Thursday, July 9, 2015

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் = அத்(தி) + ஆத்ம + ஞான + நித்ய + த்வம் =  அதி என்றால் மேலான. உயர்வான.

அதி ஆத்மா என்றால் ஆத்மாவின் உயர்வு.

அதி ஆத்ம ஞானம் = ஆத்மாவின் உயர்வைப் பற்றிய ஞானம்

நித்ய த்வம் = எப்போதும் இருப்பது

தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் = தத்வ + ஞான + அர்த + தர்சனம்

தத்துவம் என்றால் உண்மை.

ஞான = ஞானம். உண்மையான ஞானம்

அர்த்த = அர்த்தம், பொருள்

தர்சனம் = அறிவது

ஏதத் = இது

ஜ்ஞாநம் = ஞானம்

இதி = எனவே

ப்ரோக்தம் = சொல்லப் படுகிறது

அஜ்ஞாநம் = அஜ்ஞானம்

யத = எது

அதோ அந்யதா = இதற்கு அந்நியமானது எல்லாம்



எது ஞானம் , எது அஞ்ஞானம் ?

நாம் படிப்பது எல்லாம் ஞானம் ஆகிவிடாது. நிறைய படித்தவன் ஞானியாக மாட்டான். சிலசமயம் கஷ்டப்பட்டு அஞ்ஞானத்தை கூட நாம் தேடிச் சேர்ப்பதும் உண்டு.

எது ஞானம், எது அஞ்ஞானம் என்று தெரியாவிட்டால் எப்படி அஞ்ஞானத்தை விடுத்து ஞானத்தை அடைய முடியும் ?

அறிவு அல்லது ஞானம் என்று சொல்கிறோமே, அப்படி என்றால் என்ன ? எது அறிவு ? அறிவின் தொடக்கமும் முடிவும் என்ன ?

ஒருவன் பெரிய அறிவாளி என்று சொன்னால் என்ன அர்த்தம் ? நிறைய புத்தகங்கள் வாசித்து மனப்பாடம் செய்திருக்கிறார் என்று அர்த்தமா ? 

நாம், வாழ்நாளில் பெரும் பகுதியை அறிவைப் பெருக்குவதில் செலவழிக்கிறோம். பள்ளிக் கூடம், பின் கல்லூரி, பின் புத்தகங்கள் வாசிப்பது, வாசித்தவர்கள் சொல்லக்  கேட்பது என்று வாழ்வில் பெரும் பக்தி ஞானத்தைப் பெருக்குவதிலேயே போய் விடுகிறது.

எதற்காக அறிவைப் பெறுகிறோம் ? கல்வியின் பயன் என்ன ? அறிவு நமக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்கிறது ?

சில சமயம் நாம் பெற்ற அறிவே கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

தவறான புத்தகங்கள், தவறான ஆட்களிடம் பெரும் அறிவு ஆபத்தை விளைவிக்கலாம்.

ஒரு பிரயாணம் கிளம்புகிறோம் என்றால் எந்த ஊருக்குப் போகப் போகிறோம் என்று முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் அல்லவா ?

அது போல, அறிவை பெறத் தொடங்குமுன் எதற்க்காக இந்த அறிவு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பணம் சம்பாதிக்கவா ? சந்தோஷமாக இருக்கவா ? பிறருக்கு சேவை செய்யவா ? உண்மையை அறியவா ? வீடு பேறு அடையவா ?

எதற்காக ஞானத்தை தேடுகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அறிந்து கொள்ள கீதை இரண்டு குறிப்புகளைத் தருகிறது.

ஞானம் என்பது ,

முதாலவது, ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வது. 

இரண்டாவது, தத்துவ + ஞான + அர்த்த + தர்சினம்

அதாவது, தத்துவ ஞானத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வது.


தத்துவ ஞானத்தின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சும்மா படித்துக் கொண்டே போவதாலோ, எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்பிபதாலோ ஞானம் வந்து விடாது.

தத்துவம் என்றால் - உண்மை.

ஞானம் என்றால் = உண்மையைப் பற்றிய அறிவு அல்லது மெய்பொருளைப் பற்றிய அறிவு.

அர்த்தம் = அந்த மெய் பொருளின் அர்த்தம்

தரிசனம் = அறிந்து கொள்வது.

தத்துவ ஞானத்தின் உண்மையை அறிய வேண்டும்.

இதுவே ஞானம்.

இது அல்லாத அனைத்தும் அஞ்ஞானமே.

கோவிலுக்குப் போகிறோம், சமய சின்னகளை அணிந்து கொள்கிறோம், நிறைய பாடல்களை   மனனம் செய்து ஒப்பிக்கிறோம், சமய சடங்குகளை செய்கிறோம்....இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ?

அர்த்தம் தெரிந்தால் - அது ஞானம்.

இல்லையென்றால் அது எல்லாமே அஞ்ஞானமே ....




No comments:

Post a Comment