Monday, January 30, 2017

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும்

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும் 


एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥

ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய: |
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஹிதா: || 16- 9||


ஏதாம் = இவர்கள்

த்ருஷ்டிம் = இந்த நோக்கத்தால், பார்வையால்

அவஷ்டப்ய = அவ + ஸ்தாபிபிய =   நிலை நிறுத்த (அந்த கொள்கைகளை)

நஷ்டாத்மாநா = தங்களை தாங்களே அழித்துக் கொண்டு

அல்ப புத்தய: = அற்ப புத்தியுடன்

ப்ரபவந்தி  = உருவாகி இருக்கிறார்கள்

உக்ரகர்மாண: = உக்ர + கர்மான  = கொடிய செயல்களுடன்

 க்ஷயாய = அழிவை நோக்கி

 ஜகத் = உலகை

அ ஹிதா: = ஹிதம் என்றால் நன்மை. எ ஹிதம் என்றால் நன்மை இல்லாத. அதாவது தீமை.

அந்த எண்ணம் கொண்டவர்கள், தங்களை தாங்களே அழித்துக் கொள்வது மட்டும் அன்றி உலகையும் தங்களது தீவிர செயல்களால் தீமை நோக்கி இட்டுச் செல்வார்கள். 

அந்த எண்ணம் கொண்டவர்கள் என்றால் எந்த எண்ணம் ?

முந்திய ஸ்லோகத்தில் பார்த்தோம்

- உலகம் என்பது ஒரு விபத்து. அது எந்த விதிக்கும் கட்டுப் படாதது.
- உலகை யாரும் தோற்றி வைக்க வில்லை, அதை யாரும் பரி பாலனம் செய்வது இல்லை.

- உலகம் ஆசையால் சுழல்கிறது. ஆசையால் உந்தப் பட்டு காரியங்கள் நிகழ்கின்றன.

- அதற்கு மேல் ஒன்றும் இல்லை

என்ற இந்த எண்ணங்களைக் கொண்டவர்கள் என்ன செய்கிறாரகள் என்றால் ...

முதலில் தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது, அற்ப புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள்

மூன்றாவது, தீவிரமாக செயல் படுகிறார்கள்

நான்காவது, இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்கிறார்கள்.

அதாவது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அற்ப புத்தி உள்ளவர்கள். அவர்கள்  தங்களையும் இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்வார்கள் என்பது போலத் தோன்றும் இந்த சுலோகம்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த உலகில் எதுவம் விதிப்படி நடப்பது இல்லை என்று நினைப்பவன் என்ன செய்வான் ?

முதலாவது, ஏதாவது விதி இருக்கிறதா என்று தேட மாட்டான். அது தான் முதலிலேயே  முடிவு செய்து விட்டானே ஒரு விதியும் , கோட்பாடும், இல்லை என்று.  அறிவியல் என்பது நிகழ்வுகளுக்கு பின்னே உள்ள காரணங்களை அறிவது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்திப்பவன் அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முயல்வான். ஏன் நோய் வருகிறது என்று சிந்திப்பவன் மருத்துவம்  என்ற இயலை கண்டு பிடித்து தான் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழ  வைப்பான். நோய் வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணமும் இல்லை  என்று நினைப்பவன், தான் நோயில் அழிவது மட்டும் அல்ல, உலகத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வான்.  மருந்து மட்டும் அல்ல , இன்பம், துன்பம், பசி, போர், போன்ற அனைத்துக்கும் காரணங்களை ஆராய்பவன்   அவற்றில் இருந்து விடு பட வழி காண்பான். மற்றவர்களையும் அந்த  துன்பத்தில் இருந்து விடுபட உதவி செய்வான்.

இரண்டாவது, இந்த உலகில் ஒரு விதியும் கிடையாது, என்று நினைப்பவன் ஒரு  விதிக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டான். அப்படிப்பட்டவன் சீக்கிரம் அழிவான்  என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டும் அல்ல, மற்றவர்களின் அழிவுக்கும் துணை போவான்.

"அற்ப அறிவு"

விதி, ஒரு கட்டுப்பாடு, ஒரு கோட்பாடு என்று ஒன்று இல்லை என்று நினைப்பவன் மேற்கொண்டு சிந்திப்பதை நிறுத்தி விடுகிறான். அவனது அறிவு வளர  வழி இல்லை. எல்லாமே ஒரு காரணமும் காரியமும் இல்லாமல் நடக்கிறது என்று நினைக்கிறான். ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் அல்லவா அது என்ன என்று காண முயல்வான். ஒன்றும் இல்லை என்று நினைப்பவனின்  அறிவு வளர ஒரு வழியும் இல்லை.

"தீவிர செயல்பாடுகளோடு "

இந்த உலகம் தோன்றியதும், செயல்படுவதும் ஒரு விபத்து (accident ) என்று நினைப்பவன் , வாழ்க்கை, அதன் போக்கு, அதன் தொடர்ச்சி என்றெல்லாம் நினைக்க மாட்டான். இருக்கிற கொஞ்ச காலத்துக்குள் அனைத்தையும் வாழ்ந்து தீர்த்துவிடுவோம் என்று நினைப்பான். அவசரம் அவசரமாக செயல் படுவான்.  எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துவிட வேண்டும் என்று நினைப்பான். செயலில் ஒரு தீவிரம் இருக்கும். அவனுடைய அனுபவிப்பிற்கு தடையாக இருப்பவற்றை எப்படியாவது விலக்கிவிட துடிப்பான. ஒரு வேகமும் பதட்டமும் இருக்கும் அவனது செயல்களில்.

"உலகையும் அழிவுப் பாதையில் இழுத்துச் செல்வான் "


எதிலும் பரந்த மனப்பான்மை கிடையாது. தீர்க்க சிந்தனை கிடையாது. விதி, சட்டம், கோட்பாடு என்று எதுவும் கிடையாது. எதிலும் ஒரு அவசரம், வேகம்.

அப்படிப்பட்டவன் தான் அழிவுப் பாதையில் செல்வது மட்டும் அல்ல, மற்றவர்களையும் குழப்பி உலகையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வான்.

எதையும் ஆராயுங்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கர்த்தா இல்லாமல்  காரியம் இல்லை. நிதானமாக யோசியுங்கள்.

அப்படி யோசிக்காமல் இருப்பவன் எப்படி செயல்படுவான் தெரியுமா ?

அடுத்த ஸ்லோகத்தில் பார்ப்போம்.






Sunday, January 29, 2017

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம்

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம் 


असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥



அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||

சீர் பிரித்தபின்

அசத்தியம் அப்ரதிஷ்டம் தெ ஜகத் ஆஹு அ(ந் ஈஸ்வரம் 
அ பரஸ்பர ஸம்பூதம் கிம் அந்யத் காம ஹைதுகம் 

பொருள்

அசத்தியம் = சத்யம் அல்லாதது

அப்ரதிஷ்டம் = பிரதிஷ்டம் என்றால் அடிப்படை, நிலை, கொண்டது என்று அர்த்தம். அப்ரதிஷ்டம் என்றால் நிலை இல்லாதது

தெ = அவர்கள்

ஜகத் =இந்த உலகம்

ஆஹு = சொல்கிறார்கள்

அ(ந் ஈஸ்வரம் = படைப்பவன் இல்லாதது

அ பரஸ்பர = பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று. அ பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று அல்லாத

ஸம்பூதம் = அனைத்து உலகும்

 கிம் = எப்படி

அந்யத் = அவர்கள் , அந்நியர்கள்

காம = காமத்தினால்,

ஹேது கம் = உருவான காரணம்.

இந்த உலகமும் உயிர்களும் எப்படி உருவாயின ? இவை எதனால் எப்படி மேற்கொண்டு செல்லுகின்றன ?

இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன.

ஒன்று இந்த உலகும், அதில் உள்ள உயிர்களும் இறைவனால் படைக்கப் பட்டவை. இறைவனே அனைத்தையும் செலுத்துகிறான்.

இது ஒரு கருத்து.

இன்னொரு கருத்து , அதை இந்த ஸ்லோகத்தில் கீதை சொல்கிறது.

சிலர் நினைக்கிறார்கள், இந்த உலகம் எந்த விதிக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று (அசத்தியம்). சத்யம் என்றால் நிலையானது. உண்மையானது. எந்த உண்மைக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று நினைக்கிறார்கள்.

நாம் இன்று அறிவியலில் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.

 இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற அனைத்து துறைகளிலும் மிக மிக முன்னேறி விட்டோம்.

இன்று , இந்த உலகம் சில விதிகளுக்கு கட்டுப் பட்டு இயங்குகிறது என்று நமக்குத் தெரியும். கோள்களும், நட்சத்திரங்களும்,  அணுக்களும், உடலில் உள்ள செல்களும் சில விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன என்று அறிகிறோம். ஆனால் , கீதை எழுதப் பட்ட காலத்தில், இவை எல்லாம் இல்லை.

அப்போது சில பேர் இந்த உலகம் எந்த விதிக்கும் உட்பட்டது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் வியாசர் சொல்கிறார் "அவர்கள் அப்படி சொல்கிறார்கள்" என்று. அதாவது, வியாஸருக்குத் தெரிந்திருக்கிறது இந்த உலகம் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று.

அடுத்ததாக, அவர்கள் இந்த உலகம் ஈஸ்வரன் இல்லாதவன் என்று கூறுகிறார்கள்.

எப்படி உலகம் விதி இல்லாமல் செயல் படுகிறதோ, அது ஒரு கர்த்தா இல்லாமலும் செயல் படுகிறது என்று சொல்கிறார்கள்.

நாம், இன்று, இந்த உலகம் எந்தெந்த விதிகளில் செயல் படுகிறது என்று கண்டு பிடித்து விட்டோம்.

ஆனால், இந்த உலகம் ஈஸ்வரன் அல்லது ஒரு சக்தியால் செயல் படுகிறது என்று அறியவில்லை - இன்னும்.

விதி ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள் - விதிகளை கண்டு பிடித்து விட்டோம்.

இறைவன் இல்லை என்று சொன்னார்கள் -இறைவனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. கண்டு பிடிக்காததால் இல்லை என்று  சொல்ல முடியுமா  ? ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடுகள்  கூடத்தான் கண்டு பிடிக்கப் படவில்லை.

 மூன்றாவது, அவர்கள் இந்த உலகம்  ஒன்றில் இருந்து ஒன்று  வந்தது என்று ஒப்பு கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் இந்த உலகம் காமத்தினால், ஆண் பெண் சேர்க்கையால் வந்தது என்று நினைக்கிறார்கள்.

ஆண் பெண் கலவி தேவை தான். ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ? காமம் தான் இன விருத்திக்கு அடிப்படை. ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ?

ஏதிலிருந்தோ படைக்கப் பட்டிருக்க வேண்டும். எதிலிருந்தோ என்றால் அந்த ஏதோ ஒன்று எதில் இருந்து வந்தது ? இப்படி கேட்டுக் கொண்டே போனால், தொடக்கத்தின் ஆரம்பப் புள்ளிக்கு போய் விடுவோம். அந்த புள்ளி எப்படி வந்தது என்ற கேள்வியில் நிற்போம்.

அந்த முதல் உயிருக்கு, அல்லது பொருளுக்கு ஆண் பெண் என்ற இரண்டு கிடையாது . அப்படி என்றால் காமம், அன்பு, ஈர்ப்பு என்பது அந்த புள்ளியில் கிடையாது.

இப்படி ஒரு விதி இல்லாத, ஒரு ஈஸ்வரன் இல்லாத, காமத்தை அடிப்படையாக கொண்ட உலகத்தை பற்றி எண்ணுவதால் என்ன நிகழும் ?

மேலும் பார்ப்போம். 

Friday, December 16, 2016

கீதை - 16.7 - அசுரர்கள் யார் ?

கீதை - 16.7 - அசுரர்கள் யார் ?



प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥१६- ७॥

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: |
ந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||


ப்ரவ்ருத்திம் = விருத்தி என்றால் பெருக்குவது. ப்ர என்றால் உயர்ந்தது. ப்ர + விருத்தி = உயர்ந்த செயல்கள். நல்ல செயல்கள் செய்வதையும் 

ச = மேலும்

நிவ்ருத்திம் = செயல்கள் செய்யாமல் இருப்பதையும் (நி என்றால் எதிர்மறை)

ச = மேலும்

ஜநா = ஞானம்

ந = இல்லை

விதுர் = அறிதல்

அஸுரா: = அசுரர்கள்

ந = மேலும்

ஸௌ²சம் = தூய்மை

ந = இல்லை

அபி = அது அன்றி

சா = மேலும்

அக்ரோ = நல்ல குணங்கள்

ந = மேலும்

ஸத்யம் = சத்யம்,உண்மை

தேஷு = அவர்களிடம்

வித்யதே = இருப்பது

அசுரத் தன்மை கொண்டோர் செய்வதையும் , செய்யாமல் இருப்பதையும் அறிய மாட்டார்கள். தூய்மையும், ஒழுக்கமும், வாய்மையும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

கீதை இரண்டு விதமான மனிதர்களைப் பற்றி கூறுகிறது.

இந்த ஸ்லோகத்தில் இருந்து அசுரர்களின் இயல்பைத் பற்றிக் கூறுகிறது.

அசுரர்கள் என்றால் ஏதோ கறுப்பாக , குண்டாக, கோரை பற்கள் தெரியும் படி, மண்டை ஓடு மாலை  எல்லாம் அணிந்து கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

அசுரர் என்பது ஒரு காரணப் பெயர்.

சில செயல்களை செய்பவர்கள் அசுரர்கள் அல்லது சில செயல்களை செய்யாமல் இருப்பவர்கள் அசுரர்கள். அவ்வளவுதான்.

அசுரர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியாது. செய்யக் கூடாததை செய்வார்கள். செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள்.

அது என்ன செய்யவேண்டியது, செய்யக் கூடாதது ?

சில உதாரணங்கள் பார்ப்போம்.

ஒரு மாணவன் என்றால் படிக்க வேண்டியது அவன் செய்ய வேண்டியது. அதை விட்டு விட்டு  டிவி, சினிமா என்று திரிந்தால் அவை செய்ய வேண்டாதது. படிப்பதை விட்டு விட்டு , டிவி சினிமா என்று திரிந்தால் அவன்  ஒரு அசுரன்.

உடல் நிலை காரணமாக மருத்துவர் இன்ன இன்னது  சாப்பிடலாம், இன்ன இன்னது  சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருப்பார். சாப்பிட வேண்டியதை விட்டு விட்டு  சாப்பிடக் கூடாததை சாப்பிடுபவன் அசுரன்.

கோக், பெப்சி , பிஸ்சா போன்றவை உடலுக்கு நல்லது இல்லை. அவற்றை உண்பது  அசுரர் செய்கை.

உடற் பயிற்சி செய்வது, ஓய்வு எடுப்பது , தேவையான அளவு உறங்குவது என்பது  செய்ய வேண்டிய செயல். நேரமே இல்லை, நாளை செய்கிறேன், இன்று ரொம்ப  அசதியாக இருக்கிறது என்று செய்ய வேண்டிய உடற் பயிற்சியை  தள்ளிப் போடுபவன் ஒரு அசுரன்.

எதை எப்போது செய்ய வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.  அந்தந்த நேரத்தில் அவற்றை செய்யாமல் இருப்பதும், மற்றவற்றை செய்வதும்  அசுரர் குணம்.

இதையே வள்ளுவரும்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

என்றார். காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதை காலம் தாழ்த்தி செய்ய வேண்டும். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்ய வேண்டும். மாற்றிச் செய்பவன் அசுரன்.

அதி காலையில் தூங்குவது. இரவில் விழித்து டிவி பார்ப்பது போல.


அது மட்டும் இன்றி, அவர்களிடம் மூன்று இருக்காது.

1. தூய்மை
2. ஒழுக்கம்
3. வாய்மை

இந்த மூன்றைப் பற்றியும் பாகம் 2 -ல் பார்ப்போம்.

இன்றிலிருந்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

எல்லா நேரமும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

"நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் ?  இது இப்போது செய்ய  வேண்டிய  வேலைதானா ? இந்த நேரத்தில் நான் வேறு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறதா ? அதை விட்டு விட்டு நான் இதைச் செய்கிறேனா ? "

என்று கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவை இல்லதாதை விட்டு விலகி, எது தேவையோ அதை மட்டுமே செய்யத் தொடங்குவீர்கள்.

முன்னேற்றமும், உயர்வும் சர்வ நிச்சயம் உங்களுக்கு.



Sunday, September 25, 2016

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள்

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள் 



द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥१६- ६॥

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச | 
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ரு ணு || 16- 6||

த்வௌ = இரண்டு 

பூத ஸர்கௌ = உயிர் கூட்டங்களில்  

லோகே =இந்த உலகில் 

அஸ்மிந் = இந்த 

தைவ = தெய்வீக 

ஆஸுர = அசுர 

ஏவ = நிச்சயமாக 

ச = மேலும் 

தைவோ = தெய்வீக 

விஸ்தரஸ: = விரிவாக 

ப்ரோக்த = சொன்னேன் 

ஆஸுரம் = அசுரர்களை 

பார்த = பார்த்தனே 

மே = என்னிடம் இருந்து 

ஸ்ருணு = கேட்பாயாக 

ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்


இந்த உலகத்தில் உயிரினங்கள் இரண்டு வகைப்படும். அவை, தேவ மற்றும் அசுர குணங்களை கொண்டவை. இதுவரை தேவ குணங்களை பற்றி கூறினேன். இனி , அசுர குணங்களை பற்றி கூறுகிறேன், கேட்பாயாக பார்த்தா. 


நல்லதை மட்டும் சொல்லிக் கொடுத்தால், தீமை வரும் போது அது தீமை என்று தெரியாமல் நாம் அதில் மாட்டிக் கொள்ள நேரும்.

அதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அது என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும்.

அது மட்டும் அல்ல, நமது குணங்களே சில சமயம் தடுமாறலாம். மாறும்  குணங்கள் நல்லதா கெட்டதா என்று அறிந்து கொள்ள நாம்  தீய  குணங்களையும் அறிந்திருக்க வேண்டும்.  தீய குணங்கள் என்றால்  அசுரர் குணங்கள்.

அசுர குணங்கள் எவை, அவை எப்படி இருக்கும் என்று நீண்ட பட்டியலைத் தருகிறது கீதை.

நம்மிடம் உள்ள சில குணங்கள் தேவ குணங்களா அல்லது அசுர குணங்களா என்று கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மேலும், நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த குணங்கள் இருக்கலாம். அவற்றை கண்டு, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அவர்களை நல்ல வழியில் செலுத்த முயலலாம் அல்லது முடிந்த வரை அவர்களை விட்டு விலகி இருக்கலாம்.


எனவே, அவை என்ன என்று கீதை எடுத்துச் சொல்கிறது.

அறிந்து கொள்வோமா ?

http://bhagavatgita.blogspot.in/2016/09/166.html

Thursday, September 15, 2016

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம்

கீதை - 16.5 - தெய்வ சம்பந்தம் 


दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥

தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |
மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||

தை³வீ = தெய்வீக

ஸம்பத் = சம்பந்தத்தால்

விமோக்ஷாய = விடுதலை கிட்டும்

நிபந்தாயாய  = கட்டுண்டு

அஸுரீ  = அசுர சம்பந்தத்தால்

மதா  = ஏற்றுக் கொள்ளப் பட்டது

மா = இல்லை

ஸு²ச: = துக்கம்

ஸம்பத³ம் = சம்பந்தம்

தை³வீ = தெய்வீக

அபிஜாத் = பிறந்ததால்

அஸி = நீ

பாண்டவ = பாண்டவனே

தெய்வீக சம்பந்தத்தால் விடுதலை கிட்டும்.

அசுர சம்பத்தால் பந்தம் ஏற்படும்

துயரப்தே படாதே பாண்டவனே, நீ இறை அம்சத்துடன் பிறந்திருக்கிறாய்.


மனிதன் இயற்கையில் நல்லவனா ? கெட்டவனா ?

இந்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. மனிதன் அடிப்படையில் கெட்டவன்.  சமுதாய கோட்பாடுகளும், சட்ட  திட்டங்களும்  இருப்பதால்தான் அவன் ஒழுங்காக இருக்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.

இல்லை, மனிதன் இயற்கையில் நல்லவன் தான். கெட்டவைகளை அவன்  இந்த சமுதாயத்திடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான் என்று  சொல்பவர்களும் உண்டு.


சில மதங்கள் கூட, மனிதனை பாவிகளே என்று தான் அழைக்கின்றன.

எது சரி ?


கீதை சொல்லகிறது.  

மனிதன் இயற்கையில் இறை சம்பந்தம் உள்ளவன் , நல்லவன் என்று. 

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவன் படைப்பு என்றால் மனிதனும்  இறைவனின் படைப்புதான். அவன் மட்டும் எப்படி கெட்டவனாக இருக்க முடியும். 

எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னால், மனிதன் எப்படி  கெட்டவனாக இருக்க முடியும் ?

அவனுடைய ஒரு சில செய்கைகள் நமக்கோ, இந்த சமூகத்துக்கோ பிடிக்காமல்  இருக்கலாம். அதனால், அவன் கெட்டவன் இல்லை. 

எல்லா மனிதர்களும் நல்லவர்களே என்று ஆரம்பிக்கிறது கீதை. 

நாம் தவறு செய்தவர்கள், செய்பவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை  வேண்டாம்.   பாவ மன்னிப்பும், புனித நீர்களில் நீராடுவதும் வேண்டாம். 


தைரியமாக இருங்கள். 

நீங்கள் இறை சம்பந்தம் கொண்டவர்கள்.  உலக பந்தங்களில் இருந்து  உங்களுக்கு விடுதலை கிட்டும், துயரப்  படாதீர்கள்  என்று அடித்துச் சொல்கிறது  கீதை. 

தெய்வ சம்பந்தத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள். 

பெரியார்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.  அவர்கள் எழுதியதைப் படியுங்கள். 

அந்த சம்பந்தம், உங்களை இந்த துன்பங்களில் இருந்து விடுதலை அடையச் செய்யும். 

எதைப் படிக்க வேண்டும், யாரோடு பழக வேண்டும், யார் சொல்வதைக்  கேட்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா ?


Tuesday, August 23, 2016

கீதை - 16.4 - அசுர சம்பந்தம்

கீதை - 16.4 - அசுர சம்பந்தம் 



दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम् ॥१६- ४॥

த³ம்போ த³ர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச |
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||


தம்போ = தம்பம்

தர்போ = இறுமாப்பு

அபிமாந = கர்வம்

 ச = மேலும்

க்ரோத: = கோபம்

பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஜ்ஞாநம் = அறிவீனம்

சா = மேலும்

அபிஜாதஸ்ய = பிறந்தது

பார்த = பார்த்தா

ஸம்பதசம்  = சம்பந்தம் உள்ளது

அஸுரீம் = அசுர குணங்கள்

டம்பம், இறுமாப்பு, கர்வம், கோபம் , கடுமை, அஞ்ஞானம் போன்ற குணங்கள் அசுர சம்பந்தம் உள்ளவர்களிடம் காணப் படுகிறது.

முதலில் தெய்வ சம்பந்தமான குணங்களை கூறிய கீதை , அடுத்து  அசுர சம்பந்தமான குணங்களை கூறுகிறது.


நல்லதை மட்டும் சொல்லி விட்டு விட்டால், தீயதை இனம் காண முடியாமல் போகும். எனவே, தீய குணங்களையும் பட்டியல் போடுகிறது கீதை.

டம்பம் ...இதற்கு வஞ்சனை, சூது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்று சொல்லலாம்.

அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று வைத்து பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்பார் வள்ளலார்.

உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து விட்டால், நாட்டில் ஒரு குழப்பமும் இருக்காது. மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றை சொல்வதால்தான் அத்தனை சிக்கல்களும்.

உள்ளே நினைப்பதை எல்லாம் எப்போது வெளியே சொல்ல முடியும் ?

நினைவு ஒழுங்காக இருத்தால், நினைப்பதை வெளியில் சொல்ல முடியும்.

"நினைவு நல்லது வேண்டும் " என்றார் பாரதியார்.

மனம் தூய்மையாக இருந்தால், வெளிப்படும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்.

தர்பா ..இறுமாப்பு ..அகந்தை திமிர்.

நான் தான் எல்லாம், என்னால் தான் எல்லாம் என்ற அகந்தை. கர்வம் போக வேண்டும். கர்வம் வரும் போது அரக்க குணம் வெளிப்படும்.

குரோதம் - கோபம்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர். சினம் தன்னைச்  சேர்ந்தவர்களை கொல்லும் . யாரிடம் சினம் இருக்கிறதோ, அவர்களின் சுற்றத்தையும் கொல்லும்.

மற்ற அனைத்து குற்றங்களும் வெளியில் இருந்து உள்ளே வருவன. காமமும், கோபமும் உள்ளிருந்து வெளியே செல்லும் குற்றங்கள்.

தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்ட விஸ்வாமித்ரன் கூறுவான் "கானகத்தில் முனிவர்கள் செய்யும் யாகத்தை கெடுக்க காமம் மற்றும் கோபம் போன்ற தீய குணங்கள் போல அரக்கர்கள் வந்து இடையூறு செய்கிறார்கள்...."



“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.



காமமும் கோபமும் அவ்வளவு தீய குணங்கள். அசுரர்கள் யாகத்தை கலைப்பது போல நம் வாழ்க்கை என்ற தவத்தை கலைக்கும் அசுரர்கள் இந்த காமமும் கோபமும்.


பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்


கோபம் வரும் போது மற்றவர்கள் பக்கம் உள்ள ஞாயம் தெரியாது. நாம் சொல்வதே சரி என்று அடம் பிடிக்கத் தோன்றும். மற்றவர்களின்  மனதை வார்த்தைகளால் , செயல்களால் வருத்தம் அடையச் செய்வோம். 


மற்றவர்களை துன்பப் படுத்துவதுதானே அசுரர்களின் குணம். 

முரட்டுத்தனம் வரும்போது நாமும் அசுரர்கள் ஆகி விடுவோம். 

எதிலும் ஒரு மென்மையை கடைபிடிக்க வேண்டும். 


அறிவீனம்....தன்னை அறியாத அறிவீனம், தன்னை சுற்றி உள்ள உலகை அறியாத அறிவீனம், தனக்கும் தன்னை சுற்றி உள்ளவற்றிற்கும் உள்ள தொடர்பை, உறவை அறியாத அறிவீனம். இந்த அறிவு இல்லாமல்  மனிதன் பல தவறுகளை செய்கிறான். 

அனைத்து தீய குணங்களுக்கும் அடிப்படை காரணம் அறிவீனம். 

ஞானத்தை வளர்ப்போம். அசுர குணங்களை விட்டு தெய்வ சம்பத்தை அடைவோம். 

அடைய வாழ்த்துக்கள்.




Thursday, August 18, 2016

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3


तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌ²சமத்ரோஹோ நாதிமாநிதா |
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத || 16- 3||

தேஜ: = தேஜஸ், ஒளி

க்ஷமா = மன்னிக்கும் குணம்

த்ருதி: = உறுதி

ஸௌ²சமத் = தூய்மை

அ த்ரோஹ = த்ரோஹமின்மை

 நா = இல்லை

அதி மாநிதா = கர்வம் , ஆணவம்

பவந்தி = இவை

ஸம்பதம் = அடைதல்

தைவம் = தெய்வம்

அபிஜாதஸ்ய = தொடர்பு உடையவனாகிறான்

பாரத = பாரத குல தோன்றலே


ஒளி, மன்னிக்கும் மனம்,  உறுதி, சுத்தம், துரோகமின்மை , கர்வம் இன்மை  போன்ற இந்த குணங்கள் தெய்வ சம்பத்தை அடைந்தவனிடம் காணப்படுகின்றன. 


ஒளி ... உடல் ஒளி விடுமா ? விடும் என்று சொல்கிறார்கள். ப்ரதீப என்று ஒரு   இராஜா இருந்தார். தீபம் போல ஒளி விடுமாம் அவர் உடல்.

இராமன் கானகம் போகிறான். பட்டுடை இல்லை, தங்கக் கிரீடம் இல்லை, ஒரு பகட்டும் இல்லை. இருந்தும் அவன் உடல் ஒளி விட்டதாம். அந்த ஒளியில், சூரியனின் ஒளி மங்கிப் போய்விட்டதாம்.


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

வெய்யோன் ஒளி என்றால் சூரியனின் ஒளி, இராமனின் உடலில் இருந்து கிளம்பும்  ஜோதியின் தோற்றத்தில் மறைந்து போனதாம்.  இராமனின் மேனி அவ்வளவு பிரகாசம் கொண்டது. சூரிய ஒளியை மங்க வைக்கும் அளவுக்கு பிரகாசமானது.

அது சத்தியத்தின் ஒளி. அஞ்ஞானத்தை போக்கும் ஞான ஒளி.



மன்னிக்கும் குணம் ....பிறர் செய்யும் தவறுகளை, குற்றங்களை  மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள் , ஒன்று வருந்துவார்கள் அல்லது  எப்படி தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு  விடிவு காண்பது என்று பழி வாங்கத் துடிப்பார்கள்.

ஏதோ கையாலாகாமல் பொறுத்துப் போவது அல்ல பொறுமை. தனக்கு தீமை செய்தவர்களை தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தண்டிக்காமல் இருப்பது தான் மன்னிக்கும் குணம்.


பொறுமை என்பது மிகப் பெரிய வலிமையான குணம் என்கிறார் வள்ளுவர்.


இன்மையுள்  இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.


துன்பத்தில் பெரிய துன்பம், வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிக்க முடியாமல் போவது .  வலிமையான குணங்களில் பெரிய வலிமை மிக்க குணம்  பொறுமை ஆகும்.

பாரதம் காட்டும்   மிகப் பெரிய பொறுமையை.

நாடிழந்து, வீடிழந்து , தம்பியரை இழந்து , தாரத்தையும் இழந்து நிற்கிறான் தர்மன். மனைவியை மான பங்கம் செய்ய நினைக்கிறான்  துரியோதனன். அப்போதும் பொறுமையாக இருக்கிறான் தர்மன். நினைத்து பார்க்க முடியுமா ?

கொதித்து எழுந்த பீமன் சொல்லுவான், துரியோதனின் துரோக சிந்தனையை விட உன்  அற சிந்தனைக்கு அஞ்சினேன் என்று.

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான் பீமன். 

மன்னிக்கும் குணம் எதோ இயலாமையில் வந்த , பலவீனமான செயல் என்று   எண்ணி விடாதீர்கள். மிக மிக பலம் வாய்தவர்களால் தான் மன்னிக்க முடியும். 

உறுதி ...உடலில் மட்டும் அல்ல, உள்ளத்திலும். பெரும்பாலானோருக்கு படிக்க படிக்க உறுதி குறையும். குழப்பம் அதிகமாகும். எதைச் செய்வது, எப்படி செய்வது என்று  தெரியாமல் குழப்புவார்கள். அந்த குழப்பத்தில் மேலும் படிப்பார்கள். மேலும் குழப்புவார்கள். எதிலும் உறுதி கிடையாது. படித்ததை எல்லாம் ஊருக்குச்  சொல்லுவார்கள்.தங்கள் வாழ்வில் எதை கடை பிடிப்பது என்று தெரியாமல் தவிப்பார்கள். 

கீதையை வாசிப்பார்கள். பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். அதை நடை முறையில்   கடை பிடிப்பார்களா என்றால் "இதெல்லாம் நடை முறைக்கு சாத்திய படாது" என்று கூறி தள்ளி வைத்து விடுவார்கள். 

அவர்களை போன்ற முட்டாள் உலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். 

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்கா பேதையரில் பேதையர் இல் 

தீயவர்களுக்கு தீமை செய்வதில் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நன்மை செய்வதில் இருப்பது இல்லை. உலகில் உள்ள பல சிக்கல்களுக்கு அதுவே காரணம்.

சரி என்று மனதிற்குப் பட்டதை, உறுதியுடன் செயல் படுத்துங்கள். வெற்றி உங்களதே


http://bhagavatgita.blogspot.in/2016/08/163-3.html