Tuesday, October 30, 2018

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி 


अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि॥२५॥

அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||


அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத

அயம் = அது

அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத

அயம் = அது

அவிகார்யோ = மாற்ற முடியாத

அயம் = அது

உச்யதே = சொல்லப் பட்டது

தஸ்மத்  = அதனால்

ஏவம் = எனவே

விதி³த்வ = அதை அறிந்த பின்

ஏனம் = அது

ந = இல்லை

அநுஸோ²சித் = அறிந்த பின்

அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்


சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய். 


முந்திய ஸ்லோகத்தில் ஆத்மா என்று சொல்லப் படுவது ஒரு பொருள், வாஸ்து அல்ல. அது ஒரு தத்துவம், உண்மை, சத்யம், அறம் என்று பார்த்தோம்.

அது சரிதானா ? இதுவரை நாம் நினைத்து வைத்திருந்தது எல்லாம் ஆத்மா என்றால் உயிர். அது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது. உடம்பு சட்டையை மாற்றுவது மாதிரி ஆத்மா உடலை மாற்றுகிறது என்று பார்த்தோம்.

அப்படித்தான் கீதையில் முன்னால் வந்த ஸ்லோகங்கள் பொருள் தந்தன.

ஆனால் இப்போது மாறுகிறது.

இப்படிச் செய்யலாமா ? இது வாசிப்பவனை குழப்பாதா ? முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னால் படிப்பவன் குழம்பி விட மாட்டானா ?

வேறு வழியில்லை.

அறிவு அப்படித்தான் வளர முடியும்.

சின்ன வயதில் , சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்று சொல்லித் தருவார்கள். பின், கொஞ்ச நாள் கழித்து, சூரியன் உதிப்பது இல்லை, பூமி சுற்றுவதால்  சூரியன் உதிப்பது மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லக் கூடாதா ? ஏன் முதலில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்லி  விட்டு பின், சூரியன் உதிப்பது இல்லை என்று முன்னுக்கு பின்  முரணாக சொல்ல வேண்டும் ?

முதலிலேயே பூமி தன்னைத் தானே சுற்றுகிறது, மேலும் பூமி சூரியனையும் சுற்றுகிறது  என்று மூன்று வயது பையனுக்குச் சொன்னால் தலை சுற்றி, புத்தகத்தை  தலையை சுற்றி எறிந்து விட்டு ஓடி விடுவான்.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிவை புகட்ட முடியும்.


இந்த சுலோகம் சொல்கிறது

சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய்.

என்று. 

ஆத்மா என்பது ஒரு பொருள் என்றால் அது எப்படி சிந்தனைக்கு எட்டாததாக இருக்க முடியும். அது எப்படி மாறுதல் அடையாமல் இருக்க முடியும். 

எனவே, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அது திடப் பொருளோ, திரவப் பொருளோ, வாயுப் பொருளோ அல்ல. 

அப்படி என்றால் அது என்ன ?

சிந்தனைக்கும் எட்டாது. அறிந்து தெளிய முடியாது. மாறாதது.

அது ஒரு சாசுவதமான தத்துவம் என்று வைத்துக் கொள்வோம். 

அனைத்து சித்தாந்தங்களும் நம் சிந்தனைக்கு எட்டுவது இல்லை. அனைத்து சித்தாந்தங்களும்  அறிந்து தெளிந்து கொள்ள முடிவதும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் , எந்த தத்துவமும் ஏதோ ஒரு சிக்கலை, குழப்பத்தை தெளிவிக்கவே வருகிறது. அப்படி பார்த்தால், ஒரு மிகச் சிறந்த தத்துவம் அல்லது உண்மை என்பது அனைத்து துன்பத்தையும் போக்க வல்லது தானே ?

எது உண்மை? எது பொய்? எதை நாம் கை கொள்வது? வாழ்க்கையின் நோக்கம் என்ன ? வாழ்க்கையின் பலன் என்ன ? 

இதை கேள்விகளுக்கு விடை சொல்லும் தத்துவமாக அது இருக்கலாம் அல்லவா ?

ஒரு வேளை இவற்றிற்கு விடை கிடைத்து விட்டால், நாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்து விடு படுவோம்?

சரி, இந்த உண்மை , தத்துவம் என்று சொல்கிறோமே அது மட்டும் மாறாமல் அப்படியே இருக்குமா ? எவ்வளவோ தத்துவங்கள் முதலில் உண்மை என்று இருந்தாலும் பின்  தவறு என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறதே. 

அப்படி என்றால் இந்த உண்மைகளை தத்துவங்களை நாம் எப்படி நம்புவது? எதை பின் பற்றி நம் வாழ்வின் சிக்கல்களை விடுவித்து இன்பமாக இருப்பது?

அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி கூறுகிறான் கண்ணன்.

https://bhagavatgita.blogspot.com/2018/10/225.html

Monday, October 29, 2018

பகவத் கீதை - 2.24 - உண்மை

பகவத் கீதை - 2.24 - உண்மை 


अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः॥२४॥

அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது

அயம் = அது

அதாஹ்யோ = எரிக்க முடியாது

அயம் = அது

அக்லேத்³யோ = நனைக்க முடியாது

அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

நித்ய: = நிரந்தரமான

ஸர்வக³த:= எங்கும் நிறைந்த

ஸ்தா²ணு = உறுதியாக

அலோயம் = நகராத

ஸநாதந: = புராதனமானது

அதை பிளக்க உடையாது. எரிக்க முடியாது. உலர்த்த முடியாது. அது எங்கும் நிறைந்து இருப்பது. அது நகராத ஒன்று. மிகப் பழமையானது. 

இப்படியே சொல்லிக் கொண்டு போனால் இதுக்கு ஒரு முடிவே இல்லையா ? அது எதிலும் சேராது. அதில் இருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது. அதை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்த முடியாது. எங்கும் நிறைந்து இருக்கும். அது நகராது. அது பழமையானது ...என்று இப்படி அடுக்கிக் கொண்டே போனால், நம்மால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படி ஒன்று இருக்க முடியுமா என்ற சந்தேகம் வலுக்கும். அதுவும் இன்றைய அறிவியல் படிக்கும் இளைய தலைமுறைக்கு இதெல்லாம் ஏதோ புருடா மாதிரி இருக்கும்.

ஆன்மீகத்தில் ஈடு பட்டவர்கள் கூட, இது என்னது என்று சொல்ல முடியாமல் முழிப்பார்கள். அதெல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடித்து விடுவார்கள்.

அது சரியான பதில் இல்லை.

நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த மாதிரி குணங்கள் கொண்ட ஒன்று ஒரு பொருளாக இருக்க முடியாது என்று நமக்குத் தெரிகிறது அல்லவா. அது ஒரு பொருளாக இருந்தால் அதை நம்மால் அசைத்துப் பார்க்க முடியும். கையில் எடுக்கலாம். தீயில் போட்டுப் பார்க்கலாம், தண்ணீரில் முக்கி எடுக்கலாம். காயப் போடலாம். ஏதாவது செய்யலாம். இப்படி எதுவுமே செய்ய முடியாது என்றால் அது ஒரு பொருள் அல்ல  என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

சரி, பொருள் அல்ல என்றால் பின் அது என்ன ? சக்தியா ? சக்தி என்றால் அது ஒரு இடத்தில் இருந்து  இன்னொரு இடத்துக்குப் போகுமே. மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்து  இன்னொரு இடத்துக்குப் போகிறதே.

பொருளும் இல்லை. சக்தியும் இல்லை (neither matter, nor energy) என்றால் பின் அது என்ன ?

இப்படி யோசித்துப் பார்ப்போம்.

அது ஒரு உண்மை அல்லது தத்துவம் அல்லது செய்தி என்று.

உதாரணமாக, புவி ஈர்ப்பு விசை என்று ஒரு தத்துவம் இருக்கிறது. Law of Gravitation.

இப்போது மேற் சொன்ன அனைத்தையும் அதன் மேல் பொருத்திப் பார்ப்போம்.

அதை வெட்ட முடியாது.
அதை எரிக்க முடியாது.
அதை நனைக்க முடியாது.
அதை உலர்த்த முடியாது.
அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது.
அதோடு எதையும் சேர்க்க முடியாது
அது எங்கும் நிறைந்து இருக்கிறது.
அது பழமையானது.
அது நகராதது.

இப்படி அனைத்தும் அந்த தத்துவத்துக்கு பொருந்துகிறது அல்லவா.

புவி ஈர்ப்பு விசை தான் "ஆத்மா" என்று நான் சொல்ல வில்லை.

அது ஒரு உதாரணம்.

அதை இன்னும் விரித்துப் பார்ப்போம்.

எந்த ஒரு உண்மையும் இந்த பட்டியலுக்குள் அடங்கும்.

அதை அறம் என்று சொல்லுங்கள். சத்யம் என்று சொல்லுங்கள். உண்மை என்று சொல்லுங்கள். எப்படி ஆனாலும், இங்கே சொல்லப் பட்ட அனைத்து  குணங்களும்  எந்த உண்மைக்கும், அறிவுக்கும், சத்யத்துக்கும் பொருந்தும்.

அப்படி என்றால் ஏன் இங்கே "அது" என்று சொல்லப் படுவது ஒரு உண்மையை குறிக்கக் கூடாது .

ஆத்மாவை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று சொல்லுவது, உண்மையை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று வரும் அல்லவா.

இப்போது அர்ஜுனனின் சிக்கல் என்ன.

சத்தியத்தை நிலை நிறுத்துவதா? அல்லது பாசத்துக்கு இடம் கொடுப்பதா? என்பது தான்.

வாழ்வில் அனைத்து சிக்கலுக்கும் காரணம் உண்மை , சத்யம் எது என்று நாம் அறியாமல்  இருப்பது தான்.

உடல் என்றால் நோய் வரும், மூப்பு வரும், மரணம் வரும். இது நிரந்தர உண்மை. எப்போதும் உள்ளது. மாற்றம் இல்லாதது. இந்த உண்மையை நாம் மறுதலிக்கும் போது   துன்பப் படுகிறோம். உண்மைக்கு எதிராக உலகம் இருக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு நமக்கு துன்பத்தைத் தருகிறது.

எனவே, எது உண்மையோ, எது சத்யமோ அதை அறிந்து அதன் வழி சென்றால்  துன்பம் இல்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது.

ஆத்மா என்றால் ஏதோ ஜோதி, சக்தி என்றெல்லாம் அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது வந்து ஆத்மா என்றால் உண்மை, தத்துவம், சத்யம் என்று புதிதாக ஏதோ சொல்கிறாயே. கீதையில் அப்படித்தான் இருக்கிறதா ? மத்த ஸ்லோகங்கள் இதோடு ஒத்துப் போகிறதா ?

பார்ப்போமா ?

https://bhagavatgita.blogspot.com/2018/10/224.html

Sunday, October 21, 2018

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை 



नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥२३॥

நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||

ந = இல்லை

ஏனம் = இந்த

 சி²ந்த³ந்தி = வெட்டினாலும்

ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்

ந = இல்லை

ஏனம் = இந்த

த³ஹதி = எரிதல்

பாவக:|  = தீயில்

ந = இல்லை

ச = மேலும்


ஏனம் = இந்த

க்லேத³யந்த்தி = நனைவது

அபா = தண்ணீரில்

ந = இல்லை

ஸோ²ஷயதி = உலர்வது

மாருத: = காற்றில்


அதை ஆயுதத்தால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; நீரில் நனைக்க முடியாது; காற்றில் உலர்த்த முடியாது. 


நான் போன மாதம் அயல்நாடு  போய் இருந்தேன். போன இடத்தில் ஒரு உணவகத்திற்கு சென்று இருந்தேன். இன்றைய ஸ்பெஷல் என்று ஏதோ இனிப்பு பலகாரத்தின் பெயர் இருந்தது. சரி, சாப்பிட்டுப் பார்ப்போமே என்று சாப்பிட்டேன். மிக மிக சுவையாக இருந்தது. பெயர் என்னவோ வாயில் நுழையாத பாரசீகப் பெயர்.

நீங்கள்: நம்ம ஊர்ல இல்லாததா ?

நான்: நம்ம ஊர்ல இல்லாதது. அந்த நாட்டில் மட்டும் தான் செய்வார்களாம் இதை.

நீங்கள்: அப்படியா, அது எப்படி இருக்கும் ?

நான்: அது வந்து கொஞ்சம் நெளிவு நெளிவா இருக்கும்....

நீங்கள்: முறுக்கு , ஜிலேபி மாதிரியா ?

நான்: கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் ஆனால் முறுக்கு மாதிரியே அச்சு அசலா இருக்காது. மெல்லமா , மெத்துன்னு இருக்கும்.

நீங்கள்: சரி, என்ன கலர் ? மஞ்சள் கலர்ல இருக்குமா ?

நான்: இல்லை, கேசரிப் பூ கலர். அதுலயும் கொஞ்சம் நிறம் கம்மி



இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி, நீங்கள் பார்க்காத , சுவைக்காத அந்த பலகாரத்தை உங்களுக்கு விளங்க வைத்து விடுகிறேன். அதன் நிறம், சுவை, எடை, என்று அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நேரில் பார்க்கா விட்டாலும், வாயில் போட்டு சுவைக்கா விட்டாலும், அதை தெரிந்து கொள்கிறீர்கள்.

எப்படி ?

தெரிந்தவற்றில் இருந்து, தெரியாததை புரிந்து கொள்கிறீர்கள்.

புலியே பார்த்திராத ஒருவனிடம் புலி எப்படி இருக்கும் என்று சொல்லுவது?

புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனை அவ்வளவுதான் என்று சொன்னால் புரிந்து கொள்வார்.

அது போல, ஆத்மாவை நாம் பார்த்தது இல்லை.

அறிந்தவர் சொல்கிறார்.

ஆத்மா எப்படி இருக்கும்? மிக குழப்பமான கேள்வி. அதை தெளிவாக்குகிறது கீதை.

அது மிக நுட்பமானது என்று சொல்ல வேண்டும்.

நுட்பமானது என்று சொன்னால் எவ்வளவு நுட்பம் என்று கேள்வி வரும்.

கீதை சொல்கிறது "எந்த ஆயுதத்தாலும் அதை வெட்ட முடியாது"....

கத்தின் முனை எவ்வளவு கூர்மையாக இருந்தாலும். கத்தி எப்போது வெட்டும் ? அது எதை வெட்டுகிறதோ அது கத்தியின் முனையை விட தடிமனாக இருக்க வேண்டும். அப்போதுதான் கத்தி அதை இரண்டாக பிளக்க முடியும்.

அது கத்தியை விட மெல்லிதாக இருந்தால், அதனால் வெட்ட முடியாது அல்லவா ?

ஆத்மா , மிக மிக சன்னமானது. அது தடிமனானது அல்ல.

அது தீயில் எரியாது.

எந்த ஒரு பொருளும் தீயில் இட்டால் எரிந்து சாம்பலாகி விடும். ஆத்மாவும் அப்படியா என்றால் இல்லை.

தீயில் எரிவது என்றால் என்ன அர்த்தம்? ஒரு பொருளோடு, பிராண வாயு கலந்து, அந்த பொருள் அதிக சூட்டினை ஏற்று , சூடும், வாயுவும் அந்த பொருளும் சேர்ந்து வினை ஆற்றும் போது எரிதல் நிகழ்கிறது.

ஆத்மா என்பது மற்றவற்றோடு கலக்காது. பிராண வாயு, வெப்பம் என்பவை அதோடு சேராது. அது தனித்து நிற்பது.

சரி, அதை தூக்கி தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்? நீரில் கரையுமா ?

இல்லை. அது நீரில் கரையாது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நீர் தான் சார்ந்தவற்றின் நிறத்தை குணத்தைப் பெறும். செம்மண்ணில் விழுந்தால் சிவப்பு நிறம். கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நிறம்.

அது நீரில் கரையாது என்றால், ஆத்மா தான் சேர்ந்த உடலின் தன்மையைப் பெறாது என்று அர்த்தம். அது எப்போதும் தனித்து நிற்கும். உடலின் செயல்கள் அதைப் பாதிக்காது.

அதை உலர்த்த முடியாது.

உலர்த்துதல் என்றால் , ஒன்றில் இருந்து நீரை பிரித்து எடுத்தல்.

ஆத்மா என்பது பல்வேறு பொருள்களின் கலவை அல்ல. அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது. அது ஏற்கனவே பூரணமான ஒன்று. அதை குறை படுத்த முடியாது.

அதனுடன் எதையும் சேர்க்க முடியாது (கரியாது), அதில் இருந்து எதையும் எடுக்கவும் முடியாது (உலர்த்த முடியாது), அதை பாக்கவும் முடியாது (வெட்ட முடியாது) அதை அழிந்து போகவும் செய்ய முடியாது (அதை எரிக்க முடியாது)

என்று சொல்லுவதன் மூலம், கீதை ஆத்மா என்பது என்ன என்று விளக்குகிறது.

நாம் உலகில் காணும் பொருள்கள் யாவும் பல்வேறு விதமான துகள்களால் ஆனவை. ஆத்மா என்பது பிரித்து பார்க்க முடியாத ஒன்று. மூலக் கூறு,    அணு, ப்ரோட்டோன், நியூட்ரான் என்றெல்லாம் இல்லை. அது ஒன்றேதான்.

அதை மற்றவற்றோடு சேர்க்கவும் முடியாது. அதில் இருந்து எதையும் பிரிக்கவும் முடியாது.

அது அதுதான்.

தானே தொடக்கம். தானே முடிவு. தனக்குள்ளே எல்லாம் அடக்கம்.

சிந்தித்துப் பாருங்கள்.




Friday, October 5, 2018

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம்

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம் 



वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||

வாஸாம்ஸி  - உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.

ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்

யதா = எவ்வாறு

விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ

நவாநி = புதிய

க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது

நரோ = மனிதன்

அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை

ததா = அது போல

ஸ²ரீராணி = உடல்

விஹாய = அனுபவம் தீர்ந்த பின்

ஜீர்ணாந் = பழையது ஆன பின்

அந்யாநி = மற்றது

ஸம்யாதி = அடைகிறது

நவாநி = புதிய

தே³ஹீ = உடலை உடைய அது


பழைய துணிகளை போட்டு விட்டு எப்படி உடல் வேறு புதிய துணிகளை அணிந்து கொள்கிறதோ அது போல அது இந்த உடலை மாற்றி வேறு உடலை ஏற்றுக் கொள்கிறது.

மிக மிக எளிமையான சுலோகம். அதிகமான இடங்களில் மேற் கோள் காட்டப்பட்ட  சுலோகம்.


நாம் ஒருவரை பார்க்கிறோம். அவரோடு பேசுகிறோம் என்றால் யாரோடு பேசுகிறோம்? அந்த மனிதரோடா அல்லது அவர் அணிந்திருக்கும் உடைகளோடா ?

அடடா, சட்டையே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன் நிறம் மிக சிறப்பாக இருக்கிறது. நேர்த்தியாக நீ தைக்கப் பட்டிருக்கிறாய். இந்த pant க்கு நீ ரொம்ப பொறுத்தமாக இருக்கிறாய் என்று யாராவது நாம் அணிந்திருக்கும் துணிகளோடு பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் மரை கழண்டு விட்டதோ என்று நாம் நினைப்போம் அல்லவா?

அது போல, இந்த உடலை பார்த்துப் பேசினால் எப்படி இருக்கும் ?

உடம்புக்கு எப்படி இருக்கு? கொஞ்சம் எடை போட்டு இருக்கீங்க போல இருக்கு? முடி கொஞ்சம் நரைச்சு இருக்கு,  பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்று கேட்பதும் அப்படித்தான்.

ஏன்?

உடை முக்கியம் அல்ல. உடையை அணிந்திருக்கும் உடல் முக்கியம்.

உடல் முக்கியம் அல்ல, அதை தூக்கி சுமக்கும் உயிர் முக்கியம்.

நாம் எதோடு உறவு கொள்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உடையோடா? உடலோடா? உயிரோடா ?

உடை மாறும். உடல் மாறும். உயிர் மாறாது.

உடல் எப்படி உடையை மாற்றிக் கொள்கிறதோ, அது போல உயிர் உடலை மாற்றிக்  கொள்கிறது.

பழைய நைந்து போன அல்லது கிழிந்து போன சட்டைக்காக யாராவது பெரிதாக வருந்துவார்களா ? ஒரு சட்டை போனால், இன்னொன்று.

நைந்து போன உடலை வைத்துக் கொண்டு இந்த உயிர் என்ன செய்யும்?

கண் தெரியாது, காது கேக்காது, நடக்க முடியாது, மூச்சு விடுவதே சிரமம் என்று  இருக்கும் பழைய உடம்பால் யாருக்கு என்ன பயன்?

ஐயோ, இது நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது வாங்கிய சட்டை என்று அதை 40 வயதானபின் அணிய முடியுமா ?

அடுத்த முறை யாருடனாவது பேசும் போது ஒரு நிமிடம் நினையுங்கள், இவரின் இந்த உடலுக்கு பின்னால், இந்த தோற்றத்தின் பின்னால் ஒரு உயிர், ஒரு சக்தி இருக்கிறது என்று. அப்பப்ப நினைத்தால் பின்னாளில் அந்த எண்ணம் தொடர்ந்து வரும்.

நான் என்பதும், மற்றவர்கள் என்பதும் உடல் சார்ந்த ஒன்று அல்ல என்ற எண்ணம்  நிரந்தரமானால், பிறப்பும், இறப்பும், பிரிவும், சேர்தலும் புது அர்த்தம் பெறும்.

கீதை மேலும் இதை விளக்குகிறது.

கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கும். இரசித்துக் கொண்டே படியுங்கள். என்னதான் சொல்ல வருகிறது கீதை என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வாருங்கள்.

நீங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று தள்ளி நின்று பாருங்கள். அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள். அது போதும், இப்போதைக்கு.

http://bhagavatgita.blogspot.com/2018/10/222.html



Tuesday, October 2, 2018

பகவத் கீதை - 2.21 - கொல்வதும் , கொல்விப்பதும்

பகவத் கீதை  -  2.21 -  கொல்வதும் , கொல்விப்பதும் 



वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥२१॥

வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||

வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)

அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது

நித்யம் = நிரந்தரமானது

ய = அவன்

ஏநம் = இது

அஜம் = பிறக்காதது

அவ்யயம் = மாறாதது

கதம் = எவ்வாறு

ஸ = அவன்

புருஷ: = ஆள், அவன், செய்பவன்

பார்த = பார்த்தனே

கம் = எவன்

காதயதி = கொல்பவன்

ஹந்தி = கொலை செய்வது

 கம் = யார்

பிறக்காததும், என்றும் நிரந்தரமாக உள்ளதும், அழிவற்றதும் ஆன அதை கொல்பவன் யார், கொலை செய்பவன் யார் ?


கண்ணன் என்ன சொல்ல வருகிறான்? ஆத்மா அழியாதது. எனவே யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளலாமா ? அர்ஜுனனுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா ? யாராவது ஒருவன் கொலை செய்து விட்டால், அவன் கீதையை மேற்கோள் காட்டலாம். "பார் கண்ணனே சொல்லி இருக்கிறான்...ஆத்மா அழியாயாதது. அதை யாராலும் கொல்ல முடியாது....உடல் எப்படியும் அழியும். எனவே அதை கொல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் கொல்லவும் இல்லை. அவன் கொல்லப் படவும் இல்லை" என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா ?

கீதை கொலையை நியாயப் படுத்துகிறதா ?

இல்லை. இந்த ஸ்லோகத்தை அப்படி பார்க்கக் கூடாது.

நம்மிடம் உள்ள மிகப் பெரிய பயம் மரண பயம்.

மரண பயத்தின் அடி நாதம் எது. அந்த பயத்தின் மூல காரணம் என்ன?

மாற்றம். ஒவ்வொரு மரணத்திலும் ஏதோ ஒரு பெரிய மாற்றம் வருகிறது. அது நமது மரணமாக இருந்தாலும் சரி, அல்லது நெருங்கியவர் மரணமாக இருந்தாலும் சரி.

இறந்தவரின் புகைப்படத்தை பார்த்து அவரின் நினைவை தொடர்கிறோம். அவர் இறந்த தினத்தை நினைவில் வைத்து கொண்டாடுகிறோம். அவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறோம். மீண்டும் மீண்டும் அவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு கற்பனையில் மகிழ்கிறோம்.

மற்றவர்கள் நம்மை விட்டு விட்டுப் போகக் கூடாது.

நாமும் மற்றவர்களை விட்டு விட்டுப் போகக் கூடாது.

புகைப் படம் எடுத்துக் கொள்கிறோம். ஏன்?

நமக்குப் பின்னும் நம் உருவம், நம் நினைவு மற்றவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற ஆசை. மற்றவர்கள் நம்மை மறந்து விடக் கூடாது என்ற ஆதங்கம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். சிறு பிள்ளைகளை படம் எடுக்க கூப்பிட்டால் , வரமாட்டேன் என்று ஓடுவார்கள். அதே சமயம் பெரியவர்கள் அளவுக்கு அதிகமாக அதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏன், மரண பயம்.

புகழ் வேண்டும் என்று மனிதன் ஏன் அலைகிறான்? தான் இறந்த பிறகும் மற்றவர்கள் நினைவில் தான் வாழ வேண்டும் என்ற ஆசை.

கல்வெட்டு. சிலை. புகழ். புகைப்படம். எல்லாம் சாஸ்வதம் தேடி அலைவதின் வெளிப்பாடு.

இந்த பயமும், ஆசையும் நாம் இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொள்வதால்.

என்று நாம் என்பது இந்த உடல் இல்லை என்ற எண்ணம் வருகிறதோ, மரண பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.

பயமும் இல்லை. ஆசையும் இல்லை.

வாழ்க்கை மிக மிக சுகமாக எளிதாக இருக்கும்.

ஆனால், நான் என்பது இந்த உடல் இல்லை என்றால் பின் வேறு என்ன என்ற கேள்வி வரும்.

ஆத்மா என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

ஆனால், அது என்ன என்று விளக்குவது சாதாரண காரியம் இல்லை.

அந்த விளக்கத்தின் முதல் படி, இந்த சுலோகம்.

"அது பிறப்பது இல்லை. இறப்பது இல்லை. அநாதியானது. அதை கொல்ல முடியாது. அது கொல்வதும் இல்லை".

ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?

எனக்கும் தான். கண்ணனையே மேலும் கேட்போம் விளங்கும்படி.

http://bhagavatgita.blogspot.com/2018/10/221.html