Monday, August 11, 2014

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு 


दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥११- ११॥

தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||

திவ்யமால்யாம்பரதரம் = திவ்ய + மாலா + அம்பற + தர = திவ்யமான மாலைகளை மற்றும் உடைகளை

திவ்யகந்தாநுலேபநம் = திவ்ய + கந்த + அனுலுபேன = திவ்யமான மணம் வீசும் பொருள்களை பூசிக் கொண்டு
 
ஸர்வாஸ்சர்யமயம் = சர்வ + ஆச்சர்ய +   மயம் =  அனைத்து   ஆச்சரியங்களையும் கொண்ட

தேவமநந்தம் = தேவம் + அநந்தம் = முடிவில்லா தேவ வடிவம் 

விஸ்²வதோமுக²ம் = அனைத்து திக்குகளிலும் பார்க்கும் முகங்கள்

திவ்ய மாலையும், ஆடையும் அணிந்து கொண்டு, வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு, மிக மிக ஆர்ச்சரியப்  படத்  வகையில் அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த வடிவம். 

அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவை எப்படி வர்ணிப்பது. நம்மால் நினைத்து பார்க்க முடியும்.  அதை எழுத்தில் வடிப்பது என்றால் எவ்வளவு சிக்கல்.

உலகனைத்தையும் ஒன்றடக்கிய உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உருவம் , வியாசர் காட்டும் விஸ்வ ரூபத்தோடு மிகச் சரியாக  பொருந்தும்.

அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு. உலகில்  உள்ள அனைத்து ஜீவராசிகளும்  சேர்ந்த ஒரு உருவம் என்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு  பக்கம் பார்த்துக் கொண்டு  இருக்கும் தானே ? அதனால், "அனைத்து  திசைகளிலும் பார்த்துக் கொண்டு"  என்றார்.

இப்படி ஒரு வடிவை இது வரை நாம் கற்பனை செய்து கூட பார்த்து இருக்க மாட்டோம்.

அப்படி  நினைத்துப் பார்க்கும் போது "அட, ஆமா, சரியாத்தான் இருக்கு " என்ற ஆச்சரியம்   மேலிடும்.அதைத்தான் சொல்கிறார் "மிகவும் ஆச்சரியப் படத் தக்க வகையில் " என்று.

 இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல.

எல்லாம் சேர்ந்த ஒன்றைத்தான்  இறைவன் என்று நாம் சொல்கிறோம்.

அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உயர்வும் உண்டு, தாழ்வும் உண்டு.

அப்படிப் பட்ட விஸ்வரூபத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


No comments:

Post a Comment