Sunday, March 23, 2014

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை 


मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥९- १२॥

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம்  மற்றும் குழப்பம்
 ஸ்²ரிதா:  = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில்  இருக்கிறார்கள்.

தவறான ஆசைகள், அந்த தவறான ஆசைகளை அடைய தவறான வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற தவறான அறிவு....இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன்  உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.


மூன்று விஷயங்களை பார்க்க வேண்டும்.

ஆசை - கர்மம் - அறிவு.


முதலில், மனதில் ஆசை விளைகிறது.

ஆசை வந்த பின், அது காரியம் செய்யத்  தூண்டுகிறது.

காரியங்களை செய்யும் போது அறிவின் துணை தேவைப் படுகிறது.

இப்படி நம் அறிவும், செயலும் ஆசைகளால் உந்தப் படுகின்றன.

ஆசை தவறான வழியில் போனால், அறிவும் செயலும் அந்த வழியிலேயே போகும்.

அப்படி போகும் போது மனிதன் அசுரனாகிறான்.

எனக்கு வேண்டியதை நான் எப்படியும் அடைவேன் என்று முனைகிறான்.

ஆசை எழும் போது அது சரியா தவறா என்று அறிய வேண்டும்.

 நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், சிந்தனையும் எதை நோக்கி என்று அறிய வேண்டும்.

எதை அடைய நாம் எத்தனிக்கிறோம் ? நம் சிந்தனை சதா சர்வகாலமும் எதை நினைத்துக்  கொண்டிருக்கிறது ? என்று நாம் அறிய வேண்டும்.

ஆசையின் பின்னால் போகும் அறிவும் சிந்தனையும் ஒரு முரட்டுத் தனத்தை உருவாக்கும்.

இங்கே ஆசை என்று சொல்லுவது வீணான ஆசை, தேவையற்ற ஆசை என்பதைக்  குறிக்கும்.

எது தேவையானது, எது தேவையற்றது என்று எப்படி அறிந்து கொள்வது ?

ஆசைகள் உங்களை எங்கே வழி நடத்துகிறது என்று பாருங்கள். அதில் இருந்து  தெரியும் அது எந்த மாதிரி ஆசை என்று.

ஆசைகளை மாற்றுங்கள்.

 செயலும் சிந்தனையும் மாறும்.

உங்கள் செயலும் சிந்தனையும் நல் வழியில் இருக்க வேண்டும் என்றால் உங்கள்  ஆசைகள்  நல்லவைகளாக இருக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள். ....

உங்கள் ஆசைகள் எவை என்று ....

உங்கள் செயலும், உங்கள் சிந்தனையும் புரியும்.

இந்த மூன்றும் தெளிவாகும் போது , நீங்கள் யார் என்று அறியத் தொடங்குவீர்கள்.

3 comments:

  1. அடுத்த ஸ்லோகத்துடன் நாம் இங்கே 50% கீதையை RSஇன் உதவியினால் படித்து முடிக்க இருக்கிறோம். அதற்கு முதலில் அவருக்கு ஆத்மார்த்தமான நன்றி. மிகவும் ஒரு வித்யாசமான உரையை மிக அருமையான விளக்கங்களுடன் எல்லார்க்கும் புரியும்படியாக எளிய தமிழில் தந்து வருகிறார். கீதை சொல்லும் “பலனில் ஈடுபாடு இல்லாமல் கடமையை செவ்வனே செய்ய வேண்டும்” என்ற அறிவுரையை எழுத மட்டும் இல்லாமல் அதன்படி நின்று யாருடைய REPLY அல்லது COMMENT எதிர் பார்க்காமல் தினமொரு ஸ்லோகம் என்று எழுதி 350 ஸ்லோகம் முடிக்க இருக்கிறார். நாம் எல்லாரும் இவ்வளவு நாள் படித்து வந்துள்ளோம். இது நம் வாழ்வில் எவ்வளவு தூரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நம்மை நாமே ஆராயும் நேரம் இப்பொழுது. ஏனென்றால் நாவல் படிக்குமாறு இதை நாம் யாரும் படித்திருக்க மாட்டோம். கண்டிப்பாக நமக்குள் ஒரு மாற்றம் உண்டாகி இருக்கும். அதை இங்கே நீங்கள் எழுதினால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.RS.

    ReplyDelete
  2. "எல்லாமே கடவுள் செயல்" என்று சொல்லிவிட்டால், நாம் செய்ய வேண்டியது என்ன என்பது தெளிவாக இருக்காது. கீதையை ஒரு தனி மனிதனின் கோணத்தில் இருந்து, சாதாரண மனிதர்களுக்குப் புரியும்படி, எல்லாவற்றுக்கும் "கடவுள்" என்று விளக்கம் சொல்லாமல் எழுதியது மிக அருமை.

    RS-இன் கீதை தொடர் இல்லாவிட்டால், நான் எப்போது கீதையைப் படித்திருப்பேன், எப்படிப் புரிந்து கொண்டிருப்பேன் என்பது சந்தேகமே. இதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. I'm reading Gita on a daily basis. Thanks RS for your efforts. There are lot changes in me I'm able to see that. Thanks RS once again.

    ReplyDelete