Saturday, May 10, 2014

கீதை - 10.12 மேலும் 10.13 - உங்களுக்கு இறைவனைத் தெரியுமா ?

கீதை - 10.12 மேலும் 10.13 - உங்களுக்கு இறைவனைத் தெரியுமா ?


अर्जुन उवाच
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥

அர்ஜுந உவாச
பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |
புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பரம் ப்³ரஹ்ம = பர பிரமம்

பரம் தா⁴ம = பரம பதம்
பவித்ரம் = தூய்மை
பரமம் ப⁴வாந் = அனைத்திலும் உயர்ந்தவன் 
புருஷம் = புருஷம்
ஸா²ஸ்²வதம் = நிரந்தரமானவன்
திவ்யமாதி தே³வம் = திவ்யம் + ஆதி + தேவம் = திவ்யமான ஆதி தெய்வம்
 அஜம் = பிறக்காதவன் , தொடக்கம் இல்லாதவன்
 விபும் = உயர்ந்தவன்


அர்ஜுனன் சொல்லுகிறான்: 
நீயே பரப்பிரம்மம், 
நீயே பரம பதம் 
நீயே சிறந்த தூய்மை
உன்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், உயர்ந்தவன் என்றும் 


இந்த ஸ்லோகத்தை அடுத்த ஸ்லோகத்தோடு சேர்த்து படிக்க வேண்டும். இந்த சுலோகம்  தொடர்ச்சியாக அடுத்த ஸ்லோகத்தில் முடிகிறது.

எனவே அதையும் சேர்த்து பார்க்கலாம்.

आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥१०- १३॥

ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே³வர்ஷிர்நாரத³ஸ்ததா² |
அஸிதோ தே³வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்³ரவீஷி மே || 10- 13||

ஆஹு = சொல்கிறார்கள் 
த்வாம் = உன்னைப் பற்றி
ரிஷ்ய = ரிஷிகள்
ஸர்வே = அனைவரும்
தேவர்ஷிர் நாரத = தேவ ரிஷி நாரதர்
ததா = மேலும் 
அஸிதோ =அசிதா
தே³வலோ : = தேவலர்
வ்யாஸ= வியாசர்
ஸ்வயம் = நீயும்
ச  = மேலும்
எவ = நிச்சயமாக
ப்³ரவீஷி = விளக்கினாய்
மே = எனக்கு

அனைத்து முனிவர்களும் , தேவ ரிஷி நாரதரும், அசிதரும் தேவலரும் வியாசரும் எதைச் சொன்னார்களோ அதையே நீயும் எனக்கு இப்போது என்னெதிரில் சொல்கிறாய். 

இறைவன் இருக்கிறானா இல்லையா ? இருக்கிறான் என்றால் எப்படி இருப்பான் ? இறைவனைப் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம். அவன் நேரில் வந்தால்  அதே மாதிரி இருப்பானா ? அப்படி இல்லாவிட்டால் என்ன  செய்வது ? அந்த குணாதிசயங்கள் இல்லாதா ஒரு ஆளை இறைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ?

இறைவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா  என்று யாரைக் கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்கள் மிக மிகக் குறைவே. எல்லோருக்கும் இறைவனைப் பற்றி ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இறைவனைப் பற்றி தெரியும் என்றால் பின் எதற்கு இந்த தேடல் ?

நான்கு கை, சங்கு , சக்கரம், திரிசூலம், நான்கு தலை, பட்டு பீதாம்பரம், கையில் கதை, மண்டை ஓட்டு  மாலை என்று பல அடையாளங்கள் நமக்குத் தெரியும். இவை எல்லாம் இல்லாத ஒரு ஆளை இறைவன் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ?

சரி, இந்த மாதிரி அடையாளங்களோடு ஒருவர் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோமா ?

ஒரு வேளை மந்திரவாதியாக இருப்பானோ ? ஒரு வேளை எவனோ வேஷம் போட்டு நம்மை  எமாற்றுகிரானோ என்ற சந்தேகம் வரும் அல்லவா ?

அவன் என்னதான் மாயா ஜாலாங்கள் செய்து காட்டினாலும் சந்தேகம் போகாது.

அடையாளங்கள் பொருந்தினாலும் சந்தேகம், பொருந்தாவிட்டாலும் சந்தேகம்.

இறைவனே நேரில் வந்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சந்தேகம் விடாது.

என்ன செய்வது ?

அர்ஜுனனின் நிலையில் உங்களை வைத்துப்  பாருங்கள்.

கண்ணன் தன்னைப் பற்றி நிறைய கூறுகிறான்.

அர்ஜுனன் அதை வியாசரும், நாரதரும் மற்றவர்களும் கூறியதோடு ஒப்பிட்டுப்  பார்க்கிறான்.

இரண்டும் ஒத்துப் போகிறது.

மனித மனம் - சந்தேகத்தின் உறைவிடம்.

இரண்டும் ஒத்து போனாலும் அர்ஜுனனின் சந்தேகம் தீரவில்லை.


அர்ஜுனனின் சந்தேகம் ஒரு புறம் இருக்கட்டும்.

வியாசர் என்ன சொல்ல  வருகிறார் ?

நீங்கள் இறைவனை மற்றவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு அறிய முடியாது.

நீங்களே கண்டு உணர வேண்டும். நாரதரும், அஸ்வினி தேவர்களும், வியாசரும்  சொன்னாலும், அந்த இறைவனே நேரில் வந்தாலும் நீங்களே முயன்று  அறிந்தால் அன்றி இறைவனை அறிய முடியாது.

புத்தக அறிவு, மற்றவர்கள் சொல்லக் கேட்ட அறிவு இவை பயன்படாது.

யார் சொன்னாலும் உங்கள் சந்தேகம் மட்டும் போகப் போவது இல்லை. பின் எதற்கு அனாவசியமாக மற்றவர்கள் சொல்வதை கேட்டும் படித்தும் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ?

வியாசரும், நாரதரும் சொன்ன பிறகும், கண்ணனே நேரில் வந்த பிறகும், அவனே அவற்றை மீண்டும் சொன்ன பிறகும் அர்ஜுனனுக்கு சந்தேகம் போக வில்லை.

உங்களை நினைத்துப் பாருங்கள் ?


நீங்கள் இது வரை அறிந்தது, கேட்டது, எல்லா வற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில்  வையுங்கள்.

இறைவன் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதுதான் உண்மை. அந்த உண்மையில்  இருந்து தொடங்குகள்.

உண்மை உங்களை வழி நடத்திச் செல்லும்.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி

1 comment:

  1. Good idea RS But before we try to know about God , try to know little more about ourself

    நீங்கள் இது வரை அறிந்தது, கேட்டது, எல்லா வற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் வையுங்கள்.

    இறைவன் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதுதான் உண்மை. அந்த உண்மையில் இருந்து தொடங்குகள்.

    உண்மை உங்களை வழி நடத்திச் செல்லும்.

    பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி

    ReplyDelete