Tuesday, May 6, 2014

கீதை - 10.8 - அன்பும் புனிதமும்

கீதை - 10.8 - அன்பும் புனிதமும் 


अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||


அஹம் = நான்
ஸர்வஸ்ய = அனைத்தின்
ப்ரப⁴வோ = தொடக்கம்
மத்த: = என்னிடம் இருந்து
ஸர்வம் = அனைத்தும்
ப்ரவர்ததே = உருவாகின 
இதி = இதை
மத்வா = அறிந்து
ப⁴ஜந்தே = பக்தியுடன்
மாம் = என்னை
பு³தா = புத்திமான்கள்
பா⁴வ ஸமந்விதா: = அன்புடன் 


நான் அனைத்தின் தொடக்கம். என்னிடம் இருந்தே எல்லாம் உருவாகின்றன . இதனை அறிந்தவர் அன்புடன்  என்னை வணங்குவார்கள். 

பஞ்சு இருக்கிறது.  அதில் இருந்து நூல் வருகிறது. நூலில் இருந்து துணி வருகிறது. துணியில் இருந்து வெவ்வேறு விதமான ஆடைகள் வருகின்றன.

ஆடைகள் பல விதம். துணியும் பலவிதம். நூல் கூட பலவிதமாக இருக்கலாம். ஆனால், பஞ்சு ஒன்றுதான்.

அனைத்து ஆடைகளும் பஞ்சில் இருந்து தொடங்குகின்றன.

அனைத்து ஆடைகளும் பஞ்சினால் உருவாகின்றன.

ஒவ்வொரு ஆடையும் நினைக்கும் என்னில் இருக்கும் நூல்  வேறு, மற்ற ஆடைகளில் இருக்கும் நூல் வேறு என்று. ஆடைகளுக்குத் தெரியாது அவை எல்லாம் பஞ்சினால் ஆனவை என்று. அறியாமை தடுக்கிறது.

நான் என்பது பஞ்சு என்று நினைத்தால் எல்லாம் ஒன்று தான் என்று தோன்றும்.

நான் என்பது ஆடை, துணி, நூல் என்று நினைத்தால் வேறுபாடு தோன்றும்.

எல்லாம் பஞ்சுதான் என்ற எண்ணம் எல்லா ஆடைகளுக்கும் வந்து விட்டால் ஒன்றின் மேல் மற்றதற்கு அன்பு பிறக்கும். வேற்றுமை இருந்தால் தானே வெறுப்பும்  பகையும் தோன்றும்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்று என்று என்ற எண்ணம் வந்து விட்டால் வாழ்க்கை புனிதம் அடையும். மனதில் அன்பு பிறக்கும்.

அந்த ஒன்றின் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் -  ஆத்மா,உயிர், ஈஸ்வரன்,  கண்ணன்,பரமாத்மா, ஜீவாத்மா என்று எதுவாக வேண்டுமானாலும்  இருக்கட்டும்.

ஏதோ ஒன்று என்று உங்களால் உணர முடிந்தால் நீங்கள் புனிதம் அடைவீர்கள்.




1 comment:

  1. RS good one will try to follow in practical life too

    வேற்றுமை இருந்தால் தானே வெறுப்பும் பகையும் தோன்றும்.

    அனைத்திற்கும் அடிப்படை ஒன்று என்று என்ற எண்ணம் வந்து விட்டால் வாழ்க்கை புனிதம் அடையும். மனதில் அன்பு பிறக்கும்.

    ReplyDelete