Monday, April 3, 2017

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள்

கீதை - 3.13 - யாகத்தின் பலனை பகிர்ந்து உண்ணுங்கள் 


यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्॥१३॥

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:|
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13|

|
யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை

ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்

ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
|
புஞ்ஜதே = உண்கிறார்கள்

தே = அவர்கள்

து = அப்புறம்

அகஹம் = பாவம், துன்பம்

பாபா = பாவம் செய்பவர்கள்

யே = அவர்கள்

பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள் 

அத்மகாரணாத் = தங்களுக்காக

||3-13|

யாகத்தின் அல்லது வேள்வியின் மிச்சத்தை உண்போர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறார்கள். தனக்கென்று மாத்திரம் உணவு சமைத்து உண்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

இது என்ன புது கதையாக இருக்கிறது. தினமும் எல்லோருக்கும் நாம் சமையல் செய்து போட வேண்டுமா ? நடக்கிற காரியமா இது ? என்று நாம் நினைப்போம். 

கீதையின் நோக்கம் அதுவல்ல.

யாகம் அல்லது வேள்வி என்பது நாம் அன்றாடம் செய்யும் கடமை. 

அதை தனக்கு என்று மட்டும் செய்யக் கூடாது. 


இயற்கையில் இருந்து பெற்றாலும் சரி, நாம் வாழும் சமுதாயத்தில் இருந்து பெற்றாலும் சரி, எடுத்ததை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்.

எவ்வளவோ சமயங்களில் நமக்கு ஒரு வெறுப்பும் சலிப்பும் வரும் - என்ன உழைத்து என்ன பயன் - அலுவகலத்தில் ஒரு பதவி உயர்வு கிடையாது,
ஒரு பாராட்டு கிடையாது.....

அலுவலகத்தில் தான் அப்படி என்றால் வீட்டிலும் அதற்க்கு மேலே....

யாருக்கும் ஒரு நன்றி இல்லை...நான் ஏதோ இயந்திரம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...நல்லா இருக்குனு ஒரு வார்த்தை பாராட்டு
 கிடையாது, பாவம் ரொம்ப கஷ்ட பட்டியானு ஒரு கரிசலான விசாரணை கிடையாது....ச்சே என்ன வாழ்கை இது ...என்று ஒரு சலிப்பு வரலாம்.....


கர்ம யோகம் என்ன சொல்கிறது. உனக்காக மட்டும் உழைக்காதே. உன்னையும் தாண்டி யோசி. இந்த சமுதாயம் உயர வேண்டும், அதில் வாழும்
 மக்கள் உயர வேண்டும் என்று நினைத்து பாடுபடு. குடும்பம், உறவு, நட்பு, இந்த சமுதாயம், நாடு என்று யோசி.

எனக்கு எவ்வளவு பலன் கிடைக்கிறதோ, அவ்வளவு தான் நான் வேலை செய்வேன் என்று ஒவ்வொருவரும்  ஆரம்பித்தால், நாளடைவில் இந்த
சமுதாயம் நின்றுபோகும்


எனக்கு கிடைக்கும் பலனை விட நான் அதிகமாகவே உழைக்கிறேன், அதிகமாகவே  இந்த சமுதாயத்திற்கு தருகிறேன் என்று ஒவ்வொருவரும்
நினைத்து வாழும்  போது  ஒரு மிக மிக இனிமையான நிலை உருவாகும்.

தனக்காக உழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. தனக்காக மட்டும் உழைக்காதே  என்கிறது.

வேள்வியின்  என்று  சொல்லுவது  அதைத்தான்.

வேள்வி என்பது சுயநலமற்று செய்யும் ஒரு செயல்.

சுயநலம் அற்று வேலை செய்த பின், அந்த உழைப்பின் ஒரு பகுதியை, வேண்டுமானால் பெரும் பகுதியை என்று வைத்துக் கொள்ளுங்கள், நீ
எடுத்துக் கொள்.

அதுகூட முதலில் நீ எடுத்துக் கொள் என்று சொல்லவில்லை...மிச்சத்தை நீ எடுத்துக் கொள் என்கிறது.

முழுக்க முழுக்க ஒரு சுயநலமற்ற ஒரு சமுதாயத்தை கீதை சிந்திக்கிறது.

கீதையை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.

கடமையை செய்து, அதன் பலன் மற்றவர்களுக்கு போன பின், மீதி உள்ளதை நீ எடுத்துக் கொள் என்கிறது கீதை.

நடைமுறையில்

- முதலில் கடமையை சரி வர செய்வது இல்லை.
- அப்படியே செய்தாலும், சுயநலம் இன்றி செய்வது இல்லை
- சுயநலத்தோடு செய்தாலும், செய்ததற்கு மேல் பலன் எதிர்பார்க்கிறோம்

அதை விடுத்து

நாம் செய்யும் வேலை உலக நன்மைக்காக என்று நினைக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க  செயலாற்ற வேண்டும். அப்படி செய்யும் வேளையில்  கொஞ்சம் நமக்கும் பலன் கிடைத்தால் அதை நாம் அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறது கீதை.

என்ன ஒரு உயர்ந்த நோக்கம்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். 

No comments:

Post a Comment