Sunday, May 31, 2015

கீதை - 13.1 - இடமும், அதை அறிபவனும்

கீதை - 13.1 - இடமும், அதை அறிபவனும்


श्रीभगवानुवाच
इदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே |
ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

இதம் = இந்த

ஸரீரம்= சரீரம், உடல்

கௌந்தேய = குந்தியின் மகனே

க்ஷேத்ரம் இதி = க்ஷேத்ரம்

அபிதீயதே = என்று சொல்லப் படுகிறது

ஏதத் = இது

யோ = எவன்

வேத்தி = அறிகிறானோ

தம் = அவன்

ப்ராஹு: = அறியப்படுகிறான்

க்ஷேத்ரஜ்ஞ = க்ஷேத்ரஞன் என்று

இதி = அவ்வாறு

தத்வித: = அதை அறிந்தவர்கள்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,  குந்தியின்  மகனே,  இந்த உடம்பு க்ஷேத்திரம் . இதனை அறிவோனை க்ஷேத்திரக்ஞன் என்று அதை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மிக நுட்பமான விஷயத்தை வியாசர் இங்கே விளக்கத் தொடங்குகிறார்.

முதலில், இந்த உடல் க்ஷேத்ரம் என்று  சொல்கிறார். க்ஷேத்ரம் என்றால் என்ன ? காசி , இராமேஸ்வரம் எல்லாம் புண்ணிய க்ஷேத்ரம் என்று சொல்லுகிறோம். க்ஷேத்ரம் என்றால் என்ன ?

க்ஷேத்ரம் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கொண்டிருப்பது" என்று பொருள். வயல், இடம், என்று பொதுவாகச் சொல்லுவார்கள்.

புண்ணியத்தை கொண்டிருப்பது புண்ணிய க்ஷேத்ரம்.

இந்த உடல் க்ஷேத்ரம் என்றால் , இந்த உடல் எதையோ கொண்டிருக்க வேண்டும். அது தனக்குள் எதையோ வைத்திருக்க வேண்டும்.

எதை வைத்திருக்கிறது ? 

  
"அறிவோனை க்ஷேத்ரஞன்" என்று அறிந்தவர்கள் கூறுவார்கள்.

இந்த உடலுக்குள் அறியும் ஒன்று இருக்கிறது.

அது புலன்கள் வழியாக செய்திகளைப் பெற்று, அவை என்ன என்று அறிந்து  அதற்கு  தகுந்த மாதிரி நடந்து கொள்கிறது.

இந்த அறியும் செயல்பாட்டை க்ஷேத்ரஞன் என்று கூறுகிறார் வியாசர்.

ஒரு உடல் எவ்வளவு சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று உண்டு. அது என்ன ?

தன்னைச்  சுற்றியுள்ளதை அறிவது . க்ஷேத்ரத்தை அறிவது.

பசி என்றால் உணவு உண்ணவேண்டும் என்று அறிந்து உணவை நோக்கிப் போகிறது.

ஆபத்து என்று அறிந்தால் பாதுகாப்பை நோக்கிப் போகிறது.

இப்படி தன்னைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது.

எது அறிகிறது ? உடலா ? உடல் வெளியில் இருந்து வரும் செய்திகளை உள்ளே தள்ளும்  ஒரு கருவி. அவ்வளவுத்தான்.

அறியும்  செயல் உள்ளே நிகழ்கிறது.

அந்த அறியும்  செயலை, க்ஷேத்ரஞன் என்று குறிப்பிடுகிறார்.

  உயிர் என்றோ , ஆத்மா என்றோ போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அறியும் செயல்  நிகழ்கிறது. அந்த செயல்பாட்டுக்கு க்ஷேத்ரஞன் என்று பெயர்.

 சரி,அதனால் என்ன ? இதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது ?


பார்ப்போம்  

No comments:

Post a Comment