Friday, July 6, 2018

பகவத் கீதை - 1.38 - குலத்தை அழிப்பதால் வரும் தீங்கு

பகவத் கீதை - 1.38 -  குலத்தை அழிப்பதால் வரும் தீங்கு 



यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्॥३८॥

யத்³யப்யேதே ந பஸ்²யந்தி லோபோ⁴பஹதசேதஸ :|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் மித்ரத்³ரோஹே ச பாதகம் ||1-38||


யதி = இதனால்

அபி = மேலும்

ஏதத் = இவர்கள்

ந = இல்லை

பஸ்²யந்தி = அவர்கள் காணவில்லை

லோபோ = பேராசையில்

பஹதசேதஸ : = அகப்பட்டு

குலக்ஷயக்ருதம் = குடும்பத்தை அழித்து

தோ³ஷம்  = குற்றம்

மித்ர = நண்பர்கள், உறவினர்கள்

த்³ரோஹே = துரோகம் செய்து

ச = மேலும்

பாதகம் = பாவச் செயல்களை செய்து

பேராசையால், அறிவிழந்த இவர்கள் குடும்பத்தை அழிப்பதால் வரும் தீங்கையும், நண்பர்களுக்குச் செய்யும் துரோகத்தையும் அறிந்தார்கள் இல்லை. 

பலவிதங்களில், இது ஒரு முக்கியமான சுலோகம்

அர்ஜுனன் புலம்பல் தொடர்கிறது.

இந்த ஸ்லோகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எது என்றால்


"குலக்ஷயக்ருதம்" என்ற சொல்.

குலத்தை அழித்து என்று பொருள்.

ஆஹா, கீதை குல தர்மம் பேசுகிறது. மனு தர்மம் பேசுகிறது என்று ஒரு சாரார் இதில் குற்றம்  காண்கிறார்கள். போரில் , குலம் அழிந்து போகும் என்கிறான் அர்ஜுனன். அதைப் பற்றி மேலும் கூற இருக்கிறான்.

குலம் என்ற சொல்லுக்கு - குடும்பம், குழு , சமுதாயத்தின் ஒரு பகுதி (tribal ) என்று கூட சொல்லலாம்.

போர் என்று வந்தால், பல ஆண்கள் அழிந்து போவார்கள். குடும்பத் தலைவன் இல்லாத குடும்பம் சீரழியும். பெண்கள் விதவை ஆவார்கள். பிள்ளைகள், தகப்பன் இல்லாமல்  துன்பப் படும். சமுதாயம் சீரழியும்.

பெண் எவ்வாறு குடும்பத்தை நிர்வாகம் செய்வாள். பணத்துக்கு என்ன செய்வாள். பிள்ளைகள் எப்படி படிக்கும் ? அவர்கள் தவறான வழியில் போகும் சாத்திய கூறுகள் அதிகம்.

போர் என்பது ஒரு குறிப்பிட்ட தலைமுறையை மட்டும் அல்ல, வருங்கால சந்ததியையும் அழிக்கும் என்கிறான்.

உண்மை தானே.

போரால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை.

கௌரவர்கள்தான் ஏதோ பேராசையில் போர் தொடுக்க வந்து விட்டார்கள் என்றால், நாமும் ஏன் போர் செய்ய வேண்டும். நமக்கு அறிவு இல்லையா என்று கேட்கிறான்.

இவற்றை கேட்கும் போது நமக்கே அர்ஜுனன் சொல்வது எல்லாம் சரி என்றே தோன்றும்.

சரி என்றால், அர்ஜுனன் சொன்னதைக் கேட்டு கண்ணன் போர் களத்தை விட்டு அல்லவா போய் இருக்க வேண்டும். அர்ஜுனன் சொன்னது தவறு என்பது கண்ணன் எண்ணம். கண்ணன் இவற்றை எல்லாம் மறுத்து பின்னால் பேச இருக்கிறான்.

இன்னும் ஓரிரு ஸ்லோகங்கள்தான். அர்ஜுனன் புலம்பல் முடிந்து விடும். அதையும் பார்த்து விடுவோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/138.html






No comments:

Post a Comment