Friday, November 29, 2019

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி 




कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த

பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த

ஹி  = அதனால்,

ப²லம்  = பலன்கள்

த்யக்த்வா = தியாகம் செய்து, துறந்து

மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்

ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு

விநிர்முக்தா: = விடு படுகிறார்கள்

பத³ம் = ஒவ்வொரு அடி

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அநாமயம் = துன்பத்தை விட்டு



அறிவுள்ளவர்கள், செய்யும் செயல்களின் பலனை துறந்து, துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிறவி தளைகளில் இருந்தும் விடு படுகிறார்கள். 


 கீதையின் ஜீரணிக்கமுடியாத ஒரு தத்துவம் உண்டு என்றால் அது இதுதான். செய்யும் செயல்களின் பலனை துறந்து விடுதல். 

யாரால் முடியும்? பலன் இல்லை என்றால் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும்?  

யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தத்துவம். நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றை ஏன் கீதை சொல்கிறது? 

இதை நாம் மூன்று  கோணத்தில் அணுகலாம்.

முதலாவது, எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், நம் புத்தி அதில் முழு முனைப்புடன் இருக்க வேண்டும். (concentration). அப்படி இல்லாமல் மனம் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தால், செய்யும் வேலை சரியாக நடக்காது. 

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், அடுப்படியில் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும், செய்யும் வேலையில் கவனம் தேவை.  கவனக் குறைவாக வேலை செய்தால் அது ஆபத்தில் போய் முடியும். 


சில உதாரணங்கள்....

பேருந்து ஓட்டும் ஒருவர், சாலையில் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுவது ஒன்றிலேயே  அவருக்கு கவனம் இருக்க வேண்டும். மாறாக, இப்படி ஓட்டினால் எனக்கு என்ன கிடைக்கும்?  இந்த வருடம் ஊக்கத் தொகை (bonus ) கிடைக்குமா,   கிடைத்தால் அதில் என்ன வாங்கலாம், எப்படி செலவழிக்கலாம் என்று  நினைத்துக் கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? ஓட்டும் அந்த செயலின் பலன் மேல் மனம் போனால் அவரும்  , அவருடைய வண்டியில் உள்ள எல்லோரும்  வேறு எங்கோ போக வேண்டி இருக்கும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். இதய அறுவை சிகிச்சை என்று  வைத்துக் கொள்வோம். அறுக்கும் போது , இந்த வருடம் பதவி உயர்வு வருமா,  வேறு மருத்துவமனைக்கு சென்றால் இதை விட அதிக சம்பளம் கிடைக்குமா என்று  செய்யும் காரியத்தின் பலன்களில் மனம் போனால், நோயாளி  போகும் இடம் வேறாக இருக்கும். 

ஒரு மாணவன், பரீட்சை எழுதும் இடத்தில் ஒழுங்காக பரீட்சை எழுத வேண்டும். வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு , இதில் மட்டும் நூத்துக்கு நூறு  வாங்கி விட்டால், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்று  யோசித்துக் கொண்டிருந்தால் விடை சரியாக எழுத முடியுமா?

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அந்த காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்று  மட்டும் யோசித்தால் அதை சிறப்பாக செய்ய முடியும். மாறாக, அதனால் என்ன பலன் வரும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால், கவனம் சிதறும். பலன் வரும். நீ பாட்டுக்கு உன் வேலையைச் செய். 

இரண்டாவது,  பலன் மேல் மனம் போனால் என்ன ஆகும்? அந்த பலன் கிடைக்குமோ என்ற சந்தேகம் வரும்.கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம்  வரும். வேறு யாராவது கொண்டு சென்று விடுவார்களோ என்று பார்ப்பவன் மேல் எல்லாம் ஒரு போட்டி மனப்பான்மை வரும். நினைத்த அளவு பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது  என்று குழப்பம் வரும்....

வேலையும் சரியாகச் செய்யாமல், மன குழப்பமும் வந்து சேரும்.

தினம் ஒரு மணி நேரம் நடக்கிறோம் என்றால் அதன் பலன் தானே வரும். ஒரு நாள் நடந்து விட்டு,  அடடா எடை குறையவில்லையே, இது சரி இல்லை என்று நிறுத்தி விட்டால்  என்ன ஆகும்?

மூன்றாவது, மிக நுட்பமானது, நாம் ஒவ்வொரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் போது, அந்த காரியம் நம்மை மாற்றுகிறது. அந்த காரியத்தால் நாம்  பாதிக்கப் படுகிறோம். சிறப்பாக செய்தால் நம்முள் ஏதோ ஒன்று உயர்கிறது. சொதப்பினால், நம்முள் ஏதோ என்று தாழ்கிறது. சிந்தித்துப் பாருங்கள்,  வீடை நன்றாக ஒதுங்க வைத்து, சுத்தம் செய்து, வேண்டாத சாமான்களை தூக்கிப் போட்டு   வீட்டை சரி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மனதுக்குள் ஒரு சந்தோஷம் வருகிறது அல்லவா? வேலை முதுகு நிமிர்ந்து இருக்கும்.  இருந்தும் வேலை முடிவில், ஒரு சந்தோஷம் வரும். நாம் இதை நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி உணர்வு வரும். 

பெண்களுக்கு இது தெரியும். ஒரு நாள் நன்றாக சமையல் செய்தால், பிள்ளைகள் அதை இரசித்து சாப்பிட்டால், அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.  ஒரு வேளை அவளுக்கு ஒன்றும்  மிச்சம் வைக்காமல் கூட பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு போய் விடலாம் . இருந்தும் அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம்   இருக்கும். அவள் செய்ததின் பலன் வேறு யாருக்கோ கிடைத்தது. ஆனாலும், அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கிறதா இல்லையா.   

வீட்டுக்கு உழைப்பதில் நாம் பலன் கருதுவதில்லை. மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு என்று செய்யும் போது பலன் கருதுவதில்லை. அதையே கொஞ்சம் விரித்தால் சமுதாயத்துக்கு, நாட்டுக்கு என்று  வரும். 

யோசித்துப் பார்ப்போம் ...எல்லோரும் பலன் கருதாமல், என்னால் முடிந்ததை செய்கிறேன்...எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு காரியம் செய்தால்   இந்த உலகம் எப்படி இருக்கும் என்று?  சுயநலம் இல்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும்?

அது தான் கீதை. 


2 comments:

  1. நாம் செய்யும் காரியங்களை செவ்வனே செய்து விளைவுகளைப்பற்றி
    லாபமோ அல்லது நஷ்டமோ,பொருட்படுத்தாமல் பற்றுஅற்ற நிலையில் செய்தாலே போதும்.இதுவே நம்மை பிறவி தொடர்புகளிலிருந்து விடுவிக்கும் என்று இருக்கலாமோ என தோன்றுகிறது..
    ஒரு குடியானவன்பலனை எதிர் பாராமல் கடுமையாக உழைத்து,பல காரணங்களினால் விளைவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டால் போறும். விளைவுகளை தியாகம் செய்ய தேவை இல்லை. நஷ்டமோ லாபமோ அதை ஏற்று கொள்ளும் மனப் பக்குவம் இருந்தால் சரி. எதிர் பார்ப்புகளை மாத்திரம் தியாகம் செய்ய வேண்டும்.இது சரியா?

    ReplyDelete
  2. Kindly make a provision for subscribing by mail to this blog and the one on yoga sutras .We would then get a mail whenever you post afresh.

    ReplyDelete