Tuesday, July 10, 2018

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1



अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥

அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய :|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர : ||1-41||

அத⁴ர்மாபிபவாத் = அதர்மம் தலை தூக்கும் போது

க்ருஷ்ண  = கிருஷ்ணா

ப்ரது³ஷ்யந்தி = அவர்கள் கெடுக்கிறார்கள்

குலஸ்த்ரிய :| = குலப் பெண்கள்

ஸ்த்ரீஷு = எப்போது பெண்கள்

து³ஷ்டாஸு  = கெடுகிறார்களோ

வார்ஷ்ணேய = விருஷினி குல தோன்றலே

ஜாயதே = பிறக்கிறது

வர்ணஸங்கர :  = வர்ண குழப்பங்கள் உண்டாகின்றன

கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது.

வர்ணாசிரம தர்மத்தை கீதை தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச் சாட்டு இங்கிருந்து எழுகிறது.

வர்ணாசிரம கொள்கை தவறா ? சரியா என்ற விவாதத்திற்குள் போவதற்கு முன், வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒன்றை சரியாக அறிந்து கொள்ளாமலே அதை எவ்வாறு சரியா தவறா என்று எடை போடுவது ?  பலர் செய்கிறார்கள். அது பிழை.

சமுதாயத்தை ஒரு கட்டு கோப்பாக நடத்த நினைத்த நம் முன்னோர்கள், இதை எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தார்கள்.

தனி மனிதனை உயர்த்த வேண்டும். அது எந்த வழி முறையாக இருந்தாலும், ஒரு  மனிதனை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவனை வழி நடத்த வேண்டும். அவனை ஒரு உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தேவை. தனி மனிதனை விட்டு விட்டு ஒரு வழி முறை கொண்டு வர முடியாது.

சரி, தனி மனித முன்னேற்றம் மட்டும் போதுமா ? நாடும், வீடும், இந்த சமுதாயமும் எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டு விடலாமா ? தனி மனித சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டா ? யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா ?

முடியாது.

தனி மனிதனும் முக்கியம். சமுதாயமும் முக்கியம். இந்த இரண்டையும் சேர்த்து ஒரு வழி முறை செய்ய வேண்டும் என்று சிந்தித்து உருவாக்கியதுதான் இந்த  வர்ணாசிரம தர்மம்.

உலகில் , எந்த மூலையிலும் இப்படி ஒரு கோட்பாடை சிந்தித்துக் கூட பார்த்தது இல்லை யாரும்.

ஒரு மிகப் பெரிய கோட்பாடு. சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அறிவின் ஆழத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.


அப்படி என்ன பெரிய தத்துவம் இது என்று கேட்கிறீர்களா? பெரிய விஷயம் தான்.  விரிவாக நாளை பார்ப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/141-1.html




No comments:

Post a Comment