Wednesday, August 5, 2015

கீதை - 13.14 - குணம் இல்லாதது, குணங்களை அனுபவிப்பது

கீதை - 13.14 - குணம் இல்லாதது, குணங்களை அனுபவிப்பது



सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥१३- १४॥

ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் | 
அஸக்தம் ஸர்வப்⁴ருச்சைவ நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு ச || 13- 14||

ஸர்வேந்த்ரிய = சர்வ + இந்திரிய = அனைத்து புலன்களின் 

குணாபாஸம் = குண + அபாச = குணங்களை ஒளிரச் செய்வது 

ஸர்வேந்த்ரிய = அனைத்து புலன்களையும் 

விவர்ஜிதம் = விட்டு விலகி நிற்பது 

அஸக்தம் = தனித்து நின்று 

ஸர்வ = அனைத்து 

ப்ருச் = நிர்வகிப்பது  

ச = மேலும் 

ஏவ = நிச்சயமாக 

நிர்குணம் = குணம் ஏதும் இல்லாதது 

குணபோக்த்ரு ச = குணங்களை அனுபவிப்பது 


அனைத்து புலன்களையும் ஒளிரச் செய்வது. அனைத்து புலன்களுக்கும் வெளியே நிர்ப்பது. பற்றில்லாதது; அனைத்தையும் நிர்வகிப்பது ; குணமற்றது; குணங்களைத் அனுபவிப்பது.



வாழ்வின் மிகப் பெரிய கேள்வி எது என்றால் , "நான் யார் ?" என்பதுதான்.

நான் என்பது எது அல்லது யார் ?

என் உடலா ? மனமா ? அறிவா ? என் ஞாபகங்களா ? மூளையா ?

நான் என்பது ஒரு தனி ஆள் இல்லை. நான் படித்தது, எனக்கு சொல்லப் பட்டது, என் அனுபவங்கள், நான் இருக்கும் சமுதாயத்தின் எண்ணங்கள் இவை எல்லாம்  கலந்ததுதான் பொதுவாக நான் என்று பரினமிக்கிரது.

ஆனால் , இவை இல்லாம் நானா ? நாளை வேறு ஒரு புத்தகத்தை படித்தால் என்  எண்ணங்கள் மாறலாம். நான் சரி என்று நினைத்தது தவறாகிப் போகலாம். தவறென்று நினைத்தது சரியாகியும் போகலாம்.

நேற்று ஆத்திகனாக இருந்தவன், இன்று நாத்திகனாக மாறலாம்.

அப்படி என்றால் நான் யார் ?

ஆத்திகனாக இருந்தா நான் யார் ?

இப்போது நாத்திகனாக மாறிய நான் யார் ?

இது எல்லாவற்றிற்கும் அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அந்த ஒன்று எது  ?

அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.


"அனைத்து புலன்களையும் ஒளிரச் செய்வது. அனைத்து புலன்களுக்கும் வெளியே நிற்பது "

அது என்ன ஒளிரச் செய்வது ? வெளியே நிற்பது.

ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்....

மின்சாரம் எத்தனையோ வேலைகளை செய்கிறது. விளக்கில் ஒளி விடுகிறது; இஸ்திரி பெட்டியில்  சூடு தருகிறது, மின் விசிறியை சுழலச் செய்கிறது, இரயில் பெட்டியை  ஓட வைக்கிறது. அனைத்து கருவிகளையும் இயக்குகிறது. ஆனால், அவற்றிற்கு வெளியே இருக்கிறது அந்த மின்சாரம்.

சர்க்கரை, எத்தனையோ பண்டங்களில் எத்தனையோ சுவையைத் தருகிறது. ஆனால்  அந்தப் பண்டங்கள் சர்க்கரை அல்ல. சர்க்கரை அவற்றிற்கு வெளியே இருக்கிறது.

சூரிய ஒளி அனைத்து பொருள்களின் மேலும் விழுந்து அவற்றை ஒளிரச் செய்கிறது. ஆனால் அந்த பொருள்கள் சூரிய ஒளி அல்ல.

அது போல, நம் புலன்கள் நமக்கு பார்க்க, கேட்க, முகர என்றெல்லாம் உதவி செய்கின்றன. இவற்றை நடத்தி வைப்பது உள்ளே உள்ள ஒன்று. அது, இந்தப் புலன்கள் அல்ல.

"பற்றில்லாதது;"

அது இந்த புலன்களைப் பற்றிக் கொள்ளாது. புலன்கள் வேலை செய்ய, புலன்கள் தரும்   செய்திகளை மூளை அறிய அது உதுவும். ஆனால் , அது புலன்களோ, அறிவோ அல்ல. இவற்றோடு சேராதது. பற்றில்லாதது.

"அனைத்தையும் நிர்வகிப்பது"

புலன்கள் வெளி உலகில் இருந்து வரும் சங்கதிகளை நம் மூளைக்கு அனுப்புகிறது. மூளை அவற்றை ஆராய்ந்து அவை என்ன என்று முடிவு செய்கிறது. பின், அதற்க்கு தகுந்த மாதிரி முடிவு எடுக்கிறது. முடிவு எடுத்த பின் , அவற்றை வேறு புலன்களுக்கு செலுத்துகிறது.

பாம்பு என்று கண் பார்த்துச் அந்த உருவத்தின் பிம்பத்தை மூளைக்கு அனுப்புகிறது.

மூளை " வளைத்து வளைந்து இருக்கிறது, நகர்கிறது, புஸ் புஸ் என்று சத்தம் வருகிறது...இது பாம்புதான் என்று முடிவு செய்கிறது. பின் கால்களுக்கு கட்டளை இடுகிறது....."ஓடு' என்று. கால்கள் ஓடுகின்றன.

இப்படி, "அது" எல்லாவற்றையும் நிர்வகிக்கிறது.

"குணமற்றது, குணங்களை அனுபவிப்பது"

அதற்கென்று ஒரு குணமும் இல்லை. ஆனால், அது அனைத்து குணங்களையும்  அனுபவிக்கிறது.

அதைப் பற்றி மேலும் வியாசர் சொல்கிறார்.

அறிவை அறிவது என்பது என்ன அவ்வளவு சுலபமா ?