Monday, August 12, 2024

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும்

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும் 



மனிதனின் துன்பங்களுக்கான காரணங்களை சொல்லிக் கொண்டு வருகிறது. 


முதலில், கோபம் 


இரண்டாவது, பற்று 


மூன்றாவது,  திருப்தி அடையாத மனம்.


அடுத்ததாக இன்று நாம் காண இருக்கும் ஸ்லோகத்தில், யோக நிலை அடையாதவனுக்கு இன்பம் இல்லை என்கிறது கீதை. 


யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை. 


புத்தி இல்லை என்றால் மனோபாவம் இல்லை 


மனோபாவம் இல்லை என்றால் சாந்தி இல்லை 


சாந்தி இல்லை என்றால் இன்பம் இல்லை. 


என்கிறது கீதை. 


பாடல் 


नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।

न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्॥६६॥


நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|

ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் 


பொருள் 


நாஸ்தி  = இல்லை 


புத்திர் = புத்தி 


அயுக்தஸ்ய = யுக்தி என்றால் இணைப்பது. யோகம். அ+யுக்தச்ய = யோகம் இல்லாமல் இருப்பது. யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை.  


ந சா = இல்லை 


யுக்தஸ்ய = யோகம் 


பாவநா| = குறிக்கோள், மனதை ஒரு நிலைப் படுத்துதல், நிலையான புத்தியை அடைதல் 


ந  சா = இல்லை 


பாவயத: = பாவனை. பாவனை இல்லை என்றால் 


ஸாந்தி = சாந்தி, மன அமைதி 


அஸா²ந்தஸ்ய = மன அமைதி இல்லாவிட்டால் 


குத: = எப்படி ?


 ஸுக²ம் = சுகம், இன்பம் வரும் ?


யோக நிலையை அடையவில்லை என்றால் புத்தி ஒழுங்காக வேலை செய்யாது. அப்படி சரியாக வேலை செய்யாத புத்தி இருந்தும் இல்லாத மாதிரிதான். 


புத்தி இல்லை என்றால், மனதை ஒருமுகப் படுத்த முடியாது (concentration, meditation ).


மனம் ஒருநிலைப் படாவிட்டால் மன அமைதி கிடைக்காது. 


மனம் அமைதி அடையாவிட்டால் இன்பம் வராது.


பின்னால் இருந்து போவோம்.


இன்பம் வேண்டும் என்றால் முதலில் மனம் அமைதி அடைய வேண்டும். இன்பம் என்பது பொருளில் இல்லை. வெளி உலகில் இல்லை. நம் மனதில் இருக்கிறது. அதுவும், அமைதியான மனதில் இருந்து இன்பம் பிறக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது என்ன ஆகுமோ, இது இப்படி ஆகி விடுமோ என்று பயத்திலும், கோபத்திலும், தாபத்திலும், பற்றிலும் கிடந்து அலைகழியும் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனதை முதலில் சாந்தமாக்க வேண்டும். 


எப்படி?


அதற்கு மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். "மனோபாவம்" என்கிறது கீதை. மனம் ஒன்றில் நிலைத்து நிற்க வேண்டும். ஒரு நிமிடத்துக்குள் நாலு தொலைபேசி அழைப்பு, அஞ்சு whatsapp செய்தி, அஞ்சு ஆறு செய்தித் துணுக்குகள், நடுவில் இரண்டு sms , facebook update, இடையில் டிவியில் யார் பதக்கம் பெற்றார்கள், எங்கே வெள்ளம் வந்தது, யார் கொள்ளை அடித்தார்கள் என்ற செய்தி....இத்தனை புயல்களுக்கு நடுவில் மனம் எப்படி ஒருநிலைப் படும்?   


இவற்றை எல்லாம் விடுத்தால் மனம் ஒருநிலைப் படும், அப்போது அது சாந்தி அடையும். 


இந்த சிக்கல்களில் இருந்து எப்படி விடுபடுவது?  


யோகம். யோகம் என்பது ஏதோ youtube இல் செய்து காட்டும் உடற் பயிற்சி அல்ல. இப்போதெல்லாம் யோகம் என்றால் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் உடற் பயிற்சி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். 


"யோகா கிளாஸ் க்கு போயிட்டு வந்தேன்" என்பது ஒரு பெருமை.


யோகம் என்பது அது அல்ல. 


யோகத்தின் நோக்கம் உடற் பயிற்சி அல்ல. மனதை ஒருமுகப் படுத்தி சமாதி நிலையை அடைவது. 


இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரதிக்யாகாரம், தியானம், தாரணை, சமாதி என்ற எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். அதைப் பயிற்சி செய்யாதவனுக்கு மனம் கட்டுக்குள் நிலைக்காது. சிதறிய மனத்தில் அமைதியும், சாந்தியும், இன்பமும் இல்லை. 


எனவே, இன்பம் அடைய வேண்டும் என்றால், யோகப் பயிற்சி செய்ய வேண்டும். உடற் பயிற்சி அல்ல. 





 


Saturday, August 10, 2024

பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?

 பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?



துன்பம் வரத்தான் செய்யும். என்ன செய்தாலும், ஏதோ ஒஉர் மூலையில் இருந்து துன்பம் வரும். அதைத் தடுக்க முடியாது. 


வந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது? அதை எப்படி வெல்வது? அதை எப்படி அழிப்பது ?


இதுதான் நமது குறிக்கோள். துன்பத்தை தடுப்பது அல்ல. வந்த துன்பத்தை வென்றெடுப்பது. 


கீதை மிக ஆழமாக சிந்தித்து ஒரு வழி சொல்கிறது. 


அனைத்து துன்பங்களுக்கும் மனம்தான் காரணம். 


உடனே நமக்கு என்ன தோன்றும்?  எனக்கு அடி பட்டு கால் போய் விட்டது. அது துன்பம் இல்லையா? அதுக்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


தொழிலில் பெரிய இழப்பு வந்துவிட்டது. அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


நேசிக்கும் ஒருவருக்கு ஒரு நோய் அல்லது அவர் இறந்து விடுகிறார். அந்த இழப்பு உண்மையில்லையா?  அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும். 


இதெல்லாம் சும்மா தத்துவம் சொல்ல, கேட்க்க நன்றாக இருக்கும். உண்மையில் சில துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  அவை மனம் சார்ந்தவை அல்ல....என்று நமக்குத் தோன்றும். 


சற்று சிந்திப்போம். 


கால் போய் விட்டது....காலே இல்லாமல் எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக இல்லையா?  உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்கிறார்கள். இரண்டு காலும் இல்லாமல் இமய மலை ஏறுகிறார்கள். பிறவியில் இருந்தே இரண்டு கண்ணும் இல்லாதவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டார்களா?  ஊனம் ஒரு காரணம் அல்ல. எனக்கு கால் போய்விட்டதே, முன்னாடி இருந்ததே, இப்ப இல்லையே என்ற மனம்தான் காரணம். 


பணம் போய் விட்டது. உங்களை விட ஏழ்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்கள் துன்பத்துக்கு காரணம் பணம் அல்ல. உறவினர்கள் முன், நண்பர்கள் முன் வாழ்க்கை தரம் தாழுமே என்ற கவலை. அது மனம் சார்ந்தது. 


இப்படி எதைச் சிந்தித்தாலும், துன்பத்தின் மூல வேர் மனம்தான் என்று புரியும். 


அந்த மனம் தெளிவாக, சாந்தமாக இருந்தால் வந்த துன்பம் எதுவாக இருந்தாலும் அது வீரியம் குன்றி அழிந்து விடும். 


பாடல் 


प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।

प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते॥६५॥


ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|

ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே


பொருள் 


ப்ரஸாதே =  பிரசாதம் என்ற சொல்லுக்கு திருப்தி அடைவது, அமைதி கொள்வது, தெளிவு அடைவது என்று பல பொருள் இருக்கிறது. அதாவது எது வந்தாலும் அதில் திருப்தி அடைவது, அமைதி கொள்வது. எது வந்தாலும், பத்தாது, இன்னும் வேணும், இன்னும் வேணும் என்று அலையாமல் இருப்பது. 


ஸர்வ = அனைத்து 


து:காநாம் = துன்பங்களுகுக்கும் 


ஹாநிரஸ்ய = அவை அழிகின்றன 


உயோபஜாயதே = உதிக்கின்றது 


ப்ரஸந்ந = எவன் ஒருவன் மனம் போதும் என்று திருப்தி கொள்கிறதோ 


சேதஸோ = மனம், புத்தி 


ஹி = அதனால் 


அஸு = உடனடியாக 


 புத்தி: = புத்தி, மனம் 


பர்யவதிஷ்டதே = நிலையாக நிற்கிறதோ 


துன்பம் ஏன் வருகிறது?  


முதலில் காமம்,


அடுத்தது கோபம்,


அடுத்தது புலன்களின் பிடியில் சிக்கி அவற்றின் பின்னால் ஓடுவது


அடுத்து இங்கே சொல்கிறார், துன்பத்துக்கு இன்னொரு காரணம் மனம். போதும் என்று திருப்தி கொள்ளாத மனம். எவ்வளவு தந்தாலும், போதாது போதாது என்று அலை பாயும் மனம். 


ஒரு இலட்சம் உள்ளவன், ஒரு கோடி இருந்தால் போதும். அப்புறம் வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறான். ஒரு கோடி வந்த பின், பத்து கோடியாவது வேண்டும் என்று நினைக்கிறான். பத்து கோடி உள்ளவன் நிம்மதியாக இருக்கிறானா என்றால் இல்லை. அவன் நூறு கோடி கனவில் இருக்கிறான். 


எது வந்தால் நிம்மதியும் சந்தோஷமும் வரும் ஒரு காலத்தில் நினைத்தாயோ, அவை இன்று இருக்கின்றன. எங்கே அந்த நிம்மதியும் சந்தோஷமும். இன்று வேறு ஏதோ கனவில். மிக உறுதியாகச் சொல்ல முடியும், இன்றைய கனவு மெய்ப்பட்டாலும், நிம்மதியும், சந்தோஷமும் வராது. நூறு சதவீதம் உண்மை. 


நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும், பொருள்களில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வெளியே உள்ள வேறு எதிலும் இல்லை.


இவளை கைப் பிடித்தால் வாழ்க்கை சொர்கமாக இருக்கும் என்று நினைத்து திருமணம் செய்த எவ்வளவோ பேர் மிகக் குறுகிய காலத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களை நாடுவதை காண்கிறோம். 


இன்பம் அந்தப் பெண்ணில் இல்லை. பொருளில் இல்லை. உறவில் இல்லை. 


உள்ளே இருக்கிறது. 


அதை அறிந்து கொள்ளும் வரை, நிம்மதியும், இன்பமும் இல்லை. 


அறிவோம். 




Thursday, August 8, 2024

பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி

 பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி 


மனம் தடுமாருவதற்குக் காரணம் பற்று மேலும் கோபம் என்று முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் சிந்தித்தோம். 


பற்றை விட்டு விட வேண்டும். கோபம் வரக் கூடாது. இப்படி எல்லாம் இருக்க முடியும் என்று வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு வாழக்கை எப்படி இருக்கும்?  உலக இன்பங்களை அனுபவிக்காமல் இருக்க முடியும் என்றாலும் இன்பமே இல்லாத ஒரு வாழ்க்கை என்ன வாழ்க்கை?  


கல்லு கூடத்தான் அப்படி இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற கேள்விக்கு விடை தருகிறது இன்றைய சுலோகம். அதே சமயத்தில் குழப்பங்களுக்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறது. 


புலன் இன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். அந்த அனுபவம் நமது கட்டுக்குள் இருக்க வேண்டும். புலன்கள் மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.  அவற்றின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக் கூடாது. நமது கட்டுப்பாட்டில் அவை இருக்க வேண்டும். 


"நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று சாப்பிடக் கூடாது. பசி தீர்ந்து விட்டால் எழுந்து விட வேண்டும். 


அறிவு சொல்கிறது இந்த facebook, whatsapp எல்லாம் வெட்டி வேலை என்று. ஆசை உந்தித் தள்ளுகிறது. போ, போய் பார் என்ன இருக்கிறது என்று.  புலன்கள் நம் கட்டுக்குள் இல்லை. 


புலன்களை கட்டுக்குள் கொண்டு வந்தவன் இன்பங்களை அனுபவிப்பது மட்டும் அல்ல, அவற்றின் மூலம் வரும் சிக்கல்களை விட்டு மன அமைதி பெறுவான். அவன் மனம் அமைதி அடையும் என்கிறது. 


பாடல் 



रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।

आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति॥६४॥


ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|

ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||


பொருள் 


ராக = விருப்பு 


த்வேஷ = வெறுப்பு 

வியுக்தைஸ்து = இவற்றில் இருந்து விலகி 


 விஷயா = உலக விஷயங்களில், அனுபவங்களில் 


இந்த்ரியைஸ் =  புலன்களை 


கரந் = செலுத்துபவன் 


ஆத்ம வஸ்யைர் = தன்னுடைய கட்டுக்குள் 


விதேயாத்மா = விதேய + ஆத்மா = தன் கட்டுப்பாட்டில் 


ப்ரஸாத = பிரசாதமாக 


அதி கச்சதி = அவன் அடைகிறான் 


வாழ்வில் கிடைத்தவற்றை பிரசசதமாகக் கொள்ள வேண்டும். நல்லதோ, கெட்டதோ, அவற்றை புனிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இது வேண்டும், அது வேண்டாம் என்று சதா போராடிக் கொண்டு இருக்கக் கூடாது. எது வந்தாலும், ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 


புலன்கள் கட்டுக்குள் இருந்தால், நன்மை தீமைகள் பெரிதாகத் தெரியாது. எது வந்தாலும் சரிதான் என்று தோன்றும். 


இந்த அனுபவம் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வந்து விட்டால் மன அமைதி வரும். 


வேண்டும் என்று நினைப்பவைகளின் பக்கம் விருப்போடு ஓடவும், வேண்டாம் என்பவற்றில் இருந்து வெறுத்து, பயந்து ஓடவும் என்று இருந்தால் என்று இந்த ஓட்டம் நிற்பது? வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


விருப்பும் வெறுப்பும் நம்மால் உருவாகும் ஒன்று. எப்போது ஒன்றை கண்டு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லையோ, அவை பலம் இழக்கும். அவை நம்மை செலுத்தாது. நாம் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 


எதன் மேல் ஆசையும், பற்றும் இருக்கிறது என்று சிந்தியுங்கள்.


எவ்வெவற்றை கண்டு வெறுப்பும், கோபமும், பயமும் வருகிறது என்று ஆராயுங்கள். 


ஏன் அந்த பயம், வெறுப்பு என்று சிந்தியுங்கள். வெறுப்பு, பயம் இவற்றின் காரணம் அந்த பொருளின் மேல் இருக்காது. உங்களிடம் இருக்கும். அதை சரி செய்து விட்டால், வெறுப்பும், பயமும் போய் விடும். மனம் அமைதி அடையும். சலனம், குழப்பம் குறையும். 


மூடி வைத்து விட்டு, கண் மூடி ஆழமாக சிந்தியுங்கள். 


கீதை உங்களுக்குள் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வரும். 




Wednesday, August 7, 2024

பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம்

 பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம் 

https://bhagavatgita.blogspot.com/2024/08/263.html

துன்பம் ஏன் வருகிறது?  


தவறான முடிவுகள், தவறான எதிர்பார்ப்புகள், போன்றவற்றால் நிகழ்கிறது. 


அதற்குக் காரணம் என்ன?


புத்தி தடுமாற்றம், புத்தியில் தெளிவு இன்மை, குழப்பம். இவற்றின் காரணமாக மனிதனுக்கு துன்பமும், அழிவும் வருகிறது. 


கீதை ஐந்து விதமான காரணங்களைக் கூறுகிறது. 


முந்தைய ஸ்லோகத்தில் எப்படி பற்று மனிதனுக்கு துன்பம் விளைவிக்கிறது என்று பார்த்தோம். 


அர்ஜுனனுக்கு அரசின் மேல் பற்று இல்லை. ஆனால், அவனுடைய பற்று உறவுகளின் மேல். "ஐயோ, என் தாத்தாவை, குருவை, உறவினர்களை எப்படி கொல்லுவேன்" என்று அவர்கள் மேல் வைத்த பற்று அவனுக்கு துன்பத்தைத் தருகிறது.


பற்று வைப்பது தவறா? கணவன்/மனைவி மேல், பெற்றோர் மேல், பிள்ளைகள் மேல், உறவுகளின் மேல் பற்று வைப்பது எப்படி தவறாகும். 


தவறு பற்றின் மேல் அல்ல. 


அந்தப் பற்று கடமைக்கு குறுக்கே வரும்போது குழப்பம் வருகிறது. பற்றா, கடமையா என்று. 


கடமை என்றால் ஏதோ அலுவலகத்தில், வேலையில், உள்ள கடமை என்று நினைத்து விடக் கூடாது. 


கீதை காட்டும் கடமை ஸ்வதர்மம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமை அவன் பிறப்பதற்கு முன் தோன்றி அவனுக்காக காத்து இருக்கும். 


அந்த  ஸ்வதர்மத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். 


ஏன் பிறந்தோம், ஏன் வளர்கிறோம் என்று தெரிய வேண்டாமா?  


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய ஸ்லோகத்துக்கு வருவோம். 


மனிதனின் மனக் குழப்பத்துக்கு இரண்டாவது காரணம் - கோபம். 


கோபம் என்றால் ஏதோ காப்பியில் சர்க்கரை சரி இல்லை என்றால் வரும் கோபம், போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு வரும் கோபம் மட்டும் அல்ல. அவை எல்லாம் வெளிப்படையான கோபங்கள். 


நமக்குள் பல கோபங்கள் உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கின்றன. நமக்கே கூட தெரியாது. 


நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன், நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன், குண்டாக இருக்கிறேன், கறுப்பாக இருக்கிறேன், ஏன் என் பிள்ளைகள் மட்டும் படிக்க மாட்டேன் என்கிறது, ஏன் இன் கணவன்/மனைவி இப்படி இருக்கிறார்கள், ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி சோதனைகள் வருகிறது என்று பல கோபங்கள் நம்மை அறியாமல் நமக்குள் நாளும் கனன்று கொண்டு இருக்கிறது. 


யாரிடம் போய் கோபப் படுவது? விதியின் மேலா, இறைவனின் மேலா, கோபப்படக் கூட ஆள் இல்லை. ஆனால், கோபம் மட்டும் நிற்கிறது. இந்தக் கோபம் மனதை தடுமாற வைக்கும். 


நம்மை விட அழகான ஆள் மேல் தேவை இல்லாமல் கோபம் வரும். அவர் நமக்கு ஒன்றும் செய்து இருக்க மாட்டார். கோபம் பொறாமையாக வெளிப்படும். அவனுக்கு மட்டும் எல்லாம் நல்லா அமைகிறது என்று. சுய பச்சாதாத்தில் கொண்டு விடும். "என் விதி இப்படி ஆகி விட்டது" என்று. 


இப்படி கோபம் மனத்தைக் குழப்பும். குழப்பத்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம் வரும். மனம் தவறான பாதையில் செல்லும். அழிவு வரும். 


பாடல் 



क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः।

स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति॥६३॥


க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|

ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||


பொருள் 


க்ரோதாத் பவதி = கோபம் வருவதால் 

ஸம்மோஹ: = புத்தி தடுமாற்றம் வரும் 


ஸம்மோஹாத் = புத்திக் குழப்பத்தில் இருந்து  


ஸ்ம்ருதிவிப்ரம:| = நினைவு , ஞாபகம் தடுமாறுகிறது. மறதி வருகிறது. 


ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் = ஞாபக மறதியால் 


புத்திநாஸோ = புத்தி நாசம் அடைகிறது 


புத்திநாஸாத்  = புத்தி நாசத்தால் 


ப்ரணஸ்யதி = ஒருவனுக்கு அழிவு வருகிறது 


ஞாபக மறதியில் இருந்து அழிவு எப்படி வரும்?


நாம் எவ்வளவோ படிக்கிறோம், கேட்கிறோம். 


கோபம் வரும் போது, படித்தது, கேட்டது எல்லாம் ஞாபகம் வருகிறதா?  எல்லாம் மறந்து போகிறது அல்லவா?  


"அவ்வளவு படிச்ச ஆளு, அவரா அப்படிச் செய்தார்" என்று மக்கள் வியப்பதை கண்டு இருக்கிறோம். 


கோபம் வந்தால், நல்லது கெட்டது மறந்து போகும். 


உள்ளுக்குள் தேடுங்கள். உங்கள் கோபம் எங்கே இருக்கிறது என்று. யார் மேல். எதன் மேல் என்று. கோபம் விலக வேண்டும். இல்லை என்றால் அழிவு நிச்சயம்.