Saturday, November 17, 2018

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே 


देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि॥३०॥

தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||


தே³ஹீ  = உடலை உடையவன்

நித்யம் = நிரந்தரமாக

அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல். அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது

அயம் = அது

தேஹே  = உடலில்

ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

தஸ்மாத் = அதனால்

ஸர்வாணி = அனைத்து

பூதாநி = உயிர்களிலும்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோசிது = கவலைப் படுவது

மர்ஹஸி = தகாது

உடலில் உள்ள அதை கொல்ல முடியாது. எனவே நீ எந்த உயிரைப் பற்றியும் கவலை கொள்வது தகாது. 

நமது சிறு வயது புகைப் படத்தைப் பார்த்தால், நாமா அது என்று ஆச்சரியப் படுவோம். அப்படி ஆச்சரியம் வரவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று பாருங்கள். இரண்டு வயது, ஒரு வயது, ஆறு மாத குழந்தை வடிவத்தைப் பாருங்கள். இப்போதுள்ள வடிவையும் பாருங்கள். ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எங்கே அந்த குழந்தை? எங்கே போய் விட்டது ? கண், காது, மூக்கு, முடி, பல் என்று எல்லாமே மாறிப் போய் விட்டதே. அதற்கும் இப்போதுள்ள உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அந்த உருவம் இறந்து போய் விட்டது தானே ?

சரி, அப்போது இருந்த மன நிலை இருக்கிறதா ? ஒரு வயதில், இரண்டு வயதில், ஐந்து வயதில், பத்து வயதில் இருந்த மனம் இப்போது இருக்கிறதா ?

உடலும் அது மாதிரி இல்லை.

மனமும் அது மாதிரி இல்லை.

அப்படி என்றால் இப்போது உள்ளது எங்கிருந்து வந்தது? ஏதாவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா?

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது.

பழையன இறந்து புதியன பிறந்து  கொண்டே இருக்கிறது.

இருந்தும் நான் என்ற அந்த ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது அல்லவா.

பத்து வயதில் உள்ள நானுக்கும், ஐம்பது வயதில் உள்ள நானுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இருந்தும் , இரண்டும் ஒரே ஆள் தான் என்று நினைக்கிறோம்.

அந்த உடம்பு காணாமலே போய் விட்டது. தேடினாலும் கிடைக்காது. இருந்தும் நான் என்பது இந்த உடம்புதான் என்று நாம் நினைக்கிறோம்.

எந்த உடம்பு ? பத்து வயது உடம்பா ? இப்போது உள்ள உடம்பா ? நாளை இருக்கப் போகும் உடம்பா ?

புரிகிறதா ?

இறப்பு என்பது ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

உங்கள் உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு நாளில் இந்த உடலும் மனமும் மாறுவது இல்லை.

அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது.

கொஞ்சம் இறந்து, கொஞ்சம் பிறந்து என்று ஒவ்வொரு நாளும் இந்த இறப்பும் , பிறப்பும் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா ? ஐயோ என் அறிவு வளர்ந்து விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ? ஐயோ என் உடல் வளர்ந்து விட்டதே என்று வருத்தம் வருமா ?

மாற்றம் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த இறப்பைக் கண்டு நீ வருத்தம் கொள்ளாதே என்கிறான் கண்ணன்.

இந்த மேலோட்டமான (உடல் மற்றும் மனம்) இறப்பிற்கு பின்னால் தொடரும் "நான்" என்ற அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

மாற்றத்தை அனுமதி.

பழைய சிந்தனைகள் மறையட்டும். புது சிந்தனைகள் பிறக்கட்டும்.

பழைய செல்கள் போகட்டும். புது செல்கள் உருவாகட்டும்.

இது புரிந்தால், மரணம் பற்றிய பயம் போகும்.

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நம் துக்கம் எல்லாம், இந்த மாற்றத்தை நாம் மறுதலிக்கும் போது தான்.

நெருங்கிய ஒருவர் இறந்து போகிறார் என்றால், நமக்கு துக்கம் வருகிறது. ஏன் ? அந்த மாற்றத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

அது முடியுமா ?

அதற்காக வருந்துவது சரி தானா ?

சரி இல்லை என்கிறான் கண்ணன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

https://bhagavatgita.blogspot.com/2018/11/230.html

Sunday, November 11, 2018

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம்

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம் 


आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்

பஸ்²யதி = பார்ப்பவன்

கஸ்²சித் = எவனோ

ஏனம் = அவன்

ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்

வத³தி= பேசுபவன்

ததா = அதைப் போல

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அந்ய: = மற்றவன்

ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்

ச = மேலும்

ஏனம் = அவன்

அந்ய: = மற்றவன்

ஸ்²ருணோதி = கேட்பவன்

ஸ்²ருத்வா = கேட்டபின்

அபி = மேலும்

ஏனம் = அவன்

வேத = அறிந்தவன்

ந = இல்லை

ச = மேலும்

கஸ்²சித் = யாரோ ஒருவன்

இதை ஆச்சரியம் என்று ஒருவன் காண்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் கேட்டபின் சொல்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் பேசுகிறான்.  இருந்தும் இதை எவனும் அறியவில்லை. 


காண்கிறான் - கேட்கிறான் - பேசுகிறான்...இந்த மூவரும் ஆச்சரியம் அடைகிறார்கள்.

ஏன் ?

காண்பதும், கேட்பதும், பேசுவதும் புலன்கள் மூலம் நிகழ்வன. உண்மை என்பது புலன்களுக்கு அப்பாற்பட்டது. காண்பதும், கேட்பதும் நிகழும் போது என்ன நடக்கிறது. நாம் ஒன்றைப் பார்க்கிறோம். அது பற்றிய செய்தி நம் மூளைக்குப் போகிறது. மூளை அது என்ன என்று ஆராய்கிறது. இது பற்றிய செய்தி மூளைக்குள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. இருந்தால், "ஹா...இது அது தான் " என்று செய்தி சொல்கிறது.

ஒரு லட்டு இருக்கிறது. அதைப் பார்க்கிறோம். லட்டின் நிறம், அளவு எல்லாம் மூளைக்குள் சென்று, இதற்கு முன்னால் லட்டைப் பத்திய செய்தியோடு ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது காண்பது லட்டு என்று சொல்கிறது. ஒரு வேளை இதற்கு முன் பார்க்காத ஒன்றாக இருந்தால் என்ன செய்யும் ? "என்னடா இது , புதுசா இருக்கே. இதுக்கு முன்னால் இப்படி ஒன்றை பார்த்ததே இல்லையே ..என்னவாக இருக்கும் " என்று ஆச்சரியப் படும்.

நாம் ஒரு உண்மையை எதிர் கொண்டால் என்ன செய்வோம் ?

நாம் நம்பும்  செய்திகளோடு அது ஒத்துப் போனால் அதை ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால், "அதெல்லாம் இல்லை, அது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று வாதிடுவோம்.  நம் அனுபவத்தில் அறியாத புதிய ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

உதாரணமாக, நீங்கள் கடவுளை நம்புபவர் என்று வைத்துக் கொள்வோம்.  "கடவுள்  இல்லை" என்று ஒரு கருத்தை உங்கள் முன் வைத்தால் "அட , இது என்ன புது கருத்தாக இருக்கிறதே. மேலே சொல்லுங்கள். ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள் " என்று ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் கேட்பது இல்லை.

"அது எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம். அப்படி என்றால் இந்த உலகைப் படைத்தது யார்" என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போக தயாராவார்கள் அல்லவா.

அப்படி இருந்தால் உண்மையை எங்கனம் அறிவீர்கள்.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

புதிது புதிதாக கருத்துகளை   எதிர் கொள்ளுங்கள். அவற்றைப் பற்றி சிந்தியுங்கள்.

அர்ஜுனனின் சிக்கல் என்ன ?

உறவினர்களை கொல்லக் கூடாது. அவர்கள் இறந்தால் இவன் வருத்தப் படுவான்  என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப் படிந்து விட்டது.

அது தவறாக இருக்கலாம் என்று கூட அவன் சிந்திக்கத் தயாராக இல்லை.

உறவு என்றால் என்ன,  எப்போது உறவுகளோடு முரண் படலாம் என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கவில்லை.

பழைய எண்ணங்களிலேயே உழல்கிறான்.

இங்கே உறவுகளை கொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

உண்மை என்ற ஒன்றை அறிய முற்பட்டுவிட்டால் உறவை தள்ளி வைத்து விட வேண்டும். ஆசா பாசாங்களுக்கு இடம் கொடுக்கக் கூடுவது.

இதில் என்னதான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு, ஆச்சரியத்தோடு அணுக வேண்டும்.

இல்லை என்றால், பழைய எண்ணங்களிலேயே கிடந்து உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான். அது நம்மை முடக்கிப் போட்டு விடும்.

மனச் சோர்வு வரும் போதெல்லாம், புதிதாக சிந்திக்க வேண்டும். வேறு என்ன செய்யலாம், வேறு எப்படி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/229.html


Thursday, November 8, 2018

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை 





अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना॥२८॥

அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||


அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது

பூதாநி = உயிர்கள்

வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது

பா⁴ரத = பாரதா


அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது

யேவ = நிச்சயமாக

தத்ர = இதில்

கா = ஏன்

பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்



அதன் ஆரம்பம் வெளிப்படாதது. அதன் நடு வெளிப்பட்டது. அதன் முடிவு வெளிப்படாதது. இதில் நீ ஏன் வருந்துகிறாய் ?


மிக அற்புதமான சுலோகம். மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

அது என்ன வெளிப்படாதது, வெளிப்படுவது?

நம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. நல்லதும் நிகழ்கிறது. நல்லது அல்லாததும் நிகழ்கிறது.

ஏன் நிகழ்கிறது என்று நமக்குத் தெரியுமா ?

விளைவுகள் தெரிகிறது. காரணம் தெரிவதில்லை.

ஆனால், ஒவ்வொரு விளைவிக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நமக்குத் தெரியும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

சில விஷயங்களுக்கு காரணம் தெரியும். அந்தக் காரணத்தால் வந்த விளைவும் தெரியும்.

அதிகமாக உண்டால் சோர்வு வரும். தூக்கம் வரும் என்று தெரியும்.

அது சின்ன விஷயம்.

நாம் ஏன் பிறந்தோம், ஏன் இங்கு பிறந்தோம், ஏன் இந்தத் திருமணம், இந்தக் குழந்தைகள் ...இப்படி ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாது.

துன்பம் வரும் போது ஏன் இப்படி நிகழ்கிறது என்று தெரியாமல் குழம்புவோம்.

இன்பம் வரும் போது அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

சரி, இன்று இப்படி இருக்கிறது.

நாளை என்ன என்று நமக்குத் தெரியுமா ? அதுவும் தெரியாது.

இன்று நடப்பவற்றின் காரணம் தெரியாது. நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.  நடுவில் இருந்து கொண்டு என்ன கவலை?

இதைத்தான் இந்த சுலோகம் சொல்கிறது.

அது முதலில் வெளிப்படாமல் இருந்தது, பின் வெளிப்பட்டது. பின் மீண்டும் வெளிப்படாமல்  போனது.

இந்த உலகம் என்பது ஒரு தொடர் அலை போல (flux) இருந்து கொண்டே இருக்கிறது.

ஆரம்பமும் தெரியாது. முடிவும் தெரியாது. நடுவில் ஒரு நாடகம் நடக்கிறது.

அது சரி, அதற்காக கவலைப் பட வேண்டிய விஷயத்துக்கு கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

நாம் கவலைப் பட்டாலும், கவலைப் படாவிட்டாலும் நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும். கவலைப் படுவது சுகம் என்றால் கவலைப் படலாம்.  சிலருக்கு கவலைப் பட்டால் ஏதோ காரியம் சாதித்த மாதிரி. கவலைப் பட்டே தளர்ந்து போய் விடுவார்கள். எனக்குத் தான் எவ்வளவு கவலை என்று சுய பச்சாதாபம் கொள்வார்கள். மற்றவர்கள் தங்களை பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். கவலைப் பட்டுக் கொண்டே காரியம் செய்யாமல் இருந்து விடுவார்கள்.

கீதை சொல்கிறது. "நீ கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை. வில்லை கையில் எடு. உன் கடமையைச் செய்" என்கிறது.

ஆனானப்பட்ட அர்ஜுனனேயே கவலை முடக்கி தேரில் உட்கார வைத்து விடுகிறது. அவ்வளவு ஆற்றலையும் வற்றச் செய்து, பலம் இழக்கச் செய்து விடுகிறது.

நாம் எம்மாத்திரம்.

கீதை சொல்லிறது. கவலைப் பட்டு ஒன்றும் ஆகாது. உலகத்தில் உள்ள அனைத்து கவலைகளும் ஒரே மருந்து கடமை என்ற ஒரு சொல்.

நாளை என்ன ஆகும் என்று தெரியாது. நம் கடமையை இன்று ஒழுங்காகச் செய்வோம்.

எல்லோரும் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தால், இந்த உலகம் எப்படி இருக்கும்?

அதுவே கீதை காட்டும் வழி.

மேலும் அந்த வழியில்  நடப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/228.html

Sunday, November 4, 2018

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ்

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ் 


जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||

ஜாதஸ்ய = பிறந்தவன்

ஹி = அதனால்

த்⁴ருவோ = நிச்சயமாக

ம்ருத்யுர் = இறப்பதும்

த்⁴ருவம் = நிச்சயம்

ஜந்ம = பிறப்பும்

ம்ருதஸ்ய = இறந்தவனும்

ச| = மேலும்


தஸ்மாத³ = அதனால்

அபரிஹார்யே = தவிர்க்க முடியாது

அர்தே = உண்மையில்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோ²சிதும் = வருந்துதல்

அர்ஹஸி = தகாது


பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 

என்றாவது மூக்கு வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் வருந்தியது உண்டா ?

என்றாவது நாம் பறவைகள் போல பறக்க முடியவில்லையே என்று மனம் வருந்தியது உண்டா ?


அப்படி யாரவது வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தால், அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஏதோ மன நிலை சரி இல்லாதவர் என்று தானே நினைப்பீர்கள்?

ஏன் அப்படி நினைகிறீர்கள் ?

ஏன் என்றால் மூக்கால் சாப்பிடுவதும், பறப்பதும் இயற்கைக்கு முரணான செயல்கள். இயற்கைக்கு முரணாக எதுவும் செய்ய முடியாது. அப்படி இயற்கையை மீறி செய்ய முடியவில்லையே என்று வருந்துவது முட்டாள்தனம் தானே?

யோசித்துப் பாருங்கள். உங்களின் எத்தனையோ வருந்தங்கள் இந்த வகையில் சேரும் என்று.

நெருங்கியவர் இறந்து விட்டார். இறப்பு என்பது இயற்கை அல்லவா?

உடம்பு சரி இல்லை. உடம்புக்கு நோய் வருவது இயற்கை இல்லையா? நோயே இல்லாத மனிதன் எங்கவாது உண்டா ?

உறவுகளில் சிக்கல். பணக் கஷ்டம். தொழிலில் தொய்வு. ஏமாற்றம். தேர்வில் தோல்வி....இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவை எல்லாம் இயற்கை அல்லவா? வாழ்கை என்றால் எல்லாம் தான் இருக்கும்.

நடக்க முடியாதது நடக்காது. எது நடக்கிறதோ அது இயற்கையானது.

இதற்காக எதற்காக வருந்துவது?

கீதையில், கண்ணன் சொன்னது இறப்பு பற்றி மட்டும் தான். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா ? நாம் தான் விரித்து பொருள் கொள்ள வேண்டும்.

சரி அதற்காக துன்பம் வந்தால் அதற்கு வருந்தாமல் இருக்க முடியுமா ? காலில் அடி பட்டால் வலிக்கத்தானே செய்கிறது. அது இயற்கை என்று வருந்தாமல் இருக்க முடியுமா?

வலி வேறு. வருத்தம் வேறு.

வலி உடல் சார்ந்தது. வருத்தம் மனம் சார்ந்தது.

வலிக்கும் தான். அதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும். மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஐயோ, காலில் அடி பட்டு விட்டதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. ஏன் இப்படி நிகழ்த்து. இதற்கு யார் காரணம். யார் மேல் கோவிக்கலாம். இனி மேல் இந்த சாலையில் வரவே கூடாது என்று மனதை போட்டுக் குழப்பிக் கொள்வது, வருந்துவது சரியா?

துன்பமோ, வலியோ, வந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். மாறாக , துன்பத்தில் வருந்தி துவண்டு போய் உட்கார்ந்து விடக் கூடாது.

அர்ஜுனன் இன்னும் போர் தொடங்கக் கூட இல்லை. யாரும் இறக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. அதற்குள் வருந்தி செயல் இழந்து விட்டான்.

அவர்களை கொன்று விட்டால் அது பாவம் இல்லையா என்று வருந்தி செயல் இழந்து நிற்கிறான்.

இறப்பு என்பது இயற்கை. போராட்டம் என்பது இயற்கை. போராடத்தான் வேண்டும். அதில் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.

சரி. போராட வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். சந்தோஷமாக இருப்பானா? மீண்டும் காட்டுக்குப் போக வேண்டும். வாழ் நாள் பூராவும் துரியோதனன் சீண்டிக் கொண்டே இருப்பான். வலியும் வேதனையும் போகப் போவது இல்லை.

வலியையும் வேதனையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என்றால் போராடித்தான் தீர வேண்டும்.

அர்ஜுனனை போர் செய்யச் சொன்னது , துரியோதனை எதிர்த்து அல்ல. அர்ஜுனனின் வருத்தத்தை எதிர்த்து. அவனின் துன்பங்களை எதிர்த்து.

வாழ்வில் துன்பம் வரும். அது இயற்கை. அதை எதிர்த்துப் போராட வேண்டும். அதை கண்டு ஓடி விடக் கூடாது.

அது தான் கீதை சொல்லும் மந்திரம்.

துன்பம் என்பது இயற்கை. அதற்காக வருந்தாதீர்கள். அதை எதிர்த்து போராடுங்கள். அதை வெற்றி கொள்ளுங்கள். வாழ்கை இனிமையாக இருக்கும்.


மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் வாசித்துப் பாருங்கள்.

சரி என்று தோன்றுகிறதா?

https://bhagavatgita.blogspot.com/2018/11/227.html 

Thursday, November 1, 2018

பகவத் கீதை - 2.26 - அப்போதும் வருந்தல் ஆகாது

பகவத் கீதை - 2.26 -  அப்போதும் வருந்தல் ஆகாது 



अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि॥२६॥

அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||

அத = அது மட்டும் அல்ல

ச = மேலும்

ஏனம் = இது

நித்யஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது

நித்யம் = எப்போதும்

வா = அல்லது

மந்யஸே = நீ நினைத்தால்

ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது

ததா = அப்படியே இருந்தாலும்

அபி = அதனால்

த்வம் = நீ

மஹாபா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே

ந = இல்லை

ஏனம் = இது

ஸோ²சிதும் = வருந்துதல்

அர்ஹசி = நீ தகாது

அது மட்டும் அல்லாமல், நீண்ட கைகளை கொண்டவனே, இது எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது இறந்து கொண்டே இருக்கிறது என்று நீ நினைத்தாலும், அதற்காக நீ வருத்தப் பட வேண்டியதில்லை.

ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு தத்துவம், கோட்பாடு, உண்மை என்று முந்தைய சுலோகங்களில் பார்த்தோம்.

சரி, கோட்பாடு, அறிவு, உண்மை என்று வைத்துக் கொண்டாலும், எது உண்மை ? எந்த கோட்பாட்டை நாம் பின் பற்றுவது? இன்று ஒன்று சரி என்று படுகிறது. கொஞ்ச நாளில் அது மாறி விடுகிறது. சரி என்று நாம் நினைத்தது தவறு என்று ஆகி விடுகிறது.

மாமிசம் உண்ணலாமா ? மது அருந்தலாமா ? பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?

சில சமயம் சில தத்துவங்கள் சரி என்று சொல்கிறார்கள். பின் அவை மறைந்து போய் வேறு ஒரு புது தத்துவம் பிறக்கிறது.

அறிவு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி வளரும் போது , பழையன கழிதலும், புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஒரே சித்தாந்ததை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது.

நேற்று வரை உறவு முக்கியம், அது பெரிய விஷயம் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தாய். அது சரியும் கூட. ஆனால் இன்று, உறவா கடமையா என்று வந்து நிற்கும் போது, உறவு பாசம் என்று குழம்பாதே. அந்தத் தத்துவம் மறைய வேண்டும்.

நம்மில் வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நாம் பழைய சிந்தனைகளை விடுத்து வளர மறுப்பது தான்.

நடை முறையில் யோசித்துப் பார்ப்போம்.

பிள்ளை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான் / ள். எத்தனை பெற்றோர்களால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது ?

சரி, காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?

பிள்ளை என்றால் இப்படி இருக்க வேண்டும், கணவன் என்றால் இப்படி, மனைவி என்றால் இப்படி என்று பல கோட்பாடுகளை நாம் வைத்து இருக்கிறோம்.

வைத்து இருப்பதில் தவறில்லை. ஆனால், அந்த கோட்பாடுகளும் நடை முறையும் முரண்படும்போது கோட்பாடுகளை மீண்டும் ஒரு முறை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

கண்ணன் சொல்கிறான் , "இவை பிறந்து கொண்டே இருந்தாலும், இறந்து கொண்டே இருந்தாலும், நீ அதற்காக கவலைப் படாதே " என்று.

உன்னை மாற்றிக் கொள். அறிவும், சிந்தனைகளும், தத்துவங்களும் மாறிக் கொண்டே இருக்கும்.

அறிவு வளரும் போது புது சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும். பழைய சிந்தனைகள் மறைந்து கொண்டே இருக்கும்.

இப்போது கூடப் பாருங்கள், ஆத்மா என்பதற்கு நான் சொல்லும் விளக்கம் வேறு விதமாக இருக்கிறது. இது ஒரு புது சிந்தனை. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். காரணம் என்ன ? இது தவறு என்பதால் அல்ல. இது நீங்கள் இதுவரை நினைத்துக் கொண்டிருந்த ஒன்றில் இருந்து வேறு படுகிறது. இதை ஏற்றுக் கொண்டால் , இது வரை சரி என்று நினைத்ததை , சரி அல்ல என்று முடிவு செய்ய வேண்டி வரும். அப்படி செய்யும் போது, ஒரு கவலை பிறக்கும். அடடா, இத்தனை ஒரு தவறான ஒரு சிந்தனையிலா நான் இருந்தேன். இருக்காது. நான் எப்படி தவறு செய்ய முடியும் ? என்று நினைக்கத் தொடங்குவீர்கள்.

குழப்பம் வரும். இது சரி போலவும் இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டால் இத்தனை நாள் செய்தது நினைத்தது தவறு என்று ஆகும். என்ன செய்வது ?

கண்ணன் சொல்கிறான், "அதற்காக நீ வருந்தாதே" என்று.

புது சிந்தனைகளை, தத்துவங்களை, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

மரண பயம் என்பது என்ன ? பழையனவற்றை விட வேண்டி இருக்குமே என்ற பயம். இறந்த காலத்தில் வாழவே நாம் விரும்புகிறோம்.

ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டே இருந்தால், ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டே இருப்போம்.

பழையது இறக்காமல் புதியது பிறக்காது.

இரண்டும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

வாருங்கள், விட்டு விடுதலையாகி அந்த சிட்டுக் குருவியைப் போல சிறகடித்துப் பறப்போம்.

வானில் பறக்க வேண்டும் என்றால், பூமியை விடத்தான் வேண்டும்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/226.html