Wednesday, March 22, 2017

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும்

கீதை - 3.4 - செயலும், செயலற்ற நிலையும் 


न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥

ந கர்மணாமநாரம்பா ந்நைஷ்கர்ம்யம் புருஷோஸ்நுதே|
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி ||3-4||

ந = இல்லை

கர்மணாம் = கர்மம்

அந் - ஆரம்ப = தொடங்காமல் இருந்தால் 

ந்நைஷ்கர்ம்யம் = பற்றற்ற கர்மம்

புருஷ = ஒருவன்

அஸ்நுதே| =  அடைவதில்லை

ந = இல்லை

ச = மேலும்

ஸந்ந்யஸ = துறப்பதன் மூலம் 

ஏவ = நிச்சயமாக

ஸித்திம்  = வெற்றி

ஸமதிகச்சதி = அவன் அடைகிறான்


தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் முழு நிறைவு அடைய மாட்டான்.


தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம்  பெற்றுவிட மாட்டான்.

துன்பத்தின் மூலம் எது ? எதிலிருந்து துன்பம் வருகிறது ? எப்படி துன்பத்தில் இருந்து விடுபடுவது ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.

கீதை இன்னும் ஆழமாக சிந்திக்கிறது.

ஆசை எப்படி வருகிறது ?

ஒரு பொருளை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பதால் ஆசை வருகிறது.

நாம் ஒரு பொருளை பற்றி அல்லது ஒரு விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்காமல் இருந்தால் அதன் மேல் ஆசை வருவது இல்லை. ஆசை, கோபம், மறதி, மனக் குழப்பம், நிம்மதி இன்மை, துன்பம் என்று தொடர் சங்கிலியாக சிந்தனையில் இருந்து துன்பம் வருகிறது.

இதை நாம் இரண்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.

விட்ட இடத்தில் தொடர்கிறான் கிருஷ்ணன்.

நாம் எப்போது ஒரு பொருளை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம் ?

எப்போது அது நம்மிடம் தேவையான அளவு இல்லையோ அப்போது நாம் அதை பற்றி  சிந்திக்க தொடங்குகிறோம்.

பணம் இருக்கிறது நம்மிடம். ஆனால் அது போதாது என்று நினைக்கிறோம். அதை பற்றிய சிந்தனை நம் மனதை , அறிவை ஆக்கிரமிக்கிறது.

எப்படி மேலும் பணம் சேர்ப்பது என்று யோசிக்கிறோம். அதில் முதலீடு செய்வோமா? இதை வாங்குவோமா, அதை விற்போமா, என்று செயல் பட தொடங்குகிறோம்.

பணம், அன்பு, காதல், அதிகாரம், புகழ் என்று எதை எடுத்துக் கொண்டாலும் செயல்பாடு ஒன்றுதான்.

சிந்தனை, சிந்தனையில் இருந்து ஆசை, ஆசையில் இருந்து செயல் பிறக்கிறது.

வெறும் செயலை மட்டும் நிறுத்தி உபயோகம் இல்லை.. நிறுத்தவும் முடியாது.

சிந்தனை பின் புலத்தில் செயல் படுத்திக் கொண்டே இருக்கும்.

மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதைத்தான் கிருஷ்ணன் இங்கே சொல்கிறான்

தொழில்களைத் செய்யாமலே இருப்பதனால் ஒருவன்  செயலற்ற நிலையை அடைவதில்லை. துறவினாலேயே, அதாவது செயலை துறப்பதன் மூலம், மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

செயலை செய்யாமல் இருப்பதன் மூலம் ஒருவன் செயலற்ற நிலையை அடைவது இல்லை. மனமும் , அறிவும் செயல் பட்டு கொண்டு இருக்கும் வரை வெறுமனே புலன்களை அடக்கி வைபதன் மூலம்  ஒருவன் செயலற்ற நிலையை  அடைவது இல்லை.

செயலை மட்டும் துறந்தால் போதாது.      வெறும் செயலை துறந்தவன் நிலை மிகவும் துன்பமயமானது.

மனம் அது வேண்டும், இது வேண்டும் என்று தூண்டிக் கொண்டே இருக்கும். அறிவு , அவற்றை பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் பட தூண்டும். ஆனால், இவனோ ஞானமே சிறந்தது என்று நினைத்துக் கொண்டு செயல் படாமல் இருப்பான். தனக்குள்ளேயே பெரிய யுத்தம் நடந்து கொண்டு இருக்கும். கிடைக்கவில்லை என்றால் வருந்தும். கிடைத்தால் அதை விட அதிகமாக வேண்டும் என்று மேலும் ஆசைப் படும்.  இதற்கு ஒரு  முடிவே இல்லை.

சிந்தனை , மனம் ஓடிக் கொண்டே இருக்கும் வரை, செயல் இருக்கத்தான் செய்யும்.

எங்கே ஒரு நிமிடம், கண்ணை மூடி , செயலற்று இருந்து பாருங்கள். மனம் காற்றாக பறக்கும். ஆயிரம் எண்ணங்கள் அலை பாயும்.

கர்மயோகத்தின் முதல்படி மன அடக்கம்.

அது எப்படி முடியும் ?



கீதை - 3.3 - இரண்டு யோகங்கள்

கீதை - 3.3 - இரண்டு யோகங்கள் 


श्रीभगवानुवाच
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥

ஸ்ரீபகவாநுவாச
லோகேஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக| 
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்மயோகேந யோகி நாம் ||3-3||


ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

லோகே = இந்த உலகில்

அஸ்மிந் = இதில்

த்விவிதா = இரண்டு

நிஷ்டா = நிலைகள், வழிகள் உள்ளன

புரா  = பழமையான

ப்ரோக்தா = சொல்லப்பட்ட

மயா = என்னால்

அந் நக = பாவம் இல்லாதவனே


ஜ்ஞாநயோகேந = ஞான யோகம்

ஸாங்க்யா நாம்= சாங்கியர்களால் கூறப்பட்டது

கர்மயோகேந = கர்மயோகம்

யோகி நாம் = யோகிகளால் கூறப்பட்டது


கண்ணன் சொல்லுகிறான்...பாவம் ஒன்றும் இல்லாத அர்ஜுனா, இந்த உலகில் இரண்டு வழிகள் உள்ளன...அவை, சாங்கியர்களால் கூறப்பட்ட ஞான யோகம், யோகிகளால் கூறப்படும் கர்ம யோகம். 


ஞான மார்கமா, கர்ம மார்கமா நான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொல்லு என்று அர்ஜுனன் முந்தைய ஸ்லோகத்தில் கேட்டான்.

இதுதான் சிறந்தது என்று கிருஷ்ணன் சொல்லவில்லை.

நாம் கேட்டதை எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இறைவனுக்கு இருக்கிறதா என்ன ?

கேள்வியே தவறு என்றால் எப்படி விடை தருவது ?


"நான் உனக்கு இரண்டு வழிகளை சொன்னேன்....ஒன்று சாங்கியர்களின்  ஞான யோகம், மற்றது யோகிகளின் கர்ம யோகம்...."

இரண்டில் ஒன்று எது சிறந்தது என்று கிருஷ்ணன் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் இருக்கலாம்.

சொல்லவில்லை.

எனவே, எது சிறந்தது என்ற கேள்வி இன்னும் விடை இல்லாமலே  போய் கொண்டிருக்கிறது.

நமக்கென்று உள்ள கடமைகளைச் செய்கிறோம். வேலைக்குப் போகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இன்னும் நிறைய பணம் வேண்டி இருக்கிறது. பெரிய வேலை, பதவி உயர்வு, மேலும் பொறுப்புகள்..மேலும் பணம்....மேலும் உழைப்பு என்று இப்படி வாழ்க்கை போய் கொண்டே இருக்கிறது....

இது எங்கு போய் முடியும்...ஒரு காலகட்டம் வரும்...இதுவரை என்ன செய்தோம் என்ற கேள்வி வரும்...பணம் கையில் இருக்கும், அனுபவிக்க வயதோ, உறவுகளோ இருக்காது....வாழ் நாள்  எல்லாம் இதில் போய் விட்டதே என்ற வருத்தம் வரும்.

சரி , அதுக்காக வேலைக்குப் போகாமல் , பணம் சம்பாதிக்காமல், வாழ்வில் முன்னேறாமல், அப்படியே இருக்க முடியுமா ? அதுவும் முடியாது.

பின் என்ன தான் வழி ?

இந்த வேலை, பணம், சொத்து இவற்றை எல்லாம் தாண்டி வேறு ஏதோ ஒன்று இருக்கறதா என்று  அறியத் தலைப் பட வேண்டும் ? இல்லை, அது எல்லாம் ஒன்று இல்லை...பணம், பொருள் ஒன்றுதான் வாழக்கை  என்று யாராவது சொல்லுவார்களா ?

பணம் வேண்டும். ஆனால் அதே சிந்தனையாக இல்லாமல் வேலை செய். நாளடைவில், வேலை என்பது  வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும், அதுவே வாழ்க்கையாகி விடாது.

எப்போது வேலை, கடமை, கர்மம் என்பது  வாழ்வின் ஒரு பகுதி என்ற நிலை வந்து விட்டதோ, அப்போது மனம் அதை தாண்டி யோசிக்கத் தலைப்படும்....வேறு என்ன இருக்கிறது இந்த வாழ்வில் என்ற கேள்வி பிறக்கும்

ஒன்று எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள். சேர்ப்பது.

கர்ம யோகம் என்றால் கர்மத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

ஞான யோகம் என்றால் ஞானத்தை எதனுடனோ இணைப்பது என்று பொருள். எதனுடன் ?

இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இனைந்து இருப்பவை. இணைந்து இருக்க வேண்டும்.

கர்ம யோகத்தை பற்றி மேலும் மிக விரிவாக கண்ணன் சொல்லுகிறான்.

கேட்போம்.



Tuesday, March 21, 2017

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்



व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥

வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே|
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோஹமாப்நுயாம் ||3-2||


வ்யாமிஸ்ரேண = கலந்து, குழப்பமான

ஏவ = நிச்சயமாக

வாக்யேந  = வாக்கினால், உன் பேச்சால்

புத்திம் = என் புத்தியானது

மோஹயஸீவ = பேதலிக்கிறது

மே = என்

தத் = அந்த

ஏகம்தே = ஒன்றை மட்டும்

வத = பேச்சு

நிஸ்சித்ய = நிச்சயமான

யேந = அதனால்

ஸ்ரேயோ = உறுதியான, உயர்வான

அஹம்ஹ = நான்

அப்நுயாம்  = நான் அடைவேன்

அதையும் இதையும் கலந்து நீ சொல்வதானால் என் புத்தி குழம்புகிறது. எது எனக்கு நன்மை தருமோ அதை மட்டும் எனக்கு உறுதியாகச் சொல்


பொதுவாக மனிதர்கள், சொல்லுவதை கேட்பது இல்லை. தங்களுக்கு எது வேண்டுமோ, எது சரி என்று படுகிறதோ அதுதான் சொல்லப்பட்டதாக கேட்கிறார்கள்.

People hear what they want to hear என்று சொல்லுவார்களே, அது மாதிரி.

தங்களுக்கு பிடித்தது, சரி என்று படுவதைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், ஒன்று அதை கண்டு கொள்வது இல்லை...அல்லது என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று தவிப்பார்கள்.

இங்கே குழப்பத்திற்கு ஒரு அவசியமும் இல்லை.

கிருஷ்ணன் கடமையை செய்யாதே என்றோ, கர்மத்தில் ஈடு படாதே என்றோ சொல்லவில்லை.

பலன் கருதாமல் காரியம் செய் என்று தான் சொன்னான்.

உன் கடமையை, ஸ்வதர்மத்தை கை விடாதே என்று சொன்னான்.

உலகத்தின் இயற்கை பற்றி சொன்னான்.

பின் எங்கும் நிறைந்திருக்கும், மாற்றம் இலாத ஒன்றைப் பற்றி சொன்னன்.

அறிவின் மூலம் புலன்களை எப்படி கையாள்வது என்று கூறினான்.

இதில் குழப்பம் வர வழியில்லை. இருந்தாலும், அர்ஜுனன் குழம்புகிறான்.

திட சித்தம் உயர்ந்தது என்று கூறினாயே, அப்படி என்றால் எதற்கு வேலை செய்ய வேண்டும் ? அறிவு மட்டும் போதுமே. உழைப்பு எதற்கு என்று.

கர்மம் ஏன் செய்ய வேண்டும் ? ஞானம் தான் உயர்ந்தது என்றால் பேசாமல் நாள் பூராவும் படிப்பது, படித்தவர்கள் சொல்வதை கேட்பது என்று இருந்து விடலாமே. ஏன் கடமைகளை செய்ய வேண்டும் என்பது அர்ஜுனனின் கேள்வி.

நம் கேள்வியும் கூடத்தான்.

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்ததுதான். ஒன்று மட்டும் இருக்கட்டும், இன்னொன்று வேண்டாம் என்று சொல்ல முடியாது.

ஒரு முழுமையான மனிதனாக இருக்க வேண்டும் என்றால் ஞானமும் வேண்டும்,  நாட்படி கடமைகளையும் செய்ய வேண்டும், அதில் ஒரு அன்பும் அர்ப்பணிப்பும், பக்தியும் வேண்டும்.

பின் ஒரு இடத்தில் கண்ணன் சொல்லுவான் - குதிரைகளுக்கு நான் கொள்ளு தருகிறேன், தண்ணீர் வைக்கிறேன் என்று. ஏன் ? அவனிடம் இல்லாத ஞானமா  ? தேரோட்டி என்ற கடமையை கையில் எடுத்து விட்டால் அதை முழுமையாகச் செய்ய வேண்டும்.

அதில் சிக்கல்கள் வரும். முரண்கள் வரும்.  சட்டத்தோடு மோத வேண்டி வரும், அறத்தோடு மோத வேண்டி வரும்,  அன்பும் பாசமும் குறுக்கிடும்.

எது வந்தாலும் கடமையை செய்தே ஆக வேண்டும்.

உங்கள் கடமைகள் என்னென்ன என்று சிந்தியுங்கள். அவற்றில் எத்தனை நீங்கள் மிக ஒழுங்காகச் செய்கிறீர்கள் என்றும் சிந்தியுங்கள்.

மாணவனாய், ஆசிரியனாய், தகப்பனாக, தாயாக, பிள்ளையாக, குடிமகனாக, கணவனாக, மனைவியாக எத்தனை கடமைகள்...

எத்தனை சரியாக செய்தோம், எத்தனை சரியாக செய்யவிலை என்று சிந்தியுங்கள்.

பல சிக்கல்கள் , கடமையை சரியாக செய்யாமல் இருப்பதில் இருந்து தான் தொடங்குகிறது.




Monday, March 20, 2017

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ?

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ? 


अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந| 
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்

ஜ்யாயஸீ  = உயர்ந்தவனே

சேத் = அப்படியானால்

கர்மணா = காரியம் செய்வதுதான்

தே = உன்

மத = எண்ணம் என்றால்

 புத்தி = புத்தி, ஞானம், அறிவு

ஜனார்த்தன = ஜனார்தனனே

தத் = அது

கிம் = ஏன்

கர்மணி  = கர்மம் செய்வதில்

கோரே = கோரமான

மாம் = நீ

நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்

கேஸ²வ = கேசவா

அர்ஜுனன் சொல்கிறான், கேசவா, ஞானம் தான் உயர்ந்தது என்றால் இந்த கோராமன காரியத்தை செய்ய ஏன் என்னை தூண்டுகிறாய் ?

உண்மை தெரிந்தவனுக்கும், தெரியாதவனுக்கும் இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம்.

மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள தூரம்.

சொல்வதை புரிந்து கொள்ள முடியாத சீடன் இருக்கும் சங்கடம் உலகில் எல்லா ஞானிகளுக்கும் இருந்தது.

குரு சொல்ல வந்ததை புரிந்து கொள்ளும் சீடர்களை பெற்ற ஆசிரியர்கள் மிகச் சிலரே.

இயேசு நாதர் தன் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு துன்பம் செய்தவர்களை மன்னியுங்கள்" என்றார்

சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்கள் இயேசுவிடம் திருப்பி கேட்டார்கள் "எத்தனை முறை நாங்கள் மன்னிக்க வேண்டும் " என்று

இயேசு சங்கடப் பட்டிருப்பார் ...இந்த சீடர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ..."ஏழு முறை மன்னியுங்கள் " என்றார்.

சீடர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை "ஏழு முறை போதுமா " என்று கேட்டார்கள்.  ஏன்றால்   எட்டாவது முறை துன்பம் செய்தால் எதிரியை மன்னிக்காமல் அடி பின்னி விடலாம், முந்தைய ஏழு முறைக்கும் சேர்த்து என்பது அவர்கள் எண்ணம்

இயேசு "ஏழு முறை மட்டுமல்ல...ஏழ் எழுபது முறை மன்னியுங்கள் " என்றார்.

புத்தர் அந்த விதத்தில் மிக அதிர்ஷ்டசாலி.

ஒரு நாள் புத்தர் பிரசங்கம் செய்ய வந்து அமர்ந்து இருந்தார். அப்போது அவருடைய பிரதம சீடர்  மகா கஷ்யப் என்பவரும் அருகில் இருந்தார்.

புத்தர் அங்கிருந்த ஒரு தாமரை மலரை எடுத்து கஷ்யப்பிடம் தந்தார்.

அதை பெற்றுக் கொண்ட கஷ்யப் ஒரு புன்னகை பூத்தார்.

அதை கண்ட புத்தரும் ஒரு புன்முறுவல் பூத்தார்.

புத்தர் சொல்ல வந்ததை கஷ்யப் சொல்லாமலேயே புரிந்து கொண்டார்.

இங்கே கிருஷ்ணன் 72 ஸ்லோகங்கள் சொன்னான்...அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை....

ஞானம் தான் சிறந்தது என்றால், பின் ஏன் இந்த யுத்தம் செய்யச் சொல்கிறாய் என்று முதல்  அத்யாயத்தில்  முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறான்.

பரவாயில்லை, சந்தேகம் இருக்கும் போது மீண்டும் கேட்கிறானே...சில பேர் புரியாவிட்டாலும் புரிந்த  மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு போய் விடுவார்கள்..அந்தபுரம்   போய் தங்கள் மனதுக்கு தோன்றியதை செய்வார்கள்...கேட்டால்   இதுதான்  ஆசிரியர் சொன்னார், ஆசாரியர் சொன்னார் என்று சொல்லி விடுவார்கள்.

மதம் என்பதே புரியாதவர்கள், தெரியாதவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் தானே.

நல்ல மாணவனாக, அர்ஜுனன் புரியாததை ஒத்துக் கொண்டு மீண்டும் கேள்வி கேட்கிரான்.

மிகப் பொறுமையாக கிருஷ்ணன் பதில் சொல்கிறான்....மாணவனின் மேல் அன்பும் அக்கறையும்   உள்ள ஆசிரியனாக....

என்ன சொன்னான் என்பதை நாமும் கேட்போம் .....

ஞானம் என்பது வேறு, கர்மம் என்பது வேறு என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒன்று ஞான மார்கத்தில் செல்ல வேண்டும். படிப்பது, கேட்பது, அறிவை விருத்தி செய்து கொள்வது என்பது முடியாவிட்டால் கர்ம மார்கத்தில் செல்ல வேண்டும் என்று கீதை சொல்வதாக  பலர் உரை செய்வார்கள்.

ஞானம், பக்தி, கர்மம் என்ற மூன்று வழியை கண்ணன் சொல்வதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரியல்ல என்பது என் எண்ணம்.

ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு என்பது என் எண்ணம்.

அறிவு இல்லாத கர்மம் ஆபத்தில் போய் முடியும்.

குரங்கு கையில் வாளை கொடுத்து தன்னை பாதுகாக்கும்படி ஒரு இராஜா சொன்னானாம். அரசன் அசந்து தூங்கும்போது , அவன் கழுத்தில் ஒரு ஈ அமர்ந்தது.

குரங்குக்கு வந்ததே கோபம். கண்ட இடத்தில் அமரும் ஈயே , நீ அரசன் கழுத்தில் அமரலாமா  என்று , கையில் கிடைத்த வாளால் ஓங்கி ஒரு போடு போட்டது.

அரசன் தலை துண்டாகி இறந்து போனான்.

ஞானம் இல்லாத கர்மத்தால்  ஆபத்துதான் விளையும்.

சரி நிறைய படித்து ஞானம் இருக்கிறது. ஒரு செயலும் எல்லை, அன்பு இல்லை, கருணை இல்லை என்றால் அந்த ஞானத்தால் என்ன பயன்.

கற்றதனால் ஆய பயன் என் கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். ஞானம் இருந்து என்ன பயன், பக்தி இல்லை என்றால் என்று கேட்கிறார். ஞானம் மட்டுமே முடிவு அல்ல.

ஞானத்தில் இருந்து விளையும் கர்மமே உயர்ந்தது.

தெளிவான ஞானம் பிறக்கும் போது , அதில் இருந்தே கர்மமும் விளைகிறது.

ஞானம் வேறு கர்மம் வேறு அல்ல.

தெளிந்த சிந்தனையின் , அறிவின் விளைவே கர்மம்.

அந்த கர்மமே , மீண்டும் மீண்டும் பிறவிக்கு வழி வகுக்காத கர்மம். அதுவே பற்றற்ற கர்மம்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், யாரோ சொல்லி செய்கிறேன், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்கிறேன் என்று ஞானம் இல்லாதவன் காரியங்களை  செய்கிறான். அதன் வெற்றி தோல்வி அவனை பாதிக்கிறது.

ஞானத்தின் உச்சியில் இருப்பவன்  செய்யும் காரியம் அவன் வேறு, ஞானம் வேறு, கர்மம் வேறு என்று இல்லாமல் செய்வான்.

அங்கே கர்மம் மட்டும்தான் நிகழ்கிறது.

செய்பவனும் இல்லை. செய்யப் படுவதும் இல்லை. செயல் மட்டுமே இருக்கிறது.

அதில் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.

ஞானம் என்ற விதையில் இருந்து கர்மம் என்ற செயல் விளைகிறது.

மரம் வேறு , விதை வேறல்ல. மரமும் விதையும் ஒன்றுதானே.


ஞானத்தையும் கர்மத்தையும் பிரிக்கும் போது தான் குழப்பம் வருகிறது.

கீதையை முழுவதுமாக படித்தால் தெரியும் - ஒரு அத்தியாயத்தில் கண்ணன் ஞானமே  உயர்தது என்பான். இன்னொன்றில் கர்மமே உயர்தது என்பான். இன்னொன்றில்,, இது இரண்டும் இல்லை, பக்தியே எளிய வழி என்பான். படிப்பவர்கள்  குழம்பிப் போவார்கள்.

அர்ஜுனன் கேட்கிறான், ஞானம் உயர்ந்தது என்றால் ஏன் என்னை இந்த யுத்தத்தை செய்யச் சொல்கிறாய் என்று.

அதற்கு கண்ணன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.


Saturday, March 18, 2017

கீதை - கர்ம யோகம் - ஒரு அறிமுகம்

கீதை - கர்ம யோகம்  - ஒரு அறிமுகம் 


கர்மயோகம் கீதையின் மூன்றாவது அத்யாயம்.

இதற்கு முந்தைய இரண்டாவது அத்யாயத்தில் கிருஷ்ணன் இரண்டு விஷயங்களைப் பற்றி கூறினான்.

முதலாவது, இந்த உலகம் எல்லாம் நிறைந்தது, பிறப்பும் இறப்பும் அற்றது, வெட்டவும், எரிக்கவும்,நனைக்கவும், கரைக்கவும் முடியாதது எதுவோ அதை உணர் என்றான். இந்த உலகத்தில் எல்லாம் தோன்றி மறைவன. எதுவும் புதிது இல்லை. பிறந்து இறந்து ஏதோ ஒரு சுழற்ச்சியில் இருக்கின்றன. என்று  வாழ்வின் நிரந்தரமானது மற்றும் நிரந்தரம் இல்லாதது பற்றி கூறினான். இதை பல உரை ஆசிரியர்கள் ஆத்மா என்று பெயரிட்டார்கள். வியாசர் இடவில்லை. ஆத்மா என்று கொண்டதால், பல சிக்கல்கள் வந்தன. ஜீவாத்மா ,  பரமாத்மா இதில் எது என்ற முதல் குழப்பம். இந்த இரண்டு ஆத்மாவிருக்கு உள்ள தொடர்பு இரண்டவாது  சிக்கல். 

இரண்டாவது, திட சித்தம் பற்றியும் அது உள்ளவன் எப்படி இருப்பான் என்பது பற்றியும் கூறினான்.  எப்படி புலன்கள்  அறிவை மயக்கும் என்பதை படிப் படியாக விளக்கினான். இந்த அறிவு  வந்து விட்டால் வேறு ஒரு குழப்பமும் வராதுஎ என்றான்..

அர்ஜுனன் கேட்கிறான் - அறிவுதான் உயர்ந்தது என்றால் பின் என்னை எதற்கு யுத்தம் செய்ய  சொல்கிறாய் என்று. 

ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமான கேள்வி.

அறிவு முக்கியம் என்றால், அதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டு விட முடியுமா. 

அறிவு முக்கியம் என்றால், அறிவை பெறுவதும் ஒரு வேலை தானே. அந்த கர்மாவை  செய்தால்தானே   ஞானம் வரும்.

கிருஷ்ணன் ரொம்ப பொறுமையாக சொல்கிறான் - அறிவு சிறந்தது தான் அதற்காக    சாப்பிடாமல்  இருந்து விடுவாயா என்ற அளவிற்கு போய் பேசுகிறான். 

வாழ்வில் இன்பம் வேண்டும் என்றால் அறிவும் வேண்டும், உழைப்பும் வேண்டும்.....

அறிவற்ற உழைப்பு விழலுக்கு இறைத்த நீர். முட்டாள் தனமாய் காரியம் செய்தால் சில சமயம்  ஆபத்தில் கூட முடியலாம்.

உழைப்பற்ற அறிவால் ஒரு பலனும் இல்லை. படித்ததை உபயோகப்  வேண்டும். குறைந்த  பட்சம்  பிறருக்கு சொல்லியாவது தர வேண்டும். 

பூட்டி வைத்த அறிவால் யாருக்கு என்ன பலன் ?

வெறும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது ... உழைப்பும் வேண்டும் என்று பேசுகிறது...கர்ம யோகம்.

உழைப்பு, கடமையை செய்தல் ஏன் உயர்ந்தது, அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி  பேசுகிறது. 

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....அது என்னனா 



Monday, January 30, 2017

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும்

கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும் 


एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥

ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய: |
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஹிதா: || 16- 9||


ஏதாம் = இவர்கள்

த்ருஷ்டிம் = இந்த நோக்கத்தால், பார்வையால்

அவஷ்டப்ய = அவ + ஸ்தாபிபிய =   நிலை நிறுத்த (அந்த கொள்கைகளை)

நஷ்டாத்மாநா = தங்களை தாங்களே அழித்துக் கொண்டு

அல்ப புத்தய: = அற்ப புத்தியுடன்

ப்ரபவந்தி  = உருவாகி இருக்கிறார்கள்

உக்ரகர்மாண: = உக்ர + கர்மான  = கொடிய செயல்களுடன்

 க்ஷயாய = அழிவை நோக்கி

 ஜகத் = உலகை

அ ஹிதா: = ஹிதம் என்றால் நன்மை. எ ஹிதம் என்றால் நன்மை இல்லாத. அதாவது தீமை.

அந்த எண்ணம் கொண்டவர்கள், தங்களை தாங்களே அழித்துக் கொள்வது மட்டும் அன்றி உலகையும் தங்களது தீவிர செயல்களால் தீமை நோக்கி இட்டுச் செல்வார்கள். 

அந்த எண்ணம் கொண்டவர்கள் என்றால் எந்த எண்ணம் ?

முந்திய ஸ்லோகத்தில் பார்த்தோம்

- உலகம் என்பது ஒரு விபத்து. அது எந்த விதிக்கும் கட்டுப் படாதது.
- உலகை யாரும் தோற்றி வைக்க வில்லை, அதை யாரும் பரி பாலனம் செய்வது இல்லை.

- உலகம் ஆசையால் சுழல்கிறது. ஆசையால் உந்தப் பட்டு காரியங்கள் நிகழ்கின்றன.

- அதற்கு மேல் ஒன்றும் இல்லை

என்ற இந்த எண்ணங்களைக் கொண்டவர்கள் என்ன செய்கிறாரகள் என்றால் ...

முதலில் தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது, அற்ப புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள்

மூன்றாவது, தீவிரமாக செயல் படுகிறார்கள்

நான்காவது, இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்கிறார்கள்.

அதாவது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அற்ப புத்தி உள்ளவர்கள். அவர்கள்  தங்களையும் இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்வார்கள் என்பது போலத் தோன்றும் இந்த சுலோகம்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த உலகில் எதுவம் விதிப்படி நடப்பது இல்லை என்று நினைப்பவன் என்ன செய்வான் ?

முதலாவது, ஏதாவது விதி இருக்கிறதா என்று தேட மாட்டான். அது தான் முதலிலேயே  முடிவு செய்து விட்டானே ஒரு விதியும் , கோட்பாடும், இல்லை என்று.  அறிவியல் என்பது நிகழ்வுகளுக்கு பின்னே உள்ள காரணங்களை அறிவது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்திப்பவன் அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முயல்வான். ஏன் நோய் வருகிறது என்று சிந்திப்பவன் மருத்துவம்  என்ற இயலை கண்டு பிடித்து தான் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழ  வைப்பான். நோய் வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணமும் இல்லை  என்று நினைப்பவன், தான் நோயில் அழிவது மட்டும் அல்ல, உலகத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வான்.  மருந்து மட்டும் அல்ல , இன்பம், துன்பம், பசி, போர், போன்ற அனைத்துக்கும் காரணங்களை ஆராய்பவன்   அவற்றில் இருந்து விடு பட வழி காண்பான். மற்றவர்களையும் அந்த  துன்பத்தில் இருந்து விடுபட உதவி செய்வான்.

இரண்டாவது, இந்த உலகில் ஒரு விதியும் கிடையாது, என்று நினைப்பவன் ஒரு  விதிக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டான். அப்படிப்பட்டவன் சீக்கிரம் அழிவான்  என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டும் அல்ல, மற்றவர்களின் அழிவுக்கும் துணை போவான்.

"அற்ப அறிவு"

விதி, ஒரு கட்டுப்பாடு, ஒரு கோட்பாடு என்று ஒன்று இல்லை என்று நினைப்பவன் மேற்கொண்டு சிந்திப்பதை நிறுத்தி விடுகிறான். அவனது அறிவு வளர  வழி இல்லை. எல்லாமே ஒரு காரணமும் காரியமும் இல்லாமல் நடக்கிறது என்று நினைக்கிறான். ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் அல்லவா அது என்ன என்று காண முயல்வான். ஒன்றும் இல்லை என்று நினைப்பவனின்  அறிவு வளர ஒரு வழியும் இல்லை.

"தீவிர செயல்பாடுகளோடு "

இந்த உலகம் தோன்றியதும், செயல்படுவதும் ஒரு விபத்து (accident ) என்று நினைப்பவன் , வாழ்க்கை, அதன் போக்கு, அதன் தொடர்ச்சி என்றெல்லாம் நினைக்க மாட்டான். இருக்கிற கொஞ்ச காலத்துக்குள் அனைத்தையும் வாழ்ந்து தீர்த்துவிடுவோம் என்று நினைப்பான். அவசரம் அவசரமாக செயல் படுவான்.  எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துவிட வேண்டும் என்று நினைப்பான். செயலில் ஒரு தீவிரம் இருக்கும். அவனுடைய அனுபவிப்பிற்கு தடையாக இருப்பவற்றை எப்படியாவது விலக்கிவிட துடிப்பான. ஒரு வேகமும் பதட்டமும் இருக்கும் அவனது செயல்களில்.

"உலகையும் அழிவுப் பாதையில் இழுத்துச் செல்வான் "


எதிலும் பரந்த மனப்பான்மை கிடையாது. தீர்க்க சிந்தனை கிடையாது. விதி, சட்டம், கோட்பாடு என்று எதுவும் கிடையாது. எதிலும் ஒரு அவசரம், வேகம்.

அப்படிப்பட்டவன் தான் அழிவுப் பாதையில் செல்வது மட்டும் அல்ல, மற்றவர்களையும் குழப்பி உலகையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வான்.

எதையும் ஆராயுங்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கர்த்தா இல்லாமல்  காரியம் இல்லை. நிதானமாக யோசியுங்கள்.

அப்படி யோசிக்காமல் இருப்பவன் எப்படி செயல்படுவான் தெரியுமா ?

அடுத்த ஸ்லோகத்தில் பார்ப்போம்.






Sunday, January 29, 2017

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம்

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம் 


असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥



அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||

சீர் பிரித்தபின்

அசத்தியம் அப்ரதிஷ்டம் தெ ஜகத் ஆஹு அ(ந் ஈஸ்வரம் 
அ பரஸ்பர ஸம்பூதம் கிம் அந்யத் காம ஹைதுகம் 

பொருள்

அசத்தியம் = சத்யம் அல்லாதது

அப்ரதிஷ்டம் = பிரதிஷ்டம் என்றால் அடிப்படை, நிலை, கொண்டது என்று அர்த்தம். அப்ரதிஷ்டம் என்றால் நிலை இல்லாதது

தெ = அவர்கள்

ஜகத் =இந்த உலகம்

ஆஹு = சொல்கிறார்கள்

அ(ந் ஈஸ்வரம் = படைப்பவன் இல்லாதது

அ பரஸ்பர = பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று. அ பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று அல்லாத

ஸம்பூதம் = அனைத்து உலகும்

 கிம் = எப்படி

அந்யத் = அவர்கள் , அந்நியர்கள்

காம = காமத்தினால்,

ஹேது கம் = உருவான காரணம்.

இந்த உலகமும் உயிர்களும் எப்படி உருவாயின ? இவை எதனால் எப்படி மேற்கொண்டு செல்லுகின்றன ?

இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன.

ஒன்று இந்த உலகும், அதில் உள்ள உயிர்களும் இறைவனால் படைக்கப் பட்டவை. இறைவனே அனைத்தையும் செலுத்துகிறான்.

இது ஒரு கருத்து.

இன்னொரு கருத்து , அதை இந்த ஸ்லோகத்தில் கீதை சொல்கிறது.

சிலர் நினைக்கிறார்கள், இந்த உலகம் எந்த விதிக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று (அசத்தியம்). சத்யம் என்றால் நிலையானது. உண்மையானது. எந்த உண்மைக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று நினைக்கிறார்கள்.

நாம் இன்று அறிவியலில் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.

 இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற அனைத்து துறைகளிலும் மிக மிக முன்னேறி விட்டோம்.

இன்று , இந்த உலகம் சில விதிகளுக்கு கட்டுப் பட்டு இயங்குகிறது என்று நமக்குத் தெரியும். கோள்களும், நட்சத்திரங்களும்,  அணுக்களும், உடலில் உள்ள செல்களும் சில விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன என்று அறிகிறோம். ஆனால் , கீதை எழுதப் பட்ட காலத்தில், இவை எல்லாம் இல்லை.

அப்போது சில பேர் இந்த உலகம் எந்த விதிக்கும் உட்பட்டது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் வியாசர் சொல்கிறார் "அவர்கள் அப்படி சொல்கிறார்கள்" என்று. அதாவது, வியாஸருக்குத் தெரிந்திருக்கிறது இந்த உலகம் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று.

அடுத்ததாக, அவர்கள் இந்த உலகம் ஈஸ்வரன் இல்லாதவன் என்று கூறுகிறார்கள்.

எப்படி உலகம் விதி இல்லாமல் செயல் படுகிறதோ, அது ஒரு கர்த்தா இல்லாமலும் செயல் படுகிறது என்று சொல்கிறார்கள்.

நாம், இன்று, இந்த உலகம் எந்தெந்த விதிகளில் செயல் படுகிறது என்று கண்டு பிடித்து விட்டோம்.

ஆனால், இந்த உலகம் ஈஸ்வரன் அல்லது ஒரு சக்தியால் செயல் படுகிறது என்று அறியவில்லை - இன்னும்.

விதி ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள் - விதிகளை கண்டு பிடித்து விட்டோம்.

இறைவன் இல்லை என்று சொன்னார்கள் -இறைவனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. கண்டு பிடிக்காததால் இல்லை என்று  சொல்ல முடியுமா  ? ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடுகள்  கூடத்தான் கண்டு பிடிக்கப் படவில்லை.

 மூன்றாவது, அவர்கள் இந்த உலகம்  ஒன்றில் இருந்து ஒன்று  வந்தது என்று ஒப்பு கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் இந்த உலகம் காமத்தினால், ஆண் பெண் சேர்க்கையால் வந்தது என்று நினைக்கிறார்கள்.

ஆண் பெண் கலவி தேவை தான். ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ? காமம் தான் இன விருத்திக்கு அடிப்படை. ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ?

ஏதிலிருந்தோ படைக்கப் பட்டிருக்க வேண்டும். எதிலிருந்தோ என்றால் அந்த ஏதோ ஒன்று எதில் இருந்து வந்தது ? இப்படி கேட்டுக் கொண்டே போனால், தொடக்கத்தின் ஆரம்பப் புள்ளிக்கு போய் விடுவோம். அந்த புள்ளி எப்படி வந்தது என்ற கேள்வியில் நிற்போம்.

அந்த முதல் உயிருக்கு, அல்லது பொருளுக்கு ஆண் பெண் என்ற இரண்டு கிடையாது . அப்படி என்றால் காமம், அன்பு, ஈர்ப்பு என்பது அந்த புள்ளியில் கிடையாது.

இப்படி ஒரு விதி இல்லாத, ஒரு ஈஸ்வரன் இல்லாத, காமத்தை அடிப்படையாக கொண்ட உலகத்தை பற்றி எண்ணுவதால் என்ன நிகழும் ?

மேலும் பார்ப்போம்.