Saturday, May 21, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 2

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 2


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.




அனைத்தின் இதயமாகவும் நான் இருக்கிறேன்.

எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும் , நாம் புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு தத்துவம் உண்டென்றால், அது இதுதான். 

இறைவனை வெளியே தேடுவதை, வெளியே உள்ள இறைவனை தொழுவதை, சிலைகளுக்கும் , படங்களுக்கும் பூஜை செய்வதை நாம் நிறுத்தவே மாட்டோம். கீதை சொல்கிறது,  "நான் அனைத்தின் இதயமாக இருக்கிறேன்" என்று. உங்களுக்குள் மட்டும் அல்ல, அனைத்தின் உள்ளும் இருப்பது தான் அது. உங்களுக்கு உள்ளே  இருக்கும் ஒன்றை வெளியே ஏன் தேடுகிறீர்கள் ? 

உங்களுக்குள் இருக்கும் ஒன்றை நீங்கள் அறியாவிட்டால், வெளியே உள்ளதை எப்படி அறிவீர்கள் ? 

என்னிடம் இருக்கும் ஒன்றை நான் ஏன் வெளியே தேட வேண்டும் ?

நான் எப்படி எனக்குள் இருக்கும் ஒன்றை அறிந்து கொள்வது ?

முதலில், வெளியே தேடுவதை நிறுத்த வேண்டும். வெளியில் தேடுவது என்பது, உள்ளே இருக்கும் ஒன்றை தேடாமல் இருப்பதற்கான எளிய வழி. கோவில்களில், சிலைகளில், படங்களில், மற்ற மனிதர்களில், புத்தகங்களில் எங்கும் தேடுவதை நிறுத்த வேண்டும். 

பின் எங்குதான் தேடுவது ? 

உங்களுக்குள் தேடுங்கள். 

அது எப்படி தேடுவது ? எனக்குள் நான் எப்படி தேட முடியும் ? அப்படி தேட யாரும் சொல்லித் தரவில்லையே ? நானே எப்படி தேடுவேன் ?

அதற்குத்தான் கீதை சொல்கிறது "கற்றவற்றை மற". வெளியில் தேட கற்றுக் கொன்றவற்றை மற. மறக்காதவரை, அந்தத் தேடலை செய்யாவிட்டால் ஏதோ தவறு செய்வது போல இருக்கும். 

சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும், சுலோகம் சொல்ல வேண்டும், விரதம் இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தரப் பட்டிருக்கிறது. அப்படி செய்யா விட்டால் ஏதோ பாவம் செய்வது போல நம்மகுத் தோன்றும். அப்படி தோன்றிக் கொண்டிருந்தால், உள்ளே தேட முடியாது. 

எனவே, அதை மறக்க வேண்டும். அப்படி ஒன்றை கற்றுக் கொண்டதாகவே இருக்கக் கூடாது. 

இது சரி தானா ? இல்லை, கீதைக்கு ஏதோ வலிந்து பொருள் சொல்வதாகப் படுகிறதா உங்களுக்கு ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1515-2.html

Monday, May 16, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 1

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 1


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.


 நமக்கு பல விஷயங்கள் , பல இடங்களில் இருந்து வருகிறது. நம் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், புத்தகங்கள் , தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் என்று பலவழிகளில் நாம் அறிவைப் பெறுகிறோம்.

சிக்கல் என்ன என்றால் எது சரி, எது தவறு என்று நமக்குத் தெரியாது. நாம் சிலவற்றை சரி என்று மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அதோடு ஒத்துப் போகக் கூடிய புதிய விசயங்களை ஏற்றுக் கொள்கிறோம். அதோடு ஒத்துப் போகாத விஷயங்களை அவை தவறு என்று தள்ளி விடுகிறோம்.

அதாவது, முதலில் வந்தவை சரி. பின்னால் வருபவை சரி அல்ல என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

இன்று உலகில் பெரும்பாலன சிக்கல்களுக்கு இதுவே காரணம்.

நான் நினைத்துக் கொண்டிருப்பது, எனக்குச் சொல்லப் பட்டது, என் வேதம், என் கடவுள் , என் மார்க்கம் இவைதான் சரி. மற்றவை எல்லாம் சரி அல்ல என்று மனிதன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றான்.

வெளியில் மட்டும் அல்ல.

வீட்டிலும்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சிக்கல். காரணம் என்ன ?

கணவன் நினைக்கிறான் , அவன் நினைப்பதுதான் சரி என்று. அதே போல் மனைவியும் நினைக்கிறாள்.

குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் சில கொள்கைகளை வைத்து இருக்கிறோம். அவற்றோடு உலகம் ஒத்துப் போகா விட்டால் நமக்கு கோபமும், எரிச்சலும் வருகிறது.

இந்த சிக்கல்களுக்கு கீதை வழி சொல்கிறது. அதுவும் இந்த ஸ்லோகத்தில்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

நாம் கற்றவற்றை, அறிந்தவற்றை நாம் ஞாபகத்தில் வைத்து இருக்கிறோம். நம் ஞாபகத்தில் இருந்து அவற்றை மீண்டும் வரவழைத்து வாழ்வில் உபயோகப் படுத்துகிறோம். அது நினைவும், ஞானமும்.

ஞானம் வளர வேண்டும் என்றால் மறதியும் வேண்டும்.

தவறானவற்றை , சரி பார்காதவற்றை, துன்பம் தருபவற்றை எப்படியோ  நாம் கற்றுக் கொண்டு விடுகிறோம். அவற்றை மறந்தால் தான்  முன்னேற முடியும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நாம், முதலாவது வகுப்பில், சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, அது மறையும் திசை மேற்கு என்று படித்து இருக்கிறோம்.

ஆறாவது வகுப்பு வந்தால், சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது பாட்டுக்கு ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பூமி சுற்றுவதால் அது உதிப்பதும், மறைவதும் போலத் தெரிகிறது என்று சொளிழ்த் தருகிறார்கள்.

இப்போது எது சரி ?

சூரியன் உதிக்கிறதா ? அல்லது உதிக்காமல் ஒரே இடத்தில் இருக்கிறதா ?

இல்லை, என் வேதத்தில் சொல்லி இருக்கிறது. அது மிகப் பழமையானது, எப்போது எழுதியது என்றே தெரியாது. எனவே அதில் சொல்லியதுதான் சரியாக இருக்க வேண்டும் என்று ஒன்றாம் வகுப்பு  புத்தகத்தை பிடித்துக் கொண்டு இருப்பது சரியா ?

ஞானம் மேலும் மேலும் வளர வேண்டும் என்றால் , முதலில் கற்றவற்றை மறக்க வேண்டும்.

சரி, சூரியன் நிலையாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால், இல்லை, பொறு...சூரியன் பால் வெளியில் இருக்கிறது...இந்த பால் வெளியே சுற்றுகிறது. அதோடு சேர்ந்து இந்த சூரியனும் சுற்றுகிறது என்கிறார்கள்.

எனவே, சூரியன் நிலையாக இருந்தது என்பதும் தவறு. அது சுற்றுகிறது என்பது சரி.

ஞானம் என்பது இப்படித் தான் வளர வேண்டும்.

நினைப்பு - ஞானம் - மறதி.. மீண்டும் புதிய நினைப்பு, புதிய ஞானம் என்று சக்கரம் போல மாறி மாறி வரும்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் புதிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமா, பழையனவற்றை பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள். திறந்த மனத்தோடு இருங்கள்.

புதிய புதிய ஞானம் வரும்.  வர விடுங்கள்.

நீங்கள் நினைப்பது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், அது மட்டும் தான் சரி என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்.

பழைய குப்பைகளை தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள்.

சுமை இல்லாமல் சுகமாக இருப்போம்.

(மேலும் தொடரும் என்று சொல்வதற்கு முன்னால், இதை ஆழமாக சிந்தியுங்கள்...சுகமான சிந்தனைகள் வளரட்டும் )


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1515-1.html )

Saturday, May 14, 2016

கீதை - 15.14 - அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்

கீதை - 15.14 - அன்னத்தை ஜீரணமாக்குகிறேன் 




अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥१५- १४॥

அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித: |
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் || 15- 14||


அஹம் =நான்
வைஸ்வாநரோ = அனைத்து உயிர்களிலும்

பூத்வா = சேர்ந்து

ப்ராணிநாம் = உயிர் வாழ்வனவற்றில்

தேஹம் = உடல்

அஸ்ரித: = அடைந்த பின்

ப்ராணா = பிராண

அபாந = அபான

ஸமாயுக்த: = சமமாக சேர்த்தபின்

பசாம் = சமைக்கிறேன்

அன்னம் = உணவை

சதுர் விதம் = நான்கு விதமாக



நான் வைசுவாநரனாய், உயிர்களில் உடலை சார்ந்து இருக்கிறேன். ; பிராணன் அபானன் என்பவற்றைக் கொண்டு நான்கு விதமாக உணவை ஜீரனமாக்குகிறேன். 

வைஸ்வநரா என்றால் உணவை ஜீரணிக்கும் அக்னி என்று பொருள் சொல்கிறார்கள். நான்கு விதமாக உணவை என்றால் என்ன ? நாம் உணவை நான்கு  விதமாக உட்கொள்கிறோம்.

அவையாவன

போக்ஷியம் - கடித்து அரைத்து உண்பது
போஜ்யம் - கடிக்காமல் உண்பது. அதாவது விழுங்குவது
லேஹியம் - நக்குவது (தேன் , பஞ்சாமிர்தம் போன்றவற்றை)
கோஷ்யம் - உறிஞ்சுவது (நீர் ஆகாரங்களை - பால், மோர் போன்றவற்றை)

பிராணன், அபானன் - பிராணன் என்றால் வாயுவை மேல் நோக்கி இழுப்பது. அபாணன் என்றால் வாயுவை கீழ் நோக்கி விடுவது.  மூச்சு விடுவது என்று சுருக்கமாக சொல்லலாம்.

சரி, இது என்ன கீதை பாட்டுக்கு ஏதோ மருத்துவ புத்தகம் மாதிரி போய்க் கொண்டு இருக்கிறதே என்று நாம் நினைக்கலாம்.

கண்ணன் உணவைப் பற்றியா சொல்கிறான் ? உணவு என்பது ஒரு குறியீடு.

இன்றைய சமுதாயத்தில் சிக்கல் என்ன என்றால் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணிக் காட்டு என்று கேட்பது தான்.

அனுபவங்களைக்  கூட அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ண முடியுமா என்று கேட்கும் ஒரு தலை முறை வந்துவிட்டது.

தாயன்பு, காதலியின் முத்தம், குழந்தையின் அரவணைப்பு, பாசம், கருணை, பக்தி, நம்பிக்கை, என்பதெல்லாம் நிரூபனங்களுக்கு அப்பாற்பட்டவை.


நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நமக்கு வேண்டி இருக்கிறதோ இல்லையோ, நம்மையும் அறியாமல் நாம் உண்மையைத் தேடிக் கொண்டுத்தான் இருக்கிறோம்.

சிலவற்றை அலசி ஆராய்ந்து, ஒன்றுக்கு பலமுறை சரி பார்த்து ஏற்றுக் கொள்கிறோம். கடித்து, அரைத்து உண்பது போல. இது அறிவியல் சார்ந்த உண்மை.

சிலவற்றை, அனுபவத்தால் அறிய முடியாது. அறிவால் அறிய முடியும். பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தால் அடிபட்டு உயிர் போய் விடும் என்பதை குதித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாது. அறிவினால் , சரி பார்க்காமல் ஏற்றுக் கொள்கிறோம். உணவை அப்படியே விழுங்குவதைப் போல.

சிலவற்றை, கொஞ்சம் அனுபவத்தால் அறிய முடியும். முழுவதும் அறிய முடியாது.  கையில் பிடிக்க முடிக்காது. ஒரு கணம் இருக்கும். மறு கணம்   போய் விடும். அந்த ஒரு கணத்தில் அதன் தன்மை புரியும். அதிலிருந்து நாம் மேற்கொண்டு அறிந்து கொள்ள வேண்டியதுதான். தேன் ஒரு தேக்கரண்டி வாயில் விட்டால் , தித்திக்கும். அதை வாயில் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. வழுக்கிக் கொண்டு ஓடி விடும். ஒரு ஒரு துளி இவ்வளவு இனிப்பாக இருக்கிறது என்றால் முழவதும் எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ளலாம்.

சிற்றின்பம் சில வினாடி தான். தன்னை மறந்த அந்த ஒரு நொடி இருக்கும். அதை அனுபவமாக மாற்றி அறிவுக்கு கொண்டு செல்வதற்குள் மறைந்து விடும். சிற்றின்பம் இப்படி என்றால், பேரின்பம் எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

சிலவற்றை அனுபவத்தால் கொஞ்சம் அறிய முடியும். ஆனால் அதை முழுவதும் பிரித்து ஆராய முடியாது. சில உணவை உறிஞ்சி உண்பது போல. வாயில் இருக்கும். தேன் போல வழுக்கிக் கொண்டு போகாது. ஆனால் கடித்து, அரைத்து, நாவால் துழாவி அறிய முடியாது. மோர், பால் இவற்றைப் போல.

சரி, உண்மைகளை பல விதங்களில் அறிகிறோம். அது சரிதான். அதனால் என்ன ?

இதை தெரிந்து நமக்கு என்ன பலன் ?

இப்படி நமக்கு கிடைக்கும் உண்மைகளை, அறிவை, அனுபவங்களை நம் வாழ்க்கைக்கு ஏற்றவற்றை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை  விட்டு விடவேண்டும்.

இனிய சங்கீதத்தை கேட்கும் போது நாம் மெய் மறந்து விடுகிறோம்.

மது போன்ற வஸ்த்துக்களை அருந்தும்போதும் மெய் மறந்து விடுகிறோம்.

நல்லதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாதவற்றை தள்ளி விடவேண்டும்.

மூச்சு விடும் போது அனைத்து வாயுக்களும் நமக்குள் செல்கின்றன. தேவையான பிராண வாயுவை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை வெளியே விட்டு விடுகிறோம் அல்லவா. அது போல.

சரி, எது நல்லது எது கெட்டது என்று எப்படி அறிந்து கொள்வது ?

அதை செய்யும் செயலாக நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன். நான் என்றால் ஏதோ கண்ணன் வந்து ஒவ்வொருவரிடமும் வந்து இது இது இப்படி என்று சொல்லிக் கொண்டு இருப்பதாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.

"நான் வைஸ்நரவாக இருந்து உணவை ஜீரணம் செய்கிறேன்" என்கிறான்.

உடலில் உள்ள வைஸ்நரா -அக்னி என்பது ஒரு குறியீடு. உணவை அக்னி ஜீரணிப்பது போல, அனுபவங்களை ஜீரணித்து நல்லதை ஏற்றுக் கொண்டு, அல்லதாவற்றை விட்டு விட வேண்டும் எனப் பொருள் கொள்ள வேண்டும். பிராணனை ஏற்று, அபாணனை வெளி விடுவது போல.

திருவிளையாடலில் நரியை பரியாக்கிய கதை ஒன்று உண்டு. மனிவாசகருக்காக , சிவா பெருமான் காட்டில் உள்ள நரியை எல்லாம் குதிரையாக செய்து கொண்டு வந்தாராம்.

மிகப் பெரிய கடவுளுக்கு இதுதான் வேலையா ?

அவர் நினைத்து இருந்தால் மணி வாசகருக்கு நேரே முக்தி கொடுத்து இருக்க முடியாதா ?

நரி எப்போதும் கீழ் நோக்கி மூச்சு விடும் பிராணி. ஓடும் போது தலையை கீழ் நோக்கி வைத்து கொண்டே ஓடும்.

குதிரை மேல் நோக்கி மூச்சை இழுக்கும் பிராணி.

பிராணனை இழுத்து அபானானை விடும் இந்த சூக்குமம் தெரிந்தால் ஞானம் பிறக்கும் என்று சொல்லாமல் சொன்ன கதை அது.

சிந்தியுங்கள்,

இந்த வாழ்வு ஒரு வேள்வி. ஞான வேள்வி. நாளும் ஞானம் தேடித்தான் இந்த ஓட்டம்.

அந்த உயர்ந்த ஞானம் உங்களுக்கு கிட்ட என் வாழ்த்துக்கள்.







Tuesday, May 10, 2016

கீதை - 15.13 - உணவும் மருந்தும் நான்

கீதை - 15.13 - உணவும் மருந்தும் நான் 


गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: || 15- 13||

கம் = பூமியில்

அவிஸ்ய  = நுழைந்து

ச = மேலும்

பூதாநி = உயிர்களைத்

தாரயாமி = தாங்குகிறேன்

அஹம் = நான்

ஒஜஸா  = சக்தியால்

புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்

ச = மேலும்

ஔஷதீ: = மருந்தாக

ஸர்வா: = அனைத்து

ஸோமோ = சாறாக, அமிர்தமாக

பூத்வா = ஆனபின்

ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்


நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் தாங்குகிறேன். ரச வடிவான  சோம பாணமாகி மருந்தாக அவைகளை காக்கிறேன்.

இது என்ன திடீரென்று கீதை வேறு எங்கோ போவது மாதிரி இருக்கிறதா ?

கீதையை படிக்கும் பொழுது நமக்கு அடிக்கடி ஒன்று தோன்றும்.

இந்த நூல் நம்மைப் போல இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அல்ல. எல்லாவற்றையும்  துறந்த துறவிகளுக்கு உண்டான நூல் இது என்று நமக்குத் தோன்றும்.

வேலையைச்  செய், பலனை எதிர் பார்க்காதே.

பற்றற்று இரு.

என்று இப்படி சொல்லிக் கொண்டிருந்தால், "கேக்க நல்லாத்தான் இருக்கு ...நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று புத்தகத்தை ஏறக் கட்டிவிட்டு போய் விடுவோம்.

அது அப்படி அல்ல.

கீதை எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியான நூல்.

சரி, அது இருந்து விட்டுப் போகட்டும், அதற்கும் இந்த சுலோகதிற்கும் என்ன சம்பந்தம் ?

இன்று உலகம் மிகவும் ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.

மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்கு வேண்டிய உணவு, நீர், தூய காற்று, இருப்பிடம், போன்றவையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. அனைத்தும் மாசு படிந்து கிடக்கிறது.

சுவாசிக்கும் காற்று,
பருகும் நீர்,
உண்ணும் உணவு
ஏன் தாய் பாலே கூட மாசு பட்டு போய் இருக்கிறது என்கிறார்கள்.

எதனால்,

சுற்றுச் சூழல் மேல் மரியாதை இல்லை. இயற்கையின் மேல் மரியாதை இல்லை. கண்டபடி உபயோகப் படுத்துகிறோம்.

நீர் நிலைகளை மாசு படுத்துகிறோம்.

நிலத்தடி நீரை மாசு படுத்துகிறோம்.

கண்ணன் சொல்கிறான் - உண்ணும் உணவும், மருந்தும் என் சாராம்சம் என்று.

இதன் அர்த்தம் என்ன என்று சிந்திப்போம்:

முதலாவது, உணவு என்பது ஏதோ உடலுக்கு சக்தி தரும் ஒரு பொருள் என்று நினைக்கக் கூடாது. சக்தியையும் தாண்டி உணவில் மற்ற விஷயங்களும் இருக்கிறது. கீதை, உணவை ஒரு தெய்வீக நிலைக்கு கொண்டு செல்கிறது. உணவு, கடவுளின் அம்சம் என்று சொல்கிறது. அப்படி என்றால்  அந்த உணவுக்கு எவ்வளவு மரியாதை செய்ய வேண்டும். ஒரு கடவுளுக்கு தரும் மரியாதையை உணவுக்குத் தர வேண்டும். அலட்சியம் கூடாது. மரியாதை வேண்டும். உணவின் மேல் அன்பு வேண்டும். பக்தி வேண்டும். 

இரண்டாவது, உணவு உயிரையும் உடலையும் சேர்த்து வைப்பது. உணவு இல்லை என்றால் உயிர் உடலை விட்டுப் போய் விடும். அது தான் அமிர்தத்தின் வேலை. உடலை இறவாமல் காப்பது. உணவை அமிர்தம் என்று நினைத்து உண்ண வேண்டும்.

மூன்றாவது, கீதை நம்மை துறவியாகப் போ, பட்டினி கிட, விரதம் இரு என்று சொல்லவில்லை. உணவு கூடாது என்றால் பின் ஏன் கண்ணன் நான்  என் வீரியத்தின் மூலம் உணவாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் ? உணவு வேண்டாம் என்றால், கண்ணனை வேண்டாம் என்று கூறியது மாதிரிதானே.

நான்காவது, உணவை உருவாக்க எத்தனையோ பேர் பாடு பட வேண்டி இருக்கிறது. உழவன், களை எடுப்பவன், நீர் இரைப்பவன் , அறுவடை செய்பவன், அரைத்து அரிசியாக்குபவன் , அதை நம்மிடம் கொண்டு சேர்பவன், அதை சமைக்கும் ஆள், பரிமாறும் ஆள் என்று ஆயிரம் கைகள் சேர்ந்து நம் உணவை உருவாக்கி நம் முன்னால் கொண்டு வைத்து வைக்கிறது. அனைத்திலும் இயங்கும் ஒரு சக்தி நமக்கு இந்த உணவை நமது மேஜை மேல் கொண்டு வந்து சேர்கிறது. நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது எத்தனை பேரின் உழைப்பு   அதில் இருக்கிறது என்று. அத்தனை சக்தியும் சேர்த்ததுதான்  நாம் ஒரு வேளை உண்ணும் உணவு. எவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் அந்த உணவின் மேல். 

ஐந்தாவது, ஞான மார்க்கமோ, கர்ம மார்க்கமோ, பக்தி மார்க்கமோ எந்த மார்கத்தில் போவதானாலும் இந்த உடம்பு வேண்டும். உடல் இல்லாமல் படிக்க முடியுமா ? வேலை செய்ய முடியுமா ? பக்திதான் செய்ய முடியுமா ? அந்த உடலை பேணி காப்பது உணவும் மருந்தும்.  உடலை வைத்துதான் இறைவனை/உண்மையை/ தன் உணர்வை அடைய முடியும். 

உணவை இறை அம்சமாக நினைத்து உண்டு பாருங்கள். 

அதன் சுவையே தனிதான். 

அடுத்த தடவை உண்பதற்கு முன் அந்த உணவை உற்று நோக்குங்கள். எவ்வளவு அளவு கடந்த கருணையின் விளைவு அந்த உணவு என்று உங்களுக்குப் புரியும். 

சுவைத்துப் பாருங்கள். 

நாவில் தித்திக்கும். 

 ஓ ராம நீநாம ஏமி ருசிரா என்கிறார் தியாகப்ரமம் 

உண்ணும் உணவு மட்டும் அல்ல அனைத்து இன்பங்களும் தெய்வீகமானவை தான். 

நீங்களும் அவனை ருசித்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1513.html )

Sunday, May 8, 2016

கீதை - 15.12 - எல்லாம் ஆனந்தமே

கீதை - 15.12 - எல்லாம் ஆனந்தமே 


यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

யதாதித்யகதம் தேஜோ ஜகத பாஸயதேகிலம் |
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் || 15- 12||



யதா = எது

ஆதித்யகதம் = சூரியனில் இருந்து

தேஜோ = ஒளிர்கிறதோ

ஜகத் = உலகம் அனைத்தும்

பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ

அகிலம் = உலகம் அனைத்தையும்

யத் = எது

சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்

யத் = எது

ச  = மேலும்

அக்நௌ =  அக்கினியில்

தத் = அது

தேஜோ = தேஜோ மயமாக

வித்தி = அறிந்து கொள்

மாம் அகம்  = என்னுடையது என்று



சூரியன், சந்திரன், அக்னி இந்த மூன்றில் உள்ள ஒளியும் என்னுடையது என்றே உணர்.




பொருள் தெரிகிறது. அவற்றின் குணங்கள் தெரிகிறது. அவற்றை அனுபவிக்கும் போது ஏற்படும் அனுபவம் தெரிகிறது.

எனக்கும் , அந்த பொருளுக்கும் இடையே ஆன அந்த தொடர்பு எப்படி ஏற்படுகிறது ?

இது நல்லது, கெட்டது , இன்பம் , துன்பம், என்ற உணர்வு நமக்கு எப்படி ஏற்படுகிறது ?

சிலவற்றை நாமே நேரடியாக பார்த்து, தொட்டு, ருசித்து, முகர்ந்து அறிய முடியும் .

சிலவற்றை புலன்களால் நேரடியாக அறிய முடியாது ஆனால் மனதால் சிந்தித்து அறிய முடியும்.

சிலவற்றை , சிந்தித்தாலும் அறிய முடியாது. குழப்பம் தான் மிஞ்சும். அப்போது , அது பற்றி மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.

பெற்றோரிடம், ஆசிரியரிடம், ஆசாரியனிடம், குருவினிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இப்படி எந்த மூலம் அறிந்தாலும், இறுதியில் அறிதல் என்பது நமக்குள் நிகழ வேண்டும்.

பொருளை விளங்கச் செய்யும் ஒளி சூரியனில் இருந்து வரலாம், சந்திரனில் இருந்து வரலாம், அக்கினியில் இருந்து வரலாம் ஆனால் அந்த அனைத்து  ஒளியும் பிரகாசம் அடைவது நான் பார்க்கும் போது தான்.

எனக்குள் பார்த்து அறியும் ஞானம் இல்லை என்றால் சூரிய ஒளி  இருந்தாலும் இல்லாதது போலத்தான்.

ஒளியின் செயல் நமக்கு பொருள்களை தெளிவாக காண்பிப்பது. நமக்குள் அந்த தெளிவு வரவில்லை என்றால் , ஒளி இல்லை என்று தானே அர்த்தம். ஒளி இல்லாத போதும் பாம்பா கயிறா என்று தெரியவில்லை. ஒளி வந்தபின் அந்த தெளிவு வர வேண்டும் அல்லவா ? வரவில்லை என்றால் ஒளியும் ஒளி இன்மையும் ஒன்றுதானே.

தெளிவு ஒளியால் வருவது இல்லை. என் அறிவினால், ஞானத்தால் நிகழ்கிறது.  எனவே, அந்த ஒளியின் ஊற்று , ஒளியின் தன்மையை பூர்த்தி செய்வது நான்தான்.

எனவே, சூரிய, சந்திர, அக்கினியின் ஒளி எல்லாம் என்னுள் இருந்து வந்தது என்றே அறி என்றான்.

உலகமும் அது தரும் அனுபவமும் நமக்குள் இருந்தே எழுகிறது.

சூரிய ஒளி என்னுள் இருந்து எழுகிறது என்று சொன்னால் உடனே நான் தான் சூரியனை ஒளி விடச் செய்கிறேன் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.

ஒளி என்பது நமக்கு பார்வை என்ற அனுபவத்தைத் தருகிறது.

ஒளி இல்லை என்றால் பார்வை என்ற அனுபவம் நிகழாது.

அந்த அனுபவம் பொருளில் இல்லை, பொருளின் குணத்தில் இல்லை..என்னுள் இருக்கிறது என்று சொல்கிறது கீதை.

இன்னொரு பொருள்;

இந்த உலகம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகத் தெரிகிறது.

நண்பன் பகைவனாகத் தெரிகிறான்.

நல்லது கெட்டதாக மாறுகிறது.

இன்பம் தந்தது பின்னாளில் துன்பமாக மாறிப் போகிறது.

காலையில் இருந்தது போல மாலையில் இல்லை. மாலையில் இருந்தது போல இரவில் இல்லை. இரவில் இருந்தது போல மறு நாள் காலையில் இல்லை.

நேற்று போல இன்று இல்லை. இன்று போல நாளை இல்லை.

காலையில் சூரியன் நமக்கு ஒரு காட்சியைத் தருகிறது.

மாலையில் நாம் விளக்கு ஏற்றி வைத்து சிலவற்றை காண்கிறோம் .

இரவில் நிலவு ஒளி தந்து காட்சிகளை காண வைக்கிறது.

காட்சிகள் மாறுகின்றன. பொருள் மாறுவது இல்லை. ஒளியின் தன்மையால் அனுபவம் மாறுகிறது.

அனுபவம் என்னுள் இருந்து எழுகிறது.


உலகம் பலப் பலவாக இருக்கிறது.

ஆண் , பெண், இரவு பகல் என்று எத்தனையோ வடிவங்களில், உருவங்களில் இருக்கிறது.

இந்த வேற்றுமைகள் நமக்குள் எழுவது.

இதையே மணிவாசகர் சொல்கிறார்....



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.


படித்துப் பாருங்கள். கரைந்து போகலாம்.

அனுபவத்தின் உச்சம்.

ஆனந்தத்தின் எல்லை.

இந்த உலகம்  ஆனந்தம் இன்றி வேறு இல்லை.

அந்த ஆனந்தத்தில் , குளிர்ந்த இந்த நீரோடையில் பாய்ந்து ஆட்டம் போடுவோம் என்கிறார்.

எல்லா அனுபவமும் ஆனந்தம் தான்.

கவலையை விடுங்கள்.

ஆனந்தம் என்றென்றும் உங்களோடு இருக்கட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1512.html )

Friday, May 6, 2016

கீதை - 15.11 - மனத் தூய்மை

கீதை - 15.11 - மனத் தூய்மை 


यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥१५- ११॥

யதந்தோ யோகி³ நஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |
யதந்தோ ப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ: || 15- 11|

யதந்தோ = முயற்சிப்பவர்கள்

யோகிந = யோகிகள்

ச = மேலும்

எனம் = அவர்கள்

பஸ்யந்த்தி = காண்கிறார்கள்

ஆத்மானி = தங்களுக்குள்

அவஸ்திதம் = இருக்கும் , நிலை பெற்று இருக்கும்

யதந்தோ = முயற்சி செய்பவர்கள்

அக்ருதாத்மாநோ = தயாராக இல்லாதவர்கள் ,

ந = இல்லை

எனம் = அவனை

பஸ்யந்த் = காண்பது

அசேதஸ: = நினைவு இல்லாதவர்கள், ஸ்மரணை இல்லாதவர்கள்,

முயற்சியுடைய யோகிகள் அவனை தங்களுக்குள்ளே காண்கிறார்கள். முயற்சி செய்தாலும், தயாராக இல்லாதவர்கள் அவனை காண மாட்டார்கள். 


கீதை மட்டும் அல்ல, எந்த வேத புத்தகமும் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறது என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு.

"அதானே, இந்த ஆசையை விடு, மற்றவர்களுக்கு உதவி செய், பற்று இல்லாமல் இரு, பக்தி செய்..."

அது தான் தெரியுமே. புதுசா என்ன இருக்கப் போகிறது என்று அலுக்கும் ஒரு கோஷ்டி. எல்லாம் தெரிந்ததாக நினைக்கும் ஆணவம்.

இன்னொரு கோஷ்டி, என்ன புதிதாகச் சொன்னாலும், தங்களுக்குத் தெரிந்த சில சித்தாந்தங்களை அதன் மேல் ஏற்றிக் கூறுவது.

- இது அத்வைதம் தான், இது துவைதம் தான், இது விசிஷ்டாத்வைதம் தான் என்று எதைச் சொன்னாலும் தங்களுக்குத் தெரிந்த தந்துவத்துக்குள் அதை கொண்டு வர முயற்சிப்பது. ஒரு வேளை அது சரியாக வரவில்லை என்றால், புதிய சிந்தனைகளை புறம் தள்ளி விடுவது. அவர்களுக்குத் தெரிந்த, புரிந்த, கோட்பாடுகளுக்குள் எந்த புதிய சிந்தனையும் வந்து விட வேண்டும். அதற்கு வெளியே ஒன்றும் இருக்க முடியாது. இருந்தால் அது தவறு, அல்லது அது மறுக்கப் படும்.  எனக்குத் தெரிந்த உண்மை தான் உண்மை. மற்றவை எல்லாம் உண்மைகள் அல்ல என்ற முரட்டுத்தனம்.

- இன்னும் சில பேர், எதைச் சொன்னாலும் மறுத்துச் சொல்லுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பேர்வழிகள்.


நாம் எவ்வளவோ புதிய புதிய புத்தகங்களைப் படிக்கிறோம். பெரியவர்கள்  பேசுவதைக் கேட்கிறோம். இருந்தும் மாற்றம் ஒன்றும் இல்லை. அப்படியே தான் இருக்கிறோம். அதே கவலைகள், அதே இன்பங்கள், அதே பயங்கள் , அதே வாழ்கை.

ஏன் நாம் முன்னேறாமல் அப்படியே இருக்கிறோம் ? இத்தனை பெரிய  மகான்கள் சொல்லியதை படித்தும் கேட்டும் உலகம் மாறியதாகத் தெரியவில்லை.

ஏன் ?

அவர்கள் சொன்னது பிழையா ?

இல்லை.

பின் என்ன ஆயிற்று ?

நம் அறிவும், மனமும் சுத்தமாக இல்லை.

தெளிவில்லாத மனதில் , அறிவில் என்னதான் முயற்சி செய்தாலும் உண்மை இறங்குவது இல்லை.

கண்ணாடி அழுக்காக இருந்தால், பிம்பம் தெளிவாகத் தெரிவது இல்லை.

நம் மனதில் ஆயிரம் ஆசைகள், காமங்கள், கோபம், பொறாமை, பயம், சுயநலம்...

இத்தனையும் வைத்துக் கொண்டு நாம் உண்மையைத் தேடுகிறோம்.

கையில் கிடைத்தாலும் புரியாது.

விக்கினேன் வினையுடையேன் என்றார் மணிவாசகர்.

அமிர்தம் கையில் கிடைத்தது. உண்பதற்குள் விக்கல் வந்து விட்டது என்கிறார்.

அது போல, மன அழுக்குகளை நீக்கினால், முயற்சிக்கு பலன் கிடைக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை சுத்தம் செய்யுங்கள்.

நல்லவை உள்ளே வர வேண்டும் என்றால், குப்பைகளை வெளியே கொண்டு போய் கொட்டுங்கள்.

நல்லது வரும்.


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1511.html

Wednesday, May 4, 2016

கீதை - 15.10 - ஞானக் கண்

கீதை - 15.10 - ஞானக் கண் 


उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥१५- १०॥

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் |
விமூடா நாநு பஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாந சக்ஷுஷ: || 15- 10||


உத்க்ராமந்தம் =  வெளியே வெளியே செல்லும் போது

ஸ்திதம் =நிலை பெற்றவன்

வ = அல்லது

அபி = அது அன்றியும்

புஞ்ஜாநம் = அனுபவிப்பவன்

வ = அல்லது

குணாந்விதம் = குணங்களை கொண்டவன் , குணங்களை ஆள்பவன்


விமூடா = மூடர்கள்

ந = இல்லை

அநுபஸ்யந்தி = காண்பது

பஸ்யந்தி = காண்கிறார்கள்

 ஜ்ஞாந = ஞான

சக்ஷுஷ= திருஷ்டி உள்ளவர்கள் |


அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள்.

இது போல யார் சொல்லுவார்கள் ?

நம் வாழ்க்கையின்  போக்கை,நம் வாழ்வின் குறிக்கோளை இந்த ஒரு சுலோகம் மாற்றும் வல்லமை கொண்டது.

எப்படி என்று பார்ப்போம்.


இன்பம் எங்கே இருக்கிறது ?

நாம் அனுபவிக்கும் பொருளில் , அனுபவங்களில் இருக்கிறது.

சுவையான பொருளை உண்டால் இன்பம்.

நல்ல சுகமான பாடலைக் கேட்டால் இன்பம்.

நல்ல நறுமணம் இன்பம்.

இயற்கை காட்சிகள், அழகான பொருள்களை கண்டால் இன்பம்.

மனைவியை, கணவனை,  குழந்தையை அணைத்தால் இன்பம்...

இப்படி ஆயிரம் இன்பங்கள் வெளியே கொட்டிக் கிடக்கிறது.

அவை எல்லாம் வேண்டும் என்று தான் ஆலாய் பறக்கிறோம்.

சற்று நில்லுங்கள்.

இன்பம் வெளியில் உள்ள பொருள்களிலா உள்ளது ?

லட்டு தின்பது இன்பம் தான். எப்போதும் இன்பமா ?

ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து லட்டு தின்று பாருங்கள் ஒரே சமயத்தில்...இன்பமாய் இருக்குமா ? எங்கே போயிற்று அந்த இன்பம்.

சின்ன பிள்ளையாக இருக்கும் போது பம்பரம், கோலி , வளையல், ரிப்பன் என்று சேர்த்து வைத்து மகிழ்ந்தோம். அதே பம்பரமும் ரிப்பனும் இப்போது இன்பம் தருமா ? என்னவாயிற்று அந்த இன்பம் ?


மனைவியின் புன்னகை அழகுதான். இன்பம் தருவதுதான். ஆனால், அலுவலகத்தில் ஏதோ ஒரு சிக்கல். குழப்பம். பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடுமோ என்ற பயத்தில் இருக்கும் போது , அதே மனைவியின் புன்னகை மகிழ்ச்சியைத் தருமா ? எங்கே போயிற்று இன்பம்.

காய்ச்சல் வந்து வாய் கசந்தால், எதுவுமே உண்ணப் பிடிப்பது இல்லை. சுவை எங்கே இருக்கிறது ?

இன்பம் என்பது வெளியில் இல்லை என்று புரிகிறது அல்லவா. வெளியில் இருந்தால் அது எப்போதும் நமக்கு இன்பத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். இன்பம் நம் மன நிலையைப் பொறுத்து மாறுகிறது.

ஆனால், நாம் என்ன நினைக்கிறோம் என்றால் உணவில், உடையில், இசையில், காட்சியில், தொடுதலில் இன்பம் இருக்கிறது என்று அவற்றின் பின்னால் அலைகிறோம் .

அலைவது மட்டும் அல்ல, இன்பம் என்பதே வெளியில் இருந்து வருவதுதான் என்று ஒன்றை விட்டு மற்றொன்றிக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இன்பத்தை அனுபவிக்கும் போது , அந்த இன்பம் அனுபவிக்கும் பொருளில் இருக்கிறது என்று நினைக்கிறோம்.

"அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள். "


அனுபவிப்பவன் உள்ளே இருக்கிறான் என்று தெரிவது இல்லை. எனக்குள் இருக்கும் நான் தான் இன்பத்திற்கு காரணம் என்று மூடர்களுக்குத் தெரிவது இல்லை. அறிவினால் யோசிக்கும் போது அது புலப் படும். நேரில் பார்த்தால் புரியாது.

அறிவினால் சிந்தித்து அறிய முடியும்.

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை, உங்களுக்குள் தான் இருக்கிறது.

அதை நீங்கள் காண முடியும் என்றால் உங்கள் வாழ்கையின் போக்கு மாறும்.

இன்பத்தை வெளியே தேடி அலைய மாட்டீர்கள்.

அந்த ஞானம் உங்களுக்கு வர வாழ்த்துக்கள்.


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1510.html )

Monday, May 2, 2016

கீதை - 15.9 - தொடரும்

கீதை - 15.9 - தொடரும்


श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥१५- ९॥

ஸ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ நம் சரஸநம் க்ராணமேவ ச |
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9||


ஸ்ரோத்ரம் = கேட்பது (சுரு என்றால் கேட்டல். சுருதி)

சக்ஷு= பார்ப்பது

ஸ்பர்ஸ நம் = தொடுவது, தொடு உணர்ச்சி

ச = மேலும்

ரஸநம் = சுவை, சுவைப்பது

க்ராணம் = முகர்வது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அதிஷ்டாய = நிலை பெற்று (ஸ்த = நிலையான, ஸ்தாபிதம்)

மந = மனம்

ச = மேலும்

அயம்= அவன்

விஷயன் = விஷயங்களை

உபஸேவதே = சேவை செய்கிறான், நடத்திச் செல்கிறான்



கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவைத்தல், முகர்தல் , மனம் என்ற  இவற்றில் நிலை கொண்டு அவன் விஷயங்களைத் நடத்திச் செல்கிறான்.


நமது புலன்கள் சதா சர்வ காலமும் நமக்கு ஏதோ ஒரு உணர்ச்சியை, அனுபவத்தை  தந்து கொண்டே இருக்கின்றன.

இவற்றால், நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு நிமிடம், அமைதியாக இருக்க முடிவதில்லை..

நாம் யார், நம்மை செலுத்துவது எது, ஏன் இப்படி இருக்கிறோம், எங்கே போகிறோம், எதற்குப் பிறந்தோம் ...இப்படி ஆயிரம் கேள்விகள். இவற்றிற்கு விடை வெளியில் இல்லை. இருந்திருந்தால் போய் வாங்கி இருக்கலாம்தானே. உள்ளுக்குள் தேட வேண்டும்.

தேட வேண்டும் என்றால் வெளியில் இருந்து வரும் சப்த்தங்கள் நின்றால் அல்லவா .

உள்ளே வரும் உணர்சிகளை, அனுபவங்களை ஒரு வினாடி நிறுத்தினால் என்ன ஆகும் ?

வெளியில் இருந்து வரும் விஷயங்கள் நிற்கும் போது நாம் நம்மை அறியத் தலைப் படுவோம்.

இந்த உணர்சிகளை, அனுபவங்களை யார் பெறுகிறார்கள், இவை ஏன் நமக்கு இன்பமும் துன்பமும் செய்கின்றன என்பவற்றை கண்டு கொள்ளலாம்.

ஒரு நிமிடம் "சும்மா இருக்க " வேண்டும்.

முடிகிற காரியமா ?

அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட முருகன் சொன்ன ஒரே உபதேசம்

"சும்மா இரு"

சும்மா இருக்க முடியவில்லை


சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே.

என்பார் தாயுமானவ சுவாமிகள்.

வெளியில் இருந்து புலன்களுக்கு அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

புலன் மூலம் பெறும் அனுபவங்களை அறிவு இன்பம் துன்பம் என்று பகுத்துக் கொண்டே இருக்கிறது.

இன்பம் என்றால் மேலும் வேண்டும் என்கிறது. அதன் பின்னால் ஓடுகிறது.

துன்பம் என்றால் வேண்டாம் என்று தள்ளுகிறது. அதை  ஓடுகிறது.

அனுபவங்கள் சேரச் சேரச் ஓட்டம் அதிகரிக்கிறது.

அந்த வீடு, அந்த கார், இந்த நகை, அந்த ஊர் , இந்த உடை, அங்கே சாப்பாடு, அந்த கச்சேரி, இந்த சினிமா என்று செய்திகள் உள்ளே வர, புலன்கள் தூண்டப் பட்டு, ஆசை மற்றும் பயத்தால் நம் வாழ்கை செல்கிறது.

தூண்டில் புழுவைப் பார்த்த மீன் போல , விளக்கை கண்ட விட்டில் போல  அலைகிறோம்.

இந்த செய்திகள் வருவதும், அவற்றின் மூலம் புலன்கள் தூண்டப் படுவதும், அதன் மூலம் நம் வாழ்கை நகர்வதும் நமக்குத் தெரிவதில்லை.

ஏன் தெரிவதில்லை என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கீதை விளக்குகிறது.

அடுத்த முறை தொலைக் காட்சியில் ஒரு விளம்பரத்தை பார்த்தவுடன்  உங்களுக்குள் என்ன பாதிப்பு நிகழ்கிறது என்று கவனியுங்கள், உங்கள் நண்பர் உங்களை சந்தித்து விட்டு போன பின் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள். இந்த கவனிப்பு உங்களை நீங்களே நெறிப் படுத்த உதவும்.

உங்களுக்கு உள்ளே செல்லும் எதுவும் உங்களை பாதிக்கும்.

கவனமாக இருங்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/159.html )