Tuesday, May 20, 2014

கீதை - 10.15 - இந்த உலகின் இறைவன் நீங்கள்

கீதை - 10.15 - இந்த உலகின் இறைவன் நீங்கள் 


स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥१०- १५॥

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த² த்வம் புருஷோத்தம |
பூ⁴தபா⁴வந பூ⁴தேஸ² தே³வதே³வ ஜக³த்பதே || 10- 15||

ஸ்வயம் = தானே
எவ = நிச்சயமாக
ஆத்மான = உன்னால்
ஆத்மாநாம் = உன்னை
வேத்த = அறிவாய்
த்வம் = நீ
புருஷோத்தம = புருஷோத்தமா
பூதபாவந = அனைத்து பூதங்களின்
 பூ⁴தேஸ = தலைவனே
தே³வதே³வ = தேவர்களின் தேவனே
ஜக³த்பதே = உலகின் தலைவனே

புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். நீயே பூதங்கள் அனைத்தும் ஆனாய். பூதங்களின் தலைவன் நீயே.  தேவ தேவ! இந்த உலகத்தின் இறைவன் நீ. 

உன்னை நீயே அறிவாய்.....உங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். உங்களுக்குள் இருக்கும் உங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். வேறு யாரும் உங்கள்ளுக்கு உங்களை  அறிமுகப் படுத்த முடியாது. நீங்கள் யார், உங்களை  மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்துவது எது, உங்கள் திறமை, பயம், கனவு, ஆசைகள், உங்களை பாதித்தது, பாதிகின்றவை எவை எவை ....இவற்றை எல்லாம்  நீங்கள் மட்டுமே அறிய முடியம். உங்களை உங்களுக்குள் தேடுங்கள்.

புருஷ் என்றால் அனைத்திலும் இருக்கும் ஒரு உயிர் பொறி. அதை உயிர் என்று சொல்லுங்கள், ஆத்மா என்று சொல்லுங்கள், சக்தி என்று சொல்லுங்கள்...அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த ஒன்றை சமஸ்க்ரிதத்தில் புருஷ்  என்று சொல்கிறார்கள்.

புருஷோத்தமன் என்றால் அனைத்து சக்திகளுக்கும் சக்தியாக இருப்பவன். அந்த  உயிரை செலுத்துபவன். எது அந்த உயிர் சக்தியை செலுத்துகிறது ? அது புருஷோத்தமன்.


நீயே பூதங்கள் அனைத்தும் ஆனாய்...எல்லாம் ஒன்றே. காண்பதும், காணப்படுவதும் ஒன்றே. நீ வேறு நான் வேறு அவர் வேறு என்ற வேற்றுமை இல்லாமல் எல்லாம் ஒன்றே. நீங்களும், நானும் அவனே. அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் எல்லாம் அவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா ? எல்லா உயிர்களும் சமம். உயர்வு தாழ்வு கிடையாது. உள்ளவன், இல்லாதவன்;  படித்தவன், படிக்காதவன்; ஏழை பணக்காரன் என்று எல்லாம் ஒன்று தான்.  


பூதங்களின் தலைவன் நீயே....நாம் பொருள்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.  அவை நம்மை விட உயர்ந்ததாகப் போகிறது. சொத்துக்காக உயிரை விடுகிறார்கள். உயிரை எடுக்கிறார்கள். வாழ் நாள் எல்லாம் செலவழித்து அதை அடைய முயற்சி செய்கிறார்கள். நீங்கள், இந்த பொருள்களின் தலைவன்.  அவை உங்களுக்கு அடிமை.  நீங்கள் அவற்றிற்கு அடிமை இல்லை. பொருள் தொலைந்து போனால் வருந்துகிறார்கள். பொருள்களை, சொத்துகளை, செல்வத்தைத் தாண்டிப் போங்கள். அவை வேண்டாம் என்று கீதை சொல்லவில்லை. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றிற்கு அடிமை ஆகாதீர்கள்.  


தேவ தேவ! ... தேவர்களுக்கு தேவனே. நீங்கள் அனைத்துக்கும் மேலானவர்கள். 


இந்த உலகத்தின் இறைவன் நீ.... இந்த உலகை படைத்தவர்கள் நீங்கள். உங்களின் புலன்களும், அறிவும் சேராமல் இந்த உலகம் உருவாகாது. நீங்கள் காணும், உணரும் உலகம் நீங்கள் உருவாக்கியது. வெளியில் இருக்கும் உலகம்  எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் அதை அவர்களின் அறிவு, அனுபவம், ஞாபகங்கள் இவற்றை கொண்டு பார்க்கிறார்கள், அறிகிராரர்கள், உணர்கிறார்கள். நீங்கள் காணும் உலகின் இறைவன் நீங்கள்.  அப்படி சொல்லும் போது, ஒன்றை நாம் உணர வேண்டும். இந்த உலகை நாம்  மாற்ற முடியும். நம் எண்ணங்கள் மாறும்போது உலகம் மாறும்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உன்னிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்  என்றார் நாவுக்கரசர்.

சூடும், குளிரும், இன்பமும், துன்பமும், நல்லதும் கெட்டதும் நாம் உருவாக்குவது.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம்.





2 comments:

  1. Super RS , after reading I feel as if I'm blessed and peaceful this is the ultimate knowledge

    ReplyDelete
  2. I believe in these lines

    இந்த உலகை நாம் மாற்ற முடியும். நம் எண்ணங்கள் மாறும்போது உலகம் மாறும்.

    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உன்னிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் என்றார் நாவுக்கரசர்.


    சூடும், குளிரும், இன்பமும், துன்பமும், நல்லதும் கெட்டதும் நாம் உருவாக்குவது.

    ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம்.

    ReplyDelete