Saturday, November 17, 2018

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே 


देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि॥३०॥

தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||


தே³ஹீ  = உடலை உடையவன்

நித்யம் = நிரந்தரமாக

அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல். அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது

அயம் = அது

தேஹே  = உடலில்

ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

தஸ்மாத் = அதனால்

ஸர்வாணி = அனைத்து

பூதாநி = உயிர்களிலும்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோசிது = கவலைப் படுவது

மர்ஹஸி = தகாது

உடலில் உள்ள அதை கொல்ல முடியாது. எனவே நீ எந்த உயிரைப் பற்றியும் கவலை கொள்வது தகாது. 

நமது சிறு வயது புகைப் படத்தைப் பார்த்தால், நாமா அது என்று ஆச்சரியப் படுவோம். அப்படி ஆச்சரியம் வரவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று பாருங்கள். இரண்டு வயது, ஒரு வயது, ஆறு மாத குழந்தை வடிவத்தைப் பாருங்கள். இப்போதுள்ள வடிவையும் பாருங்கள். ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எங்கே அந்த குழந்தை? எங்கே போய் விட்டது ? கண், காது, மூக்கு, முடி, பல் என்று எல்லாமே மாறிப் போய் விட்டதே. அதற்கும் இப்போதுள்ள உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அந்த உருவம் இறந்து போய் விட்டது தானே ?

சரி, அப்போது இருந்த மன நிலை இருக்கிறதா ? ஒரு வயதில், இரண்டு வயதில், ஐந்து வயதில், பத்து வயதில் இருந்த மனம் இப்போது இருக்கிறதா ?

உடலும் அது மாதிரி இல்லை.

மனமும் அது மாதிரி இல்லை.

அப்படி என்றால் இப்போது உள்ளது எங்கிருந்து வந்தது? ஏதாவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா?

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது.

பழையன இறந்து புதியன பிறந்து  கொண்டே இருக்கிறது.

இருந்தும் நான் என்ற அந்த ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது அல்லவா.

பத்து வயதில் உள்ள நானுக்கும், ஐம்பது வயதில் உள்ள நானுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இருந்தும் , இரண்டும் ஒரே ஆள் தான் என்று நினைக்கிறோம்.

அந்த உடம்பு காணாமலே போய் விட்டது. தேடினாலும் கிடைக்காது. இருந்தும் நான் என்பது இந்த உடம்புதான் என்று நாம் நினைக்கிறோம்.

எந்த உடம்பு ? பத்து வயது உடம்பா ? இப்போது உள்ள உடம்பா ? நாளை இருக்கப் போகும் உடம்பா ?

புரிகிறதா ?

இறப்பு என்பது ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

உங்கள் உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு நாளில் இந்த உடலும் மனமும் மாறுவது இல்லை.

அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது.

கொஞ்சம் இறந்து, கொஞ்சம் பிறந்து என்று ஒவ்வொரு நாளும் இந்த இறப்பும் , பிறப்பும் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா ? ஐயோ என் அறிவு வளர்ந்து விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ? ஐயோ என் உடல் வளர்ந்து விட்டதே என்று வருத்தம் வருமா ?

மாற்றம் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த இறப்பைக் கண்டு நீ வருத்தம் கொள்ளாதே என்கிறான் கண்ணன்.

இந்த மேலோட்டமான (உடல் மற்றும் மனம்) இறப்பிற்கு பின்னால் தொடரும் "நான்" என்ற அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

மாற்றத்தை அனுமதி.

பழைய சிந்தனைகள் மறையட்டும். புது சிந்தனைகள் பிறக்கட்டும்.

பழைய செல்கள் போகட்டும். புது செல்கள் உருவாகட்டும்.

இது புரிந்தால், மரணம் பற்றிய பயம் போகும்.

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நம் துக்கம் எல்லாம், இந்த மாற்றத்தை நாம் மறுதலிக்கும் போது தான்.

நெருங்கிய ஒருவர் இறந்து போகிறார் என்றால், நமக்கு துக்கம் வருகிறது. ஏன் ? அந்த மாற்றத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

அது முடியுமா ?

அதற்காக வருந்துவது சரி தானா ?

சரி இல்லை என்கிறான் கண்ணன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

https://bhagavatgita.blogspot.com/2018/11/230.html

Sunday, November 11, 2018

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம்

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம் 


आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்

பஸ்²யதி = பார்ப்பவன்

கஸ்²சித் = எவனோ

ஏனம் = அவன்

ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்

வத³தி= பேசுபவன்

ததா = அதைப் போல

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அந்ய: = மற்றவன்

ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்

ச = மேலும்

ஏனம் = அவன்

அந்ய: = மற்றவன்

ஸ்²ருணோதி = கேட்பவன்

ஸ்²ருத்வா = கேட்டபின்

அபி = மேலும்

ஏனம் = அவன்

வேத = அறிந்தவன்

ந = இல்லை

ச = மேலும்

கஸ்²சித் = யாரோ ஒருவன்

இதை ஆச்சரியம் என்று ஒருவன் காண்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் கேட்டபின் சொல்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் பேசுகிறான்.  இருந்தும் இதை எவனும் அறியவில்லை. 


காண்கிறான் - கேட்கிறான் - பேசுகிறான்...இந்த மூவரும் ஆச்சரியம் அடைகிறார்கள்.

ஏன் ?

காண்பதும், கேட்பதும், பேசுவதும் புலன்கள் மூலம் நிகழ்வன. உண்மை என்பது புலன்களுக்கு அப்பாற்பட்டது. காண்பதும், கேட்பதும் நிகழும் போது என்ன நடக்கிறது. நாம் ஒன்றைப் பார்க்கிறோம். அது பற்றிய செய்தி நம் மூளைக்குப் போகிறது. மூளை அது என்ன என்று ஆராய்கிறது. இது பற்றிய செய்தி மூளைக்குள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. இருந்தால், "ஹா...இது அது தான் " என்று செய்தி சொல்கிறது.

ஒரு லட்டு இருக்கிறது. அதைப் பார்க்கிறோம். லட்டின் நிறம், அளவு எல்லாம் மூளைக்குள் சென்று, இதற்கு முன்னால் லட்டைப் பத்திய செய்தியோடு ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது காண்பது லட்டு என்று சொல்கிறது. ஒரு வேளை இதற்கு முன் பார்க்காத ஒன்றாக இருந்தால் என்ன செய்யும் ? "என்னடா இது , புதுசா இருக்கே. இதுக்கு முன்னால் இப்படி ஒன்றை பார்த்ததே இல்லையே ..என்னவாக இருக்கும் " என்று ஆச்சரியப் படும்.

நாம் ஒரு உண்மையை எதிர் கொண்டால் என்ன செய்வோம் ?

நாம் நம்பும்  செய்திகளோடு அது ஒத்துப் போனால் அதை ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால், "அதெல்லாம் இல்லை, அது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று வாதிடுவோம்.  நம் அனுபவத்தில் அறியாத புதிய ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

உதாரணமாக, நீங்கள் கடவுளை நம்புபவர் என்று வைத்துக் கொள்வோம்.  "கடவுள்  இல்லை" என்று ஒரு கருத்தை உங்கள் முன் வைத்தால் "அட , இது என்ன புது கருத்தாக இருக்கிறதே. மேலே சொல்லுங்கள். ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள் " என்று ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் கேட்பது இல்லை.

"அது எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம். அப்படி என்றால் இந்த உலகைப் படைத்தது யார்" என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போக தயாராவார்கள் அல்லவா.

அப்படி இருந்தால் உண்மையை எங்கனம் அறிவீர்கள்.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

புதிது புதிதாக கருத்துகளை   எதிர் கொள்ளுங்கள். அவற்றைப் பற்றி சிந்தியுங்கள்.

அர்ஜுனனின் சிக்கல் என்ன ?

உறவினர்களை கொல்லக் கூடாது. அவர்கள் இறந்தால் இவன் வருத்தப் படுவான்  என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப் படிந்து விட்டது.

அது தவறாக இருக்கலாம் என்று கூட அவன் சிந்திக்கத் தயாராக இல்லை.

உறவு என்றால் என்ன,  எப்போது உறவுகளோடு முரண் படலாம் என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கவில்லை.

பழைய எண்ணங்களிலேயே உழல்கிறான்.

இங்கே உறவுகளை கொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

உண்மை என்ற ஒன்றை அறிய முற்பட்டுவிட்டால் உறவை தள்ளி வைத்து விட வேண்டும். ஆசா பாசாங்களுக்கு இடம் கொடுக்கக் கூடுவது.

இதில் என்னதான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு, ஆச்சரியத்தோடு அணுக வேண்டும்.

இல்லை என்றால், பழைய எண்ணங்களிலேயே கிடந்து உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான். அது நம்மை முடக்கிப் போட்டு விடும்.

மனச் சோர்வு வரும் போதெல்லாம், புதிதாக சிந்திக்க வேண்டும். வேறு என்ன செய்யலாம், வேறு எப்படி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/229.html


Thursday, November 8, 2018

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை 





अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना॥२८॥

அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||


அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது

பூதாநி = உயிர்கள்

வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது

பா⁴ரத = பாரதா


அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது

யேவ = நிச்சயமாக

தத்ர = இதில்

கா = ஏன்

பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்



அதன் ஆரம்பம் வெளிப்படாதது. அதன் நடு வெளிப்பட்டது. அதன் முடிவு வெளிப்படாதது. இதில் நீ ஏன் வருந்துகிறாய் ?


மிக அற்புதமான சுலோகம். மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

அது என்ன வெளிப்படாதது, வெளிப்படுவது?

நம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. நல்லதும் நிகழ்கிறது. நல்லது அல்லாததும் நிகழ்கிறது.

ஏன் நிகழ்கிறது என்று நமக்குத் தெரியுமா ?

விளைவுகள் தெரிகிறது. காரணம் தெரிவதில்லை.

ஆனால், ஒவ்வொரு விளைவிக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நமக்குத் தெரியும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

சில விஷயங்களுக்கு காரணம் தெரியும். அந்தக் காரணத்தால் வந்த விளைவும் தெரியும்.

அதிகமாக உண்டால் சோர்வு வரும். தூக்கம் வரும் என்று தெரியும்.

அது சின்ன விஷயம்.

நாம் ஏன் பிறந்தோம், ஏன் இங்கு பிறந்தோம், ஏன் இந்தத் திருமணம், இந்தக் குழந்தைகள் ...இப்படி ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாது.

துன்பம் வரும் போது ஏன் இப்படி நிகழ்கிறது என்று தெரியாமல் குழம்புவோம்.

இன்பம் வரும் போது அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

சரி, இன்று இப்படி இருக்கிறது.

நாளை என்ன என்று நமக்குத் தெரியுமா ? அதுவும் தெரியாது.

இன்று நடப்பவற்றின் காரணம் தெரியாது. நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.  நடுவில் இருந்து கொண்டு என்ன கவலை?

இதைத்தான் இந்த சுலோகம் சொல்கிறது.

அது முதலில் வெளிப்படாமல் இருந்தது, பின் வெளிப்பட்டது. பின் மீண்டும் வெளிப்படாமல்  போனது.

இந்த உலகம் என்பது ஒரு தொடர் அலை போல (flux) இருந்து கொண்டே இருக்கிறது.

ஆரம்பமும் தெரியாது. முடிவும் தெரியாது. நடுவில் ஒரு நாடகம் நடக்கிறது.

அது சரி, அதற்காக கவலைப் பட வேண்டிய விஷயத்துக்கு கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

நாம் கவலைப் பட்டாலும், கவலைப் படாவிட்டாலும் நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும். கவலைப் படுவது சுகம் என்றால் கவலைப் படலாம்.  சிலருக்கு கவலைப் பட்டால் ஏதோ காரியம் சாதித்த மாதிரி. கவலைப் பட்டே தளர்ந்து போய் விடுவார்கள். எனக்குத் தான் எவ்வளவு கவலை என்று சுய பச்சாதாபம் கொள்வார்கள். மற்றவர்கள் தங்களை பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். கவலைப் பட்டுக் கொண்டே காரியம் செய்யாமல் இருந்து விடுவார்கள்.

கீதை சொல்கிறது. "நீ கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை. வில்லை கையில் எடு. உன் கடமையைச் செய்" என்கிறது.

ஆனானப்பட்ட அர்ஜுனனேயே கவலை முடக்கி தேரில் உட்கார வைத்து விடுகிறது. அவ்வளவு ஆற்றலையும் வற்றச் செய்து, பலம் இழக்கச் செய்து விடுகிறது.

நாம் எம்மாத்திரம்.

கீதை சொல்லிறது. கவலைப் பட்டு ஒன்றும் ஆகாது. உலகத்தில் உள்ள அனைத்து கவலைகளும் ஒரே மருந்து கடமை என்ற ஒரு சொல்.

நாளை என்ன ஆகும் என்று தெரியாது. நம் கடமையை இன்று ஒழுங்காகச் செய்வோம்.

எல்லோரும் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தால், இந்த உலகம் எப்படி இருக்கும்?

அதுவே கீதை காட்டும் வழி.

மேலும் அந்த வழியில்  நடப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/228.html

Sunday, November 4, 2018

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ்

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ் 


जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||

ஜாதஸ்ய = பிறந்தவன்

ஹி = அதனால்

த்⁴ருவோ = நிச்சயமாக

ம்ருத்யுர் = இறப்பதும்

த்⁴ருவம் = நிச்சயம்

ஜந்ம = பிறப்பும்

ம்ருதஸ்ய = இறந்தவனும்

ச| = மேலும்


தஸ்மாத³ = அதனால்

அபரிஹார்யே = தவிர்க்க முடியாது

அர்தே = உண்மையில்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோ²சிதும் = வருந்துதல்

அர்ஹஸி = தகாது


பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 

என்றாவது மூக்கு வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் வருந்தியது உண்டா ?

என்றாவது நாம் பறவைகள் போல பறக்க முடியவில்லையே என்று மனம் வருந்தியது உண்டா ?


அப்படி யாரவது வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தால், அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஏதோ மன நிலை சரி இல்லாதவர் என்று தானே நினைப்பீர்கள்?

ஏன் அப்படி நினைகிறீர்கள் ?

ஏன் என்றால் மூக்கால் சாப்பிடுவதும், பறப்பதும் இயற்கைக்கு முரணான செயல்கள். இயற்கைக்கு முரணாக எதுவும் செய்ய முடியாது. அப்படி இயற்கையை மீறி செய்ய முடியவில்லையே என்று வருந்துவது முட்டாள்தனம் தானே?

யோசித்துப் பாருங்கள். உங்களின் எத்தனையோ வருந்தங்கள் இந்த வகையில் சேரும் என்று.

நெருங்கியவர் இறந்து விட்டார். இறப்பு என்பது இயற்கை அல்லவா?

உடம்பு சரி இல்லை. உடம்புக்கு நோய் வருவது இயற்கை இல்லையா? நோயே இல்லாத மனிதன் எங்கவாது உண்டா ?

உறவுகளில் சிக்கல். பணக் கஷ்டம். தொழிலில் தொய்வு. ஏமாற்றம். தேர்வில் தோல்வி....இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவை எல்லாம் இயற்கை அல்லவா? வாழ்கை என்றால் எல்லாம் தான் இருக்கும்.

நடக்க முடியாதது நடக்காது. எது நடக்கிறதோ அது இயற்கையானது.

இதற்காக எதற்காக வருந்துவது?

கீதையில், கண்ணன் சொன்னது இறப்பு பற்றி மட்டும் தான். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா ? நாம் தான் விரித்து பொருள் கொள்ள வேண்டும்.

சரி அதற்காக துன்பம் வந்தால் அதற்கு வருந்தாமல் இருக்க முடியுமா ? காலில் அடி பட்டால் வலிக்கத்தானே செய்கிறது. அது இயற்கை என்று வருந்தாமல் இருக்க முடியுமா?

வலி வேறு. வருத்தம் வேறு.

வலி உடல் சார்ந்தது. வருத்தம் மனம் சார்ந்தது.

வலிக்கும் தான். அதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும். மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஐயோ, காலில் அடி பட்டு விட்டதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. ஏன் இப்படி நிகழ்த்து. இதற்கு யார் காரணம். யார் மேல் கோவிக்கலாம். இனி மேல் இந்த சாலையில் வரவே கூடாது என்று மனதை போட்டுக் குழப்பிக் கொள்வது, வருந்துவது சரியா?

துன்பமோ, வலியோ, வந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். மாறாக , துன்பத்தில் வருந்தி துவண்டு போய் உட்கார்ந்து விடக் கூடாது.

அர்ஜுனன் இன்னும் போர் தொடங்கக் கூட இல்லை. யாரும் இறக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. அதற்குள் வருந்தி செயல் இழந்து விட்டான்.

அவர்களை கொன்று விட்டால் அது பாவம் இல்லையா என்று வருந்தி செயல் இழந்து நிற்கிறான்.

இறப்பு என்பது இயற்கை. போராட்டம் என்பது இயற்கை. போராடத்தான் வேண்டும். அதில் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.

சரி. போராட வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். சந்தோஷமாக இருப்பானா? மீண்டும் காட்டுக்குப் போக வேண்டும். வாழ் நாள் பூராவும் துரியோதனன் சீண்டிக் கொண்டே இருப்பான். வலியும் வேதனையும் போகப் போவது இல்லை.

வலியையும் வேதனையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என்றால் போராடித்தான் தீர வேண்டும்.

அர்ஜுனனை போர் செய்யச் சொன்னது , துரியோதனை எதிர்த்து அல்ல. அர்ஜுனனின் வருத்தத்தை எதிர்த்து. அவனின் துன்பங்களை எதிர்த்து.

வாழ்வில் துன்பம் வரும். அது இயற்கை. அதை எதிர்த்துப் போராட வேண்டும். அதை கண்டு ஓடி விடக் கூடாது.

அது தான் கீதை சொல்லும் மந்திரம்.

துன்பம் என்பது இயற்கை. அதற்காக வருந்தாதீர்கள். அதை எதிர்த்து போராடுங்கள். அதை வெற்றி கொள்ளுங்கள். வாழ்கை இனிமையாக இருக்கும்.


மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் வாசித்துப் பாருங்கள்.

சரி என்று தோன்றுகிறதா?

https://bhagavatgita.blogspot.com/2018/11/227.html 

Thursday, November 1, 2018

பகவத் கீதை - 2.26 - அப்போதும் வருந்தல் ஆகாது

பகவத் கீதை - 2.26 -  அப்போதும் வருந்தல் ஆகாது 



अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि॥२६॥

அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||

அத = அது மட்டும் அல்ல

ச = மேலும்

ஏனம் = இது

நித்யஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது

நித்யம் = எப்போதும்

வா = அல்லது

மந்யஸே = நீ நினைத்தால்

ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது

ததா = அப்படியே இருந்தாலும்

அபி = அதனால்

த்வம் = நீ

மஹாபா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே

ந = இல்லை

ஏனம் = இது

ஸோ²சிதும் = வருந்துதல்

அர்ஹசி = நீ தகாது

அது மட்டும் அல்லாமல், நீண்ட கைகளை கொண்டவனே, இது எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது இறந்து கொண்டே இருக்கிறது என்று நீ நினைத்தாலும், அதற்காக நீ வருத்தப் பட வேண்டியதில்லை.

ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு தத்துவம், கோட்பாடு, உண்மை என்று முந்தைய சுலோகங்களில் பார்த்தோம்.

சரி, கோட்பாடு, அறிவு, உண்மை என்று வைத்துக் கொண்டாலும், எது உண்மை ? எந்த கோட்பாட்டை நாம் பின் பற்றுவது? இன்று ஒன்று சரி என்று படுகிறது. கொஞ்ச நாளில் அது மாறி விடுகிறது. சரி என்று நாம் நினைத்தது தவறு என்று ஆகி விடுகிறது.

மாமிசம் உண்ணலாமா ? மது அருந்தலாமா ? பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?

சில சமயம் சில தத்துவங்கள் சரி என்று சொல்கிறார்கள். பின் அவை மறைந்து போய் வேறு ஒரு புது தத்துவம் பிறக்கிறது.

அறிவு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி வளரும் போது , பழையன கழிதலும், புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஒரே சித்தாந்ததை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது.

நேற்று வரை உறவு முக்கியம், அது பெரிய விஷயம் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தாய். அது சரியும் கூட. ஆனால் இன்று, உறவா கடமையா என்று வந்து நிற்கும் போது, உறவு பாசம் என்று குழம்பாதே. அந்தத் தத்துவம் மறைய வேண்டும்.

நம்மில் வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நாம் பழைய சிந்தனைகளை விடுத்து வளர மறுப்பது தான்.

நடை முறையில் யோசித்துப் பார்ப்போம்.

பிள்ளை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான் / ள். எத்தனை பெற்றோர்களால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது ?

சரி, காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?

பிள்ளை என்றால் இப்படி இருக்க வேண்டும், கணவன் என்றால் இப்படி, மனைவி என்றால் இப்படி என்று பல கோட்பாடுகளை நாம் வைத்து இருக்கிறோம்.

வைத்து இருப்பதில் தவறில்லை. ஆனால், அந்த கோட்பாடுகளும் நடை முறையும் முரண்படும்போது கோட்பாடுகளை மீண்டும் ஒரு முறை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

கண்ணன் சொல்கிறான் , "இவை பிறந்து கொண்டே இருந்தாலும், இறந்து கொண்டே இருந்தாலும், நீ அதற்காக கவலைப் படாதே " என்று.

உன்னை மாற்றிக் கொள். அறிவும், சிந்தனைகளும், தத்துவங்களும் மாறிக் கொண்டே இருக்கும்.

அறிவு வளரும் போது புது சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும். பழைய சிந்தனைகள் மறைந்து கொண்டே இருக்கும்.

இப்போது கூடப் பாருங்கள், ஆத்மா என்பதற்கு நான் சொல்லும் விளக்கம் வேறு விதமாக இருக்கிறது. இது ஒரு புது சிந்தனை. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். காரணம் என்ன ? இது தவறு என்பதால் அல்ல. இது நீங்கள் இதுவரை நினைத்துக் கொண்டிருந்த ஒன்றில் இருந்து வேறு படுகிறது. இதை ஏற்றுக் கொண்டால் , இது வரை சரி என்று நினைத்ததை , சரி அல்ல என்று முடிவு செய்ய வேண்டி வரும். அப்படி செய்யும் போது, ஒரு கவலை பிறக்கும். அடடா, இத்தனை ஒரு தவறான ஒரு சிந்தனையிலா நான் இருந்தேன். இருக்காது. நான் எப்படி தவறு செய்ய முடியும் ? என்று நினைக்கத் தொடங்குவீர்கள்.

குழப்பம் வரும். இது சரி போலவும் இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டால் இத்தனை நாள் செய்தது நினைத்தது தவறு என்று ஆகும். என்ன செய்வது ?

கண்ணன் சொல்கிறான், "அதற்காக நீ வருந்தாதே" என்று.

புது சிந்தனைகளை, தத்துவங்களை, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

மரண பயம் என்பது என்ன ? பழையனவற்றை விட வேண்டி இருக்குமே என்ற பயம். இறந்த காலத்தில் வாழவே நாம் விரும்புகிறோம்.

ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டே இருந்தால், ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டே இருப்போம்.

பழையது இறக்காமல் புதியது பிறக்காது.

இரண்டும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

வாருங்கள், விட்டு விடுதலையாகி அந்த சிட்டுக் குருவியைப் போல சிறகடித்துப் பறப்போம்.

வானில் பறக்க வேண்டும் என்றால், பூமியை விடத்தான் வேண்டும்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/226.html

Tuesday, October 30, 2018

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி 


अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि॥२५॥

அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||


அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத

அயம் = அது

அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத

அயம் = அது

அவிகார்யோ = மாற்ற முடியாத

அயம் = அது

உச்யதே = சொல்லப் பட்டது

தஸ்மத்  = அதனால்

ஏவம் = எனவே

விதி³த்வ = அதை அறிந்த பின்

ஏனம் = அது

ந = இல்லை

அநுஸோ²சித் = அறிந்த பின்

அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்


சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய். 


முந்திய ஸ்லோகத்தில் ஆத்மா என்று சொல்லப் படுவது ஒரு பொருள், வாஸ்து அல்ல. அது ஒரு தத்துவம், உண்மை, சத்யம், அறம் என்று பார்த்தோம்.

அது சரிதானா ? இதுவரை நாம் நினைத்து வைத்திருந்தது எல்லாம் ஆத்மா என்றால் உயிர். அது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது. உடம்பு சட்டையை மாற்றுவது மாதிரி ஆத்மா உடலை மாற்றுகிறது என்று பார்த்தோம்.

அப்படித்தான் கீதையில் முன்னால் வந்த ஸ்லோகங்கள் பொருள் தந்தன.

ஆனால் இப்போது மாறுகிறது.

இப்படிச் செய்யலாமா ? இது வாசிப்பவனை குழப்பாதா ? முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னால் படிப்பவன் குழம்பி விட மாட்டானா ?

வேறு வழியில்லை.

அறிவு அப்படித்தான் வளர முடியும்.

சின்ன வயதில் , சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்று சொல்லித் தருவார்கள். பின், கொஞ்ச நாள் கழித்து, சூரியன் உதிப்பது இல்லை, பூமி சுற்றுவதால்  சூரியன் உதிப்பது மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லக் கூடாதா ? ஏன் முதலில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்லி  விட்டு பின், சூரியன் உதிப்பது இல்லை என்று முன்னுக்கு பின்  முரணாக சொல்ல வேண்டும் ?

முதலிலேயே பூமி தன்னைத் தானே சுற்றுகிறது, மேலும் பூமி சூரியனையும் சுற்றுகிறது  என்று மூன்று வயது பையனுக்குச் சொன்னால் தலை சுற்றி, புத்தகத்தை  தலையை சுற்றி எறிந்து விட்டு ஓடி விடுவான்.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிவை புகட்ட முடியும்.


இந்த சுலோகம் சொல்கிறது

சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய்.

என்று. 

ஆத்மா என்பது ஒரு பொருள் என்றால் அது எப்படி சிந்தனைக்கு எட்டாததாக இருக்க முடியும். அது எப்படி மாறுதல் அடையாமல் இருக்க முடியும். 

எனவே, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அது திடப் பொருளோ, திரவப் பொருளோ, வாயுப் பொருளோ அல்ல. 

அப்படி என்றால் அது என்ன ?

சிந்தனைக்கும் எட்டாது. அறிந்து தெளிய முடியாது. மாறாதது.

அது ஒரு சாசுவதமான தத்துவம் என்று வைத்துக் கொள்வோம். 

அனைத்து சித்தாந்தங்களும் நம் சிந்தனைக்கு எட்டுவது இல்லை. அனைத்து சித்தாந்தங்களும்  அறிந்து தெளிந்து கொள்ள முடிவதும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் , எந்த தத்துவமும் ஏதோ ஒரு சிக்கலை, குழப்பத்தை தெளிவிக்கவே வருகிறது. அப்படி பார்த்தால், ஒரு மிகச் சிறந்த தத்துவம் அல்லது உண்மை என்பது அனைத்து துன்பத்தையும் போக்க வல்லது தானே ?

எது உண்மை? எது பொய்? எதை நாம் கை கொள்வது? வாழ்க்கையின் நோக்கம் என்ன ? வாழ்க்கையின் பலன் என்ன ? 

இதை கேள்விகளுக்கு விடை சொல்லும் தத்துவமாக அது இருக்கலாம் அல்லவா ?

ஒரு வேளை இவற்றிற்கு விடை கிடைத்து விட்டால், நாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்து விடு படுவோம்?

சரி, இந்த உண்மை , தத்துவம் என்று சொல்கிறோமே அது மட்டும் மாறாமல் அப்படியே இருக்குமா ? எவ்வளவோ தத்துவங்கள் முதலில் உண்மை என்று இருந்தாலும் பின்  தவறு என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறதே. 

அப்படி என்றால் இந்த உண்மைகளை தத்துவங்களை நாம் எப்படி நம்புவது? எதை பின் பற்றி நம் வாழ்வின் சிக்கல்களை விடுவித்து இன்பமாக இருப்பது?

அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி கூறுகிறான் கண்ணன்.

https://bhagavatgita.blogspot.com/2018/10/225.html

Monday, October 29, 2018

பகவத் கீதை - 2.24 - உண்மை

பகவத் கீதை - 2.24 - உண்மை 


अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः॥२४॥

அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது

அயம் = அது

அதாஹ்யோ = எரிக்க முடியாது

அயம் = அது

அக்லேத்³யோ = நனைக்க முடியாது

அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

நித்ய: = நிரந்தரமான

ஸர்வக³த:= எங்கும் நிறைந்த

ஸ்தா²ணு = உறுதியாக

அலோயம் = நகராத

ஸநாதந: = புராதனமானது

அதை பிளக்க உடையாது. எரிக்க முடியாது. உலர்த்த முடியாது. அது எங்கும் நிறைந்து இருப்பது. அது நகராத ஒன்று. மிகப் பழமையானது. 

இப்படியே சொல்லிக் கொண்டு போனால் இதுக்கு ஒரு முடிவே இல்லையா ? அது எதிலும் சேராது. அதில் இருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது. அதை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்த முடியாது. எங்கும் நிறைந்து இருக்கும். அது நகராது. அது பழமையானது ...என்று இப்படி அடுக்கிக் கொண்டே போனால், நம்மால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படி ஒன்று இருக்க முடியுமா என்ற சந்தேகம் வலுக்கும். அதுவும் இன்றைய அறிவியல் படிக்கும் இளைய தலைமுறைக்கு இதெல்லாம் ஏதோ புருடா மாதிரி இருக்கும்.

ஆன்மீகத்தில் ஈடு பட்டவர்கள் கூட, இது என்னது என்று சொல்ல முடியாமல் முழிப்பார்கள். அதெல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடித்து விடுவார்கள்.

அது சரியான பதில் இல்லை.

நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த மாதிரி குணங்கள் கொண்ட ஒன்று ஒரு பொருளாக இருக்க முடியாது என்று நமக்குத் தெரிகிறது அல்லவா. அது ஒரு பொருளாக இருந்தால் அதை நம்மால் அசைத்துப் பார்க்க முடியும். கையில் எடுக்கலாம். தீயில் போட்டுப் பார்க்கலாம், தண்ணீரில் முக்கி எடுக்கலாம். காயப் போடலாம். ஏதாவது செய்யலாம். இப்படி எதுவுமே செய்ய முடியாது என்றால் அது ஒரு பொருள் அல்ல  என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

சரி, பொருள் அல்ல என்றால் பின் அது என்ன ? சக்தியா ? சக்தி என்றால் அது ஒரு இடத்தில் இருந்து  இன்னொரு இடத்துக்குப் போகுமே. மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்து  இன்னொரு இடத்துக்குப் போகிறதே.

பொருளும் இல்லை. சக்தியும் இல்லை (neither matter, nor energy) என்றால் பின் அது என்ன ?

இப்படி யோசித்துப் பார்ப்போம்.

அது ஒரு உண்மை அல்லது தத்துவம் அல்லது செய்தி என்று.

உதாரணமாக, புவி ஈர்ப்பு விசை என்று ஒரு தத்துவம் இருக்கிறது. Law of Gravitation.

இப்போது மேற் சொன்ன அனைத்தையும் அதன் மேல் பொருத்திப் பார்ப்போம்.

அதை வெட்ட முடியாது.
அதை எரிக்க முடியாது.
அதை நனைக்க முடியாது.
அதை உலர்த்த முடியாது.
அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது.
அதோடு எதையும் சேர்க்க முடியாது
அது எங்கும் நிறைந்து இருக்கிறது.
அது பழமையானது.
அது நகராதது.

இப்படி அனைத்தும் அந்த தத்துவத்துக்கு பொருந்துகிறது அல்லவா.

புவி ஈர்ப்பு விசை தான் "ஆத்மா" என்று நான் சொல்ல வில்லை.

அது ஒரு உதாரணம்.

அதை இன்னும் விரித்துப் பார்ப்போம்.

எந்த ஒரு உண்மையும் இந்த பட்டியலுக்குள் அடங்கும்.

அதை அறம் என்று சொல்லுங்கள். சத்யம் என்று சொல்லுங்கள். உண்மை என்று சொல்லுங்கள். எப்படி ஆனாலும், இங்கே சொல்லப் பட்ட அனைத்து  குணங்களும்  எந்த உண்மைக்கும், அறிவுக்கும், சத்யத்துக்கும் பொருந்தும்.

அப்படி என்றால் ஏன் இங்கே "அது" என்று சொல்லப் படுவது ஒரு உண்மையை குறிக்கக் கூடாது .

ஆத்மாவை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று சொல்லுவது, உண்மையை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று வரும் அல்லவா.

இப்போது அர்ஜுனனின் சிக்கல் என்ன.

சத்தியத்தை நிலை நிறுத்துவதா? அல்லது பாசத்துக்கு இடம் கொடுப்பதா? என்பது தான்.

வாழ்வில் அனைத்து சிக்கலுக்கும் காரணம் உண்மை , சத்யம் எது என்று நாம் அறியாமல்  இருப்பது தான்.

உடல் என்றால் நோய் வரும், மூப்பு வரும், மரணம் வரும். இது நிரந்தர உண்மை. எப்போதும் உள்ளது. மாற்றம் இல்லாதது. இந்த உண்மையை நாம் மறுதலிக்கும் போது   துன்பப் படுகிறோம். உண்மைக்கு எதிராக உலகம் இருக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு நமக்கு துன்பத்தைத் தருகிறது.

எனவே, எது உண்மையோ, எது சத்யமோ அதை அறிந்து அதன் வழி சென்றால்  துன்பம் இல்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது.

ஆத்மா என்றால் ஏதோ ஜோதி, சக்தி என்றெல்லாம் அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது வந்து ஆத்மா என்றால் உண்மை, தத்துவம், சத்யம் என்று புதிதாக ஏதோ சொல்கிறாயே. கீதையில் அப்படித்தான் இருக்கிறதா ? மத்த ஸ்லோகங்கள் இதோடு ஒத்துப் போகிறதா ?

பார்ப்போமா ?

https://bhagavatgita.blogspot.com/2018/10/224.html

Sunday, October 21, 2018

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை 



नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥२३॥

நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||

ந = இல்லை

ஏனம் = இந்த

 சி²ந்த³ந்தி = வெட்டினாலும்

ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்

ந = இல்லை

ஏனம் = இந்த

த³ஹதி = எரிதல்

பாவக:|  = தீயில்

ந = இல்லை

ச = மேலும்


ஏனம் = இந்த

க்லேத³யந்த்தி = நனைவது

அபா = தண்ணீரில்

ந = இல்லை

ஸோ²ஷயதி = உலர்வது

மாருத: = காற்றில்


அதை ஆயுதத்தால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; நீரில் நனைக்க முடியாது; காற்றில் உலர்த்த முடியாது. 


நான் போன மாதம் அயல்நாடு  போய் இருந்தேன். போன இடத்தில் ஒரு உணவகத்திற்கு சென்று இருந்தேன். இன்றைய ஸ்பெஷல் என்று ஏதோ இனிப்பு பலகாரத்தின் பெயர் இருந்தது. சரி, சாப்பிட்டுப் பார்ப்போமே என்று சாப்பிட்டேன். மிக மிக சுவையாக இருந்தது. பெயர் என்னவோ வாயில் நுழையாத பாரசீகப் பெயர்.

நீங்கள்: நம்ம ஊர்ல இல்லாததா ?

நான்: நம்ம ஊர்ல இல்லாதது. அந்த நாட்டில் மட்டும் தான் செய்வார்களாம் இதை.

நீங்கள்: அப்படியா, அது எப்படி இருக்கும் ?

நான்: அது வந்து கொஞ்சம் நெளிவு நெளிவா இருக்கும்....

நீங்கள்: முறுக்கு , ஜிலேபி மாதிரியா ?

நான்: கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் ஆனால் முறுக்கு மாதிரியே அச்சு அசலா இருக்காது. மெல்லமா , மெத்துன்னு இருக்கும்.

நீங்கள்: சரி, என்ன கலர் ? மஞ்சள் கலர்ல இருக்குமா ?

நான்: இல்லை, கேசரிப் பூ கலர். அதுலயும் கொஞ்சம் நிறம் கம்மி



இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி, நீங்கள் பார்க்காத , சுவைக்காத அந்த பலகாரத்தை உங்களுக்கு விளங்க வைத்து விடுகிறேன். அதன் நிறம், சுவை, எடை, என்று அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நேரில் பார்க்கா விட்டாலும், வாயில் போட்டு சுவைக்கா விட்டாலும், அதை தெரிந்து கொள்கிறீர்கள்.

எப்படி ?

தெரிந்தவற்றில் இருந்து, தெரியாததை புரிந்து கொள்கிறீர்கள்.

புலியே பார்த்திராத ஒருவனிடம் புலி எப்படி இருக்கும் என்று சொல்லுவது?

புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனை அவ்வளவுதான் என்று சொன்னால் புரிந்து கொள்வார்.

அது போல, ஆத்மாவை நாம் பார்த்தது இல்லை.

அறிந்தவர் சொல்கிறார்.

ஆத்மா எப்படி இருக்கும்? மிக குழப்பமான கேள்வி. அதை தெளிவாக்குகிறது கீதை.

அது மிக நுட்பமானது என்று சொல்ல வேண்டும்.

நுட்பமானது என்று சொன்னால் எவ்வளவு நுட்பம் என்று கேள்வி வரும்.

கீதை சொல்கிறது "எந்த ஆயுதத்தாலும் அதை வெட்ட முடியாது"....

கத்தின் முனை எவ்வளவு கூர்மையாக இருந்தாலும். கத்தி எப்போது வெட்டும் ? அது எதை வெட்டுகிறதோ அது கத்தியின் முனையை விட தடிமனாக இருக்க வேண்டும். அப்போதுதான் கத்தி அதை இரண்டாக பிளக்க முடியும்.

அது கத்தியை விட மெல்லிதாக இருந்தால், அதனால் வெட்ட முடியாது அல்லவா ?

ஆத்மா , மிக மிக சன்னமானது. அது தடிமனானது அல்ல.

அது தீயில் எரியாது.

எந்த ஒரு பொருளும் தீயில் இட்டால் எரிந்து சாம்பலாகி விடும். ஆத்மாவும் அப்படியா என்றால் இல்லை.

தீயில் எரிவது என்றால் என்ன அர்த்தம்? ஒரு பொருளோடு, பிராண வாயு கலந்து, அந்த பொருள் அதிக சூட்டினை ஏற்று , சூடும், வாயுவும் அந்த பொருளும் சேர்ந்து வினை ஆற்றும் போது எரிதல் நிகழ்கிறது.

ஆத்மா என்பது மற்றவற்றோடு கலக்காது. பிராண வாயு, வெப்பம் என்பவை அதோடு சேராது. அது தனித்து நிற்பது.

சரி, அதை தூக்கி தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்? நீரில் கரையுமா ?

இல்லை. அது நீரில் கரையாது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நீர் தான் சார்ந்தவற்றின் நிறத்தை குணத்தைப் பெறும். செம்மண்ணில் விழுந்தால் சிவப்பு நிறம். கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நிறம்.

அது நீரில் கரையாது என்றால், ஆத்மா தான் சேர்ந்த உடலின் தன்மையைப் பெறாது என்று அர்த்தம். அது எப்போதும் தனித்து நிற்கும். உடலின் செயல்கள் அதைப் பாதிக்காது.

அதை உலர்த்த முடியாது.

உலர்த்துதல் என்றால் , ஒன்றில் இருந்து நீரை பிரித்து எடுத்தல்.

ஆத்மா என்பது பல்வேறு பொருள்களின் கலவை அல்ல. அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது. அது ஏற்கனவே பூரணமான ஒன்று. அதை குறை படுத்த முடியாது.

அதனுடன் எதையும் சேர்க்க முடியாது (கரியாது), அதில் இருந்து எதையும் எடுக்கவும் முடியாது (உலர்த்த முடியாது), அதை பாக்கவும் முடியாது (வெட்ட முடியாது) அதை அழிந்து போகவும் செய்ய முடியாது (அதை எரிக்க முடியாது)

என்று சொல்லுவதன் மூலம், கீதை ஆத்மா என்பது என்ன என்று விளக்குகிறது.

நாம் உலகில் காணும் பொருள்கள் யாவும் பல்வேறு விதமான துகள்களால் ஆனவை. ஆத்மா என்பது பிரித்து பார்க்க முடியாத ஒன்று. மூலக் கூறு,    அணு, ப்ரோட்டோன், நியூட்ரான் என்றெல்லாம் இல்லை. அது ஒன்றேதான்.

அதை மற்றவற்றோடு சேர்க்கவும் முடியாது. அதில் இருந்து எதையும் பிரிக்கவும் முடியாது.

அது அதுதான்.

தானே தொடக்கம். தானே முடிவு. தனக்குள்ளே எல்லாம் அடக்கம்.

சிந்தித்துப் பாருங்கள்.




Friday, October 5, 2018

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம்

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம் 



वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||

வாஸாம்ஸி  - உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.

ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்

யதா = எவ்வாறு

விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ

நவாநி = புதிய

க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது

நரோ = மனிதன்

அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை

ததா = அது போல

ஸ²ரீராணி = உடல்

விஹாய = அனுபவம் தீர்ந்த பின்

ஜீர்ணாந் = பழையது ஆன பின்

அந்யாநி = மற்றது

ஸம்யாதி = அடைகிறது

நவாநி = புதிய

தே³ஹீ = உடலை உடைய அது


பழைய துணிகளை போட்டு விட்டு எப்படி உடல் வேறு புதிய துணிகளை அணிந்து கொள்கிறதோ அது போல அது இந்த உடலை மாற்றி வேறு உடலை ஏற்றுக் கொள்கிறது.

மிக மிக எளிமையான சுலோகம். அதிகமான இடங்களில் மேற் கோள் காட்டப்பட்ட  சுலோகம்.


நாம் ஒருவரை பார்க்கிறோம். அவரோடு பேசுகிறோம் என்றால் யாரோடு பேசுகிறோம்? அந்த மனிதரோடா அல்லது அவர் அணிந்திருக்கும் உடைகளோடா ?

அடடா, சட்டையே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன் நிறம் மிக சிறப்பாக இருக்கிறது. நேர்த்தியாக நீ தைக்கப் பட்டிருக்கிறாய். இந்த pant க்கு நீ ரொம்ப பொறுத்தமாக இருக்கிறாய் என்று யாராவது நாம் அணிந்திருக்கும் துணிகளோடு பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் மரை கழண்டு விட்டதோ என்று நாம் நினைப்போம் அல்லவா?

அது போல, இந்த உடலை பார்த்துப் பேசினால் எப்படி இருக்கும் ?

உடம்புக்கு எப்படி இருக்கு? கொஞ்சம் எடை போட்டு இருக்கீங்க போல இருக்கு? முடி கொஞ்சம் நரைச்சு இருக்கு,  பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்று கேட்பதும் அப்படித்தான்.

ஏன்?

உடை முக்கியம் அல்ல. உடையை அணிந்திருக்கும் உடல் முக்கியம்.

உடல் முக்கியம் அல்ல, அதை தூக்கி சுமக்கும் உயிர் முக்கியம்.

நாம் எதோடு உறவு கொள்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உடையோடா? உடலோடா? உயிரோடா ?

உடை மாறும். உடல் மாறும். உயிர் மாறாது.

உடல் எப்படி உடையை மாற்றிக் கொள்கிறதோ, அது போல உயிர் உடலை மாற்றிக்  கொள்கிறது.

பழைய நைந்து போன அல்லது கிழிந்து போன சட்டைக்காக யாராவது பெரிதாக வருந்துவார்களா ? ஒரு சட்டை போனால், இன்னொன்று.

நைந்து போன உடலை வைத்துக் கொண்டு இந்த உயிர் என்ன செய்யும்?

கண் தெரியாது, காது கேக்காது, நடக்க முடியாது, மூச்சு விடுவதே சிரமம் என்று  இருக்கும் பழைய உடம்பால் யாருக்கு என்ன பயன்?

ஐயோ, இது நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது வாங்கிய சட்டை என்று அதை 40 வயதானபின் அணிய முடியுமா ?

அடுத்த முறை யாருடனாவது பேசும் போது ஒரு நிமிடம் நினையுங்கள், இவரின் இந்த உடலுக்கு பின்னால், இந்த தோற்றத்தின் பின்னால் ஒரு உயிர், ஒரு சக்தி இருக்கிறது என்று. அப்பப்ப நினைத்தால் பின்னாளில் அந்த எண்ணம் தொடர்ந்து வரும்.

நான் என்பதும், மற்றவர்கள் என்பதும் உடல் சார்ந்த ஒன்று அல்ல என்ற எண்ணம்  நிரந்தரமானால், பிறப்பும், இறப்பும், பிரிவும், சேர்தலும் புது அர்த்தம் பெறும்.

கீதை மேலும் இதை விளக்குகிறது.

கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கும். இரசித்துக் கொண்டே படியுங்கள். என்னதான் சொல்ல வருகிறது கீதை என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வாருங்கள்.

நீங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று தள்ளி நின்று பாருங்கள். அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள். அது போதும், இப்போதைக்கு.

http://bhagavatgita.blogspot.com/2018/10/222.html



Tuesday, October 2, 2018

பகவத் கீதை - 2.21 - கொல்வதும் , கொல்விப்பதும்

பகவத் கீதை  -  2.21 -  கொல்வதும் , கொல்விப்பதும் 



वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥२१॥

வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||

வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)

அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது

நித்யம் = நிரந்தரமானது

ய = அவன்

ஏநம் = இது

அஜம் = பிறக்காதது

அவ்யயம் = மாறாதது

கதம் = எவ்வாறு

ஸ = அவன்

புருஷ: = ஆள், அவன், செய்பவன்

பார்த = பார்த்தனே

கம் = எவன்

காதயதி = கொல்பவன்

ஹந்தி = கொலை செய்வது

 கம் = யார்

பிறக்காததும், என்றும் நிரந்தரமாக உள்ளதும், அழிவற்றதும் ஆன அதை கொல்பவன் யார், கொலை செய்பவன் யார் ?


கண்ணன் என்ன சொல்ல வருகிறான்? ஆத்மா அழியாதது. எனவே யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளலாமா ? அர்ஜுனனுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா ? யாராவது ஒருவன் கொலை செய்து விட்டால், அவன் கீதையை மேற்கோள் காட்டலாம். "பார் கண்ணனே சொல்லி இருக்கிறான்...ஆத்மா அழியாயாதது. அதை யாராலும் கொல்ல முடியாது....உடல் எப்படியும் அழியும். எனவே அதை கொல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் கொல்லவும் இல்லை. அவன் கொல்லப் படவும் இல்லை" என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா ?

கீதை கொலையை நியாயப் படுத்துகிறதா ?

இல்லை. இந்த ஸ்லோகத்தை அப்படி பார்க்கக் கூடாது.

நம்மிடம் உள்ள மிகப் பெரிய பயம் மரண பயம்.

மரண பயத்தின் அடி நாதம் எது. அந்த பயத்தின் மூல காரணம் என்ன?

மாற்றம். ஒவ்வொரு மரணத்திலும் ஏதோ ஒரு பெரிய மாற்றம் வருகிறது. அது நமது மரணமாக இருந்தாலும் சரி, அல்லது நெருங்கியவர் மரணமாக இருந்தாலும் சரி.

இறந்தவரின் புகைப்படத்தை பார்த்து அவரின் நினைவை தொடர்கிறோம். அவர் இறந்த தினத்தை நினைவில் வைத்து கொண்டாடுகிறோம். அவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறோம். மீண்டும் மீண்டும் அவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு கற்பனையில் மகிழ்கிறோம்.

மற்றவர்கள் நம்மை விட்டு விட்டுப் போகக் கூடாது.

நாமும் மற்றவர்களை விட்டு விட்டுப் போகக் கூடாது.

புகைப் படம் எடுத்துக் கொள்கிறோம். ஏன்?

நமக்குப் பின்னும் நம் உருவம், நம் நினைவு மற்றவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற ஆசை. மற்றவர்கள் நம்மை மறந்து விடக் கூடாது என்ற ஆதங்கம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். சிறு பிள்ளைகளை படம் எடுக்க கூப்பிட்டால் , வரமாட்டேன் என்று ஓடுவார்கள். அதே சமயம் பெரியவர்கள் அளவுக்கு அதிகமாக அதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏன், மரண பயம்.

புகழ் வேண்டும் என்று மனிதன் ஏன் அலைகிறான்? தான் இறந்த பிறகும் மற்றவர்கள் நினைவில் தான் வாழ வேண்டும் என்ற ஆசை.

கல்வெட்டு. சிலை. புகழ். புகைப்படம். எல்லாம் சாஸ்வதம் தேடி அலைவதின் வெளிப்பாடு.

இந்த பயமும், ஆசையும் நாம் இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொள்வதால்.

என்று நாம் என்பது இந்த உடல் இல்லை என்ற எண்ணம் வருகிறதோ, மரண பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.

பயமும் இல்லை. ஆசையும் இல்லை.

வாழ்க்கை மிக மிக சுகமாக எளிதாக இருக்கும்.

ஆனால், நான் என்பது இந்த உடல் இல்லை என்றால் பின் வேறு என்ன என்ற கேள்வி வரும்.

ஆத்மா என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

ஆனால், அது என்ன என்று விளக்குவது சாதாரண காரியம் இல்லை.

அந்த விளக்கத்தின் முதல் படி, இந்த சுலோகம்.

"அது பிறப்பது இல்லை. இறப்பது இல்லை. அநாதியானது. அதை கொல்ல முடியாது. அது கொல்வதும் இல்லை".

ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?

எனக்கும் தான். கண்ணனையே மேலும் கேட்போம் விளங்கும்படி.

http://bhagavatgita.blogspot.com/2018/10/221.html

Friday, September 28, 2018

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று 


न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे॥२०॥

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||

ந = இல்லை

ஜாயதே = பிறப்பது

ம்ரியதே = இறப்பது

வா = மாறாக

கதா³சிந் = எப்போதும்

ந = இல்லை

அயம் = அவன்

பூ⁴த்வா = தோன்றிய பின்

ப⁴விதா= நிலைத்து இருத்தல்

வா = மேலும்

ந = இல்லை

பூ⁴ய:| = மறுபடியும்

அஜோ = பிறப்பது இல்லை

நித்ய: = நிரந்தரமான

ஸா²ஸ்²வத = அநாதியான

அயம் = அவன்

புராணோ  = பழமையானது

ந = இல்லை

ஹந்யதே = கொல்லப் படுவது

ஹந்யமாநே = கொல்வதும்

ஸ²ரீரே = உடல்

அவன் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. கொல்வதும் இல்லை. கொல்லப் படுவதும் இல்லை. அவன் பழமையானவன். என்றும் நிரந்தரமாக இருப்பவன். உடல் அழியும் போது இவன் அழிவது இல்லை. 


இதெல்லாம் பல முறை கேட்டாச்சு , கேட்டாச்சு. ஆத்மா அழியாது, பிறக்காது, கொல்லாது, கொல்லப் படாது என்று எத்தனை முறை கேட்பது. நடை முறை வாழ்க்கையில் நாம் உடல்களோடுதானே உறவு கொள்கிறோம். ஆத்மா எங்கே வந்தது ?  யாராவது இறந்து போனால் துக்கம் வரத்தானே செய்கிறது? நெருங்கியவர்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால், "உடம்பு தானே சரி இல்லை, ஆத்மாவுக்கு ஒன்றும் இல்லை" என்று இருக்க முடியுமா ? இதெல்லாம் கேட்க நல்லா இருக்கும், தத்துவ விசாரம் எல்லாம் சரி...நடை முறையில் இதனால் என்ன பயன்?

இது சரி தானா ?

நடை முறையில், அன்றாட வாழ்வில் நாம் ஆத்மாவை உணர்வது இல்லையா?

தெருவில் போகும் போது, செருப்பின் வார் அறுந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்லுவோம் "எனக்கு வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா "என்னுடய செருப்பின் வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா ?

வீட்டில் உள்ள கிரைண்டர் இல் ஒரு நட்டு (nut ) கொஞ்சம் லூசாக இருந்தால் என்ன சொல்லுவோம்?  எனக்கு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா அல்லது இந்த கிரைண்டருக்கு ஒரு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா ?

நாம் வேறு, நாம் உபயோகப் படுத்தும் பொருள்கள் வேறு என்று தெரிகிறது அல்லவா ?

எனக்கு பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவது இல்லை, என்னுடைய கார் வரும் வழியில் பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவோம்.

சரி. அதனால் என்ன ?


நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக்  கொள்வதுதான்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு போய்  விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான்காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண்படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் எதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இரசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?

இருந்தும் அடிக்கடி மறந்து விடுகிறோம். அது தான் சிக்கல்.

இந்த உடல் பிறக்கும், வளரும். மூப்பு அடையும். நோய்வாய் படும், இறக்கும். இது உடலின் இயல்பு.

நான் என்பது இந்த உடல் இல்லை என்றால், இந்த உடலை இயக்கம் அதற்கு இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு என்பதெல்லாம் இல்லை.


இதை வேறு ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

மின்சாரம் இருக்கிறது. அது டிவி யில் போனால் படம் தெரிகிறது, பல்பில் போனால் வெளிச்சம் வருகிறது, microwave இல் போனால் உணவு சூடாகிறது....இப்படி எந்த பொருளில் செல்கிறதோ அதை செயல் படுத்துகிறது.

பொருள்கள் அழியும். பல்பு பியூஸ் ஆகி விடும். மாற்றிவிடலாம்.

மின்சாரம் அழியாது. அதற்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. மூப்பும் இல்லை, பிணியும் இல்லை. அது ஒரு சக்தி. அவ்வளவுதான்.

தண்ணீர் மேலிருந்து கீழே விழுகிறது. விழும் போது turbine ஐ சுற்றுகிறது. அது டையனமோவை  சுற்றுகிறது. அதில் இருந்து மின்சாரம் வருகிறது.

நீரில் இருந்து மின்சாரத்தை எடுத்து விட்டால் நீரில் ஒன்றும் குறைவது இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.

வீட்டில் பல்பில் ஒளி தந்து விட்டு அந்த மின்சாரம் எங்கே போகிறது ? எங்கும் போவது இல்லை.  ஒளியாக மாறியது. அவ்வளவுதான்.

அது போல ஒரு சக்தி எனக்குள் இருந்து என்னை எழுத வைக்கிறது. உங்களுக்குள் இருந்து இதை வாசிக்க வைக்கிறது.

ஒவ்வொரு கருவியில் மின்சாரம் ஒவ்வொரு வேலையை செய்விப்பது போல.

நீங்கள் அந்த மின்சாரம் போல. எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பரிணமிக்கலாம்.

சிந்தியுங்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/220.html



Wednesday, September 26, 2018

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர்

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர் 



य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते॥१९॥

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||

ய = அவன்

ஏநம் = இந்த

வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)

ஹந்தாரம் = கொலை செய்வதாக

ய = அவன்

ஸ்அ = மேலும்

ஏநம் = இந்த

மந்யதே = நினைக்கிறான்

ஹதம்| = கொன்றதாக

உபௌ = இருவரும்

தௌ = இரண்டு

ந = இல்லை

விஜாநீதோ = அறிவது

ந = இல்லை

அயம் = அவன்

ஹந்தி= கொல்லப் படுவது

ந = இல்லை

ஹந்யதே = கொல்வதும்

எவன் ஒருவன் தான் கொல்வதாகவும் அல்லது கொல்லப் படுவதாகவும் நினைக்கிறானோ, அவர்கள் இருவரும் ஒன்றும் அறியாதவர்கள். அவன் கொல்வதும் இல்லம், கொலை செய்யப் படுவதும் இல்லை. 

குழந்தைகள் சோப்பு குமிழ் (bubble ) விட்டு விளையாடும். அந்தக் குமிழ் வண்ண மயமாக மிதக்கும். அவர்கள் ஓடிச் சென்று அதை தொடுவார்கள். அந்த குமிழ் சட்டென்று வெடித்து மறையும்.

முதலில் சோப்புத் தண்ணீராக இருந்தது, பின் சோப்பு குமிழாக மாறியது, தொட்டவுடன் மீண்டும் சிறு நீர் திவலைகளாக சிதறி மறைகிறது.

நீர் மீண்டும் நீராக மாறியது. நடுவில் ஒரு வண்ண மய விளையாட்டு. சோப்புக் குமிழை யாராவது கொன்று விட்டேன் என்று சொல்லுவார்களா?

ஒரு நிமிடம் நீங்கள் அந்த சோப்புக் குமிழாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை அந்த சோப்புக் குமிழ் என்று நினைக்கும் வரை, அந்த குமிழ் வெடித்துச் சிதறும் போது , நீங்கள் கொலை செய்யப்பட்டதாகவே நினைப்பீர்கள். மாறாக, நீங்கள் உங்களை அந்த தண்ணீர் என்று நினைத்தால் , கொலை குமிழ் வெடிக்கும் போது கொலை நடந்ததாக நினைக்க மாட்டீர்கள். நான் தண்ணீராக இருந்தேன், இப்போது மீண்டும் தண்ணீராக இருக்கிறேன். நடுவில் கொஞ்சம் வடிவம் மாறினேன் என்று நினைப்பீர்கள் அல்லவா.

உண்மையில் நீங்கள் யார் ?

தண்ணீரா அல்லது சோப்புக் குமிழா ?

சோப்புக் குமிழ் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இறப்பும் உண்டு.

தண்ணீர் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

நீங்கள் யார் என்று அறிவது தான் இங்கே சிக்கல்.

சோப்புக் குமிழுக்குத் தெரியாது தான் தண்ணீர் என்று.

யார்? நானா ? தண்ணீரா ? இல்லவே இல்லை. பார் நான் எவ்வளவு வண்ண மயமாக இருக்கிறேன். எப்படி காற்றில் மிதக்கிறேன். என்னைப் போல் எத்தனை சோப்பு குமிழ்கள் காற்றில் மிதக்கின்றன. நாங்கள் எல்லாம் ஒரு இரகம் . தண்ணீராம் தண்ணீர். அப்படி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது. அது இப்படி உருண்டையாக இருக்குமா, வண்ண மயமாக இருக்குமா ? காற்றில் மிதக்குமா ?

என்றெல்லாம் கேட்கும்.

கேட்கிறீர்கள்.

நீங்கள்  இந்த உடல் இல்லை என்று ஒரு நிமிடம் யோசித்துத் தான் பாருங்களேன்.

வாழ்க்கை தத்துவம் அனைத்தும் மாறும்.

உங்களை, உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் வேலை.

எப்படி என்று மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/219.html

Tuesday, September 25, 2018

பகவத் கீதை 2.18 - எனவே போர் செய்

பகவத் கீதை  2.18  - எனவே போர் செய் 



अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥१८॥

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய

இமே = இவை

தே³ஹா = வடிவங்கள்

நித்யஸ்ய = நிரந்தரமான

உக்தா: = சொல்லப் பட்டது

ஸ²ரீரிண:| = வடிவங்களை  தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்

அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற

அப்ரமேயஸ்ய = அளவற்ற

தஸ்மாத் = எனவே

யுத்⁴யஸ்வ = போர் செய்

பா⁴ரத = பாரத குல தோன்றலே


உடலை தாங்கும் அது அழிவற்றது. நிரந்தரமானது. அளவிட முடியாதது. எனவே போர் செய். 


நடை முறை வாழ்க்கையில் பல முறை நமக்கு சோர்வும் சலிப்பும் வருவது இயற்கை. என்ன வாழ்க்கை இது. என்ன வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்? நம்மால் யாருக்கு என்ன பயன்? நாம இல்லாவிட்டால் இந்த உலகம் என்ன நின்றா விடும்? சாதித்தது எல்லாம் போதும் என்ற அலுப்பும் சலிப்பும் வருவது இயற்கை.

கீதை சொல்கிறது "எனவே போர் செய்" என்று.

இங்கே போர் என்பது எதிரிகளை கொன்று குவிப்பது அல்ல.  நம் சோர்வை, நம் சோம்பேறித்தனத்தை, நம்  அலுப்பை,சலிப்பை நாம் போராடி வெல்ல வேண்டும்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று தோன்றும். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும். மீதியை நாளைக்கு பார்க்கலாம் என்று தோன்றும்.

அந்த நநேரத்தில் கீதையை நினைக்க வேண்டும். "எனவே போர் செய்" . வாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்றால், போராட வேண்டும்.

வெளி உலகோடு அல்ல. நம்மோடு போராட வேண்டும்.

அலையும் மனதை , போராடி இழுத்துக் கொண்டு வர வேண்டும். சோம்பும் உடலை போராடி வேலை செய்யச் செய்ய வேண்டும்.

அப்படிச் சொன்னால் "ஐயோ என்னால் முடியலையே. தூக்கம் தூக்கமா வருதே. உடம்பெல்லாம் வலிக்கிறதே..." ஆயிரம் சாக்கு சொல்வோம்.

தூக்கம் யாருக்கு வருகிறது ? யாருக்கு சோர்வு வருகிறது ? யார் அலுத்துக் கொள்வது?

எல்லாம் இந்த உடல் படுத்தம் பாடு.

உடலை கருவியாக உபயோகப் படுத்தாமல், அதை நம் எஜமானனாக ஆக்கி அது சொல்வதை கேட்டுக் கொண்டு ஆடுகிறோம்.

"நீங்கள் " என்பது உங்கள் உடல் அல்ல. உலகில் கோடிக்கணக்கான உடல்கள் இருக்கின்றன. உடல்கள் தோன்றி தோன்றி மறையும் இயல்பு உடையன. இந்த கணக்கற்ற வடிவங்களுக்கு பின்னால் இருக்கும் அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது அநாதியானது.

இலட்டு, ஜிலேபி, மைசூர் பாகு என்று இனிப்பு பதார்த்தங்கள் பல இருந்தாலும் அவற்றிற்கு சுவை தரும் சர்க்கரை ஒன்று தான்.

வளையல், மோதிரம், சங்கிலி என்று பல ஆபரணங்கள் இருந்தாலும், அவற்றிக்கு பின்னால் இருக்கும் தங்கம் ஒன்றுதான்.

எத்தனை ஆயிரம் அலைகள் தோன்றி மறைந்தாலும் அவற்றிற்கு பின்னால் இருக்கும் கடல் ஒன்றுதான்.

வடிவங்கள் பலவாக இருக்கலாம். அவை அனுபவிக்கும் இன்ப/துன்பங்கள் பலவாக இருக்கலாம். அவற்றிற்கு அடியில் இருக்கும் அது ஒன்றுதான்.

அது தான் நீங்கள். அது தான் நான். அது தான் அனைத்தும்.

சரி, அது அது என்று சொல்லிக் கொண்டே போனால் எப்படி. அது என்ன ? அது எப்படி இருக்கும்? அதை எப்படி அறிவது ?

அதை அறிய முடியும். எப்படி ?

தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க telescope உபயோகப் படுத்துகிறோம். வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.

மிக நுண்ணிய பொருள்களை பார்க்க microscope உபயோகப் படுத்துகிறோம்.  வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.

கண் முன் இருக்கிறது. இருந்தாலும் அந்த கருவிகளின் துணை இல்லாமல் பார்க்க முடியாது.

புலன்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது. ஓரளவுக்குத் தான் பார்க்க, கேட்க, உணர முடியும். அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ளவற்றை அவற்றால் அரிய முடியாது.

நமது மோப்ப சக்தியை விட நாயின் மோப்ப சக்தி பல மடங்கு நுண்ணியது. நம்மால் நுகர முடியவில்லை என்பதால், அப்படி ஒரு வாசம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா ?

அது போல, நமது புலன்களுக்கு இன்னும் ஒரு எல்லை இருக்கிறது.

அதாவது, ஒரு வரையறைக்கு உட்பட்ட ஒன்றைத்தான் நம் புலன்களால் அரிய முடியும். அளவற்ற ஒன்றை புலன்களால் அறிய முடியாது. முடிவில்லா ஒன்றை புலன்கள் அறிய முடியாது.

அடுத்த சிக்கல் என்ன என்றால், புலன்கள், பொறிகள், அறிவு, மனம் என்று இவை எல்லாம் சேர்ந்து வெளி உலகை அறிகின்றன. வெளியில் இருந்து வரும் செய்திகளை ஆராய்ந்து இது இன்னது என்று சொல்கின்றன.

இவற்றை இயக்கம் "அதை" அவற்றால் அறிந்து கொள்ள முடியாது.

வீட்டில், அடுப்படியில், சூடான பொருள்களை பற்றி தூக்க இடுக்கியை பயன் படுத்துவோம். அது எல்லா பொருளையும் பற்றி தூக்கப் பயன்படும். அது தன்னைத் தானே தூக்குமா ?

நுண்ணோக்கி (microscope) அனைத்தையும் நுணுக்கி ஆராய பயன் படும். அது தன்னை தானே நோக்கிக் கொள்ளுமா ?

இந்த புலன்கள் வெளியில் உள்ளவற்றை அறிய பயன்படும். அதை இயக்கம் அந்த சக்தியை அதனால் அறிந்து கொள்ள முடியாது.

எனவே தான் கீதை சொல்கிறது "அது அளவிட முடியாதது" என்று. அளக்க முடியாது என்றால், புலன்களுக்கு அகப்படாது.

பின் எப்படித்தான் அறிவது?

http://bhagavatgita.blogspot.com/2018/09/218.html

Tuesday, September 18, 2018

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது 


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति॥१७॥

அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது

து = ஆனால்

தத்= அது

வித்³தி= நீ உணர்வாய்

யேந = அதன் மூலம்

ஸர்வம் = அனைத்தும்

இதம் = இது

ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள


விநாஸம் = அழியும்

அவ்யயஸ்யா = மாறாத

அஸ்ய = அதன்

ந = இல்லை

கஸ்²சித் = அவன்

கர்தும் = செய்பவன்

அர்ஹதி  = இயலும் , முடியும்


எங்கும் நிறைந்த அந்தப் பொருள் அழிவற்றது என்று அறிந்து கொள். அது கெடாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. 

உலகிலேயே பெரிய பயம் மரண பயம். நாம் இறந்து போவோமோ என்ற பயம். நம்மைச் சார்ந்தவர்கள் இறந்து போவார்களோ என்ற பயம்.  மரண பயத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் இல்லை.

மரணம் என்பது என்ன ?

மரணம் என்பதன் உண்மையான பொருள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். உங்களை பொறுத்தவரை மரணம் என்றால் என்ன ?

தொடர்பு விட்டுப் போதல், தொடர்பு மறைந்து போதல், இருப்பது இல்லாது போதல்...இவை தானே மரணம் ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வீட்டில் பெண்கள் நகை வைத்து இருப்பார்கள். வளையல், சங்கிலி, மோதிரம், ஒட்டியாணம் என்று பலவிதமான நகைகள் இருக்கும். வாங்கி பல காலம் ஆன பின், அவை பழசாகப் போய் விடும். மார்க்கெட்டில் புதிது புதிதாக நகைகள் வந்து இருக்கும். புதுப் புது வடிவத்தில் வந்து இருக்கும். பழைய நகைகளை  அழித்து விட்டு புது நகைகள் செய்வார்கள். புதுப் பொலிவோடு, புது மெருகோடு இருக்கும்.

பழைய நகை மறைந்து போய் விட்டது. புது நகை வந்து விட்டது.

நகையை அழித்துச் செய்தற்காக எந்த பெண்ணும் அழுவது இல்லை.

ஐயோ அந்த பழைய நகை போய் விட்டதே என்று யாரும் வருந்துவது இல்லை.

நகை அழியும். தங்கம் அழிவது இல்லை.

பானை, சட்டி, குடம் அழியும். அது செய்யப்பட்ட களி மண் அழிவது இல்லை.

அலை அழியும். கடல் அழிவது இல்லை.

தோற்றங்கள் மாறும். அதன் அடியில் உள்ள அந்த ஒன்று அழிவது இல்லை.

அது சாஸ்வதமானது. அதை யாரும் அழிக்க முடியாது.

மோதிரத்தை அழித்து வளையல் செய்யலாம்.

ஆனால் மோதிரம் செய்யப்பட்ட தங்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

வடிவங்கள் பலவாக இருக்கும் போதே நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்த பல வடிவங்கள் ஏதோ ஒன்றில் இருந்து செய்யப்பட்டது என்று. அந்த ஏதோ ஒன்று அழிவற்றது.

பீஷ்மராக, த்ரோணாராக, துரியோதனனாக விளங்கும் இந்த வடிவங்களுக்கு அடி நாதமாக இருக்கும் அது அழிவற்றது. அதை எந்த அர்ஜுனனாலும் அழிக்க முடியாது.

அழிகின்ற வடிவங்கள் உண்மை இல்லை.

இன்று இருக்கும் என் வடிவம் நேற்று இல்லை. இது நாளை இருக்காது. நேற்று இல்லாத ஒன்று, இன்று எங்கிருந்து வந்தது. இன்று இருக்கும் ஒன்று நாளை எப்படி இல்லாமல் போகும் ?

நிஜம் என்றால் அது நிலைத்து நிற்கும். நிஜம் இல்லாதது தோன்றுவது போல தோன்றி மறைவது போல மறையும். அது உண்மை இல்லை.

வடிவங்களைத் தாண்டி அதன் உண்மையை அறிய வேண்டும். அதுவே மிக உயரிய ஞானம்.

புற வடிவங்களை கடந்து செல்ல வேண்டும்.

அலை தாண்டி கடல் காண்பவன் அறிஞன்.

தோற்றங்களின் மறைவு மரணம் இல்லை.

தோற்றங்களுக்கு பின்னால் இருக்கும் அதற்கு மரணம் என்பதே இல்லை.

இதை அறிந்தவனுக்கு மரண பயம் இருக்காது.

கீதை இதைப் பற்றி இன்னும் விரிவாக சொல்ல இருக்கிறது. மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/217.html

Saturday, September 15, 2018

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?


नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥

நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||

ந = இல்லை

அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது

வித்³யதே = உள்ளது

பா⁴வோ = இருப்பது

ந = இல்லை

அபாவோ = இல்லாதது

வித்³யதே = அது

ஸத:|  = உண்மையில்

உப⁴யோ = இரண்டிலும்

அபி = அது அன்றி

த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்

அந்த  = அந்தம், முடிவு, இறுதி

து = ஆனால்

அநயோ = அந்த இரண்டில்

தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.


இதற்கு முன் இல்லாதது உண்மையாகாது. உண்மையானது இனிமேல் இல்லாமல் போகாது. ஞானிகள் இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிவார்கள். 


என்னவோ கண்ணன் பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறான் என்று பார்த்தால், பழையபடி குழப்புகிறானே. இல்லாதது உண்மையானது. உண்மையானது இல்லாமல் போகாது என்று. அப்படினா என்ன அர்த்தம்? தல சுத்ற  மாதிரி இருக்கா ?

கீதையில் எவ்வளவோ முக்கியமான, ஆழமான ஸ்லோகங்கள் இருக்கின்றன. நீங்கள் இந்த ஒரு ஸ்லோகத்தை முழுமையாக அறிந்து கொண்டால், முழு கீதையையும் அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.

அவ்வளவு அர்த்தம் செறிந்த ஸ்லோகம்.

இந்த சுலோகத்தின் உள்ளே ஒரு மிகப் பெரிய உண்மை புதைந்து கிடக்கிறது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மையாகாது. எது உண்மையோ, அது இல்லாமல் போகாது.

இது சுலோகம்.

மூன்று காலங்களை எடுத்துக் கொள்வோம்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.

நாம் நிகழ் காலத்தில் எவ்வளவோ பார்க்கிறோம். கேட்கிறோம். தொட்டு உணர்கிறோம். நம் புலன்கள் இந்த உலகை நிகழ் காலத்தில் அனுபவிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை இதுதான் நிஜம். யதார்த்தம். உண்மை எல்லாம்.

என் மனைவி, கணவன், பிள்ளைகள், நான் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், உறவுகள் எல்லாம் நிகழ் காலத்தில் நிகழ்கின்றன. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவை தான் உண்மை.

சரி தானே ? அதில் சந்தேகம் இல்லையே. கடந்த காலம் இப்போது இல்லை. எதிர் காலம் இனி மேல் வரப் போவது.  இறந்த காலமும், எதிர் காலமும் கற்பனையில் உள்ளவை. நிகழ் காலம் மட்டும்தான் நிஜம்.

சரி தானே ?

இல்லை என்கிறது கீதை.

எது இல்லாமல் இருந்ததோ, எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அது ஒரு போதும் உண்மையாக இருக்காது.

எது இறந்த காலத்தில் இல்லாமல் இருந்து, எதிர் காலத்திலும் இல்லாமல் போகப் போகிறதோ, அது நிகழ் காலத்திலும் இருக்க வாய்ப்பில்லை.

இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் இல்லை என்றால், நிகழ் காலத்தில் மட்டும் எப்படி இருக்கும் ?

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம்.

தெருவில், இருட்டில் ஒரு கயிறு கிடக்கிறது. அதை பாம்பு என்று நினைக்கிறோம். சற்று அருகில் சென்று உற்று பார்த்த பின், அது பாம்பு அல்ல ஒரு கயிறு என்று அறிகிறோம்.

சற்று முன் வரை (இறந்த காலத்தில்) பாம்பு இருந்தது. அது கயிறு என்று அறிந்த பின், எதிர் காலத்தில் அந்த பாம்பு இல்லை, கயிறு மட்டும் தான் இருக்கிறது.  எனவே, பாம்பு என்பது உண்மை இல்லை என்று தெரிகிறது அல்லவா ?

அது மட்டும் அல்ல, கயிறு என்பது எதிர் காலத்தில் இருக்கிறது. அது இறந்த காலத்தில் இல்லை. இறந்த காலத்தில் நம்முடைய உண்மை என்பது அது ஒரு பாம்பு என்பதே. எனவே, கயிறு என்பதும் உண்மை இல்லை. இப்போது கயிறு என்று நினைக்கிறோம். இன்னும் சற்று அருகில் சென்று, வெளிச்சம் அடித்துப் பார்த்தால் அது ஒரு வேளை துணியாக இருக்கலாம், அல்லது உதிர்ந்த மாலையாக இருக்கலாம். தெரியாது. எது கடந்த காலத்தில் இல்லையோ, அது நிஜமாக இருக்க முடியாது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மை இல்லை.

எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அதுவும் உண்மை இல்லை.

எது உண்மை என்றால், அது இறந்த காலத்திலும் இருக்க வேண்டும், எதிர் காலத்திலும் இருக்க வேண்டும்.  அதுவே உண்மை. அதுவே நிரந்தரமானது.

கனவு காண்கிறோம். புலி துரத்துவது போல பயங்கர கனவு. புலி நம் மேல் பாய்கிறது. அந்த இறுதி நொடியில் நாம் விழித்துக் கொள்கிறோம். வியர்த்து கொட்டுகிறது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொள்கிறது.

அந்த புலி நிஜமில்லை. ஏன் ?

நாம் படுக்கப் போகும் போது அந்த புலி இல்லை. நாம் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டவுடன் , அந்த புலி இல்லை.

அந்தப் புலி நிகழ் காலத்தில் இருந்தது. ஆனால், அது இறந்த காலத்திலும் இல்லை, எதிர் காலத்திலும் இல்லை. எனவே அது நிஜம் இல்லை.

நிகழ் காலத்தில் இருப்பது எல்லாம் நிஜம் அல்ல.

இந்த கனவு, கயிறு, பாம்பு எல்லாம் பழைய கதை. அதெல்லாம் சரி, அதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் ?

நாம் குழந்தையாக இருந்தோம். இப்போது குழந்தையாக இல்லை. எதிர் காலத்தில் குழந்தையாக இருக்கப் போவது இல்லை. இப்போது உங்களைப் பார்த்து நீங்கள் குழந்தையா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லுவீர்கள். "ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தீர்களே , இப்போது எப்படி இல்லாமல் போவீர்கள் " என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

"ஆமாம் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தேன். அது ஒரு கால கட்டம். அதற்காக எப்போதுமே குழந்தையாகவே இருக்க முடியுமா. அது அந்தக் காலம். இப்போது நான் ஒரு நடு வயது ஆண் / பெண் . அது தான் உண்மை " என்று சொல்லுவீர்கள் அல்லவா ?

இப்போது நடு வயதில் இருக்கிறோம்.  இது உண்மையா ? இதுவும் உண்மை இல்லை.

இதுவும்  மாறும். இல்லையா.

அப்படி எது மாறிக் கொண்டே இருக்கிறதோ, அது உண்மையானது அல்ல.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற மூன்று கட்டத்திலும் மாறாமல் இருப்பது எது ?

உடல் மாறுகிறது. எனவே அது உண்மை இல்லை.

அறிவு மாறுகிறது. அதுவும் உண்மை இல்லை.

மனம் மாறுகிறது. எனவே அதுவும் உண்மை இல்லை.

பின், அனைத்து நிலைகளிலும் மாறாமல் இருப்பது எது ? அதுதான் உண்மை.

"நான்" குழந்தையாக இருந்தேன். "நான்" இளைஞனாக இருக்கிறேன். "நான்" வயோதிகனாக மாறுவேன் என்று சொல்லும் போது, அந்த "நான் " யார் ?

இத்தனை மாற்றத்திலும் மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அலை எழுகிறது, வீழ்கிறது. அது உண்மை இல்லை. அதற்கு அடியில் இருக்கும் கடல் உண்மை.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற இந்த எழும், விழும் அலையின் அடியில் இருக்கும் அந்த  கடல் எது ?

மாறிக் கொண்டே இருக்கும் உடல், அறிவு, மனம் என்ற மாற்றத்தின் அடியில் அதை தாங்கிப் பிடிக்கும் அந்த ஒன்று எது ?

பாம்போ, கயிறோ, துணியோ, மாலையோ ...இந்த அனைத்துக்கும் அடியில் ஏதோ ஒன்று இருக்கிறதே , அது எது. அதுவே உண்மை.

பொய்யாயின வெல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானமாய்  நின்று மிளிர்கின்ற மெய் சுடரே

என்பார் மணிவாசகர்.

பொய் எல்லாம் போய் விட்டால், எது நிற்கிறதோ, அதுவே மெய்.

அது தான் மெய் ஞானம் என்று சுடர். தீபம். ஜோதி.

ஒளி வீசும் அந்த அறிவு. மெய் உணர்வு.

கணவன்/மனைவி என்பவர்கள் திருமணத்துக்கு முன் இல்லை, திருமணத்துக்குப் பின் இருக்கிறார்கள். முன் இல்லாத ஒன்று உண்மை அல்ல.

பிள்ளைகள் , பிறக்கும் முன் இல்லாமல் இருந்தார்கள். பின் வந்தார்கள். அதுவும் உண்மை இல்லை.

அனைத்து அனுபவங்களும் அப்படியே. தோன்றி மறைவன . உண்மை இல்லை.

எது உண்மை ?

அனுபவங்களை அறியும் , உணரும் அந்தத் தன்னுணர்வு (Consiousness, awareness ) அது தான் உண்மை.

உறவுகளை, உணர்வுகளை, அனுபவங்களை அறியும் அந்த மெய் ஞானம் , அது மட்டும் தான் உண்மை.

இதை ஆழமாக பதிவு செய்து   கொள்ளுங்கள். இதைப் பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

போக்கும் வரவும் புணர்வுமில்லா புண்ணியனே .....(திருவாசகம்)

http://bhagavatgita.blogspot.com/2018/09/216.html













Friday, September 14, 2018

பகவத் கீதை – 2.15 – சாகாமல் இருக்க வழி

பகவத் கீதை – 2.15 – சாகாமல் இருக்க வழி 


यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते॥१५॥

யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||

யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
யேதே = அவை
புருஷம் =  மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துகஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்

இன்பத்தையும், துன்பத்தையும் எவன் சரி சமமாக பார்கிறானோ, அவன் சாவை வென்று நிலைத்து நிற்பான். 

இது என்ன ஒண்ணும் புரியலையே. இன்பத்தையும், துன்பத்தையும் எப்படி சரி சமமாக  பார்ப்பது? அப்படியே பார்த்தாலும், எப்படி இறவா நிலை அடைய முடியும் ? சரி அப்படியே அடைந்தாலும், அதனால் என்ன பலன் கிடைக்கும்? இன்பமும் துன்பமும் ஒன்று என்றால், அது ஒரு வாழ்க்கையா ? கல்லு மாதிரி, மரக் கட்டை மாதிரி...அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?

வாழ்க்கை நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாம் சரியாக படிக்கும் வரை, பாடங்கள் தொடரும்.

சில பேர் துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன காரணம்? வாழ்க்கை தரும் பாடத்தை படிப்பது இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்ற ஆசிரியன் சலிப்பதே இல்லை. எத்தனை முறை தவறு செய்தாலும், பொறுமையாக முதலில் இருந்து ஆரம்பிக்கும். நம்மால் தான் தாங்க முடிவது இல்லை.

சரி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

நாம் தவறுகளை திருத்திக் கொண்டே போனால், ஒரு நாள் நாம் முழுமை (perfection ) அடைவோம். முழுமை அடைந்த பின், மீண்டும் ஒன்றைச் செய்யத் தேவை இல்லை. அது தான் உச்சம். அது தான் உன்னதம்.

தவறு செய்வதும், அதை திருத்துவதும் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து  வாழ்வதைப் போல.

வாழ்க்கை என்பது என்ன ? அனுபவங்களின் தொகுப்பு.

அனுபவம் என்பது என்ன, புலன்கள் மூலம் நாம் பெறும் உணர்வு.

இங்கே பிறப்பு இறப்பு என்பது ஒரு அனுபவம் பிறப்பதும், பின் அந்த அனுபவம் மறைந்து இன்னொரு புதிய அனுபவம் பிறப்பதும் ஆகும்.

இந்த அனுபவச் சங்கலி எப்போது மறையும் ? அதுவே இறப்பற்ற நிலை.

முந்தைய ஸ்லோகத்தில் வெப்பம் குளிர் , இவை இயற்கையானவை. இவற்றைப் பொருட்படுத்தாதே  என்றான் கண்ணன்.

இங்கே, இன்பம் துன்பம் இவற்றை பொருட்படுத்தாதே என்கிறான்.

ஒரு உன்னத நிலையை நோக்கி நாம் நகரும் போது நமக்கு துன்பங்கள் ஒரு  பொருட்டாகத் தெரிவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த துன்பமே  கூட சுகமாகத் தெரியும்.

இது என்ன புது கதையாக இருக்கிறதே என்கிறீர்களா ? துன்பம் எப்படி இன்பமாக முடியும் ?

முடியும்.

எந்த ஒரு தாயையும் கேட்டுப் பாருங்கள். பிள்ளை பெறுவது சுகமா, துக்கமா என்று. துன்பம்தான், வலி தான், தாங்க முடியாத வலிதான். இருந்தும் அவள் அதை ஏன் ஏற்றுக் கொள்கிறாள்? அதுவும் சந்தோஷமாக? நோக்கம்  உயரியதாக இருக்கும் போது வலி தெரியாது.

எந்த தகப்பனையும் கேட்டுப் பாருங்கள். நாலு காசு சம்பாதிக்க என்ன பாடு பட வேண்டி இருக்கிறது என்று. வலி தான். துக்கம் தான். அவமானம் தான். இருந்தும் தன் குடும்பத்தின் எதிர்காலம் கருதி அவன் அவன் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான்.

நோக்கம் உயர்வனாதாக இருக்கும் போது, துன்பம் தெரிவதில்லை.

அந்தத் துன்பங்களை சரி சரி என்று ஏற்றுக் கொண்டு சென்றால், நோக்கத்தை அடையலாம்.

இதெல்லாம் சின்ன சின்ன உயரிய நோக்கங்கள். பிள்ளை பெறுவது, வீட்டுக்காக சம்பாதிப்பது எல்லாம். ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்.

வாழ்க்கையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நோக்கி செல்வபர்கள், வழியில் வரும் துன்பங்களை பெரிதாக நினைக்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட தந்த உதாரணங்கள்.

பிள்ளை பெற்ற பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தாய்க்கு.

குடும்பம் தலை எடுத்த பின், பட்ட துன்பம் எல்லாம் மறந்து போய் விடுகிறது ஒரு தந்தைக்கு.

வாழ்வின் உன்னத இலட்சியங்களை அடைந்த பின், அதற்காக பட்ட துன்பங்கள் மறந்து  போய் விடும்.

எனவே, துன்பத்தைக் கண்டு கலங்கி நிற்க்கக் கூடாது. அப்படி கலங்கி நின்றால், ஒன்றும் செய்ய முடியாது. உயர்ந்தவற்றை அடைய முடியாது.

சரி, அப்படி என்ன பெரிய உயர்ந்த இலட்சியம் இருக்கிறது ?

இருக்கிறதே. 

http://bhagavatgita.blogspot.com/2018/09/215.html

Wednesday, August 29, 2018

பகவத் கீதை - 2.14 - பொறுத்துக் கொள்

பகவத் கீதை - 2.14 - பொறுத்துக் கொள் 


मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत॥१४॥

மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||



மாத்ரா = பொருள்கள், இயற்கை

ஸ்பர்ஸா = உணர்ச்சி

து = அது

கௌந்தேய = குந்தி புத்திரனே

ஸீ²த  = குளிர்ச்சி

உஷ்ண = சூடு

ஸுக = சுகம்

து³:க²தா³: = துக்கம்


ஆக³ம் = வரும்

அபாயிநோ = போகும்

அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது

தாம் = அவை

ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்

பா⁴ரத  = பாரத குல தோன்றலே



குந்தியின் மகனே, பாரத குலத் தோன்றலே, குளிரும், வெப்பமும், இன்பமும், துன்பமும் ஆகிய இந்த இயற்கையின் தீண்டல்கள் நிரந்தரமானவை அல்ல. இவற்றை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும். 


இன்பம் வந்தால் அந்த இன்பம் அப்படியே வாழ் நாள் எல்லாம் தொடர வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். துக்கம் வந்தால், இந்த துக்கம் சீக்கிரம் முடியாத என்று வருந்துகிறோம். ஒரு வேளை இந்த துக்கத்தில் இருந்து நாம் விடுபடவே முடியாதோ, இது இப்படியே இருந்து விடுமோ என்று பயப்படுகிறோம். 

இன்பம் மட்டும் வேண்டும்; துன்பம் வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம். 

எப்படி ஒரு வருடத்தில் குளிர் காலமும், வெயில் காலமும் வந்து வந்து போகிறதோ, அதே போல இன்பமும் துன்பமும் வந்து வந்து போவது இயற்கை.  

வாழ்க்கைப் பயணம் இன்பம் , துன்பம் என்ற இரண்டின் வழியாகத்தான் போகும். இது தவிர்க்க முடியாதது. 

கீதை என்ன சொல்ல வருகிறது என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 

குளிர் காலம் வரும். நாம் என்ன செய்தாலும், எவ்வளவு வருந்தினாலும், எவ்வளவு அது வரக் கூடாது என்று ஆசைப் பட்டாலும், பிரார்த்தனை பண்ணினாலும் அது பாட்டுக்கு வரும். வந்தே தீரும். சரி, வந்து விட்டதே என்று சோர்ந்து உட்கார்ந்து விட்டால், அது போகுமா என்றால் போகாது. எவ்வளவு நாள் இருக்க வேண்டுமோ  அவ்வளவு நாள் இருந்து விட்டுத் தான் போகும். 

ஐயோ, குளிர் காலம் வந்து விட்டதே என்று வருந்துவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?  அதே போல, அடடா இந்த கோடை காலம் போட்டு இப்படி வறுத்து எடுக்கிறதே  என்று வருந்துவதில் ஏதாவது பலன் உண்டா? இல்லை அல்லவா? அதே போல துன்பம் வந்த காலத்தில் வருந்துவதில் ஒரு பயனும் விளையாது. 

அது இயற்கை. அது அப்படித்தான் இருக்கும். நாம் அதை ஒன்றும் செய்ய முடியாது. 

அது மட்டும் அல்ல, ஒரு காலத்தில் இன்பம் தந்த ஒன்று பிற்காலத்தில் அதுவே நமக்கு துன்பம் தரலாம். 


இன்பம் வேண்டும் என்றுதான் திருமணம் செய்து கொள்கிறோம். முதலில் இன்பமாகத்தான் இருக்கிறது. அந்த இன்பம் அப்படியே இருக்கிறதா ? அதுவே துன்பமாக மாறிப் போவது இல்லையா ?


மனைவியோடு ஸ்விட்சர்லாந்து, நைனிட்டால் என்று குளிர் பிரதேசத்தில் தேனிலவு போன போது சுகம் தந்த குளிர் வயதான காலத்தில் மூட்டு வலியை அதிகப் படுத்துகிறது. 

சுவை தந்த ஐஸ் கிரீம் , சர்க்கரை நோய் வந்த வயதான காலத்தில் உயிருக்கே உலை வைத்து விடும். 

எதுவும் நிரந்தரம்  இல்லை இங்கே.

இன்பத்தின் கருவில் துன்பம் இருக்கிறது. துன்பத்தின் கருவில் இன்பம் இருக்கிறது. 

இன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இது நிரந்தரம் அல்ல. இது போய் விடும் என்று. 

துன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இதுவும் நிரந்தரம் அல்ல. இதுவும் போய் விடும் என்று. 

எல்லாமே இப்படி நிரந்தரம் இல்லாமல் போய் கொண்டே இருந்தால், இவற்றை அறிவதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது ? 

எல்லாமே அநித்தியம் என்று சாமியார் மாதிரி இருக்கவா சொல்கிறது கீதை? 

இல்லை. 

பின் கீதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது ? 

வாருங்கள், கீதையின் விரல் பற்றி நடப்போம். அது கூட்டிச் செல்லும் வழியில் சென்று   அது உணர்த்துவதை அறிவோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/214.html

Saturday, August 25, 2018

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும்

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும் 




देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தே³ஹிநோऽஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||


தேஹிநா = உடலை உடையவன்

அஸ்மிந் = இந்த


யதா = அப்படியே

தேஹே  = உடல்

கௌமாரம் = குழந்தைப் பருவம்

யௌவநம் = இளமைப் பருவம்

ஜரா = முதுமை பருவம்

ததா = எப்படியோ

தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவைத்தைப் போல

தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்

தத்ர = அது போல

ந = இல்லை

முஹ்யதி = குழப்பம


உடலுக்கு எப்படி குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மூப்பு என்று தோன்றுகிறதோ அது போல உடலை உடையவனுக்கும். தீரன் இவற்றைப் பற்றி கலங்க மாட்டான். 

உரை

பயத்தில் பெரிய பயம், மரண பயம். மரணம் பற்றி பயப்படாதவர்கள் யார்? தன் மரணம், தனக்கு நெருங்கிய உறவினர் மரணம் இரண்டுமே துக்கம் தான்.

எத்தனை வருடத்தில் ஒருவர் இறந்தாலும், அந்த மரணம் எப்படியோ சிலருக்கு துக்கத்தை உண்டாக்கத்தான் செய்கிறது.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அறிவு ஏற்க மறுக்கிறது. அது எப்படி துக்கம் இல்லாமல் போகும் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது.

கீதை என்ன சொல்கிறது?



நாம் குழந்தையாக இருந்தோம். பின் இளமைப் பருவத்தை அடைந்தோம்.  பின் முதுமை பருவத்தை அடைகிறோம். இல்லையா. அதில் சந்தேகம் இல்லையே.


நாம் ஒரே சமயத்தில் குழந்தையாகவும், இளைய வயது உடையவராகவும் இருந்து இருக்கிறோமா ?

ஒரே சமயத்தில் இளைய வயது உடையவராகவும், வயதானவராகவும் இருந்து இருக்கிறோமா ?

இல்லை அல்லவா ?

குழந்தை என்பது மறைந்து, இளமை பிறக்கிறது. இளமை மறைந்து மூப்பு தோன்றுகிறது.

அதாவது, குழந்தையின் மரணத்தில் இளமை, இளமையின் மரணத்தில் முதுமை ஜனனம்.

ஒன்று மறைந்தால் தான், இன்னொன்று தோன்றும்.

விதை அழிந்தால் தான் விருட்சம் தோன்றும்.

விதையும் வேண்டும், விருட்சமும் வேண்டும் என்றால் முடியுமா ?

கூட்டுப் புழு மறைந்தால் தான் பட்டுப் பூச்சி தோன்றும்.

குழந்தை, இளமை,முதுமை என்று நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.

நமது ஒரு வயது படத்தைப் பார்த்தால் நமக்கே நம்மை அடையாளம் தெரியாது.

அந்த குழந்தை யாரோ மாதிரி இருக்கும்.

90 வயது தாத்தா, தனது 18 வயது படத்தைப் பார்த்தால் "இது நானா " என்று கேட்பார்.

குழந்தை மறைந்து விட்டது.

இளமைப் பருவம் மறைந்து விட்டது.

ஆனால், இந்த உடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் தான் குழந்தை, நான் தான் இளைஞன், நான் தான் முதியவன்.

இந்த உடல் மாறி விட்டது. ஆனால், நான் மாறவில்லை. இந்த அனைத்து நிலைகளிலும் இருப்பவன் "நான்".

யார் இந்த நான் ?

மாறும் இந்த நிலைகளுக்கு நடுவில், மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அந்த நான் என்பது இந்த உடல் இல்லை என்று தெரிகிறது. ஏன் என்றால் இந்த உடல் மாறுகிறது. நான் மாறாமல் இருக்கிறது.

மாறாத அந்த நான் யார் ? குழந்தை, இளமை, மூப்பு வரை வந்த அந்த நான் இதோடு நின்று விடுமா ? அல்லது இன்னும் தொடருமா ?

"உடல் எப்படி மாறி மாறி வருகிறதோ, அது போல அந்த உடலை கொண்ட அதுவும் தொடர்ந்து மாறி மாறி வரும் "

என்கிறது கீதை.

கீதை , உடல், உடலைக் கொண்டது என்ற இரண்டு வார்த்தைகளை கையாள்கிறது.

தேஹே , தேஹினா ...உடல், உடலைக் கொண்டது. ஆத்மா என்று நேரடியாகச் சொல்லவில்லை.

உடல் வேறு, உடலை செலுத்தும் அது வேறு என்று அடையாளம் காட்டுகிறது கீதை.

இந்த வேறுபாட்டை அறிந்தவன் மரணத்தை கண்டு கலங்க மாட்டான் என்கிறது கீதை.

இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கீதை என்ற நீண்ட பயணத்தில் முதல் அடி இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வது.

அடுத்தது, இதை விட மிக மிக ஆழமான கருத்தை கூற இருக்கிறது.

இதை முதலில் மனத்தில் நிறுத்துங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்பதை உணருங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்றால், மற்றவர்களும் அவர்களின் உடல் அல்ல என்று புரிகிறது அல்லவா ?

பின் தாய், தந்தை, உறவு, பகை, நட்பு, கருணை , பாசம், கோபம், பொறாமை என்பதெல்லாம் யாருக்கு யார் மேல் வருகிறது ?

இதை அறிவது தான் கீதையை அறிவது.

கண்ணன் சிலைக்கு மாலை போடுவது, ஊதுவத்தி கொளுத்துவது, விரதம் இருப்பது, பட்சணம் செய்வது சாப்பிடுவது அல்ல கீதையின் நோக்கம்.

தன்னைத் தான் அறிவது தான்  கீதையின் நோக்கம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/213.html

Tuesday, August 21, 2018

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும்

பகவத் கீதை - 2.12 - இல்லாமல் இருந்ததும் இருக்கப் போவதும் 



नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||


ந = இல்லை

து = நீ

எவ = நிச்சயமாக

அஹம் = நான்

ஜாது = எப்போதும்

நா  = இல்லை

அஸம் = இருத்தல்

ந = இல்லை

த்வம் = நீ

ந = இல்லை

இமே = இவர்கள்

ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்

ந = இல்லை

எவ = நிச்சயமாக

ந = இல்லை

ப⁴விஷ்யாம: = இருப்போம்

ஸர்வே = அனைவரும்

வயம் = நாம்

அத = இதில் இருந்து, இங்கிருந்து

பரம் = எதிர் காலத்தில்


இதற்கு முன் நான் இல்லாமல் இருந்தது இல்லை. நீயும் மற்ற அரசர்களும் அப்படியே. இனியும் எதிர்காலத்தில் நாம் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை. 


மிக மிக ஆழமான, அர்த்த செறிவு கொண்ட ஸ்லோகம். இதற்கு எத்தனையோ பேர் எவ்வளவோ விதமாக வியாக்கியானம் எழுதி விட்டார்கள்.

ஸ்லோகத்தின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

நான் கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்க்கிறேன்.

நாம் கொஞ்ச காலத்துக்கு முன் பிறந்தோம். இன்னும் கொஞ்ச காலத்தில் இறப்போம். இல்லாமல் போவோம். அவ்வளவுதானே வாழ்க்கை.

இல்லை என்கிறது கீதை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறீர்கள். இறந்த பின்னும் இருக்கிறீர்கள் என்கிறது கீதை.

நீங்கள்  ,மட்டும் அல்ல எல்லோருமே அப்படித்தான் என்கிறது கீதை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம்.

நாம் தோன்றினோம் என்றால் இதில் இருந்து தோன்றினோம்? ஏதோ ஒன்றில் இருந்துதானே  தோன்றி இருக்க முடியும்? சூன்யத்தில் இருந்து தோன்ற முடியாதே ?

நாம் மறைக்கிறோம் என்றால், ஏதோ ஒன்றினுள் நாம் மறைந்து போகிறோம் என்றுதானே அர்த்தம். ஒன்றும் இல்லாமல் காணாமல் போக முடியாதே ?

எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம்.

இது இரண்டும் நமக்குத் தெரிய வேண்டும்.

விதை இருக்கிறது. விதையில் இருந்து செடி வருகிறது. செடியில் இருந்து மரம் வளர்கிறது. மரம் பூத்து, காய்த்து, கனி தந்து, அதில் இருந்து இன்னொரு விதை வருகிறது.

இந்த புதிய விதைக்கு பழைய விதை ஆதாரம். அந்த பழைய விதையில் இருந்து புதிய விதை வந்தது.

இந்த புதிய விதை விழுந்து, மறைந்து இன்னொரு செடி மரம் பூ காய் கனி விதை என்று மீண்டும் ஒரு சூழல் வரும்.

எந்த ஒரு விதையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு எத்தனையோ முந்தைய வடிவங்கள் இருக்கிறது. அதற்கு எத்தனையோ பிந்தைய வடிவங்களும் இருக்கப் போகின்றன.

சரி, இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


கடலில் அலை எழுகிறது. புதியதாய் ஒரு அலை தெரிகிறது. அது உயர்ந்து எழுந்து, பின் விழுந்து மறைகிறது. மறைந்த அந்த அலையில் இருந்து இன்னொரு புதிய அலை உருவாகிறது.

எந்த ஒரு அலைக்கும் கணக்கில் அடங்கா எத்தனையோ பழைய அலைகள் உள்ளன. அதில் இருந்து எத்தனையோ புதிய அலைகள் பிறக்க இருக்கின்றன.

நாம் ஒரு அலையை மட்டும் பிடித்துக் கொண்டு, அடடா, இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று மகிழ்கிறோம். ஐயோ, அந்த அலை உடைந்து விட்டதே , அழிந்து விட்டதே என்று அழுகிறோம்.

இது புத்திசாலிகள் செய்யும் செயலா ?

ஒருவன் கடற் கரையில் நின்று கொண்டு, ஐயோ, நான் என்ன செய்வேன். எனக்கு துக்கம் தாளவில்லையே. எத்தனயோ அலைகள் இறந்து போய் விட்டனவே என்று  அழுது கொண்டிருந்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

சரி, உயிர் இல்லாத அலையும், உயிர் உள்ள மனிதர்களும் ஒன்றா என்று கேட்டால், ஒன்று இல்லைதான்.

ஆனால், மனிதன் தோன்றுவதும், வளர்வதும், அழிவதும் ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது தானே. அலை போல் எழுவதும் விழுவதும் சகஜம் தானே. இதில் பிறந்த உடன் சிரிப்பதும், இறந்தவுடன் அழுவதும் என்ன சிறப்பு சேர்க்கும்?

காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. தோன்றுவதும், வளர்வதும், அழிவதும்  மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.

இதை நிறுத்த நினைப்பது அறிவீனம்.

நிறுத்தவும் முடியாது. கூடாது.

நாம் இன்று இருக்கிறோம் என்றால், எத்தனையோ யுகங்களாக  நாம்  பிறந்து  வளர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம். இது புதிய வாழ்க்கை அல்ல. மீண்டும் மீண்டும் மாறி மாறி  நிகழ்ந்து கொண்டே இருப்பதன் ஒரு சிறு நிகழ்வுதான் இந்த வாழ்க்கை.

இதை ஒரு தொடராக பார்க்க வேண்டுமே தவிர ஒரு தனித்த நிகழ்வாக பார்க்கக் கூடாது.

நான் முன் ஜென்மம், மறு ஜென்மம் என்று கூறவில்லை.

எந்த ஒரு விதையும் அதற்கு முந்திய விதையின் மறு பிறவியோ அல்லது இனி வரும் விதையின் முற் பிறவியோ அல்ல.

அது தோன்றியது , மறைகிறது. மீண்டும் தோன்றும். மறையும்.

அவ்வளவுதான்.

சிந்தித்துப் பாருங்கள் - இந்த உடல், இவ்வளவு எடை, எலும்பு, தோல், தசை எல்லாம் எப்படி வந்தது ? உணவில் இருந்து, காற்றில் இருந்து, சூரிய ஒளியில் இருந்து. நாம் ஒரு வேதியல் கலவை. இந்த கலவை மாறிக் கொண்டே இருக்கிறது. இறப்பும் ஒரு கலவை தான். வாழ்வு எப்படி ஒரு கலவையோ அது போல.

யோசியுங்கள்.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

இது ஒரு வித சிந்தனை. அவ்வளவுதான்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/212.html







Sunday, August 19, 2018

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை 



श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः॥११॥

ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

அஸோ²ச்யந் = வருந்தாதே

அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே

த்வம் = நீ

ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்

வாதா³ம் = வாதம், சொற்கள்

ச = மேலும்

பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்


கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)

ந = இல்லை

கதாஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்

ச = மேலும்

நா = இல்லை

அநுஸோ²சந்தி = வருத்தம்

பண்டி³தா:  = ஞானிகளுக்கு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: யாருக்காக வருத்தப் பட வேண்டாமோ அவர்களுக்காக நீ வருந்துகிறாய். இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் ஞானிகள் வருந்த மாட்டார்கள். 


பதின்மூன்று வருடங்கள் பாண்டவர்கள் காட்டில் இருந்தார்கள். கண்ணன் அவர்களுக்கு அப்போது கீதையை சொல்லி இருக்கலாம். ஒரு அவசரமும் இல்லாமல், நிறுத்தி நிதானமாக சொல்லி இருக்கலாம். அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் சொல்லி இருக்கலாம். அங்கெல்லாம் சொல்லவில்லை. போர் முனையில், சங்குகள் முழங்கிய பின், சண்டை தொடங்கும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?


உயர்ந்த உண்மைகளை அறிந்து கொள்ள ஒரு மன நிலை வேண்டும். ஒரு தாகம் வேண்டும்.  ஒரு தவிப்பு வேண்டும். ஏதோ காட்டில் பொழுது போகவில்லை. "நீ கீதை சொல்லு, நாங்க கேட்கிறோம்" என்று கேட்டால், அதில் ஒரு பலனும் இருக்காது.



இரண்டாவது, மனிதன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறான்.  எல்லாம்  தெரிந்தவனுக்கு எதைச் சொல்வது? எப்படி சொல்வது? கோப்பை காலியானால் அல்லவா அதில் மேலும் எதையாவது ஊற்ற முடியும்.



அர்ஜுனன், "எனக்கு ஒன்றும் தெரியாது. உன் சரண். நான் உன் சீடன். எனக்கு கட்டளை இடு" என்ற நிலை வந்தபின் தான் அவனுக்கு கீதை தரப் பட்டது. அந்த பக்குவம் வர வேண்டும்.


கண்ணன் கீதை சொன்னபோது , அந்த போர்க்களத்தில் பலர் இருந்திருப்பார்கள். அவர்களுக்கும், கண்ணன் சொன்னது கேட்டிருக்கும். இருந்தும் பயன் இல்லை. கற்பூரம் சுமந்த கழுதையாக அவர்கள் இருந்திருப்பார்கள்.



நாம் அப்படி இருக்கக் கூடாது. அர்ஜுனனாக இருந்து, அந்த தாகத்தோடு, அந்தத் தவிப்போடு, அந்த சரணாகதி மனதோடு  கீதையை உணர வேண்டும்.


சரி, இந்த சுலோகத்துக்கு வருவோம்.


கண்ணன் சொல்கிறான், "யாருக்காக வருந்தத் தேவை இல்லையோ, அவர்களுக்காக நீ வருந்துகிறாய். ஞானிகள் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும்  வருந்துவது இல்லை " என்று.


நமக்கு மிக வேண்டியவர்கள், நம்மோடு அன்பாக இருந்தவர்கள், உறவாக இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள் இறந்து போனால் நாம் வருந்துகிறோம். அழுகிறோம். அவர்கள் போய் விட்ட சோகத்தில் தவிக்கிறோம்.


நாம் எதற்காக வருந்துகிறோம்?


இறந்து போனவர்களுக்காகவா ? அவர்கள் தான் இறந்த போய் விட்டார்களே? அவர்களுக்கு ஒரு வலியும் இல்லை. துன்பமும் இல்லை. அவர்களுக்காக நாம் எப்படி வருந்த முடியும்?


சரி, அவர்களுக்காக இல்லை, அவர்கள் நம்மிடம் இல்லையே என்று வருந்துகிறோம். சரி தானே ? அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்து வருந்துகிறோம்.




அப்படி என்றால், வருத்தம் அவர்கள் பொருட்டு அல்ல. நமக்கு கிடைக்காத ஒரு இன்பத்தைப் பற்றி. அது ஒரு சுயநலமான விஷயம். எனக்கு ஒன்று கிடைக்கவில்லை.அதற்காக நான் வருந்துகிறேன். இது மற்றவர்கள் சார்ந்த விஷயம் இல்லை. என் இழப்பு, என் வருத்தம்.


ஒருவர் இருக்கும் போது வருந்தத் தேவை இல்லை.


அவர்கள் இறந்த பின் அவர்களுக்காக வருந்துவதில் அர்த்தம் இல்லை.


பின், நம் வருத்தத்துக்கு காரணம், நம் சொந்த இழப்பு.


நாம் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும் வருந்துவது இல்லை. நமக்காக வருந்துகிறோம். நம் சந்தோஷ இழப்புக்காக வருந்துகிறோம்.


வாழ்க்கையை சற்றே தள்ளி நின்று பார்த்தால் இது புரியும்.


சில புதிய உறவுகள் வந்தன. சில பழைய உறவுகள் சென்றன. இது நடந்து கொண்டே தானே இருக்கிறது.  இதற்காக மனம் உடைந்து உட்கார வேண்டுமா ?


அது மட்டும் அல்ல.


நாம் மற்றவர்களை எப்படி பார்க்கிறோம்?


உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பல படிமானங்கள் உண்டு.


தூரத்தில் ஒரு உருவத்தைப் பார்க்கிறேன்.


அது பெண் என்று தெரிகிறது. அது கண் என்ற புலன் சொல்லும் படிமம்.


சற்று அருகில் வரும்போது , அட இது என் தாய் என்று தெரிகிறது. அது மனம் என்பது சொல்லும் படிமம். தாய் என்றால், அவள் அன்பு, அவள் அரவணைப்பு எல்லாம் கூடவே வருகிறது. எனக்கு தாயாக இருப்பவள் இன்னொருவருக்கு தாரமாக இருக்கலாம், இன்னொருவருக்கு மகளாக இருக்கலாம். உறவு என்ற படிமம் மனம் சார்ந்தது.


பெண் என்றால் என்ன, தாய் என்றால் என்ன...சில பல செல்களின் தொகுப்பு.  நரம்பு, எலும்பு, சதை, இதயம், மூளை என்ற பலவற்றின் தொகுப்பு என்பது அறிவு தரும் படிமம்.


யாரோ ஒரு பெண் இறந்து போனால் துக்கம் இல்லை. தாய் இறந்து போனால் துக்கம்.


ஏன் ?  மனம் தாய் பற்றிய பழைய சிந்தனைகளை கொண்டு வருகிறது. அந்த பழைய உறவின் தொடர்ச்சி எதிர்காலத்தில் இருக்காதே என்று வருந்துகிறது.


துக்கம் என்பது இப்போது இல்லை.  இறந்த காலத்தில் நடந்தது எதிர் காலத்தில் இருக்காதே என்ற எண்ணம் தான் துக்கம். வருத்தம். இல்லையா ?


இது சரியா ?


இறந்த காலம் சென்று விட்டது. எதிர் காலம் வரவே இல்லை. இரண்டுமே இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப் படலாமா ?


கண்ணன் இன்னும் ஆழமாகப் போகிறான்.


முதல் ஸ்லோகத்திலேயே மடை திறந்தார் போல கொட்டுகிறது, அறிவின் பிரவாகம்.


ஆழ்ந்து சிந்தியுங்கள். கீதையை உள்ளுக்குள் இறங்க விடுங்கள். வாதம் பண்ணி வெளியே நிறுத்தாதீர்கள்.



முழுவதும் படித்த பின், வாதம் பண்ணலாம். அப்போதும்  உங்கள் வாதம் உயிரோடு இருந்தால்.



http://bhagavatgita.blogspot.com/2018/08/211.html

Saturday, August 18, 2018

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன்

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன் 



तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः॥१०॥

தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||


தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)

உவாச = கூறினான் (கண்ணன்)

ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச

ப்ரஹஸந் = புன்னகை பூத்து

இவ = இவ்வாறு

பா⁴ரத| = பாரத குல தோன்றலே

ஸேநயோ = சேனைகளின்

உப⁴யோர் - இரண்டு

மத்⁴யே = மத்தியில்

விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும்

இதம் = இவ்வாறு

வச: = பேசினான்


அப்போது, இரண்டு படைகளுக்கு நடுவில் வருத்தத்துடன் இருந்த அர்ஜூஜனைப் பார்த்து, புன்னகையோடு கண்ணன் இவ்வாறு பேச ஆரம்பித்தான் 

என்ன நிகழ்கிறது இங்கே ?

தனி மனிதன் (அர்ஜுனன்) தான் என்ற அகம்பாவம் அனைத்தையும் விட்டு விட்டு, தான் ஒரு பெரிய ஆள் இல்லை, இந்த உலகில் தான் ஒரு துளி என்று உணர்ந்து, சரண் அடையும் போது , அவனுக்கு உண்மை தரப் படுகிறது 

அர்ஜுனன் தான் பெரிய ஒரு வில்லாளி. ஆற்றல் மிகுந்தவன், அறிவு நிறைந்தவன், பலப் பல வரங்களைப் பெற்றவன் என்று ஆணவத்தோடு இருந்தான். 

அந்த ஆணவம் தான் , உண்மையை அறிய பெரிய தடைக் கல். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் பின் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தால், எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். 

இந்த உடல் தான், தேர். 

இந்த தேரை கொண்டு செல்லும் குதிரைகள், நம் புலன்கள் 

நம் சாமர்த்தியம், அறிவு, செல்வாக்கு என்பதெல்லாம், அர்ஜுனனின் காண்டீவம், அம்பு .

கடைசியில், அனைத்தையும் விடுத்து, முழுவதுமாக சரண் அடைந்து, நீயே சொல் என்று கண்ணனிடம் சரண் அடைந்து விட்டான். 

புலன்களால் செலுத்தப்படும் இந்த உடலினுள் இருக்கும் "நான்" என்ற அகம்பாவம், தன்னை மறந்து சரண் அடையும் போது கீதை என்ற மிகப் பெரிய உண்மையின் தரிசனம் கிடைக்கிறது. 


நானும்தான், கீதை படிக்கிறேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது. கண்ணன் சொல்வது சரியா ? அதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்க ஆரம்பித்தால் , நீங்கள் இன்னும் உங்கள் "நான்" என்ற அகம்பாவத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

கொஞ்ச நேரம் , "நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும்.  கீதையாவது ஒண்ணாவது,  எனக்குத் தெரியாத ஒன்றா " என்ற உங்கள் எண்ணத்தை சற்றே தள்ளி வைத்து விட்டு , அர்ஜுனன் மாதிரி, உன்னிடம் சரண் என்று தன்  காண்டீவத்தை தரையில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்ததைப் போல அமருங்கள். 

உங்களுக்கும் கீதையின் தரிசனம் கிடைக்கும். 

இல்லை, வாதம் தான்  பண்ணுவேன் என்றால், காத்திருக்க வேண்டியது தான். 

அர்ஜுனன் சரண் அடைந்தான் - கீதை கிடைத்தது. 

"நான்" என்ற திரை விலகும் வரை, உண்மையின் தரிசனம் கிடைக்காது. 

திரை விலகினால், கண் முன்னே உண்மை வெளிப்படும். 

உங்கள் இஷ்டம். நான் என்ற எண்ணம் குறுக்கிடாமல் வாசித்தால், கீதை உங்களுக்கும் கிடைக்கும். இல்லை என்றால், ஏதோ ஒன்றை படித்தோம், பொழுது போனது, "வாசிக்க நல்லாத்தான் இருக்கு...நடை முறைக்கு சரி வருமானு தெரியலை" என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். 


என்ன, முடிவு செய்து விட்டீர்களா ? கீதை வேண்டுமா அல்லது பொழுது போக வேண்டுமா என்று....