Wednesday, April 15, 2015

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம் - பாகம் 2

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம் - பாகம் 2


संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥१२- ४॥

ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||


ஸந்நியம் = சம் + நியம் = கட்டுப்படுத்திய பின்

யே = அவர்கள்

இந்த்ரியக்ராமம் = இந்திரியங்களை, புலன்களை

ஸர்வத்ர = எல்லா இடத்திலும், எல்லா சமயத்திலும்

ஸமபுத்தய = சம புத்தியுடன்

தே = அவர்கள்

ப்ராப்நுவந்தி = ப்ராப்தி அடைகிறார்கள்.

மாம் = என்னை

எவ  = உறுதியாக

ஸர்வபூதஹிதே = அணைத்து உயிர்களுக்கும் நன்மையே கருதி

ரதா: = மகிழ்ந்து இருப்பார்களோ, இரசித்து மகிழ்ந்து இருப்பார்களோ



புலன்களை அடக்கி , எங்கும், எதிலும்  சமபுத்தி உடையவர்களாய் , எல்லா உயிர்களிடத்தும் யார் நன்மையே விருபுகிரார்களோ அவர்களும் என்னை அடைகிறார்கள். 

மூன்று விஷயங்களை கூறுகிறார்:

முதலாவது, புலனடக்கம்.

இரண்டாவது, சம புத்தி

மூன்றாவது, எல்லா உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள விருப்பம்.

இது மூன்றும் ஏதோ மூன்று தனித் தனி விஷயம் போலத் தெரியும்.

முதலில் புலன்களை அடக்க பயிற்சி செய்யவேண்டும்.  அடுத்தது சம புத்தியை அடைய வேண்டும்.  அதன் பின் எல்லா உயிர்களிடத்தும் நன்மை பெற விழையும்  மனம் வேண்டும்....

இதை மூன்றையும் செய்வது முடிபதற்குள் நம் வாழ்கையே முடிந்து விடும் போல  இருக்கிறதே என்று நமக்கு ஒரு ஆயாசம் தோன்றலாம்.

சரி அப்படியே செய்து முடிப்பதாகவே வைத்துக் கொள்வோம், நம் புலன்களை அடக்கி, மற்றவர்கள் இன்பமாக இருக்க நினைத்து, நன்மை தீமைகளை ஒன்றாகப் பார்த்து ...இது என்ன வாழ்கை என்று ஒரு சலிப்பு ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்கை தேவைதானா ?

இத்தனையும் செய்த பின் இறைவனை அடைந்து என்ன செய்ய ?

கடவுளை அடைய யார் யாருக்கெல்லாம் நல்லது நினைக்க வேண்டி இருக்கிறது...எல்லாம் என் தலை எழுத்து என்று  சலித்துக் கொள்ள தோன்றும்.

கீதை வாழ்கை நெறிமுறைகளுக்கு எதிரானதா, வாழ்வில் இன்பம் கூடாது என்கிறதா ? எல்லோரும் மரக்கட்டை போல வாழ வேண்டும் என்கிறதா ?

இல்லை....

வாழ்வில் மிகப் பெரிய சந்தோஷத்தை சொல்லித் தருகிறது கீதை. எப்படி எப்போதும்  சந்தோஷமாக இருப்பது என்று சொல்லித் தருகிறது கீதை.

அது எப்படி என்று  நாளை பார்ப்போம்....

--------------------------- பாகம் 2 ------------------------------------------------------------------------------


முதலாவது, புலனடக்கம்.

இரண்டாவது, சம புத்தி

மூன்றாவது, எல்லா உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள விருப்பம்.

இது எப்படி   சாத்தியமாகும். அப்படியே சாத்தியமானாலும்  அப்படிப்பட்ட  இன்பமற்ற, கல்லு போல, மரம் போல வாழ்வது தேவையா ? இந்த கேள்விக்கு விடை  தந்தாக வேண்டும். 

என்னிடம்  ஒரு பேனா  இருக்கிறது. நான் ரொம்ப நாளாக வைத்திருக்கும் பேனா.  யாருக்கும் தர  மாட்டேன்.நான் மட்டும்தான் அதை  உபயோகிப்பேன். எனக்குத் திருமணமாகி குழந்தையும் வந்துவிட்டது. 

ஒரு நாள்  என் மகன் என்னிடம் வந்து அந்த பேனாவை கேட்டான். அதைப்  பெற்றுக்  கொண்ட அவன் முகத்தில் அத்தனை  மகிழ்ச்சி.அதை பார்க்கும் போது  எனக்கு மகிழ்ச்சி. 

எப்படி நிகழ்ந்தது ?

பேனா என்னை விட்டு போனது துன்பம். பெரிய இழப்புதான்.  இருந்தும்  சந்தோஷமாக  இருக்கிறது. ஏன் ?

ஏன் என்றால் நான் என் மகன் மேல் கொண்ட  அன்பு.

அன்பு வரும்போது இழப்பும்  மகிழ்வாகும்.

துன்பம் இன்பமாகும். 

ஆனால் அதே பேனாவை பக்கத்து  வீட்டு பையன் கேட்டால் கொடுப்பேனா ? மாட்டேன்.  அப்படியே கொடுத்தாலும்  மகிழமாட்டேன். 

ஏன் ?

ஏன் என்றால் பக்கத்து வீட்டு பையன் மேல் எனக்கு அன்பு  இல்லை.

அவன் மேலும் அன்பு வந்துவிட்டால் பின் அவனுக்கு பேனாவைக் கொடுத்தாலும்   மகிழ்வேன்.

அந்த அன்புக்கு கருணை என்று  பெயர்.

தொடர்பு உடையவர்கள்  மேல் செலுத்துவது அன்பு.  எல்லோர் மேலும் செலுத்துவது  கருணை. 

கருணை அதிகமாகும் போது எல்லாம் மற்றவர்களுக்கு என்று  தோன்றும்.

ஒன்றும் தனக்கென்று  தோன்றாது.

எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டால் பற்று  அற்ற மனம் வரும். 

அது துறவு. 

பொருளின் மேல் ஆசை விடும். அதனால் வரும் துன்பம் விலகும். மனது இலேசாகிப்  போகும். 

பின் என்ன சந்தோஷம்தான், நாளெல்லாம்.

துன்பமாவது, இன்பமாவது ....

 வேண்டியவன்,வேண்டாதவன்  என்று யாரும் இல்லை. 

அன்பு  பெருகட்டும்.

அது கருணையாக  மாறட்டும்.

அந்த கருணை துறவில் கொண்டு சேர்க்கும்.

அந்த துறவு எல்லையற்ற இன்பத்தைத் தரும். 

அன்பில்  தொடங்குங்கள்.

மற்றவை தானாக வரும். 


 

No comments:

Post a Comment