Friday, May 10, 2013

18. கீதை - எல்லாம் பார்வையில் இருக்கிறது


கீதை - எல்லாம் பார்வையில் இருக்கிறது 


உங்கள் கையையை வெட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? அதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா ? ஒருக்காலும் மாட்டீர்கள் தானே. 

சொல்லுவது ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்கள் கையை எடுக்காவிட்டால், அதில் உள்ள தோற்று நோய் மற்ற இடங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்து என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் ? என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் எப்படியாவது அந்த கையை எடுத்து விடுங்கள் என்று சொல்வீர்கள் தானே ?

ஏன், இந்த மாற்றம். பார்க்கும் கோணம் மாறியதால், உங்கள் மனம் மாறுகிறது. 

நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ள மனிதர்களும் நிகழ்வுகளும் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கின்றது. ஒரு கோணத்தில் பார்த்தால் பிரச்சனை போல் தெரியும் ஒன்று இன்னொரு தளத்தில் இருந்து பார்த்தால் பிரச்சனையாக இருக்காது. 

உடல் சார்ந்த ஒரு தளம். அங்கே ஒரு பெண் போய்க் கொண்டிருக்கிறாள் என்பது ஒரு உடல் சார்ந்த தளம். 

அந்த பெண் இதயம், நுரையீரல், செல், சைடோப்லாசம் இவற்றின் தொகுதி என்று அறிவியல், உயிரியல் சார்ந்த நிலையில் ஒரு தளம். அந்த பெண்ணுக்கும் மற்ற எந்த பெண்ணுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எல்லோரும் நரம்பு, சதை, எலும்பு இவற்றின் தொகுதிதான். ஒரு மருத்துவர் ஒரு பெண்ணின் udalai இப்படித்தான் பார்ப்பார்.  

உணர்ச்சிகள் கொண்ட இன்னொரு தளம் - அந்த பெண் என் அம்மா. உடனே அந்த பெண்ணைப் பற்றிய பல விஷயங்கள் நம் மனதில் மாறுகிறது. அதுவே மனைவி, மகள், காதலி, என்று பல உணர்வு தளங்களில் மாறலாம். நம் உணர்ச்சிகளும், நாம் அந்த பெண்ணோடு நடந்து கொள்ளும் விதமும் அதைப் பொறுத்து  மாறும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் அந்த உடல் தன தாய் என்று நினைத்தால், அவருக்கு தடுமாற்றம் வரும். ஆபரேஷன் செய்ய வேண்டிய கடமையையை அவரால் சரிவர செய்ய முடியாது.  

இவற்றை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. இதையும் தாண்டி இன்னொரு தளம் இருக்கிறது. 

 அர்ஜுனனின் குழப்பம் எதிரில் இருப்பவர்களை உணர்வு தளத்தில் இருந்து மட்டும் பார்த்ததால் வந்தது. 

உடலையும், உணர்வையும் தாண்டி இன்னொரு தளம் இருக்கிறது. அதைத்தான் கிருஷ்ணன் இந்த அத்யாயத்தில் அர்ஜுனனுக்கு காண்பிக்கிறான். 

புரிந்து கொள்ள கொஞ்சம் சிக்கலான தளம். ஒரு கோணம்.

அது என்ன ?  பார்ப்போம்.

No comments:

Post a Comment