Thursday, September 15, 2016

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம்

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம் 


दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥

தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |
மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||

தை³வீ = தெய்வீக

ஸம்பத் = சம்பந்தத்தால்

விமோக்ஷாய = விடுதலை கிட்டும்

நிபந்தாயாய  = கட்டுண்டு

அஸுரீ  = அசுர சம்பந்தத்தால்

மதா  = ஏற்றுக் கொள்ளப் பட்டது

மா = இல்லை

ஸு²ச: = துக்கம்

ஸம்பத³ம் = சம்பந்தம்

தை³வீ = தெய்வீக

அபிஜாத் = பிறந்ததால்

அஸி = நீ

பாண்டவ = பாண்டவனே

தெய்வீக சம்பந்தத்தால் விடுதலை கிட்டும்.

அசுர சம்பத்தால் பந்தம் ஏற்படும்

துயரப்தே படாதே பாண்டவனே, நீ இறை அம்சத்துடன் பிறந்திருக்கிறாய்.


மனிதன் இயற்கையில் நல்லவனா ? கெட்டவனா ?

இந்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. மனிதன் அடிப்படையில் கெட்டவன்.  சமுதாய கோட்பாடுகளும், சட்ட  திட்டங்களும்  இருப்பதால்தான் அவன் ஒழுங்காக இருக்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.

இல்லை, மனிதன் இயற்கையில் நல்லவன் தான். கெட்டவைகளை அவன்  இந்த சமுதாயத்திடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.


சில மதங்கள் கூட, மனிதனை பாவிகளே என்று தான் அழைக்கின்றன.

எது சரி ?


கீதை சொல்லகிறது.  

மனிதன் இயற்கையில் இறை சம்பந்தம் உள்ளவன் , நல்லவன் என்று. 

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவன் படைப்பு என்றால் மனிதனும்  இறைவனின் படைப்புதான். அவன் மட்டும் எப்படி கெட்டவனாக இருக்க முடியும். 

எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னால், மனிதன் எப்படி  கெட்டவனாக இருக்க முடியும் ?

அவனுடைய ஒரு சில செய்கைகள் நமக்கோ, இந்த சமூகத்துக்கோ பிடிக்காமல்  இருக்கலாம். அதனால், அவன் கெட்டவன் இல்லை. 

எல்லா மனிதர்களும் நல்லவர்களே என்று ஆரம்பிக்கிறது கீதை. 

நாம் தவறு செய்தவர்கள், செய்பவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை  வேண்டாம்.   பாவ மன்னிப்பும், புனித நீர்களில் நீராடுவதும் வேண்டாம். 


தைரியமாக இருங்கள். 

நீங்கள் இறை சம்பந்தம் கொண்டவர்கள்.  உலக பந்தங்களில் இருந்து  உங்களுக்கு விடுதலை கிட்டும், துயரப்  படாதீர்கள்  என்று அடித்துச் சொல்கிறது  கீதை. 

தெய்வ சம்பந்தத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். 

பெரியார்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.  அவர்கள் எழுதியதைப் படியுங்கள். 

அந்த சம்பந்தம், உங்களை இந்த துன்பங்களில் இருந்து விடுதலை அடையச் செய்யும். 

எதைப் படிக்க வேண்டும், யாரோடு பழக வேண்டும், யார் சொல்வதைக்  கேட்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா ?


No comments:

Post a Comment