Friday, March 31, 2017

கீதை - 3.11 - மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள்

கீதை - 3.11 -  மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள் 


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:|
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத ||3-11||


தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை

பாவயதா = வெளிப்படும்படி

அநேந = அதன் மூலம்

தே = அவர்கள்

தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை

பாவயந்து =    செயல் பட்டு

வ: = உங்களுக்கு

பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்

பாவயந்த: = உதவி

ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை

பரம = இறுதி நிலை, உன்னத நிலை

வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்

||3-11||

இதனால் நீங்கள் தேவர்க்ளை பற்றி எண்ணுங்கள். அவர்கள் உங்களை எண்ணுவார்கள். இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி உயர்ந்த நிலையை அடைய முடியும். 

அது என்ன நீங்கள் தேவர்களை நினையுங்கள், தேவர்கள் உங்களை நினைப்பார்கள் ? யார் அந்த தேவர்கள். அவர்கள் எப்படி நமக்கு உதவி செய்வார்கள்.

தேவர்கள் என்று இங்கே கூறப்படுவது தெய்வீகத் தன்மை.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை, ஆற்றல் ஒளிந்து இருக்கிறது. Potential என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


பெரும்பாலானவர்கள் ஏதோ படித்தோம், ஏதோ ஒரு வேலை கிடைத்தது செய்கிறோம். சம்பளம் வருகிறது. அதன் மூலம் குடும்பம் நடக்கிறது என்று வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.

கீதை ஒரு மாற்று வழியை சொல்கிறது.

முதலில் உங்களின் திறமை, ஆற்றல், ஆவல் இதில் இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.

"தேவர்களை எண்ணிப் பாருங்கள் "

திறமை எது என்று கண்டு பிடித்தவுடன் அந்தத் திறமையை பயன்படுத்துங்கள்.

எப்போது உங்கள் திறமை, ஆற்றலை நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் ஒரு உற்சாகத்தை அடைவீர்கள். அது சுகமா இருக்கும். அதை மேலும் மேலும் வளர்க்க முனைவீர்கள்.

அப்படி உற்சாகமாக செய்யும் வேலையில் சம்பளம் என்ன, பதவி உயர்வு என்ன என்றெல்லாம் பார்க்க தோணாது. நல்லா செய்யணுமே, சீக்கிரம் செய்யணுமே, எப்படியாவது இதை செய்து முடிக்க வேண்டுமே என்ற ஆர்வமே மேலோங்கி நிற்கும்.

அப்படிப்பட்ட வேலை செய்வதை நீங்கள் இன்பமாக உணர்வீர்கள்.

"கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே " என்று சொன்னால் எல்லோரும் முகம் சுளிப்பார்கள். இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. ரொம்ப கஷ்டம், நடை முறைக்கு ஒத்து வராது என்று.

ஆனால், நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டால் , அந்த வேலையே அந்த வேலையின் பலன் தான்.

நிறைய பேர் hobby என்று வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதை செய்ய அவர்கள் சம்பளம் , பணம் எல்லாம் எதிர் பார்ப்பது இல்லை. புகைப்படம் பிடிப்பது, தோட்ட வேலை செய்வது, பாடுவது என்று பல இருக்கும்.

அதையே முழுநேர வேலையாக செய்யத் தொடங்கினால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

உங்களுக்குள் இருக்கும் திறமையை, ஆற்றலை நினையுங்கள்.

அந்த ஆற்றல் உங்களை உயர்த்தும். நீங்கள் அந்த ஆற்றலை வளர்ப்பீர்கள்.  அது உங்களை  உயர்ந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.

பலன் இரண்டாம் பட்சமாகும்.  வாழ்க்கை இனிமையாகும்.

சிந்தித்துப் பாருங்கள்.


Thursday, March 30, 2017

கீதை - 3.10 - தியாகம் எல்லாம் தரும்

கீதை - 3.10 - தியாகம் எல்லாம் தரும் 


सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्॥१०॥

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக் ||3-10||

ஸஹயஜ்ஞா:  = வேள்வியுடன்

ப்ரஜா: = மனித குலம்

ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு

புரோ = முன்பு

உவாச = கூறினான்

ப்ரஜாபதி:| = பிரமன்

அநேந = இதன் மூலம்

ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்

இஷா = அது

வ = உங்கள்

அஸ்து = இருக்க வேண்டும்

இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்

 ||3-10||

வேள்வியின் மூலம் உலகைப் படைத்த பிரமன் கூறினான் இதன் மூலம் நீங்கள் பல்கி பெருகுவீர்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் இது தரும். 

வேள்வி என்றால் சுயநலமின்மை என்று பார்த்தோம். யக்யம் என்ற சொல்லுக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.

இந்த உலகம் தொடங்கி , நிகழ்வது அர்பணிப்பான காரியங்களால்.

சுயநலமே அத்தனை அழிவுக்கும் காரணமாய் இருக்கிறது. ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின், ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாய் இருப்பது இந்த சுயநலமே. 

உங்களிடம் சில திறமைகள் இருக்கும் - நன்றாக பாடுவது, நன்றாக சமைப்பது, நன்றாக நிர்வாகம் பண்ணுவது, வண்டி ஓட்டுவது, இப்படி ஏதோ ஒரு திறமை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. 

இந்த திறமை எனக்குமட்டும்தான் பயன்பட வேண்டும். நான் இதன் பயனை யாருக்கும் தர மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே பாடி கேட்டு இரசித்து கொண்டும், நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டும், உங்கள் வீட்டை, உங்கள் நிதியை மட்டும் நீங்கள் நிர்வகித்து கொண்டும் இருந்தால் என்ன ஆகும் ? 

உங்களுக்கு ஒரு சந்தோஷமோ, நிம்மதியோ, பண வரவோ, புகழோ இருக்காது. 

எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் பேரும் புகழும் செல்வமும் அடைவீர்கள் 

Super Star  என்றால் உலகம் முழுவதும் நிறைய பேர் அவருடைய திறமையால் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம். 

கொடுங்கள். உங்கள் திறமை உலகெங்கும் பரவட்டும். அத்தனை பேருக்கும் பயன்படட்டும்.

எவ்வளவு பேருக்கு உங்கள் திறமை பயன்படுகிறதோ, அவ்வளவு உங்களுக்கு நல்லது. 

உங்கள் திறமை மற்றவர்களுக்கு பயன் படவேண்டும் என்று நினைத்துக் கொடுங்கள்.  எந்த வேலை செய்தாலும் இது பலருக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்து செய்யுங்கள்.  எனக்காக, எனக்கு கிடைக்கும் சம்பளத்துக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். 

சமுதாய நன்மைக்காக, உலக நன்மைக்காக என்று செய்யுங்கள். 

அப்படி செய்தால் என்ன நிகழும் ?


ஒன்று, தீய செயல்கள் செய்யும் எண்ணம் வரவே வராது. உலகில் யாருமே தீமை  செய்யாவிட்டால் உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். 

அடுத்தது, மற்றவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து செய்யும் செயலில் எவ்வளவு நல்லது விளைந்தாலும் அது நல்லதுதானே. அதில் வெற்றி , தோல்வி என்று ஒன்றும் கிடையாது. 

மூன்றாவது, வெற்றி தோல்வி இல்லாவிட்டால் , ஏமாற்றம், குழப்பம், பொறாமை என்று எதுவும் இருக்காது.  யாருக்கு பெயர் கிடைத்தால் என்ன என்ற எண்ணம் வரும். 

அந்த எண்ணம் கற்பக மரம், காமதேனு போல் நீங்கள் கேட்டது எல்லாம் தரும். நீங்கள் பல்கி பெருகுவீர்கள்.


சரி, இதெல்லாம் நடை முறையில் சரிப்பட்டு வருமா ? என்ற கேள்விக்கு ஒரே விடைதான் இருக்கிறது. 

நம்புங்கள். முயன்று பாருங்கள். ஒரு சில நாள் அப்படி இருந்து பாருங்கள். உங்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று பாருங்கள். முடிந்தால்  தொடருங்கள்.

கீதை சொல்கிறது. தவறாக இருக்க வழி இல்லை. முயன்று பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே ?



Tuesday, March 28, 2017

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய்

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய் 


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर॥९॥

யஜ்ஞார்தாத்கர்மணோந்யத்ர லோகோயம் கர்மபந்தந:|
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||3-9||


யஜ்ஞார்தாத் = யக்ஞய + அர்த்த = வேள்வியின் நோக்கத்தோடு 

கர்மண = காரியங்களை

அந்யத்ர = வேறுவிதமாக

லோகா = உலகில்

அயம் = இது

கர்மபந்தந: = கர்மத்துடன் இணைப்பது

ததர்தம் = தத் = அர்த்தம் = அதற்காக

கர்ம = காரியங்களை

கௌந்தேய = கௌந்தேயனே

முக்தஸங்க: = முக்த + சங்க = பற்றினை விடுத்து

ஸமாசர = செய்

வேள்விக்காக செய்யாத மற்ற அனைத்து செயல்களும் மனிதர்க்கு ஒரு விலங்கு ஆகிறது.  அதனால்,குந்தி  மகனே,பற்றை விடுத்து தொழில் செய்து கொண்டிரு 

அது என்ன வேள்வியின் பொருட்டு காரியம் செய்தல். இப்ப எல்லாம் யார் வேள்வி செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணன் இருந்த காலத்திலேயே கூட எல்லோரும் , எப்போதும் வேள்வி செய்து கொண்டிருந்தார்களா என்ன.

பின் ஏன் கண்ணன் வேள்வியின் பொருட்டு காரியம் செய்  என்கிறான்.

யங்கியம் என்ற வார்த்தைக்கு அர்ப்பணிப்பு, சுயநலம் இல்லாத என்று பொருள்.

சுயநலம் இல்லாமல், ஒரு அர்ப்பணிப்பு மனதுடன் எந்த காரியத்தையும் செய் என்கிறான்.

இது எல்லாம் நடக்கிற காரியமா ? சுயநலத்துடன் செய்தாலே நம்மை ஏமாற்றி  விடுகிறார்கள். இதில் சுயநலமும் இல்லாவிட்டால் அவ்வளவுதான். இந்த உலகத்தில் வாழ முடியுமா ?

சற்று சிக்கலான கேள்விதான்.

அர்ஜுனன் முன்னால் பெரிய படை  நிற்கிறது. அவனால் அந்த படையை வெல்ல முடியும். இருந்தும் யுத்தம் செய்ய தயங்குகிறான்.

ஏன் ?

அந்த படையில் உள்ளவர்கள் அவனுடைய சொந்தக் காரர்கள் - மாமன், மச்சான், தாத்தா, குல குரு, என்று எல்லோரும் இருக்கிறார்கள்.

"என் சொந்தக்காரர்களை எப்படி கொல்வேன் " என்று  தவிக்கிறான்.

அவர்கள் அர்ஜுனனின் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டால் அவன் எளிதாக சண்டை இட்டு அவர்கள் வென்றிருப்பான்.

சுயநலம் குறுக்கே நிற்கிறது.

அவன் என்ன செய்ய வேண்டும் ?

நீதிக்காக போராட வேண்டுமா ? அல்லது சொந்த பந்தம் என்று சுயநலத்துக்காக அநீதி நடக்கட்டும் என்று விட்டு விட்டு போய் விட வேண்டுமா ?

நீதிக்காக போராட வேண்டும் என்பது தான்  எல்லோரின் பதிலாகவும் இருக்கும்.

அவன் கடமையைச் செய்ய தடையாக  இருப்பது எது ? அவன் சுயநலம்.

 எனவே,சுயநலம் தவிர்த்து கடமையைச் செய் என்கிறான் கண்ணன்.

சரி, அது அர்ஜுனனுக்கு அந்த இடத்தில் சரியாக இருக்கும். நமக்கு சரி வருமா என்ற கேள்வி  வரும்.

 யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் கடினமாக வேலை செய்து , ஒரு பதவி உயர்வை எதிர்பார்த்து  இருக்கிறீர்கள்.உங்கள் மேலாளர் , தனக்கு பிடித்த ஒருவருக்கு பதவி உயர்வை தந்து விடுகிறார்.

அது சரியா ? இல்லை .

ஏன் சரி இல்லை. அவர் சுயநலமாக செயல் பட்டார். தனக்கு வேண்டியவனுக்கு பதவி உயர்வு  தந்தார். அது உங்களுக்கு வருத்தம்  தருகிறது.

அதே போல் நீங்கள் செய்தால் வேறு யாருக்கோ வருத்தம் வரும்  அல்லவா.எனவே, சுயநலம் தவிர்த்து கடமை செய்ய வேண்டும் என்று தெரிகிறது அல்லவா.

இலஞ்சம் கொடுக்கிறோம். எனக்கு ஒரு நன்மை வேண்டும். மற்றவன் எக்கேடு கெட்டு போனால் என்ன  பணம் கொடுத்து காரியம் செய்து கொள்ளப் பார்க்கிறோம்.

அது சரியா  ? இல்லை.

காரணம் என்ன, நம் சுயநலத்துக்காக மற்றவர்களின் உரிமையை பறிக்கிறோம்.

இப்படி எங்கு பார்த்தாலும் சுயநலத்துடன் மற்றவர்கள் செயல்படும்போது நமக்கு கோபம் வருகிறது. அது போல நாம் செயல் பட்டால் மற்றவர்களுக்கு வருத்தமும் கோபமும் வரும் அல்லவா.

அப்ப என்ன செய்ய வேண்டும் ?

சுயநலம் தவிர்த்து, பற்று அற்று காரியம் செய்ய  வேண்டும்.

Act objectively not subjectively.

காரியத்தில் குறியாக இருக்க வேண்டும். யாருக்கு நன்மை வரும், யாருக்கு கெடுதல் வரும் என்று  பாராமல்,காரியத்தை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

இது பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க  இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2017/03/39.html




Monday, March 27, 2017

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை

கீதை - 3.8 - கர்மமே வாழ்க்கை 


नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः।
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मणः॥८॥

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண: ||3-8||

நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக

குரு = செய்தல்

கர்ம = கர்மங்களை

த்வம் = நீ

கர்ம = செயல்களை

ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக

ஹி = அதனால்

அகர்மண: = செயலன்றி இருப்பது

ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம் 

அபி = இருந்தும்

ச = மேலும்

தே = உன்

ந = இல்லை

ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது 

அகர்மண: = செயலன்றி இருந்தால்

உனக்கென்று விதிக்கப்பட்ட செயல்களை நீ தவறின்றி செய். உடலின் இயற்கை என்பது  செயல் செய்வது. செயல் செய்யாமல் இருந்தால் உடலைக் கூட பராமரிக்க முடியாது.  வேலை செய்வது என்பது வேலை செய்யாமல் இருப்பதை விட உயர்ந்தது. 

நமது வாழ்க்கை ஒரே சீராக போய் கொண்டிருக்கும் வரை கவலை இல்லை.

எங்காவது சிக்கல் வந்து விட்டால் , கொஞ்சம் முயன்று பார்ப்போம். நண்பர்கள் , உறவினர்கள் உதவியை நாடுவோம். அதிலும் நடக்கவில்லை என்றால், நம்மால் முடியாது என்று தளர்ந்து விடுவோம்.


"என்னால் முடியாது. எல்லா முயற்சியும் செய்தாகி விட்டது. ஒண்ணும் நடக்கல. என்ன என்ன செய்வது . என்னை விட்டு விடுங்கள் . என்னால இவ்வளவுதான் முடியும் . எல்லாம் விதி விட்ட வழி. இதுக்கு மேல என்ன செய்ய முடியும் " என்று நாம் தளர்ந்து விடும் சமயங்கள் உண்டு.

தோல்வி வரும். கஷ்டங்கள் வரும். எதிர்ப்பு வரும். தட்டுப் பாடு வரும். ஏமாற்றங்கள் வரும்.

இவை எல்லாம் வரும் போது நம் கடமையை நாம் விட்டுவிட நினைப்போம்.


அர்ஜுனனுக்கு அப்படி ஒரு சங்கடம் வந்தது. எதிரில் சண்டையிட நிற்பவர்கள் எல்லோரும் உறவினர்கள், வித்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர். அவர்களை எதிர்த்து எதிர்த்து போர் செய்ய முடியாமல் தவிக்கிறான். நான் சந்நியாசியாக போய் விடுகிறேன். ஞான மார்கத்தில் போகிறேன் . என்னை விட்டு விடு கிருஷ்ணா என்று மன்றாடுகிறேன்.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்கிறான். நமக்கும் தான்.

நீ கடமையை விட்டு செல்ல முடியாது. மற்ற எல்லாவற்றையும் விடு. கடமையை செய்யாவிட்டால் உன் உடலைக் கூட உன்னால் சரிவர போற்றி பாதுகாக்க முடியாது. வேலை செய்வது என்பது செய்யாமல் இருப்பதைவிட உயர்ந்தது என்கிறான்.


கடமையைச் செய்வது என்பது நம் இயற்கை. நாம் ஏதோ நம் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உடலின் இயற்கை வேலை செய்வது.

முடிந்தால் ஒரு நாலு நாள் ஒரு வேலையும் செய்யாமல் இருந்து பாருங்கள்.

உண்ட உணவு செரிக்காது. தூக்கம் வராது. என்னவோ போல் இருக்கும். வேலை செய்து கொண்டே இருந்தால் இந்த சிக்கல் எதுவும் வராது.

உடலை விடுங்கள்.

நமது வாழ்வில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் எங்கோ நாம் நம் கடமைகளை  சரியாக செய்யாமல் விட்டதுதான்.

படிக்காமல் விட்டதால், நல்ல மதிப்பெண், நல்ல வேலை , நல்ல சம்பளம் கிடைக்கவில்லைல்.

சரியான உடற்பயிற்சி செய்யாததால் நோய் வருகிறது.

அலுவலகத்தில் , வீட்டில், வெளியில் சரியாக செய்யாமல் விட்ட கடமைகள் நமக்கு துன்பத்தைத் தேடித் தரும்.

தூக்கம் வராத ஒவ்வொரு இரவுக்கும் பின்னால் செய்யத் தவறிய கடமை ஏதோ ஒன்று இருக்கும்.

சில சமயம் வேலை ஒன்றும் செய்யாமல், சும்மா ஜாலியாக இருப்பது சுகமாக இருப்பது  போலத் தெரியும். உண்மையில் அது அப்படி அல்ல.

வேலை செய்வதுதான் உயர்ந்தது. சிறந்தது.

எத்தனை சிக்கல் வந்தாலும். எத்தனை தடங்கல் வந்தாலும். எத்தனை ஏமாற்றங்கள், சலிப்புகள், ஏளனங்கள் வந்தாலும்...உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதிலிருந்து வேறு வழியே இல்லை.

உடலும், மனமும் செம்மையாக இருக்க வேண்டுமா ?

உங்கள் கடமை எதுவோ அதை விடாமல் செய்யுங்கள்.

வெற்றிக்கும், இன்பமயமான வாழ்வுக்கும் அது ஒன்றே வழி.

உங்கள் கர்மத்தை உங்கள் வாழ்க்கையோடு இரண்டற கலந்து விடுங்கள்.

வெற்றி வந்தாலும் சரி, தோல்வி வந்தாலும் சரி ...உங்கள் கர்மத்தை நீங்கள் செய்து கொண்டே போங்கள்.

கர்மம் தான் வாழ்க்கை. வாழ்க்கை தான் கர்மம்.

அதுதான் கர்ம யோகம். 

Sunday, March 26, 2017

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?

கீதை - 3.7 - பற்றற்று காரியம் செய்வது எப்படி ?


यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते॥७॥

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந|
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே ||3-7||


ய = எவன்

து = ஆனால்

இந்திரியாணி = புலன்களை

மநஸா = மனதால்

நியம்யா = கட்டுப்படுத்தி

ஆரம்பதே = தொடங்குகிறானோ

அர்ஜுந = அர்ஜுனா

கர்மேந்த்ரியை: = புலன்களால் காரியங்கள் செய்கிறானோ

கர்மயோக = கர்மயோகத்தின் மூலம்

அஸக்த:  = பற்றில்லாமல்

ஸ = அவன்

விஸிஷ்யதே = சிறந்தவன்


அர்ஜுனா, எவன் ஒருவன் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி , பற்றற்று கர்மங்களை செய்கிறானோ 

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

இந்த சுலோகம் ஒரு மிக முக்கியமான செய்தியை கூறுகிறது. பற்றற்று காரியம் செய் என்கிறது.  எவ்வளவு சிந்தித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இந்த பற்றற்று காரியம் செய்வது. பின் ஏன் கீதை அதை சொல்கிறது ?

யாரால் பற்றற்று செய்ய முடியும் ?

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் என்ன  வேறுபாடு ?

விலங்குகள் புலன்களால் உந்தப்பட்டு காரியங்களை செய்கின்றன. அவற்றிற்கு நேரம்,  இடம்,  பொருள், அளவு,  நல்லது கெட்டது  என்று எதுவும் கிடையாது . கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று  வாழ்பவை.

மனிதர்கள் அப்படி அல்ல. இந்த வித்தியாசங்கள் அறிந்தவர்கள்.

அவர்களின் புலன்களை அவர்கள் அறிவால் கட்டுப்படுத்த  தெரிந்தவர்கள்.

தவறு என்று அறிவு    சொன்ன பின்னும் புலன் ஆசைகளால் ஒன்றைச் செய்பவன் கீழான மனிதன்.

அறிவு  சொல்கிறது அந்த குளிர் பானத்தை குடிக்காதே என்று,  நாக்கு சொல்கிறது அதை குடி என்று.

நாக்கு சொல்வதை கேட்பவனா? அறிவு சொல்வதை கேட்பவனா ? எவன் சிறந்தவன் ?

சந்தேகம் இல்லாமல் அறிவின் சொல்படி நடப்பவன் சிறந்தவன்.

அறிவின் சொல்படி கேட்டு நடப்பதிலும், செய்யும் செயல்களின் பலன்களை எதிர்பாராமல் விருப்பு வெறுப்பு இன்றி எவன் செயல் படுகிறானோ அவன் சிறந்தவன்.

கர்ம யோகத்திற்கு உண்டான விதிகளை இந்த ஸ்லோகமும் இதற்கு முந்தைய சுலோகமும் தருகிறது

1. மனதை அடக்காமல் புலன்களை அடக்கி பலன் இல்லை.

2. அறிவு/மனம் புலன்களை செலுத்த வேண்டும்.

3. பற்று அற்று காரியங்களை செய்ய வேண்டும்.

இவற்றை செய்பவன் கர்ம யோகி.  மனிதர்களில் சிறந்தவன் என்கிறது கீதை

முதல் இரண்டும் ஒருவாறு நமக்கு புரிகிறது.

இந்த மூன்றாவதுதான் கொஞ்சம் தகராறு பண்ணுகிறது. பற்று அற்று எப்படி காரியம் பண்ண முடியும். பலனை எதிர்பார்க்காமல் எப்படி காரியம் பண்ண முடியும் ?

ஒரு குழந்தை பொம்மையை வைத்து விளையாடும். யார் கேட்டாலும் தராது. இறுகப் பற்றிக் கொள்ளும்.   கொஞ்ச நேரம் கழித்து, அந்த பொம்மையை கட்டி பிடித்தபடி உறங்கிவிடும். தூக்கம் வர வர கை நெகிழ்ந்து பொம்மையை விட்டு விடும்.

நெகிழ்வு வர பற்று விடும்.

மனம் கல்லாய் இருக்கும்போது, இறுகிக் கிடக்கும். பற்று விடாது.

மனம் நெகிழும்போது பற்று விடும்.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி.

பற்றற்று காரியம் செய்ய வேண்டுமானால் மனம் நெகிழ வேண்டும். சுயநலம் தலை தூக்கி நிற்கும் வரை பற்று விடாது..

ஒரு தாய் தன்  குழந்தைக்கு எவ்வளவோ செய்கிறாள்...பலன் எதிர்பார்த்தா செய்கிறாள் ...பலன் எதிர்பார்க்காமல் செய்கிறாள் ...ஏன் ? பிள்ளை என்ற அன்பு, மன நெகிழ்வு ....

மனதில் அன்பு ததும்பும்போது செயலில் ஆர்வம் இருக்கும், பலனில் ஆர்வம் இருக்காது.

அன்பு எல்லைகளை தள்ளிபோடும், அல்லது அழித்துப் போடும்.

தான் என்ற குறுகிய வட்டம் விரிந்து விரிந்து ஒரு நாள் இல்லாமலே போகும்.

தர்மம் பண்ணுவது, ஏழைக்கு உதவுவது, இரத்த தானம் பண்ணுவது, இப்படி ஒரு சில காரியங்களை  நாம் பலன் எதிர்பாராமல் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இந்த காரியங்களுக்கு எல்லாம் அடிப்படை அன்பு, கருணை.


அன்பு வரும்போது, இராஜ்யத்தின் மேல் பற்று இல்லாமல், தம்பியிடம் கொடுத்துவிட்டு  சிரித்துக் கொண்டே கானகம் போக முடியும்.

அன்பு இல்லாதபோது, ஊசி முனை அளவு நிலம் கூட தரமாட்டேன் என்று உலகளந்த  பெருமாளையே உதாசீனம் படுத்தி, தம்பிகளை போர் முனையில் கொண்டுவந்து  நிறுத்தும். மண்ணின் மேல் உள்ள பற்று.

கர்ம யோகத்தின் அடிப்படை அன்பு. கருணை. அருள். 

தன்னை கடந்து, தன் குடும்பத்தை கடந்து, ஊர், நாடு எல்லைகளை கடந்து எல்லோரையும் நேசிக்கும் அன்பு.

பற்றற்ற செயலின் அடிப்படை அன்பு. 

கீதை - 3.6 - அறிவும் புலனும்

கீதை - 3.6 - அறிவும் புலனும் 


कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते॥६॥

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||3-6||

கர்மேந்த்ரியாணி = இந்திரியங்களால் (புலன்கள் மூலம்) செய்யப்படும் காரியங்களை

ஸம்யம்ய = நிறுத்தி விட்டு, கட்டுப் படுத்தி விட்டு

ய = அவன்

ஆஸ்தே = இருக்கிறனானோ

மநஸா = மனதில்

ஸ்மரந் = நினைத்துக் கொண்டு

இந்த்ரியார்தாந் = புலன் இன்பங்களை

விமூடாத்மா = மூட ஆத்மா.

மித்யாசார: = களவொழுக்கம் உள்ளவன்

ஸ = அவன்

உச்யதே = சொல்லப் படுகிறான்

மனதை கட்டுப்படுத்தாமல் , புலன்களை மட்டும் கட்டுப் படுத்துபவன் , பொய் ஒழுக்கம் கொண்டவன் ஆவான். 

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள் சொல்வதை கேட்கிறோம். நாம் படிப்பது, கேட்பது எல்லாம் சரியாக இருக்கிறது என்று நம் அறிவு சொல்கிறது. அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்று முயற்சி செய்வோம். ஆனால், முடியாது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

பென்னாசை கூடாது, மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று நம் அற நூல்கள் கூறுகின்றன. நாமும் கட்டுப் பாட்டுடன் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  அப்படி இருக்கும் போது தெருவில் ஒரு அழகான பெண் போனால், மனம் அவள் பின்னால் போகிறது.

சரி, அது வேண்டாம், சில பேர், நான் அப்படி எல்லாம் இல்லை என்று வாதிக்கக் கூடும்.

உணவு கட்டுப்பாடு. மருத்துவர் சொல்லி இருப்பார் இனிப்பு, எண்ணெய் பலகாரங்களை  தவிர்க்க வேண்டும் என்று. நாமும் சரி என்று இருப்போம்.  வீட்டில் ஒரு  வடை போட்டால், ஒரு லட்டு செய்தால் முதல் ஆளாக போய் நிற்போம்.

ஏன் ?

மனம் கட்டுப் படவில்லை.

மனம் கட்டுப்படாதவரை புலன்களை கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அப்படி கட்டுப் படுத்தி விட்டேன் என்று சொன்னால் அது பொய் என்று கீதை சொல்கிறது.

களவொழுக்கம் என்கிறது.

வெளி உலகுக்கு வேண்டுமானால் துறவி, சாமியார் என்று சொல்லிக் கொள்ளலாம். உள்ளுக்குள் அவன் அனைத்துக்கும் ஆசைப் படுவான். மனம் அரித்துக் கொண்டே இருக்கும். சரியான சமயத்தில் தவறு நிகழும்.

சரி தவறு என்ற ஞானம் எவ்வளவுதான் இருந்தாலும், மனிதன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தவறு செய்வான்.

செயலில் தவறு நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்றால் அறிவு மட்டும் போதாது.

ஞானம் மட்டுமே நல்ல வழியில் செலுத்தாது . உலகில் நடக்கும் பெரும்பாலான தவறுகள் தெரிந்தே  செய்வதுதான். களவும், சூதும், கொலையும், மேலும் பல வன் கொடுமைகளும் அவை தவறென்று தெரியாமலா செய்கிறார்கள்.

எனவே, கர்ம மார்க்கம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ஞானம் மட்டும் போதாது.

வெறும் அறிவால் வாழ்க்கை முழுமை பெறாது.

பின், என்னதான் செய்வது ?


Thursday, March 23, 2017

கீதை - 3.5 - எது என் கடமை ?

கீதை - 3.5 - எது என் கடமை ?


न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः॥५॥

ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்|
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை: ||3-5||

ந = இல்லை

ஹி = அதனால்

கஸ்சித் = ஒருவன்

க்ஷணம் = ஒரு நொடி கூட

அபி = இப்போது

ஜாது= ஒருபோதும்

திஷ்டதி = நிலையாக  இருத்தல்

அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்

கார்யதே = செயல் என்பது 

ஹி = அது

அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக

கர்ம = செயல்

ஸர்வ: = அனைத்து

ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்

குணை: = குணங்களில் இருந்து


செயல் புரியாமல் யாரும் ஒரு நொடி கூட இருக்க முடியாது. இயற்கை குணங்களே செயல்களை தீர்மானிக்கிறது.


இந்த சுலோகம் சில முக்கியமான, மிக முக்கியமான விஷயங்களை தெரிவிக்கிறது.

கடமையை செய், கடமையைச் செய் என்று கீதை சொல்கிறது.

எது என் கடமை ? என் கடமை எது என்று நான் எப்படி அறிந்து கொள்வது ? யார் எனக்கு சொல்வார்கள். என் கடமை என்ன என்று தெரியாமல் நான் எப்படி அதைச் செய்வது.

அதிலும் கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே என்று வேறு கீதை கூறுகிறது.

கடமையே என்ன என்று தெரியவில்லை. இதில் பலனை வேறு எதிர் பார்க்காதே என்றால் என்ன செய்வது.

கீதை அப்படி நம்மை கண்ணை கட்டி காட்டில் விடவில்லை.

நம் கடமை எது என்பதை கண்டு கொள்ள வழி சொல்கிறது.

செயல்கள், இயற்கையான குணங்களால் நிகழ்கிறது என்கிறது கீதை.

நம் செயல்கள், கர்மம் நமது இயற்கையான குணங்களால் நிகழ்கிறது.

எனவே, நமது இயற்கையான குணம் என்ன என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நாம் தான் செய்ய வேண்டும்.

என் குணம் என்ன ?

நான் உடல் உழைப்பு உள்ளவனா ?

எனக்கு படிப்பதில், சிந்திப்பதில், ஆராய்ச்சியில் எனக்கு நாட்டம் இருக்கிறதா. அதுவா என் குணம்.

எனக்கு பாடுவது, ஆடுவது, விளையாடுவது போன்றவற்றில் நாட்டம் இருக்கிறதா ? அப்படி என்றால் அதுதான் என் இயற்கை குணம்.

எனக்கு கதை எழுதுவதில், கவிதை எழுதுவதில் நாட்டம் இருக்கிறதா ... அப்படி என்றால் அதுதான் என் குணம்.

நான் என்ன செய்தாலும், என் இயற்கை குணம் என்னை இழுக்கும்.

என் இயற்கை குணத்திற்கு எதிராக நான் வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தால் என் குணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடை வெளி வந்து விடும்.

இயற்கையான குணத்தில் இருந்து நான் ஒரு வேலை செய்தால் அது எனக்கு மிக இன்பமான ஒன்றாக இருக்கும்.

புகை படம் எடுப்பது, தோட்டம் போடுவது, பாடுவது, படம் வரைவது,  ஊர் சுற்றுவது, கற்றுத் தருவது என்று எது என் இயற்கை குணமோ, அதன் அடிப்படையில் நான் காரியம் செய்தால் எனக்கு வெற்றி தோல்வி என்று ஒன்றும் கிடையாது. நான் செய்யும் தொழிலே எனக்கு இன்பமயமாகி விடுகிறது. அதன் மூலம் எனக்கு வருமானம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, புகழ் வந்தாலும் சரி , புகழ் வராவிட்டாலும் சரி நான் சந்தோஷமாக இருப்பேன்.

பலன் என்பது இரண்டாம் பட்சமாகிப் போகிறது.

வேலை ஒன்றே குறிக்கோளாகி விடுகிறது.

தியாகராஜர் , இராமன் மேல் கீர்த்தனைகள் பாடினார். காசுக்கோ, புகழுக்கோ அவர் பாடவில்லை. பாடுவது அவர் இயல்பு. இயல்பாய் இருந்தார். அவ்வளவுதான்.

நாம் நம் பிள்ளைகளை அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய விடுவது இல்லை. அதைப் படி, இதைப் படி என்று வற்புறுத்துகிறோம்.

அது தவறு.

அவர்களே கண்டுபிடிக்கட்டும். அவர்களின் இயற்கையான குணம் என்ன, அதிலிருந்து பிறக்கும் காரியம் என்ன என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

தனிமையில் இருந்து சிந்தியுங்கள். உங்கள் இயற்கையான குணம் என்ன என்று. உங்கள் செயலுக்கும், உங்கள் குணத்திற்கும் எவ்வளவு இடைவெளி என்று பாருங்கள். இடைவெளி குறைய குறைய நீங்கள் ஒரு பூர்ணத்வம் பெறுவீர்கள்.

குணம் வேறு , செயல் வேறாக பிரிந்து கிடைக்கும் நீங்கள் ஒன்று படுவீர்கள். அதுவே பூர்ணத்வம்.

என் கடமை என்ன என்று மற்றவர்களை கேட்காதீர்கள். உங்களுக்கே தெரியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படித்  தெரியும்.

உங்கள் இயற்கை குணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். மற்றவை தானே  வரும். உங்களை நீங்கள் முதலில் அறிய வேண்டும்.

சரி...

குணமும் செயலும் மாறுபட்டால் என்ன ஆகும் ?

அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான் கண்ணன்.




Wednesday, March 22, 2017

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும்

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும் 


न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥

ந கர்மணாமநாரம்பா ந்நைஷ்கர்ம்யம் புருஷோஸ்நுதே|
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||3-4||

ந = இல்லை

கர்மணாம் = கர்மம்

அந் - ஆரம்ப = தொடங்காமல் இருந்தால் 

ந்நைஷ்கர்ம்யம் = பற்றற்ற கர்மம்

புருஷ = ஒருவன்

அஸ்நுதே| =  அடைவதில்லை

ந = இல்லை

ச = மேலும்

ஸந்ந்யஸ = துறப்பதன் மூலம் 

ஏவ = நிச்சயமாக

ஸித்திம்  = வெற்றி

ஸமதிகச்சதி = அவன் அடைகிறான்


தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் முழு நிறைவு அடைய மாட்டான்.


தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம்  பெற்றுவிட மாட்டான்.

துன்பத்தின் மூலம் எது ? எதிலிருந்து துன்பம் வருகிறது ? எப்படி துன்பத்தில் இருந்து விடுபடுவது ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.

கீதை இன்னும் ஆழமாக சிந்திக்கிறது.

ஆசை எப்படி வருகிறது ?

ஒரு பொருளை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பதால் ஆசை வருகிறது.

நாம் ஒரு பொருளை பற்றி அல்லது ஒரு விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்காமல் இருந்தால் அதன் மேல் ஆசை வருவது இல்லை. ஆசை, கோபம், மறதி, மனக் குழப்பம், நிம்மதி இன்மை, துன்பம் என்று தொடர் சங்கிலியாக சிந்தனையில் இருந்து துன்பம் வருகிறது.

இதை நாம் இரண்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.

விட்ட இடத்தில் தொடர்கிறான் கிருஷ்ணன்.

நாம் எப்போது ஒரு பொருளை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம் ?

எப்போது அது நம்மிடம் தேவையான அளவு இல்லையோ அப்போது நாம் அதை பற்றி  சிந்திக்க தொடங்குகிறோம்.

பணம் இருக்கிறது நம்மிடம். ஆனால் அது போதாது என்று நினைக்கிறோம். அதை பற்றிய சிந்தனை நம் மனதை , அறிவை ஆக்கிரமிக்கிறது.

எப்படி மேலும் பணம் சேர்ப்பது என்று யோசிக்கிறோம். அதில் முதலீடு செய்வோமா? இதை வாங்குவோமா, அதை விற்போமா, என்று செயல் பட தொடங்குகிறோம்.

பணம், அன்பு, காதல், அதிகாரம், புகழ் என்று எதை எடுத்துக் கொண்டாலும் செயல்பாடு ஒன்றுதான்.

சிந்தனை, சிந்தனையில் இருந்து ஆசை, ஆசையில் இருந்து செயல் பிறக்கிறது.

வெறும் செயலை மட்டும் நிறுத்தி உபயோகம் இல்லை.. நிறுத்தவும் முடியாது.

சிந்தனை பின் புலத்தில் செயல் படுத்திக் கொண்டே இருக்கும்.

மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதைத்தான் கிருஷ்ணன் இங்கே சொல்கிறான்

தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

செயலை செய்யாமல் இருப்பதன் மூலம் ஒருவன் செயலற்ற நிலையை அடைவது இல்லை. மனமும் , அறிவும் செயல் பட்டு கொண்டு இருக்கும் வரை வெறுமனே புலன்களை அடக்கி வைபதன் மூலம்  ஒருவன் செயலற்ற நிலையை  அடைவது இல்லை.

செயலை மட்டும் துறந்தால் போதாது.      வெறும் செயலை துறந்தவன் நிலை மிகவும் துன்பமயமானது.

மனம் அது வேண்டும், இது வேண்டும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும். அறிவு , அவற்றை பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் பட தூண்டும். ஆனால், இவனோ ஞானமே சிறந்தது என்று நினைத்துக் கொண்டு செயல் படாமல் இருப்பான். தனக்குள்ளேயே பெரிய யுத்தம் நடந்து கொண்டு இருக்கும். கிடைக்கவில்லை என்றால் வருந்தும். கிடைத்தால் அதை விட அதிகமாக வேண்டும் என்று மேலும் ஆசைப் படும்.  இதற்கு ஒரு  முடிவே இல்லை.

சிந்தனை , மனம் ஓடிக் கொண்டே இருக்கும் வரை, செயல் இருக்கத்தான் செய்யும்.

எங்கே ஒரு நிமிடம், கண்ணை மூடி , செயலற்று இருந்து பாருங்கள். மனம் காற்றாக பறக்கும். ஆயிரம் எண்ணங்கள் அலை பாயும்.

கர்மயோகத்தின் முதல்படி மன அடக்கம்.

அது எப்படி முடியும் ?



கீதை - 3.3 - இரண்டு யோகங்கள்

கீதை - 3.3 - இரண்டு யோகங்கள் 


श्रीभगवानुवाच
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥

ஸ்ரீபகவாநுவாச
லோகேஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக| 
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்மயோகேந யோகி நாம் ||3-3||


ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

லோகே = இந்த உலகில்

அஸ்மிந் = இதில்

த்விவிதா = இரண்டு

நிஷ்டா = நிலைகள், வழிகள் உள்ளன

புரா  = பழமையான

ப்ரோக்தா = சொல்லப்பட்ட

மயா = என்னால்

அந் நக = பாவம் இல்லாதவனே


ஜ்ஞாநயோகேந = ஞான யோகம்

ஸாங்க்யா நாம்= சாங்கியர்களால் கூறப்பட்டது

கர்மயோகேந = கர்மயோகம்

யோகி நாம் = யோகிகளால் கூறப்பட்டது


கண்ணன் சொல்லுகிறான்...பாவம் ஒன்றும் இல்லாத அர்ஜுனா, இந்த உலகில் இரண்டு வழிகள் உள்ளன...அவை, சாங்கியர்களால் கூறப்பட்ட ஞான யோகம், யோகிகளால் கூறப்படும் கர்ம யோகம். 


ஞான மார்கமா, கர்ம மார்கமா நான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொல்லு என்று அர்ஜுனன் முந்தைய ஸ்லோகத்தில் கேட்டான்.

இதுதான் சிறந்தது என்று கிருஷ்ணன் சொல்லவில்லை.

நாம் கேட்டதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இறைவனுக்கு இருக்கிறதா என்ன ?

கேள்வியே தவறு என்றால் எப்படி விடை தருவது ?


"நான் உனக்கு இரண்டு வழிகளை சொன்னேன்....ஒன்று சாங்கியர்களின்  ஞான யோகம், மற்றது யோகிகளின் கர்ம யோகம்...."

இரண்டில் ஒன்று எது சிறந்தது என்று கிருஷ்ணன் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் இருக்கலாம்.

சொல்லவில்லை.

எனவே, எது சிறந்தது என்ற கேள்வி இன்னும் விடை இல்லாமலே  போய் கொண்டிருக்கிறது.

நமக்கென்று உள்ள கடமைகளைச் செய்கிறோம். வேலைக்குப் போகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இன்னும் நிறைய பணம் வேண்டி இருக்கிறது. பெரிய வேலை, பதவி உயர்வு, மேலும் பொறுப்புகள்..மேலும் பணம்....மேலும் உழைப்பு என்று இப்படி வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது....

இது எங்கு போய் முடியும்...ஒரு காலகட்டம் வரும்...இதுவரை என்ன செய்தோம் என்ற கேள்வி வரும்...பணம் கையில் இருக்கும், அனுபவிக்க வயதோ, உறவுகளோ இருக்காது....வாழ் நாள்  எல்லாம் இதில் போய் விட்டதே என்ற வருத்தம் வரும்.

சரி , அதுக்காக வேலைக்குப் போகாமல் , பணம் சம்பாதிக்காமல், வாழ்வில் முன்னேறாமல், அப்படியே இருக்க முடியுமா ? அதுவும் முடியாது.

பின் என்ன தான் வழி ?

இந்த வேலை, பணம், சொத்து இவற்றை எல்லாம் தாண்டி வேறு ஏதோ ஒன்று இருக்கறதா என்று  அறியத் தலைப் பட வேண்டும் ? இல்லை, அது எல்லாம் ஒன்று இல்லை...பணம், பொருள் ஒன்றுதான் வாழக்கை  என்று யாராவது சொல்லுவார்களா ?

பணம் வேண்டும். ஆனால் அதே சிந்தனையாக இல்லாமல் வேலை செய். நாளடைவில், வேலை என்பது  வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும், அதுவே வாழ்க்கையாகி விடாது.

எப்போது வேலை, கடமை, கர்மம் என்பது  வாழ்வின் ஒரு பகுதி என்ற நிலை வந்து விட்டதோ, அப்போது மனம் அதை தாண்டி யோசிக்கத் தலைப்படும்....வேறு என்ன இருக்கிறது இந்த வாழ்வில் என்ற கேள்வி பிறக்கும்

ஒன்று எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள். சேர்ப்பது.

கர்ம யோகம் என்றால் கர்மத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

ஞான யோகம் என்றால் ஞானத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இனைந்து இருப்பவை. இணைந்து இருக்க வேண்டும்.

கர்ம யோகத்தை பற்றி மேலும் மிக விரிவாக கண்ணன் சொல்லுகிறான்.

கேட்போம்.



Tuesday, March 21, 2017

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்



व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥

வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே|
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோஹமாப்நுயாம் ||3-2||


வ்யாமிஸ்ரேண = கலந்து, குழப்பமான

ஏவ = நிச்சயமாக

வாக்யேந  = வாக்கினால், உன் பேச்சால்

புத்திம் = என் புத்தியானது

மோஹயஸீவ = பேதலிக்கிறது

மே = என்

தத் = அந்த

ஏகம்தே = ஒன்றை மட்டும்

வத = பேச்சு

நிஸ்சித்ய = நிச்சயமான

யேந = அதனால்

ஸ்ரேயோ = உறுதியான, உயர்வான

அஹம்ஹ = நான்

அப்நுயாம்  = நான் அடைவேன்

அதையும் இதையும் கலந்து நீ சொல்வதானால் என் புத்தி குழம்புகிறது. எது எனக்கு நன்மை தருமோ அதை மட்டும் எனக்கு உறுதியாகச் சொல்


பொதுவாக மனிதர்கள், சொல்லுவதை கேட்பது இல்லை. தங்களுக்கு எது வேண்டுமோ, எது சரி என்று படுகிறதோ அதுதான் சொல்லப்பட்டதாக கேட்கிறார்கள்.

People hear what they want to hear என்று சொல்லுவார்களே, அது மாதிரி.

தங்களுக்கு பிடித்தது, சரி என்று படுவதைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், ஒன்று அதை கண்டு கொள்வது இல்லை...அல்லது என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று தவிப்பார்கள்.

இங்கே குழப்பத்திற்கு ஒரு அவசியமும் இல்லை.

கிருஷ்ணன் கடமையை செய்யாதே என்றோ, கர்மத்தில் ஈடு படாதே என்றோ சொல்லவில்லை.

பலன் கருதாமல் காரியம் செய் என்று தான் சொன்னான்.

உன் கடமையை, ஸ்வதர்மத்தை கை விடாதே என்று சொன்னான்.

உலகத்தின் இயற்கை பற்றி சொன்னான்.

பின் எங்கும் நிறைந்திருக்கும், மாற்றம் இலாத ஒன்றைப் பற்றி சொன்னன்.

அறிவின் மூலம் புலன்களை எப்படி கையாள்வது என்று கூறினான்.

இதில் குழப்பம் வர வழியில்லை. இருந்தாலும், அர்ஜுனன் குழம்புகிறான்.

திட சித்தம் உயர்ந்தது என்று கூறினாயே, அப்படி என்றால் எதற்கு வேலை செய்ய வேண்டும் ? அறிவு மட்டும் போதுமே. உழைப்பு எதற்கு என்று.

கர்மம் ஏன் செய்ய வேண்டும் ? ஞானம் தான் உயர்ந்தது என்றால் பேசாமல் நாள் பூராவும் படிப்பது, படித்தவர்கள் சொல்வதை கேட்பது என்று இருந்து விடலாமே. ஏன் கடமைகளை செய்ய வேண்டும் என்பது அர்ஜுனனின் கேள்வி.

நம் கேள்வியும் கூடத்தான்.

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்ததுதான். ஒன்று மட்டும் இருக்கட்டும், இன்னொன்று வேண்டாம் என்று சொல்ல முடியாது.

ஒரு முழுமையான மனிதனாக இருக்க வேண்டும் என்றால் ஞானமும் வேண்டும்,  நாட்படி கடமைகளையும் செய்ய வேண்டும், அதில் ஒரு அன்பும் அர்ப்பணிப்பும், பக்தியும் வேண்டும்.

பின் ஒரு இடத்தில் கண்ணன் சொல்லுவான் - குதிரைகளுக்கு நான் கொள்ளு தருகிறேன், தண்ணீர் வைக்கிறேன் என்று. ஏன் ? அவனிடம் இல்லாத ஞானமா  ? தேரோட்டி என்ற கடமையை கையில் எடுத்து விட்டால் அதை முழுமையாகச் செய்ய வேண்டும்.

அதில் சிக்கல்கள் வரும். முரண்கள் வரும்.  சட்டத்தோடு மோத வேண்டி வரும், அறத்தோடு மோத வேண்டி வரும்,  அன்பும் பாசமும் குறுக்கிடும்.

எது வந்தாலும் கடமையை செய்தே ஆக வேண்டும்.

உங்கள் கடமைகள் என்னென்ன என்று சிந்தியுங்கள். அவற்றில் எத்தனை நீங்கள் மிக ஒழுங்காகச் செய்கிறீர்கள் என்றும் சிந்தியுங்கள்.

மாணவனாய், ஆசிரியனாய், தகப்பனாக, தாயாக, பிள்ளையாக, குடிமகனாக, கணவனாக, மனைவியாக எத்தனை கடமைகள்...

எத்தனை சரியாக செய்தோம், எத்தனை சரியாக செய்யவிலை என்று சிந்தியுங்கள்.

பல சிக்கல்கள் , கடமையை சரியாக செய்யாமல் இருப்பதில் இருந்து தான் தொடங்குகிறது.




Monday, March 20, 2017

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ?

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ? 


अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந| 
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்

ஜ்யாயஸீ  = உயர்ந்தவனே

சேத் = அப்படியானால்

கர்மணா = காரியம் செய்வதுதான்

தே = உன்

மத = எண்ணம் என்றால்

 புத்தி = புத்தி, ஞானம், அறிவு

ஜனார்த்தன = ஜனார்தனனே

தத் = அது

கிம் = ஏன்

கர்மணி  = கர்மம் செய்வதில்

கோரே = கோரமான

மாம் = நீ

நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்

கேஸ²வ = கேசவா

அர்ஜுனன் சொல்கிறான், கேசவா, ஞானம் தான் உயர்ந்தது என்றால் இந்த கோராமன காரியத்தை செய்ய ஏன் என்னை தூண்டுகிறாய் ?

உண்மை தெரிந்தவனுக்கும், தெரியாதவனுக்கும் இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம்.

மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள தூரம்.

சொல்வதை புரிந்து கொள்ள முடியாத சீடன் இருக்கும் சங்கடம் உலகில் எல்லா ஞானிகளுக்கும் இருந்தது.

குரு சொல்ல வந்ததை புரிந்து கொள்ளும் சீடர்களை பெற்ற ஆசிரியர்கள் மிகச் சிலரே.

இயேசு நாதர் தன் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு துன்பம் செய்தவர்களை மன்னியுங்கள்" என்றார்

சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்கள் இயேசுவிடம் திருப்பி கேட்டார்கள் "எத்தனை முறை நாங்கள் மன்னிக்க வேண்டும் " என்று

இயேசு சங்கடப் பட்டிருப்பார் ...இந்த சீடர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ..."ஏழு முறை மன்னியுங்கள் " என்றார்.

சீடர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை "ஏழு முறை போதுமா " என்று கேட்டார்கள்.  ஏன்றால்   எட்டாவது முறை துன்பம் செய்தால் எதிரியை மன்னிக்காமல் அடி பின்னி விடலாம், முந்தைய ஏழு முறைக்கும் சேர்த்து என்பது அவர்கள் எண்ணம்

இயேசு "ஏழு முறை மட்டுமல்ல...ஏழ் எழுபது முறை மன்னியுங்கள் " என்றார்.

புத்தர் அந்த விதத்தில் மிக அதிர்ஷ்டசாலி.

ஒரு நாள் புத்தர் பிரசங்கம் செய்ய வந்து அமர்ந்து இருந்தார். அப்போது அவருடைய பிரதம சீடர்  மகா கஷ்யப் என்பவரும் அருகில் இருந்தார்.

புத்தர் அங்கிருந்த ஒரு தாமரை மலரை எடுத்து கஷ்யப்பிடம் தந்தார்.

அதை பெற்றுக் கொண்ட கஷ்யப் ஒரு புன்னகை பூத்தார்.

அதை கண்ட புத்தரும் ஒரு புன்முறுவல் பூத்தார்.

புத்தர் சொல்ல வந்ததை கஷ்யப் சொல்லாமலேயே புரிந்து கொண்டார்.

இங்கே கிருஷ்ணன் 72 ஸ்லோகங்கள் சொன்னான்...அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை....

ஞானம் தான் சிறந்தது என்றால், பின் ஏன் இந்த யுத்தம் செய்யச் சொல்கிறாய் என்று முதல்  அத்யாயத்தில்  முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறான்.

பரவாயில்லை, சந்தேகம் இருக்கும் போது மீண்டும் கேட்கிறானே...சில பேர் புரியாவிட்டாலும் புரிந்த  மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு போய் விடுவார்கள்..அந்தபுரம்   போய் தங்கள் மனதுக்கு தோன்றியதை செய்வார்கள்...கேட்டால்   இதுதான்  ஆசிரியர் சொன்னார், ஆசாரியர் சொன்னார் என்று சொல்லி விடுவார்கள்.

மதம் என்பதே புரியாதவர்கள், தெரியாதவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் தானே.

நல்ல மாணவனாக, அர்ஜுனன் புரியாததை ஒத்துக் கொண்டு மீண்டும் கேள்வி கேட்கிரான்.

மிகப் பொறுமையாக கிருஷ்ணன் பதில் சொல்கிறான்....மாணவனின் மேல் அன்பும் அக்கறையும்   உள்ள ஆசிரியனாக....

என்ன சொன்னான் என்பதை நாமும் கேட்போம் .....

ஞானம் என்பது வேறு, கர்மம் என்பது வேறு என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒன்று ஞான மார்கத்தில் செல்ல வேண்டும். படிப்பது, கேட்பது, அறிவை விருத்தி செய்து கொள்வது என்பது முடியாவிட்டால் கர்ம மார்கத்தில் செல்ல வேண்டும் என்று கீதை சொல்வதாக  பலர் உரை செய்வார்கள்.

ஞானம், பக்தி, கர்மம் என்ற மூன்று வழியை கண்ணன் சொல்வதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரியல்ல என்பது என் எண்ணம்.

ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு என்பது என் எண்ணம்.

அறிவு இல்லாத கர்மம் ஆபத்தில் போய் முடியும்.

குரங்கு கையில் வாளை கொடுத்து தன்னை பாதுகாக்கும்படி ஒரு இராஜா சொன்னானாம். அரசன் அசந்து தூங்கும்போது , அவன் கழுத்தில் ஒரு ஈ அமர்ந்தது.

குரங்குக்கு வந்ததே கோபம். கண்ட இடத்தில் அமரும் ஈயே , நீ அரசன் கழுத்தில் அமரலாமா  என்று , கையில் கிடைத்த வாளால் ஓங்கி ஒரு போடு போட்டது.

அரசன் தலை துண்டாகி இறந்து போனான்.

ஞானம் இல்லாத கர்மத்தால்  ஆபத்துதான் விளையும்.

சரி நிறைய படித்து ஞானம் இருக்கிறது. ஒரு செயலும் எல்லை, அன்பு இல்லை, கருணை இல்லை என்றால் அந்த ஞானத்தால் என்ன பயன்.

கற்றதனால் ஆய பயன் என் கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். ஞானம் இருந்து என்ன பயன், பக்தி இல்லை என்றால் என்று கேட்கிறார். ஞானம் மட்டுமே முடிவு அல்ல.

ஞானத்தில் இருந்து விளையும் கர்மமே உயர்ந்தது.

தெளிவான ஞானம் பிறக்கும் போது , அதில் இருந்தே கர்மமும் விளைகிறது.

ஞானம் வேறு கர்மம் வேறு அல்ல.

தெளிந்த சிந்தனையின் , அறிவின் விளைவே கர்மம்.

அந்த கர்மமே , மீண்டும் மீண்டும் பிறவிக்கு வழி வகுக்காத கர்மம். அதுவே பற்றற்ற கர்மம்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், யாரோ சொல்லி செய்கிறேன், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்கிறேன் என்று ஞானம் இல்லாதவன் காரியங்களை  செய்கிறான். அதன் வெற்றி தோல்வி அவனை பாதிக்கிறது.

ஞானத்தின் உச்சியில் இருப்பவன்  செய்யும் காரியம் அவன் வேறு, ஞானம் வேறு, கர்மம் வேறு என்று இல்லாமல் செய்வான்.

அங்கே கர்மம் மட்டும்தான் நிகழ்கிறது.

செய்பவனும் இல்லை. செய்யப் படுவதும் இல்லை. செயல் மட்டுமே இருக்கிறது.

அதில் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.

ஞானம் என்ற விதையில் இருந்து கர்மம் என்ற செயல் விளைகிறது.

மரம் வேறு , விதை வேறல்ல. மரமும் விதையும் ஒன்றுதானே.


ஞானத்தையும் கர்மத்தையும் பிரிக்கும் போது தான் குழப்பம் வருகிறது.

கீதையை முழுவதுமாக படித்தால் தெரியும் - ஒரு அத்தியாயத்தில் கண்ணன் ஞானமே  உயர்தது என்பான். இன்னொன்றில் கர்மமே உயர்தது என்பான். இன்னொன்றில்,, இது இரண்டும் இல்லை, பக்தியே எளிய வழி என்பான். படிப்பவர்கள்  குழம்பிப் போவார்கள்.

அர்ஜுனன் கேட்கிறான், ஞானம் உயர்ந்தது என்றால் ஏன் என்னை இந்த யுத்தத்தை செய்யச் சொல்கிறாய் என்று.

அதற்கு கண்ணன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.


Saturday, March 18, 2017

கீதை - கர்ம யோகம் - ஒரு அறிமுகம்

கீதை - கர்ம யோகம்  - ஒரு அறிமுகம் 


கர்மயோகம் கீதையின் மூன்றாவது அத்யாயம்.

இதற்கு முந்தைய இரண்டாவது அத்யாயத்தில் கிருஷ்ணன் இரண்டு விஷயங்களைப் பற்றி கூறினான்.

முதலாவது, இந்த உலகம் எல்லாம் நிறைந்தது, பிறப்பும் இறப்பும் அற்றது, வெட்டவும், எரிக்கவும்,நனைக்கவும், கரைக்கவும் முடியாதது எதுவோ அதை உணர் என்றான். இந்த உலகத்தில் எல்லாம் தோன்றி மறைவன. எதுவும் புதிது இல்லை. பிறந்து இறந்து ஏதோ ஒரு சுழற்ச்சியில் இருக்கின்றன. என்று  வாழ்வின் நிரந்தரமானது மற்றும் நிரந்தரம் இல்லாதது பற்றி கூறினான். இதை பல உரை ஆசிரியர்கள் ஆத்மா என்று பெயரிட்டார்கள். வியாசர் இடவில்லை. ஆத்மா என்று கொண்டதால், பல சிக்கல்கள் வந்தன. ஜீவாத்மா ,  பரமாத்மா இதில் எது என்ற முதல் குழப்பம். இந்த இரண்டு ஆத்மாவிருக்கு உள்ள தொடர்பு இரண்டவாது  சிக்கல். 

இரண்டாவது, திட சித்தம் பற்றியும் அது உள்ளவன் எப்படி இருப்பான் என்பது பற்றியும் கூறினான்.  எப்படி புலன்கள்  அறிவை மயக்கும் என்பதை படிப் படியாக விளக்கினான். இந்த அறிவு  வந்து விட்டால் வேறு ஒரு குழப்பமும் வராதுஎ என்றான்..

அர்ஜுனன் கேட்கிறான் - அறிவுதான் உயர்ந்தது என்றால் பின் என்னை எதற்கு யுத்தம் செய்ய  சொல்கிறாய் என்று. 

ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமான கேள்வி.

அறிவு முக்கியம் என்றால், அதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டு விட முடியுமா. 

அறிவு முக்கியம் என்றால், அறிவை பெறுவதும் ஒரு வேலை தானே. அந்த கர்மாவை  செய்தால்தானே   ஞானம் வரும்.

கிருஷ்ணன் ரொம்ப பொறுமையாக சொல்கிறான் - அறிவு சிறந்தது தான் அதற்காக    சாப்பிடாமல்  இருந்து விடுவாயா என்ற அளவிற்கு போய் பேசுகிறான். 

வாழ்வில் இன்பம் வேண்டும் என்றால் அறிவும் வேண்டும், உழைப்பும் வேண்டும்.....

அறிவற்ற உழைப்பு விழலுக்கு இறைத்த நீர். முட்டாள் தனமாய் காரியம் செய்தால் சில சமயம்  ஆபத்தில் கூட முடியலாம்.

உழைப்பற்ற அறிவால் ஒரு பலனும் இல்லை. படித்ததை உபயோகப்  வேண்டும். குறைந்த  பட்சம்  பிறருக்கு சொல்லியாவது தர வேண்டும். 

பூட்டி வைத்த அறிவால் யாருக்கு என்ன பலன் ?

வெறும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது ... உழைப்பும் வேண்டும் என்று பேசுகிறது...கர்ம யோகம்.

உழைப்பு, கடமையை செய்தல் ஏன் உயர்ந்தது, அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி  பேசுகிறது. 

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....அது என்னனா