Saturday, July 29, 2023

பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும்

 பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும் 


ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।

सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥


த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/262.html


(to continue reading, please click the above link)


த்யாயதோ = சிந்திப்பவர்கள் 

விஷயாந் = இந்த உலகில் 

 

பும்ஸ: = அவர்கள் 

ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா = தொடர்பு, தொடர்பினால், பற்றினால் 

த்ஸு = அவற்றில் 

உஞ்ஜாயதே  = உதிக்கிறது 

காம: = ஆசையினால் 

காமாத் = அந்த ஆசையினால் 

க்ரோதோ = கோபம் 

அபிஜாயதே = வருகிறது  


அடுத்த ஐந்து ஸ்லோகங்களில் மனித மனம் எவ்வாறு சலனப் படுகிறது, அதனால் வரும் சிக்கல்கள் பற்றி விளக்குகிறது. 


மனம் எதை தொடர்ந்து சிந்திக்கிறதோ. அதன் மேல் ஆசை வருகிறது. 

ஆசையில் இருந்து பற்று வருகிறது. 

பற்றில் இருந்து கோபம் வருகிறது. 


நாம் நினைப்போம், கோபம் என்றால் ஏதோ சத்தம் போடுவது, சண்டை போடுவது, சாமான்களை தூக்கி எறிவது, என்றெலாம் நினைப்போம். "எனக்கு கோபமே வராது. நான் யாரையும் அதிர்ந்து கூட பேசுவது கிடையாது" என்று சிலர் நினைக்கலாம். 


கோபம் என்பது வெளியில் செல்ல வேண்டும் என்றில்லை. 


நான் வேற படிப்பு படித்து இருந்தால், பெரிய ஆளாயிருப்பேன். என் பெற்றோர் வேறு எதையோ படிக்க வைத்ததால் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று பெற்றோர் மேல் கோபம் வரலாம். 


நல்ல பெண்ணை/கணவனை மணந்து இருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன் என்று வாழக்கை மேல் கோபம் வரலாம். 


பொருள்கள் மற்றும் அனுபவங்களை பற்றி சிந்தித்தால், அதன் மேல் பற்று வரும், பற்று வந்தால் ஆசை வரும், ஆசை வந்தால், அது கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது கிடைக்க தாமதம் ஆனாலோ கோபம் வரும்.


இது நம் மனதில், புத்தியில் வரும் நிகழும் முதல் சலனம் அல்லது மாற்றம். 


இவை நம் புத்தியை தடுமாறச் செய்துவிடும். 


அர்ஜுஜனுக்கு அரசின் மேல், செல்வத்தின் மேல் ஆசை இல்லை ஆனால் தாத்தா, ஆசிரியர் மேல்பற்று. அந்த பற்று அவனை தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கிறது. புத்தி தடுமாற்றம் நிகழ்கிறது. தடுமாறிய புத்தியில் இருந்து வரும் முடிவுகள் தடுமாற்றமாகத்தானே இருக்கும். அது எப்படி சரியாக இருக்கும்?




 

Tuesday, July 25, 2023

பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு

 பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு 


तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।

वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥


தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|

வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/261.html


(please click the above link to continue reading)


தாநி = அவர்கள் 


ஸர்வாணி = எல்லோரும் 


ஸம்யம்ய = கட்டு படுத்திய பின் 


யுக்த = இணைந்த பின் 


ஆஸீத = அமர்ந்து 


மத்பர:| = பர என்றால் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம். மத் என்றால் நான், என்னில், தன்னுள்.. இதை பின்னால் விரிவாகப் பார்ப்போம். 


வஸே = வசப்படுத்தி 


ஹி = உறுதியாக 


யஸ்யே = அவர்களின் 


இந்த்³ரியாணி = புலன்கள், இந்திரியங்கள் 


தஸ்ய = அவர்கள் 


ப்ரஜ்ஞா = அறிவு, முடிவு, 


ப்ரதிஷ்டி²தா = உறுதியுடன் இருக்கும் 


அறிவில் சிறந்தவர்கள் கூட, புலன்களால் உந்தப்பட்டு தவறான முடிவுகள் எடுத்து விட முடியும் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். 


சரி, அப்படி என்றால் என்னதான் செய்வது?


புலன்களை எல்லாம் விட்டு விட முடியுமா?  பசிக்கிறது என்று வயிறு சொல்லும் போது, சாப்பிடாமல் எப்படி இருப்பது?  ஒவ்வொரு புலனும் ஏதேனும் ஒன்றை பற்றுகிறது. அவற்றின் மூலம் நமக்கு இன்பம் கிடைக்கிறது. 


புலன் இன்பத்தை விட்டு விட்டால் பின் வாழ்வது எதற்கு? கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறதா?


இல்லை. 


புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவம் என்பது அறிவின் கீழ் வர வேண்டும். 


எப்படி என்று சிந்திப்போம். 


இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக எந்நேரமும், பார்க்கும் போதெல்லாம் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?  நாக்கு சொல்லும். அதன் பின்னால் போக முடியுமா?  சிந்திக்கிறோம் அல்லவா?  இது நல்லது அல்ல. அளவுக்கு மேல் உண்ணக் கூடாது என்று அந்த புலன்களை கட்டுக்கொள் கொண்டு வருகிறோம் அல்லவா?


நாக்குக்கு சொன்னது தான் மற்ற புலன்களுக்கும். அனுபவம் என்பது அறிவோடு சேர்ந்து நிகழ வேண்டும். 


காமம் வேண்டும்தான். அது நல்லது. சுகமானது. அதற்காக மனம் போனபடி எல்லாம் போனதால் இராவணன் அழிந்தான். அவனிடம் அறிவு இருந்தது. ஆனால், அது புலன்களுக்கு கீழே சென்று விட்டது. 


அது சரிதான், ஆனால் அது எங்கே இந்த ஸ்லோகத்தில் வருகிறது?


 யுக்த ஆஸீத மத்பர:| வஸே


யுக்த என்றால் இணைத்து, சேர்த்து என்று அர்த்தம். யோகம் என்பது இணைப்பது. 


ஆசீத - அமர்ந்து. அதாவது நிதானமாக யோசித்து. 


மத்பர = பர என்றால் உயர்ந்த, சிறந்த. மத் என்றால் தன்னில், என்னில், தனக்குள் 


இங்குதான் சிக்கல் வருகிறது. இங்கே, பொருள் சொல்பவர்கள், "மத்" என்பதை கண்ணன் தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, புலன்களை என்பால் (கண்ணன்) செலுத்தி என்று பொருள் கொள்கிறார்கள்.   இறை பக்தி உள்ளவர்கள் கூட தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இராவணன் செய்யவில்லையா?


அதை விட, தன்னில் என்பதை நம்மிடம் உள்ள சிறந்த விடயத்தில் செலுத்தி என்று பொருள் கொண்டால் அது நம் அறிவை குறிக்கும். நம்மில் சிறந்தது எது என்றால் நம் அறிவு, நம் ஞானம்தான். சிறந்தது. புலன்களை அறிவோடு இணைத்து செயல்பட வேண்டும் என்பது சரியான பொருளாக இருக்கும். 


யுக்த என்றால் இணைத்து - புலன்களை அறிவோடு இணைக்க வேண்டும். புலன்கள் அறிவின் கட்டுப்பாட்டுகுள் இயங்க வேண்டும். அதுவும் உறுதியான அறிவாக இருக்க வேண்டும். 


பக்தி சார்ந்து பொருள் சொல்வதாக இருந்தால், புலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து என்று பொருள் சொல்லலாம். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். 



Monday, July 24, 2023

பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி

 பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி 


यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।

इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः


yatato hy api kaunteya puruṣasya vipaścitaḥ

indriyāṇi pramāthīni haranti prasabhaṃ manaḥ


யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|

இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/260.html


(pl click the above link to continue reading)


யததோ = கடின விடா முயற்சி 

ஹியபி  = இருந்தாலும் 


 கௌந்தேய = குந்தி மகனே 


புருஷஸ்ய = ஒருவன் 


விபஸ்²சித: = அறிவுள்ள 


இந்த்³ரியாணி = புலன்கள் 


ப்ரமாதீ²நி = அலைகழிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு 


ஹரந்தி = கொண்டு செல்லப்படும் 


ப்ரஸப⁴ம் = வலுக்கட்டாயமாக 


மந: = மனம், புத்தி 


நாம் வாழ்வில் பல முடிவுகளை எடுக்கிறோம். அவை அறிவு சார்ந்த முடிவா? உணர்வு சார்ந்த முடிவா என்று எப்படி அறிந்து கொள்வது. 


கோபம் வரும் போது, ஏதேதோ பேசி விடுகிறோம். என்னதான் படித்து, அறிவு இருந்தாலும், அந்த நேரத்தில் புத்தி மந்தமாகிப் போய் விடுகிறது அல்லவா?


உணவு கட்டுப்பாடு வேண்டும். கண்டதையும் தின்னக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். இருந்தும், ஒரு நல்ல தின் பண்டத்தைக் கண்டால் கை தானே போகிறது அல்லவா?  அறிவு எங்கே போனது?


எல்லாம் படிப்போம். எல்லாம் தெரியும். ஆனால், ஒரு சில நேரத்தில் புலன்கள் நம் புத்தியை தன் பாட்டுக்கு இழுத்துச் சென்று விடும். 


புலன்கள் யானை மாதிரி. புத்தி என்பது அதை கொண்டு செல்லும் யானை பாகன் மாதிரி. பாகன் எப்படித்தான் ஓட்டிச் சென்றாலும், யானைக்கு ஒரு கடையில் சென்று பழத்தை தின்ன வேண்டும் என்று ஆசை வந்து விட்டால், பாகன் என்ன முயன்றாலும் அதை கட்டுப் படுத்த முடியாது. 


நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், நம் முடிவுகள் எல்லாமே சரியான முடிவுகள் என்று நாம் சொல்ல முடியாது. நம்மை அறியாமல், நம்மையும் மீறி நாம் சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். 


அப்படி என்றால் என்ன செய்வது?


முதலில், நான் எடுத்த முடிவு சரிதான் என்று சாதிக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவு உணர்வுகளால் உந்தப்பட்டு, புலன்களால் இழுத்துச் செல்லப்பட்ட முடிவாக இருக்கலாம். அடம் பிடிக்கக் கூடாது. 


இரண்டாவது,  பெரிய முடிவுகளை நம்மைவிட அறிவில் சிறந்தவர்களை கொண்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயம், ஆசை, போன்றவற்றால் உந்தப்பட்டு தவறான பாதையில் சென்று விடக் கூடாது. 


இங்கே, அர்ஜுனன் போர் செய்ய மாட்டேன் என்கிறான். அது சரியான முடிவா?  பாசம் என்ற உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவு எடுக்கிறான். அதன் விளைவுகள் அவனுக்குத் தெரியவில்லை. 


மூன்றாவது, முடிவுகள் எடுக்கும் முன், சில கோட்பாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். எதனால், எதற்கு இந்த முடிவை எடுக்கிறோம் என்று. இல்லை என்றால், அறிவு பற்ற ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும். 


உதாரணமாக, அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும்?  போர் செய்யாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கிறது. போர் செய்ய என்ன காரணம்?


அவன் ஒரு க்ஷத்ரியன். தர்மத்துக்காக போராட வேண்டியது அவன் கடமை. அந்த கடமை, பொறுப்பு, தர்மம், அறம் என்ற கோட்பாடுகள் இல்லை என்றால், புலன்கள் செல்லும் பக்கம் எல்லாம் போக வேண்டி இருக்கும். 


கண்ணன் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  "படித்து அறிந்த அறிஞனைக் கூட, புலன்கள் ஒரு கண நேரத்தில் இழுத்துச் சென்று விடும் " என்று. 


சில கொள்கைகளை, சில வரைமுறைகளை வைத்துக் கொண்டு அதன் படி வாழப்  பழக வேண்டும்.