Saturday, May 18, 2013

21 - கீதை - இறைவனுக்கு நாம் இடும் கட்டளைகள்


21 - கீதை - இறைவனுக்கு நாம் இடும் கட்டளைகள் 


அர்ஜுனன் தன் பாட்டுக்கு ஏதோ புலம்பிக் கொண்டு இருக்கிறான். அதை எல்லாம் காதிலேயே வாங்காத மாதிரி கிருஷ்ணன் ஆத்மா, அது பிறப்பது இல்லை, இறப்பது இல்லை என்று ஏதோ சொல்லிக் கொண்டு போகிறான். 

என்ன தான் நடக்கிறது இங்கே ?   கொஞ்சம் நிதானமாகப் பார்ப்போம்.

முதலில் அர்ஜுனன் கண்ணனிடம் " என் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து...என்னோடு போரிட வந்திருக்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும் " என்றான்.

வெகு சீக்கிரத்தில், " எனக்கு எது சரி எது தவறு என்று தெரியவில்லை. நான் உன்னை சரணாகதி அடைகிறேன். நீ எனக்கு கட்டளை இடு " என்றான் அர்ஜுனன் கண்ணனிடம். 

இது நம் வாழ்விலும் நடப்பது தானே. 

முதலில் அர்ஜுனன் தான் சொல்லியபடி கண்ணன் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

நாம் செய்வது இல்லையா? நாம் நினைக்கும் படி எல்லாம் கடவுள் நடக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இல்லையா ?

இன்னைக்கு மழை வரக் கூடாது, இன்னைக்கு புகை வண்டி தாமதமா கிளம்ப வேண்டும் , என் பையன் நல்ல மார்க் வாங்கணும், நாம் கடவுளுக்கு எவ்வளவு உத்தரவு போடுகிறோம். சில சமயம் அவரை நமக்கு வேலை ஆளாக கூட மாற்றி விடுகிறோம்...நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன், மொட்டை போடுகிறேன், நடந்து வருகிறேன் என்று எல்லாம் அவரோடு வியாபாரம் பேசுகிறோம்.

முதிர்ச்சி வர வர கேட்பதை குறைக்கிறோம். "வேண்டும் பரிசு ஒன்று உண்டெங்கில், அதுவும் உந்தன் விருப்பு அன்றே" என்று மாணிக்க வாசகர் கூறிய மாதிரி, எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டு விடுகிறோம். 

இன்னொரு விஷயம்...அர்ஜுனனுக்கு என்ன வேண்டும் ? போரை விட்டு போக வேண்டும் என்றால் போக வேண்டியது தானே. கிருஷ்ணா, தேரை என் அரண்மனைக்கு விடு. நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. 

ஒண்ணு போர் செய்யணும், இல்லை என்றால் போர்க் களத்தை விட்டு விலகிப் போகணும். இரண்டும் இல்லாமால் இது என்ன தர்க்கம் பண்ணிக் கொண்டு?

அர்ஜுனனுக்கு என்ன தான் வேண்டும்? ஏன் கிருஷ்ணன் அவனின் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்ல வில்லை?

சிந்திப்போம் ....

No comments:

Post a Comment