Tuesday, July 21, 2015

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது - பாகம் 2

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது  - பாகம் 2


सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥

ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||

ஸர்வத:= அனைத்து பக்கங்களிலும்

பாணி = கைகள்

பாத³ம் = கால்கள்

தத் = அது

ஸர்வத் = அனைத்து பக்கங்களிலும்

அ க் ஷிஸிரோ முக ம் = கண்ககளும், தலையும், முகமும் கொண்டது

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸ்ருதி = செவி

லோகே = உலகில்

ஸர்வம் ஆவ்ருத்ய = எல்லாவற்றையும் சூழ்ந்து

திஷ்ட²தி = நிற்கிறது

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கை கால்கள் இருக்கும், எங்க பார்த்தாலும் கண்ணும், வாயும் இருக்கும், செவி இருக்கும், எல்லாவற்றையும்  சூழ்ந்து நிற்கும் ஒன்றை எப்படி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது. கீதை இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி  நம்மை குழப்புவது போலத் தெரியும்.

சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

கீதை ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு பின்னாடி வருவோம். நீங்கள் சில இந்து கடவுள்களைப்  பார்த்து இருகிறீர்களா ...நிறைய தலை இருக்கும், ஏகப்பட்ட கைகள்  இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு பொருள் இருக்கும்...

அதுக்கு என்ன அர்த்தம் ?


நீங்கள் காலையில் எழுந்து புறப்பட்டு அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகிறீர்கள்.  நீங்களே எழுந்து, பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி அருந்தி,  உடை மாற்றி, வண்டி பிடித்து அல்லது வண்டி ஓட்டி போய் சேர வேண்டிய  இடத்தை அடைகிறீர்கள் ...அப்படித்தானே ?

அது தான் இல்லை.

பல் விளக்க வேண்டும் - அந்த பற்பசையை செய்தது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில்  ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவற்குக்கும் ஒரு வேலை.  எல்லோரும் சேர்ந்து செய்தால் அந்த பற்பசை   உருவாகும். அப்புறம் அதை ஒரு டப்பாவில் போட்டு அடைக்க வேண்டும். அந்த டப்பாவை செய்வது இன்னொரு நிறுவனம். அங்கும் பல பேர்   வேலை செய்கிறார்கள். செய்த டப்பாவை பற்பசை செய்த நிறுவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும்.  கொண்டு செல்லும் நிறுவனத்தில் பல பேர் வேலை செய்கிறார்கள்.  அந்த வாகனம் செல்லும் வழி, அதை செய்தது எத்தனை  கைகள். அந்த வாகனத்தை செய்தது எத்தனை கைகள். செய்த பற்பசையை  நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எத்தனை கைகள் வேண்டும், எத்தனை கால்கள் வேண்டும், எத்தனை கண்கள் வேண்டும், எத்தனை செவிகள் வேண்டும் ?

சரி பற்பசை வந்தாயிற்று, குழாயை திறந்தால் நீர் வருகிறது. அந்த நீரை கொண்டு வர  எத்தனை கைகள், கால்கள், கண்கள் , செவிகள் வேலை செய்தால்  நீங்கள் திறந்தவுடன் நீர் வரும் பல் விளக்க ?

இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன செயலுக்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் கைகள், கால்கள், கண்கள், செவிகள் வேலை செய்து உங்களுக்கு அவற்றை கொண்டு வந்து  சேர்கின்றன.

அதை உணர்த்துவது தான் அந்த பலப் பல கைகளை கொண்ட படங்கள், சிலைகள்.

குறைந்த பட்சம் நாலு கைகளாவது இருக்கும்.

ஏன் ?

உங்கள் இரண்டு கைகள் மட்டும் போதாது உங்கள் வாழ்வை சீராகச் கொண்டு செல்ல.

எத்தனையோ கைகள், கால்கள், கண்கள் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன  அந்த படங்களும், சிலைகளும். அவற்றைப் படைத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு ஆழ்ந்த கருத்தை நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

அத்தனை கைகளும், கால்களும் உங்களுக்கு உதவி செய்கின்றன.  நமது ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஆயிரக் கணக்கான கை கால்கள் இருக்கின்றன.

இப்போது சுலோகத்திற்கு வருவோம்.

அதற்கு எங்கும் கால்கள், கைகைள், கண், செவி, முகம், தலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

சிந்திப்போம்....


============================ பாகம் 2 ====================================

இறைவனை யாரும் பார்த்தது இல்லை. அவன் இருக்கிறானா இல்லையா என்று கூட  சந்தேகம் இருக்கிறது. இறைவன் என்ற ஒருவன் இல்லாமலேயே இந்த  உலகையும் அதில் நிகழ்வனவற்றையும் விளக்க முடியும் என்றால்  இறைவன்  என்பவன் எதற்காக என்ற கேள்வி விடை இல்லாமல் தொக்கி நிற்கிறது.

வாதத்துக்கு இறைவன் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம்....அவன் ஆணா ? பெண்ணா ? அலியா ? விலங்கா ? செடி கொடியா? எப்படி இருப்பான் ?  உயரமா , குள்ளமா , கறுப்பா , சிவப்பா, குண்டா, ஒல்லியா ? எப்படி இருப்பான் ?

நாம் இப்படி எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஏதோ "ஒன்று" என்று நினைத்து சிந்திக்கிறோம்.

ஏன் இறைவன் என்பது "ஒன்றாக" இருக்க வேண்டும் ? ஏன் பலவாக அல்லது பலவற்றின்  தொகுதியாக இருக்கக் கூடாது ?

பல அறைகள் கொண்ட இருப்பிடத்தை வீடு என்று சொல்கிறோம்.
பல வீடுகள் கொண்ட இடத்தை ஊர் என்று சொல்கிறோம்.
பல ஊர்கள் கொண்ட இடத்தை நாடு என்று சொல்கிறோம்.
இப்படி படிப் படியாக கூட்டிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது எது ?

அதற்கு கடவுள், ஆத்மா, இயற்கை, பரம் பொருள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு வாதத்துக்குத் தான். ஒன்றும் பயபடாதீர்கள்....

இப்போது ஸ்லோகத்தை பார்ப்போம்....


அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

அது எல்லாவற்றின் தொகுதி என்று வைத்துக் கொண்டால் அதற்கு எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலை, முகம் , செவி எல்லாம் இருக்கும் அல்லவா ?

அனைத்தையும் கொண்ட தொகுதி என்பதால் அது அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது என்று கொள்ளலாம் அல்லவா ?

உங்களையும், என்னையும், அவரையும், இவரையும், அதையும், இதையும் எல்லாம் தன்னுள் அடக்கியது தான் அது.

நம் அனைவரையும் சூழ்ந்து நிற்பது அது. நாம் எல்லாம் அதன் ஒரு பகுதி.

இறைவன் என்பது ஒரு தனித்த ஒன்று அல்ல.  எல்லாவற்றையும் சேர்த்த ஒன்று அது.

நான்கு கைகள், பட்டு பீதாம்பரம், சங்கு, சக்கரம், திரிசூலம், உடுக்கை, மான் தோல், பாற்கடல் என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள்.

இறை என்பது அனைத்தின் தொகுதி.

முந்தைய ஸ்லோகத்தில் அது சத் அல்ல, அசத் அல்ல என்று பார்த்தோம்.

சத் என்றால் அது ஒரு தொகுப்பில் (genre ) இருக்க வேண்டும். மனிதனாகவோ, மிருகமாகவோ, கல்லாகவோ, புல்லாகவோ என்தோவாக இருக்க வேண்டும். அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அது "சத்" ஆக இருக்க முடியாது.

அசத் என்றால் இல்லாத ஒன்று. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ?

எனவே தான், முன்னோர்கள், அது இரண்டுமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி.

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க என்பார் மாணிக்க வாசகர்.

ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை....

எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் "அது".






No comments:

Post a Comment