Thursday, May 23, 2013

33. ஆத்ம ஞானம் - சம நிலை

33. ஆத்ம ஞானம் - சம நிலை



அனைத்திலும் நிறைந்திருப்பது ஆத்மாதான் என்ற ஞானம் பிறக்கும் போது என்ன ஆகிறது ? 

எல்லாமே புனிதம் அடைகின்றன. உன்னுள் இருப்பதும், என்னுள் இருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் வந்து விட்டால், நீ என்னை விட உயர்ந்தவனும் இல்லை, என்னை விட தாழ்ந்தவனும் இல்லை. 

நீ எனக்கு எதிரியும் இல்லை, நீ எனக்கு நண்பனும் இல்லை. 

உயர்ந்தவன், தாழ்ந்தவன், 
பணக்காரன், ஏழை,
படித்தவன், படிக்காதவன்
கறுப்பன், சிவப்பன்
அரசன், ஆண்டி 
குரு, சீடன்

என்ற அனைத்துவித பேதங்களும் மறைந்து போகும். எல்லாம் சரி நிகர் சமானம் என்ற சமநோக்கு ஏற்படும். 

நீ என்னில் இருந்து வேறு பட்டவன் என்ற எண்ணம் வரும் போது. அன்போ பகையோ வருகிறது. 
நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல என்ற ஞானம் வரும் போது, பகைமை அழிகிறது.

எனக்கு நான் பகைவனா ? எனக்கு நான் நண்பனா ?

நான் நானாக  இருக்கிறேன். எனக்கு நான் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. 

எல்லாம் ஆத்மா தான் என்ற எண்ணம் வரும்போது அனைத்து செயல்களும் நின்று போகும். 

போற்றுவதும் இல்லை, தூற்றுவதும் இல்லை. 

மேடு பள்ளம் இருந்தால், தண்ணீர் மேட்டில் இருந்து பள்ளத்திற்கு ஓடும். 

தரை சமப் பட்டால் நீர் ஓட்டம் நின்று போகும். 

ஆத்ம ஞானம் ஏற்படும் போது, கர்ம வினை நின்று போகும். 

பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை. 

நிற்காமல் சுழலும் வினை என்ற சக்கரம் முதன் முதாலாக நிற்கும். 

ஆணும், பெண்ணும், உயர்வும் தாழ்வும், நட்பும் பகையும், விண்ணும் மண்ணும்  இல்லாமல் இருக்க முடியுமா ? இவை எல்லாம் இருக்கிறதே ?  எல்லாம் வேறு வேறாக இருக்கிறதே ? எப்படி இவை எல்லாம் ஒன்றாக முடியும் ? 

தன்னை பிறர் ஏவாமல் உண்பதுவே ஊண்
ஒன்றாக காண்பதுவே காட்சி
புலன் ஐந்தும் வென்றான் வீரமே வீரம்
என்றானும் சாவாமல் கற்பதுவே கல்வி 

பேதம் இல்லமால் எல்லாம் ஒன்றாக காண்பதுவே காட்சி. 

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

இந்த விண்ணும், மண்ணும், அதில் உள்ள இத்தனை விதமான பொருள்களும் உயிர்களும் எல்லாம் அவனே...அப்படி ஒரு காட்சி காண முடியும் என்றால் அது கண்ணுக்கு அமுதம் போன்றது 

சரி, எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பது ஆத்மா என்றே வைத்துக் கொள்வோம்....அப்படி என்றால் ஏன் அர்ஜுனன் துரியோதனை கொல்ல வேண்டும் ? கொல்பவனும், கொல்லப் படுபவனும் ஒன்று என்றால் ஏன் கொல்ல வேண்டும் ?

நல்ல கேள்வி. இதற்க்கு விடை கண்டாக வேண்டும்

No comments:

Post a Comment