Sunday, June 30, 2019

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும்

பகவத் கீதை - 2.46 - குளமும் வெள்ளமும் 



यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥

யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||

யாவாந் = அதுவரை, அந்த அளவு

அர்த = பயன், உபயோகம், தேவை

 உத³பாநே = குளம், குட்டை, ஏரி

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது


தாவாந் = அந்த அளவு

ஸர்வேஷு  = அனைத்து

வேதே³ஷு = வேதங்களில்

ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு

விஜாநத: = அறிந்தவனுக்கு (வி ஞான த் )

எங்கும் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் போது, ஒரு குளத்திலோ, ஏரியிலோ உள்ள நீர் எவ்வாறோ அது போல தன்னை அறிந்த பிராமணனுக்கு வேதம். 

அருமையான உதாரணம், ஆழ்ந்த கருத்து.

நமக்கு தண்ணீர் வேண்டும் போது, கிணற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ இருந்து நாம் நீரை பெற்றுக் கொள்கிறோம். நம் வீட்டுக்கு பெரும் பாலும் அது வந்து விடுகிறது. எனவே நாம் அது எங்கிருந்து வருகிறது என்று பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை.

ஆனால், ஊரே வெள்ளக் காடாக ஆகிவிட்டால், அந்த குளம், ஏரி , குட்டை, கிணறு என்பதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா? எல்லாம் நீர் தானே. இதில் குளம், கிணறு என்ற பாகுபாடு எங்கே வந்தது?

அது போல,

நமக்கு குறிப்பிட்ட தேவை இருக்கும் போது வேதத்தை நாடுகிறோம். அதில் சொல்லியபடி செய்து நமக்கு வேண்டியதை அடைய முயற்சி செய்கிறோம்.

பணமோ, பதவியோ, சொர்கமோ, கைலாயமோ, வைகுண்டமோ ஏதோ ஒன்றை  அடைய வேண்டும் என்றால்,  அது பற்றி வேதம் என்ன சொல்லி இருக்கிறது என்று  அறிந்து அதன் படி நடக்க முயற்சி செய்வோம் .

சந்தியாவந்தனம் செய், யாகம் செய், கோவிலுக்குப் போ, தானம் செய்,  பூஜை செய்,  இந்த மந்திரங்களை இத்தனை முறை சொல்,  இன்னின்ன வழி முறைகளை  கடைபிடி என்று வேதம் சொல்லும் வழி முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

எது வரை என்றால் , ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும் வரை , அதற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

எப்போது அந்த தேவை நிற்கிறதோ, எப்போது ஒருவன் தன்னைத் தான் அறிகிறானோ, அப்போது வேதங்களின் துணை தேவை இல்லை. எங்கும் நீர் நிறைந்து கிடக்கும் போது , கிணற்றில் போய் யார் நீர் அள்ள முயல்வார்கள்?

உண்மையை கண்டு கொண்டவனுக்கு வேதம் தேவை இல்லை.

என்னடா இது, கீதை வேதத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? வேதம் தேவை இல்லை என்றெல்லாம் பேசுகிறதே, அதுவும் ஞானம் பெற்ற ப்ராமணனுக்கு வேதம் தேவை இல்லை என்றால் பின் யாருக்கு அது தேவைப் படும்? ஞானம் இல்லாத பிராமணனுக்கும் மற்றவர்களுக்குமா? சரியாகப் படவில்லையே...

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கீதை எழுதப்பட்ட காலத்துக்கு நாம் போக வேண்டும். அப்போது என்ன நடந்தது என்று தெரிந்தால் தான், இந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தம் விளங்கும்.

சரி அப்படி என்னதான் நிகழ்ந்தது, கீதை ஏன் இப்படி சொல்கிறது...

சிந்திப்போம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/246.html


Friday, June 28, 2019

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள

பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள 



त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥

த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||


த்ரை = மூன்று

குண்ய = குணங்களின்

விஷயா = விசேஷ தன்மை பற்றி

வேதா = வேதங்கள்

நிஸ் = விலகி, தாண்டி,  ஒட்டாமல்

த்ரை = மூன்று

குண்யோ = குணங்களில் இருந்து

ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா

நிர் = இல்லாமல்

த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை

நித்ய = எப்போதும்

ஸத்த்வ = சத்வ

ஸ்தோ  = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்

நிர் = இல்லமால்

யோக = ஆடம்பரங்களில்

க்ஷேம = சுகங்களில்

ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி


அர்ஜுனா, வேதங்கள் மூன்று குணங்களை பற்றி பேசுகின்றன. நீ அவற்றைக் கடந்து,  இருமைகள்  இல்லாமல், சத்வ குணத்தில் நிலை பெற்று, உலக இன்பங்களில் பற்றுக் கொள்ளாமல், ஆத்மாவோடு  ஒன்றி இருப்பாய். 

யப்பா....பெரிய லிஸ்ட்டா இருக்கே.

பெரிய பட்டியல் மட்டும் அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் முன்னுக்கு பின் முரணாகவும் இருக்கிற மாதிரி தெரியுதே.

கண்ணன் என்னதான் சொல்ல வர்றான்னு பாக்கலாம்.

மூன்று குணங்கள் - இது பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். சத்வ குணம், இராஜஸ குணம், தாமச குணம். மனிதர்கள் எல்லோரும் இந்த மூன்று குணங்களின்  கலவைதான். இந்த குணங்களில் சில தருணங்களில் சிலவை மேலோங்கி இருக்கும். அதற்காக மற்றவை இல்லாமல் போகாது. மற்றவை கொஞ்சம் ஒதுங்கி நிற்கும். அவ்வளவு தான்.

"முக்குணங்களை கடந்து" ...இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லும்படி சொல்லுகிறான். இந்த குணக் கலவையில் கிடந்து உழலாதே என்கிறான்.

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை

ஆண்டானைக் கொண்டன்றே. 

என்பார் மணிவாசகர். இந்த முக்குணங்களையும் தாண்டி, இந்த பிறவி என்ற பந்தத்தில் இருந்து என்னை காப்பாற்றிய சிவனை கொண்டாடுவேன் என்கிறார்.

சரி மூன்று குணங்களையும் கடந்தாச்சு என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம்   என்ன செய்ய வேண்டும் ?

"இருமைகளை கடந்து"  அது என்ன இருமை?

இன்பம், துன்பம்
சுகம், துக்கம்,
பாவம், புண்ணியம்,
நல்லது கெட்டது

இறைவன் என்பவன் இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், நல்லவன், பொல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இறைவனுக்குக் கிடையாது.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  

நடு நிலை என்பது இறைக் குணம். இந்த இருமைகளை கடந்தால், நீங்களும் இறை தன்மை அடையலாம்.

அத்வைதம் என்றால் என்ன ?

அதற்கு நேரடியாக அர்த்தம் சொல்ல முடியாது.

துவைதம் என்றால் இரண்டு.

அ + துவைதம் = அத்வைதம். இரண்டு இல்லாதது என்று அர்த்தம்.

தமிழில் இரண்டற கலப்பது என்று பொருள். இரண்டு இல்லாமல் கலந்து விடுவது.

ஏன், அதை ஒன்று என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? அது என்ன இரண்டு இல்லாதது?

இந்த இருமைகள் நம் கண்ணுக்குத் தெரியும்.

இதைத் தாண்டி காண்பதுவே காட்சி.

"ஒன்றாக காண்பதுவே காட்சி" என்றாள் ஒளவைப் பாட்டி.

சரி, முக்குணங்களை கடந்து, இருமைகளை தாண்டி வந்தாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

"சத்வ குணத்தில் நிலை பெற்று "

என்னடா இது வம்பா போச்சு. இப்பத்தான் முக்குணங்களை கடக்க வேண்டும் என்று சொன்னான்.  இப்ப என்னடா என்றால் அந்த முக்குணங்களில் ஒன்றான  சத்வ குணத்தில் நிலை பெற்று என்கிறான்.

இது முன்னுக்கு  பின் முரணாக இல்லையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி முரண் இல்லை?

முக்குணங்களின் சேர்க்கையில், எப்போதும் ஒரு குணம் தலை தூக்கி நிற்கும். மற்ற இரண்டு குணங்களும் கொஞ்சம் மங்கி இருக்கும்.

அந்த நிலையில், சத்வ குணத்தில் இருந்தால் கூட, அதில் கொஞ்சம் ராஜஸ, தாமச குணத்தின் சாயல், கலவை இருக்கும்.

மூன்றையும் கடந்த பின், தூய்மையான சத்வ குணத்தில் நிலை பெற்று இருக்க வேண்டும்  என்கிறான்.  அந்த நிலையில், மற்ற இரண்டு குணங்களின் கலவையோ , சாயலோ இருக்காது.

மிக உன்னத குணம்.

அந்த நிலையில் உலக பற்றுகள் விடுபட்டு, அனைத்தும் ஆத்மாவில் நிலை பெற்று இருக்கும்  என்கிறான் கண்ணன்.

நம் மீதுள்ள அதீத அன்பினால், இவற்றை எல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போய்  இருக்கிறார்கள்.

இவற்றின் பால் மனதை திருப்புவதோ அல்லது "...not practical..." என்று தூசி தட்டிவிட்டு போவதோ  நம் விருப்பம்.


https://bhagavatgita.blogspot.com/2019/06/245.html


Thursday, June 27, 2019

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி

பகவத் கீதை - 2.44 - நிச்சயம் அற்ற புத்தி 


भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

போ⁴கை = போகம், ஆடம்பரம்

ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி. ஈசன் = தலைவன். ஈஸ்வர = தலைமை பீடம். ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.

ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு

தயா = அதனால்

அபஹ்ருத  = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்

சேதஸாம் = மனம், இதயம், புத்தி

வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து

பு³த்³தி⁴ = புத்தி

ஸமாதௌ⁴  = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட

ந  = இல்லை

விதீ⁴யதே  = விதிக்கப்பட்டு இருக்கிறது


அதிகாரம், செல்வம் என்று இவற்றில் எப்போது மனம் போகத் தொடங்கியதோ, அப்போதில் இருந்து மனம் ஒரு நிலையில் நில்லாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டே , அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

பணம், பொருள், செல்வம், பதவி, அதிகாரம் என்று ஆசைப் படுவதில் என்ன தவறு  என்று கேட்பவர்களுக்கு வியாசர் பதில் தருகிறார்.

இந்த ஆசைகள் மனதில் வந்து விட்டால், மனம் சதா சர்வ காலமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்.   கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் வரும்,  கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வரும்,  வேறு யாராவது  நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், வந்தாலும், எவ்வளவு வரும் என்ற ஆசை வரும்.

இப்படியே போனால், மனம் நொந்து நைந்து போகும்.

மனம், சம நிலையை இழக்கும். குழப்பத்திலும், பயத்திலும் கிடந்து அல்லாடும்.

நிம்மதி போகும்.அமைதி கிடையாது.

கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் சிரியரோ?


இந்த பணத்துக்காகவும், பதவிக்காகவும் மன அமைதியை அழித்து, நிம்மதியில்லாமல்  தவிக்க வேண்டுமா ?


ஒரு வேளை உணவு என்றாலும், நிம்மதியாக சாப்பிட வேண்டும்.

கோடி கோடியாக சம்பாதித்து வைத்து விட்டு, படுக்கையில் படுத்தால் தூக்கம் வராவிட்டால் என்ன பலன் ?

இரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், மூட்டு வலி,  மூச்சு திணறல், ஆஸ்துமா, நிம்மதி இல்லாத வாழ்க்கை என்று இருப்பதில் அர்த்தம் இருக்கிறதா?

மனம் அமைதி பெற கீதை வழி காட்டுகிறது.

கீதை காட்டும் வழிதான் என்ன ?

https://bhagavatgita.blogspot.com/2019/06/244.html

Tuesday, June 25, 2019

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும்

பகவத் கீதை - 2.43 - கிரியைகளும் பலன்களும் 


கோவிலுக்குப் போனால், கோவிலின் வெளியில் சில பிச்சைக் காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள். "அம்மா, தாயே, ஐயா சாமி தர்மம் பண்ணுங்கள் " என்று பிச்சை கேட்பார்கள்.

"இந்த பிச்சைகாரங்க தொல்லை தாங்க முடியல...நிம்மதியா இருக்கலாம்னு கோவிலுக்கு வந்தால், இங்க இவங்க தொல்லை " என்றது முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போவார்கள்.

உள்ளே போய் , "கடவுளே, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, என் பிள்ளைக்கு நல்ல காலேஜ் ல இடம் கிடைக்கணும், பொண்ணுக்கு நல்ல இடத்தில வரன் அமையனும், இந்த வருஷமாவது பதவி உயர்வு கிடைக்கணும்..." என்று இறைவனிடம் பிச்சை எடுப்பார்கள்.

சீ சீ...நான் எல்லாம் அப்படி கிடையாது. கடவுள் கிட்ட அது வேணும் இது வேணும் என்று கேட்க மாட்டேன். இந்தப் பிறவி போதும், உன்னிடம் வந்து சேர வேண்டும், வைகுந்தமோ,  கைலாயமோ உன் திருவடிக் கீழ் இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

அது வேறு வகைப் பிச்சை.

பசிக்கு சோறு போடு என்றாலும் பிச்சைதான், சொகுசுக்கு bmw கார் வேண்டும் என்று கேட்டாலும் பிச்சைதான், வைகுண்டம், கைலாயம் கேட்டாலும் பிச்சைதான்.

எல்லாமே ஆசைதான். அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்பது.

திருமூலர் சொல்லுவார்,

ஆசை அறுமின், ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்று.

இறைவா நீ தான் வேண்டும் என்று கேட்டாலும், அதுவும் ஒரு ஆசை தான்.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு   வாழ்க்கையா? மண் புழு போன்ற ஒரு வாழ்க்கை தேவையா ?

வாழ்க்கை என்றால், ஆசை இருக்கும், சில நிறைவேறும், சில நிறைவேறாது.  அதற்காக  ஆசையே படாதே என்றால் என்ன அர்த்தம்.

ஆசையே படாதே என்றா கீதை சொல்கிறது?

மத்ததெல்லாம் விடுங்கள். ஆணுக்கு பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும்  ஆசை இல்லை என்றால், இந்த உலகம் அழிந்து விடாதா?

இல்லை. கீதை அப்படி சொல்லவில்லை.

மதம் என்பது, ஒரு ஆன்மீகப் பயணம். அந்த பயணத்தின் நோக்கம், நம்மை நாம் அறிவது.  அறியாமை  என்ற தூக்கத்தில் இருந்து விழிப்பது. எது உண்மை என்று அறிந்து கொள்வது.

காலையில் எழுந்தோம், காப்பி குடித்தோம், குளித்தோம், வேலைக்கு போனோம் அல்லது வீட்டு வேலை செய்தோம்,  மதியம் சாப்பாடு, இரவு தூக்கம் என்று  பொழுதை கழிப்பதா வாழ்க்கை?

ஏன் வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், வாழ்வின் குறிக்கோள் என்ன,  நமக்கு ஏன் துன்பம் வருகிறது, ஏன் மனிதர்கள் எப்போதும் வருத்தத்தில் இருக்கிறார்கள் , நான் யார் என்றெல்லாம் சிந்தித்து விடை காண்பதுதான்  மதத்தின் நோக்கம்.

அதை விட்டு விட்டு, பூஜை, யாகம் போன்ற புற வழிபாடுகள் செய்து, அதன் மூலம்  எனக்கு அது வேண்டும், இது வேண்டும் கேட்டுக் கொண்டிருப்பது அல்ல  மதத்தின் நோக்கம் என்கிறது கீதை.

இப்போது, ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

பாடல்



कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥

காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||


காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்

ஸ்வர்க³பரா  = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்

ஜந்ம = பிறப்புக்கும்

கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்

ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்

க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை

விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான

ப³ஹுலாம் = பல விதமான

போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)

³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று

ப்ரதி  = நோக்கத்துடன்


போகம் வேண்டும், ஸ்வர்கம் வேண்டும், என்று பலவிதமான கிரியைகளை செய்பவர்களை கீதை கண்டிக்கிறது. 

திருமணம் ஆகவில்லையா - இந்தக் கோவிலில், இந்த சாமிக்கு இந்த கிழமையில் இன்ன பூஜை செய்தால், திருமணம் ஆகும்.

வேலை வேண்டுமா, கணவன் மனைவி உறவு சீர் பட வேண்டுமா? சொத்துத் தகராறு தீர வேண்டுமா,  பதவி உயர்வு வேண்டுமா ? வியாபாரத்தில் இலாபம் வேண்டுமா, அயல் நாட்டில் வேலை வேண்டுமா ...அததுக்கு ஒரு பூஜை, ஒரு கிரியை  என்று வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்....கீதை பிறந்த காலம் தொட்டு இது நடந்து கொண்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது அது அல்ல. தன்னைத்தான் அறிவதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

கீதை அதற்குத்தான் வழி சொல்லுகிறது.

நீங்கள், என்னென்ன வேண்டும் என்று என்னென்ன பூஜை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சிந்திப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/06/243.html

Tuesday, April 16, 2019

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு 



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

யம் = அது

இமம் = இந்த

புஷ்பிதாம் = மலர்ந்தது

வாசம் = உரை

ப்ரவத³ந் = சொல்கிறார்கள்

அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்

வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்

 பார்த² = பார்த்தா

ந = இல்லை

அந்ய = மற்றவை

அஸ்தி = இருக்கிறது

இதி  = எனவே

வாதி³ந: = சொல்பவர்கள்  ||2-42||


சிலர் வேதங்களின் வெளி உரைகளில் மகிழ்வார்கள். பூக்கள் போன்ற அலங்கார சொற்களில் அவர்கள் மயங்கி விடுகிறார்கள். தாங்கள் கொண்ட கொள்கையைத் தவிர மற்றவை எல்லாம் பிழை என்கிறார்கள். 

வேதம் பல அங்கங்களை கொண்டது. அதில் ஒரு அங்கம், யாகம், ஓமம் போன்றவை. இவற்றை செய்தால், இவை கிடைக்கும் என்று அவை சொல்கின்றன.

பிள்ளை இல்லையா, இந்த யாகம் செய்.

மழை வரவில்லையா, அதற்கு ஒரு யாகம்.

எதிரிகளை வெல்ல வேண்டுமா, உலகம் பூராவும் ஒரு குடைக் கீழ் வர வேண்டுமா - அஸ்வமேத யாகம்

என்று மளிகை கடை பட்டியல் போல, இதுக்கு இது என்று பெரிய பற்றிய பட்டியல் தருகிறது.

கீதை, வேதத்தின் அந்தப் பாகத்தை கண்டிக்கிறது. அதுவும் வன்மையாக கண்டிக்கிறது. "அலங்கார வார்த்தைகள்" என்று சாடுகிறது.

கர்மத்தை செய், பலனை எதிர் பார்க்காதே என்று கீதை ஒரு புறம் சொல்கிறது.

உனக்கு இந்த பலன் வேண்டுமா, இந்த கர்மத்தைச் செய் என்று வேதம் சொல்கிறது.

நாம் எதை கடைபிடிப்பது? நம்மவர்களை கேட்டால் "நாங்கள் வேதம் மற்றும் கீதையை கடை பிடிக்கிறோம்" என்பார்கள். பெரும்பாலும் இரண்டையுமே படிக்காதவர்களாக இருக்கும்.

அது மட்டும் அல்ல, "வேதத்தில் உள்ளது தான் சரி. மற்றவை எல்லாம் தவறு" என்று  சொல்வதையும் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு..தப்பாவா சொல்லி இருக்கப் போகிறார்கள்..பேசாமல் மண்டைய ஆட்டிவிட்டுப் போவோம்...என்றுதான் நினைக்கிறார்கள்.

கீதை, அப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அப்படி ஏற்றுக் கொள்பவர்களை "அறிவற்றவர்கள் " என்று வன்மையாக கண்டிக்கிறது.

சொல்வது கீதை.


https://bhagavatgita.blogspot.com/2019/04/242_16.html

Tuesday, April 9, 2019

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி 



व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||


வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக = ஒன்று, ஒருமித்த

இஹ = இங்கே, இந்த கர்ம யோகத்திலே

குருநந்த³ந = குரு நந்தன

ப³ஹுஸா²கா = பல கிளைகளை உடையது

ஹி = அதனால்

அநந்த = முடிவற்ற

ஸ்²ச = மேலும்

பு³த்³த⁴ய = அறிவு, புத்தி

அ வ்யவஸாயிநாம் = உறுதி இல்லாத

உறுதி உடையவர்களின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதோரின் புத்தி பல கிளைகளை உடையது. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 


கர்ம யோகத்தை சொல்லி வருகிறான் கண்ணன்.

மனம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஓடும் மனதை எப்படி நிலை நிறுத்துவது? மனச் சலனம் நிற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அது தெரிகிறது, ஆனால் மனதை எப்படி நிலைப் படுத்துவது?

வேலை - கர்மம் - ஒரு வழி.

செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றும். வேறு எங்கும் அலையாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மனதை  ஒருமுகப் பழக்கப் படுத்தி விடலாம்.

சும்மா உட்கார்ந்து கொண்டு, மனதை ஒருமுகப் படுத்துகிறேன் என்றால் அது அடங்காது.

அந்த வேலை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

சமையல் செய்வது, வீடு பெருக்குவது, வண்டி ஓட்டுவது, பூஜை செய்வது, படிப்பது, பாடுவது, உடற் பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

வேலை என்பது ஒரு சாக்கு. அதை வைத்துக் கொண்டு மனதை நிலைப் படுத்த பழக்கி விடலாம்.

கிளை கிளையாக பிரிந்து செல்லும் மனதை ஒருமுகப் படுத்த கர்மா அல்லது வேலை ஒரு வழி.

"மனதில் உறுதி வேண்டும்" என்றான் பாரதி.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்" என்பார் வள்ளலார்.


என்னை பொறுத்தவரை கர்ம யோகம் என்பது வேலை செய்வதைப் பற்றி அல்ல. கர்மத்தின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதுதான்.

மனதை ஒருநிலைப் படுத்தவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். வேலை ஒரு வழி.


சிற்றின்பத்தின் உச்சியில் மனமும் உடலும் ஒன்று பட்டுப் போகிறது. ஆனால் அது ஒரு சில வினாடிகளே நிலைக்கிறது. அதுதான் அதில் சிக்கல்.  அதை நீட்டிக்க முடிவதில்லை.

நீட்டிக்க முடிந்தால், அதுதான் பேரின்பம்.

முயன்று பாருங்கள். எந்த வேலை செய்தாலும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்,  மனதை அதில் இலயிக்க விடுங்கள்.

மெடிடேஷன் என்று சொல்லுகிறார்களே, அதுதான் அது.

தியானம்.  Meditation எல்லாம் இந்த இரகசியம் தான்.

கர்ம யோகத்தை இப்படியும் சிந்திக்கலாம். கர்மத்தின் மூலம் மனதை நிலை பெறச் செய்வது.

உங்களுக்கு இது சரி என்று படுகிறதா ?

https://bhagavatgita.blogspot.com/2019/04/242.html



Monday, February 11, 2019

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற

பகவத் கீதை - 2.41 - நிச்சயமாக வெற்றி பெற 


व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||



வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக  = ஒன்று

இஹ = இங்கே

குருநந்த³ந  = குரு குல தோன்றலே

ப³ஹுஸா²கா² = பல கிளைகளை

ஹி = அதனால்

அநந்த = அநேக

சா = மேலும்

பு³த்³த⁴யோ = புத்தி

அவ்யவஸாயிநாம் = மன உறுதி இல்லாதவர்கள்


குரு குல தோன்றலே, உறுதியான புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவரின் புத்தி பல கிளைகளை கொண்டது 

கர்ம யோகம் பற்றி கூற ஆரம்பிக்கிறான் கண்ணன்.

முதல் பந்திலேயே சிக்ஸர் .

நாம் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். தொழிலில், விளையாட்டில், படிப்பில், பாட்டில், வேலையில் என்று எதிலும் வெற்றி பெற்றவர்களை பார்க்கிறோம். அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் உள்ள துறையில் நாமும் இறங்குகிறோம்.

நம்மால் அந்த அளவு வெற்றி பெற முடிவதில்லை. ஏன் ?

மன உறுதி கிடையாது.

படிக்க உட்காரும் போதே, இதை படிக்கவா, அதை படிக்கவா, இப்போது படிக்கவா, அப்புறம் படிக்கவா, இதை படித்து என்ன ஆகப் போகிறது, போன வருடம் இதில் கேள்வி கேட்டு விட்டார்கள், இந்த வருடம் இதில் வராது என்று ஆயிரம் சிந்தனை. இதற்கிடையில் , வாட்ஸாப்பில் பத்து செய்தி வரும். அவற்றிற்கு பதில் போட வேண்டும். நடுவில் கிரிக்கெட் ஸ்கோர் தெரிய வேண்டும். வீடியோ கேம் பாதியில் நிற்கும்....இப்படி மனம் ஆயிரம் வழிகளில் செல்லும். எப்படி படிப்பு மண்டையில் ஏறும்.

படிப்பு ஒரு உதாரணம்.

வேலையில் இப்படித்தான். ஒரு வேலையை எடுத்தால், நடுவில் நாலு போன் கால், பத்து மெயில், ஒரு வேலை பார்க்கும் போதே இன்னொன்றைப் பற்றிய எண்ணம்.

ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்கும் வரை வேறு எதையும் பற்றி சிந்திக்கக் கூடாது. அதை முடித்து விட்டு அடுத்த காரியம் பார்க்க போக வேண்டும்.

பத்து வேலையை ஒன்றாக செய்ய நினைக்கும் போது ஒரு பதட்டம் வரும். மனம் சிதறும். உடம்பு பதறும். செய்யும் வேலை கெட்டுப் போகும்.

நிறுத்தி நிதானமாக, எடுத்த வேலையை சரியாக செய்து முடித்தால்...மனதுக்கு ஒரு திருப்தி இருக்கும். நாம் செய்து முடித்தோம் என்ற சந்தோஷம் இருக்கும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வரும். அந்த தன்னம்பிக்கை மேலும் செயல் படத் தூண்டும். மேலும் வெற்றிகளை கொண்டு தரும்.

வெற்றியின் முதல் படி, மன உறுதி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின்

என்பார் வள்ளுவ பேராசான்.

திண்ணியர் என்றால் திண்மை உள்ளவர். மனதில் உறுதி உள்ளவர்.

"மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் "  என்பான் பாரதி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

என்பதும் வள்ளுவம்.

உலைவின்றி, மன சோர்வின்றி...மன உறுதியுடன் செயல்பட்டால் விதியையும் மாற்றலாம்  என்கிறார் வள்ளுவர்.

கோவிலுக்குப் போனால் வீட்டு ஞாபகம். வீட்டில் இருந்தால் அலுவலக ஞாபகம். அலுவலகத்தில் வீட்டு ஞாபகம். மனம் எதிலும் இலயிக்காமல் சிதறிக் கொண்டே இருக்கிறது.

ஓடும் மீன் ஓட , உறு மீன் வரும் அளவும் வாடி நிற்குமாம் கொக்கு

என்பது போல செய்யும் வேலையில் , கர்மத்தில் மன உறுதி வேண்டும்.

சிந்தித்து முடிவு எடுங்கள்.

முடிவு எடுத்த பின், உறுதியாக நடை போடுங்கள். ஒன்றை முடித்த பின் அடுத்ததை எடுங்கள்.

வெற்றி நிச்சயம்.

இது கீதை காட்டும் வழி.

https://bhagavatgita.blogspot.com/2019/02/241.html