Monday, August 12, 2024

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும்

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும் 



மனிதனின் துன்பங்களுக்கான காரணங்களை சொல்லிக் கொண்டு வருகிறது. 


முதலில், கோபம் 


இரண்டாவது, பற்று 


மூன்றாவது,  திருப்தி அடையாத மனம்.


அடுத்ததாக இன்று நாம் காண இருக்கும் ஸ்லோகத்தில், யோக நிலை அடையாதவனுக்கு இன்பம் இல்லை என்கிறது கீதை. 


யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை. 


புத்தி இல்லை என்றால் மனோபாவம் இல்லை 


மனோபாவம் இல்லை என்றால் சாந்தி இல்லை 


சாந்தி இல்லை என்றால் இன்பம் இல்லை. 


என்கிறது கீதை. 


பாடல் 


नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।

न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्॥६६॥


நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|

ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் 


பொருள் 


நாஸ்தி  = இல்லை 


புத்திர் = புத்தி 


அயுக்தஸ்ய = யுக்தி என்றால் இணைப்பது. யோகம். அ+யுக்தச்ய = யோகம் இல்லாமல் இருப்பது. யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை.  


ந சா = இல்லை 


யுக்தஸ்ய = யோகம் 


பாவநா| = குறிக்கோள், மனதை ஒரு நிலைப் படுத்துதல், நிலையான புத்தியை அடைதல் 


ந  சா = இல்லை 


பாவயத: = பாவனை. பாவனை இல்லை என்றால் 


ஸாந்தி = சாந்தி, மன அமைதி 


அஸா²ந்தஸ்ய = மன அமைதி இல்லாவிட்டால் 


குத: = எப்படி ?


 ஸுக²ம் = சுகம், இன்பம் வரும் ?


யோக நிலையை அடையவில்லை என்றால் புத்தி ஒழுங்காக வேலை செய்யாது. அப்படி சரியாக வேலை செய்யாத புத்தி இருந்தும் இல்லாத மாதிரிதான். 


புத்தி இல்லை என்றால், மனதை ஒருமுகப் படுத்த முடியாது (concentration, meditation ).


மனம் ஒருநிலைப் படாவிட்டால் மன அமைதி கிடைக்காது. 


மனம் அமைதி அடையாவிட்டால் இன்பம் வராது.


பின்னால் இருந்து போவோம்.


இன்பம் வேண்டும் என்றால் முதலில் மனம் அமைதி அடைய வேண்டும். இன்பம் என்பது பொருளில் இல்லை. வெளி உலகில் இல்லை. நம் மனதில் இருக்கிறது. அதுவும், அமைதியான மனதில் இருந்து இன்பம் பிறக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது என்ன ஆகுமோ, இது இப்படி ஆகி விடுமோ என்று பயத்திலும், கோபத்திலும், தாபத்திலும், பற்றிலும் கிடந்து அலைகழியும் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனதை முதலில் சாந்தமாக்க வேண்டும். 


எப்படி?


அதற்கு மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். "மனோபாவம்" என்கிறது கீதை. மனம் ஒன்றில் நிலைத்து நிற்க வேண்டும். ஒரு நிமிடத்துக்குள் நாலு தொலைபேசி அழைப்பு, அஞ்சு whatsapp செய்தி, அஞ்சு ஆறு செய்தித் துணுக்குகள், நடுவில் இரண்டு sms , facebook update, இடையில் டிவியில் யார் பதக்கம் பெற்றார்கள், எங்கே வெள்ளம் வந்தது, யார் கொள்ளை அடித்தார்கள் என்ற செய்தி....இத்தனை புயல்களுக்கு நடுவில் மனம் எப்படி ஒருநிலைப் படும்?   


இவற்றை எல்லாம் விடுத்தால் மனம் ஒருநிலைப் படும், அப்போது அது சாந்தி அடையும். 


இந்த சிக்கல்களில் இருந்து எப்படி விடுபடுவது?  


யோகம். யோகம் என்பது ஏதோ youtube இல் செய்து காட்டும் உடற் பயிற்சி அல்ல. இப்போதெல்லாம் யோகம் என்றால் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் உடற் பயிற்சி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். 


"யோகா கிளாஸ் க்கு போயிட்டு வந்தேன்" என்பது ஒரு பெருமை.


யோகம் என்பது அது அல்ல. 


யோகத்தின் நோக்கம் உடற் பயிற்சி அல்ல. மனதை ஒருமுகப் படுத்தி சமாதி நிலையை அடைவது. 


இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரதிக்யாகாரம், தியானம், தாரணை, சமாதி என்ற எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். அதைப் பயிற்சி செய்யாதவனுக்கு மனம் கட்டுக்குள் நிலைக்காது. சிதறிய மனத்தில் அமைதியும், சாந்தியும், இன்பமும் இல்லை. 


எனவே, இன்பம் அடைய வேண்டும் என்றால், யோகப் பயிற்சி செய்ய வேண்டும். உடற் பயிற்சி அல்ல. 





 


Saturday, August 10, 2024

பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?

 பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?



துன்பம் வரத்தான் செய்யும். என்ன செய்தாலும், ஏதோ ஒஉர் மூலையில் இருந்து துன்பம் வரும். அதைத் தடுக்க முடியாது. 


வந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது? அதை எப்படி வெல்வது? அதை எப்படி அழிப்பது ?


இதுதான் நமது குறிக்கோள். துன்பத்தை தடுப்பது அல்ல. வந்த துன்பத்தை வென்றெடுப்பது. 


கீதை மிக ஆழமாக சிந்தித்து ஒரு வழி சொல்கிறது. 


அனைத்து துன்பங்களுக்கும் மனம்தான் காரணம். 


உடனே நமக்கு என்ன தோன்றும்?  எனக்கு அடி பட்டு கால் போய் விட்டது. அது துன்பம் இல்லையா? அதுக்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


தொழிலில் பெரிய இழப்பு வந்துவிட்டது. அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


நேசிக்கும் ஒருவருக்கு ஒரு நோய் அல்லது அவர் இறந்து விடுகிறார். அந்த இழப்பு உண்மையில்லையா?  அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும். 


இதெல்லாம் சும்மா தத்துவம் சொல்ல, கேட்க்க நன்றாக இருக்கும். உண்மையில் சில துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  அவை மனம் சார்ந்தவை அல்ல....என்று நமக்குத் தோன்றும். 


சற்று சிந்திப்போம். 


கால் போய் விட்டது....காலே இல்லாமல் எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக இல்லையா?  உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்கிறார்கள். இரண்டு காலும் இல்லாமல் இமய மலை ஏறுகிறார்கள். பிறவியில் இருந்தே இரண்டு கண்ணும் இல்லாதவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டார்களா?  ஊனம் ஒரு காரணம் அல்ல. எனக்கு கால் போய்விட்டதே, முன்னாடி இருந்ததே, இப்ப இல்லையே என்ற மனம்தான் காரணம். 


பணம் போய் விட்டது. உங்களை விட ஏழ்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்கள் துன்பத்துக்கு காரணம் பணம் அல்ல. உறவினர்கள் முன், நண்பர்கள் முன் வாழ்க்கை தரம் தாழுமே என்ற கவலை. அது மனம் சார்ந்தது. 


இப்படி எதைச் சிந்தித்தாலும், துன்பத்தின் மூல வேர் மனம்தான் என்று புரியும். 


அந்த மனம் தெளிவாக, சாந்தமாக இருந்தால் வந்த துன்பம் எதுவாக இருந்தாலும் அது வீரியம் குன்றி அழிந்து விடும். 


பாடல் 


प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।

प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते॥६५॥


ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|

ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே


பொருள் 


ப்ரஸாதே =  பிரசாதம் என்ற சொல்லுக்கு திருப்தி அடைவது, அமைதி கொள்வது, தெளிவு அடைவது என்று பல பொருள் இருக்கிறது. அதாவது எது வந்தாலும் அதில் திருப்தி அடைவது, அமைதி கொள்வது. எது வந்தாலும், பத்தாது, இன்னும் வேணும், இன்னும் வேணும் என்று அலையாமல் இருப்பது. 


ஸர்வ = அனைத்து 


து:காநாம் = துன்பங்களுகுக்கும் 


ஹாநிரஸ்ய = அவை அழிகின்றன 


உயோபஜாயதே = உதிக்கின்றது 


ப்ரஸந்ந = எவன் ஒருவன் மனம் போதும் என்று திருப்தி கொள்கிறதோ 


சேதஸோ = மனம், புத்தி 


ஹி = அதனால் 


அஸு = உடனடியாக 


 புத்தி: = புத்தி, மனம் 


பர்யவதிஷ்டதே = நிலையாக நிற்கிறதோ 


துன்பம் ஏன் வருகிறது?  


முதலில் காமம்,


அடுத்தது கோபம்,


அடுத்தது புலன்களின் பிடியில் சிக்கி அவற்றின் பின்னால் ஓடுவது


அடுத்து இங்கே சொல்கிறார், துன்பத்துக்கு இன்னொரு காரணம் மனம். போதும் என்று திருப்தி கொள்ளாத மனம். எவ்வளவு தந்தாலும், போதாது போதாது என்று அலை பாயும் மனம். 


ஒரு இலட்சம் உள்ளவன், ஒரு கோடி இருந்தால் போதும். அப்புறம் வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறான். ஒரு கோடி வந்த பின், பத்து கோடியாவது வேண்டும் என்று நினைக்கிறான். பத்து கோடி உள்ளவன் நிம்மதியாக இருக்கிறானா என்றால் இல்லை. அவன் நூறு கோடி கனவில் இருக்கிறான். 


எது வந்தால் நிம்மதியும் சந்தோஷமும் வரும் ஒரு காலத்தில் நினைத்தாயோ, அவை இன்று இருக்கின்றன. எங்கே அந்த நிம்மதியும் சந்தோஷமும். இன்று வேறு ஏதோ கனவில். மிக உறுதியாகச் சொல்ல முடியும், இன்றைய கனவு மெய்ப்பட்டாலும், நிம்மதியும், சந்தோஷமும் வராது. நூறு சதவீதம் உண்மை. 


நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும், பொருள்களில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வெளியே உள்ள வேறு எதிலும் இல்லை.


இவளை கைப் பிடித்தால் வாழ்க்கை சொர்கமாக இருக்கும் என்று நினைத்து திருமணம் செய்த எவ்வளவோ பேர் மிகக் குறுகிய காலத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களை நாடுவதை காண்கிறோம். 


இன்பம் அந்தப் பெண்ணில் இல்லை. பொருளில் இல்லை. உறவில் இல்லை. 


உள்ளே இருக்கிறது. 


அதை அறிந்து கொள்ளும் வரை, நிம்மதியும், இன்பமும் இல்லை. 


அறிவோம். 




Thursday, August 8, 2024

பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி

 பகவத் கீதை - 2.64 - புலன்களை அடக்கி 


மனம் தடுமாருவதற்குக் காரணம் பற்று மேலும் கோபம் என்று முந்தைய இரண்டு ஸ்லோகங்களில் சிந்தித்தோம். 


பற்றை விட்டு விட வேண்டும். கோபம் வரக் கூடாது. இப்படி எல்லாம் இருக்க முடியும் என்று வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு வாழக்கை எப்படி இருக்கும்?  உலக இன்பங்களை அனுபவிக்காமல் இருக்க முடியும் என்றாலும் இன்பமே இல்லாத ஒரு வாழ்க்கை என்ன வாழ்க்கை?  


கல்லு கூடத்தான் அப்படி இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற கேள்விக்கு விடை தருகிறது இன்றைய சுலோகம். அதே சமயத்தில் குழப்பங்களுக்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறது. 


புலன் இன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். அந்த அனுபவம் நமது கட்டுக்குள் இருக்க வேண்டும். புலன்கள் மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.  அவற்றின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக் கூடாது. நமது கட்டுப்பாட்டில் அவை இருக்க வேண்டும். 


"நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று சாப்பிடக் கூடாது. பசி தீர்ந்து விட்டால் எழுந்து விட வேண்டும். 


அறிவு சொல்கிறது இந்த facebook, whatsapp எல்லாம் வெட்டி வேலை என்று. ஆசை உந்தித் தள்ளுகிறது. போ, போய் பார் என்ன இருக்கிறது என்று.  புலன்கள் நம் கட்டுக்குள் இல்லை. 


புலன்களை கட்டுக்குள் கொண்டு வந்தவன் இன்பங்களை அனுபவிப்பது மட்டும் அல்ல, அவற்றின் மூலம் வரும் சிக்கல்களை விட்டு மன அமைதி பெறுவான். அவன் மனம் அமைதி அடையும் என்கிறது. 


பாடல் 



रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।

आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति॥६४॥


ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|

ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||


பொருள் 


ராக = விருப்பு 


த்வேஷ = வெறுப்பு 

வியுக்தைஸ்து = இவற்றில் இருந்து விலகி 


 விஷயா = உலக விஷயங்களில், அனுபவங்களில் 


இந்த்ரியைஸ் =  புலன்களை 


கரந் = செலுத்துபவன் 


ஆத்ம வஸ்யைர் = தன்னுடைய கட்டுக்குள் 


விதேயாத்மா = விதேய + ஆத்மா = தன் கட்டுப்பாட்டில் 


ப்ரஸாத = பிரசாதமாக 


அதி கச்சதி = அவன் அடைகிறான் 


வாழ்வில் கிடைத்தவற்றை பிரசசதமாகக் கொள்ள வேண்டும். நல்லதோ, கெட்டதோ, அவற்றை புனிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இது வேண்டும், அது வேண்டாம் என்று சதா போராடிக் கொண்டு இருக்கக் கூடாது. எது வந்தாலும், ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 


புலன்கள் கட்டுக்குள் இருந்தால், நன்மை தீமைகள் பெரிதாகத் தெரியாது. எது வந்தாலும் சரிதான் என்று தோன்றும். 


இந்த அனுபவம் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வந்து விட்டால் மன அமைதி வரும். 


வேண்டும் என்று நினைப்பவைகளின் பக்கம் விருப்போடு ஓடவும், வேண்டாம் என்பவற்றில் இருந்து வெறுத்து, பயந்து ஓடவும் என்று இருந்தால் என்று இந்த ஓட்டம் நிற்பது? வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


விருப்பும் வெறுப்பும் நம்மால் உருவாகும் ஒன்று. எப்போது ஒன்றை கண்டு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லையோ, அவை பலம் இழக்கும். அவை நம்மை செலுத்தாது. நாம் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 


எதன் மேல் ஆசையும், பற்றும் இருக்கிறது என்று சிந்தியுங்கள்.


எவ்வெவற்றை கண்டு வெறுப்பும், கோபமும், பயமும் வருகிறது என்று ஆராயுங்கள். 


ஏன் அந்த பயம், வெறுப்பு என்று சிந்தியுங்கள். வெறுப்பு, பயம் இவற்றின் காரணம் அந்த பொருளின் மேல் இருக்காது. உங்களிடம் இருக்கும். அதை சரி செய்து விட்டால், வெறுப்பும், பயமும் போய் விடும். மனம் அமைதி அடையும். சலனம், குழப்பம் குறையும். 


மூடி வைத்து விட்டு, கண் மூடி ஆழமாக சிந்தியுங்கள். 


கீதை உங்களுக்குள் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வரும். 




Wednesday, August 7, 2024

பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம்

 பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம் 

https://bhagavatgita.blogspot.com/2024/08/263.html

துன்பம் ஏன் வருகிறது?  


தவறான முடிவுகள், தவறான எதிர்பார்ப்புகள், போன்றவற்றால் நிகழ்கிறது. 


அதற்குக் காரணம் என்ன?


புத்தி தடுமாற்றம், புத்தியில் தெளிவு இன்மை, குழப்பம். இவற்றின் காரணமாக மனிதனுக்கு துன்பமும், அழிவும் வருகிறது. 


கீதை ஐந்து விதமான காரணங்களைக் கூறுகிறது. 


முந்தைய ஸ்லோகத்தில் எப்படி பற்று மனிதனுக்கு துன்பம் விளைவிக்கிறது என்று பார்த்தோம். 


அர்ஜுனனுக்கு அரசின் மேல் பற்று இல்லை. ஆனால், அவனுடைய பற்று உறவுகளின் மேல். "ஐயோ, என் தாத்தாவை, குருவை, உறவினர்களை எப்படி கொல்லுவேன்" என்று அவர்கள் மேல் வைத்த பற்று அவனுக்கு துன்பத்தைத் தருகிறது.


பற்று வைப்பது தவறா? கணவன்/மனைவி மேல், பெற்றோர் மேல், பிள்ளைகள் மேல், உறவுகளின் மேல் பற்று வைப்பது எப்படி தவறாகும். 


தவறு பற்றின் மேல் அல்ல. 


அந்தப் பற்று கடமைக்கு குறுக்கே வரும்போது குழப்பம் வருகிறது. பற்றா, கடமையா என்று. 


கடமை என்றால் ஏதோ அலுவலகத்தில், வேலையில், உள்ள கடமை என்று நினைத்து விடக் கூடாது. 


கீதை காட்டும் கடமை ஸ்வதர்மம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமை அவன் பிறப்பதற்கு முன் தோன்றி அவனுக்காக காத்து இருக்கும். 


அந்த  ஸ்வதர்மத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். 


ஏன் பிறந்தோம், ஏன் வளர்கிறோம் என்று தெரிய வேண்டாமா?  


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய ஸ்லோகத்துக்கு வருவோம். 


மனிதனின் மனக் குழப்பத்துக்கு இரண்டாவது காரணம் - கோபம். 


கோபம் என்றால் ஏதோ காப்பியில் சர்க்கரை சரி இல்லை என்றால் வரும் கோபம், போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு வரும் கோபம் மட்டும் அல்ல. அவை எல்லாம் வெளிப்படையான கோபங்கள். 


நமக்குள் பல கோபங்கள் உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கின்றன. நமக்கே கூட தெரியாது. 


நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன், நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன், குண்டாக இருக்கிறேன், கறுப்பாக இருக்கிறேன், ஏன் என் பிள்ளைகள் மட்டும் படிக்க மாட்டேன் என்கிறது, ஏன் இன் கணவன்/மனைவி இப்படி இருக்கிறார்கள், ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி சோதனைகள் வருகிறது என்று பல கோபங்கள் நம்மை அறியாமல் நமக்குள் நாளும் கனன்று கொண்டு இருக்கிறது. 


யாரிடம் போய் கோபப் படுவது? விதியின் மேலா, இறைவனின் மேலா, கோபப்படக் கூட ஆள் இல்லை. ஆனால், கோபம் மட்டும் நிற்கிறது. இந்தக் கோபம் மனதை தடுமாற வைக்கும். 


நம்மை விட அழகான ஆள் மேல் தேவை இல்லாமல் கோபம் வரும். அவர் நமக்கு ஒன்றும் செய்து இருக்க மாட்டார். கோபம் பொறாமையாக வெளிப்படும். அவனுக்கு மட்டும் எல்லாம் நல்லா அமைகிறது என்று. சுய பச்சாதாத்தில் கொண்டு விடும். "என் விதி இப்படி ஆகி விட்டது" என்று. 


இப்படி கோபம் மனத்தைக் குழப்பும். குழப்பத்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம் வரும். மனம் தவறான பாதையில் செல்லும். அழிவு வரும். 


பாடல் 



क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः।

स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति॥६३॥


க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|

ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||


பொருள் 


க்ரோதாத் பவதி = கோபம் வருவதால் 

ஸம்மோஹ: = புத்தி தடுமாற்றம் வரும் 


ஸம்மோஹாத் = புத்திக் குழப்பத்தில் இருந்து  


ஸ்ம்ருதிவிப்ரம:| = நினைவு , ஞாபகம் தடுமாறுகிறது. மறதி வருகிறது. 


ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் = ஞாபக மறதியால் 


புத்திநாஸோ = புத்தி நாசம் அடைகிறது 


புத்திநாஸாத்  = புத்தி நாசத்தால் 


ப்ரணஸ்யதி = ஒருவனுக்கு அழிவு வருகிறது 


ஞாபக மறதியில் இருந்து அழிவு எப்படி வரும்?


நாம் எவ்வளவோ படிக்கிறோம், கேட்கிறோம். 


கோபம் வரும் போது, படித்தது, கேட்டது எல்லாம் ஞாபகம் வருகிறதா?  எல்லாம் மறந்து போகிறது அல்லவா?  


"அவ்வளவு படிச்ச ஆளு, அவரா அப்படிச் செய்தார்" என்று மக்கள் வியப்பதை கண்டு இருக்கிறோம். 


கோபம் வந்தால், நல்லது கெட்டது மறந்து போகும். 


உள்ளுக்குள் தேடுங்கள். உங்கள் கோபம் எங்கே இருக்கிறது என்று. யார் மேல். எதன் மேல் என்று. கோபம் விலக வேண்டும். இல்லை என்றால் அழிவு நிச்சயம். 



Saturday, July 29, 2023

பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும்

 பகவத் கீதை - 2.62 - ஆசையும், கோபமும் 


ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।

सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥


த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/262.html


(to continue reading, please click the above link)


த்யாயதோ = சிந்திப்பவர்கள் 

விஷயாந் = இந்த உலகில் 

 

பும்ஸ: = அவர்கள் 

ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|

ஸங்கா = தொடர்பு, தொடர்பினால், பற்றினால் 

த்ஸு = அவற்றில் 

உஞ்ஜாயதே  = உதிக்கிறது 

காம: = ஆசையினால் 

காமாத் = அந்த ஆசையினால் 

க்ரோதோ = கோபம் 

அபிஜாயதே = வருகிறது  


அடுத்த ஐந்து ஸ்லோகங்களில் மனித மனம் எவ்வாறு சலனப் படுகிறது, அதனால் வரும் சிக்கல்கள் பற்றி விளக்குகிறது. 


மனம் எதை தொடர்ந்து சிந்திக்கிறதோ. அதன் மேல் ஆசை வருகிறது. 

ஆசையில் இருந்து பற்று வருகிறது. 

பற்றில் இருந்து கோபம் வருகிறது. 


நாம் நினைப்போம், கோபம் என்றால் ஏதோ சத்தம் போடுவது, சண்டை போடுவது, சாமான்களை தூக்கி எறிவது, என்றெலாம் நினைப்போம். "எனக்கு கோபமே வராது. நான் யாரையும் அதிர்ந்து கூட பேசுவது கிடையாது" என்று சிலர் நினைக்கலாம். 


கோபம் என்பது வெளியில் செல்ல வேண்டும் என்றில்லை. 


நான் வேற படிப்பு படித்து இருந்தால், பெரிய ஆளாயிருப்பேன். என் பெற்றோர் வேறு எதையோ படிக்க வைத்ததால் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று பெற்றோர் மேல் கோபம் வரலாம். 


நல்ல பெண்ணை/கணவனை மணந்து இருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன் என்று வாழக்கை மேல் கோபம் வரலாம். 


பொருள்கள் மற்றும் அனுபவங்களை பற்றி சிந்தித்தால், அதன் மேல் பற்று வரும், பற்று வந்தால் ஆசை வரும், ஆசை வந்தால், அது கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது கிடைக்க தாமதம் ஆனாலோ கோபம் வரும்.


இது நம் மனதில், புத்தியில் வரும் நிகழும் முதல் சலனம் அல்லது மாற்றம். 


இவை நம் புத்தியை தடுமாறச் செய்துவிடும். 


அர்ஜுஜனுக்கு அரசின் மேல், செல்வத்தின் மேல் ஆசை இல்லை ஆனால் தாத்தா, ஆசிரியர் மேல்பற்று. அந்த பற்று அவனை தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கிறது. புத்தி தடுமாற்றம் நிகழ்கிறது. தடுமாறிய புத்தியில் இருந்து வரும் முடிவுகள் தடுமாற்றமாகத்தானே இருக்கும். அது எப்படி சரியாக இருக்கும்?




 

Tuesday, July 25, 2023

பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு

 பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு 


तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।

वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥


தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|

வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/261.html


(please click the above link to continue reading)


தாநி = அவர்கள் 


ஸர்வாணி = எல்லோரும் 


ஸம்யம்ய = கட்டு படுத்திய பின் 


யுக்த = இணைந்த பின் 


ஆஸீத = அமர்ந்து 


மத்பர:| = பர என்றால் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம். மத் என்றால் நான், என்னில், தன்னுள்.. இதை பின்னால் விரிவாகப் பார்ப்போம். 


வஸே = வசப்படுத்தி 


ஹி = உறுதியாக 


யஸ்யே = அவர்களின் 


இந்த்³ரியாணி = புலன்கள், இந்திரியங்கள் 


தஸ்ய = அவர்கள் 


ப்ரஜ்ஞா = அறிவு, முடிவு, 


ப்ரதிஷ்டி²தா = உறுதியுடன் இருக்கும் 


அறிவில் சிறந்தவர்கள் கூட, புலன்களால் உந்தப்பட்டு தவறான முடிவுகள் எடுத்து விட முடியும் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். 


சரி, அப்படி என்றால் என்னதான் செய்வது?


புலன்களை எல்லாம் விட்டு விட முடியுமா?  பசிக்கிறது என்று வயிறு சொல்லும் போது, சாப்பிடாமல் எப்படி இருப்பது?  ஒவ்வொரு புலனும் ஏதேனும் ஒன்றை பற்றுகிறது. அவற்றின் மூலம் நமக்கு இன்பம் கிடைக்கிறது. 


புலன் இன்பத்தை விட்டு விட்டால் பின் வாழ்வது எதற்கு? கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறதா?


இல்லை. 


புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவம் என்பது அறிவின் கீழ் வர வேண்டும். 


எப்படி என்று சிந்திப்போம். 


இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக எந்நேரமும், பார்க்கும் போதெல்லாம் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?  நாக்கு சொல்லும். அதன் பின்னால் போக முடியுமா?  சிந்திக்கிறோம் அல்லவா?  இது நல்லது அல்ல. அளவுக்கு மேல் உண்ணக் கூடாது என்று அந்த புலன்களை கட்டுக்கொள் கொண்டு வருகிறோம் அல்லவா?


நாக்குக்கு சொன்னது தான் மற்ற புலன்களுக்கும். அனுபவம் என்பது அறிவோடு சேர்ந்து நிகழ வேண்டும். 


காமம் வேண்டும்தான். அது நல்லது. சுகமானது. அதற்காக மனம் போனபடி எல்லாம் போனதால் இராவணன் அழிந்தான். அவனிடம் அறிவு இருந்தது. ஆனால், அது புலன்களுக்கு கீழே சென்று விட்டது. 


அது சரிதான், ஆனால் அது எங்கே இந்த ஸ்லோகத்தில் வருகிறது?


 யுக்த ஆஸீத மத்பர:| வஸே


யுக்த என்றால் இணைத்து, சேர்த்து என்று அர்த்தம். யோகம் என்பது இணைப்பது. 


ஆசீத - அமர்ந்து. அதாவது நிதானமாக யோசித்து. 


மத்பர = பர என்றால் உயர்ந்த, சிறந்த. மத் என்றால் தன்னில், என்னில், தனக்குள் 


இங்குதான் சிக்கல் வருகிறது. இங்கே, பொருள் சொல்பவர்கள், "மத்" என்பதை கண்ணன் தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, புலன்களை என்பால் (கண்ணன்) செலுத்தி என்று பொருள் கொள்கிறார்கள்.   இறை பக்தி உள்ளவர்கள் கூட தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இராவணன் செய்யவில்லையா?


அதை விட, தன்னில் என்பதை நம்மிடம் உள்ள சிறந்த விடயத்தில் செலுத்தி என்று பொருள் கொண்டால் அது நம் அறிவை குறிக்கும். நம்மில் சிறந்தது எது என்றால் நம் அறிவு, நம் ஞானம்தான். சிறந்தது. புலன்களை அறிவோடு இணைத்து செயல்பட வேண்டும் என்பது சரியான பொருளாக இருக்கும். 


யுக்த என்றால் இணைத்து - புலன்களை அறிவோடு இணைக்க வேண்டும். புலன்கள் அறிவின் கட்டுப்பாட்டுகுள் இயங்க வேண்டும். அதுவும் உறுதியான அறிவாக இருக்க வேண்டும். 


பக்தி சார்ந்து பொருள் சொல்வதாக இருந்தால், புலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து என்று பொருள் சொல்லலாம். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். 



Monday, July 24, 2023

பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி

 பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி 


यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।

इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः


yatato hy api kaunteya puruṣasya vipaścitaḥ

indriyāṇi pramāthīni haranti prasabhaṃ manaḥ


யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|

இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/260.html


(pl click the above link to continue reading)


யததோ = கடின விடா முயற்சி 

ஹியபி  = இருந்தாலும் 


 கௌந்தேய = குந்தி மகனே 


புருஷஸ்ய = ஒருவன் 


விபஸ்²சித: = அறிவுள்ள 


இந்த்³ரியாணி = புலன்கள் 


ப்ரமாதீ²நி = அலைகழிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு 


ஹரந்தி = கொண்டு செல்லப்படும் 


ப்ரஸப⁴ம் = வலுக்கட்டாயமாக 


மந: = மனம், புத்தி 


நாம் வாழ்வில் பல முடிவுகளை எடுக்கிறோம். அவை அறிவு சார்ந்த முடிவா? உணர்வு சார்ந்த முடிவா என்று எப்படி அறிந்து கொள்வது. 


கோபம் வரும் போது, ஏதேதோ பேசி விடுகிறோம். என்னதான் படித்து, அறிவு இருந்தாலும், அந்த நேரத்தில் புத்தி மந்தமாகிப் போய் விடுகிறது அல்லவா?


உணவு கட்டுப்பாடு வேண்டும். கண்டதையும் தின்னக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். இருந்தும், ஒரு நல்ல தின் பண்டத்தைக் கண்டால் கை தானே போகிறது அல்லவா?  அறிவு எங்கே போனது?


எல்லாம் படிப்போம். எல்லாம் தெரியும். ஆனால், ஒரு சில நேரத்தில் புலன்கள் நம் புத்தியை தன் பாட்டுக்கு இழுத்துச் சென்று விடும். 


புலன்கள் யானை மாதிரி. புத்தி என்பது அதை கொண்டு செல்லும் யானை பாகன் மாதிரி. பாகன் எப்படித்தான் ஓட்டிச் சென்றாலும், யானைக்கு ஒரு கடையில் சென்று பழத்தை தின்ன வேண்டும் என்று ஆசை வந்து விட்டால், பாகன் என்ன முயன்றாலும் அதை கட்டுப் படுத்த முடியாது. 


நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், நம் முடிவுகள் எல்லாமே சரியான முடிவுகள் என்று நாம் சொல்ல முடியாது. நம்மை அறியாமல், நம்மையும் மீறி நாம் சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். 


அப்படி என்றால் என்ன செய்வது?


முதலில், நான் எடுத்த முடிவு சரிதான் என்று சாதிக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவு உணர்வுகளால் உந்தப்பட்டு, புலன்களால் இழுத்துச் செல்லப்பட்ட முடிவாக இருக்கலாம். அடம் பிடிக்கக் கூடாது. 


இரண்டாவது,  பெரிய முடிவுகளை நம்மைவிட அறிவில் சிறந்தவர்களை கொண்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயம், ஆசை, போன்றவற்றால் உந்தப்பட்டு தவறான பாதையில் சென்று விடக் கூடாது. 


இங்கே, அர்ஜுனன் போர் செய்ய மாட்டேன் என்கிறான். அது சரியான முடிவா?  பாசம் என்ற உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவு எடுக்கிறான். அதன் விளைவுகள் அவனுக்குத் தெரியவில்லை. 


மூன்றாவது, முடிவுகள் எடுக்கும் முன், சில கோட்பாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். எதனால், எதற்கு இந்த முடிவை எடுக்கிறோம் என்று. இல்லை என்றால், அறிவு பற்ற ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும். 


உதாரணமாக, அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும்?  போர் செய்யாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கிறது. போர் செய்ய என்ன காரணம்?


அவன் ஒரு க்ஷத்ரியன். தர்மத்துக்காக போராட வேண்டியது அவன் கடமை. அந்த கடமை, பொறுப்பு, தர்மம், அறம் என்ற கோட்பாடுகள் இல்லை என்றால், புலன்கள் செல்லும் பக்கம் எல்லாம் போக வேண்டி இருக்கும். 


கண்ணன் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  "படித்து அறிந்த அறிஞனைக் கூட, புலன்கள் ஒரு கண நேரத்தில் இழுத்துச் சென்று விடும் " என்று. 


சில கொள்கைகளை, சில வரைமுறைகளை வைத்துக் கொண்டு அதன் படி வாழப்  பழக வேண்டும். 


Monday, July 18, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3

  

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


கீதை சொல்கிறது, "உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். " என்று. 


நாம் ஒன்றின் மேல் பற்றை விட்டுவிட்டால் அது நாளடைவில் நம்மை விட்டுப் போய் விடும். 


சின்ன சின்ன உதாரணங்கள் பார்ப்போம்....



https://bhagavatgita.blogspot.com/2022/07/259-3.html


(Pl click the above link to continue reading)



 


வயதாகி விட்டது. சர்க்கரை மேல் உள்ள ஆசையை விட்டு விடுகிறோம். இனிப்பு பண்டங்கள் வேண்டாம் என்று தள்ளி வைக்கிறோம். 

அப்படி நினைத்தால் என்ன ஆகும்?


சர்க்கரை வாங்க மாட்டோம். ஐஸ் கிரீம் கடைகளுக்கு போக மாட்டோம். இனிப்பு பண்டங்களை வாங்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் நம் வாழ்வில் குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் முற்றும் இல்லாமல் போய் விடும். 


அது இயற்கைதானே. எது வேண்டாம் என்கிறோமோ, அதை ஏன் வைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அது நம்மை விட்டு போய்விடும். 


பிள்ளைகள் மேல் அன்பாக் இல்லாவிட்டால் அவர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்கள். 


கணவன் மற்ற பெண்களை பார்க்கிறான் என்று மனைவி வருந்தினால், காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். நாம் எதன் மேல் ஆசையை விடுகிறோமோ, அது நம்மை விட்டுப் போய் விடும். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


மேலும் கீதை சொல்கிறது, ஆசையை விட்டாச்சு, விடயங்கள் நம்மை விட்டுப் போய் விட்டன. எல்லாம் சரிதான். இருந்தாலும், எப்போதாவது அந்த விடயங்கள் நம்மிடம் வரும் என்றால், பழைய ஆசை காரணமாக நம் மனம் அதை மீண்டும் பற்றிக் கொள்ளும். 


இனிப்பே வேண்டாம் என்று கூறி கடுமையான விரதம் இருப்பவர்கள் முன்னால், ஒரு இலட்டு, ஜிலேபியை வைத்துப் பாருங்கள். நாக்கில் எச்சில் ஊறும். ஒரு நாள்தானே. ஒரு துண்டுதானே என்று உண்டு விடுவார்கள். 


மது அருந்துவதில்லை என்று கடுமையான விரதம் இருப்பார்கள். அலுவலகத்தில் ஏதோ விழா.  நண்பர் ஒரு glaas கொடுக்கிறார். சரி, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று குடித்து விடுவார்கள். 


இதற்கு வாசனை என்று பெயர்.  ஒரு பாண்டத்தில் பெருங்காயம் போட்டு வைத்து இருப்போம். பின் ஒரு நாள் அது முற்றும் தீர்ந்து விடும். அந்தப் பாண்டத்தை முகர்ந்து பார்த்தால் பெருங்காய வாசனை அடிக்கும். அதில் இப்போது பெருங்காயம் இல்லை. ஆனால், அதன் வாசனை மட்டும் தங்கி இருக்கிறது. 


அது போல, ஆசை விட்டுப் போய் விட்டாலும், முன்பு அனுபவித்த அனுபவம் காரணமாக அவை மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும். 



எல்லாவற்றையும் துறந்து கானகம் போய் தவம் செய்த முனிவர்களை அழகிய பெண்கள் மயக்கியதாக பல கதைகள் படித்து இருக்கிறோம். 


வாசனை விடாது. 


அசை, வாசனை போகவில்லை. அதை அடக்கி வைத்து இருக்கிறோம். என்றேனும் ஒரு நாள் அது மீண்டும் வெளி வரும். 


அது வராமலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அதை விட உயர்ந்த ஒன்றில் ஆசை வந்து விட்டால், அந்த ஆசைகள் போய் விடும். பின் அவை மீண்டும் வந்தாலும், நமக்கு அதன் மேல் ஆசை வராது. 


ஏன் ஒவ்வொன்றாகப் போக வேண்டும்? உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றின் மேல் பற்று வந்து விட்டால், பின் உலகில் உள்ள அனைத்தின் மேலும் உள்ள பற்றுகள் தானே மறைந்து விடும். 


அதைப் பற்றி விட்டால் பின் உலக விடயங்களில் உள்ள பற்று விட்டுப் போய் விடும். 


அது என்னவோ துறவி, சாமியார் மாதிரி ஆகி விடாதா என்றால் இல்லை. 


நூறு ரூபாய் பெறுவதற்காக ஐந்து ரூபாயை துறப்பவனை துறவி என்றா சொல்லுவோம்?


இறைவனை அடைய இந்த சில்லறை விடயங்களை துறப்பது என்பது துறவே அல்ல. சந்தோஷமான விடயம். 


ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரையை விட்டுவிட்டால் அதனால் துன்பமா? இன்பமா? 


நோயற்ற, நீண்ட, ஆரோக்கியமான வாழக்கை வேண்டும் என்று எண்ணெய் பலகாரத்தை ஒருவன் வேண்டாம் என்று தள்ளி வைத்தால் அது ஒன்றும் பெரிய தியாகமோ, துறவோ ஆகாது. அதற்காக யாராவது வருந்துவார்களா?


அது போல், இறை அனுபவம் நோக்கி உலக விடயங்களை துறப்பது என்பது பெரிய தியாகமோ துறவோ அல்ல.


நீங்கள் நினைக்கலாம். 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்றே தெரியாது. எவ்வளவுதான் நம்பினாலும் சந்தேகம் இல்லாமல் இல்லை. ஒரு வேளை இறைவன் இருந்து, நான் அவனிடம் சேராவிட்டால், இந்த உலக இன்பமும் போய், இறை அனுபவமும் கிடைக்காமல் போய் விடலாம் அல்லவா? இருக்கும் போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால் என்ன? இந்த உலக இன்பமாவது கிடைக்குமே? 


அது ஒரு சரியான சிந்தனை தான். மறுபதற்கு இல்லை. 


இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்.


இறைவன் என்று கொள்ள வேண்டாம். 


ஏதோ ஒரு உயர்ந்ததை அடைய அதை விட குறைவான ஒன்றை விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


உடல் ஆரோக்கியம் என்ற உயரத்தை அடைய கொஞ்சம் தூக்கத்தை விட்டு உடற் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நல்லதை, உயர்ந்ததை அடைய அதற்கு கீழானதை விடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அது உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே போகும் அல்லவா. 


அது வரை நல்லது தானே. 


அது ஒரு நாள் இறைவனிடம் உங்களை கொண்டு சேர்க்கலாம்.சேர்க்காமலும் போகலாம். ஆனால், நீங்கள் மிக இனிமையான, உயர்வான, ஆரோக்கியமான திருப்தியான, மகிழ்வான வாழ்வை வாழ்ந்து இருப்பீர்கள். 


அதில் சந்தேகம் இல்லையே. 


ஒவ்வொரு நாளும் சில நல்லவை வந்து சேரும், சில தீயவை விட்டு விலகும். 


அது கீதை காட்டும் வழி. 



Friday, July 15, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2

 

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 2



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இதில் மூன்றாவதை நேற்று சிந்தித்தோம். ஒன்றை விட வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


குழந்தை தெரியாமல் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து விளையாடும். அதன் கையில் இருந்து பிடுங்க முடியாது. அது ஒரு புறம் இழுக்க, நாம் மறு புறம் இழுக்க, குழந்தை கையை கீறிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. 


அப்போது  என்ன செய்வோம் "இராஜா, அதைத் தந்தால் நான் உனக்கு சாக்லேட் தருவேன்,புது பொம்மை தருவேன்" என்றதும் குழந்தை கத்தியை கீழே போட்டுவிட்டு "சாக்லேட் தா" என்று கையை நீட்டும். 


அது போல மனம் உலகப் பற்றை விட வேண்டும் என்றால், அதை விட மிகுந்த இன்பம் தரக் கூடிய ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டும். 


பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்று விடற்கு என்பார் வள்ளுவர். 


உலகப் பற்றை விட வேண்டுமா? பற்றற்றானைப் பற்றிக் கொள் என்கிறார். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html


(pl click the above link to continue reading)


குரங்கு ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு தாவும் போது எப்படிச் செய்யும். இருக்கிற கிளையை விட்டுவிட்டு அடுத்த கிளையை பற்றும். 


இறை அனுபவம் எல்லாம் பெரிய விடயம். எல்லாருக்குமா அது நிகழ்கிறது? நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது. 


நமக்கு புரிகிற மாதிரி ஏதாவது இருக்கிறதா? 


இருக்கிறது. 


அழகாய் இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தாங்கள் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். தங்கள் அழகுக்கு ஒரு குறை வர விட மாட்டார்கள். 


வயிறு காய்ந்தாலும் முகம் காயக் கூடாது என்று நினைப்பார்கள். 


அழகைக் குறைக்கும்  முதல் படி எது? வயிற்றில் தொப்பை போடுவது, உடம்பு ஊதிப் போவது. 


இருந்தும், எந்தப் பெண்ணாவது பிள்ளைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் இருப்பாளா?  எவ்வளவு வலி என்றாலும், எவ்வளவு அழகு குறைந்தாலும், பிள்ளை என்பது பெரிய சுகம், பெருமை அல்லவா? அது கிடைக்கும் என்றால் கொஞ்சம் அழகு போனால் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளகிறார்கள் அல்லவா?


அது போலத்தான் , இறை அனுபவம் (=பிள்ளை) வந்தால் உலக விடயங்கள் (=அழகு) தானே விட்டுப் போய் விடும்.


இது மூன்றாவதாக உள்ளது.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


நாம் ஒன்றின் மேல் விருப்பம் கொள்ளாவிட்டால் அவை தானே நம்மை விட்டு நீங்கி விடும். 


அது எப்படி?


மேலும் சிந்திப்போம் 

Thursday, July 14, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 1 


 विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः।

रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते॥५९॥


விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|

ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||


விஷயா = விஷயங்கள் 

விநிவர்தந்தே = ஈடுபடுவது இல்லை 

நிராஹாரஸ்ய = நிராகரிக்கின்றன 

தே³ஹிந:| = உடம்பை பிரதானமாக நினைப்பவர்கள் 

ரஸவர்ஜம் = சுவையை விடுவது இல்லை 

ரஸோ = சாரம் 


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


(pl click the above link to continue reading)



அபி = இருந்தும் 


அஸ்ய = அதன் 


பரம்  = உயர்ந்த, சிறந்த, மேம்பட்ட 


த்³ருஷ்ட்வா = கண்ட பின் 


நிவர்ததே = அது நின்று விடுகிறது 


எதன் மேல் பற்று இல்லையோ, அவை ஒருவனை விட்டு தானே விலகிவிடுகின்றன. இருந்தும், அவற்றின் மேல் உள்ள சுவையினால் மனிதன் அவற்றை விடுவது இல்லை. பரம்பொருளை அனுபவித்தபின் அந்த சுவைகள் தீர்ந்து விடும். 



மிக உயரிய கருத்து. மிக மிக ஆழமான கருத்து. நிதானமாக படிக்க வேண்டிய ஒன்று. 


ஒரு வாய் காப்பி குடிக்கிறோம். மிக சுவையாக இருக்கிறது. நல்ல டிக்காஷன், கட்டியான பால், சுண்டக் காய்ச்சி, அளவான இனிப்பு சேர்த்து, ,சூடாக இருக்கிறது. அந்தக்மெல்லிய கசப்பும், பாலின் சுவையும், சர்க்கரையும் நாக்கில் நர்த்தனமாடும். 


இடையில் ஒரு இலட்டை ஒரு கடி கடிக்கிறோம்.அப்படி ஒரு சுவை. இனிப்பு, நெய், ஏலக்காய் நறுமணம், இடையிடையே கற்கண்டு. அடடா என்ன ஒரு சுவை. இரண்டு மூன்று துண்டுகளை இரசித்து சுவைக்கிறோம். 


அடடா, காப்பி ஆறிக் கொண்டே இருக்கிறதே என்று காப்பியை ஒரு மிடறு குடிக்கிறோம்.  காப்பி கசக்கிறது. அதே காப்பிதான். முதலில் சுவையாக இருந்தது. இப்போது கசக்கிறது. 


ஏன்?


நடுவில் இலட்டு தின்றதால். அதன் தித்திப்பு, காப்பியின் சுவையை மழுங்கடித்து விடுகிறது. 


அதே போல், 


உலக இன்பங்கள் சுவையானவைதான். கணவன், மனைவி, பிள்ளைகள், வீடு, கார், ,சினிமா, சாப்பாடு, இசை, நண்பர்கள், ஊரு சுற்றுவது என்பதெல்லாம் சுகம்தான். 


இதையெல்லாம் விடு என்றால் யார் விடுவார்கள்?


ஆனால்,


இறை அனுபவம் வந்து விட்டால், இந்த உலக சுகம் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாது. 


உலக இன்பம் = காப்பி

இறை அனுபவம் = இலட்டு


உலக இன்பத்தை ஒன்றும் துறக்க வேண்டாம். இறை அனுபவம் வந்து விட்டால், உலக இன்பம் கொடுத்தாலும் வேண்டாம் என்போம். 



இறை அனுபவம் வந்த பின், "கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து" என்பார் அருணகிரிநாதர். 



பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை

விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,

அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!

கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!



தேன் புளிக்குமா? 


அரும்பும் தனி பரமானந்தம் அறிந்த அன்றோ கரும்பும் துவர்த்து என்றார். 


அதற்குப் பின் கரும்பை, தேனை கொண்டு வந்து தந்தாலும், "சீ சீ இது துவர்க்கும், புளிக்கும்" என்று தள்ளி விடுவோம். 


அதெல்லாம் சரி. அருணகிரிநாதருக்கு அப்படி ஒரு அனுபவம் வந்தது, நமக்கு அப்படி ஒன்றும் இல்லையே. நாம் ஏன் விட வேண்டும் என்ற கேள்வி வரும் அல்லவா?


விடை காண்போம். 




Tuesday, July 12, 2022

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு 


 यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः।

इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५८॥


பாடல் 


யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|

இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/258.html


(pl click the above link to continue reading)


யதா = எப்படி  


ஸம்ஹரதே = இழுத்துக் கொள்கிறதோ 


சா = மேலும் 


அயம் = அது 


கூர்மோ = ஆமை 


அங்காநி = அவயங்களை 


இவ = அது போல 


ஸர்வஸ²:|= முழுமையாக 


இந்த்ரியாணீந்த்ரியார்தேப்ய  = புலன்களை 


தஸ்ய  = அவன் 


ப்ரஜ்ஞா = அறிவு 


ப்ரதிஷ்டிதா = நிலை கொண்டது 


எப்படி ஆமை தன் அவயங்களை உள் இழுத்துக் கொள்கிறதோ, அது போல் புலன்களை வெளியே செல்ல விடாமல் எவன் ஒருவன் கட்டுக்குள் கொண்டு வருகிறானோ, அவனுடைய அறிவே நிலையானது 


நமக்கு என்ன வேண்டும் என்று தெரிவதில்லை. தெரியாததால் என்ன நிகழ்கிறது என்றால் எதைப் பார்த்தாலும் அது வேண்டும், இது வேண்டும் என்று மனம் ஆசைப் படுகிறது. கிடைக்கவிட்டால் வருத்தப் படுகிறது. மற்றவனுக்கு கிடைத்து விட்டால் பொறாமைப் படுகிறது. தனக்கு கிடைத்து விட்டால், அது கை விட்டுப் போய் விடுமோ என்று பயப்படுகிறது. 


இத்தனைக்கும் காரணம் என்ன? மனம் புலன் வழியே செல்வதால். 


அந்த வீடு வேண்டும், இந்த கார் வேண்டும், அது போல் ஒருதொலைக் காட்சிப் பெட்டி வேண்டும், அவள் வைத்து இருப்பது மாதிரி நகை வேண்டும், அந்த நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்..இப்படி புலன் எல்லாவற்றிற்கும் ஆசைப் படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒன்றின் பின்னால் ஓடுகிறது. 


ஓடி ஓடி களைத்து போகிறது. 


வேண்டியதை அடைய அலைகிறது. அது கிடைத்த பின் அடுத்ததற்கு அலைகிறது. 


இந்த ஓட்டம் நிற்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கீதை கூறுகிறது. 


அறிவு அலை பாயக் கூடாது. 


அறிவு அல்லது மனம் அலைபாயக் கூடாது என்றால், அது புலன்கள் செல்லும் வழியில் செல்லக் கூடாது. 


மனதை கட்டுப் படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. 


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், புலன்களை வெளியில் செல்ல விடக் கூடாது. 


ஒரு உதாரணம் பார்ப்போம். 


இப்போது உங்களுக்கு அல்வா சாப்பிட ஆசையாக இருக்கிறதா. நான் கேட்கும் வரை அந்த எண்ணமே இருந்திருக்காது. 


உங்கள் முன்னால், ஒரு தட்டில் கொஞ்சம் அல்வாவை வைத்து விட்டு , அல்வா உண்ண ஆசையா என்றால் ஆம் என்பதுதான் பதிலாக இருக்கும். 


கண் அந்த அல்வாவை பார்க்க விடக் கூடாது. அதற்காக கண்ணை மூடிக் கொண்டே இருக்க முடியுமா? 


அது அல்ல. அல்வா இருக்கும் இடத்துக்கு புலன்களை செல்ல விடக் கூடாது. 


வீட்டில் நிறைய தின் பண்டம் வாங்கி வைத்தால், மனம் அங்கே செல்லும்.  அதைக் கட்டுப் படுத்த ஒரே வழி, தின் பண்டம் வாங்கி வைக்கமால் இருப்பதுதான். 


புலன்களை கட்டுப் படுத்துவது என்றால் அவற்ற்றை கட்டி வைப்பது அல்ல. தேவை இல்லாதவற்றை அவற்றின் முன் கொண்டு செல்லக் கூடாது. அல்லது அவை இருக்கும் இடத்துக்கு புலன்களை கொண்டு செல்லக் கூடாது. 


அப்படி போக விரும்பும் புலன்களை உள் இழுத்துக் கொள்ள வேண்டும். 


மது அருந்த ஆசை வந்தால், கால்கள் கள்ளுக் கடைக்கு இழுத்துச் செல்லும். அப்படி போகும் கால்களை போக விடாமல் நிறுத்த வேண்டும். கள்ளுக் கடையில் உட்கார்ந்து கொண்டு, புலன் அடக்கம் செய்கிறேன் என்றால் நடவாது. 


புலன்களை கட்டுப்படுத்தி விட்டால், அறிவு நிலையாக நிற்கும். 


சலனமற்ற அறிவில் இருந்து தெளிவான காட்சி பிறக்கும். 



Friday, May 13, 2022

பகவத் கீதை - 2.57 - நிலை கொண்ட அறிவு எது ?

 பகவத் கீதை - 2.57 - நிலை கொண்ட அறிவு எது ?




यः सर्वत्रानभिस्‍नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम्।

नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५७॥


ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|

நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/05/257.html


(pl click the above link to continue reading)


ய:  = எவன் 


ஸர்வத்ர  = எங்கும், எதிலும் 


அநபி⁴ஸ்நேஹஸ் = அ + அபி + ஸ்நேக = சிநேகம் என்றால் நட்பு, உறவு, தொடர்பு. அ + சிநேகம் என்றால் பற்று அற்று. தொடர்பு அற்று 


தத்தத் = தத் தத் = அதன் அதன் 


ப்ராப்ய = ப்ராப்தம் என்றால் அனுபவம்.  ப்ராப்ய, அனுபவம், 


ஸு²பா⁴ஸு²ப⁴ம்| = சுபா + அசுபம் = நல்லதும், கெட்டதும் 


ந  = இல்லை 


அபி⁴நந்த³தி  = இன்புறுதல், புகழ்தல் 


ந  = இல்லை 


த்வேஷ்டி  = த்வேஷம், வெறுப்பு 


தஸ்ய = அவனுடைய 


ப்ரஜ்ஞா  = அ அறிவு 


ப்ரதிஷ்டிதா = உறுதியானது 


எவன் எங்கும், எதிலும் தன் அனுபவங்களின் மேல் பற்று இல்லாமலும், அவற்றினால் மகிழாமலும், வருந்தாமலும் இருப்பானோ, அவன் அறிவே உறுதியான அறிவு. ஸ்தித ப்ரஞன் என்று கூறுவார்கள். .


அனுபவங்கள் மேல் பற்று இருக்கக் கூடாது. அதற்காக மகிழவும் கூடாது. வருந்தவும் கூடாது. அப்படி இருந்தால் உறுதியான நிலையான அறிவு உள்ளவன் என்று பொருள் என்கிறான் கண்ணன். 


அது சரி, எனக்கு அரசு வேண்டாம், அது தரும் இன்பம் வேண்டாம், இந்த உறவினர்களை கொல்லும் வேதனையும் வேண்டாம், நான் பாட்டுக்கு போகிறேன் என்று சொன்னவனை பிடித்து உக்கார வைத்து, பலன்களின் மேல் பற்று வைக்காதே, வெற்றியில் களிக்காதே, தோல்வியில் துவளாதே என்று சொன்னால் என்ன அர்த்தம். 


அவன் அதைத் தானே செய்கிறான் என்றான். வெற்றி தரும் இன்பம் வேண்டாம். உறவைக் கொல்லும் துன்பம் வேண்டாம் என்று தானே அவனும் சொன்னான். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


அனுபவங்களில் இன்ப துன்பம் இல்லாமல் இருக்க முடியுமா? இருக்க முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், அது தேவையா?  கல்லும், மரமும் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். உணர்ச்சி உள்ள மனிதன் எப்படி அப்படி இருக்க முடியும்? 


இது இன்னொரு பக்கம். 


இந்த இரண்டுக்கும் விடை கண்டாக வேண்டும். 


இன்ப துன்பங்களை நாம் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


இன்பம் வருகிறது. சந்தோஷம். அதோடு கூட என்ன தோன்றுகிறது? 


இந்த இன்பம் இப்படியே இருக்க வேண்டுமே என்ற ஏக்கம். இந்த இன்பம் மறுபடியும் மறுபடியும் வேண்டுமே என்ற ஆசை. ஒரு வேளை ஏதும் நிகழ்ந்து விடுமோ என்ற பயம் எல்லாம் வருகிறது. மேலும், அதே இன்பம் கொஞ்ச நாளில் சலித்துப் போய் விடுகிறது. அதை தூக்கிப் போட்டு விட்டு வேறு ஒன்றின் பின் மனம் செல்கிறது. .


இது நிகழ்வது தானே? இது முதல் படி. அடுத்த படிக்கு போவோம். 


இதனால் என்ன நிகழ்கிறது? நாம் இந்த அனுபவங்களுக்கு அடிமை ஆகிப் போகிறோம். 


இல்லை...நான் ஒன்றும் அடிமை இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு முன்...


யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இன்பம் நாடியே, பெற்ற இன்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அதை மீண்டும் மீண்டும் அனுபவிக்க....உண்டா இல்லையா. 


காலை எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும் வரை இது தான். 


இன்பம் வேண்டும் என்று நீங்கள் அலைவது இல்லை.  இதெல்லாம் செய்தால் இன்பம் வரும், நிலைக்கும் என்று ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல காரியங்களை செய்கிறீர்கள். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடந்த வாரம் நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன என்று. 


மந்திரித்து விட்ட சேவல் மாதிரி காரியங்கள் செய்கிறோம். 


இது இன்பத்துக்கு மட்டும் அல்ல. துன்பத்துக்கும் தான். 


சற்று தள்ளி நின்று உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். உங்கள் செயல்கள் எந்த அளவுக்கு இன்ப நாட்டம், துன்ப வெறுப்பினால் நிகழ்கிறது. 


அருமையான வாழ்வை இப்படி ஒரு பொம்மை போல ஆக்கி விட்டோம்.


கீதை நம்மை அந்த தூக்கத்தில் இருந்து எழுப்புகிறது. .


சரி அதுக்காக ஜடம் போல வாழ முடியுமா என்றால் இல்லை. பொறுப்பை எல்லாம் தட்டி கழித்து விட வேண்டுமா என்றால் இல்லை. 


வாழ்க்கை என்றால் இன்பம் வரும், துன்பம் வரும். அந்த நிகழ்வுகளை நமக்கு கீழே வைக்க வேண்டும். அவற்றிக்கு கீழே நாம் அழுந்தி விடக் கூடாது. அவை நம் மேல் ஏறி நம்மை அலைகழிக்கக் கூடாது. 


இன்பம் வருகிறதா - அனுபவிப்போம். 


துன்பம் வருகிறதா - அனுபவிப்போம். 


அது வேண்டும், இது வேண்டாம் என்று ஆலாய் பறப்பது இல்லை. 


அந்தப் பக்குவம் வந்து விட்டால், எது நிகழ்ந்தாலும்,  மனம் ஒரு நிலையில் நிற்கும். உறுதியான அறிவு என்று சொல்கிறது கீதை. 


சரி, இதை எல்லாம் நாளையே விட்டு விட முடியுமா? 


முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். 


ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ் "தத்தத்" ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|

நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||



அது தான் கீதை சொல்கிறது 


"தத்தத்"  என்றால் எதில் இருந்து எதில் இருந்து என்று அர்த்தம். 


துறவற இயலில், திருவள்ளுவர் சொல்லுவார் 



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


எதில் இருந்து எதில் இருந்து ஒருவன் நீங்கி இருக்கிறானோ, அதில் இருந்து அதில் இருந்து அவனுக்கு துன்பம் இல்லை என்று. .


கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலக வேண்டும். 



Sunday, April 10, 2022

பகவத் கீதை - 2.56 - இன்பம் துன்பம், அச்சம், சினம்

பகவத் கீதை - 2.56 - இன்பம் துன்பம், அச்சம், சினம் 


கீதையை ஒரு சமய நூலாகவோ, தத்துவ நூலாகவோ பார்க்காமல், மனித மனதை அலசி ஆராய்ந்து, மனிதற்கு வரும் துன்பங்களை நீக்கி, இன்பமாக வாழ வழி சொல்லும் ஒரு நூலாக அணுகலாம். 


இடை இடையே சிறிது மத வாடை அடித்தாலும், அவற்றை தாண்டி மனித மனத்தை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் ஒரு மனோ தத்துவ நூலாக நாம் இதைப் படிக்கலாம். 


வீட்டில், அலுவகலத்தில் நமக்கு கோபம் ஏன் வருகிறது?


https://bhagavatgita.blogspot.com/2022/04/256.html


(click the above link to continue reading)


நமக்கும், நாம் அடைய நினைக்கும் ஒன்றிற்கும் நடுவில் யாராவது வந்தால் அவர்கள் மேல் கோபம் வரும். 


உதாரணமாக, 


கணவன் அலுவகலத்தில் இருந்து வந்து களைத்து இருக்கிறான். மனைவிக்கு எங்கோ வெளியில் போக வேண்டும். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். உடனே அவள் மேல் கோபம் வருகிறது. சண்டை பிடிக்கிறான்.  ஏன் ? ஓய்வு எடுக்க வேண்டும் என்ற அவன் விருபத்துக்கு மாறாக அவள் குறுக்கே நிற்கிறாள். 


அதே சூழ்நிலையில், மனைவிக்கு கணவன் மேல் கோபம் வருகிறது. என்ன இது மனுஷன், அலுவலகம், வீடு என்று எப்பப் பாரு இதே தானா? ஒரு சினிமா, பார்க், பீச் என்று ஒரு இடத்துக்கு கூட்டிப் போவது கிடையாது என்று அவன் மேல் கோபம் கொள்கிறாள். 


ஏன் ?


வெளியில் சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற அவளுடைய விருப்பத்துக்கு அவன் குறுக்கே நிற்கிறான். 


நம் விருபத்துக்கு குறுக்கே யார் நின்றாலும், அவர்கள் மேல் கோபம் வருகிறது. 


கீதை என்ன சொல்கிறது என்றால், கோபத்துக்குக் காரணம் மற்றவர்கள் அல்ல, நம் விருப்பமே. .நமது ஆசை (ஓய்வு எடுக்க வேண்டும், வெளியில் சுற்ற வேண்டும்). பற்று இருக்கும் போது கோபம் வரும். 


அலுவலகத்திலும் அப்படித்தான். .நமக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றின் மேல் ஆசை. அதைத் தரதா மேல் அதிகாரி மேல் கோபம் வரும். 



இது முதல் செய்தி. .


அடுத்ததாக, 


ஒன்றை அடைந்து விட்டோம். ஆசைப் பட்டது கிடைத்து விட்டது. நிம்மதியாக இருக்க முடியுமா? எங்கே அது கையை விட்டுப் போய் விடுமோ என்ற பயம் வருகிறது அல்லவா? பிள்ளைகள் மேல் அளவுக்கு அதிகமான அன்பு.  அவர்களுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ என்ற பயம் வருகிறது. முதலீடு செய்த பணம் மதிப்பு இழந்து விடுமோ என்ற பயம் வருகிறது.  உயிர் மேல் உள்ள ஆசையால் மரண பயம். 


இப்படி ஒவ்வொரு பயத்துக்கும் பின்னால் ஒரு ஆசை ஒளிந்து கொண்டு இருக்கும். 


இது இரண்டாவது செய்தி. 


பயம், கோபம் இவை இரண்டுக்கும் காரணம் வெளியில் உள்ளவர்களோ, பொருள்களோ அல்ல. நம் ஆசை, பற்று தான் காரணம். 


எனவே, பயத்தையும், கோபத்தையும் போக்க வேண்டும் என்றால் பற்றை விட வேண்டும். (ராகம் என்றால் பற்று).


அது எப்படி கணவன் மேல், மனைவி மேல், பிள்ளைகள் மேல் பாசம் வைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால், பாசம் வைத்தால் கோபமும், பயமும் வரும். 


வாழ்நாள் பூராவும் பயத்தோடு, கோபத்தோடு வாழ உங்களுக்கு விருப்பமா? அல்லது கோபமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்க விருப்பமா? 


நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 


பற்றை விட்டு அதன் மூலம் கோபத்தையும், பயத்தையும் விட்டவனே முனிவன் என்று கூறப் படுகிறான். அவன் மன உறுதி உள்ளவனாக இருப்பான் என்கிறான் கண்ணன். .


இனி ஸ்லோகத்தைப் பார்ப்போம். .


பாடல் 



 दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः।

वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते॥५६॥


து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|

வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||


து³:கே²ஷ் = துன்பத்தில் 

அநுத் விக்³ந மநா: = நடுக்கம், குழப்பம் இல்லாத மனம் 

 ஸுகே²ஷு  = இன்பத்தில் 

 விக³தஸ்ப்ருஹ:| = ஆசைகளை விட்டு ஒழித்தவன் 

வீதராக பய க்ரோத = பற்றும், பயமும், கோபமும் விட்டவன் 

ஸ்திததீர் = மனதில் உறுதி உள்ளவன் 

முநிர் = அந்த முனிவன் 

உச்யதே = அழைக்கப் படுகிறான் 



யோசித்துப் பாருங்கள் 


கோபமும், பயமும் துளி கூட இல்லை என்றால் வாழ்வு எப்படி இருக்கும் என்று. 


பயம் இல்லாத இடத்தில் துணிவு பிறக்கும். 


கோபமும், பயமும் இல்லாத இடத்தில் மன உறுதி பிறக்கும். 


மனக் குழப்பம் எப்போது வருகிறது?


எதைச் செய்தால் நமக்கு அதிக நன்மை கிடைக்கும், எதைச் செய்தால் துன்பத்தில் இருந்து தப்பலாம் என்று ஆசையின் காரணமாக குழப்பம் வருகிறது. 


பயம், கோபம், மனக் குழப்பம் இல்லாத வாழ்வு வேண்டுமா? 


யாரிடமும் பயம் இல்லை. எதனிடமும் கோபம் இல்லை. 


"நாம் யார்க்கும் குடியல்லோம்" என்று துணிந்து அரசனைப் பார்த்து சொன்னார் வயதான நாவுக்கரசர். 


அந்தத் துணிவு எங்கிருந்து வந்தது? 


அரசன் என்ன செய்து விட முடியும்? உயிரை எடுக்க முடியும். உயிர் மேல் பற்று இல்லாதவனுக்கு என்ன பயம்?


இது நமக்கு பயன் உள்ள ஒன்றா இல்லையா? 

Friday, April 8, 2022

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன் என்றால் யார் ?

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன்  என்றால் யார் ?


 श्रीभगवानुवाच

प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान्।

आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते॥५५॥


ஸ்ரீப⁴க³வாநுவாச

ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|

ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/255.html


 (pl click the above link to continue reading)




ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான், கண்ணன், சொல்கிறான் 

ப்ரஜஹாதி = துறக்கிறான் 


யதா³ = அப்போது 


காமாந் = ஆசைகளை, விருப்பங்களை 


ஸர்வாந்  = அனைத்தையும் 


பார்த = பார்த்தனே 


மநோக³தாந் = மனோ + கதன் = மனதில் உள்ள, மனதில் சென்ற , மனதில் தோன்றிய 


ஆத்மந்  = தன்னுள் 


யேவ = உறுதியாக 


ஆத்மநா = தனக்காக 


துஷ்ட: = அமைதி அடைந்து, சாந்தி அடைந்து 


ஸ்தி²தப்ரஜ்ஞஸ் = உறுதியான சித்தத்தை உடையவன் 


ததா = அப்போது 


உச்யதே  = சொல்லப் படுகிறது ||2-55||


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, தன்னுள் தானே மகிழ்ந்து, அமைதி கொண்டு இருப்பான் ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன். 


இது ஒரு முக்கியமான ஸ்லோகம். .மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஸ்லோகமும் கூட. 


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் உள்ள அனைத்து ஆசைகளையும் துறந்து விட்டவன் என்பது முதல் கூறு. 


ஹா...கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறது என்று ஆரம்பித்து விடுவார்கள். இன்பங்களை அனுபவிப்பது என்பது வேறு. இன்பங்களுக்கு ஆசைப் படுவது என்பது வேறு. 


இன்பம் எதில் இருக்கிறது?


சிறு பிள்ளையாக இருக்கும் போது பொம்மைகளில் ஆசை. அதை வைத்து விளையாடுவதில் இன்பம். புது புது பொம்மைகள் வாங்குவது இன்பம். அது அப்படியே இருக்கிறதா?


கொஞ்ச காலம் சென்ற பின், வேறு ஒன்றின் பின் மனம் செல்கிறது. 


வாலிப வயதில் எதிர்பாலரின் மேல் ஆசை. அவர்களோடு பேசுவது, பழகுவது போன்றவறில் இன்பம். 


அப்புறம், பணம், சொத்து, பிள்ளைகள், அதிகாரம், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மனம் ஏதோ ஒன்றின் பின் போகிறது. 


எதன் மேலும் மனம் உறுதியாக நிற்பது இல்லை. 


பொம்மை தந்த இன்பம் என்ன ஆனது? அது எங்கே போனது?


இன்பம் பொம்மையிலா இருக்கிறது? அப்படி என்றால் எல்லோருக்கும் அதில் இன்பம் வர வேண்டுமே? எல்லா காலத்திலும் இன்பம் வர வேண்டுமே?


மகிழ்ச்சி, இன்பம் என்பது வெளியில் உள்ள பொருளில் இல்லை என்று தெரிகிறது அல்லவா?


ஆனாலும், ஒரு காலத்தில் பொம்மை வைத்து விளையாடிய போது இன்பம் இருந்ததே? காதலியின் கண் பார்வையில் உடல் எல்லாம் புல்லரித்ததே? எப்படி அதில் இன்பம் இல்லை என்று சொல்ல முடியும்? 


சரி, அதில் இன்பம் இருப்பதாகவே கொள்வோம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாகி விட்டது.


ஒரு வருடம் கழித்து அதே புல்லரிப்பு இருக்குமா?


ஐந்து வருடம் கழித்து ? பத்து வருடம்? இருபது வருடம், நாற்பது வருடம்?


இன்பம் போய் விடுகிறது. 


இன்பம் பொருளில் இல்லை. இன்பம் வெளியில் இல்லை. இன்பம் தனக்குள்ளே இருக்கிறது. அதை முதலில் கண்டு கொள்ள வேண்டும். 


நல்ல இசை கேட்கும் போது கண் ஏன் மூடிக் கொள்கிறது? இன்பம் உள்ளே இருக்கிறது. உள்ளே உள்ள இன்பத்தை வெளியில் உள்ள பொருள்கள் கொண்டு வருகின்றன. 


நல்ல சுவையான இலட்டை வாயில் போட்டவுடன், "ஹ்ம்ம்ம் ...என்று கண்ணை மூடி இரசிக்கிறோம்". ஏன்?  இன்பம் உள்ளே எங்கேயோ இருக்கிறது. 


வெளியில் இன்பம் இருக்கிறது என்று ஓடிக் கொண்டு இருக்க மாட்டான் ஸ்திதப்ரஜ்ஞன். இன்பம் வெளியில் இல்லை என்றால் அதற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? 


எத்தனையோ பொருள்களை இன்பம் தரும் என்று தேடி ஓடினோம். அவை இன்பம் தரவில்லை. மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்கிறதா? 


எனவே "அவன் மனதின் ஆசைகளை முற்றுமாக துறந்து விட்டவன்" என்கிறது கீதை. 


சரி, ஆசையே இல்லாமல் ஒரு ஜடம் போல இருப்பானா என்றால் இல்லை, தனக்குள் இன்பத்தைக் கண்டு கொண்டவன் அவன். அவனுக்குத் தெரியும் இன்பம் தனக்குளே இருக்கிறது என்று. 


எனவே, எல்லோரையும் விட அவனே மிகவும் சந்தோஷமாக இருக்கிறான். 


வெளியில் உள்ள பொருள்கள் வந்தால் வரட்டும். அதைத் தேடி அவன் ஓடுவதில்லை. அவற்றின் மேல் ஆசை கிடையாது. நாளை அவை விட்டுப் போனாலும் கவலை இல்லை. 


இது புரிந்து விட்டால் அனைத்து குழப்பங்களும் தெளியும். மனம் எல்லையற்ற இன்பத்தில் திளைக்கும். 


யோசித்துப் பாருங்கள். புரிந்தால் நல்லது. 

Wednesday, April 6, 2022

பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?

 பகவத் கீதை - 2.54 - யோக நிலை அடைந்தவன் எப்படி இருப்பான் ?


अर्जुन उवाच

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।

स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्॥५४॥


சுலோகம் 


அர்ஜுந உவாச

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|

ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/254.html


(pl click the above link to continue reading)


அர்ஜுந உவாச = அர்ஜுனன் கேட்டான் 

ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய = உறுதியான அறிவு உள்ளவன் 

கா பா⁴ஷா  = எப்படி பேசுவான் 

ஸமாதி⁴ஸ்த²ஸ்ய = சமாதி நிலை அடைந்தவன் 

கேஸ²வ| = கேசவா 


ஸ்தி²ததீ = உறுதியான புத்தி உள்ளவன் 


கிம்  = எப்படி 


ப்ரபா⁴ஷேத = சொல்லுவான் 


கிமாஸீத = எப்படி இருப்பான் 


வ்ரஜேத கிம் = எதை அடைவான் ?


சமாதி நிலை அடைந்து, உறுதியான மன நிலை அடைந்தவன் எப்படி இருப்பான், என்ன பேசுவான், எப்படி சொல்லுவான், அவன் அடைவது என்ன? 


மத நம்பிக்கை உள்ளவர்களிடம் ஏதாவது மதம், கடவுள் என்று ஏதாவது கேட்டால் கொஞ்சம் பதில் சொல்லுவார்கள், எப்போது அவர்களுக்கு பதில் தெரியவிலையோ அப்போது 


"அதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது, எல்லாத்தையும் கேள்வி கேட்கக் கூடாது, உனக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள், ,இல்லை என்றால் விட்டு விடு" என்று கோபம் கொள்ள ஆரம்பிப்பார்கள். 


இந்து மதம் என்பது நம்பிக்கையின் பால் உள்ளது அல்ல. 


கேள்வி கேட்பதை அது பெரிதும் ஆதரிக்கிறது. 


கீதை முழுவதுமே, அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அதுவும் கண்ணனை. கண்ணன் என்ன சொன்னாலும் அர்ஜுனன் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. கேள்வி கேட்கிறான். அதுதான் அறிவின் அடையாளம். சந்தேகம் பிறவிக் குணம். அறிவுத் தேடல் பிறவிக் குணம். எதைச் சொன்னாலும் மண்டையை ஆட்டுவது என்பது அறிவின் வெளிப்பாடு அல்ல. 


போன ஸ்லோகத்தில் கண்ணன் சொன்னான், உன்னுடைய விருப்பு வெறுப்பினால் நீ எதைக் கேட்டாலும் குழப்பம் அடைகிறாய். சமாதி நிலையில், உறுதியாக இருந்தால் நீ யோக நிலையை அடைவாய் என்றான். 


அப்படியா சரி என்று அர்ஜுனன் கேட்டுக் கொள்ளவில்லை.


உடனே கேள்வி கேட்கிறான். 


கண்ணா, யோக நிலை, உறுதியான மனம் (சித்தம்) என்று கூறுகிறாயே அப்படிப் பட்டவன் எப்படி இருப்பான்? அவன் எப்படி பேசுவான், என்ன சொல்லுவான்? அந்த நிலை அடைந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கிறான். 


பலன் இல்லாமல் ஒரு காரியம் செய்வானேன்? என்ன பலன் என்று தெரிந்து கொண்டால் பின் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். 


கண்ணன், "நான் கண்ணன் சொல்கிறேன். பரந்தாமன் சொல்கிறேன். என்னையே கேள்வி கேட்கிறாயா ?" என்று சொல்லவில்லை. பொறுமையாக் பதில் சொல்கிறான். 


"ஸ்தி²தப்ரஜ்ஞன்" என்பது கீதையில் ஒரு முக்கியமான கோட்பாடு. 


உறுதியான மனம். அறிவு. சித்தம். 


அலைபாயாத தன்மை. ஒருமுகப் படுத்துதல். 


அது என்ன என்று கண்ணன் சொல்லப் போகிறான். 


கேட்போம். 



Tuesday, April 5, 2022

பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?

 பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?


श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।

समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि॥५३॥


ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|

ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||


ஸ்²ருதி = சுருதி என்றால் சப்தம். பொதுவாக வேதத்தை ஸ்ருதி என்று சொல்வார்கள். ஏன் என்று கீழே சிந்திப்போம். 


விப்ரதி பந்நா = ப்ரதி , வி-ப்ரதி = குழம்பி, தெளிவற்று, அங்கும் இங்கும் அலைந்து 


தே  = நீ, உன் 


யதா = அப்போது 


ஸ்தா²ஸ்யதி = நிலைத்து நிற்கும் 


நிஸ்²சலா| = சலனமின்றி 


ஸமாதாவ் = சமமாக, ஒன்றுபட்டு, வேறுபாடு இன்றி, 


அசலா = அலையாமல், சலனம் இல்லாமல் 


பு³த்³தி⁴ = புத்தி 


ததா = அப்போது 


யோக³ம் = யோகம் 


அவாப்ஸ்யஸி நீ அடைவாய்  ||2-53||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/253.html


(please click the above link to continue reading)



எப்போது உன் புத்தி கேள்விகளிலே கலக்கம் அடையாமல், தெளிவாக, உறுதியாக இருக்கிறதோ, அப்போது நீ யோக நிலையை அடைவாய் .


மிகப் பெரிய விடயத்தை இரண்டு வரியில் அடக்கி விடுகிறான் கண்ணன். 


நாம் விரித்து சிந்திப்போம். 


நம் புத்தி எப்போதும் சலனப் பட்டுக் கொண்டே இருக்கும். எப்போதும் சஞ்சலத்தில் இருந்து கொண்டே இருக்கும். கலங்கிய குளம் போல். அதில் எதுவும் தெளிவாகத் தெரியாது. 


ஒரு கேள்வி வரும். அதற்கு ஒரு பதில் சொன்னால், அந்தப் பதிலில் இருந்து பத்து கேள்விகள் வரும். அந்த பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னால், அதில் இருந்து நூறு கேள்விகள் பிறக்கும். 


இதற்கு ஒரு எல்லையே இல்லை. 


காரணம் என்ன? மனம் தெளிவாக இல்லை. குழம்பி கிடக்கிறது. குழம்பிய மனதில் எந்த பதிலும் நிற்காது. 


சூரியன் எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும், குளம் கலங்கி இருந்தால் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியாது. 


நம் கண்ணில் குறை இருந்தால், பார்ப்பது எல்லாம் பழுதாகத் தெரியும். 


நம் மனதில் குறை இருந்தால் படிப்பது, கேள்விப் படுவது, எல்லாம் பழுதாகப் போகும். 


கேள்வி கேட்டு தெளிவு பெற முடியாது. மனம் அலை பாயாமல், ஒருமுகப் பட்டு, தெளிந்து இருந்தால், அதுவே யோகம். அப்போதும் தோன்றும் காட்சி யோகக் காட்சி எனப்படும். அதில் எந்த விதக் குழப்பமும் இருக்காது. 


அது இல்லாத பட்சத்தில் ஆயிரம் புத்தகங்கள் படிக்கலாம், எத்தனை உபன்யாசம் கேட்கலாம், ஒரு தெளிவும் பிறக்காது. 

\

வேதத்திற்கு ஸ்ருதி என்று பெயர். சஸ்ருதி என்றால் ஒலி, சப்தம். வேதத்தை எழுதி வைத்து படிப்பது இல்லை. அது வாய் மொழியாக கேட்டு கேட்டு வருவது. எனவே தான் அதற்கு எழுதா மறை, எழுதாக் கிளவி என்று பெயர். 


"எழுதா மறையின்" ஒன்றும் அரும் பொருளே என்பார் அபிராமி பட்டர். 


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.- "எழுதாமறை"யின் 

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 


அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


வேதத்தின் சாரத்தையே எடுத்துக் கொடுத்தாலும் மனம் அடங்காது. அதில் இருந்து இன்னும் ஆயிரம் சந்தேகம் கேட்கும். 


கண்ணன் சொல்கிறான் , "அர்ஜுனா, உன் மனம் குழம்பி இருக்கிறது. நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது. மனக் குழப்பத்தை விட்டால் உனக்கு யோக காட்சி கிடைக்கும்" என்கிறான்.


அட்டாங்க யோகம் சொல்ல வந்த பதஞ்சலி எடுத்த எடுப்பில், 


"சித்த விருத்த நிரோதம்"  என்று ஆரம்பிப்பார்.


சித்தத்தில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகம் என்று ஆரம்பித்து கடைசியில் சமாதியில் கொண்டு முடிப்பார். 


சமாதி என்றால் ஏதோ அடக்கம் பண்ணும் இடம் என்று நினைக்கக் கூடாது. 


சமம் +ஆதி. 


உலக குழப்பம் எல்லாம் வருவதற்கு முன், குளத்தில் நீர் அலைகள் எழும் முன் எப்படி சலனம் இல்லாமல் தெளிவாக இருந்ததோ அப்படிப்பட்ட ஆதி நிலைக்கு செல்வது தான் சமாதி நிலை. 


யோக சாத்திரத்தின் சாரத்தை சொல்லி விட்டுப் போகிறான் ஒரு வரியில் கண்ணன். 


மேலும் சிந்திப்போம். 




Monday, April 4, 2022

பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம்

 பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம் 


यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।

तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥


யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|

ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||


யதா³ = எப்போதெல்லாம் 


தே  = உனது 


மோஹகலிலம் = மோகத்தினால் குழப்பம் அடைகிறதோ 


பு³த்³தி⁴ = உன் புத்தி 


வ்ர்வ்யதிதரிஷ்யதி = கடந்து செல்லுதல் 


ததா³  = அப்போது 


க³ந்தாஸி = நீ செல்வாய், கடந்து செல்வாய் 


நிர்வேத³ம்  = துன்பம், வேதனை 


ஸ்²ரோதவ்யஸ்ய = எதைக் கேட்கப் போகிறாயோ 


ஸ்²ருதஸ்ய ச  = எதை கேட்டாயோ 



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/252.html


(please click the above link to continue reading)


"எப்போதெல்லாம் உன் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ அப்போதெல்லாம் நீ கேட்டவற்றாலும், கேட்கப் போகிரவற்றாலும் துன்பம் கொள்கிறாய்"


நாம் எவ்வளவோ படிக்கிறோம். இருந்தும் ஒரு மாற்றமும் நம்மில் எழுவதில்லை. அப்படியே ஏதோ ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும், காலப் போக்கில் அது மறைந்து விடுகிறது. 


காரணம் என்ன?


கீதை விளக்குகிறது. 


நமக்கு சிலவற்றின் மேல் விருப்பும், சிலவற்றின் மேல் வெறுப்பும் இருக்கிறது. இந்த விருப்பு வெறுப்பை நாம் விடத் தயாராக இல்லை. யார் என்ன சொன்னாலும், குரங்கு பிடி போல் பிடித்துக் கொள்வோம். அந்த விருப்பு வெறுப்புக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம். அல்லது, அந்த சொற்கள் நமக்குள் வேதனையை உண்டாக்கும்.


கேட்காமல் போனால் சரி. ஏன் வேதனையை உண்டாக்க வேண்டும் ?


நாம் ஒன்றை சரி என்று நினைக்கிறோம். மற்றவர் அது தவறு என்று பலவிதங்களில் நிறுவுகிறார். நாம் அவர் சொல்வதை ஏற்க மாட்டோம். ஆனால், நமக்குள் ஒரு சந்தேகம் எழும். ஒரு வேளை நாம் நினைப்பது தவறோ? அவர் சொல்வது சரியோ ? அல்லது எது சரி அல்லது தவறு என்ற குழப்பமும் வரும்.


அது ஒரு சிக்கல். அந்த சிக்கல் தீரும் வரை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். தீரா தலைவலி அது. 


எனவே என்ன செய்ய வேண்டும் ?


உயர்ந்தவர்கள் சொல்லும் போது நமது விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு கேட்க வேண்டும். 


காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் 

ஆய்தல் அறிவுடையார் கடன்

என்பார் வள்ளுவர். 


அர்ஜுனனுக்கு அது தான் சிக்கல். 


உறைவினர்கள் மேல் பாசம். அவர்களை கொல்வது தவறு என்று அவன் நினைக்கிறான். 


கண்ணனோ உன் கடமையச் செய் என்கிறான். 


மோக கலிதம் வருகிறது. பற்றினால் வரும் குழப்பம். 


இது வரை கேட்டது மட்டும் அல்ல. இனி கேட்கப் போவதும் துன்பம் தரும். 


நாம் சரி தவறு என்று நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் யாரோ முன் நமக்குச் சொன்னது தான். 


அதைப் பற்றிக் கொண்டு விடாமால் இருப்பதால் நமக்கு மேலும் மேலும் வரும் அறிவின் தாக்கம் துன்பத்தைத் தருகிறது.


பலனை எதிர்ப்பார்க்காமல் செய் என்றால் அது எப்படி முடியும் என்று சண்டைக்கு வருகிறோம். காரணம் அப்படி ஒன்று இருக்க முடியாது என்ற நம் பற்று.


அவற்றை நீக்கி வைத்து விட்டு கேட்டால் துன்பம் வராது என்கிறது கீதை. 



Tuesday, April 28, 2020

பகவத் கீதை - 2.52 - கேட்டதும், கேட்க வேண்டியதும்

பகவத் கீதை - 2.52 - கேட்டதும், கேட்க வேண்டியதும் 



यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥

யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||

யதா = அப்போது

தே  = உன்

மோஹகலிலம் = குழப்பமான

பு³த்³தி⁴ர் = புத்தி, மனம்

வ்யதிதரிஷ்யதி| = செல்லும்

ததா³= அப்போது

க³ந்தாஸி = நீ அடைவாய்

நிர்வேத³ம் = குழப்பமற்ற

ஸ்²ரோதவ்யஸ்ய  = எதை கேட்க வேண்டுமோ

ஸ்²ருதஸ்ய ச  = எதை கேட்டாயோ

எவ்வளவோ படிக்கிறோம். கேட்கிறோம். இருந்தும் வாழ்வில் ஒரு மாற்றமும்  ஏற்பட மாட்டேன் என்கிறதே.  அப்படியே தான் இருக்கிறோம்.

கீதை, பாகவதம், இராமாயணம், பாரதம் என்று எவ்வளவோ படிக்கிறோம். பத்தா குறைக்கு  நிறைய உபன்யாசங்கள் கேட்கிறோம்.

பின் ஏன் ஒரு மாற்றமும் ஏற்ப்பட மாட்டேன் என்கிறது?

காரணம் இருக்கிறது.

நமக்கு என்று சில அபிப்பிராயங்கள் இருக்கிறது. நாம் புதிதாக எதையாவது படித்தால், கேட்டால் அது நம் எண்ணங்களோடு ஒத்துப் போனால், "ஹா...நான் நினைச்சது சரிதான்..." என்று மண்டையை ஆட்டிக் கொண்டு போய் விடுவோம்.

ஒரு வேளை நாம் படித்தது, கேட்டது நமக்கு இது வரை தெரிந்த அறிந்த ஒன்றில் இருந்து   வேறு பட்டு இருந்தால், நாம் புதிதான ஒன்றை ஏற்றுக் கொள்ளுவதில்லை.  அதோடு வாதம் பண்ணுவோம். இல்லை என்றால் , "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று  தள்ளி வைத்து விடுவோம்".

இதற்கு காரணம் என்ன?

நம் மனதில் உள்ள குழப்பங்கள்.

தெளிவற்ற மனா நிலையில் இருக்கும் போது, மற்றவர்கள் ஏதாவது சொன்னால், அதை நாம் நம் மன நிலையில் இருந்தே பார்த்து, கேட்டு அதை மாற்றி விடுகிறோம்.

In English, they say, "People hear what they want to hear" nu.

யார் என்ன சொன்னாலும் அதை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுவோம்.

மன குழப்பத்தில் இருந்து விடுபட்டால் தான், என்ன சொல்லப் பட்டதோ அதை தெளிவாக அறிய முடியும்.

இரண்டாவது,  குழப்பம் உள்ள ஒருவன், எப்படி தெளிவான முடிவை எடுக்க முடியும்.  குழப்பத்தில் எடுக்கும் முடிவும் குழப்பமாகவே போய் முடியும்.  எனவே, முதலில் மன குசப்பத்தில் இருந்து விடுபட வேண்டும்.

சலனம் உள்ள நீரில் பார்த்தால், நம் முகம் சிதறுண்டு தெரியும். அதே நீர் தெளிந்து, சலனம் அற்று இருந்தால், பிம்பம் தெளிவாக தெரியும் அல்லவா?

அது போல,

மனம் குழப்பமாக இருந்தால், என்ன சொல்லித் தந்தாலும், மண்டையில் ஏறாது. குழப்பம் தான் மிஞ்சும்.

உங்கள் மனதின் குழப்பங்களை கவனியுங்கள். அது எங்கிருந்து வருகிறது என்று  பாருங்கள். அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.

குழப்பம் நின்றால் தெளிவு பிறக்கும்.

தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்பார் அபிராமி பட்டர்.

வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும்நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


"தேற்றனே தேற்றத் தெளிவே" என்பார் மணிவாசகர்.


தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்


சித்த விருத்தி நிரோதம் என்கிறது யோக சூத்திரம்


மனதில் தெளிவு இல்லாமல் ஆயிரம் படித்தும் ஒரு பலனும் இருக்காது .

தெளிவைத் தேடுங்கள்.


https://bhagavatgita.blogspot.com/2020/04/252.html

Friday, November 29, 2019

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி

பகவத் கீதை - 2.51 - பிறவித் தளை நீங்கி 




कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த

பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த

ஹி  = அதனால்,

ப²லம்  = பலன்கள்

த்யக்த்வா = தியாகம் செய்து, துறந்து

மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்

ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு

விநிர்முக்தா: = விடு படுகிறார்கள்

பத³ம் = ஒவ்வொரு அடி

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அநாமயம் = துன்பத்தை விட்டு



அறிவுள்ளவர்கள், செய்யும் செயல்களின் பலனை துறந்து, துன்பங்களில் இருந்து விடுபட்டு, பிறவி தளைகளில் இருந்தும் விடு படுகிறார்கள். 


 கீதையின் ஜீரணிக்கமுடியாத ஒரு தத்துவம் உண்டு என்றால் அது இதுதான். செய்யும் செயல்களின் பலனை துறந்து விடுதல். 

யாரால் முடியும்? பலன் இல்லை என்றால் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும்?  

யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தத்துவம். நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றை ஏன் கீதை சொல்கிறது? 

இதை நாம் மூன்று  கோணத்தில் அணுகலாம்.

முதலாவது, எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், நம் புத்தி அதில் முழு முனைப்புடன் இருக்க வேண்டும். (concentration). அப்படி இல்லாமல் மனம் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தால், செய்யும் வேலை சரியாக நடக்காது. 

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், அடுப்படியில் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும், செய்யும் வேலையில் கவனம் தேவை.  கவனக் குறைவாக வேலை செய்தால் அது ஆபத்தில் போய் முடியும். 


சில உதாரணங்கள்....

பேருந்து ஓட்டும் ஒருவர், சாலையில் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுவது ஒன்றிலேயே  அவருக்கு கவனம் இருக்க வேண்டும். மாறாக, இப்படி ஓட்டினால் எனக்கு என்ன கிடைக்கும்?  இந்த வருடம் ஊக்கத் தொகை (bonus ) கிடைக்குமா,   கிடைத்தால் அதில் என்ன வாங்கலாம், எப்படி செலவழிக்கலாம் என்று  நினைத்துக் கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? ஓட்டும் அந்த செயலின் பலன் மேல் மனம் போனால் அவரும்  , அவருடைய வண்டியில் உள்ள எல்லோரும்  வேறு எங்கோ போக வேண்டி இருக்கும். 

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். இதய அறுவை சிகிச்சை என்று  வைத்துக் கொள்வோம். அறுக்கும் போது , இந்த வருடம் பதவி உயர்வு வருமா,  வேறு மருத்துவமனைக்கு சென்றால் இதை விட அதிக சம்பளம் கிடைக்குமா என்று  செய்யும் காரியத்தின் பலன்களில் மனம் போனால், நோயாளி  போகும் இடம் வேறாக இருக்கும். 

ஒரு மாணவன், பரீட்சை எழுதும் இடத்தில் ஒழுங்காக பரீட்சை எழுத வேண்டும். வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு , இதில் மட்டும் நூத்துக்கு நூறு  வாங்கி விட்டால், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்று  யோசித்துக் கொண்டிருந்தால் விடை சரியாக எழுத முடியுமா?

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அந்த காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்று  மட்டும் யோசித்தால் அதை சிறப்பாக செய்ய முடியும். மாறாக, அதனால் என்ன பலன் வரும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால், கவனம் சிதறும். பலன் வரும். நீ பாட்டுக்கு உன் வேலையைச் செய். 

இரண்டாவது,  பலன் மேல் மனம் போனால் என்ன ஆகும்? அந்த பலன் கிடைக்குமோ என்ற சந்தேகம் வரும்.கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம்  வரும். வேறு யாராவது கொண்டு சென்று விடுவார்களோ என்று பார்ப்பவன் மேல் எல்லாம் ஒரு போட்டி மனப்பான்மை வரும். நினைத்த அளவு பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது  என்று குழப்பம் வரும்....

வேலையும் சரியாகச் செய்யாமல், மன குழப்பமும் வந்து சேரும்.

தினம் ஒரு மணி நேரம் நடக்கிறோம் என்றால் அதன் பலன் தானே வரும். ஒரு நாள் நடந்து விட்டு,  அடடா எடை குறையவில்லையே, இது சரி இல்லை என்று நிறுத்தி விட்டால்  என்ன ஆகும்?

மூன்றாவது, மிக நுட்பமானது, நாம் ஒவ்வொரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கும் போது, அந்த காரியம் நம்மை மாற்றுகிறது. அந்த காரியத்தால் நாம்  பாதிக்கப் படுகிறோம். சிறப்பாக செய்தால் நம்முள் ஏதோ ஒன்று உயர்கிறது. சொதப்பினால், நம்முள் ஏதோ என்று தாழ்கிறது. சிந்தித்துப் பாருங்கள்,  வீடை நன்றாக ஒதுங்க வைத்து, சுத்தம் செய்து, வேண்டாத சாமான்களை தூக்கிப் போட்டு   வீட்டை சரி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மனதுக்குள் ஒரு சந்தோஷம் வருகிறது அல்லவா? வேலை முதுகு நிமிர்ந்து இருக்கும்.  இருந்தும் வேலை முடிவில், ஒரு சந்தோஷம் வரும். நாம் இதை நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி உணர்வு வரும். 

பெண்களுக்கு இது தெரியும். ஒரு நாள் நன்றாக சமையல் செய்தால், பிள்ளைகள் அதை இரசித்து சாப்பிட்டால், அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.  ஒரு வேளை அவளுக்கு ஒன்றும்  மிச்சம் வைக்காமல் கூட பிள்ளைகள் சாப்பிட்டுவிட்டு போய் விடலாம் . இருந்தும் அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம்   இருக்கும். அவள் செய்ததின் பலன் வேறு யாருக்கோ கிடைத்தது. ஆனாலும், அவளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கிறதா இல்லையா.   

வீட்டுக்கு உழைப்பதில் நாம் பலன் கருதுவதில்லை. மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, உடன் பிறந்தவர்களுக்கு என்று செய்யும் போது பலன் கருதுவதில்லை. அதையே கொஞ்சம் விரித்தால் சமுதாயத்துக்கு, நாட்டுக்கு என்று  வரும். 

யோசித்துப் பார்ப்போம் ...எல்லோரும் பலன் கருதாமல், என்னால் முடிந்ததை செய்கிறேன்...எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு காரியம் செய்தால்   இந்த உலகம் எப்படி இருக்கும் என்று?  சுயநலம் இல்லாத ஒரு சமுதாயம் எப்படி இருக்கும்?

அது தான் கீதை. 


Thursday, November 28, 2019

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை 




बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥

பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||


பு³த்³தி⁴ = புத்தி

யுக்தோ = இணைந்து, சேர்ந்து

ஜஹாதி = விட்டு விட்டு , விலகி

இஹ = இங்கு

உபே =  இரண்டும்

ஸுக்ருத = நல்லதும்

துஷ்க்ருதே= தீயதும்

தஸ்மாத் = எனவே

யோகா³ய = யோகத்தின் மூலம்

யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து

யோக³: = யோகம்

கர்மஸு = கர்ம வினைகளின்

கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||


புத்தி உள்ளவன் இந்த நல்ல மற்றும் தீய செயல்களில் இருந்து விலகி நிற்கிறான், அல்லது துறந்து விடுகிறான். எனவே, நீ யோக நிலையில் நில். யோகம் என்பது செயல்களின் திறமையான வெளிப்பாடு. 


நாம் ஏன் எந்த ஒரு காரியத்தையும் செய்கிறோம்?

ஒன்று பயம். செய்யாவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமோ என்ற பயம். கணவன்/மனைவி/பெற்றோர்/ஆசிரியர்/உயர் அதிகாரி/அரசாங்கம்/காவல் துறை/ சமுதாயம் என்று ஆயிரம் பேர் நம்மை சுற்றி நின்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பயத்தினால் செய்கிறோம்.

அல்லது

இரண்டாவது, ஆசை.  ஒன்றைச் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மேல் ஆசை.  பாராட்டு, பதவி உயர்வு, சம்பளம், என்று எதோ ஒன்றின் மேல் ஆசைப்பட்டு செய்கிறோம்.

இன்னும் கூட வேறு காரணங்கள் இருக்கலாம்...கோபம், பொறாமை, என்று.

காரணம் எதுவாக இருந்தாலும், நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்குக்  காரணம் நம்முடைய முந்தைய அனுபவங்கள்.

முன்னால் இப்படி செய்த்ததால், இது விளந்தைது. நல்லது என்றால் அதை மீண்டும் செய்வோம், அல்லது என்றால் அதை விட்டு விடுவோம்.

இதைத்தான் "வாசனை" என்கிறார்கள்.

ஒரு பூவை கையில் கொஞ்ச நேரம் வைத்து இருந்துவிட்டு, பின் கீழே வைத்த பின்னும், அந்த வாசனை தொடர்ந்து கொண்டே இருக்கும் அல்லவா. இப்போது கையில்  பூ இல்லை. இருந்தும் வாசனை இருக்கிறது.

நல்லது, கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது, போன்ற எண்ணங்கள் எல்லாம் முன் அனுபவத்தால் வருகிறது.

பயம், ஆசை, கோபம், பொறாமை, நடுக்கம், பாசம் எல்லாம் முன் அனுபவ வாசனை.

கீதை சொல்கிறது, "இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, அறிவு பூர்வமாக, புத்தியை செலவழித்து காரியம் செய்" என்கிறது.

கொஞ்சம் உதாரணம் பார்ப்போம் .

ஒரு வீடு வாங்க, கார் வாங்க, சம்பந்தம் பேச என்று வந்தால், நாம் அதிகம் உணர்ச்சி வசப் படுவோம்.

எப்படியாவது அந்த வீட்டை வாங்கி விட வேண்டும்.

நல்ல சம்பந்தம், இதை விட்டு விடக் கூடாது.

ஐயோ, இப்ப வாங்கவிட்டால் பின்னால் விலை ஏறி விட்டால் (பயம்) என்ன செய்வது.

உணர்ச்சிகள் அதிகமாகும் போது, ஒரு படபடப்பு உண்டாகிறது. தவிப்பு உண்டாகிறது.

உணர்ச்சி மேலீட்டால், முடிவு தவறாகும். முடிவு தவறானால், காரியம் தவறாகும்.

"நன்மை தீமையை விட்டு விட்டு" என்று கீதை சொல்வது உணர்வு பூர்வமாக எதையும் அணுகாமல் அறிவு பூர்வமாக செயல்படு என்கிறது.

புத்தியை உபயோகித்து செய்யும் செயலே உன்னத செயலாகும் என்கிறது.


களத்துக்கு வருவோம்.

அர்ஜுனனின் எதிரில் மாமா, தாத்தா, குரு, பங்காளிகள் என்று எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களை கொல்வதா என்று "உணர்ச்சி" வசப்படுகிறான்.  எது சரி, தவறு என்பதை விட்டு விட்டு, உணர்வுகளுக்கு அடிமையாகி கடமையை செய்யாமல்  ஓட நினைக்கிறான்.

உறவினர்களை கொல்வது மட்டும் அல்ல,  எதையும் உணர்வு பூர்வமாக அணுகினால்  அது தவறாகத்தான் இருக்கும்.

எனவே, புத்தியை பயன்படுத்து என்கிறான் கண்ணன்.

புத்தியையும் செயலையும் இணைப்பது யோகம். அதுவே செயல்களில் சிறந்தது என்கிறது கீதை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


https://bhagavatgita.blogspot.com/2019/11/250.html