Sunday, April 10, 2022

பகவத் கீதை - 2.56 - இன்பம் துன்பம், அச்சம், சினம்

பகவத் கீதை - 2.56 - இன்பம் துன்பம், அச்சம், சினம் 


கீதையை ஒரு சமய நூலாகவோ, தத்துவ நூலாகவோ பார்க்காமல், மனித மனதை அலசி ஆராய்ந்து, மனிதற்கு வரும் துன்பங்களை நீக்கி, இன்பமாக வாழ வழி சொல்லும் ஒரு நூலாக அணுகலாம். 


இடை இடையே சிறிது மத வாடை அடித்தாலும், அவற்றை தாண்டி மனித மனத்தை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் ஒரு மனோ தத்துவ நூலாக நாம் இதைப் படிக்கலாம். 


வீட்டில், அலுவகலத்தில் நமக்கு கோபம் ஏன் வருகிறது?


https://bhagavatgita.blogspot.com/2022/04/256.html


(click the above link to continue reading)


நமக்கும், நாம் அடைய நினைக்கும் ஒன்றிற்கும் நடுவில் யாராவது வந்தால் அவர்கள் மேல் கோபம் வரும். 


உதாரணமாக, 


கணவன் அலுவகலத்தில் இருந்து வந்து களைத்து இருக்கிறான். மனைவிக்கு எங்கோ வெளியில் போக வேண்டும். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். உடனே அவள் மேல் கோபம் வருகிறது. சண்டை பிடிக்கிறான்.  ஏன் ? ஓய்வு எடுக்க வேண்டும் என்ற அவன் விருபத்துக்கு மாறாக அவள் குறுக்கே நிற்கிறாள். 


அதே சூழ்நிலையில், மனைவிக்கு கணவன் மேல் கோபம் வருகிறது. என்ன இது மனுஷன், அலுவலகம், வீடு என்று எப்பப் பாரு இதே தானா? ஒரு சினிமா, பார்க், பீச் என்று ஒரு இடத்துக்கு கூட்டிப் போவது கிடையாது என்று அவன் மேல் கோபம் கொள்கிறாள். 


ஏன் ?


வெளியில் சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற அவளுடைய விருப்பத்துக்கு அவன் குறுக்கே நிற்கிறான். 


நம் விருபத்துக்கு குறுக்கே யார் நின்றாலும், அவர்கள் மேல் கோபம் வருகிறது. 


கீதை என்ன சொல்கிறது என்றால், கோபத்துக்குக் காரணம் மற்றவர்கள் அல்ல, நம் விருப்பமே. .நமது ஆசை (ஓய்வு எடுக்க வேண்டும், வெளியில் சுற்ற வேண்டும்). பற்று இருக்கும் போது கோபம் வரும். 


அலுவலகத்திலும் அப்படித்தான். .நமக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றின் மேல் ஆசை. அதைத் தரதா மேல் அதிகாரி மேல் கோபம் வரும். 



இது முதல் செய்தி. .


அடுத்ததாக, 


ஒன்றை அடைந்து விட்டோம். ஆசைப் பட்டது கிடைத்து விட்டது. நிம்மதியாக இருக்க முடியுமா? எங்கே அது கையை விட்டுப் போய் விடுமோ என்ற பயம் வருகிறது அல்லவா? பிள்ளைகள் மேல் அளவுக்கு அதிகமான அன்பு.  அவர்களுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ என்ற பயம் வருகிறது. முதலீடு செய்த பணம் மதிப்பு இழந்து விடுமோ என்ற பயம் வருகிறது.  உயிர் மேல் உள்ள ஆசையால் மரண பயம். 


இப்படி ஒவ்வொரு பயத்துக்கும் பின்னால் ஒரு ஆசை ஒளிந்து கொண்டு இருக்கும். 


இது இரண்டாவது செய்தி. 


பயம், கோபம் இவை இரண்டுக்கும் காரணம் வெளியில் உள்ளவர்களோ, பொருள்களோ அல்ல. நம் ஆசை, பற்று தான் காரணம். 


எனவே, பயத்தையும், கோபத்தையும் போக்க வேண்டும் என்றால் பற்றை விட வேண்டும். (ராகம் என்றால் பற்று).


அது எப்படி கணவன் மேல், மனைவி மேல், பிள்ளைகள் மேல் பாசம் வைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால், பாசம் வைத்தால் கோபமும், பயமும் வரும். 


வாழ்நாள் பூராவும் பயத்தோடு, கோபத்தோடு வாழ உங்களுக்கு விருப்பமா? அல்லது கோபமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்க விருப்பமா? 


நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 


பற்றை விட்டு அதன் மூலம் கோபத்தையும், பயத்தையும் விட்டவனே முனிவன் என்று கூறப் படுகிறான். அவன் மன உறுதி உள்ளவனாக இருப்பான் என்கிறான் கண்ணன். .


இனி ஸ்லோகத்தைப் பார்ப்போம். .


பாடல் 



 दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः।

वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते॥५६॥


து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|

வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||


து³:கே²ஷ் = துன்பத்தில் 

அநுத் விக்³ந மநா: = நடுக்கம், குழப்பம் இல்லாத மனம் 

 ஸுகே²ஷு  = இன்பத்தில் 

 விக³தஸ்ப்ருஹ:| = ஆசைகளை விட்டு ஒழித்தவன் 

வீதராக பய க்ரோத = பற்றும், பயமும், கோபமும் விட்டவன் 

ஸ்திததீர் = மனதில் உறுதி உள்ளவன் 

முநிர் = அந்த முனிவன் 

உச்யதே = அழைக்கப் படுகிறான் 



யோசித்துப் பாருங்கள் 


கோபமும், பயமும் துளி கூட இல்லை என்றால் வாழ்வு எப்படி இருக்கும் என்று. 


பயம் இல்லாத இடத்தில் துணிவு பிறக்கும். 


கோபமும், பயமும் இல்லாத இடத்தில் மன உறுதி பிறக்கும். 


மனக் குழப்பம் எப்போது வருகிறது?


எதைச் செய்தால் நமக்கு அதிக நன்மை கிடைக்கும், எதைச் செய்தால் துன்பத்தில் இருந்து தப்பலாம் என்று ஆசையின் காரணமாக குழப்பம் வருகிறது. 


பயம், கோபம், மனக் குழப்பம் இல்லாத வாழ்வு வேண்டுமா? 


யாரிடமும் பயம் இல்லை. எதனிடமும் கோபம் இல்லை. 


"நாம் யார்க்கும் குடியல்லோம்" என்று துணிந்து அரசனைப் பார்த்து சொன்னார் வயதான நாவுக்கரசர். 


அந்தத் துணிவு எங்கிருந்து வந்தது? 


அரசன் என்ன செய்து விட முடியும்? உயிரை எடுக்க முடியும். உயிர் மேல் பற்று இல்லாதவனுக்கு என்ன பயம்?


இது நமக்கு பயன் உள்ள ஒன்றா இல்லையா? 

Friday, April 8, 2022

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன் என்றால் யார் ?

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன்  என்றால் யார் ?


 श्रीभगवानुवाच

प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान्।

आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते॥५५॥


ஸ்ரீப⁴க³வாநுவாச

ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|

ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/255.html


 (pl click the above link to continue reading)




ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான், கண்ணன், சொல்கிறான் 

ப்ரஜஹாதி = துறக்கிறான் 


யதா³ = அப்போது 


காமாந் = ஆசைகளை, விருப்பங்களை 


ஸர்வாந்  = அனைத்தையும் 


பார்த = பார்த்தனே 


மநோக³தாந் = மனோ + கதன் = மனதில் உள்ள, மனதில் சென்ற , மனதில் தோன்றிய 


ஆத்மந்  = தன்னுள் 


யேவ = உறுதியாக 


ஆத்மநா = தனக்காக 


துஷ்ட: = அமைதி அடைந்து, சாந்தி அடைந்து 


ஸ்தி²தப்ரஜ்ஞஸ் = உறுதியான சித்தத்தை உடையவன் 


ததா = அப்போது 


உச்யதே  = சொல்லப் படுகிறது ||2-55||


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, தன்னுள் தானே மகிழ்ந்து, அமைதி கொண்டு இருப்பான் ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன். 


இது ஒரு முக்கியமான ஸ்லோகம். .மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஸ்லோகமும் கூட. 


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் உள்ள அனைத்து ஆசைகளையும் துறந்து விட்டவன் என்பது முதல் கூறு. 


ஹா...கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறது என்று ஆரம்பித்து விடுவார்கள். இன்பங்களை அனுபவிப்பது என்பது வேறு. இன்பங்களுக்கு ஆசைப் படுவது என்பது வேறு. 


இன்பம் எதில் இருக்கிறது?


சிறு பிள்ளையாக இருக்கும் போது பொம்மைகளில் ஆசை. அதை வைத்து விளையாடுவதில் இன்பம். புது புது பொம்மைகள் வாங்குவது இன்பம். அது அப்படியே இருக்கிறதா?


கொஞ்ச காலம் சென்ற பின், வேறு ஒன்றின் பின் மனம் செல்கிறது. 


வாலிப வயதில் எதிர்பாலரின் மேல் ஆசை. அவர்களோடு பேசுவது, பழகுவது போன்றவறில் இன்பம். 


அப்புறம், பணம், சொத்து, பிள்ளைகள், அதிகாரம், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மனம் ஏதோ ஒன்றின் பின் போகிறது. 


எதன் மேலும் மனம் உறுதியாக நிற்பது இல்லை. 


பொம்மை தந்த இன்பம் என்ன ஆனது? அது எங்கே போனது?


இன்பம் பொம்மையிலா இருக்கிறது? அப்படி என்றால் எல்லோருக்கும் அதில் இன்பம் வர வேண்டுமே? எல்லா காலத்திலும் இன்பம் வர வேண்டுமே?


மகிழ்ச்சி, இன்பம் என்பது வெளியில் உள்ள பொருளில் இல்லை என்று தெரிகிறது அல்லவா?


ஆனாலும், ஒரு காலத்தில் பொம்மை வைத்து விளையாடிய போது இன்பம் இருந்ததே? காதலியின் கண் பார்வையில் உடல் எல்லாம் புல்லரித்ததே? எப்படி அதில் இன்பம் இல்லை என்று சொல்ல முடியும்? 


சரி, அதில் இன்பம் இருப்பதாகவே கொள்வோம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாகி விட்டது.


ஒரு வருடம் கழித்து அதே புல்லரிப்பு இருக்குமா?


ஐந்து வருடம் கழித்து ? பத்து வருடம்? இருபது வருடம், நாற்பது வருடம்?


இன்பம் போய் விடுகிறது. 


இன்பம் பொருளில் இல்லை. இன்பம் வெளியில் இல்லை. இன்பம் தனக்குள்ளே இருக்கிறது. அதை முதலில் கண்டு கொள்ள வேண்டும். 


நல்ல இசை கேட்கும் போது கண் ஏன் மூடிக் கொள்கிறது? இன்பம் உள்ளே இருக்கிறது. உள்ளே உள்ள இன்பத்தை வெளியில் உள்ள பொருள்கள் கொண்டு வருகின்றன. 


நல்ல சுவையான இலட்டை வாயில் போட்டவுடன், "ஹ்ம்ம்ம் ...என்று கண்ணை மூடி இரசிக்கிறோம்". ஏன்?  இன்பம் உள்ளே எங்கேயோ இருக்கிறது. 


வெளியில் இன்பம் இருக்கிறது என்று ஓடிக் கொண்டு இருக்க மாட்டான் ஸ்திதப்ரஜ்ஞன். இன்பம் வெளியில் இல்லை என்றால் அதற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? 


எத்தனையோ பொருள்களை இன்பம் தரும் என்று தேடி ஓடினோம். அவை இன்பம் தரவில்லை. மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்கிறதா? 


எனவே "அவன் மனதின் ஆசைகளை முற்றுமாக துறந்து விட்டவன்" என்கிறது கீதை. 


சரி, ஆசையே இல்லாமல் ஒரு ஜடம் போல இருப்பானா என்றால் இல்லை, தனக்குள் இன்பத்தைக் கண்டு கொண்டவன் அவன். அவனுக்குத் தெரியும் இன்பம் தனக்குளே இருக்கிறது என்று. 


எனவே, எல்லோரையும் விட அவனே மிகவும் சந்தோஷமாக இருக்கிறான். 


வெளியில் உள்ள பொருள்கள் வந்தால் வரட்டும். அதைத் தேடி அவன் ஓடுவதில்லை. அவற்றின் மேல் ஆசை கிடையாது. நாளை அவை விட்டுப் போனாலும் கவலை இல்லை. 


இது புரிந்து விட்டால் அனைத்து குழப்பங்களும் தெளியும். மனம் எல்லையற்ற இன்பத்தில் திளைக்கும். 


யோசித்துப் பாருங்கள். புரிந்தால் நல்லது. 

Wednesday, April 6, 2022

பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?

 பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?


अर्जुन उवाच

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।

स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्॥५४॥


சுலோகம் 


அர்ஜுந உவாச

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|

ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/254.html


(pl click the above link to continue reading)


அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்டான் 

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய = உறுதியான அறிவு உள்ளவன் 

கா பா⁴ஷா  = எப்படி பேசுவான் 

ஸமாதி⁴ஸ்த²ஸ்ய = சமாதி நிலை அடைந்தவன் 

கேஸ²வ| = கேசவா 


ஸ்தி²ததீ = உறுதியான புத்தி உள்ளவன் 


கிம்  = எப்படி 


ப்ரபா⁴ஷேத = சொல்லுவான் 


கிமாஸீத = எப்படி இருப்பான் 


வ்ரஜேத கிம் = எதை அடைவான் ?


சமாதி நிலை அடைந்து, உறுதியான மன நிலை அடைந்தவன் எப்படி இருப்பான், என்ன பேசுவான், எப்படி சொல்லுவான், அவன் அடைவது என்ன? 


மத நம்பிக்கை உள்ளவர்களிடம் ஏதாவது மதம், கடவுள் என்று ஏதாவது கேட்டால் கொஞ்சம் பதில் சொல்லுவார்கள், எப்போது அவர்களுக்கு பதில் தெரியவிலையோ அப்போது 


"அதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது, எல்லாத்தையும் கேள்வி கேட்கக் கூடாது, உனக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள், ,இல்லை என்றால் விட்டு விடு" என்று கோபம் கொள்ள ஆரம்பிப்பார்கள். 


இந்து மதம் என்பது நம்பிக்கையின் பால் உள்ளது அல்ல. 


கேள்வி கேட்பதை அது பெரிதும் ஆதரிக்கிறது. 


கீதை முழுவதுமே, அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அதுவும் கண்ணனை. கண்ணன் என்ன சொன்னாலும் அர்ஜுனன் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. கேள்வி கேட்கிறான். அதுதான் அறிவின் அடையாளம். சந்தேகம் பிறவிக் குணம். அறிவுத் தேடல் பிறவிக் குணம். எதைச் சொன்னாலும் மண்டையை ஆட்டுவது என்பது அறிவின் வெளிப்பாடு அல்ல. 


போன ஸ்லோகத்தில் கண்ணன் சொன்னான், உன்னுடைய விருப்பு வெறுப்பினால் நீ எதைக் கேட்டாலும் குழப்பம் அடைகிறாய். சமாதி நிலையில், உறுதியாக இருந்தால் நீ யோக நிலையை அடைவாய் என்றான். 


அப்படியா சரி என்று அர்ஜுனன் கேட்டுக் கொள்ளவில்லை.


உடனே கேள்வி கேட்கிறான். 


கண்ணா, யோக நிலை, உறுதியான மனம் (சித்தம்) என்று கூறுகிறாயே அப்படிப் பட்டவன் எப்படி இருப்பான்? அவன் எப்படி பேசுவான், என்ன சொல்லுவான்? அந்த நிலை அடைந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கிறான். 


பலன் இல்லாமல் ஒரு காரியம் செய்வானேன்? என்ன பலன் என்று தெரிந்து கொண்டால் பின் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். 


கண்ணன், "நான் கண்ணன் சொல்கிறேன். பரந்தாமன் சொல்கிறேன். என்னையே கேள்வி கேட்கிறாயா ?" என்று சொல்லவில்லை. பொறுமையாக் பதில் சொல்கிறான். 


"ஸ்தி²தப்ரஜ்ஞன்" என்பது கீதையில் ஒரு முக்கியமான கோட்பாடு. 


உறுதியான மனம். அறிவு. சித்தம். 


அலைபாயாத தன்மை. ஒருமுகப் படுத்துதல். 


அது என்ன என்று கண்ணன் சொல்லப் போகிறான். 


கேட்போம். 



Tuesday, April 5, 2022

பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?

 பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?


श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।

समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि॥५३॥


ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|

ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||


ஸ்²ருதி = சுருதி என்றால் சப்தம். பொதுவாக வேதத்தை ஸ்ருதி என்று சொல்வார்கள். ஏன் என்று கீழே சிந்திப்போம். 


விப்ரதி பந்நா = ப்ரதி , வி-ப்ரதி = குழம்பி, தெளிவற்று, அங்கும் இங்கும் அலைந்து 


தே  = நீ, உன் 


யதா = அப்போது 


ஸ்தா²ஸ்யதி = நிலைத்து நிற்கும் 


நிஸ்²சலா| = சலனமின்றி 


ஸமாதாவ் = சமமாக, ஒன்றுபட்டு, வேறுபாடு இன்றி, 


அசலா = அலையாமல், சலனம் இல்லாமல் 


பு³த்³தி⁴ = புத்தி 


ததா = அப்போது 


யோக³ம் = யோகம் 


அவாப்ஸ்யஸி நீ அடைவாய்  ||2-53||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/253.html


(please click the above link to continue reading)



எப்போது உன் புத்தி கேள்விகளிலே கலக்கம் அடையாமல், தெளிவாக, உறுதியாக இருக்கிறதோ, அப்போது நீ யோக நிலையை அடைவாய் .


மிகப் பெரிய விடயத்தை இரண்டு வரியில் அடக்கி விடுகிறான் கண்ணன். 


நாம் விரித்து சிந்திப்போம். 


நம் புத்தி எப்போதும் சலனப் பட்டுக் கொண்டே இருக்கும். எப்போதும் சஞ்சலத்தில் இருந்து கொண்டே இருக்கும். கலங்கிய குளம் போல். அதில் எதுவும் தெளிவாகத் தெரியாது. 


ஒரு கேள்வி வரும். அதற்கு ஒரு பதில் சொன்னால், அந்தப் பதிலில் இருந்து பத்து கேள்விகள் வரும். அந்த பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னால், அதில் இருந்து நூறு கேள்விகள் பிறக்கும். 


இதற்கு ஒரு எல்லையே இல்லை. 


காரணம் என்ன? மனம் தெளிவாக இல்லை. குழம்பி கிடக்கிறது. குழம்பிய மனதில் எந்த பதிலும் நிற்காது. 


சூரியன் எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும், குளம் கலங்கி இருந்தால் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியாது. 


நம் கண்ணில் குறை இருந்தால், பார்ப்பது எல்லாம் பழுதாகத் தெரியும். 


நம் மனதில் குறை இருந்தால் படிப்பது, கேள்விப் படுவது, எல்லாம் பழுதாகப் போகும். 


கேள்வி கேட்டு தெளிவு பெற முடியாது. மனம் அலை பாயாமல், ஒருமுகப் பட்டு, தெளிந்து இருந்தால், அதுவே யோகம். அப்போதும் தோன்றும் காட்சி யோகக் காட்சி எனப்படும். அதில் எந்த விதக் குழப்பமும் இருக்காது. 


அது இல்லாத பட்சத்தில் ஆயிரம் புத்தகங்கள் படிக்கலாம், எத்தனை உபன்யாசம் கேட்கலாம், ஒரு தெளிவும் பிறக்காது. 

\

வேதத்திற்கு ஸ்ருதி என்று பெயர். சஸ்ருதி என்றால் ஒலி, சப்தம். வேதத்தை எழுதி வைத்து படிப்பது இல்லை. அது வாய் மொழியாக கேட்டு கேட்டு வருவது. எனவே தான் அதற்கு எழுதா மறை, எழுதாக் கிளவி என்று பெயர். 


"எழுதா மறையின்" ஒன்றும் அரும் பொருளே என்பார் அபிராமி பட்டர். 


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.- "எழுதாமறை"யின் 

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 


அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


வேதத்தின் சாரத்தையே எடுத்துக் கொடுத்தாலும் மனம் அடங்காது. அதில் இருந்து இன்னும் ஆயிரம் சந்தேகம் கேட்கும். 


கண்ணன் சொல்கிறான் , "அர்ஜுனா, உன் மனம் குழம்பி இருக்கிறது. நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது. மனக் குழப்பத்தை விட்டால் உனக்கு யோக காட்சி கிடைக்கும்" என்கிறான்.


அட்டாங்க யோகம் சொல்ல வந்த பதஞ்சலி எடுத்த எடுப்பில், 


"சித்த விருத்த நிரோதம்"  என்று ஆரம்பிப்பார்.


சித்தத்தில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகம் என்று ஆரம்பித்து கடைசியில் சமாதியில் கொண்டு முடிப்பார். 


சமாதி என்றால் ஏதோ அடக்கம் பண்ணும் இடம் என்று நினைக்கக் கூடாது. 


சமம் +ஆதி. 


உலக குழப்பம் எல்லாம் வருவதற்கு முன், குளத்தில் நீர் அலைகள் எழும் முன் எப்படி சலனம் இல்லாமல் தெளிவாக இருந்ததோ அப்படிப்பட்ட ஆதி நிலைக்கு செல்வது தான் சமாதி நிலை. 


யோக சாத்திரத்தின் சாரத்தை சொல்லி விட்டுப் போகிறான் ஒரு வரியில் கண்ணன். 


மேலும் சிந்திப்போம். 




Monday, April 4, 2022

பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம்

 பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம் 


यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।

तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥


யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|

ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||


யதா³ = எப்போதெல்லாம் 


தே  = உனது 


மோஹகலிலம் = மோகத்தினால் குழப்பம் அடைகிறதோ 


பு³த்³தி⁴ = உன் புத்தி 


வ்ர்வ்யதிதரிஷ்யதி = கடந்து செல்லுதல் 


ததா³  = அப்போது 


க³ந்தாஸி = நீ செல்வாய், கடந்து செல்வாய் 


நிர்வேத³ம்  = துன்பம், வேதனை 


ஸ்²ரோதவ்யஸ்ய = எதைக் கேட்கப் போகிறாயோ 


ஸ்²ருதஸ்ய ச  = எதை கேட்டாயோ 



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/252.html


(please click the above link to continue reading)


"எப்போதெல்லாம் உன் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ அப்போதெல்லாம் நீ கேட்டவற்றாலும், கேட்கப் போகிரவற்றாலும் துன்பம் கொள்கிறாய்"


நாம் எவ்வளவோ படிக்கிறோம். இருந்தும் ஒரு மாற்றமும் நம்மில் எழுவதில்லை. அப்படியே ஏதோ ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும், காலப் போக்கில் அது மறைந்து விடுகிறது. 


காரணம் என்ன?


கீதை விளக்குகிறது. 


நமக்கு சிலவற்றின் மேல் விருப்பும், சிலவற்றின் மேல் வெறுப்பும் இருக்கிறது. இந்த விருப்பு வெறுப்பை நாம் விடத் தயாராக இல்லை. யார் என்ன சொன்னாலும், குரங்கு பிடி போல் பிடித்துக் கொள்வோம். அந்த விருப்பு வெறுப்புக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம். அல்லது, அந்த சொற்கள் நமக்குள் வேதனையை உண்டாக்கும்.


கேட்காமல் போனால் சரி. ஏன் வேதனையை உண்டாக்க வேண்டும் ?


நாம் ஒன்றை சரி என்று நினைக்கிறோம். மற்றவர் அது தவறு என்று பலவிதங்களில் நிறுவுகிறார். நாம் அவர் சொல்வதை ஏற்க மாட்டோம். ஆனால், நமக்குள் ஒரு சந்தேகம் எழும். ஒரு வேளை நாம் நினைப்பது தவறோ? அவர் சொல்வது சரியோ ? அல்லது எது சரி அல்லது தவறு என்ற குழப்பமும் வரும்.


அது ஒரு சிக்கல். அந்த சிக்கல் தீரும் வரை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். தீரா தலைவலி அது. 


எனவே என்ன செய்ய வேண்டும் ?


உயர்ந்தவர்கள் சொல்லும் போது நமது விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு கேட்க வேண்டும். 


காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் 

ஆய்தல் அறிவுடையார் கடன்

என்பார் வள்ளுவர். 


அர்ஜுனனுக்கு அது தான் சிக்கல். 


உறைவினர்கள் மேல் பாசம். அவர்களை கொல்வது தவறு என்று அவன் நினைக்கிறான். 


கண்ணனோ உன் கடமையச் செய் என்கிறான். 


மோக கலிதம் வருகிறது. பற்றினால் வரும் குழப்பம். 


இது வரை கேட்டது மட்டும் அல்ல. இனி கேட்கப் போவதும் துன்பம் தரும். 


நாம் சரி தவறு என்று நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் யாரோ முன் நமக்குச் சொன்னது தான். 


அதைப் பற்றிக் கொண்டு விடாமால் இருப்பதால் நமக்கு மேலும் மேலும் வரும் அறிவின் தாக்கம் துன்பத்தைத் தருகிறது.


பலனை எதிர்ப்பார்க்காமல் செய் என்றால் அது எப்படி முடியும் என்று சண்டைக்கு வருகிறோம். காரணம் அப்படி ஒன்று இருக்க முடியாது என்ற நம் பற்று.


அவற்றை நீக்கி வைத்து விட்டு கேட்டால் துன்பம் வராது என்கிறது கீதை.