Friday, November 29, 2019

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி 




कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த

பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த

ஹி  = அதனால்,

ப²லம்  = பலன்கள்

த்யக்த்வா = தியாகம் செய்து, துறந்து

மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்

ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு

விநிர்முக்தா: = விடு படுகிறார்கள்

பத³ம் = ஒவ்வொரு அடி

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அநாமயம் = துன்பத்தை விட்டு



அறிவுள்ளவர்கள், செய்யும் செயல்களின் பலனை துறந்து, துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிறவி தளைகளில் இருந்தும் விடு படுகிறார்கள். 


 கீதையின் ஜீரணிக்கமுடியாத ஒரு தத்துவம் உண்டு என்றால் அது இதுதான். செய்யும் செயல்களின் பலனை துறந்து விடுதல். 

யாரால் முடியும்? பலன் இல்லை என்றால் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும்?  

யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தத்துவம். நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றை ஏன் கீதை சொல்கிறது? 

இதை நாம் மூன்று  கோணத்தில் அணுகலாம்.

முதலாவது, எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், நம் புத்தி அதில் முழு முனைப்புடன் இருக்க வேண்டும். (concentration). அப்படி இல்லாமல் மனம் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தால், செய்யும் வேலை சரியாக நடக்காது. 

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், அடுப்படியில் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும், செய்யும் வேலையில் கவனம் தேவை.  கவனக் குறைவாக வேலை செய்தால் அது ஆபத்தில் போய் முடியும். 


சில உதாரணங்கள்....

பேருந்து ஓட்டும் ஒருவர், சாலையில் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுவது ஒன்றிலேயே  அவருக்கு கவனம் இருக்க வேண்டும். மாறாக, இப்படி ஓட்டினால் எனக்கு என்ன கிடைக்கும்?  இந்த வருடம் ஊக்கத் தொகை (bonus ) கிடைக்குமா,   கிடைத்தால் அதில் என்ன வாங்கலாம், எப்படி செலவழிக்கலாம் என்று  நினைத்துக் கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? ஓட்டும் அந்த செயலின் பலன் மேல் மனம் போனால் அவரும்  , அவருடைய வண்டியில் உள்ள எல்லோரும்  வேறு எங்கோ போக வேண்டி இருக்கும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். இதய அறுவை சிகிச்சை என்று  வைத்துக் கொள்வோம். அறுக்கும் போது , இந்த வருடம் பதவி உயர்வு வருமா,  வேறு மருத்துவமனைக்கு சென்றால் இதை விட அதிக சம்பளம் கிடைக்குமா என்று  செய்யும் காரியத்தின் பலன்களில் மனம் போனால், நோயாளி  போகும் இடம் வேறாக இருக்கும். 

ஒரு மாணவன், பரீட்சை எழுதும் இடத்தில் ஒழுங்காக பரீட்சை எழுத வேண்டும். வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு , இதில் மட்டும் நூத்துக்கு நூறு  வாங்கி விட்டால், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்று  யோசித்துக் கொண்டிருந்தால் விடை சரியாக எழுத முடியுமா?

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அந்த காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்று  மட்டும் யோசித்தால் அதை சிறப்பாக செய்ய முடியும். மாறாக, அதனால் என்ன பலன் வரும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால், கவனம் சிதறும். பலன் வரும். நீ பாட்டுக்கு உன் வேலையைச் செய். 

இரண்டாவது,  பலன் மேல் மனம் போனால் என்ன ஆகும்? அந்த பலன் கிடைக்குமோ என்ற சந்தேகம் வரும்.கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம்  வரும். வேறு யாராவது கொண்டு சென்று விடுவார்களோ என்று பார்ப்பவன் மேல் எல்லாம் ஒரு போட்டி மனப்பான்மை வரும். நினைத்த அளவு பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது  என்று குழப்பம் வரும்....

வேலையும் சரியாகச் செய்யாமல், மன குழப்பமும் வந்து சேரும்.

தினம் ஒரு மணி நேரம் நடக்கிறோம் என்றால் அதன் பலன் தானே வரும். ஒரு நாள் நடந்து விட்டு,  அடடா எடை குறையவில்லையே, இது சரி இல்லை என்று நிறுத்தி விட்டால்  என்ன ஆகும்?

மூன்றாவது, மிக நுட்பமானது, நாம் ஒவ்வொரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் போது, அந்த காரியம் நம்மை மாற்றுகிறது. அந்த காரியத்தால் நாம்  பாதிக்கப் படுகிறோம். சிறப்பாக செய்தால் நம்முள் ஏதோ ஒன்று உயர்கிறது. சொதப்பினால், நம்முள் ஏதோ என்று தாழ்கிறது. சிந்தித்துப் பாருங்கள்,  வீடை நன்றாக ஒதுங்க வைத்து, சுத்தம் செய்து, வேண்டாத சாமான்களை தூக்கிப் போட்டு   வீட்டை சரி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மனதுக்குள் ஒரு சந்தோஷம் வருகிறது அல்லவா? வேலை முதுகு நிமிர்ந்து இருக்கும்.  இருந்தும் வேலை முடிவில், ஒரு சந்தோஷம் வரும். நாம் இதை நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி உணர்வு வரும். 

பெண்களுக்கு இது தெரியும். ஒரு நாள் நன்றாக சமையல் செய்தால், பிள்ளைகள் அதை இரசித்து சாப்பிட்டால், அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.  ஒரு வேளை அவளுக்கு ஒன்றும்  மிச்சம் வைக்காமல் கூட பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு போய் விடலாம் . இருந்தும் அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம்   இருக்கும். அவள் செய்ததின் பலன் வேறு யாருக்கோ கிடைத்தது. ஆனாலும், அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கிறதா இல்லையா.   

வீட்டுக்கு உழைப்பதில் நாம் பலன் கருதுவதில்லை. மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு என்று செய்யும் போது பலன் கருதுவதில்லை. அதையே கொஞ்சம் விரித்தால் சமுதாயத்துக்கு, நாட்டுக்கு என்று  வரும். 

யோசித்துப் பார்ப்போம் ...எல்லோரும் பலன் கருதாமல், என்னால் முடிந்ததை செய்கிறேன்...எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு காரியம் செய்தால்   இந்த உலகம் எப்படி இருக்கும் என்று?  சுயநலம் இல்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும்?

அது தான் கீதை. 


Thursday, November 28, 2019

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை 




बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥

பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||


பு³த்³தி⁴ = புத்தி

யுக்தோ = இணைந்து, சேர்ந்து

ஜஹாதி = விட்டு விட்டு , விலகி

இஹ = இங்கு

உபே =  இரண்டும்

ஸுக்ருத = நல்லதும்

துஷ்க்ருதே= தீயதும்

தஸ்மாத் = எனவே

யோகா³ய = யோகத்தின் மூலம்

யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து

யோக³: = யோகம்

கர்மஸு = கர்ம வினைகளின்

கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||


புத்தி உள்ளவன் இந்த நல்ல மற்றும் தீய செயல்களில் இருந்து விலகி நிற்கிறான், அல்லது துறந்து விடுகிறான். எனவே, நீ யோக நிலையில் நில். யோகம் என்பது செயல்களின் திறமையான வெளிப்பாடு. 


நாம் ஏன் எந்த ஒரு காரியத்தையும் செய்கிறோம்?

ஒன்று பயம். செய்யாவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமோ என்ற பயம். கணவன்/மனைவி/பெற்றோர்/ஆசிரியர்/உயர் அதிகாரி/அரசாங்கம்/காவல் துறை/ சமுதாயம் என்று ஆயிரம் பேர் நம்மை சுற்றி நின்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பயத்தினால் செய்கிறோம்.

அல்லது

இரண்டாவது, ஆசை.  ஒன்றைச் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மேல் ஆசை.  பாராட்டு, பதவி உயர்வு, சம்பளம், என்று எதோ ஒன்றின் மேல் ஆசைப்பட்டு செய்கிறோம்.

இன்னும் கூட வேறு காரணங்கள் இருக்கலாம்...கோபம், பொறாமை, என்று.

காரணம் எதுவாக இருந்தாலும், நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்குக்  காரணம் நம்முடைய முந்தைய அனுபவங்கள்.

முன்னால் இப்படி செய்த்ததால், இது விளந்தைது. நல்லது என்றால் அதை மீண்டும் செய்வோம், அல்லது என்றால் அதை விட்டு விடுவோம்.

இதைத்தான் "வாசனை" என்கிறார்கள்.

ஒரு பூவை கையில் கொஞ்ச நேரம் வைத்து இருந்துவிட்டு, பின் கீழே வைத்த பின்னும், அந்த வாசனை தொடர்ந்து கொண்டே இருக்கும் அல்லவா. இப்போது கையில்  பூ இல்லை. இருந்தும் வாசனை இருக்கிறது.

நல்லது, கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது, போன்ற எண்ணங்கள் எல்லாம் முன் அனுபவத்தால் வருகிறது.

பயம், ஆசை, கோபம், பொறாமை, நடுக்கம், பாசம் எல்லாம் முன் அனுபவ வாசனை.

கீதை சொல்கிறது, "இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, அறிவு பூர்வமாக, புத்தியை செலவழித்து காரியம் செய்" என்கிறது.

கொஞ்சம் உதாரணம் பார்ப்போம் .

ஒரு வீடு வாங்க, கார் வாங்க, சம்பந்தம் பேச என்று வந்தால், நாம் அதிகம் உணர்ச்சி வசப் படுவோம்.

எப்படியாவது அந்த வீட்டை வாங்கி விட வேண்டும்.

நல்ல சம்பந்தம், இதை விட்டு விடக் கூடாது.

ஐயோ, இப்ப வாங்கவிட்டால் பின்னால் விலை ஏறி விட்டால் (பயம்) என்ன செய்வது.

உணர்ச்சிகள் அதிகமாகும் போது, ஒரு படபடப்பு உண்டாகிறது. தவிப்பு உண்டாகிறது.

உணர்ச்சி மேலீட்டால், முடிவு தவறாகும். முடிவு தவறானால், காரியம் தவறாகும்.

"நன்மை தீமையை விட்டு விட்டு" என்று கீதை சொல்வது உணர்வு பூர்வமாக எதையும் அணுகாமல் அறிவு பூர்வமாக செயல்படு என்கிறது.

புத்தியை உபயோகித்து செய்யும் செயலே உன்னத செயலாகும் என்கிறது.


களத்துக்கு வருவோம்.

அர்ஜுனனின் எதிரில் மாமா, தாத்தா, குரு, பங்காளிகள் என்று எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களை கொல்வதா என்று "உணர்ச்சி" வசப்படுகிறான்.  எது சரி, தவறு என்பதை விட்டு விட்டு, உணர்வுகளுக்கு அடிமையாகி கடமையை செய்யாமல்  ஓட நினைக்கிறான்.

உறவினர்களை கொல்வது மட்டும் அல்ல,  எதையும் உணர்வு பூர்வமாக அணுகினால்  அது தவறாகத்தான் இருக்கும்.

எனவே, புத்தியை பயன்படுத்து என்கிறான் கண்ணன்.

புத்தியையும் செயலையும் இணைப்பது யோகம். அதுவே செயல்களில் சிறந்தது என்கிறது கீதை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


https://bhagavatgita.blogspot.com/2019/11/250.html

Sunday, November 10, 2019

பகவத் கீதை - 2.49 - புத்தியை சரண்டை

பகவத் கீதை - 2.49 -  புத்தியை சரண்டை 


दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः॥४९॥

தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||

தூ³ரேண = ரொம்ப தூரத்தில்

ஹை = நிச்சயமாக

அவரம் = தாழ்ந்தது

கர்ம = கர்மம், வினை, தொழில்

புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து

தநஞ்ஜய = தனஞ்சய

புத்தௌ = புத்தியை

ஸரணம் = சரணம்

அந்விச்ச = அடை

க்ருபணா: = லோபிகள்

பல = பலனை

ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்

அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை. புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள். 



பெரும்பாலானோருக்கு இது ஒண்ணுதான் இந்த கீதையில் பிடிக்காத விஷயம். பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னால், "அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் இல்லை" என்று கீதையை மூட்டை கட்டி வைத்து விடுவார்கள்.

நான் ஒரு பெரிய நிறுவனத்தில், நிதி சார்ந்த வேலைகளுக்கு (finance department ) பொறுப்பளானாக இருந்தேன்.

நான் ஏன் அந்த வேலையை செய்தேன்?

எனக்கு சம்பளம் வரும், ஊக்கத் தொகை வரும், பதவி உயர்வு வரும் என்று நினைத்துச் செய்யவில்லை.

இப்படி இந்த நிறுவனத்தை மேலும் முன்னேற்றலாம், இந்த நிறுவனத்தின் இலாபத்தை எப்படி  இன்னும் அதிகரிக்கலாம், இன்னும் நிறைய பேருக்கு எப்படி   இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்று தான் நாளும்  சிந்திப்பேன்.

எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு சம்பளம், போனஸ், பதவி உயர்வு என்று  எண்ணி  வேலை செய்வது ஒரு வழி.

நாம் வேலை செய்யும் நிறுவனத்தை எப்படி மேலும் உயர்த்தலாம், அதனால் நாட்டுக்கும்  மக்களுக்கும் எப்படி மேலும் நல்லது செய்யலாம் என்று நினைப்பது இன்னொரு வழி.

கீதை இரண்டாவது வழியை சொல்கிறது.

பலனுக்காக (சம்பளம், போனஸ்) என்று வேலை செய்யாதே என்று சொல்லவில்லை. அப்படி செய்வது முதலாவது வழியை விட மிக தாழ்ந்தது என்று சொல்கிறது.

சுய இலாபம் என்று வந்து விட்டதால், என்ன நடக்கிறது?

இலஞ்சம், ஏமாற்றுதல், கலப்படம், பொய் சொல்வது, என்று அனைத்து விதமான  தவறான வழிகளும் வந்து விடுகின்றன.

ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக வேலை செய்யும் போது , பணம் வருவது மட்டும் அல்ல , அது நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

ஒரு மருத்துவர், தனக்கு எவ்வளவு பணம் வரும் என்று வைத்தியம் செய்ய ஆரம்பித்ததன் விளைவுகளை நாம் காண்கிறோம். தேவை இல்லாத அறுவை சிகிச்சைகள், சோதனைகள், மருந்து மாத்திரைகள் என்று நோயாளியை மருத்துவரே கொல்லும் நிலைக்கு வந்து விட்டது.

ஒரு ஆசிரியர் சொந்த இலாபம் கருதி தொழில் செய்யத் தொடங்கினால் என்ன ஆகிறது?  tuition, வினாத் தாளை பணத்துக்கு விற்பது,  பணம் வாங்கிக்  கொண்டு   மார்க் போடுவது என்று ஆகி விடுகிறது. அப்படி பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவன்   சமுதாயத்துக்குள் வந்து எப்படி வேலை செய்வான்?

தலைமுறைகளே சீரழிந்து விடும்.

எந்த தொழிலிலும் இரண்டு சாத்திய கூறுகள் உண்டு.

ஒன்று சுய இலாபம்.

இரண்டாவது, உயர்ந்த நோக்கம், குறிக்கோள்.


அர்ஜுனனின் சிக்கல் என்ன? குரு , மாமன், மச்சான், உறவினர்களை கொல்லும் போர் வேண்டாம் என்று நினைக்கிறான்.

போர் என்றால், மனிதர்களை கொல்வது என்று  அவன் நினைக்கிறான். அதனால் வரும்  துக்கத்தை தவிர்க்க நினைக்கிறான்.

அது முதலாவது வழி.

போர் என்றால் நீதி, நியாயம், தர்மம், இவற்றை நிலை நிறுத்துவது.  அதற்காக   எவ்வளவு இன்னல் வந்தாலும் ஏற்றுக் கொள்வது என்று நினைப்பது இரண்டாவது வழி.  கீதை காட்டும் வழி.

சுய இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தால் உலகம் இருண்டு விடும். இருண்டு கொண்டு இருக்கிறது.

அந்தப் பேரழிவில் இருந்து உலகையும், மக்களையும் காக்க வேண்டும் என்றால், கீதை காட்டும் வழியில் போவதைத் தவிர வேறு வழி இல்லை.

https://bhagavatgita.blogspot.com/2019/11/249.html

Thursday, July 11, 2019

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?



योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते॥४८॥

யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||

யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்

குரு = செய்வான்

கர்மாணி = காரியங்களை

ஸங்க³ம் = தொடர்பு

த்யக்த்வா = விட்டுவிட்டு

த⁴நஞ்ஜய = தனஞ்சய

ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)

ஸமோ = சமமாக

பூ⁴த்வா = அடைந்தபின்

ஸமத்வம்= ஒன்றாக

யோக³ =யோகம் என்பது

 உச்யதே = இதுவே


அர்ஜுனா, யோகத்தில் இருந்து, தொடர்பை, பற்றை விட்டுவிட்டு, வெற்றி தோல்விகளை சமமாக கருதி, காரியங்களைச் செய். நடு நிலையாக இருப்பதே யோகம் எனப்படும். 


கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்றெல்லாம் சொல்கிறார்களே. யோகம் என்றால் என்ன ? அதன் அடிப்படை என்ன என்று கண்ணன் இங்கே சொல்கிறான்.

முதலாவது, பற்றை விட்டு விட வேண்டும்.  பற்றை என்றால் எந்தப் பற்றை?

முதலில் ஒரு உதாரணம் பார்ப்போம். பின் இது எளிதில் விளங்கும்.

ஒரு மருத்துவர் இருக்கிறார். அறுவை சிகிச்சையில் வல்லவர். அவருடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அவர் செய்வாரா ? மாட்டார்.

ஏன்?

ஏன் என்றால், பிள்ளையின் மேல் உள்ள பற்று. பற்று வந்தவிட்டால் எவ்வளவு பெரிய  நிபுணர் ஆனாலும், செய்ய முடியாது. தவறு வந்து விடுமோ? தவறினால்  என் பிள்ளை இறந்து விடுமோ என்ற அச்சம் வரும். கை நடுங்கும். கட்டாயம் தவறு நிகழும்.

இதுவே வேறு ஒரு நோயாளியாக இருந்தால், அவருக்கு அந்த நோயாளி மேல் பற்று இல்லை. அவர் பாட்டுக்கு தன் கடமையைச் செய்வார். அது சரியாக இருக்கும்.

சரி, பற்று எப்படி விடும்? எப்படி பற்றை விடுவது?

சொல்லுவது எளிது. எப்படி செய்வது?

அதற்கும் வழி சொல்கிறான் கண்ணன்.

இரண்டாவது, வெற்றி தோல்வியில் சமமாக இருக்க வேண்டும்.  வெற்றி வந்தால் தலை கால் தெரியாமல் துள்ளுவது. தோல்வி வந்தால் துவண்டு விடுவது. இரண்டும் கூடாது. நான் என் வேலையைச் செய்தேன். வெற்றியோ,தோல்வியோ  அது பற்றி கவலை இல்லை என்று இருக்க வேண்டும்.

இந்த பற்றுக்கும், வெற்றி தோல்விக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கவனித்தீர்களா?

பற்று என்பது இறந்த காலத்தில் இருந்து வருவது. என் பிள்ளை, என் கம்பெனி, என் நிறுவனம், என் நாடு, என் உறவு என்பதெல்லாம் கடந்த காலத்தில் இருந்து வருவது.

வெற்றியோ தோல்வியோ எதிர் காலத்தில் இருந்து வருவது. இனிமேல் நடக்கப் போவது.

நாம் இருப்பதோ நிகழ் காலத்தில்.

நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியத்தை எதிர் காலத்தில் வரப் போகும் ஒன்றை நினைத்து  சரியாக செய்யாமல் விடுவதோ, அல்லது கடந்த காலத்தில்  உள்ளதை நினைத்துக் கொண்டு இருப்பதோ சரியா?

சமையல் செய்யும் போது, சமையலில் கவனம் வேண்டும். யார் சாப்பிடுவார்கள், சாப்பிட்ட பின் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டே உப்பு புளி எல்லாம் போட்டால் எப்படி இருக்கும் சமையல்?

பரீட்சை எழுதும் போது பதிலில் கவனம் இருக்க வேண்டும். பரீட்சை முடிந்து  , தேர்ச்சி பெற்று, வேலை கிடைத்து, அதில் நிறைய சம்பாதித்து என்று  கனவு கண்டுகொண்டே இருந்தால், பதில் எப்போது எழுதுவது?

தொழில் மேல் பற்றியும் விட்டுவிட வேண்டும், அதில் இருந்து வரும் இலாப நட்ட கணக்கையும் விட்டு விட வேண்டும்.

செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். தொழில் மட்டும் தான் கவனத்தில் இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக் கூடாது.

அப்படி

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில்

கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் நடுவில் இருப்பதுதான்

யோகம்.

கண்ணன் ஏன் இப்படிச் சொல்கிறான்?

வெற்றி தோல்வி பற்றி சிந்திக்கமால் இருக்க முடியுமா?

வெற்றியினை அடைய வேண்டும், தோல்வியினை தவிர்க்க வேண்டும் என்பதுதான்  அனைவரின் விருப்பமும்.

அப்படி இருக்க எது வந்தாலும் கவலைப் படாதே என்றால் எப்படி?

சரி, அப்படி இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் பெரிதாக என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.

சாமியார் மாதிரி அலைய வேண்டியத்துதான்...வேறு என்ன நிகழ்ந்து விடும்?

கண்ணனிடமே கேட்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/07/248.html

Wednesday, July 10, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 4

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 4


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் மூன்று பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )

ஆயிரம்தான் சொன்னாலும் நாம் கேட்க மாட்டோம். பலன் இல்லாமல் காரியமா...நடக்கவே நடக்காது என்று அடம் பிடிப்போம். அளவான பலன், கொஞ்சம் பலன், தேவையான அளவு பலன் என்று ஏதாவது ஒன்று வேண்டும். 

ஒண்ணுமே எதிர்பார்க்காமல் ஒன்றைச் செய்வது என்பது முடியவே முடியாது என்று நாம் நினைப்போம்.

ஆனால்,

நாம் நிதமும் அதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா. 

வீட்டுக்கு, குடும்பத்துக்கு செய்வதை சொல்லவில்லை. நாம் நம் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பலன் எதிர்பார்க்காமல் காரியம் செய்கிறோம் என்றால் ஆச்சரியமாக   இருக்கிறது அல்லவா?

நாம் வருமானவரி காட்டுகிறோமே !

அதற்கு பலன் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நான் இவ்வளவு வரி கட்டினேன் , எனக்கு இவ்வளவு  பலன் வேண்டும் என்று யாரும் கோர்ட்டுக்குப் போக முடியாது. 

பலன் கருதாமல் கட்ட வேண்டியதுதான். 

கீதை சொன்னால் அதோடு நாம் வாதம் செய்வோம். 

அரசாங்கம் சட்டம் போட்டு பிடுங்கிக் கொண்டு போனால், வாயை மூடிக் கொண்டு இருப்போம். 

தனிமனிதன் மாற மறுப்பதால், வருமான வரி போன்றவற்றை வலிந்து திணிக்க வேண்டி இருக்கிறது. 

அது மட்டும் அல்ல, Corporate Social Responsibility (CSR) என்று கம்பெனி சட்டத்தில் ஒன்று இருக்கிறது. அதன் படி ஓரளவுக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் கண்டிப்பாக அந்த   வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நன்மைக்கு செலவிட வேண்டும் என்று சட்டம்  இருக்கிறது. 

பள்ளிகள் கட்டுவது, மருத்துவ மனைகள் கட்டுவது, போன்றவற்றை அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். 

கீதை மென்மையாக சொன்னதை, அரசாங்கம் சட்டம் போட்டுச் சொல்கிறது. 

நம் நூல்கள் சொன்னவற்றை நாம் கேட்பது இல்லை. 

"ஹா...அதெல்லாம் நடை முறைக்கு ஒவ்வாதவை " என்று தள்ளி வைத்து பழக்கப் பட்டுவிட்டோம். 

சட்டம் என்று வந்தால், வாய் மூடிச்  செய்வோம். 

இன்று எவற்றோடெல்லாம் நீங்கள் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ நாளை அவை சட்டமாக வரும். 

அறம் என்பதை விட்டு விலகவே முடியாது. 

நாளடைவில் அவை சட்டமாக  வந்து நம்மை மிரட்டுகின்றன. இப்ப என்ன செய்வாய் என்று கேட்கின்றன.


பாகம் 4 



பாகம் 3
https://bhagavatgita.blogspot.com/2019/07/247-3.html

பாகம் 2  : 



பாகம் 1:

Monday, July 8, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 3

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 3


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் இரண்டு பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )

கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

இதை இன்னொரு தளத்தில் இருந்து பார்ப்போம். 

பலனை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். பலன் இல்லாமல் வேலை செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்து வராத சிந்தாந்தம். ஒரு ஆள் அப்படி செய்ய மாட்டார்கள். 

சரி. பலன் வேண்டும் தான். 

எவ்வளவு பலன் வேண்டும் ?

மனிதன் ஆசைக்கு அளவு உண்டா ? எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அது மட்டும் அல்ல,  அளவுக்கு அதிகமாக இன்று கொடுத்தாலும், நாளை இன்னும் வேண்டும் என்று  அதிக எதிர்பார்ப்பான்.

இதன் ஆபத்தை நாம் இன்னும் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவில்லை. 

உதாரணமாக,


ஒரு மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வைத்தியம் பார்க்கிறார். அதற்கு உரிய தொகையை பெற்றுக் கொள்கிறார்.  அவருக்கு அந்த பலன்  போதாது. இன்னும் வேண்டும் என்று  நினைக்கிறார்.நோயாளியிடம் இருந்து  நிறைய வேண்டும் என்று நினைக்கிறார். 

சாதாரண பிரசவத்தை சிசேரியனாக மாற்றுகிறார்.  ஒன்றுக்கு பத்தாக பலன் கிடைக்குமே.

தேவை இல்லாத சோதனைகளை செய்து கொண்டு வா என்கிறார். மருத்துவ பரிசோதனை நிலையம் (லேப்), அவருக்கு ஒரு பங்கை கொடுத்து விடும். நிறைய பலன் கிடைக்கிறதே. 

அளவுக்கு அதிகமான மருந்துகளை எழுதித் தருகிறார். மருந்து நிறுவனங்கள் அவருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடும்.  பலன். 

இது ஒரு ஒரு தொழில் நடப்பது மட்டும் அல்ல. 

பள்ளியில் பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர் சரியாக சொல்லித் தராமல், டியூஷன் எடுத்துக் கொள்ள வீட்டுக்கு வா  என்கிறார். மேலும் பலன் கிடைக்குமே. 

ஒழுங்காக செய்ய வேண்டிய நேரத்தில் வேலையை செய்யாமல், overtime இல் செய்தால் மேலும்  பலன் கிடைக்குமே என்று தொழிலாளிகள் வேலை செய்யும் வேகத்தை குறைக்கிறார்கள்.  

தொழிற்சாலையில் இருந்து வரும் மாசுபட்ட கழிவு நீர் மற்றும் புகையை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும். அப்படி செய்ய பணம் செலவு செய்ய வேண்டும். இலாபம் குறையும். பலன் குறையும். எனவே, அசுத்த நீரையும், காற்றையும் அப்படியே விட்டு விடுகிறார்கள்.  சுற்றுச் சூழ்நிலை கெடுகிறது. 

வேலை செய்ய வேண்டிய அரசாங்க அதிகாரிகள் கையூட்டு (இலஞ்சம்) வாங்குகிறார்கள். பலனில் புத்தி போனதால். இலஞ்சம் கொடுக்கும் போது மனம் எப்படி வலிக்கிறது. அப்போது தோன்ற வேண்டும், இந்த சுலோகம் , நடைமுறைக்கு  உகந்ததா இல்லையா என்று. 

வீட்டில் மாடு இருக்கிறது. கன்று போட்ட சில மாதங்களுக்கு அது பால் தரும். கன்றுக்குப் போக  கொஞ்சம் மிச்சம் இருந்தால் நாம் அதை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் தான் கிடைக்கும்.  அதிக பலன் வேண்டும் என்று என்ன செய்கிறார்கள் ?

கன்றுக்கு விடாமல் ஒட்ட கறந்து விடுகிறார்கள். 

நீண்ட நாள் பால் தர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். 

பால் மடி வற்றி விட்டால், அடி மாட்டுக்கு விற்று விடுகிறார்கள். 

உயிர்கள் மேல் அன்பு போய் விட்டது. 

இயற்கை மேல் அன்பு போய் விட்டது. 

சக மனிதர்கள் மேல் அன்பு போய் விட்டது. 

காரணம் என்ன ?

பலன். பெரிய பலன். மேலும் பலன்...என்ற பேராசை. 

நோயாளி வந்தால், அவரின் நோயை எப்படி குணப்படுத்துவது, வலியில் இருந்து அவருக்கு எப்படி  விடுதலை தருவது, எப்படி சீக்கிரம் குணப்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். 

மாணவனை எப்படி உயர்ந்த படித்த பண்பாளனாக மாற்றுவது என்று ஆசிரியர் சிந்திக்க வேண்டும். 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

பலனில் மனம் போனதால் நாடு சீரழிந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு துறையும் சீரழிகிறது. 

நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் பணத்தின் முன் (பலன்) அடிபட்டுப் போகிறது. 

இப்போது சொல்லுங்கள், இது நடைமுறைக்கு ஒவ்வாத ஸ்லோகமா என்று. 

நீங்க சொல்றது எல்லாம் சரிதான். இருந்தாலும், என்னவோ மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே  ....என்ன செய்யலாம்? 

என்ன செய்யலாம் என்று நாளை சிந்திப்போமா ?

பாகம் 3

பாகம் 2  : 



பாகம் 1:

Thursday, July 4, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 2

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 2


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் பாகம் கீழே இருக்கிறது. Scroll down )

கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

ஒரு வீடும், சமுதாயமும், நாடும், உலகும் முன்னேற வேண்டும் என்றால், எல்லோரும் தங்கள் சுயநலத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். 

எனக்கு என்ன கிடைக்கும், எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று எதிலும் கணக்கு போட்டுக் கொண்டிருந்தால், வீடு, நாடு, உலகம் உயராது. வீடும், நாடும், உலகும் உயரவில்லை என்றால், அதில் உள்ள நாமும் உயர முடியாது. 

ஒரு தாய், பிள்ளை வளர்க்கும் கடமையைச் செய்கிறாள். இதில் எனக்கு என்ன கிடைக்கும், இந்த பிள்ளைக்கு பால் ஊட்டுவதன் மூலம் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று  அவள் ஒரு நொடி கூட யோசிப்பது கிடையாது. 

ஐயோ என் பிள்ளைக்கு பசிக்கிறதே என்று பால் தருகிறாள். அது உண்டு, திருப்தியாக  உறங்குவதைக் கண்டு அவள் மகிழ்கிறாள். அவளுக்கு கிடைத்தது என்ன?  ஒன்றும் இல்லை. 

அதே போல், கணவனும் கடுமையாக உழைக்கிறான். பல சங்கடங்களை பொறுத்துக் கொள்கிறான்.  பல அவமானங்களை ஏற்றுக் கொள்கிறான். எதற்கு? தன்  குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று. அவனுக்கு என்ன பலன் அதில் என்றால், ஒன்றும் இல்லை. நாளை பிள்ளைகள் படித்து முடித்து, திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள். 

அது சரி, இங்கே, என் பிள்ளை, என் குடும்பம் என்று வருகிறது. அதில் நான் பலன் எதிர்பார்க்காமல்  செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்காக நான் வேலை செய்யும்  நிறுவனத்திலும் அப்படியே இருக்க முடியுமா ?

முடியும். முடிய வேண்டும். 

எப்படி என்றால்....

குடும்பத்துக்காக நாம் செய்வது குடும்பத்தின் மேல் உள்ள அன்பினால். கருணையால். 

அந்த அன்பும் கருணையும் கொஞ்சம் அப்படியே சமுதாயத்தின் மேலும் திருப்பினால், இது என் சமூகம், என் சமுதாயம், என் நாடு ...இது உயர நான் என் பங்களிப்பை தருவேன் என்று ஒவ்வொருவரும் முன் வந்தால்.....?

இந்த தலைமுறை மட்டும் அல்ல, இனி வரும் தலைமுறைகளும் செழித்து வளரும் அல்லவா?

மேலும், 

நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எதற்காக வேலை செய்கிறேன் என்றால், எனக்கு சம்பளம் வருகிறது எனவே வேலை செய்கிறேன் என்று சொல்லலாம். அது ஒரு வழி.

நான் வேலை செய்வதன் மூலம், பலருக்கு இந்த நிறுவனத்தில் வேலை நிலைக்கிறது, அவர்கள் குடும்பம் பிழைக்கிறது, இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மூலம் பலர் பலன் அடைவார்கள். நான் அவர்களின் நன்மைக்காகவும்  வேலை செய்கிறேன் என்று நினைத்து செய்தால், சக ஊழியர்கள், அந்த நிறுவனத்தின் பொருள்களை வாங்குபவர்கள் என்று எல்லோர் நலனும் என் கண் முன் வந்து போகும். நான், எனக்காக மட்டும் வேலை செய்யவில்லை. ஒரு சமுதாய நோக்கத்துடன் வேலை செய்கிறேன் என்ற எண்ணம் வரும். அப்படி வந்தால், என் சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால், அது மட்டுமே  முக்கியமாக இருக்காது. 

நான் செய்யும் வேலையே மிக இனிதாக மாறிவிடும். நான் இந்த நிறுவனம் இலாபகரமாக செயல் பட  உதவி செய்தால், இன்னும் பலருக்கு வேலை கிடைக்கும், இன்னும் பல பயனாளிகள் (consumers ) பலன் பெறுவார்கள் என்பது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும். 

தொழில் என்பது மாறி, தொண்டு என்பது வந்து விடும். 

எனக்கு பலன் கிடைக்காது என்று நினைத்தால், யார் ஒரு மாமரத்தையோ, புளிய மரத்தையோ  நடுவார்கள். வரும் கால சந்ததி பயன் பெற வேண்டும் என்றும் நினைத்தால் தான்  அது முடியும். 

இரண்டாவது தளம், தன்னைத் தாண்டிய ஒரு சமுதாய நோக்கு. 

கட்டாயமாக கீதை சுயநலத்தை விடச் சொல்கிறது. கீதையின் நோக்கம், ஒரு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.அதற்கு கொஞ்சம் தியாகம் தேவை தான். சமுதாயம் உயராவிட்டால், அதில் உள்ள தனி மனிதன் உயரவே முடியாது. 

சரி மாதிரித்தான் இருக்கிறது...இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் எப்படி வேலை செய்வது ...கொஞ்சம் எங்கேயோ இடிப்பது மாதிரி இருக்கிறதே...மூளைக்கு எட்டுகிறது, மனதுக்கு எட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா ?

மேலும் சிந்திப்போம்....நாளை சந்திப்போமா ?

------------------------------------------------------------இரண்டாம் பாகம் முற்றிற்று -----------------------

முதலாம் பாகம், கீழே 




இது என்ன சுத்த போங்காக இருக்கிறதே.

வேலை செய்யணுமாம், அதன் பலனை எதிர் பார்க்கக் கூடாதாம். சரி, பலன் இல்லாத  வேலையை ஏன் செய்ய வேண்டும் , பேசாமல் சும்மா இருக்கக் கூடாதா என்றால், அதுவும் கூடாதாம்.

சுத்த அழுகுணி ஆட்டமா இருக்கே என்று நாம் நினைப்போம்.

கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது.  பொதுவாக யாரைக் கேட்டாலும், கீதை என்ன சொல்கிறது என்று கேட்டால், "கடமையைச் செய், பலனை  எதிர் பார்க்காதே" என்று சொல்கிறது என்று இந்த ஸ்லோகத்தைத்தான்  கீதையின் சாரமாகச் சொல்லுவார்கள்.

அது எப்படி முடியும்?

முனிவர்களும் கூட பலன் வேண்டித்தானே தவம் செய்கிறார்கள். யாகம் செய்கிறார்கள்.

பலன் இல்லாமல் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்?

இந்த ஸ்லோகத்தை இரண்டு தளங்களில் இருந்து நாம் அணுக வேண்டும்.

முதலாவாவது,  ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால்  நாம் அதில் இருந்து கிடைக்கும் பலனை  எடை போடுகிறோம். நிறைய பலன் கிடைக்கும் என்றால், அந்த காரியத்தை செய்வோம். இல்லை என்றால், செய்ய மாட்டோம். இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்தால், ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் தருவார்கள், இன்னொரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள் என்றால், நாம் பத்தாயிரம் தரும் நிறுவனத்துக்குத்தான் வேலைக்குப் போவோம். இல்லையா.

சரி, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தருகிறேன் என்றால் போவோமா?  மாட்டோம். ஐயோ, அது என்ன மாதிரி வேலையோ. நம்மால் முடியாது என்று ஒதுங்கி விடுவோம்.

சில பேர் சொல்லலாம், இல்லை இல்லை நான் போவேன் என்று.

நிறைய மாணவர்கள்,  CA , IIT, IAS எல்லாம் எழுதப் போவது கிடையாது. ஏன்? ஐயோ, மூணு வருஷம் CA படிச்சு , பாஸ் பண்ணாவிட்டால் என்ன ஆகும் வாழ்க்கை என்று பயந்து முயற்சி செய்வது கிடையாது.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர், சில கோடி முதல் போட்டால் பெரிய அளவில் வரலாம். நட்டம் வந்து விட்டால்  என்ன செய்வது என்று பணத்தைப் போடாமல் நிறுவனத்தை  சின்னதாகவே வைத்துக் கொண்டு இருப்பார்.

பலனில் மனம் போனால், அது கிடைக்காதோ என்ற பயமும் வரும். எனவே, நாம் பெரிய  முயற்சிகள் எதையும் செய்வது இல்லை. ஏன் என்றால், அவ்வளவு முயற்சி செய்து, பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து,  வேலை செய்யாமலேயே விட்டு விடுவோம்.

புது முயற்சிகள், புது அனுபவங்கள், பெரிய முயற்சிகள், புதிதாக எதையும் கற்றுக் கொள்வது என்று   எதுவும் இல்லாமல், பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம் என்று பல கோடி பேரின் வாழ்க்கை அப்படியே போய்  விடுகிறது.

பெரிய முயற்சிகள் செய்து, அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும், அந்த முயற்சி  உங்களை பெரிய அளவில் மேலே கொண்டு போய் விடும்.

உதாரணமாக, நான் மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் நினைக்கிறேன்.

இத்தனை வயதுக்கு மேல், அதெல்லாம் நடக்காது என்று பலன் மேல் நாட்டம் போனால்,  நான் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டேன்.

அதற்கு மாறாக, முடியுதோ இல்லையோ, நான் முயற்சி செய்வேன் என்று பலனை நினைக்காமல்  பயிற்சியை தொடங்கினால் இரண்டில் ஒன்று நிகழும்.

ஒன்று, நான் மாரத்தான் ஓடி,  அதை சாதித்து இருப்பேன்.

அல்லது, ஓட முடியாமல் போகலாம். ஆனால், அந்த ஓடும் பயிற்சியில், என் உடல்  வலிமை பெற்று இருக்கும், நீண்ட நாட்களுக்கு நோய் வராது, முட்டு வலி வராது,  காலையில் எழுந்து ஓடும் ஒரு ஒழுக்கம் வந்திருக்கும், சர்க்கரை வியாதி  போன்றவை கிட்டத்தில் கூட வராது.  மாரத்தான் ஓட முடியாவிட்டாலும், இது போன்ற பல பலன்கள் நிச்சயமாக எனக்கு கிடைக்கும் அல்லவா.

பதக்கம் வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தால் , போன வரும் பதக்கம் வாங்கியவன்  2 மணி நேரத்தில் ஓடினான். என்னால் முடியாது என்று முதலிலேயே மூட்டை கட்டி வைத்து விடுவேன் அல்லவா.

பலன் மேல் மனம் போனால், பெரிய முயற்சிகள் குன்றும்.

இது ஒரு தளம்.

அடுத்த தளம் என்ன என்று நாளை சிந்திப்போமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/07/247.html

Tuesday, July 2, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


இது என்ன சுத்த போங்காக இருக்கிறதே.

வேலை செய்யணுமாம், அதன் பலனை எதிர் பார்க்கக் கூடாதாம். சரி, பலன் இல்லாத  வேலையை ஏன் செய்ய வேண்டும் , பேசாமல் சும்மா இருக்கக் கூடாதா என்றால், அதுவும் கூடாதாம்.

சுத்த அழுகுணி ஆட்டமா இருக்கே என்று நாம் நினைப்போம்.

கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது.  பொதுவாக யாரைக் கேட்டாலும், கீதை என்ன சொல்கிறது என்று கேட்டால், "கடமையைச் செய், பலனை  எதிர் பார்க்காதே" என்று சொல்கிறது என்று இந்த ஸ்லோகத்தைத்தான்  கீதையின் சாரமாகச் சொல்லுவார்கள்.

அது எப்படி முடியும்?

முனிவர்களும் கூட பலன் வேண்டித்தானே தவம் செய்கிறார்கள். யாகம் செய்கிறார்கள்.

பலன் இல்லாமல் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்?

இந்த ஸ்லோகத்தை இரண்டு தளங்களில் இருந்து நாம் அணுக வேண்டும்.

முதலாவாவது,  ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால்  நாம் அதில் இருந்து கிடைக்கும் பலனை  எடை போடுகிறோம். நிறைய பலன் கிடைக்கும் என்றால், அந்த காரியத்தை செய்வோம். இல்லை என்றால், செய்ய மாட்டோம். இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்தால், ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் தருவார்கள், இன்னொரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள் என்றால், நாம் பத்தாயிரம் தரும் நிறுவனத்துக்குத்தான் வேலைக்குப் போவோம். இல்லையா.

சரி, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தருகிறேன் என்றால் போவோமா?  மாட்டோம். ஐயோ, அது என்ன மாதிரி வேலையோ. நம்மால் முடியாது என்று ஒதுங்கி விடுவோம்.

சில பேர் சொல்லலாம், இல்லை இல்லை நான் போவேன் என்று.

நிறைய மாணவர்கள்,  CA , IIT, IAS எல்லாம் எழுதப் போவது கிடையாது. ஏன்? ஐயோ, மூணு வருஷம் CA படிச்சு , பாஸ் பண்ணாவிட்டால் என்ன ஆகும் வாழ்க்கை என்று பயந்து முயற்சி செய்வது கிடையாது.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர், சில கோடி முதல் போட்டால் பெரிய அளவில் வரலாம். நட்டம் வந்து விட்டால்  என்ன செய்வது என்று பணத்தைப் போடாமல் நிறுவனத்தை  சின்னதாகவே வைத்துக் கொண்டு இருப்பார்.

பலனில் மனம் போனால், அது கிடைக்காதோ என்ற பயமும் வரும். எனவே, நாம் பெரிய  முயற்சிகள் எதையும் செய்வது இல்லை. ஏன் என்றால், அவ்வளவு முயற்சி செய்து, பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து,  வேலை செய்யாமலேயே விட்டு விடுவோம்.

புது முயற்சிகள், புது அனுபவங்கள், பெரிய முயற்சிகள், புதிதாக எதையும் கற்றுக் கொள்வது என்று   எதுவும் இல்லாமல், பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம் என்று பல கோடி பேரின் வாழ்க்கை அப்படியே போய்  விடுகிறது.

பெரிய முயற்சிகள் செய்து, அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும், அந்த முயற்சி  உங்களை பெரிய அளவில் மேலே கொண்டு போய் விடும்.

உதாரணமாக, நான் மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் நினைக்கிறேன்.

இத்தனை வயதுக்கு மேல், அதெல்லாம் நடக்காது என்று பலன் மேல் நாட்டம் போனால்,  நான் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டேன்.

அதற்கு மாறாக, முடியுதோ இல்லையோ, நான் முயற்சி செய்வேன் என்று பலனை நினைக்காமல்  பயிற்சியை தொடங்கினால் இரண்டில் ஒன்று நிகழும்.

ஒன்று, நான் மாரத்தான் ஓடி,  அதை சாதித்து இருப்பேன்.

அல்லது, ஓட முடியாமல் போகலாம். ஆனால், அந்த ஓடும் பயிற்சியில், என் உடல்  வலிமை பெற்று இருக்கும், நீண்ட நாட்களுக்கு நோய் வராது, முட்டு வலி வராது,  காலையில் எழுந்து ஓடும் ஒரு ஒழுக்கம் வந்திருக்கும், சர்க்கரை வியாதி  போன்றவை கிட்டத்தில் கூட வராது.  மாரத்தான் ஓட முடியாவிட்டாலும், இது போன்ற பல பலன்கள் நிச்சயமாக எனக்கு கிடைக்கும் அல்லவா.

பதக்கம் வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தால் , போன வரும் பதக்கம் வாங்கியவன்  2 மணி நேரத்தில் ஓடினான். என்னால் முடியாது என்று முதலிலேயே மூட்டை கட்டி வைத்து விடுவேன் அல்லவா.

பலன் மேல் மனம் போனால், பெரிய முயற்சிகள் குன்றும்.

இது ஒரு தளம்.

அடுத்த தளம் என்ன என்று நாளை சிந்திப்போமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/07/247.html






Sunday, June 30, 2019

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும்

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும் 



यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥

யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||

யாவாந் = அதுவரை, அந்த அளவு

அர்த = பயன், உபயோகம், தேவை

 உத³பாநே = குளம், குட்டை, ஏரி

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது


தாவாந் = அந்த அளவு

ஸர்வேஷு  = அனைத்து

வேதே³ஷு = வேதங்களில்

ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு

விஜாநத: = அறிந்தவனுக்கு (வி ஞான த் )

எங்கும் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் போது, ஒரு குளத்திலோ, ஏரியிலோ உள்ள நீர் எவ்வாறோ அது போல தன்னை அறிந்த பிராமணனுக்கு வேதம். 

அருமையான உதாரணம், ஆழ்ந்த கருத்து.

நமக்கு தண்ணீர் வேண்டும் போது, கிணற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ இருந்து நாம் நீரை பெற்றுக் கொள்கிறோம். நம் வீட்டுக்கு பெரும் பாலும் அது வந்து விடுகிறது. எனவே நாம் அது எங்கிருந்து வருகிறது என்று பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை.

ஆனால், ஊரே வெள்ளக் காடாக ஆகிவிட்டால், அந்த குளம், ஏரி , குட்டை, கிணறு என்பதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா? எல்லாம் நீர் தானே. இதில் குளம், கிணறு என்ற பாகுபாடு எங்கே வந்தது?

அது போல,

நமக்கு குறிப்பிட்ட தேவை இருக்கும் போது வேதத்தை நாடுகிறோம். அதில் சொல்லியபடி செய்து நமக்கு வேண்டியதை அடைய முயற்சி செய்கிறோம்.

பணமோ, பதவியோ, சொர்கமோ, கைலாயமோ, வைகுண்டமோ ஏதோ ஒன்றை  அடைய வேண்டும் என்றால்,  அது பற்றி வேதம் என்ன சொல்லி இருக்கிறது என்று  அறிந்து அதன் படி நடக்க முயற்சி செய்வோம் .

சந்தியாவந்தனம் செய், யாகம் செய், கோவிலுக்குப் போ, தானம் செய்,  பூஜை செய்,  இந்த மந்திரங்களை இத்தனை முறை சொல்,  இன்னின்ன வழி முறைகளை  கடைபிடி என்று வேதம் சொல்லும் வழி முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

எது வரை என்றால் , ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும் வரை , அதற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

எப்போது அந்த தேவை நிற்கிறதோ, எப்போது ஒருவன் தன்னைத் தான் அறிகிறானோ, அப்போது வேதங்களின் துணை தேவை இல்லை. எங்கும் நீர் நிறைந்து கிடக்கும் போது , கிணற்றில் போய் யார் நீர் அள்ள முயல்வார்கள்?

உண்மையை கண்டு கொண்டவனுக்கு வேதம் தேவை இல்லை.

என்னடா இது, கீதை வேதத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? வேதம் தேவை இல்லை என்றெல்லாம் பேசுகிறதே, அதுவும் ஞானம் பெற்ற ப்ராமணனுக்கு வேதம் தேவை இல்லை என்றால் பின் யாருக்கு அது தேவைப் படும்? ஞானம் இல்லாத பிராமணனுக்கும் மற்றவர்களுக்குமா? சரியாகப் படவில்லையே...

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கீதை எழுதப்பட்ட காலத்துக்கு நாம் போக வேண்டும். அப்போது என்ன நடந்தது என்று தெரிந்தால் தான், இந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தம் விளங்கும்.

சரி அப்படி என்னதான் நிகழ்ந்தது, கீதை ஏன் இப்படி சொல்கிறது...

சிந்திப்போம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/246.html


Friday, June 28, 2019

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள 



त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥

த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||


த்ரை = மூன்று

குண்ய = குணங்களின்

விஷயா = விசேஷ தன்மை பற்றி

வேதா = வேதங்கள்

நிஸ் = விலகி, தாண்டி,  ஒட்டாமல்

த்ரை = மூன்று

குண்யோ = குணங்களில் இருந்து

ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா

நிர் = இல்லாமல்

த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை

நித்ய = எப்போதும்

ஸத்த்வ = சத்வ

ஸ்தோ  = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்

நிர் = இல்லமால்

யோக = ஆடம்பரங்களில்

க்ஷேம = சுகங்களில்

ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி


அர்ஜுனா, வேதங்கள் மூன்று குணங்களை பற்றி பேசுகின்றன. நீ அவற்றைக் கடந்து,  இருமைகள்  இல்லாமல், சத்வ குணத்தில் நிலை பெற்று, உலக இன்பங்களில் பற்றுக் கொள்ளாமல், ஆத்மாவோடு  ஒன்றி இருப்பாய். 

யப்பா....பெரிய லிஸ்ட்டா இருக்கே.

பெரிய பட்டியல் மட்டும் அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் முன்னுக்கு பின் முரணாகவும் இருக்கிற மாதிரி தெரியுதே.

கண்ணன் என்னதான் சொல்ல வர்றான்னு பாக்கலாம்.

மூன்று குணங்கள் - இது பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். சத்வ குணம், இராஜஸ குணம், தாமச குணம். மனிதர்கள் எல்லோரும் இந்த மூன்று குணங்களின்  கலவைதான். இந்த குணங்களில் சில தருணங்களில் சிலவை மேலோங்கி இருக்கும். அதற்காக மற்றவை இல்லாமல் போகாது. மற்றவை கொஞ்சம் ஒதுங்கி நிற்கும். அவ்வளவு தான்.

"முக்குணங்களை கடந்து" ...இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லும்படி சொல்லுகிறான். இந்த குணக் கலவையில் கிடந்து உழலாதே என்கிறான்.

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை

ஆண்டானைக் கொண்டன்றே. 

என்பார் மணிவாசகர். இந்த முக்குணங்களையும் தாண்டி, இந்த பிறவி என்ற பந்தத்தில் இருந்து என்னை காப்பாற்றிய சிவனை கொண்டாடுவேன் என்கிறார்.

சரி மூன்று குணங்களையும் கடந்தாச்சு என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம்   என்ன செய்ய வேண்டும் ?

"இருமைகளை கடந்து"  அது என்ன இருமை?

இன்பம், துன்பம்
சுகம், துக்கம்,
பாவம், புண்ணியம்,
நல்லது கெட்டது

இறைவன் என்பவன் இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், நல்லவன், பொல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இறைவனுக்குக் கிடையாது.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  

நடு நிலை என்பது இறைக் குணம். இந்த இருமைகளை கடந்தால், நீங்களும் இறை தன்மை அடையலாம்.

அத்வைதம் என்றால் என்ன ?

அதற்கு நேரடியாக அர்த்தம் சொல்ல முடியாது.

துவைதம் என்றால் இரண்டு.

அ + துவைதம் = அத்வைதம். இரண்டு இல்லாதது என்று அர்த்தம்.

தமிழில் இரண்டற கலப்பது என்று பொருள். இரண்டு இல்லாமல் கலந்து விடுவது.

ஏன், அதை ஒன்று என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? அது என்ன இரண்டு இல்லாதது?

இந்த இருமைகள் நம் கண்ணுக்குத் தெரியும்.

இதைத் தாண்டி காண்பதுவே காட்சி.

"ஒன்றாக காண்பதுவே காட்சி" என்றாள் ஒளவைப் பாட்டி.

சரி, முக்குணங்களை கடந்து, இருமைகளை தாண்டி வந்தாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

"சத்வ குணத்தில் நிலை பெற்று "

என்னடா இது வம்பா போச்சு. இப்பத்தான் முக்குணங்களை கடக்க வேண்டும் என்று சொன்னான்.  இப்ப என்னடா என்றால் அந்த முக்குணங்களில் ஒன்றான  சத்வ குணத்தில் நிலை பெற்று என்கிறான்.

இது முன்னுக்கு  பின் முரணாக இல்லையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி முரண் இல்லை?

முக்குணங்களின் சேர்க்கையில், எப்போதும் ஒரு குணம் தலை தூக்கி நிற்கும். மற்ற இரண்டு குணங்களும் கொஞ்சம் மங்கி இருக்கும்.

அந்த நிலையில், சத்வ குணத்தில் இருந்தால் கூட, அதில் கொஞ்சம் ராஜஸ, தாமச குணத்தின் சாயல், கலவை இருக்கும்.

மூன்றையும் கடந்த பின், தூய்மையான சத்வ குணத்தில் நிலை பெற்று இருக்க வேண்டும்  என்கிறான்.  அந்த நிலையில், மற்ற இரண்டு குணங்களின் கலவையோ , சாயலோ இருக்காது.

மிக உன்னத குணம்.

அந்த நிலையில் உலக பற்றுகள் விடுபட்டு, அனைத்தும் ஆத்மாவில் நிலை பெற்று இருக்கும்  என்கிறான் கண்ணன்.

நம் மீதுள்ள அதீத அன்பினால், இவற்றை எல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போய்  இருக்கிறார்கள்.

இவற்றின் பால் மனதை திருப்புவதோ அல்லது "...not practical..." என்று தூசி தட்டிவிட்டு போவதோ  நம் விருப்பம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/245.html


Thursday, June 27, 2019

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி 


भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

போ⁴கை = போகம், ஆடம்பரம்

ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி. ஈசன் = தலைவன். ஈஸ்வர = தலைமை பீடம். ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.

ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு

தயா = அதனால்

அபஹ்ருத  = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்

சேதஸாம் = மனம், இதயம், புத்தி

வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து

பு³த்³தி⁴ = புத்தி

ஸமாதௌ⁴  = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட

ந  = இல்லை

விதீ⁴யதே  = விதிக்கப்பட்டு இருக்கிறது


அதிகாரம், செல்வம் என்று இவற்றில் எப்போது மனம் போகத் தொடங்கியதோ, அப்போதில் இருந்து மனம் ஒரு நிலையில் நில்லாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டே , அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

பணம், பொருள், செல்வம், பதவி, அதிகாரம் என்று ஆசைப் படுவதில் என்ன தவறு  என்று கேட்பவர்களுக்கு வியாசர் பதில் தருகிறார்.

இந்த ஆசைகள் மனதில் வந்து விட்டால், மனம் சதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்.   கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் வரும்,  கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும்,  வேறு யாராவது  நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், வந்தாலும், எவ்வளவு வரும் என்ற ஆசை வரும்.

இப்படியே போனால், மனம் நொந்து நைந்து போகும்.

மனம், சம நிலையை இழக்கும். குழப்பத்திலும், பயத்திலும் கிடந்து அல்லாடும்.

நிம்மதி போகும்.அமைதி கிடையாது.

கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் சிரியரோ?


இந்த பணத்துக்காகவும், பதவிக்காகவும் மன அமைதியை அழித்து, நிம்மதியில்லாமல்  தவிக்க வேண்டுமா ?


ஒரு வேளை உணவு என்றாலும், நிம்மதியாக சாப்பிட வேண்டும்.

கோடி கோடியாக சம்பாதித்து வைத்து விட்டு, படுக்கையில் படுத்தால் தூக்கம் வராவிட்டால் என்ன பலன் ?

இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி,  மூச்சு திணறல், ஆஸ்துமா, நிம்மதி இல்லாத வாழ்க்கை என்று இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?

மனம் அமைதி பெற கீதை வழி காட்டுகிறது.

கீதை காட்டும் வழிதான் என்ன ?

https://bhagavatgita.blogspot.com/2019/06/244.html

Tuesday, June 25, 2019

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும்

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும் 


கோவிலுக்குப் போனால், கோவிலின் வெளியில் சில பிச்சைக் காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள். "அம்மா, தாயே, ஐயா சாமி தர்மம் பண்ணுங்கள் " என்று பிச்சை கேட்பார்கள்.

"இந்த பிச்சைகாரங்க தொல்லை தாங்க முடியல...நிம்மதியா இருக்கலாம்னு கோவிலுக்கு வந்தால், இங்க இவங்க தொல்லை " என்றது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போவார்கள்.

உள்ளே போய் , "கடவுளே, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, என் பிள்ளைக்கு நல்ல காலேஜ் ல இடம் கிடைக்கணும், பொண்ணுக்கு நல்ல இடத்தில வரன் அமையனும், இந்த வருஷமாவது பதவி உயர்வு கிடைக்கணும்..." என்று இறைவனிடம் பிச்சை எடுப்பார்கள்.

சீ சீ...நான் எல்லாம் அப்படி கிடையாது. கடவுள் கிட்ட அது வேணும் இது வேணும் என்று கேட்க மாட்டேன். இந்தப் பிறவி போதும், உன்னிடம் வந்து சேர வேண்டும், வைகுந்தமோ,  கைலாயமோ உன் திருவடிக் கீழ் இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

அது வேறு வகைப் பிச்சை.

பசிக்கு சோறு போடு என்றாலும் பிச்சைதான், சொகுசுக்கு bmw கார் வேண்டும் என்று கேட்டாலும் பிச்சைதான், வைகுண்டம், கைலாயம் கேட்டாலும் பிச்சைதான்.

எல்லாமே ஆசைதான். அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்பது.

திருமூலர் சொல்லுவார்,

ஆசை அறுமின், ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்று.

இறைவா நீ தான் வேண்டும் என்று கேட்டாலும், அதுவும் ஒரு ஆசை தான்.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு   வாழ்க்கையா? மண் புழு போன்ற ஒரு வாழ்க்கை தேவையா ?

வாழ்க்கை என்றால், ஆசை இருக்கும், சில நிறைவேறும், சில நிறைவேறாது.  அதற்காக  ஆசையே படாதே என்றால் என்ன அர்த்தம்.

ஆசையே படாதே என்றா கீதை சொல்கிறது?

மத்ததெல்லாம் விடுங்கள். ஆணுக்கு பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும்  ஆசை இல்லை என்றால், இந்த உலகம் அழிந்து விடாதா?

இல்லை. கீதை அப்படி சொல்லவில்லை.

மதம் என்பது, ஒரு ஆன்மீகப் பயணம். அந்த பயணத்தின் நோக்கம், நம்மை நாம் அறிவது.  அறியாமை  என்ற தூக்கத்தில் இருந்து விழிப்பது. எது உண்மை என்று அறிந்து கொள்வது.

காலையில் எழுந்தோம், காப்பி குடித்தோம், குளித்தோம், வேலைக்கு போனோம் அல்லது வீட்டு வேலை செய்தோம்,  மதியம் சாப்பாடு, இரவு தூக்கம் என்று  பொழுதை கழிப்பதா வாழ்க்கை?

ஏன் வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், வாழ்வின் குறிக்கோள் என்ன,  நமக்கு ஏன் துன்பம் வருகிறது, ஏன் மனிதர்கள் எப்போதும் வருத்தத்தில் இருக்கிறார்கள் , நான் யார் என்றெல்லாம் சிந்தித்து விடை காண்பதுதான்  மதத்தின் நோக்கம்.

அதை விட்டு விட்டு, பூஜை, யாகம் போன்ற புற வழிபாடுகள் செய்து, அதன் மூலம்  எனக்கு அது வேண்டும், இது வேண்டும் கேட்டுக் கொண்டிருப்பது அல்ல  மதத்தின் நோக்கம் என்கிறது கீதை.

இப்போது, ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

பாடல்



कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥

காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||


காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்

ஸ்வர்க³பரா  = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்

ஜந்ம = பிறப்புக்கும்

கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்

ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்

க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை

விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான

ப³ஹுலாம் = பல விதமான

போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)

³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று

ப்ரதி  = நோக்கத்துடன்


போகம் வேண்டும், ஸ்வர்கம் வேண்டும், என்று பலவிதமான கிரியைகளை செய்பவர்களை கீதை கண்டிக்கிறது. 

திருமணம் ஆகவில்லையா - இந்தக் கோவிலில், இந்த சாமிக்கு இந்த கிழமையில் இன்ன பூஜை செய்தால், திருமணம் ஆகும்.

வேலை வேண்டுமா, கணவன் மனைவி உறவு சீர் பட வேண்டுமா? சொத்துத் தகராறு தீர வேண்டுமா,  பதவி உயர்வு வேண்டுமா ? வியாபாரத்தில் இலாபம் வேண்டுமா, அயல் நாட்டில் வேலை வேண்டுமா ...அததுக்கு ஒரு பூஜை, ஒரு கிரியை  என்று வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்....கீதை பிறந்த காலம் தொட்டு இது நடந்து கொண்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது அது அல்ல. தன்னைத்தான் அறிவதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

கீதை அதற்குத்தான் வழி சொல்லுகிறது.

நீங்கள், என்னென்ன வேண்டும் என்று என்னென்ன பூஜை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சிந்திப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/06/243.html

Tuesday, April 16, 2019

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு 



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

யம் = அது

இமம் = இந்த

புஷ்பிதாம் = மலர்ந்தது

வாசம் = உரை

ப்ரவத³ந் = சொல்கிறார்கள்

அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்

வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்

 பார்த² = பார்த்தா

ந = இல்லை

அந்ய = மற்றவை

அஸ்தி = இருக்கிறது

இதி  = எனவே

வாதி³ந: = சொல்பவர்கள்  ||2-42||


சிலர் வேதங்களின் வெளி உரைகளில் மகிழ்வார்கள். பூக்கள் போன்ற அலங்கார சொற்களில் அவர்கள் மயங்கி விடுகிறார்கள். தாங்கள் கொண்ட கொள்கையைத் தவிர மற்றவை எல்லாம் பிழை என்கிறார்கள். 

வேதம் பல அங்கங்களை கொண்டது. அதில் ஒரு அங்கம், யாகம், ஓமம் போன்றவை. இவற்றை செய்தால், இவை கிடைக்கும் என்று அவை சொல்கின்றன.

பிள்ளை இல்லையா, இந்த யாகம் செய்.

மழை வரவில்லையா, அதற்கு ஒரு யாகம்.

எதிரிகளை வெல்ல வேண்டுமா, உலகம் பூராவும் ஒரு குடைக் கீழ் வர வேண்டுமா - அஸ்வமேத யாகம்

என்று மளிகை கடை பட்டியல் போல, இதுக்கு இது என்று பெரிய பற்றிய பட்டியல் தருகிறது.

கீதை, வேதத்தின் அந்தப் பாகத்தை கண்டிக்கிறது. அதுவும் வன்மையாக கண்டிக்கிறது. "அலங்கார வார்த்தைகள்" என்று சாடுகிறது.

கர்மத்தை செய், பலனை எதிர் பார்க்காதே என்று கீதை ஒரு புறம் சொல்கிறது.

உனக்கு இந்த பலன் வேண்டுமா, இந்த கர்மத்தைச் செய் என்று வேதம் சொல்கிறது.

நாம் எதை கடைபிடிப்பது? நம்மவர்களை கேட்டால் "நாங்கள் வேதம் மற்றும் கீதையை கடை பிடிக்கிறோம்" என்பார்கள். பெரும்பாலும் இரண்டையுமே படிக்காதவர்களாக இருக்கும்.

அது மட்டும் அல்ல, "வேதத்தில் உள்ளது தான் சரி. மற்றவை எல்லாம் தவறு" என்று  சொல்வதையும் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு..தப்பாவா சொல்லி இருக்கப் போகிறார்கள்..பேசாமல் மண்டைய ஆட்டிவிட்டுப் போவோம்...என்றுதான் நினைக்கிறார்கள்.

கீதை, அப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அப்படி ஏற்றுக் கொள்பவர்களை "அறிவற்றவர்கள் " என்று வன்மையாக கண்டிக்கிறது.

சொல்வது கீதை.


https://bhagavatgita.blogspot.com/2019/04/242_16.html

Tuesday, April 9, 2019

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி 



व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||


வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக = ஒன்று, ஒருமித்த

இஹ = இங்கே, இந்த கர்ம யோகத்திலே

குருநந்த³ந = குரு நந்தன

ப³ஹுஸா²கா = பல கிளைகளை உடையது

ஹி = அதனால்

அநந்த = முடிவற்ற

ஸ்²ச = மேலும்

பு³த்³த⁴ய = அறிவு, புத்தி

அ வ்யவஸாயிநாம் = உறுதி இல்லாத

உறுதி உடையவர்களின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதோரின் புத்தி பல கிளைகளை உடையது. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 


கர்ம யோகத்தை சொல்லி வருகிறான் கண்ணன்.

மனம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஓடும் மனதை எப்படி நிலை நிறுத்துவது? மனச் சலனம் நிற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அது தெரிகிறது, ஆனால் மனதை எப்படி நிலைப் படுத்துவது?

வேலை - கர்மம் - ஒரு வழி.

செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றும். வேறு எங்கும் அலையாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மனதை  ஒருமுகப் பழக்கப் படுத்தி விடலாம்.

சும்மா உட்கார்ந்து கொண்டு, மனதை ஒருமுகப் படுத்துகிறேன் என்றால் அது அடங்காது.

அந்த வேலை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

சமையல் செய்வது, வீடு பெருக்குவது, வண்டி ஓட்டுவது, பூஜை செய்வது, படிப்பது, பாடுவது, உடற் பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

வேலை என்பது ஒரு சாக்கு. அதை வைத்துக் கொண்டு மனதை நிலைப் படுத்த பழக்கி விடலாம்.

கிளை கிளையாக பிரிந்து செல்லும் மனதை ஒருமுகப் படுத்த கர்மா அல்லது வேலை ஒரு வழி.

"மனதில் உறுதி வேண்டும்" என்றான் பாரதி.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்" என்பார் வள்ளலார்.


என்னை பொறுத்தவரை கர்ம யோகம் என்பது வேலை செய்வதைப் பற்றி அல்ல. கர்மத்தின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதுதான்.

மனதை ஒருநிலைப் படுத்தவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். வேலை ஒரு வழி.


சிற்றின்பத்தின் உச்சியில் மனமும் உடலும் ஒன்று பட்டுப் போகிறது. ஆனால் அது ஒரு சில வினாடிகளே நிலைக்கிறது. அதுதான் அதில் சிக்கல்.  அதை நீட்டிக்க முடிவதில்லை.

நீட்டிக்க முடிந்தால், அதுதான் பேரின்பம்.

முயன்று பாருங்கள். எந்த வேலை செய்தாலும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்,  மனதை அதில் இலயிக்க விடுங்கள்.

மெடிடேஷன் என்று சொல்லுகிறார்களே, அதுதான் அது.

தியானம்.  Meditation எல்லாம் இந்த இரகசியம் தான்.

கர்ம யோகத்தை இப்படியும் சிந்திக்கலாம். கர்மத்தின் மூலம் மனதை நிலை பெறச் செய்வது.

உங்களுக்கு இது சரி என்று படுகிறதா ?

https://bhagavatgita.blogspot.com/2019/04/242.html



Monday, February 11, 2019

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற 


व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||



வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக  = ஒன்று

இஹ = இங்கே

குருநந்த³ந  = குரு குல தோன்றலே

ப³ஹுஸா²கா² = பல கிளைகளை

ஹி = அதனால்

அநந்த = அநேக

சா = மேலும்

பு³த்³த⁴யோ = புத்தி

அவ்யவஸாயிநாம் = மன உறுதி இல்லாதவர்கள்


குரு குல தோன்றலே, உறுதியான புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவரின் புத்தி பல கிளைகளை கொண்டது 

கர்ம யோகம் பற்றி கூற ஆரம்பிக்கிறான் கண்ணன்.

முதல் பந்திலேயே சிக்ஸர் .

நாம் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். தொழிலில், விளையாட்டில், படிப்பில், பாட்டில், வேலையில் என்று எதிலும் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் உள்ள துறையில் நாமும் இறங்குகிறோம்.

நம்மால் அந்த அளவு வெற்றி பெற முடிவதில்லை. ஏன் ?

மன உறுதி கிடையாது.

படிக்க உட்காரும் போதே, இதை படிக்கவா, அதை படிக்கவா, இப்போது படிக்கவா, அப்புறம் படிக்கவா, இதை படித்து என்ன ஆகப் போகிறது, போன வருடம் இதில் கேள்வி கேட்டு விட்டார்கள், இந்த வருடம் இதில் வராது என்று ஆயிரம் சிந்தனை. இதற்கிடையில் , வாட்ஸாப்பில் பத்து செய்தி வரும். அவற்றிற்கு பதில் போட வேண்டும். நடுவில் கிரிக்கெட் ஸ்கோர் தெரிய வேண்டும். வீடியோ கேம் பாதியில் நிற்கும்....இப்படி மனம் ஆயிரம் வழிகளில் செல்லும். எப்படி படிப்பு மண்டையில் ஏறும்.

படிப்பு ஒரு உதாரணம்.

வேலையில் இப்படித்தான். ஒரு வேலையை எடுத்தால், நடுவில் நாலு போன் கால், பத்து மெயில், ஒரு வேலை பார்க்கும் போதே இன்னொன்றைப் பற்றிய எண்ணம்.

ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்கும் வரை வேறு எதையும் பற்றி சிந்திக்கக் கூடாது. அதை முடித்து விட்டு அடுத்த காரியம் பார்க்க போக வேண்டும்.

பத்து வேலையை ஒன்றாக செய்ய நினைக்கும் போது ஒரு பதட்டம் வரும். மனம் சிதறும். உடம்பு பதறும். செய்யும் வேலை கெட்டுப் போகும்.

நிறுத்தி நிதானமாக, எடுத்த வேலையை சரியாக செய்து முடித்தால்...மனதுக்கு ஒரு திருப்தி இருக்கும். நாம் செய்து முடித்தோம் என்ற சந்தோஷம் இருக்கும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கை மேலும் செயல் படத் தூண்டும். மேலும் வெற்றிகளை கொண்டு தரும்.

வெற்றியின் முதல் படி, மன உறுதி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின்

என்பார் வள்ளுவ பேராசான்.

திண்ணியர் என்றால் திண்மை உள்ளவர். மனதில் உறுதி உள்ளவர்.

"மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் "  என்பான் பாரதி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

என்பதும் வள்ளுவம்.

உலைவின்றி, மன சோர்வின்றி...மன உறுதியுடன் செயல்பட்டால் விதியையும் மாற்றலாம்  என்கிறார் வள்ளுவர்.

கோவிலுக்குப் போனால் வீட்டு ஞாபகம். வீட்டில் இருந்தால் அலுவலக ஞாபகம். அலுவலகத்தில் வீட்டு ஞாபகம். மனம் எதிலும் இலயிக்காமல் சிதறிக் கொண்டே இருக்கிறது.

ஓடும் மீன் ஓட , உறு மீன் வரும் அளவும் வாடி நிற்குமாம் கொக்கு

என்பது போல செய்யும் வேலையில் , கர்மத்தில் மன உறுதி வேண்டும்.

சிந்தித்து முடிவு எடுங்கள்.

முடிவு எடுத்த பின், உறுதியாக நடை போடுங்கள். ஒன்றை முடித்த பின் அடுத்ததை எடுங்கள்.

வெற்றி நிச்சயம்.

இது கீதை காட்டும் வழி.

https://bhagavatgita.blogspot.com/2019/02/241.html

Monday, January 28, 2019

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட

பகவத் கீதை - 2.40 - அச்சத்தில் இருந்து விடுபட 



नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥

நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||

ந = இல்லை

இஹ = இங்கு

அபி க்ரமநாஸோ  = அபி+கர்ம +நாச  = கர்மங்களில் இருந்து விடுபட

அஸ்தி = இருக்கிறது

ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,

ந= இல்லை

வித்³யதே|  = இருக்கிறது

ஸ்வல்பம் = கொஞ்சம்

அபி = இப்போது

அஸ்ய  = இதன் மூலம்

த⁴ர்மஸ்ய = தர்மத்தின் மூலம்

த்ராயதே  = காக்கிறது

மஹதோ  = பெரிய

பயாத்  = பயத்தில் இருந்து


இதில் கர்மத்தின் விளைவு மாறுவதில்லை. அது வேறு விதமாகவும் விளையாது. இதை கொஞ்சம் புரிந்து கொண்டாலும், பெரிய பயத்தில் இருந்து தப்பலாம். 

என்ன பெரிய பயம் நமக்கு? வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், வீடு, வாசல், பிள்ளை, குட்டி என்று இருக்கிறோம். என்ன பெரிய பயம் நமக்கு ?

நாம் வெளியே பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும், பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

வயதாகிறதே என்ற பயம். நோய் வருமோ என்ற பயம். கண் காண முடியாமல், காது கேட்க முடியாமல், எழுந்து நடமாட முடியாமல் போய் விடுமோ என்ற பயம்.

செல்வம் நம்மை விட்டு போய்விடுமோ என்ற பயம்.

பிள்ளைகளுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்.

எதிர் காலம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கிறது.

அனைத்து பயங்களுக்கும் அடிப்படை, மரண பயம்.

ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், மரண பயமே அனைத்து பயங்களுக்கும் அடிப்படையான  பயம் என்று.

ஏன் மரண பயம் ?

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? சொர்க்கமா? நரகமா ? மறு பிறப்பா? எங்கு போய் எப்படி  பிறப்போமோ? இங்குள்ளவைகளை எல்லாம் விட்டு விட்டுப் போக வேண்டுமா ? கணவன், மனைவி, உற்றார், உறவினர், சொந்தம், பந்தம், சொத்து, சுகம், உறவு, பகை, ஞாபகங்கள், அனைத்தையும் விட்டு விட்டு போக முடியுமா ?

அந்த பயம் எப்படி எப்படியோ வெளிப் படுகிறது.

கர்ம யோகத்தை, சிறிதளவேனும் அறிந்து கொண்டால் கூட பெரிய பயத்தில் இருந்து  விடுப்படலாம் என்கிறான் கண்ணன்.

அறிந்து கொள்வோமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/01/240.html

Sunday, January 27, 2019

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி

பகவத் கீதை - 2.39 - சாங்கிய வழி 



एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥

ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||


ஏஷா = இதை

தே = உனக்கு

அபிஹிதா = கூறினேன்

ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி

புத்தி = அறிவு

யோகே = யோகத்தில்

து = நீ

இமாம் = இந்த

ஸ்²ருணு| = கேட்பாய்

புத்த்யா = புத்தியுடன்

யுக்தோ = சேர்ந்து

யயா  = அதன்  மூலம்

பார்த = பார்த்தனே

 கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்

ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்


இதுவரை சாங்கிய முறைப்படி உனக்கு கூறினேன். இனி, யோக மார்கத்தை கூறுகிறேன். இதை அறிந்தால், உன் கர்ம வினைகள் உன்னை விட்டு விலகும்.

சாங்கிய முறை என்றால் என்ன ?

சாங்கிய முறை என்றால் என்ன என்று அறிந்து கொள்வவது ஒரு புறம் இருக்கட்டும்.  அதற்கு அப்புறம் வருவோம்.

நாம் உண்மையை எப்படி அறிந்து கொள்கிறோம்? அல்லது எப்படி அறிந்து கொள்ளலாம்?

உண்மையை அறிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றிற்கு பிரமாணங்கள் என்று பெயர். சுருக்கமாக சொல்வது என்றால் வழிகள்.

முதலாவது, காட்சி பிராமணம். (பிரதிக்க்ஷம் அல்லது perception ).  நம் கண்ணால் கண்டு அறிவது. கண் என்றால் கண் மட்டும் அல்ல. நம் புலன்கள் மூலம் அறிவது.

ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் அது சூடாகி விடும்.  இந்த உண்மையை நாம் எப்படி அறிந்து கொண்டோம்? கண்ணால் பார்த்தால்  கொதிப்பது தெரியும். அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் கழித்து அதில் ஆவி அடங்கி விடும். இப்போது கண்ணால் பார்த்தால் சூடு தெரியாது. தொட்டுப் பார்த்தால் தெரியும்.   நாம் இன்னொரு உண்மையை அறிகிறோம். அடுப்பில் இருந்து இறக்கிய பின்னும் சிறிது நேரம் சூடு இருக்கும் என்று .

இப்படி, பல விஷயங்களை நாம் அனுபவத்தில் அறிந்து கொள்கிறோம்.  படிப்பு என்பது  நமக்கு நல்ல வாழ்வைத் தரும், பிள்ளைகள் நம்மை கடைசி காலத்தில் காப்பாற்றுவார்கள்.  அரசியல்வாதிகள் நல்லவர்கள்/கெட்டவர்கள், சிக்கனம் ஒரு நல்ல குணம் என்று பல விஷயங்களை நாம் அனுபவத்தில்  அறிந்து கொள்கிறோம்.

இது ஒரு ஒரு வழி.

அடுத்தது, அனுமானம். அனுமான பிரமாணம். நமக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டால்  நம் பழைய அனுபவங்களைக் கொண்டு நாம் சில உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.  உதாரணமாக, தூரத்தில் மலையில் புகை தெரிகிறது. அங்கே தீ இருக்கிறது என்று அனுமானத்தின் அறிகிறோம். நாம் நேரடியாக  பார்க்கவில்லை. வீட்டுக்கு வருகிறோம். மனைவி முகம் வாடி இருக்கிறது. அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அறிந்து கொள்ளலாம். இது அனுமானம்.

அனுபவங்களின் நீட்சி.

மூன்றாவது, ஆகம பிரமாணம் அல்லது சப்த பிரமாணம் என்று சொல்லுவார்கள். பெரியவர்கள், ஞானிகள், சான்றோர் சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது. நமக்கு நேரடி புலன் அறிவு இல்லை, அனுமானம் செய்யவும் முடியாது என்கிற போது நம்மை விட அறிவில் முதிர்ந்தவர்கள்  சொல்வதை ஏற்றுக் கொள்வது. "நேரா போகாதீங்க. அங்க சாலை சரியா இல்லை. இந்தப் பக்கமா சுத்திக் கொண்டு போங்கள் " என்று நாம் புதிதாக  ஒரு ஊருக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒருவர் வழியில் கூறுகிறார் என்று வைத்துக்  கொள்வோம்.  அது உண்மை என்றுதானே நாம் எடுத்துக் கொள்வோம். நேராக நாம் அந்த மோசமான சாலையை பார்க்கவில்லை. அனுமானம் செய்யவும் முடியாது என்கிறபோது அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது ஒரு வழியில் உண்மையை அறிய உதவும் ஒரு  சாதனம்.

இன்னும் பல வழிகள் உள்ளன.

ஆனால், சாங்கிய முறை இந்த மூன்றை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறது.

மேலும், சாங்கிய முறை கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர்களுக்கு முக்குணங்கள்  உண்டு என்று சொல்கிறது (சாத்வீகம், ராஜஸம், தாமசம்).

இப்படி, மிக ஆழமாக, மனிதனின் மன நிலையை (psychology ), தர்க்கம் (logic ), தத்துவம்  (philosophy ), கடவுள், கர்மா, மறு பிறப்பு, பாவ புண்ணியம், உண்மையை அறியும்  வழிகள் என்று ஒரு பெரிய தத்துவத்தை முன்னிறுத்தியது  சாங்கியம்.

மிக மிக அறிவியல் பூர்வமானது. very scientific and logical.

சாங்கிய முறையை புரிந்து கொள்ள தீவிர முயற்சி வேண்டும். மிக ஆழமான சாஸ்திரம்.

எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நேரமும் இல்லை. அறிவும் கிடையாது. முயற்சியும் குறைவு.

எனவே, சாங்கிய வழியை பின் பற்ற முடியாதவர்கள் வேறு ஏதேதோ வழிகளை பின் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்து சமயம் ஒரு வழி முறை இல்லாமல், கரை இல்லாத ஆறு போல பிரிந்து கிடந்தது.

இங்குதான் கீதை வருகிறது.

கீதை வந்த சமயத்தில் நாட்டில் இருந்த அனைத்து வழிகளையும் கீதை ஒன்று சேர்த்தது.

சாங்கிய முறை, யோக முறை, அதில் பக்தி, கர்ம , ஞான யோகம் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்தது கீதை.

குழம்பிக் கிடந்த ஒரு பெரிய கும்பலை வழி நடத்தியது கீதை.

எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதுதான் வழி என்று சொல்லியது.

உதாரணமாக,  ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம், சீன மருத்துவம், தமிழ் மருத்துவம் , யுனானி என்று மருத்துவ முறைகள் பலவாக பிரிந்து கிடக்கிறது. மக்களுக்கு எது சரி , எது தவறு என்று புரியவில்லை. இவற்றை ஒன்று சேர்த்து இதுக்கு, இது சரி என்று கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா?

அந்த வேலையை செய்தது கீதை. யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு பெரிய வேலை என்று. அனைத்து தத்துவங்களையும் ஒரு புத்தகத்தில் அடக்குவது என்றால் எளிதா? கீதை அதைச் செய்தது. கீதையை படிக்கும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீதையில் பல மார்க்கங்களை பற்றி காண இருக்கிறோம். என்னடா இது கண்ணன் மாத்தி மாத்தி சொல்கிறானே என்று நினைக்கக் கூடாது. பல வழிகளின் சங்கமம் கீதை. இது ஒரு magnum opus of philosophy.

இது வரை சாங்கிய முறைப்படி சொன்னேன். இனி, யோக மார்கத்தைப் பற்றி கூறுகிறேன்  என்று கூறுகிறான் கண்ணன்.

என்னதான் சொல்லுகிறான் என்று கேட்போமே.

https://bhagavatgita.blogspot.com/2019/01/239.html



Thursday, January 10, 2019

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?

பகவத் கீதை - 2.38 - எது பாவம்?



सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥

ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்

ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு

லாபா⁴லாபௌ⁴ = இலாபம் - அ இலாபம்

ஜயாஜயௌ| = ஜெயம் - அ ஜெயம்

ததோ = பின்

யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய

யுஜ்யஸ்வ = தயாராவாய்

ஏவம் = இவாறு

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

சுகம்  - துக்கம்
இலாபம் - நட்டம்
வெற்றி - தோல்வி

இவற்றை சரி சமமாகக் கருதி நீ காரியத்தில் ஈடுபட்டால், பாவத்தை அடைய மாட்டாய்.


இது என்ன சரியான போங்கா இருக்கே. இலாபம், நட்டம் , இன்பம், துன்பம் இது எல்லாவற்றையும் எப்படி சரி சமமாகப் பார்க்க முடியும் ? இன்பமும் துன்பமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.

இதெல்லாம் சும்மா வேலைக்கு ஆகாது, வெட்டி வேதாந்தம் என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசிப்போம்.

நம்மால் எவ்வளவோ சாதிக்க முடியும். இருந்தும் நாம் ஒன்றும் செய்வது இல்லை. அல்லது, நம்மால் செய்ய முடிந்தவற்றில் மிகச் சிறிய அளவே செய்கிறோம்.

உதாரணமாக...

உங்களால் ஒரு நல்ல புத்தகம் எழுத முடியுமா,  டாக்டர் பட்டம் வாங்க முடியுமா? ஒரு நல்ல காரியத்துக்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட முடியுமா, மாரத்தான் ஓட முடியுமா, புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியுமா ?

முடியும். அனைத்தும் முடியும். இருந்தும் நாம் செய்வது இல்லை.

ஏன்?

ஒரு வேளை புத்தகம் எழுதி, அது சரியாக வராவிட்டால், யாரும் வாங்காவிட்டால், நம்மைப் பார்த்து யாராவது எள்ளி நகையாடிவிட்டால், அவமானப் பட நேரிடும் என்று நினைத்து செய்யாமல் இருந்து விடுகிறோம்.

நம்மால எங்க டாக்டர் பட்டம் வாங்க முடியும் என்று என்று சோர்ந்து இருந்து விடுகிறோம்.

நம்மால் முடிந்த உயர்ந்த சிறந்த காரியங்களை செய்யாமல் இருக்கக் காரணம் தோல்வி பற்றிய பயம், அதனால் வரும் சங்கடங்கள்/வலிகள் / துன்பங்கள் பற்றிய சோர்வு, அதில் இருந்து வரும் இழப்புகள் இவற்றை எண்ணி  தள்ளிப் போட்டு விடுகிறோம் அல்லது செய்யாமலேயே இருந்து விடுகிறோம்.

இது ஒரு பக்கம் என்றால், செய்கின்ற காரியத்தை நாம் சிறப்பாக செய்வது இல்லை. காரணம், வெற்றி பற்றிய அதீத கற்பனை.

"என்ன செஞ்சு என்ன செய்ய...இந்த கம்பெனியில் ஒரு பதவி உயர்வு கிடையாது, சம்பள உயர்வு கிடையாது " என்று அங்கலாய்த்துக் கொண்டு சரியாய் வேலை செய்யாமல் விடுகிறோம்.

இப்படியாக வெற்றி, தோல்வி, இலாபம், நட்டம் , போன்றவை நம் முயற்சியை தடுத்து விடுகின்றன.

செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது, செய்யத் தயங்குகிறோம்.

வெற்றியோ தோல்வியோ,  நான் இதை முயன்று பார்ப்பேன், என் திறமை அனைத்தையும்  செலுத்தி வேலை செய்வேன். வருவது வரட்டும் என்று நினைத்து இறங்க வேண்டும்.

பலர் வருட ஆரம்பித்தில், "தினம் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வேன், 5 கிலோ எடையை குறைக்கப் போகிறேன் " என்று ஆரம்பிப்பார்கள்.  ஒரு மாதத்தில் எடை கொஞ்சமும் குறைத்திருக்காது. இது ஒண்ணும் சரி இல்லை என்று விட்டு  விடுவார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்று நல்ல காரியத்தை விட்டு விடுவது.

விடக் கூடாது. வெற்றியோ தோல்வியோ. தொடர்ந்து நம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

செய்ய வேண்டியவற்றை இலாப நட்டம் கருதி செய்யாமல் விடுவதுதான் பெரிய பாவம்.

Not realizing your potential is the biggest sin.

ஔவையார் இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள்

இயல்வது கரவேல் என்று. (அது பற்றி தனியாக ஒரு பிளாக் போடவும்..:))


இப்போது சொல்லுங்கள், இது வறட்டு , வெட்டி வேதாந்தமா அல்லது வாழ்க்கைக்கு  நல் வழி காட்டும் வேதாந்தமா என்று.

https://bhagavatgita.blogspot.com/2019/01/238.html

Monday, January 7, 2019

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில்

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில் 


हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||


ஹதோ = கொன்றால்

வா = மறுபக்கத்தில்

ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்

ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்

ஜித்வா = வென்ற பின்

வா = மறுபக்கம்

போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்

மஹீம் = இந்த உலகை

தஸ்மாது = எனவே

உத்திஷ்ட = எழுந்து நில்

கௌந்தேய = குந்தி புத்திரனே

யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்

க்ருதநிஸ்²சய: = துணிந்து,


இந்த யுத்தத்தில் இறந்தால் சுவர்க்கம் போவாய். வென்றால் இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். எனவே துணிந்து எழுந்து நின்று போர் செய்வாய். 


இந்த மாதிரி சில ஸ்லோகங்கள் இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு, கீதை வன்முறையை தூண்டுகிறது என்று விமரிசனம் செய்பவர்கள் உண்டு.

அர்ஜுனன், அன்பின் வயப்பட்டு, உறவினர்களை கொல்ல மாட்டேன்,  ஆசிரியரை கொல்ல மாட்டேன்  , எனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்கிறான்.

கண்ணன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? "அர்ஜுனா, நீ எவ்வளவு நல்லவன். யுத்தம் சரி இல்லை. அன்பான , அமைதியான வழியே சிறந்தது. சமாதானம் தான் நல்லது " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு...போர் செய், செத்தால் சுவர்க்கம், இல்லை என்றால் இந்த பூமி....என்று யுத்தம் வேண்டாம் என்று சொன்னவனை வலுக் கட்டாயமாக யுத்தத்தில் பிடித்து தள்ளுகிறான் கண்ணன்.

இது சரியா?

அமைதி வழியை விட்டு விட்டு, மக்களை கொன்று குவிக்கும் போர் செய்ய தூண்டும் கீதை ஒரு நல் வழி காட்டும் நூலா ?

இதற்கு உரை எழுதியவர்களும் கண்ணன் யுத்தம் செய்யத்தான் சொல்கிறான் என்று சொல்கிறார்கள்.

நான் அதை அப்படி பார்க்கவில்லை.

சற்று விரிவாக பார்ப்போம்.

ஒரு வேலையை செய்யும் போது அதில் வெற்றியும் வரலாம். தோல்வியும் வரலாம்.

தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. பெரிய வேலையை எடுத்தால், பெரிய வெற்றி வரலாம், அல்லது பெரிய தோல்வி வரலாம். தோல்விக்கு பயந்து நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

அதெல்லாம் என்னால் முடியாதுப்பா, நமக்கும் அதுக்கும் சம்பந்தம் கூட கிடையாது, எனக்கு அடைப்படையே தெரியாது..நான் எப்படி அதை செய்ய முடியும் என்று நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

மாறாக, துணிந்து ஒரு பெரிய வேலையை கையில் எடுத்து செய்ய ஆரம்பித்தால் , வெற்றி பெற்றால் நல்லது. அதில் தோல்வி அடைந்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சில உதாரணங்கள் பார்க்கலாம்.

இந்த வருடம் நான் 10 கிலோ எடை குறைக்கப் போகிறேன் என்று ஒரு பெரிய  குறிக்கோளை  கையில் எடுத்து அதற்க்காக வேலை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி என்று பல முயற்சிகள் செய்கிறேன். முடிவில் நான் 10 கிலோ எடையை குறைத்து விட்டேன் என்றால் மகிழ்ச்சி. ஒரு வேளை அதில் தோல்வி அடைந்து 8 கிலோ தான் குறைக்க முடிந்தால், அதுவும் நல்லது தானே. அது மட்டும் அல்ல இந்த உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி எல்லாம் என் உடலுக்கு பல நன்மைகளை தந்திருக்கும். என்னால் 10 கிலோ எடையை குறைக்க முடியாமல் போய் இருக்கலாம் (அது ஸ்வர்கம்). 8 கிலோ எடை குறைந்தது (இந்த உலகை ஆள்வாய்) நல்லது தானே.

ஒரு இளைஞன் வேலைக்குப் போய் கொண்டே மேலே படிக்க நினைக்கிறான். நேரம் இருக்காது. படிப்பது கடினமாக இருக்கும். ரொம்பவும் முயற்சி செய்கிறான். படித்து பட்டம் பெற்றால் நல்லது. ஒரு வேளை முடியவில்லை என்றால், படித்துப் பெற்ற அறிவு நல்லது தானே. ஸ்வர்கம் அல்லது இந்த உலகம் என்று கண்ணன் குறிப்பது நல்லது தான்.

வள்ளுவரும் இதையே கூறுகிறார்:

கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது

என்கிறார்.

குறிபார்த்து முயலை வேல் எறிந்து கொள்வதை விட யானையை எதிர்த்து போர் செய்து அதன் மேல் வேல் எறிந்து அது யானையை கொல்லாமல் போனாலும் பரவாயில்லை என்கிறார்.

யானை மேல் எறிந்த வேல் தப்பி இருக்கலாம். ஆனால், யானையோடு எப்படி போர் செய்வது, அந்த தைரியம், அந்த திட்ட மிடுதல், எல்லாம் அதில் கிடைத்த இலாபம் அல்லவா?

பெரிதாக நினையுங்கள். தோல்வியை பற்றி கவலைப் படாதீர்கள். பெரிய வேலையில் தோற்றாலும் அது கூட நல்லதுதான்.

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தால், வெள்ளியாவது கிடைக்கும். நல்லதுதானே.

என்னால் முடியாது, நான் தோற்று விடுவேன், எனக்கு திறமை இல்லை, அறிவு பத்தாது என்று நினைத்து  சோம்பி இருந்து விடாதீர்கள்.

பெரிதாக எதையாவது தொடங்குங்கள்.

வென்றாலும் தோற்றாலும் அது உங்களுக்கு நல்லதே.

என்ன செய்யப் போகிறீர்கள் ?

புது வீடு, புதிதாக எதையாவது அறிந்து கொள்வது, ஒரு கோடி பணம் சம்பாதிப்பது,  பத்து கிலோ எடை குறைப்பு ....என்று ஏதாவது தொடங்குங்கள்.

சரியா ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/237.html





Sunday, January 6, 2019

கீதை - 2.36 - பெரிய துன்பம்

கீதை - 2.36 - பெரிய துன்பம் 


अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्॥३६॥

அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||

அவாச்யவாதா = சொல்லத்தகாத

ச = மேலும்

பஹூந் = பல

வஷ்யந்தி = சொல்லுவார்கள்

தவா = உன்னை

அஹிதா:| = எதிரிகள்

நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்

தவ = உன்

ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை

ததோ = அதை விட

து³:க²தரம் = துன்பமானது

நு = இப்போது

கிம்  = வேறு எது


உன் எதிரிகள் உன் திறமையைப் பற்றி தரக் குறைவாக பேசுவார்கள். அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கிறது?

அன்றாடம் நாம் பல பொருள்களை பார்க்கிறோம். துணிமணி, நகை, நட்டு, மேஜை, நாற்காலி, டிவி, சாப்பாடு வகைகள் என்று எவ்வளவோ பார்க்கிறோம்.

ஒரு பொருள் என்பது என்ன?

உதாரணமாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம்.

மல்லிகைப் பூ என்றால் என்ன ?

அது மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்தில் இருக்கும், நல்ல மணம் இருக்கும், அதன் காம்பு பச்சை நிறத்தில் இருக்கும், சின்னதாக இருக்கும் என்று அதன் குணங்களை சொல்லுவோம்.

சரி. அதில் கொஞ்சம் குணங்களை மாற்றி பார்ப்போம்.

கருப்பாக இருக்கும். பெரிதாக இருக்கும். கரடு முரடாக இருக்கும். நாற்றம்  பக்கத்தில்  போக முடியாது என்று இருந்தால், அதை மல்லிகை என்று சொல்லுவோமா ?

மாட்டோம் அல்லவா ?

எனவே, எந்த ஒரு பொருளையும் நிர்ணயம் செய்வது அதன் குணங்கள் தான் என்று  புரிகிறது அல்லவா ?

இட்லி என்றால் இப்படி இருக்கும். ஐஸ் கிரீம் என்றால் வேறு சில குணங்கள் இருக்கும்.

பொருள்கள் என்பது குணங்களின் தொகுப்பு அல்லவா ?

பொருள்கள் மட்டும் அல்ல, மனிதர்களும் அப்படித்தான்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ? உங்கள் குணங்களை பட்டியல் இட்டால் தான் நீங்கள் யார் என்று தெரியும்.

நீங்கள் படித்த படிப்பு, வேலை, ஆணா பெண்ணா, உயரமா குள்ளமா, கறுப்பா சிவப்பா, அன்பானவரா, முணுக்கென்றால் கோபம் வருமா..என்று பல குணங்களின் தொகுதிதான் ஒவ்வொருவரும்.

அந்த குணங்கள் மாறிப் போனால், ஆள் மாறிப் போவான் ?

"அவனா இப்படிச் செய்தான்...இருக்காது...அவன் அப்படிப் பட்ட ஆள் இல்லை " என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

"அவன் அப்படிச் செய்யக் கூடிய ஆள் தான்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உங்களை நிறுவுவது உங்களின் குணம்/திறமை. அந்த திறமையை அல்லது குணத்தை மாற்றி போட்டால் நீங்கள் , நீங்களாக இருக்க மாட்டீர்கள். ஆள் அடையாளம் இல்லாமல் போய் விடும். உங்களை யார் என்று அடையாளம் காட்ட முடியாமல் போய் விடும்.

அதை விட பெரிய துன்பம் கிடையாது என்கிறான் கண்ணன்.

"நீ எல்லாம் ஒரு அப்பாவா/அம்மாவா/கணவனா/மனைவியா?" என்ற சொல் உங்களை நோக்கி கூறப் பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதை விட பெரிய துன்பம் இருக்குமா ?

எது உங்களை நிலை நிறுத்துகிறதோ, அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

அது தான் உங்கள் அடையாளம். உங்கள் விலாசம்.

அதை நழுவ விட்டால், துன்பம் தான்.

யோசித்துப் பாருங்கள்.

https://bhagavatgita.blogspot.com/2019/01/236.html

Friday, January 4, 2019

கீதை - 2.35 - காரணமும் காரியமும்

கீதை - 2.35 - காரணமும் காரியமும் 



भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्॥३५॥

ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||

ப⁴யாத் = பயத்தினால்

ரணாது = போர்க்களத்தை

உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று

மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்

த்வாம் = உன்னை

மஹாரதா²:|  = மஹா இரதர்கள்


யேஷாம் = அவர்களின்

ச = மேலும்

த்வம் = உன்னை

பஹுமத் = பெருமை மிக்க

பூத்வா = செய்த பின்

யாஸ்யஸி = நீ அடைவாய்

லாக⁴வம் = சிறுமை

பயத்தினால் நீ போரை விட்டு விலகி விட்டதாக இந்த மஹா இரதர்கள் கருதுவார்கள். அவர்களின் நன் மதிப்பை பெற்ற நீ , இதனால் சிறுமை அடைவாய்.

ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.  ஆனால், உலகம் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாது. கடமை தவறிய செயலை மட்டுமே பார்க்கும்.

உதாரணமாக,  தேர்வுக்கு முன்னால் உடல் நிலை மிக மோசமாக போய் இருக்கலாம், வீட்டில் நெருங்கிய உறவினர் யாராவது தவறிப் போய் இருக்கலாம். அதனால் தேர்வை சரியாகி எழுத முடியாமல் , அதில் தவறியோ அல்லது மிகக் குறைவான மதிப்பெண்ணோ வாங்கி இருக்கலாம்.

உலகம் அதை எல்லாம் கேட்காது. சரியாக படிக்கவில்லை, அதனால் நல்ல மதிப்பெண்  வாங்கவில்லை. அல்லது , அறிவு போதவில்லை எனவே மதிப்பெண் வாங்கவில்லை  என்று தான் சொல்லும்.

கடமை தவறியதற்கு காரணங்களை இந்த உலகம் கேட்டுக் கொண்டு இருக்காது.

அர்ஜுனன் போர் செய்ய மறுத்தது உறவினர்கள் மேல் உள்ள பாசத்தால், ஆசிரியர் மேல் உள்ள  மரியாதையால். ஆனால், உலகம் அதை எல்லாம் கவனிக்காது. கோழை, பயந்தாங்குள்ளி அதனால் தான் போர் செய்யவில்லை என்று தான்  தூற்றும். "அடடா, பாசக்கார பயலா இருக்கானே" என்று சொல்லாது.

கடமையை செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தையும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது.

கடமையை செய்தே ஆக வேண்டும். அதில் தவறினால், பழிச் சொல் வரும். "ஐயோ பாவம்  இந்த இந்த காரணங்களால் கடமையை செய்ய முடியவில்லை. பரவாயில்லை" என்று உலகம் ஒரு போதும் மன்னிக்காது.

கடமையை செய்யவில்லை என்றால் பழிச் சொல்லை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அர்ஜுனனுக்கே இந்தப் பாடு என்றால் நாம் எம்மாத்திரம் ?

சரிதானே?

https://bhagavatgita.blogspot.com/2019/01/235.html

கீதை - 2.34 - ஸ்வதர்மமும் இகழும்

கீதை - 2.34 - ஸ்வதர்மமும் இகழும் 



अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते॥३४॥

அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||

அகீர்திம்  - கீர்த்தி என்றால் புகழ். அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்

சா  - மேலும்

அபி  - அது மட்டும் அல்லாமல்

பூ⁴தாநி  - மக்கள்

கத²யிஷ்யந்தி  - கூறுவார்கள்

தே  - உன்னை

அவ்யயாம்|  - நீண்ட காலம் இருக்கக் கூடிய

ஸம்பா⁴விதஸ்ய - புகழுடைய

 சா  - மேலும்

அகீர்தி -  இகழ்

மரணாத³தி - மரணத்தை விட

அரிச்யதே = கொடுமையானது


இந்த உலகம் உன்னை தூற்றும். புகழ் பெற்ற நீ, அடையப் போகும் இகழ், மரணத்தை விட கொடியது.


நாம் , நமது கடமையை, ஸ்வதர்மத்தை செய்யாவிட்டால் நமக்குத் தானே துன்பம். பரவாயில்லை. நான் அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் கடமையை செய்ய மாட்டேன் என்று சிலர் இருக்கலாம்.

எனக்கு என்ன, ஏழேழு தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. எதுக்கு நான் கஷ்டப்படனும்? பேசாம உட்கார்ந்து சாப்பிடலாமே என்று நினைக்கலாம்.

நம் ஸ்வதர்மம் என்பது நம்மோடு மட்டும் முடிந்து போகக் கூடிய ஒன்று அல்ல. அதில் வரும் இலாபமோ நட்டமோ நம்மை மட்டும் பாதிப்பது அல்ல. அது மற்றவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக இந்த சமுதாயத்தை பாதிக்கிறது.

வண்டி ஓட்ட வேண்டிய ஓட்டுநர், எனக்கு சோர்வாக இருக்கிறது, தூக்கம் வருகிறது என்று வண்டியை ஓட்டும் போது தூங்கினால் என்ன ஆகும். வண்டியில் பிரயாணம் செய்பவர் அனைவரும் போய் சேர்ந்து விடுவார்கள் அல்லவா.

ஒரு ஆசிரியர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும்  கெட்டுப் போய்வ் விடுவார்கள்

மருத்துவர் தன் கடமையை செய்யவில்லை என்றால், நோயாளி மரித்துப் போவான்.

இப்படி நம் ஸ்வதர்மம் இந்த உலகோடு சேர்ந்து இருக்கிறது.

நாம் நம் கடமைகளில் இருந்து விலகினால் அது நம்மை மட்டும் அல்ல உலகையும் பாதிக்கும்.

அது மட்டும் அல்ல, நாம் இப்போது செய்யும் ஒரு தவறு வரும் காலத்தில் யார் யாரையெல்லாமோ பாதிக்கும்.

அதன் விளைவுகள் உடனடியாக இருக்காது. பின் எப்போதாவது வரும்.

எனவேதான் கண்ணன் சொல்கிறான்

" புகழ் போய் இகழ் வருவது மட்டும் அல்ல, வருங்கால சந்ததிகளும் உன்னை இகழும் "

என்று.

ஸ்வதர்மம் நம்மை இந்த உலகோடு இணைப்பது.

அதை சரியாகச் செய்தால் இந்த உலகம் கொண்டாடும். இல்லை என்றால் தூற்றும்.

ஸ்வதர்மம் பற்றி ஆழமாக சிந்தியுங்கள்.


https://bhagavatgita.blogspot.com/2019/01/234.html

Thursday, January 3, 2019

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால்

கீதை - 2.33 - ஸ்வதர்மத்தை செய்யாமல் விட்டால் 



अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि॥३३॥

அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||


அத = மேலும்

சேத் = ஆனால்

த்வம் = நீ

இமம் = இந்த

த⁴ர்ம்யம் = சரியான

ஸங்க்³ராமம் = படை, யுத்தம்

ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
 |
தத: = அதன் பின்

ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம்

கீர்திம் = புகழ்

ச = மேலும்

ஹித்வா = விட்டபின்

பாபம் = பாவம்

அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

||2-33||


நீ இந்த தர்ம யுத்தத்தை செய்யவில்லை என்றால் உன் ஸ்வதர்மத்தையும் புகழையும் அழித்த பாவத்தை அடைவாய் 

எப்போதாவது நமக்கு துன்பம் வந்தால், நாம் யார் யாரையோ, எது எதையோ நொந்து கொள்கிறோம். 

நம் பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர்கள், உயர் அதிகாரி என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம். சில சமயம் கடவுளை கூட நிந்திக்கிறோம். விதியின் மேல் பழி போடுகிறோம். 

பின் எப்படியோ தத்தி தள்ளாடி அந்தத் துன்பத்தை விட்டு கரை கிடக்கிறோம்.

அந்தத் துன்பம் ஏன் வந்தது என்று நாம் என்றுமே சரியாக உணர்ந்து கொள்வது இல்லை. அது மட்டும் அல்ல, இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் அறிந்து கொள்வதில்லை. 

துன்பம் ஏன் வருகிறது ?

ஸ்வதர்மத்தை கை விடுவதால் துன்பம் வருகிறது. 

நம் கடமையை நாம் சரியாக செய்யாவிட்டால் துன்பம் கட்டாயம் வரும். 

நமக்கு துன்பம் வந்து விட்டால், எங்கோ, எப்போதோ நாம் கடமை தவறி இருக்கிறோம் என்று  உணர வேண்டும். 

யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த ஒவ்வொரு துன்பத்துக்கும் அடி நாதம்  செய்யத் தவறிய கடமைகளாகத்தான் இருக்கும். 

எப்போதோ வகுப்பை புறம் தள்ளி விட்டு சினிமாவுக்கு போனது, அதனால் மதிப்பெண் குறைந்தது, அதனால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வேலை கிடைக்காமல் போனது, அதனால் நல்ல வருமானம் இல்லாமல் போனது  என்று இன்றைய வறுமைக்குக் காரணம் முன்பு தவறிய கடமை. 

"ஆ" என்று வாயைத் திறக்கச் சொல்லி அதற்குள் ட்ரில் பண்ணி, ஊசியை வைத்து குத்தி, பல்லை பிடுங்கும் வலிக்கு பின்னால் இருப்பது சாப்பிட்ட பின் வாய்  கொப்பளிக்க வேண்டும், படுக்கப் போகும் முன் பல் விளக்க வேண்டும் என்ற  கடையில் இருந்து தவறிய குற்றமாக இருக்கும். 

ஆழமாக யோசித்தால் தெரியும் ஒவ்வொரு துன்பத்துக்கு பின்னாலும் ஒரு தவறிய  கடமை இருக்கும். 

சரி. அது போகட்டும்.  அதை இப்போது ஒன்றும் செய்ய முடியாது. 

இனிமேல் துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

மிக எளிதான வழி - இனி மேல் கடமை தவறக் கூடாது. 

ஸ்வதர்மத்தை விட்டு விடக் கூடாது. 

அப்படி விட்டால், புகழ் அழியும், துன்பம் வரும்.

சரியாத்தான் இருக்கும் போல இருக்குல ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/233.html