  என்று தான் சொல்ல வேண்டும்.

சுவர்க்கமே அடைந்தாலும், பின் கொஞ்ச காலம் கழித்து மீண்டும், புண்ணிய பலன்கள் தீர்ந்த  பின், மீண்டும் இங்கே வந்து தான் தீர வேண்டும்.


அதாவது, அனைத்து பூஜைகளும்,  சடங்குகளும் தரும் பலன்கள்  ஒரு கால எல்லைக்கு  உட்பட்டவை. அவை நிரந்தர தீர்வு அல்ல.

யோசித்து பாருங்கள், சுவர்க்கம் சென்று, அதன் இன்பங்களை அனுபவித்து, பின்  மீண்டும் இங்கு வருவது என்றால் எவ்வளவு கடினம் என்று.

எல்லா பூஜைகளும் கொஞ்ச காலம் பலன் தரும், பின் தீர்ந்து போகும். மீண்டும்  பழைய கவலைகள், சிக்கல்கள் தான்.

கீதை "சுவர்க்கம் அடைந்து, அதன் இன்பங்களை அனுபவித்து " என்று சொல்வதை  ஒரு குறியீடாகக் கொள்ளலாம்.

யாகம், வேள்வி, பாவம் தவிர்த்து என்பது பூஜையின் உச்சம்.

சுவர்க்கம் அடைவது என்பது பலன்களின் உச்சம்.

எவ்வளவுக்கெவ்வளவு பூஜை செய்கிறோமோ, அவ்வளவுக்களவு பலன் கிடைக்கும்.

சரி, புரிகிறது.

பூஜையின் பலன்கள் ஒரு கால எல்லைக்கு உட்பட்டது என்று புரிகிறது.

வேறு வழி தான் என்ன ?

சிந்திப்போம்.


Friday, April 4, 2014

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும்

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும் 


त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥९- २०॥

த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||


த்ரை வித்³யா = மூன்று வித்தைகள்.  இதை மூன்று வேதங்களை அறிந்தவர்கள் என்று பொருள்  சொல்கிறார்கள்.ஏன் மூன்று வேதங்கள், ஏன் நாலாவது வேதம் இல்லை ?

மாம் = என்னை

ஸோமபா:  = சோம பானம் அருந்தி

பூத = தூய்மை அடைந்து

பாபா = பாவங்களில் இருந்து

யஜ்ஞை = வேள்விகளில்

இஷ்ட்வா = வணங்கி

ஸ்வர்க³திம் = சுவர்க + கதி = விண்ணுலக வழி 

ப்ரார்த²யந்தே = பணிவுடன் 

தே = அவர்கள்

புண்யம் = புண்ணியம்

ஆஸாத்³ய = அடைகிறார்கள்

ஸுரேந்த்³ர = இந்திரனின்

லோக = உலகம்

அ ஸ்²நந்தி = அனுபவிக்கிறார்கள்

தி³வ்யா = வானுலக

தி³வி = சொர்கத்தை

தே³வபோ⁴கா³ந்  = தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்


சோம பானம் அருந்தி,  பாவம் அகன்றோர் , மூன்று வித்தைகளை (வேதங்களை ?) அறிந்தோர், என்னை வேள்விகளால் வணங்கி வான் உலகைத் தர வேண்டுகின்றனர் . அவர்கள்,  புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து வானுலகில்  திவ்யமான தேவ போகங்களைத் அனுபவிக்கிறார்கள்.

சோம பானம் அருந்தி - இந்த சொற்றொடர் மிகுந்த சர்ச்சைக்குள்ளான ஒன்று. கீதை  "தண்ணி" அடிக்கச் சொல்கிறது. அந்த காலத்தில் முனிவர்கள் "சோம பானம் " குடித்தார்கள். குடிப்பது பாவம் இல்லை. சொல்லப் போனால் அது ஒரு பிரசாதம். என்றெல்லாம் மக்கள் சொல்லத் தலைப் பட்டார்கள்.

தகுதி இல்லாதவனுக்கு உயர்ந்த விஷயங்களை சொல்லக் கூடாது. சொன்னால் அவன்  அதை கீழ்மை படுத்துவான். உயர்ந்த விஷயங்களை தன்னுடைய  கீழ் நிலைக்கு கொண்டு வருவான் என்று நம் முன்னவர்கள் சொல்லி இருந்தார்கள்.

அந்த காலத்தில் உயர்ந்த விஷயங்கள் எல்லோருக்கும் சொல்லப் படுவது இல்லை. அது குலம் பற்றியது இல்லை. தகுதி பற்றியது.

நீண்ட யாகங்கள் செய்த பின், யாக குண்டத்தின் அனலின் முன்னாள் நீண்ட நேரம் இருந்த பின் , யாகம் முடிவுற்றும் நேரத்தில் சோம பானம் என்ற அந்த   பானத்தை  சிறிது உட்கொள்வார்கள் - ஒரு பிரசாதம் மாதிரி.

சோம பானம் அருந்தி என்றால், யாகம் நிறைவு பெற்றது என்று பொருள்.

இன்றைய வழக்கில் சொல்வது என்றால், "தட்சிணை வாங்கிச் சென்றார்கள் " என்று சொல்லலாம். தட்சிணை வாங்கிச் சென்றார்கள் என்றால் செய்ய வேண்டிய  சடங்குகளை நல்ல விதமாக செய்து முடித்தார்கள் என்று பொருளே தவிர, தட்சிணை வாங்குவது மட்டும்தான் அதன் அர்த்தம் அல்ல.

இங்கே நாம் பார்க்க வேண்டியது, சோம பானம் அருந்துவதைப் பற்றி அல்ல. பின் என்ன  நடந்தது என்பது தான்.

"தூய்மை அடைந்து" "பாவங்களில் இருந்து விலகி" : இந்த இரண்டும் நிகழ்கிறது.  சோம பானம் ஒரு போதைப் பொருள் என்றால் எவ்வாறு தூய்மை  அடைவது ? எவ்வாறு பாவங்களில் இருந்து விலகுவது ?

மேலும்

"வேள்விகள் மூலம்" : எனவே வேள்வியின் முடிவில் சோம பானம் அருந்தி, தூய்மை  அடைந்து, பாவங்களில் இருந்து விலகி என்று நாம் அறிய முடியும்.

யார் இவற்றைச் செய்கிறார்கள்: மூன்று வித்தைகளில் விற்பனர்கள். அவர்கள் படித்தவர்கள். அறிஞர்கள். அவர்களுக்குத் தெரியாதது அல்ல.

எதற்காக வேள்வி செய்கிறார்கள்: சொர்க்கம் வேண்டும், வானுலகம் வேண்டும், தேவ போகங்கள் வேண்டும் என்று வேள்வி செய்கிறார்கள்.

இது என்ன கீதை வேறு வழியில் செல்வது போல இருக்கிறதே ?

கர்ம யோகம், ஞானயோகம், பக்தி யோகம் என்று சொல்லிக் கொண்டு வந்த கீதை  இப்போது என்னடா என்றால் பூஜை, புனஸ்காரங்களில் இறங்கி விட்டதே.

யாகம் செய்தால் இந்திர உலகம் கிடைக்கும் என்றால் எதற்கு கஷ்டப் பட்டு  கர்ம யோகம்  செய்ய வேண்டும், எதற்கு பக்தி செய்ய வேண்டும், எதற்கு ஞானத்தை  தேடி அலைய வேண்டும் ?

சில பல யாகங்களை செய்து பலனை அடைந்து  விடலாமே.இது மிக மிக எளிமையான  வழியாக இருக்கிறதே என்று மக்கள் நினைக்கலாம்.

நினைப்பார்கள்.

கீதையை முழுமையாக படிக்காமல் , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில  ஸ்லோகங்களை படித்து விட்டு, சில சமயம் ஒரு சில வார்த்தைகளை  படித்து விட்டு, இது தான் கீதை சொல்கிறது என்று செய்யத் தலைப் பட்டு விடுகிறார்கள்.  அது தவறு.

இந்த யாகம், பூஜை, இவற்றைப் பற்று கீதை என்ன சொல்கிறது என்று அடுத்த  ஸ்லோகத்தில்  மேலும் சிந்திப்போம்.


Thursday, April 3, 2014

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும்

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும் 


तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥९- १९॥

தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||

தபாமி = வெப்பத்தை தருவது 
அஹம் = நான்
அஹம் = நான்
வர்ஷம் = மழை
நிக்³ருஹ்ணாமி  = நிறுத்தி வைக்கிறேன்
யுத்ஸ்ருஜாமி = அனுப்புகிறேன் 
ச | = மேலும்
அம்ருதம் = சாகா நிலை
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ம்ருத்யு = இறப்பு 
ச = மேலும்
ஸத் = உள்ளதும்
அஸத் = இல்லாததும்
சா = மேலும்
அஹம் = நான்
அர்ஜுனா = அர்ஜுனா



நான் வெப்பம் தருகிறேன்; மழையை நான் தடுத்து நிறுத்துகிறேன் . மழையை பெய்விக்கிறேன். நானே சாகா நிலை. நானே மரணம்.  அர்ஜுனா, உள்ளதும் இல்லாததும் நான்.

எல்லாம் ஒன்றின் வெளிப்பாடே என்று சொன்னால் நம்புவது கடினம். எப்படி எல்லாம்  ஒன்று சொல்ல முடியும் ? எல்லாம் வேறு வேறாகத் தானே இருக்கிறது ?  ஒன்று என்று சொல்லுவது, தத்துவமாக வேண்டுமானால் நன்றாக  இருக்கலாம். நடை முறைக்கு ஒத்து வராது என்றே தோன்றுகிறது.

இதை வியாசர் விளக்குகிறார்....

இந்த உலகில் அனைத்தும் தாவரங்களை சார்ந்து  இருக்கின்றன. அத்தனை உயிர்களுக்கும்  அடிப்படை உணவு. உணவு இல்லாமல் எதுவும் இல்லை.

நான் இது வரை மாமிசம் சாப்பிடாதே இல்லை. இருந்தும் என் உடலில் இவ்வளவு  மாமிசம் எங்கிருந்து வந்தது ?

நான் உண்ட உணவில் இருந்து அந்த மாமிசம் வந்தது.

இப்படி அத்தனை உயிர்களுக்கும், உடல்களுக்கும் உணவே பிரதானம்.

உணவில் இருந்துதான் அத்தனையும் வந்தது.

அந்த உணவுக்கு அடிப்படை சூரிய ஒளியும் நீரும்.

இங்குள்ள அனைத்தும் வெப்பம் மற்றும் நீரின் பல்வேறு வடிவங்கள் என்று நம்மால்  உணர முடிகிறது அல்லவா ?

கிருஷ்ணன் நானே வெப்பம் , நானே மழை என்று கூறும்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்றால் எல்லாம் ஒன்று தான், வேற்றுமை பாராட்டக் கூடாது  என்ற செய்தியை.

அதை நாம்  அறிந்து கொள்ள இது ஒரு தூண்டுகோல். 


நானே இறப்பு, நானே சாகா நிலை :  இறப்பு என்பது என்ன ? மாற்றம் தான் இறப்பு.  ஒன்று மாறும் போது என்ன நிகழ்கிறது. பழையது இறந்து புதியது பிறக்கிறது.  ஆனால், இந்த மாற்றம் நிகழும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த உலகம்  மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது இது பிறந்து பிறந்து இறக்கிறது. என்னதான்  மாறினாலும்,அதன் அடிப்படை மாறாமல் இருக்கிறது. இன்று இருப்பது , நாளை இல்லாமல் போகும். இன்றைய கோபமும் காதலும் நாளை இல்லாமல் போகும். பாசம் மாறும். வெறுப்பு மாறும். மாறாதது எதுவும் இல்லை.



உள்ளதும் இல்லாததும்:  பொருள்களும், அவற்றைப் பற்றிய நம் எண்ணங்களும் சேர்ந்ததுதான் உலகம்.  Objective  and Subjective என்று சொல்லல்லாம்.

Objective  என்பது உள்ளது.

Subjective  என்பது வெளியே இல்லாத ஒன்று. நம்  எண்ணங்கள், நம் கற்பனைகள்.


மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய சுலோகம்.

 சிந்திப்போம்.