Monday, February 29, 2016

கீதை - 13.31 - செயல் அற்றவன், பற்று அற்றவன்

கீதை - 13.31 - செயல் அற்றவன், பற்று அற்றவன் 


अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥

அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: |
ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||

அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்

நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்

பரமாத்மா = பரமாத்மா

அயம் = அவன்

அவ்யய: = மாற்றமில்லாமல்

ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்

அபி =  மேலும்

கௌந்தேய = குந்தி மைந்தனே

ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை

ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை

ஆதியும் இல்லாமல், குணமும் இல்லாததால் இந்த பரமாத்மா கேடுகள் அற்றவன். இவன் உடலினுள் இருந்தாலும் செயல்பாடுகள் அற்றவன், பற்று அற்றவன். 


ஆதி இல்லாதது ...தொடக்கம் இல்லாதது எது ? எதற்குமே ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே ? ஒன்று இருக்கிறது என்றால் என்றோ அது தோன்றி இருக்கத்தானே  வேண்டும் ? தொடக்கமே இல்லாதது எது ? நம்மால் அப்படி ஒன்றை  சிந்திக்க முடிவது இல்லை. 

இருக்கிறது. நாம் அன்றாடம் அதை காண்கிறோம், உணர்கிறோம்.

உண்மை. சத்யம். இதற்கு தொடக்கம் கிடையாது. உண்மை நிரந்தரமானது. 

உதாரணமாக, அறிவியல் உண்மைகளை எடுத்துக் கொள்வோம். புவி ஈர்ப்பு விசை. பொருள்கள் ஒன்றை ஒன்று இழுக்கின்றன என்ற உண்மை எப்போதும் இருக்கிறது. நியூட்டன் கண்டு பிடிப்பதற்கு முன்னாலும் அது அப்படித்தான் இருந்தது. 

அறிவியல் உண்மைகள் மாறலாம். மாறாத உண்மைகள், சத்தியங்கள் இருக்கத்தான்  செய்கின்றன. 

குணம் இல்லாதது. உண்மைக்கு ஏது குணம்.  அது உண்மை அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை.  குணம் என்பது தனித்து நிற்க முடியாது. ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் குணம் என்பதை  நிர்ணயம் பண்ண முடியும். அந்த பெண் ஒல்லியாக இருக்கிறாள் என்றால் வேறு யாரோ குண்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். எல்லோருமே ஒரே மாதிரியாக இருந்தால் ஒல்லி, குண்டு என்ற பாகு பாடு இருக்காது. உண்மையை ஒப்பிட முடியாது. இது நல்ல உண்மை, இது கெட்ட உண்மை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. 

 நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் அந்த உண்மையான பொருள் கேடுகள் அற்றது. 

எப்படி ? இந்த உடலினால் நாம் எவ்வளவோ கெடுதல்கள் செய்கிறோம். கொலை, கொள்ளை, திருட்டு, பொறாமை, புறம் சொல்லுதல், காமம், கோபம்  என்று ஆயிரம் குற்றங்களை இந்த உடலினால் செய்கிறோம். உடலுக்குள் இருக்கும் அது எப்படி இவற்றால் கெடாமல் இருக்க முடியும் ?

மேலும், கீதை சொல்கிறது "அவன் பற்று அற்றவன்".

இந்த கேள்வியை ஒருமுறை இராம கிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு மாணவன் கேட்டான். உடலுக்குள் இருக்கும் அது உண்டலின் மேல் பற்று கொண்டது இல்லை, உடல் செய்யும் தீமைகள் அதைப் பற்றாது என்று சொல்கிறீர்களே அது எப்படி என்று. 

அவர், அந்த சீடனை இரவு வரச் சொன்னார். "நாம் இரவு உணவு  உண்டு விட்டு இது பற்றி பேசுவோம் " என்றார். 

சீடனும், சரி என்று சொல்லிச் சென்றவன் இரவு வந்தான். 

நல்ல சர்கரைப் பொங்கல், நெய் வழிய வழிய செய்து இருந்தது. சீடனும், ருசித்துருசித்து சாபிட்டான்.

சாப்பாடு முடிந்த பின்னால், பிரமஹம்சர் சீடனுக்கு கையை கழுவிக் கொள்ள சீயக்காய் போடி கொடுத்தார்.  உணவில் நெய் அதிகம் இருந்ததால், கை எல்லாம் ஒரே வழ வழப்பு. சீடனும், சீயக்காய் போட்டு நன்றாக கழுவினான். 

பரமஹம்சர் மேலும் ஒரு கரண்டி பொடி கொடுத்தார்.

சீடன் "குருவே கையில் உள்ள நெய் பசை எல்லாம் நன்றாகப் போய் விட்டது. சீயக்காய் போதும் " என்றான். 

பரமஹம்சர்: சீடனே, எனக்குத் தெரியும் கை சுத்தமாகி விட்டது என்று. இது உன் நாக்குக்கு.

சீடன்: என்னது ? நாக்குக்கா ....? நாக்குக்கு யார் சீயக்காய் போடுவார்கள் 

பரமஹ்சர்: என்னப்பா , கையில் நெய் ஒட்டியது...வாய் வழியாக உண்டால் நாக்கிலும் ஓட்டும் தானே என்றார். 

சீடன் உண்மையை உணர்ந்து கொண்டான். நாக்கின் மேல் நெய் பட்டாலும் , நெய் நாக்கில் ஓட்டுவது இல்லை. 

அது போல , உடலின் மேல் அனுபவங்கள் சேர்ந்தாலும் அது உடலுக்குள் இருக்கும் அதைத் தீண்டுவது இல்லை. 

நான் அதை என்று சொல்லுவதற்குக் காரணம்,   இந்த சுலோகம் அது ஆத்மா என்று சொல்லவில்லை. நான் என்ற தன் உணர்வு (self  consciousness )என்பது பொருத்தமாக இருக்கும். அதற்கு ஒரு பெயரை தந்து விட்டால், பின் நம் மனம் அந்தப் பெயரைப் பிடித்துக்  கொள்ளும்.

ஆத்மா என்று சொல்லலாம்,உயிர் என்று சொல்லலாம், ஜீவாத்மா என்று சொல்லலாம், பரமாத்மா என்று சொல்லலாம்...

பெயரை விட்டு  விடுகிறேன். பெயர் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள். 

எந்த சொல்லுக்கும் மூன்று வேலை உண்டு. 

அந்த சொல் தரும் சப்தம், 
அந்த சப்தம் சுட்டும் பொருள் அல்லது செயல் 
அந்தப் பொருளின் பின்னால் இருக்கும் உணர்வு, தன்மை.

உதாரணமாக,

மனைவி  என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

முதலில் அந்த சொல்லின் சப்த்தம் நமக்கு கேட்கிறது. 

பின், அது மனைவி என்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. சப்தம் போய் விட்டது, பொருள் வந்து விட்டது. 

அடுத்த  கட்டம், அந்தப் பெண் பற்றிய  நினைவுகள், அவளின் குணங்கள் எல்லாம் வந்து நிற்கிறது. பொருள் போய் விட்டது, பொருளுக்கு பின்னால் இருக்கும்  உணர்வும்,அவளின் தன்மையும் நிற்கிறது. 

சிக்கல் என்னவென்றால், நாம் முதல் இரண்டு நிலையிலேயே நின்று விடுகிறோம். 

நம் உடலுக்குள் இருக்கும் அவன் , தோற்றம்  இல்லாதவன், பற்று இல்லாதவன், செயல் பாடுகள் இல்லாதவன். 

இதில் சிறப்பு என்ன என்றால், உடலுக்குள் இருக்கும் அது தான் நீங்கள். ஏனோ, இந்த உடல் தான் நீங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருகிறீர்கள். 

இல்லை. 

ஆகாய விமானத்தை ஓட்டும் விமானி, அந்த விமானம்தான் தான் என்று நினைப்பானா ? அவன் அதை செலுத்துகிறான். அவன் கட்டுப் பாட்டில் அது இயங்குகிறது. அவன் நில் என்றால் நிற்கும். போ என்றால் போகும். பற என்றால் பறக்கும். ஆனால், அந்த விமானிக்குத் தெரியும், தான் என்பது விமானம் அல்ல என்று. 

அந்த விமானத்திற்கு சக்கரம் பழுது ஆகலாம், இறக்கை எங்காவது உரசி கெட்டுப் போகலாம், ஆனால் அது அந்த விமானியை பாதிப்பது இல்லை. 

அது போல உங்கள் உடல் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கும். நில் என்றால் நிற்கும், தொடு என்றால் தொடும். ஆனால் நீங்கள் இந்த உடல் இல்லை. 

எவ்வளவுதான் ஆசையாக இருந்தாலும், பெருமையாக இருந்தாலும், சேரும் இடம் வந்த பின், விமானி விமானத்தை விட்டு இறங்கிப் போய் விடுவான். 


நீங்கள் இந்த  உடலை விட மிக மிக பெரியவர்கள். 

அதை உணருங்கள். அது தான் கீதையின் நோக்கம்.  













கீதை - 13.30 - நீங்கள் பிரமத்தின் ஒரு பகுதி

கீதை - 13.30 - நீங்கள் பிரமத்தின் ஒரு பகுதி 


यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥

யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||

யதா = எப்போது

பூத ப்ருதக் பாவ = பல்வேறு பூதங்கள்

ஏக ஸ்தம் = ஒன்றில் நிலை பெற்று இருக்கிறது

அ நுபஸ்யதி = என்பதைக் காண்பானோ

தத = அவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

விஸ்தாரம் = விரிந்த

ப்ரஹ்ம = பரந்து

ஸம்பத்³யதே= அடைகிறான்

ததா = அப்போது



அனைத்து பூதங்களும் ஒரே ஆதாரத்தைக் கொண்டது என்பதை அறிபவன் , அப்போது,  விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

வேற்றுமையே துன்பகளுக்குக் காரணம். வேறுபாடு தோன்றத் தோன்ற துன்பங்கள்  அதிகரிக்கும்.

நாட்டின் பெயரால், ஜாதியின் பெயரால், குலத்தின் பெயரால், மொழியின் பெயரால், கடவுள்களின் பெயரால் எத்தனை வேற்றுமைகள்.எத்தனை சண்டை சச்சரவுகள் ?

உலகம் பல்வேறு உயிர்களாலும், பொருள்களாலும் ஆனது போலத் தோன்றினாலும், அடிப்படையில் அது ஒன்றே தான்.

அது எப்படி ?

நானும், நீங்களும் ஒன்றாக முடியும் ?

முடியும். எப்படி என்று பார்ப்போம்.

ஒரு விஷயத்தை நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம் ? தெரிந்த ஒன்றை வைத்து  தெரியாத ஒன்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

உதாரணமாக , புலி எப்படி இருக்கும் என்றால் அது பூனை மாதிரி இருக்கும், கொஞ்சம் பெருசா இருக்கும்  அப்படினு சொல்லி புரியவைக்கலாம்.

அணுவை கண்ணால் பார்க்க முடியாது. நுண் அணு கருவி மூலமும் பார்க்க முடியாது . பின் எப்படி அதை நாம் அறிந்து கொள்வது. ஒரு மணல் துகள் இருக்கிறதே அதில் கோடியில்  ஒரு பங்கு இருக்கும் என்று சொன்னால் , அணுவை நேரில் பார்க்காமலேயே நம்மால் அணுவைப் பற்றி யூகித்து அறிய முடிகிறது அல்லவா, அது போல இந்த உலகம் ஏதோ ஒன்றால் ஆனது என்பதை நாம் சில உதாரணங்கள் மூலம் அறிய முடியும்.

நம் உடலில் வலது பக்கம், இடது பக்கம் என்று இருக்கிறது அல்லவா. வலது உயர்ந்தது , இடது தாழ்ந்தது என்று வைத்து இருக்கிறோம். இடது கையால் கொடுத்தால் மரியாதை குறைவு. இடது கை சுத்தம் செய்ய பயன்படுவது என்று வைத்து இருக்கிறோம்.

நம் உடலில், வலது எங்கே முடிந்து , இடது பாகம் எங்கிருந்து தொடங்குகிறது ?

இந்த இடத்தில் இருந்து வலது பக்கம் முடிகிறது, இங்கிருந்து இடது பக்கம் தொடங்குகிறது என்று கூற முடியாது அல்லவா. உடல் ஒன்று தான். நாம் தான் இடம் வலம் என்று பிரித்து வைத்து வைத்து இருக்கிறோம். அது மட்டும் அல்ல, வலது உயர்ந்தது, இடது தாழ்ந்தது என்றும் வைத்து இருக்கிறோம்.

உயர்ந்ததும், தாழ்ந்ததும் உடலின் கூறுகள் தானே. உடல் ஒன்று தானே ? இதில் வலது இடது என்ற பாகு பாடு இங்கிருந்து வந்தது ?

இடதிலிருந்து வலது தொடங்குகிறது. வலதில் இருந்து இடது தொடங்குகிறது. இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த உடல்.

பிரிவுக்கு  பின்னால் இருக்கும் ஒருமை புரிகிறதா ?

உயர்வும் தாழ்வும் ஒன்றுதான் என்று புரிகிறதா.

இது ஒரு உதாரணம்.

இந்த உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அமீபா, வைரஸ்  போன்ற ஒரு செல் உயிரில் இருந்து யானை போன்ற பெரிய விலங்குகளும் இருக்கிறது.

மணல் துகளில் இருந்து இமய மலை வரை இருக்கிறது.

நல்லவனும், வல்லவனும், இளைத்தவனும், எல்லாம் இருக்கிறார்கள்.

இருந்தும் எல்லாம் அடிப்படையில் அணுவினால் ஆனது என்று நமக்குத் தெரியும். இத்தனை பிரிவு இருந்தாலும், அனைத்தும் அணு என்ற ஒன்றால் ஆனது என்று நாம் நம்புகிறோம்.

இந்த உலகமும் இதில் உள்ளவை அனைத்தும் அடிப்படையில் ஏதோ ஒன்றால் ஆனது.

இதை அறிபவன் விஸ்தாரமான பிரமத்தை அடைகிறான்.

பிரமம் என்றால் விரிந்தது என்று பொருள்.

நீங்கள் யார் ?

உங்கள் கை மட்டுமா ? கால்கள் மட்டுமா ? கண்கள் மட்டுமா ? எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் நீங்கள் அல்லவா ? இதில் கை உயர்ந்தது, காது தாழ்ந்தது என்று நினைப்பீர்களா ? நினைக்க மாட்டீர்கள் அல்லவா .....அது போல, நீங்கள் இந்த பரந்து விரிந்த உலகின் ஒரு பகுதி என்று நினைத்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், என்ற பாகு பாடுகள் மறையும்.

விரிந்து பட்ட உலகின் ஒரு கூறு என்று அறிவீர்கள்.

காக்கை குருவி எங்கள் ஜாதி
காடு மலை எங்கள் கூட்டம்

என்றானே பாரதி, அது போல....இந்த உலகின் சக்கரவர்த்தி நீங்கள்.

ஏன் உங்களை  ஒரு நாட்டின், ஒரு ஜாதியின், ஒரு மொழியின், ஒரு இனத்தின் சின்ன  வட்டத்துக்குள் அடைத்துக் கொண்டு , அந்த வட்டத்துக்கு வெளியே உள்ளவர்களோடு முரண் படுகிறீர்கள் ?

வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு நீங்கள்.

பெருமிதம் கொள்ளுங்கள்.

கீதை உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.

இந்த புது உலகிற்கு உங்களை நீங்களே வரவேற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


Sunday, February 28, 2016

கீதை - 13.29 - செய்வது யார் ?

கீதை - 13.29 - செய்வது யார் ?


प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: |
ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||

ப்ரக்ருத்ய = பிரக்ரிதி

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

கர்மாணி = காரியங்களை

க்ரியமாணாநி = செய்கிறது

ஸர்வஸ = அனைத்து

ய: = எவன்

பஸ்யதி = இதை காண்கிறானோ

ததா = அப்படி

ஆத்மாநம் = ஆத்மா 

அகர்தாரம் = செய்வது இல்லை (கர்த்தா = செய்பவன் , அ - கர்த்தா = செய்யாதவன் )

ஸ = அவனே

பஸ்யதி  = காட்சி  உடையவன்


எங்கும் காரியங்கள் பிரக்ரிதியால் செய்யப் படுகின்றன.  எனவே, தான் கர்த்தா இல்லை என்று காண்பவனே உண்மையான காட்சி உடையவன். 


கர்மயோகத்தில், கடமையைச் செய், பலனில் நாட்டம் கொள்ளாதே என்று கீதை கூறியது.

யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் அதை.  பலன் இல்லாவிட்டால் , எதற்கு கடமையைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சரியான விடை கர்மயோகத்தில் இல்லை.

இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது.

காரியங்கள் யாரால் செய்யப்படுகிறது ?

நான் காரியங்களைச்   செய்கிறேன் என்றால், என்ன அர்த்தம் ?

என் கைகள் காரியங்களைச் செய்கின்றன, என் கண் பார்க்கிறது, என் கால் நடந்து செல்கிறது.

ஆனால் இவைகள் தானே செய்வது இல்லை. இவற்றை இயக்குவது மூளை. அந்த  மூளையை இயக்குவது எது ?

அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....ஆத்மா, உயிர், புருஷன் ...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அது செயல்படுத்துகிறது  ஆனால் செயல்படுவது இல்லை.

அது எப்படி ?

அதுவும் என்னுள் ஒரு பகுதிதானே. அதுவும் சேர்ந்துதானே காரியம் செய்கிறது. எப்படி அது மட்டும் செய்யவில்லை என்று சொல்ல முடியும் ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் இரயிலிலோ அல்லது ஆகாய விமானத்திலோ பயணம் செய்து இருக்கிறீர்களா ?

உங்கள் சக பயணி நகர்வதாக உங்களுக்குத் தெரிவது இல்லை அல்லவா. வெளியில் பார்த்தால் தான் தெரியும்  எல்லோரும் நகர்வது.

நகர்வதற்கு , நகர்தல் என்ற செயலுக்கு நகராத ஒன்று தேவைப் படுகிறது அல்லவா ?

செயல் நிகழ , செயல் படாத ஒன்று வேண்டும்.

செயல் நிகழ்வதற்கு இடைவெளி வேண்டும், கால வித்தியாசம் வேண்டும், செய்பவன், செய்யாதவன் என்ற வேறுபாடு வேண்டும்.

வேற்றுபாடுகள் அற்ற ஒன்றுக்கு செயல் இல்லை.

அனைத்திலும் இருப்பது ஒன்று என்றால், அது எவ்வாறு செயல் படும். அதற்கு செயல் இல்லை.

செயல் நிகழ பிரிவு வேண்டும்.

சரி, அது எப்படியோ போகட்டும்.

பிரகிரிதியில் செயல் நிகழ்கிறது.

புருஷன் செயல் அற்று இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்...அதனால் என்ன ? அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

முக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான செய்தி இருக்கிறது.

செயல்கள் செய்வது நான் இல்லை. நான் கர்த்தா இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால், என்னவெல்லாம் நிகழும் ?

முதலாவது, செயலின் விளைவுகளின் மேல் ஆசை இருக்காது. வருவது வரட்டும் என்ற நிலை வரும்.

இரண்டாவது, கர்மத்தின் விளைவில் பற்று இல்லாவிட்டால், ஏமாற்றம் இல்லை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் இல்லை, மற்றவனுக்கு கிடைத்துவிடுமோ என்ற  பொறமை இல்லை, அவனுக்கு கிடைத்து எனக்கு கிடைக்கமால் போய் விடுமோ என்ற ஏக்கம் இருக்காது.

மூன்றாவது, நான் செய்கிறேன், என்னால் நிகழ்கிறது என்ற ஆணவம் போய் விடும். ஆணவம் போனால், செயலின் வெற்றியில் எனக்கு பங்கு வேண்டும் என்ற சுயநலம் போகும்.

நான்காவது, செயல்கள் என் மூலம் நிகழ்கின்றன. என்னால் நிகழ்வது இல்லை . நான் செயலற்றவன் என்று தோன்றும் பொழுது  செயலைப் பற்றிய விமர்சினங்கள் நம்மை  பாதிப்பது இல்லை.

எனவே, செயல்கள் என் மூலம் நிகழ்கிறது. நான் நிகழ்த்துவது இல்லை என்ற இந்த சித்தாந்ததை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.

மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்கு வழி காட்டும் தத்துவம்.




Friday, February 26, 2016

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக இருப்பவன்

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக  இருப்பவன்  


समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥

ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் |
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||


ஸமம்= சமமாக

பஸ்யந்ஹி = பார்த்தல்

ஸர்வத்ர = எங்கும்

ஸமவஸ்தி = சம் + அவ + ஸ்தித =  நிலைத்து இருக்கும்

ஈஸ்வரம் = ஈஸ்வரனை

ந = இல்லை

ஹி நஸ்தி = தன்னை துன்பப் படுத்துதல் 

ஆத்மநாத்மாநம் = ஆத்மாவினால் ஆத்மாவை , தன்னைத் தானே

ததோ = அதனால்

யாதி = அடைகிறான்

பராம் கதிம் = பரம கதியை, உயர்ந்த பாதையை


எங்கும் ஈசன் சமமாக இருப்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான். அப்படிப் பட்டவன் உயர்ந்த பாதையை அடைகிறான். 

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள்.

நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? நாம் ஏன் வருத்தப் படுகிறோம் ?

துன்பமும் வருத்தமும் எங்கிருந்து வருகின்றன.

துன்பமும் வருத்தமும் இரண்டு வழிகளில் அல்லது இரண்டு இடத்தில் இருந்து வருகின்றன.

ஒன்று நமக்குள் இருந்து.

மற்றது நமக்கு  வெளியில் இருந்து.

நமக்குள்  இருந்து எப்படி துன்பம் வரும் ? நாமே நமக்கு எப்படி துன்பம் செய்து கொள்ள முடியும் ?

ஆம். நாமே நமக்கு பல இன்னல்களை தேடிக் கொள்கிறோம்.

காமம், கோபம், பொறாமை, பேராசை என்று நமக்குள் வளர்த்துக் கொண்டு அவற்றால் துன்பப் படுகிறோம். நம் எதிர்பார்ப்புகள், நம் எண்ணங்கள் நமக்கு துன்பத்தைத் தேடி தருகின்றன. எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போது வருத்தம் வருகிறது.

ஆசை நிறைவேறாத போது துன்பம் வருகிறது. ஏமாற்றம் வருகிறது.

மற்றவன் பெற்ற செல்வத்தை, புகழை கண்டு பொறாமல் இருப்பதால் வருத்தமும் வாட்டமும் வருகிறது.

நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பம். அதை நாம் கட்டுப் அடுத்த முடியும். அதிலிருந்து விடு பட முடியும்.

எப்படி என்று கீதை சொல்கிறது. 


மீண்டும் இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரன் எங்கும் சம அளவில் இருக்கிறான் என்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான் என்கிறது கீதை. 

எனக்குள்ளும் ஈஸ்வரன் இருக்கறான்.  ஈஸ்வரன் என்றால் ஏதோ கடவுள் , பரப்ரம்மம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

என்னில் இருந்து எனக்கு ஒளி ஊட்டும், என் அறிவு, என் ஞானம், இதுவே ஈஸ்வரன். எனக்கு வழி காட்டுவது, என்னை நல் வழியில் நடத்துவது எதுவோ அதுவே ஈஸ்வரன். 

நம் புலன்கள் நம்மை துன்பம் தரும் வழியில் இழுத்துச் செல்லும் போது இந்த   ஞானத்தால் அதை நாம் கட்டுப் படுத்தினால் நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

கண்டதை சாப்பிடச் சொல்கிறது நாக்கு,
தேவை இல்லாததை காணச் சொல்கிறது கண்.
வரம்பு மீறி தொட்டுச் பார்க்கச் சொல்கிறது உடல்...

இப்படி நமக்குள் உள்ள புலன்கள் இன்பத்தை அனுபவிக்க தவறான பாதையில் நம்மை  இழுத்துச் செல்லும் போது ஒரு கணம் நின்று யோசிக்க வேண்டும்.

அறிவை , ஞானத்தை கொண்டு சிந்தித்தால் சரி எது தவறு எது என்று புரியும். அப்படி தெரிந்து கொண்டால், தவறான பாதையில் செல்ல மாட்டோம்.

நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

சரி, புரிகிறது. புலன்களை கண்ட வழியில் ஓட விடாமல், அறிவினால் அவற்றை கட்டுப் படுத்தினால் நம் புலன்களால், நம் தீய எண்ணங்களால் நமக்கு  நாமே தேடிக் கொள்ளும் துன்பங்களைத் தவிர்க்கலாம்.

அது என்ன "ஈஸ்வரன் எங்கும் சம அளவில் நிறைந்து இருக்கிறான்" ...அப்படி என்றால் என்ன ?

நமக்குள் இருக்கும் அதே சக்திதான் மற்ற உயிர்களுக்குள்ளும் இருக்கிறது.

ஏன் உயிர்கள் என்று பிரித்துப் பேசுவானேன்....உயிர் உள்ளது, உயிர் இல்லாதது என்று அனைத்திலும் அந்த சக்தி சமமாக இருக்கிறது.

அப்படி நினைத்தால், மற்றவற்றிற்கு நாம் எப்படி துன்பம் செய்வோம் ? நமக்கு மற்றவர்கள் எப்படி  துன்பம் செய்வார்கள். அப்படியே துன்பம் செய்தாலும் அது ஒரு உடல்  இன்னொரு உடலுக்குச் செய்யும் துன்பம் என்று நினைக்காமல் ஒரு சக்தி இன்னொரு சக்தியிடம் நடத்து உறவு என்ற எண்ணமே வரும். அப்படி வரும் போது , நமக்குத் துன்பம் தந்தவர்கள் மீது கூட கோபமோ, காழ்ப்பு உணர்வோ வராது.

இந்த உலகம் அனைத்தும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று தோன்றும்.

மேலும், அந்த சக்தி அனைத்திலும் சமமாக இருக்கிறது. ஒன்றில் அதிகமாகவும், மற்றொன்றில் குறைவாகவும் இல்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் ஒரு அளவிலான வெளிப்பாடு.

இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ?

அவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்ற பொறாமை எங்கிருந்து வரும் ?

அவனுக்கு கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போலத்தான்.

என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என்று பரதன் பெற்ற அரசை தான் பெற்ற அரசாகவே இராமன் நினைத்தானே அந்த மனோபாவம் வரும். அந்த மனோபாவம் வந்ததால், இராமனுக்கு தசரதன் மேல் கோபம் இல்லை, கைகேயி மேல் கோபம் இல்லை, பரதன் மேல் கோபம் இல்லை.
‘நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

 யார் மேலும் கோபம் இல்லை.

நீங்கள் இந்த உடல் இல்லை. புலன்கள் இல்லை. ஞான சொரூபம். இதை நீங்கள் மறந்து போவதனால் உங்களுக்கு நீங்களே தீமை செய்தி கொள்கிறீர்கள்.

ஞானத்தினால் வாழ்வை  நடத்திப் பாருங்கள். தன்னைத் தானே வருத்திக் கொள்ளும்  சோகம் நிகழாது. மற்றவர்களை வருத்தும் செயல் நிகழாது. மற்றவர்கள் உங்களை துன்பப் படுத்தவும் முடியாது.

சிந்திக்கலாம்தானே ?







கீதை - 13.27 - ஒன்றாகக் காண்பதுவே காட்சி

கீதை - 13.27 -  ஒன்றாகக் காண்பதுவே காட்சி 


समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥

ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் |
விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||

ஸமம் = சமமாக

ஸர்வேஷு= அனைத்து

பூதேஷு = பூதங்களிலும்

திஷ்டந்தம் = காண்கிறானோ

பரமேஸ்வரம் = பரமேஸ்வரனை

விநஸ்யத்ஸ்வ = அழிகின்றவற்றில்

அவிநஸ்யந்தம் = அழியாததை

ய: = எவன்

பஸ்யதி = பார்கிறானோ

 ஸ = அவனே

 பஸ்யதி = காட்சி உடையவன் ஆவான்


எல்லா  பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்.  அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். 

மரணம் !

மரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யார் ?

பயங்களுக்குள்ளே பெரிய பயம் மரண பயம்.

ஆசைகளுக்குள்ளே பெரிய ஆசை உயிராசை.

மரணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று மனிதன் தவிக்கிறான்.

மருந்தும், மாத்திரையும், உடற் பயிற்சியும் , உணவு கட்டுப் பாடும் மரணத்தை வெல்ல உதவும் என்று நினைக்கிறான். வெல்ல முடியாவிட்டாலும் தள்ளியாவது போட உதவும் என்று நினைக்கிறான்.

உலகிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் எது என்று கேட்டபோது , தர்மன் சொன்னான் "நாளும் உயிர்கள் எமனிடம் போவதை கண்டும் மனிதன் தனக்கு மரணம் வராது என்று நினைக்கிறானே, அது தான் உள்ளதுக்குள்ளேயே பெரிய அதிசயம் " என்றான்.

மரணத்தைக் கண்டு மனிதன் ஓடுகிறான்.

கீதை மரண பயத்தில் இருந்து விடுபட வழி சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் புதியதாய் பிறக்கிறீர்கள்.

நேற்று இருந்த நீங்கள் இல்லை இன்று இருப்பவர்.

உங்கள் உடலில் எவ்வளவு மாற்றங்கள். புதியதாய் பல செல்கள், பழைய செல்கள் பல இறந்து மறைந்து போய்விட்டன, புது சிந்தனை, பழைய சிந்தனைகள் கொஞ்சம் மறந்து போய் விட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நேற்றைய நீங்கள் இறந்து இன்றைய நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஒவ்வொரு கணமும் நீங்கள் புதியதாய் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் ஒவ்வொரு கணமும் நீங்கள் இறந்து கொண்டே இருக்கிறீர்கள். இறக்காமல் எப்படி பிறக்க முடியும் ?

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

சந்தேகம் இருந்தால் உங்களது பழைய புகைப் படத்தை எடுத்துப் பாருங்கள். உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் அது நீங்கள் தானா என்று. எங்க போனது அந்த உருவத்தில் உள்ள நீங்கள் ? அது இறந்து போய் , இப்போது இருக்கும் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள்.

நாளும் இறந்து பிறந்து கொண்டிருக்கும் நீங்கள், எதற்காக மரணம் என்ற ஒன்றை நினைத்து பயப் படவேண்டும் ?  மரணம் ஒன்றும் புதியது அல்லவே ? நாளும் ஒத்திகை பார்த்தது தானே.

அது மட்டும் அல்ல,

நாளும் இறந்து பிறந்து கொண்டு இருந்தாலும் நீங்கள் அதே ஆள் தானே ?

உடல் மாறுகிறது. எண்ணங்கள் மாறுகிறது. சிந்தனை மாறுகிறது. உங்களில் மாறாது ஒன்றும் இல்லை தானே ?

அப்படி இருந்தாலும், நான் அதே ஆள் தான் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?  மாறுகின்ற உங்களில் மாறாத ஒன்று ஏதோ இருக்கிறது அல்லவா ?

இந்த மாறும் உடல், சிந்தனை, ஞாபகம், எண்ணத் தொகுதி கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

அதே போல , நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள அனைத்துமே இப்படித்தான் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருக்கிறது.

இருந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து, மாறாத ஒன்று இருக்கிறது அல்லவா . அதை காண்பவனே

இந்த அனைத்து மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாத ஒன்று இருக்கிறது. அதைக் காண்பவனே காட்சி உடையவன் என்கிறது கீதை. மற்றவர்கள் உண்மையைக் காண்பது இல்லை.

இந்த மாற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மாறாத ஒன்றை எவன் காண்கிறானோ  அவனே காட்சி உடையவன் என்கிறது கீதை.

எப்படி உங்கள் மாற்றங்களுக்குப் பின்னால் மாறாத "நீங்கள்" இருக்கிறீர்களோ, அது போல மற்றவற்றின் மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.


"அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். "

கீதையின் ஆழம் புரிகிறதா ?


மேலும்,

இந்த அழிபனவற்றில் அழியாமல் இருக்கும் அது எல்லா இடத்திலும் சமமாக இருக்கிறது. உங்களில் அதிகமாகவும், என்னில் குறைவாகவும் இல்லை.

எல்லாம் சமம்.

உயர்வு தாழ்வு என்ற இருமை நம் கற்பனை.

ஆழ்ந்து சிந்தித்தால், மரணம் பற்றிய புது சிந்தனை பிறக்கும், சம நோக்கு வரும்.

வரணும்.







Wednesday, February 24, 2016

கீதை - 13.26 - இந்த உலகம் எப்படி உருவானது ?

கீதை - 13.26 - இந்த உலகம் எப்படி உருவானது ?


यावत्संजायते किंचित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥१३- २६॥

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா³த்தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ || 13- 26||


யாவத் = எவ்வளவு பெரியதாய் , உயர்ந்ததாய் இருந்தாலும்

ஸஞ்ஜாயதே = ஒன்றாக உருவானது

கிஞ்சித் = எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் (கிம் = எது, எவ்வளவு; சித் = துகள்)

ஸத்த்வம் = இருப்பவை

ஸ்தாவர ஜங்க³மம் = நகர்பவை, நகராதவை

க்ஷேத்ர = அறியப் படுவது

க்ஷேத்ரஜ்ஞஸம் = அறிவது , அறியும் அறிவு

யோகாத் = இணைந்தது

தத் = அது

வித்தி =அறிந்து கொள்வாய்

பரத ர்ஷப  =பாரத காளையே

அசைவது, அசையாதது என்று நிறைந்த இந்த உலகம் க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரக்ஞன் என்ற இரண்டும் சேர்ந்ததால் உண்டானது என்று அறிவாய் பாரதக் காளையே 

இந்த உலகம் என்பது என்ன ? சுகம், துக்கம், இன்பம், துன்பம், என்று எல்லாம் கலந்து இருக்கிறது.  ஒரு நாள் நன்றாக இருக்கிறது. அடடா, இதுவல்லவோ வாழ்கை என்று   இருக்கிறது. இன்னொரு நாள், இதுவா வாழ்கை, எங்காவது கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய்  விடலாமா என்று தோன்றுகிறது. மற்றொரு நாள் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை ஏதோ போகிறது.

இதில் எது உண்மை, எது நிரந்தரம், எதனால் இவை எல்லாம் நிகழ்கின்றன ?

இவற்றிற்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணமா ? என் எண்ணங்கள், என் மன நிலை,என் குண நலன்கள்  இவை மட்டும் தான் காரணமா ?

அல்லது

எனக்கு வெளியே உள்ள இந்த உலகம், அதில் உள்ள பொருள்களும் மக்களும் காரணமா ?

கீதை சொல்கிறது, இரண்டும்தான், இரண்டும் இல்லைதான்.

இது என்ன புதுக் குழப்பம் ?

இரண்டும்தான் என்றால் இந்த இரண்டும் சேர்ந்த கலவைதான் இந்த உலகம்.

இரண்டும் இல்லைதான் என்றால் தனித் தனியே இவை காரணம் இல்லை.

புருஷனும், பிரகிரிதியும் அல்லது

க்ஷேத்ரமும், க்ஷேத்ரஞனும் சேர்வதால் உண்டாவது தான் இந்த உலகம்.

எப்போதும் சொல்லும் உதாரணம்தான்.

இரவில், தனிமையில், அரை இருட்டில் சாலையில் ஒரு பாம்பு கிடக்கிறது. பயத்துடன் அருகில் சென்று பார்த்தால் அது பாம்பு இல்லை ஒரு பூ மாலை என்று தெரிகிறது.

பாம்பு என்று நினைத்ததற்கு நானும் ஒரு காரணம் , அந்த பூ மாலையும் ஒரு காரணம். அருகில் உள்ள குப்பைத் தொட்டியை நான் பாம்பு என்று நினைக்க மாட்டேன். பூ மாலை பாம்பாகத் தெரிவதற்கு என் பயமும், சந்தேகமும் ஒரு காரணம் என்றால், பாம்பு போலக் கிடந்த அந்த பூ மாலையும் ஒரு காரணம்.

நான் மட்டுமா காரணம் என்றால் இல்லை - எப்படி இல்லை என்றால், நான் எல்லாவற்றையும் பாம்பாகப் பார்ப்பது இல்லை.

பூ மாலை மட்டுமா காரணம் என்றால் இல்லை - பகலில் அது பாம்பாகத் தெரிவது இல்லை.

அந்தப் பொருள், அந்த சூழ்நிலையில் (வெளியே உள்ளது), என் மனம் (உள்ளே உள்ளது) என்ற இந்த இரண்டும் சேர்ந்ததுதான் இந்த உலகம்.

உலகம் அது பாட்டுக்கு இருக்கிறது. நல்லது கெட்டது , சரி தவறு என்றெல்லாம் அதில் இல்லை. நாம் தான் நடக்கும் நிகழ்வுகள் மேல் நம் எண்ணங்களை ஏற்றி இது சரி, இது தவறு, இது இன்பம், இது துன்பம் என்று நினைத்துக் கொண்டு அலைகிறோம் .

சரி, அதனால் என்ன ?

இந்த உலகும் அதைப் பற்றிய என் எண்ணங்களும் தேவைதானே. அவை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது.

நெருப்பு சுடும் என்பது என் எண்ணம். சூடு பட்டால் வலிக்கும் என்று நான் நினைத்து அதை விட்டு தள்ளி நிற்பது நல்லது தானே ? இது என்ன பெரிய விஷயமா ? இதைப் போய் வேலை மெனக்கெட்டு சொல்லுவானேன் ?

காரணம் இருக்கிறது.

இந்த நான் மற்றும் இந்த உலக கலப்பு என்பது நிரந்தரமான, பிரிக்க முடியாத ஒன்று அல்ல.

இவை சேரும், பிரியும்.

இப்படி ஒவ்வொரு முறை சேரும் போதும் பிரியும் போதும் ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த  சேர்வதும் பிரிவதும் நிரந்தரமானது அல்ல என்றால், இந்த உலகமும் நிரந்தரமானது அல்ல.

அது ஒரு செய்தி.

இரண்டாவது செய்தி, இந்த உலகம் மற்றும் நான் என்ற இரண்டு கூறுகளில், உலகம் என்பது என்னால் கட்டுப் படுத்த முடியாத ஒன்று. நான் சொல்லி, நான் நினைத்து ஒன்றும் மாறப் போவது இல்லை. ஆனால், என் மனம் என் கட்டுக்குள் இருக்கிறது. இருக்க வேண்டும். என் மனதை மாற்றுவதன் மூலம், நான் இந்த உலகை மாற்ற முடியும். குறைந்த பட்சம், இந்த உலகம் எனக்கு எப்படி இருக்கிறது என்பதை என்னால் மாற்ற முடியும்.

மூன்றாவது, மனம் அல்லது அறிவு மாறினால் உலகம் மாறுகிறது என்று கொண்டால், உலகம் என்ற ஒன்று தனியாக இருக்கிறதா ? என்னைத் தவிர்த்து, இந்த உலகம் என்று ஒன்று தனியாக கிடையாது. நான் தான் இந்த உலகை தோற்றுவிக்கும் பிரம்மா, என்னால் இந்த உலகம் நிலைக்கிறது, என்னோடு இந்த உலகம் அழிகிறது.

நான்காவது, மிக முக்கியமானது, நான் என்ற என் மனம், என் அறிவு, என் அனுபவம், என் நினைவுகள் ஒரு புறமும் உலகம், அதில் உள்ள பொருள்கள் மற்றும் உயிர்கள்  மறுபுறமும் சேர்ந்து உலகை உருவாக்குகிறோம் என்று சொன்னால் , அப்படி உருவான உலகை அறிந்து கொள்ளும் நான் யார் ? மனதை மாற்றினால் உலகம் மாறும் என்றால், மனதை மாற்றுவது எது ?

ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.

கீதை பாதையை காட்டி இருக்கிறது. பயணம் செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

கீதை காட்டிய வழியில் பயணித்துப் பாருங்கள்.













Tuesday, February 23, 2016

கீதை - 13.25 - குருவருள்

கீதை - 13.25 - குருவருள் 


अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥१३- २५॥

அந்யே த்வேவமஜாநந்த: ஸ்²ருத்வாந்யேப்⁴ய உபாஸதே |
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்²ருதிபராயணா: || 13- 25||

அந்யே =  மற்றவர்கள்

து = மேலும்

ஏவம் = அப்படியாக

அஜாநந்த:= அறியாமையில், அறியாமல்

ஸ்ருத்வ = கேட்டு

அந்யே ப்ய = மற்றவர்களிடம் இருந்து

உபாஸதே = உபாசித்து, ஸ்ரைத்தையாகக் கேட்டு

தே = அவர்கள்

பி = இருப்பினும்

சா = மேலும்

அதிதரந்தி = கடக்க முடியும்

யேவ = நிச்சயமாக
ம்ருத்யும் = இறப்பை , மரணத்தை

ஸ்ருதி பராயணா: = கேட்டு மனனம் செய்து

இவற்றை அறியாதவர்கள், மற்றவர்களிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டு அதன் படி வாழ்வாராயின், அவர்களும் மரணத்தை வெல்வார்கள். 

முந்தைய ஸ்லோகத்தில் புருஷன், பிரகிருதி மற்றும் குணங்கள் இவற்றை அறிந்து கொள்ள  மூன்று வழிகளை வியாசர் கூறினார்.

தியானம், யோகம், கர்ம யோகம்.

ஆழ்ந்து சிந்திக்க முடிந்தவர்கள் ஞான மார்கத்தில் சென்று இதனை அறிய முடியும்.

ஞான மார்க்கம் முடியாதென்றால், யோக மார்கத்தில் சென்றும் இதை அடையலாம்.

யோகமும் முடியாது, எனக்குத் தெரிந்ததெல்லாம் வேலை செய்வது மட்டும் தான் என்றால், அந்த வேலையையே யோகமாக மாற்றி கர்ம யோகத்தின் மூலம்  இவற்றை அறிய முடியும்.

சரி, இதுவும் முடியாது.

கர்ம யோகமும் குழப்பமாக இருக்கிறது, புரியவில்லை என்றால் என்ன செய்வது.

ஒரு தாய்க்கு சில குழந்தைகள் இருந்தால் எல்லாக் குழந்தையும் ஒன்று போலேவா இருக்கும் ? ஒன்று படிப்பில் சுட்டியாக இருக்கும், இன்னொன்று விளையாட்டில் திறமைசாலியாக இருக்கும் , இன்னொன்று பாடலில், நடனத்தில் என்று தன் திறமையைக் காண்பிக்கும்,

அது போல கீதை, ஒவ்வொருவருக்கும் ஒரு வழியைக் காட்டுகிறது.

கர்ம யோகமும் முடியாதவர்கள் என்ன செய்வது ?

அவர்கள், மற்றவர்கள் சொல்லக் கேட்டு, அதன் படி நடந்தால் அவர்களும் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் என்கிறது கீதை.

யார் அந்த மற்றவர்கள் ?

மேலே கூறிய மூவர்கள் - ஞான, யோக, கர்ம யோகா மார்கத்தில் சென்று உண்மையை உணர்ந்து கொண்டவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அதன் படி வாழ்ந்தால், இந்த இறப்பு பிறப்பு என்ற இருமையில் (duality ) இருந்து விடுபடலாம்.

தனக்குத் தானே அறிந்து கொள்ள முடியாதவர்கள், ஆசாரியனிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அதன் படி வாழ வேண்டும்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

குருவை எங்கு போய் தேடுவது ? யார் உண்மையான குரு, யார் போலி என்று ஒன்றும் தெரியவில்லையே ? தவறான ஒருவரை பின்பற்றி விடக் கூடாதே என்ற பயம் இருக்கும்.

கவலைப் படாதீர்கள்.

நீங்கள் தயாராக இருக்கும் போது குருவருள் உங்களுக்குத் தானே கிடைக்கும்.

அறிவுத் தாகம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஒரு கல் குருவாக இருந்து அனைத்தையும் கற்றுத் தந்தது ஏகலைவனுக்கு. குரு நேரில் வர வேண்டும் என்று இல்லை. ஒரு கல் கூட உங்களுக்கு கற்று தரும். தந்தது.

பாதுகை பரதனை காக்கவில்லையா ?

தேடல் தான் முக்கியம்.

தேடுங்கள். கண்டடைவீர்கள்.








Monday, February 22, 2016

கீதை - 13.24 - அறிவது எப்படி ?

கீதை - 13.24 - அறிவது எப்படி ?


ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे ॥१३- २४॥

த்⁴யாநேநாத்மநி பஸ்²யந்தி கேசிதா³த்மாநமாத்மநா |
அந்யே ஸாங்க்²யேந யோகே³ந கர்மயோகே³ந சாபரே || 13- 24||

த்யாநேந = தியானத்தின் மூலம்

ஆத்மநி =  ஆத்மாவை

பஸ்யந்தி = காண்கிறார்கள்

கே சித் = சிலர்

ஆ தாத்மாநமாத்மநா = ஆத்மாவினால் ஆத்மாவை

அந்யே = மற்றவர்கள்

ஸாங்க்யேந = சாங்கியத்தின் மூலமும்

யோகேந = யோகத்தின் மூலமும்

கர்மயோகேந = கர்ம யோகத்தின் மூலமும்

சா = மேலும்

அபரே = மற்றவர்கள்


சிலர்   ஆத்மாவைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், யோகத்தாலும், கர்ம யோகத்தாலும், சாங்கிய யோகத்தாலும் ஆத்மாவை அறிகிறார்கள்; 


பிரகிருதி, புருஷன், குணங்கள், அவற்றின் சங்கமம் இவற்றைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது.

இதெல்லாம் உண்மையா, இல்லை வெறும் கற்பனையா ?

மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்வதை விட நாமே நேரடியாக எப்படி இதை அறிந்து கொள்வது ?

என்னை நம்பு, அதுவே போதும் என்று கண்ணன் சொல்லவில்லை.

அல்லது நான் சொல்லும் வழி ஒன்று தான் இதை அறிய வழி என்றும் சொல்ல வில்லை.

மனிதர்கள் வேறுபாடு கொண்டவர்கள். எல்லோருக்கும் ஒரே வழி சரிப்படாது.

படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும், மாணவனுக்கும், பண்டிதனுக்கும் ஒரே வழி எப்படி சரிப்படும் ?

இந்த உண்மைகளை அறிய கீதை பல வழிகளைச் சொல்கிறது.

முதலாவது, ஆத்மாவைப் பற்றி தியானம் செய்து இவற்றை அறிவது. தியானிப்பது என்றால்  சிந்திப்பது. இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், ஆத்மாவை படித்து தெரிந்து கொள்ள முடியாது. மற்றவர் சொல்லித் தெரிந்து கொள்ள  முடியாது. தன்னைத் தானே ஆராய்ந்து , சிந்தித்து அறிய வேண்டிய ஒன்று.

இரண்டாவது, யோகத்தால் அறிய முடியும். யோகம் என்றால் இணைப்பது. சேருவது. மனதால், உடலால் நாம் பிரிந்து கிடக்கிறோம். நல்லவன், கெட்டவன் , உயர்ந்தவன் தாழ்ந்தவன், நன்மை தீமை, பணக்காரன் ஏழை என்று  பிரிந்து கிடக்கிறோம். இந்த பிரிவினைகள் எல்லாம் போய் , எல்லாம் ஒன்றுபடுவது யோகம். அந்த யோகத்தின் மூலம் இதை உணரலாம்.

மூன்றாவது,  கர்ம யோகத்தின் மூலம் இதை அறிய முடியும். சரி, எனக்கு சிந்திக்கவும்  தெரியாது, யோகமும் பிடிபட மாட்டேன் என்கிறது என்றால் எனக்கு இதை அறிய முடியாதா என்றால் , இல்லை,  அப்படிப் பட்டவர்களுக்கும் ஒரு வழி இருக்கிறது என்கிறது கீதை. அதாவது, உனக்குத் தெரிந்த  தொழிலை கர்ம யோகத்தில் சொன்னபடி செய்வதன் மூலம் இந்த உண்மைகளை அறிய முடியும். பலனில் அக்கறை கொள்ளாமல் காரியங்களைச் செய்வதன் மூலம், இவற்றை அறிய முடியும்.

நாலாவது, இந்த பலனை எதிர்பார்க்காமல் காரியம் செய்வது எல்லாம் நமக்கு ஆகாது...வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், ஆம், இன்னும் ஒரு வழி இருக்கிறது என்கிறது கீதை அடுத்த ஸ்லோகத்தில் ....







Sunday, February 21, 2016

கீதை - 13.23 - மறு பிறப்பு இல்லை

கீதை - 13.23 - மறு பிறப்பு இல்லை 


य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥१३- २३॥

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை: ஸஹ |
ஸர்வதா² வர்தமாநோऽபி ந ஸ பூ⁴யோऽபி⁴ஜாயதே || 13- 23||


ய = எவன்

ஏவம் = இதனை

வேத்தி = அறிகிறானோ

புருஷம் = புருஷன்

ப்ரக்ருதிம் = பிரகிருதி

ச = மற்றும்

குணை:  = குணங்களை

ஸஹ = சேர்ந்த

ஸர்வதா = முழுவதும்

வர்தமாந = சென்றாலும்

அபி = மேலும்

ந = இல்லை

ஸ = அவன்

பூயோ = மேலும்

அபிஜாயதே = பிறப்பது


இவ்வாறாக, புருஷனையும், பிரகிருதியையும்,  மற்றும் அதன் குணங்களையும் அறிந்தவன் எந்த வழியில் சென்றாலும் , அவனுக்கு மறு பிறப்பில்லை.

மூன்று விஷயங்கள்,

புருஷன், பிரகிருதி, மற்றும் அவற்றின் குணங்கள்.

இந்த மூன்றையும் அறிந்தவன், வாழ்வில் எந்த வழியில் சென்றாலும் அவன் மீண்டும் பிறப்பது இல்லை.

அப்படி என்றால், இவற்றைப் பற்றி அறியாதவன் மீண்டும் பிறப்பது இல்லை என்று ஆகிறது அல்லவா ?

அறியாமை அவ்வளவு பெரிய குற்றமா ? சரி குற்றமே என்றாலும், ஏன் இது எளிமையாக எல்லோருக்கும் புரிவது இல்லை. புரியாமல் வைத்தது யார் குற்றம் ?

"மீண்டும் பிறப்பது இல்லை" என்பதற்கு அர்த்தம் மீண்டும் குழந்தையாக இன்னொரு தாய் வயிற்றில் பிறப்பது என்று அர்த்தம் இல்லை.

மனிதன், உடல் தான் , தான் என்று எண்ணிக் கொண்டு, இன்பங்களின் பின்னால் அலைகிறான். அப்படி அலையும்போது ஒன்று மாறி ஒன்றாகப் பிறக்கிறான்.

எப்படி ?

சாதாரண வாலிபனாக இருந்தவன், இன்பங்கள் வேண்டும், அதற்காக செல்வம் என்று  ஏதோ நிறுவனத்தில் வேலையில் சேர்கிறான்.

ஒரு ஊழியன் பிறக்கிறான்.

இன்பம் வேண்டும் என்று திருமணம் முடிக்கிறான்.

ஒரு கணவன் பிறக்கிறான்.

பிள்ளைகள் வேண்டும் என்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

ஒரு தகப்பன் பிறக்கிறான்.

ஒவ்வொன்றை அனுபவிக்க, ஒவ்வொரு நிலையை அடைகிறான்.

அது ஒவ்வொன்றும் ஒரு பிறப்பு தான்.

இப்படியாக எண்ணற்ற பிறவிகள் பிறந்து கொண்டே இருக்கிறான் இந்த வாழ்க்கையிலேயே.

சரி, இந்த புருஷன், பிரகிருதி, அதன் குணங்கள் பற்றிய ஞானம் வந்து விட்டால் மட்டும் இப்படி பிறப்பது நின்று விடுமா ?

நிற்காது ஆனால் பிறப்பது யார் என்று தெரியும்.

இந்த உடல் ஊழியனாக,  கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, மாறுகிறது...அல்லது பிறக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் தந்தையும் பிறக்கிறார்கள்.

இந்த பிறவிகள் எல்லாம் உடலுக்குத்தான்.

நான் இந்த உடல் அல்ல என்று அறியும் போது இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

முதலாவது, இந்தப் பிறவிகள் எனக்கு அல்ல இந்த உடலுக்குத்தான் என்று புரிகிறது.

இரண்டாவது, இந்த உடலுக்கே கூட ஏன் இத்தனை பிறவிகள் நிகழ்கின்றன என்றால் ஆசைகள், அறியாமைகள், குணங்கள், அவற்றின் சங்கமங்களால் நிகழ்கின்றது  என்று அறியும்போது இந்த ஆசைகள், அறியாமைகள், குணங்கள்  சங்கம் இவை நிகழ்வது அற்று போகும்.

முன்பெல்லாம், அரசர்களுக்கு சர்க்கரை வியாதி வரும். நன்றாக உண்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் , சர்க்கரை வியாதி வரும். ஆனால், அது சர்க்கரை வியாதி என்று தெரியாது. வைத்தியர் ஏதேதோ பச்சிலை சாறுகளை  தந்து விட்டு, ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டுப் போய் விடுவார். இராஜாவும், ஓய்வு எடுத்துக்  கொண்டு மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்.

சர்க்கரை வியாதிக்குக் காரணம் இனிப்பு பொருள்கள் என்று தெரிந்தால் அதை நிறுத்தி விடலாம்.

அது போல, இந்த பல்வேறு பிறவிகளுக்கும், அவற்றால் வரும் துன்பங்களுக்கும்  காரணம் இந்த புருஷன், பிரக்ரிதி, மற்றும் குண சங்கமங்கள் என்ற அறியாத அறியாமையே.

அறியும் போது இன்பம் என்றால் என்ன, இன்பம் எங்கிருந்து வருகிறது, அதை எப்படி அனுபவிப்பது, எவ்வளவு அனுபவிப்பது என்று புரிந்து கொள்ள முடியும்.

அறிய அறிய பிறவிகள் குறையும்

சிந்திப்போம்.

 






Thursday, February 18, 2016

கீதை - 13.22 - பரமாத்மா என்பது யார் ?

கீதை - 13.22 -  பரமாத்மா என்பது யார் ?

http://bhagavatgita.blogspot.in/2016/02/1322.html


उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥

உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: |
பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||

உபத்ரஷ்டா = திருஷ்டா என்றால் திருஷ்டி, பார்வை. பார்பதற்கு உதவுபவன். அல்லது, பார்ப்பவன்,

அநுமந்தா = அனுமதிப்பவன்

ச = மேலும்

பர்தா = தாங்கிப் பிடிப்பவன்

போக்தா = அனுபவிப்பவன்

மஹேஸ்²வர: = மகேஸ்வரன்

பரமாத்மா = பரமாத்மா

இதி = இதே

சா = மேலும்

அபி = அது அன்றியும்

யுக்தோ = கூறப் படுகிறான்

தே³ஹே = தேகத்தில்

அஸ்மிந் = இந்த

புருஷ: பர:  = பர புருஷன்



காண்பதற்கு உதவியாக இருப்போன் ,  அனுமதி தருவோன், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன் , அனுபவிப்பவன்,  மகேசுவரன் என்று இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


காண்பதற்கு உதவியாக இருப்போன்...அப்படி என்றால் என்ன ?

உங்களுக்கு நிகழ்பவற்றிற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள். உங்களைச் சுற்றி நிகழ்பவற்றிற்கு சாட்சியாக இருங்கள்.

சாட்சி என்றால் யார் ? நடப்பவற்றை பார்கிறான் ஆனால் அவைகளுக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

சாலையில் நடந்து போகிறீர்கள். அந்த சாலையை கடக்கும் ஒருவரை ஒரு வாகனம் இடித்து விடுகிறது. அதை நீங்கள் பார்கிறீர்கள்.

அந்த விபத்துக்கு நீங்கள் சாட்சி. ஆனால், அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இடித்தவன் யாரோ, இடி கொண்டவன் யாரோ. ஆனால், அந்த விபத்து நடந்தபோது நீங்கள் அங்கே இருந்தீர்கள். உங்களுக்குத் தெரியும். அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட ஒரு சுகமோ துக்கமோ இல்லை. வலி இல்லை. ஆனந்தம் இல்லை. பார்த்தீர்கள் , அவ்வளவுதான்.


அதே  போல,உங்கள் வாழ்க்கைக்கும் ஒரு சாட்சியாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிகழ்பனவற்றை ஒரு சாட்சியாக இருந்து பாருங்கள். யாருக்கோ நிகழ்வது போல பாருங்கள். நல்லது நடக்கிறது, தீமை நடக்கிறது...இரண்டையும்  பார்த்துக் கொண்டிருங்கள் , ஒரு சாட்சியைப் போல.

நல்லது நடந்தால் துள்ளாதீர்கள்.

அல்லது நடந்தால் துவளாதீர்கள்.

நடக்கும் சம்பவங்களால் சாட்சி எப்படி பாதிக்கப் படுவது இல்லையோ,அது போல இந்த  உடலுக்கு நிகழ்வதற்கு நீங்கள் பாதிக்கப் பட வேண்டியது இல்லை. நீங்கள் இந்த உடல் இல்லை.

இப்படி ஒரு சாட்சியாக இருக்கப் பழகிக் கொண்டால், ஒரு பற்று அற்ற தன்மை வரும்.

நான் எனது என்ற அஹங்காரம், மமகாரம் விட்டுப் போய் விடும்.

நாளடைவில் நீங்கள் நடந்து செல்வதை, நீங்கள் உறங்குவதை, நீங்கள் உண்பதை நீங்கள் ஒரு மூன்றாம் மனிதனைப் போல, ஒரு சாட்சியைப் போல பார்க்க முடியும்.

அப்புறம் சுகம் ஏது , துக்கம் ஏது ?

அனுமதி தருவோன்....

அப்படி ஒரு சாட்சியாக நீங்கள் இருக்கும் போது , வாழ்க்கையில் நடப்பவைகளில்  எது எவ்வளவு உங்களை பாதிக்கலாம் என்று நீங்கள் அனுமதி தர முடியும். இதற்கு நான் கோபப்படலாமா ? இதை நான் உண்ணலாமா ? இதற்கு நான் சந்தோஷப் படலமா என்று ஒரு தன் உணர்வோடு  செயல் பட முடியும்.

நமக்கு இப்போது சிக்கல் என்ன என்றால், நாம் ஒரு இயந்திரத்தைப் போல வாழ்கிறோம்.  கோபமும், காமமும், இன்பமும், துன்பமும் ஏதோ சுவிட்ச் போட்ட மாதிரி  நிகழ்கிறது. நம் அனுமதி இன்றி நிகழ்கிறது.

நீங்கள் அனுமதித்தா உங்கள் கோபம் வருகிறது ? நீங்கள் அனுமதித்தா காமம் உங்களைப்  பற்றுகிறது ? இல்லை.

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு சாட்சியாகப் பார்க்கும் போது , உங்களுக்கு நிகழ்வதை , அவை எவ்வளவு தூரம் உங்களை பாதிக்கலாம் என்று என்று நீங்கள் அனுமதிக்க முடியும். இவ்வளவு கோபப்படலாம், இவ்வளவு காமம் போதும்,  இத்தனை  ஆசை செல்வத்தின் மீது போதும் என்று எது எவ்வளவு என்று அனுமதிக்கலாம். எல்லாம் அளவு கடந்து போவதால்தானே சிக்கல் எல்லாம் வருகிறது.

அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன்...

தாங்கிப் பிடிப்பவன் என்றால் ஏதோ பளு தூக்குபவன் (weight lifter ) என்று நினைக்கக் கூடாது. தாங்குபவன் என்றால், அனைத்தையும் பெற்றுக் கொள்பவன். இன்பமோ துன்பமோ , அவற்றை அனுபவிக்கும் நேரத்தில் புலன்கள்  செயல்படுகின்றன. அந்த அனுபவம் முடிந்த பின் புலன்களின் வேலை தீர்ந்து விடுகிறது. ஆனால், அந்த அனுபவங்களை சேகரித்து வைத்து, அவற்றின் மூலம் நம்மை மாற்றுவது நம் உள் இருக்கும் நான் என்ற அது. ஒரு அனுபவம் நல்லது என்றால் அதை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. ஒரு அனுபவம் துன்பம் என்றால் அதை விலக்குகிறது . இப்படி அனுபவங்களைச் சேர்த்து, அவற்றை நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்த்து என்று தரம் பிரித்து அவற்றின் மூலம் நம் வாழ்கையை நடத்திச் செல்வது அது.

நாம் நம் அனுபவங்களால் உந்தப் படுகிறோம். நாம் படித்தது, நமக்குச் சொல்லப் பட்டது, நம்மைச் சுற்றி நிகழ்வது போன்றவற்றில் இருந்து நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். அந்த அனுபவங்கள் நம்மை வழி நடத்துகின்றன. யோசித்துப் பார்த்தால் நாம் ஒரு சூழ் நிலைக் கைதிதான். நம் சூழ்நிலையைத் தாண்டி நம்மால் வெளியே வர முடியாது.


அப்படி என்றால், நான் என்பது வெளி உலகின் தொகுப்புத்தான். ஆனால், இதை அறியும் போது , நான் என்பது இவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று என்று புரிபடும். நான் என்பது எனக்குள் செலுத்தப் பட்ட , அனுமதிக்கப்பட்ட எண்ணங்களின் தொகுப்புதான் என்று அறியும் போது , நான் என் சமுதாயத்தை, என் சூழ்நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்று புரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் வேறு, கண்ணாடி என்பது வேறு. திரையிலே காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சியே திரை அல்ல. அதில் விழும் பிம்பங்களைத் தாண்டி திரை என்று ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஒட்டாத நிர்மலமான திரை ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஓடிக் கொண்டிருக்கும்வரை திரை தெரியாது.

அனுபவிப்பவன்...

எது அனுபவிக்கிறது ? புலன்களா ? புலன்கள் தங்களுக்கு வரும் செய்திகளை பெற்று மூளைக்கு அனுப்புகிறது. அதோடு அதன் வேலை தீர்ந்து விட்டது. ஒரு காட்சியைப் பார்க்கிறோம். அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எவ்வளவு வெளிச்சத்தில் இருக்கிறது என்று கண்டு அதற்குத் தகுந்த மாதிரி கண் தன்னை சரி செய்து அந்த பொருளின் பிம்பம் சரியாக விழித் திரையில் விழ வழி செய்கிறது. விழித் திரையில் இருந்து மூளைக்கு செய்தி போகிறது. கண்ணின் வேலை அவ்வளவுதான். புலன்கள் அனுபவிப்பது  இல்லை.

மூளை, வந்த செய்தியை பகுத்துச் சொல்கிறது. இது லட்டு,அது அம்மா, இது புத்தகம், என்று எதை கண் காண்கிறதோ, அது இன்னது என்று இனம் கண்டு கொள்வது மூளை. மூளை அனுபவிக்கிறதா என்றால் இல்லை. அதன் வேலை உள்ளே வரும் செய்திகளை அறிந்து சொல்வது.

அனுபவம் என்பது அதையும் தாண்டி நிகழும் ஒன்று.

ஒரே ஆள், ஒரே பொருள்...ஒரு நாள் இனிமையாக இருக்கிறது, இன்னொரு நாள் எரிச்சலாக இருக்கிறது. ஒரு நாள் மனைவி தேவதைப் போலத் தெரிகிறாள், இன்னொரு நாள் அவளே எரிச்சலை தூண்டுகிறாள். பொருள் ஒன்றுதான், பார்க்கும் கண்ணும், அறியும் மூளையும் ஒன்றுதான் என்றாலும் அனுபவம் மாறுகிறது.

மூளையையும் தாண்டி அனுபவிப்பவன் அவன். அவன் யார் என்று சிந்தியுங்கள்.

மகேசுவரன்

இத்தனையும் செய்பவன் தான் மகேஸ்வரன். மகேஸ்வரன் என்றால் எங்கோ கைலாயத்தில், பாற்கடலில் இருக்கும் யாரோ அல்ல. உங்களுக்குள் இருந்து மேலே சொன்னவற்றை செய்யும் அவன் தான் மகேஸ்வரன்.


இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


அந்த மகேஸ்வரன் வேறு எங்கும் இல்லை, இந்த உடலுக்குள்ளேயே இருக்கிறான்.

அவனை உணருங்கள். அறியுங்கள். தேடுங்கள்.

உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் நோக்கம்.








Tuesday, February 16, 2016

கீதை - 13.21 - நல்லவனாவதும் தீயவனாவதும்

கீதை - 13.21 - நல்லவனாவதும் தீயவனாவதும் 


पुरुषः प्रकृतिस्थो हि भुङ्‌क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥

புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்‌க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் |
காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||


புருஷ: = புருஷன்

ப்ரக்ருதி = பிரகிரிதியில்

ஸ்தோ  ஹி = நிலைத்து நின்று

புங்‌க்தே = உண்கிறான் அல்லது அனுபவிக்கிறான்

ப்ரக்ருதி ஜாந் = ப்ரக்ருதியில் ஜனிக்கும்

குணாந் = குணங்களை

காரணம்  = காரணங்களை

குண ஸங் கோஸ்ய = குண சங்கமங்களோடு தொடர்பு கொண்டு

ஸதஸத் = எப்போதும், மீண்டும் மீண்டும்

யோநி =  கருவறையில்

ஜந்மஸு = ஜன்மம் எடுக்கிறான்

புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான்.  பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான். குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .



நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அதற்கு ஒரு குட்டி பிறந்தது. குட்டி பிறந்த சில நாட்களிலேயே தாய் சிங்கம் இறந்து விட்டது. அங்கிருந்த மான் குட்டிகள் இந்த  குட்டி சிங்கத்தை வளர்த்து வந்தன. இந்த சிங்கமும், தானும் ஒரு மான் குட்டி என்றே  நம்பி , மான் குட்டிகளைப் போல வாழ்ந்து வந்தது.

அப்படி இருக்கும் போது , ஒரு நாள் ....

இன்னொரு பெரிய சிங்கம் இந்த மான்களை வேட்டையாட வந்தது. மற்ற மான்களோடு  இந்த பழைய குட்டி சிங்கமும் பயந்து ஓடியது. வேட்டையாட வந்த  பெரிய சிங்கம், இந்த குட்டி சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது.

"ஏய், நீ ஒரு சிங்கக் குட்டி. ஏன்  இப்படி மான்கள் மாதிரி பயந்து ஓடுகிறாய்" என்றது.

புதியதாய் வந்த சிங்கம் வந்து சொன்ன பின் தான், அந்த சிங்கக் குட்டிக்கு தான் ஒரு  சிங்கம் என்று தெரிய வந்தது.

நீங்களும் ஒரு சிங்கம் தான்.

சிங்கம் என்று தெரியாமல், அறியாமையில் மான் குட்டிகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.  வசிட்டர் என்ற சிங்கம் வந்து சொல்கிறது, நீங்கள் சிங்கம் தான் என்று.

நம்ப கடினமாகத்தான் இருக்கும். ரொம்ப நாள் மான்களுடனேயே வாழ்ந்து விட்டதால்  சிங்கம் என்று உணர சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

இந்த கதைக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்....



"புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான்."  

நான் என்ற என் உள்ளுணர்வு, என் ஞானம், அறிவு, தன் உணர்வு இந்த உடலுக்குள் இருக்கிறது. புருஷன் என்பவன் பிரகிர்தியில் இருக்கிறான். உடலை விட்டு வெளியே இந்த புருஷன் இருக்க முடியாது. உடலின் மூலம் தான் அவன் செயல் பட முடியும்.

மான்களுக்கு மத்தியில் உள்ள சிங்கம் போல.

பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான்.

உடலுக்கு, பிரகிரதிக்கு என்ன என்ன நிகழ்கிறதோ அவன் அதை உணர்கிறான். நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். வெற்றியும் வரும், தோல்வியும் வரும். நல்லது நடக்கும் போது பிரக்ரிதி மகிழ்கிறது. அந்த மகிழ்ச்சியை புருஷன் என்ற நான் உணர்கிறேன்.

மான்களுக்கு நிகழ்வது சிங்கத்துக்கும் நிகழ்வது போல.

குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .

குணங்கள் - ரஜோ, தமோ, தாமச குணங்கள்.

அவற்றின் சங்கமங்களில் - நம் மன நிலை இந்த மூன்று குணங்களின் கலவையாகவே இருக்கிறது. அன்பு, பகை, காதல்,பொறாமை, காமம், கோபம், வெகுளி, கருணை , வெறுப்பு எல்லாம் இந்த மூன்று குணங்களின் வெவ்வேறு விதமான  கலவையே. 

இந்த குணக் கலவையால் மனிதன் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறான். 

பிறக்கிறான் என்பதை உருவாகிறான் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த உலகமும், இந்த குணங்களும், இந்த குணங்களின் கலவைகளும் நீங்கள் அல்ல. 

ஆனால், இவைதான் நான் என்று நாம் நினைத்துக் கொண்டு அவை இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுகிறோம். அவற்றோடு நம்மை தொடர்பு படுத்திக் கொள்கிறோம். 

நீங்கள் இவற்றை எல்லாம் விட உயர்ந்தவர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள், இந்த குணங்கள் தான் நீங்கள் என்று நினைத்து. 

கோபம் வரும் போது , கோபத்தோடு நீங்கள் ஒன்றாகி விடுகிறீர்கள். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்று தெரிவது இல்லை. அதனால் வரும் தீமைகளைச் செய்து   தீயவனாக உருவாகி விடுகிறீர்கள். 

அன்பும், கருணையும் அப்படித்தான். அந்த குணங்களால் உந்தப் பட்டு, நல்லவனாக  உருவாகிரீர்கள். 

இரண்டையும் தாண்டி மேலே போங்கள் . 

இவை அல்ல நீங்கள். 

ஏன் நீங்கள் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறீர்கள் என்றால் இந்த குணங்களோடு ஒன்றிப் போய்   அவை செலுத்தும் இடங்களுக்குச் செல்வதால்.

நான் என்ற எனக்கும், இவற்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான் என்ற இந்த உணர்வு உடலின் உள்ளே இருப்பதால், அதன் மூலம் வெளிப் படுவதால், நீங்கள் இந்த உடலோடு, அந்த உடலுக்கு நேரும் குணங்களோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். 

சிந்தித்துப் பாருங்கள். 

இந்த குணங்களோடு நீங்கள் உங்களைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் யார் என்று, இந்த உயரத்துக் போக முடியும் என்று...




Monday, February 15, 2016

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே 


कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥

கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே |
புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||

கார்ய = செயல்களையும்

கரண = அதன் காரணங்களையும்

கர்த்ருத்வே = உண்டாக்கும்

ஹேது:  = பொருள்

ப்ரக்ருதி = பிரக்ரிதி

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

புருஷ: = புருஷன்

ஸுக² = சுகம்

து³:கா²நாம் = துக்கங்களை

போ⁴க்த்ருத்வே = அனுபவிப்பதில்

ஹேது = பொருள்

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

காரிய காரணங்களை ஆக்குவது பிரக்ரிதி.
சுக துக்கங்களை அனுபவிப்பது புருஷன் 

உலகில் வேறுபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஏற்றத் தாழ்வுகள் என்றும் இருக்கும். நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்ந்தது, சூடு பனி, செல்வம் வறுமை என்று எல்லாம் கலந்ததுதான் இந்த உலகம்.

இந்த வேறுபாடுகள் புற உலகில் இருந்து பிறக்கின்றன.  ஒன்று உயர்ந்து இருக்கிறது, ஒன்று தாழ்ந்து இருக்கிறது. ஒன்று கறுப்பாய் இருக்கிறது, மற்றது சிவப்பாய் இருக்கிறது.

ஆனால், இந்த வேற்றுமைகள் நமது சுக துக்கங்களுக்கு காரணம் அல்ல.

நமது சுக துக்கங்களுக்குக் காரணம் நாம் தான்.

நாம் என்று சொல்லும் போது , புருஷன் என்று முன்னால் பார்த்தோமே அந்த நான். நான் என்று உள் உணர்வு, தன் உணர்வு தான் காரணம்.

எப்படி ?

என்னிடம் ஒரு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என் நண்பனிடம் ஐந்து கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றால், அவனைக் கண்டு எனக்கு பொறாமை, எனக்கு அவ்வளவு இல்லையே என்ற ஏக்கம்,  எப்போது எனக்கும் அவ்வளவு  சொத்து இருக்கும் என்ற கவலை எல்லாம் வருகிறது.

அதே சமயம், இன்னொரு நண்பன் பத்து கோடி சொத்து வைத்து இருந்தால், அவன் ஐந்து கோடி சொத்து வைத்து இருக்கும் நண்பனைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

எனவே, கவலை சொத்தில் உள்ள வேறுபாட்டில் இல்லை. என் மனதில் இருக்கிறது.

என் மனம் அலையும் போது , ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, புற உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசை கொள்ளும் போது சுக துக்கங்களை அனுபவிக்கிறது.

இன்பமும் துன்பமும் வெளியில் இல்லை.

நமக்குள்ளேயே இருக்கிறது.

காரண காரியங்கள் வெளியில் இருக்கிறது...பிரகிரிதியில்
சுக துக்கங்கள் உள்ளே இருக்கிறது ...புருஷனில்

ஸ்லோகத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

கீதையின் எளிமையும், ஆழமும் விளங்கும்.









Saturday, February 13, 2016

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்


प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥


ப்ரக்ருதிம்  புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |
விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||


ப்ரக்ருதிம் = பிரக்ரிதி

புருஷம் = புருஷம்

ச = மேலும்

எவ = அதனால்

வித்தி = அறி

அநாதீ = ஆரம்பம் இல்லாதது

உபா = இரண்டும்

அபி = இப்போது

விகாராந்ஸ் = விகாரங்கள், வேறுபாடுகள்

ச  = மேலும்

குணாந்ஸ் = குணங்கள்

ச எவ = மேலும்

வித்தி = அறி

ப்ரக்ருதி = பிரகிரதியில் இருந்து

ஸம்பவாந் = சம்பவிக்கிறது.



பிரக்ரிதியும், புருஷனும் ஆரம்பம் இல்லாதது. வேறுபாடுகளும், குண மாற்றங்களும் பிரக்ரிதியில் இருந்து பிறக்கின்றன. 

உலகில் துன்பமற்று இன்பமாக வாழ வேண்டும் என்றால் , இந்த உலகைப் பற்றி  நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் எதனால் ஆனது, இன்பமும் துன்பமும் எதனால் உண்டாகின்றன ? துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ்வது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் பிரக்ரிதி மற்று புருஷன் என்ற இரண்டால் ஆனது.

பிரக்ரிதி மற்றும் புருஷன் என்றால் என்ன ?

க்ரு என்றால் உருவாக்குவது. ப்ர என்பது உபசர்க்கம். உயர்வுச் சொல். பிரக்ரிதி என்றால்  உருவாக்கப்பட்டது. அல்லது உருவானது. இந்த உருவானவை என்ற சொல்லுக்குள் நாம், நம் புலன்கள்,  நம்மைச்  சுற்றியுள்ள அனைத்து பொருள்கள் மற்றும்   உயிர்கள் அனைத்தும் அடங்கும்.

என்னுடைய கண் , கண் செய்யும் செயலான பார்வை,
என்னுடைய காது, அது செய்யும் செயலான கேட்பது என்று புலன்களும், அவை செய்யும் செயல்களும் அடங்கும்.

நான் பார்க்கும் பொருள்கள், நான் கேட்கும் ஒலிகள் என்று புலன்களால் அறியப்படும் புற உலகும் இந்த பிரக்ரிதியில் அடங்கும்.

சரி, அப்படி என்றால் புருஷன் என்பது என்ன ?

 என் புலன்கள், என் புலன்கள் செய்யும் செயல்கள், அவை உணரும் இந்த உலகம்  என்று எல்லாம் பிரகிரிதியில் அடங்கும் என்றால் மிஞ்சி இருப்பது எது ?

புருஷன் என்பது என்ன ?

இவற்றை அறியும் அறிவு, இவற்றை அறியும் நான் என்ற அந்த உள்ளுணர்வு, அதுதான் புருஷன்.

இந்த ப்ரகிர்தி மற்றும் புருஷன் இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகம்  பிறக்கிறது.

இதில் எது முதலில்  பிறந்தது,எது இரண்டாவது பிறந்தது என்ற கேள்விக்கு வசிட்டர் விடை தருகிறார்.

இரண்டுமே அநாதியானது. இரண்டுக்குமே பிறப்பு என்பது  எல்லை.இரண்டும் எப்போதுமே ஒன்றாகவே இருக்கின்றன.

"என்று நீ, அன்று நான் " என்று தாயுமானவர் கூறியதைப்  போல.

இந்த உலகம் எத்தனையோ வேறுபாடுகளை கொண்டு இருக்கிறது....

 சூடு, குளிர்ச்சி, உயர்வு , தாழ்வு, பள்ளம் , மேடு, ஏழை ,  பணக்காரன்,அறிஞன், முட்டாள், பலசாலி, பலவீனன், ஆண் , பெண் என்று எத்தனையோ வேறுபாடுகளை உள் அடக்கி  இருக்கிறது.

இந்த வேறு பாடுகள் எங்கிருந்து வருகின்றன ? பிரக்ரிதி என்ற புற உலகில் இருந்தா  இருந்தா ? அல்லது புருஷன் என்று கூறப்படும் என் அகத்தில் இருந்தா ?

குணங்களும், வேறுபாடுகளும் பிரக்ரிதியில் இருந்து தோன்றுகின்றன என்கிறது  கீதை.

அப்படி என்றால் புருஷனின் பங்கு என்ன ?

அது அடுத்த ஸ்லோகத்தில்  வருகிறது.