Thursday, April 17, 2014

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று  


शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥९- २८॥

ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||

ஸு²பா⁴ = மங்களமானவை

அஸு²ப = அமங்களமானது

பலைய = பலன்களை

எவம் = எனவே

மோக்ஷ்யஸே = விடுதலை பெற்று

கர்ம = வினைகளின் 

ப³ந்த⁴நை: | = தளைகளில் இருந்து

ஸம்ந்யாஸ = துறந்து

யோக³ = யோக

யுக்தாத்மா = மனதை நிலை நிறுத்தி  

விமுக்தோ = முக்தி அடைந்து

மாம் = என்னை 

உபைஷ்யஸி = நீ அடைவாய்

மங்களம் அமங்களமாகிய பலன்களைத் தரும் கர்மத் தளைகளில் இருந்து விடுபட்டு. துறவு என்ற யோகத்தில் ஈடுபட்டு, இவற்றில் இருந்து விடுதலை அடைந்து  என்னை அடைவாய்.

குரங்கை எப்படி பிடிப்பார்கள் தெரியுமா ?

ஒரு இளநீரை எடுத்து, அதன் மேலே சிறு துளை இடுவார்கள். அந்தத் துளையில்  குரங்கின் கை மட்டும் தான் போக முடியும். அந்த இளநீரில் உள்ள நீரை வெளியே ஊற்றி விட்டு, குரங்குக் பிடித்த தின் பண்டங்களை அதனுள் போட்டு வைப்பார்கள்.

குரங்கு அந்தத் தின் பண்டத்தை எடுக்க உள்ளே கை விடும். கை நிறைய எடுத்துக் கொள்ளும். மூடிய கை வெளியே வராது. எடுத்த தின் பண்டத்தை விட்டு விட்டால் கை வெளியே வந்து விடும். ஆனால் குரங்கு விடாது. உள்ளே மாட்டிக் கொண்ட கையோடு அங்கும் இங்கும் அலையும்.  சாப்பிட முடியாமல் மெலிந்து போகும். இழுத்து இழுத்து கை எல்லாம் புண்ணாகப் போகும். பின் அது  சோர்ந்து விழுந்தவுடன் அதை பிடித்துக் கொள்வார்கள்.

அந்த குரங்கில் இருந்து வந்தவர்கள் தானே நாம்.

பிடித்ததை விட மாட்டோம்.

பிறந்தோம், படித்தோம், வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், சொத்து சேர்ப்பது என்று அலைகிறோம் . இது தான் வாழ்க்கையா ? இதைத் தாண்டி வாழ்வில்  எதுவும் இருக்கிறதா ?

அதை பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லை.

ஒன்றில் இருந்து அடுத்தது என்று குரங்கு போலத் தாவிக்  கொண்டிருக்கிறோம்.

பிறந்தோம். கொஞ்ச நாள் கழித்து பள்ளிக் கூடம்  அனுப்பினார்கள். ஒரு வகுப்பு முடிந்து மறு வகுப்பு என்று சென்றோம். படிப்பு முடிந்தவுடன் வேலை. வேலை கிடைத்தவுடன் திருமணம். திருமணம் முடிந்தவுடன் பிள்ளை குட்டிகள். பின் அவற்றின் படிப்பு. அவற்றின் வேலை என்று வாழ்க்கை ஒரு தொடர் வண்டி போல் போய்க் கொண்டே இருக்கிறது.

பின் வயதாகி, மரணம் நெருங்கும்போது என்ன நடந்தது என்று யோசிக்கும் போது முழு வாழ்வும் இவ்வளவுதானா என்ற கேள்வி முன்  நிற்கும்.

இந்த வினைத் தொடர்களை எப்படி அறுப்பது ? இதில் இருந்து விடு பட்டால் தான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும். இந்த தொடர் சங்கிலியில் இருந்து எப்படி விடுபடுவது ?

முந்தைய ஸ்லோகத்தில் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் என்று செய் என்று கூறப்  பட்டது.

அப்படி செய்தால் என்ன ஆகும் என்பது இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

அப்படி, செயலில் பற்று இல்லாமல் அர்ப்பணம் என்ற நினைவோடு செய்யும் போது  செயலின் நல்லதோ கெட்டதோ , விரும்பியதோ , விரும்பாததோ உங்களைச் சாராது. வினைகளின் பலன்கள் உங்களைத் தீண்டாது.

இது வேண்டும், இது வேண்டாம் என்று இல்லாமால் எல்லா செயலையும் ஒரு அர்பணிப்பு என்ற நினைவோடு செய்யும் போது அந்த வினைகளின் பலன்கள் உங்களைத் தொடாது.


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

அப்படி என்றால் துன்பமும் (இடும்பை) இல்லை.

செயல் - அவற்றின் விளைவுகள் - விளைவுகள் தரும் சுக துக்கங்கள் - அதில் இருந்து விளையும் ஆசைகள் - பயங்கள் - கோபங்கள் - ஏமாற்றங்கள் என்று இவற்றில் இருந்து மனம் விடு பட வேண்டும். அப்போதுதான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும்.

இல்லை என்றால் இதிலேயே கிடந்து மனமும் நம் வாழ்க்கையும் உழன்று கொண்டே இருக்கும்.

அதற்காக செயலே செய்யாமல் இருக்க முடியுமா ?

படிக்காமல் இருக்க முடியுமா ? வேலை செய்யாமல் இருக்க முடியுமா ?

முடியாது. செய்யவும் வேண்டும் ஆனால் அவை நம்மை பற்றிக் கொள்ளவும் கூடாது.

அதற்குத்தான் முந்தைய சுலோகம் சொன்னது - செய், ஆனால் உனக்கு என்று செய்யாதே, செயல்களின் பலன்களை அர்பணித்து விடு. யாருக்கு அர்பணிக்க வேண்டும். நான் செய்யும் வேலையின் பலன் மற்றவனுக்கு கிடைப்பதை விட எனக்கு கிடைப்பது சிறந்தது அல்லவா ? மற்றவர்களுக்கு அர்ப்பணம் செய் என்றால் செய்ய  மாட்டோம். எனவே கிருஷ்ணன் செய்கிறான் "எனக்கு அர்ப்பணம் செய் " என்று. அவன் நம் செயல்களின் பலன்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான்.  இது வந்துதான் ஆக வேண்டும் என்று இல்லை அவனுக்கு.

ஒரு சிறந்த நன்மைக்காக அர்ப்பணம் செய் என்பதை சொல்லாமல் சொன்னது அது.

அப்படி செயல்களை செய்து முடித்த பின், அது என்ன ஆனாலும் நமக்குக் கவலை இல்லை. மனம் செயலைத் தாண்டி சிந்திக்கத் தொடங்கும். செயல் , வினை, கர்மா என்பதே வாழ்கை அல்ல. அது வாழ்வின் ஒரு கூறு அவ்வளவுதான். அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

அது என்ன என்று மனம் சிந்திக்கக் தொடங்கும்.

ஒரு புதிய பாதை  பிறக்கும்.

புதிய சிந்தனை. புதிய உற்சாகம் பிறக்கும்.

வாழ்கை, முதன் முதலாக ஒரு இயந்திரத்தனத்தில் இருந்து விடுபடும்.

வாழ்வின் அர்த்தம் விளங்கத் தொடங்கும், விரியத் தொடங்கும்.

அப்படி செய்தால் மோக்ஷம் கிடைக்கும், முக்தி கிடைக்கும். என்னை அடைவாய் என்கிறது சுலோகம்.

இறை நிலை அடைவதின் படிகள்

- அர்பணிப்பு உணர்வோடு கர்மம் செய்வது
- கர்மங்களின் பலன்களில் பற்றற்று இருப்பது
- கர்மங்களின் தலைகளில் இருந்து விடுபடுவது
- மோக்ஷம்
- முக்தி
- இறை நிலை

இதில் மோக்ஷம் முக்தி என்றால் என்ன, இரண்டுக்கும் உள்ளை ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி பல கருத்துகள் சொல்லப்  படுகிறது.

வீடு பேறு என்று மொழி மாற்றம் செய்கிறார்கள்.

அதைத் தாண்டிப் போங்கள் .  இறை நிலை அடைவது , அது தான் இலக்கு. 













கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2 



यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச்

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவம் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

அர்ப்பணம் என்று செய் !


கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது அது எந்த கடவுளாக  வேண்டுமானாலும் இருக்கட்டும் - இராமனாக இருக்கட்டும், வேறு யாராக  வேண்டுமானாலும் இருக்கட்டும்....யாருக்கு என்பது அல்ல முக்கியம்...என்ன என்பது முக்கியம்...

நம் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒன்று செய்து கொண்டுதான் இருக்கிறோம்....பிறந்ததில்  இருந்து இறக்கும் வரை ஏதோ காரியங்கள் செய்து கொண்டுதான்  இருக்கிறோம்.

நாம் செய்யும் காரியங்கள் நம்மை பாதிக்கின்றன, நம்மை பண்படுத்துகின்றன. அப்படி என்றால்  அவற்றை சரியாகச் செய்தால் நம்மிடம் சிறந்த பாதிப்பு இருக்கும்,   தவறாகச் செய்தால் தவறான பாதிப்பு இருக்கும்.

எப்படி செய்கிறோம் என்பது மட்டும் அல்ல, என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம்.

நல்லதைச் செய்ய வேண்டும், நல்ல படியாகச் செய்ய வேண்டும்....இதை எப்படி சொல்லுவது.

திருட்டையும், கொலையையும் செய்து விட்டு அதுவும் கிருஷ்ணார்ப்பணம் என்று கூட சொல்லலாம்.

வரும் கால காலத்திற்கும் சொல்லி வைக்க வேண்டும் ....

எதைச் செய்தாலும் ...அர்ப்பணம் என்று செய்....

இதுதான் அந்த மகா வாக்கியம்.

செய்யப் படும் செயல் அர்பணமாக வேண்டும் என்றால் செய்பவனும், யாருக்காக   செய்யப் படுகிறதோ அவனும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லவா ?

முதலில் நீங்கள் மிக மிக உயர்ந்தர்வர்கள் என்று உணருங்கள்.

தன்னை மதிக்காதவன்  உலகில் யாரையும் மதிக்க மாட்டான்.

"உண்ணும் உணவை எனக்கு அர்ப்பணம் என்று செய் "

நீங்கள் உண்ணும் உணவு நைவேத்தியம், அர்ப்பணம் என்ற எண்ணம் வரும் போது  இந்த உடலும், இந்த உடலை செலுத்து சக்தியும் எவ்வளவு உயர்ந்தது  என்ற  எண்ணம் வரும்.

"தானம் தரும் போதும் எனக்கு அர்ப்பணம் என்று செய்"

தன்னை உயர்வாக நினைக்கும் போது மற்றவர்களை தாழ்வாக நினைக்கக் கூடாது.  அவர்களையும் உங்களுக்கு நிகராக நினைக்க வேண்டும். எனவே, தானம் தரும் போதும்   "எனக்கு அர்ப்பணம் என்று செய் ".

பிச்சை போட்டால் கூட அதிலும் ஒரு பக்தி

உணவு உண்டால், அதிலும் ஒரு பக்தி.

அர்ப்பணம் என்று கூறும் போது சுய நலம் இல்லாதது என்ற அர்த்தம் வரும்.

உண்பதும் அர்ப்பணம் என்றால், நாம் இருப்பதும், உண்பதும் நம் நன்மைக்காக  அல்ல, மற்றவர்களுக்கு உதவி செய்ய.

தானம் தரும்போதும், நான் தருகிறேன், நான் பணக்காரன் என்ற எண்ணம் இல்லாமால்,  அதையும் அதன் பலனையும் அர்ப்பணம் என்று நினைத்துச் செய்ய வேண்டும்.



தவம் செய்தாலும், அதன் பலன் நமக்கு வேண்டும் என்று நினைத்து செய்யக் கூடாது...

தவமும் அர்ப்பணம், தவத்தின் பலனும் அர்ப்பணம்.

சுயநலம் இல்லாமல் செய்யுங்கள், சுகமாக இருக்கும்.


Monday, April 14, 2014

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1 


यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல் 
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச் 

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவமாகச் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள்.

சுற்றி இருக்கும் அனைத்திலும் நீங்கள் கொண்டு வந்தது எது, நீங்கள் செய்தது எது ?

ஒன்றும் இல்லை. நீங்கள் இந்த உலகில் வருவதற்கு முன்னே அவைகள் இருந்தன.  நீங்கள் போன பின்னும் அவை இருக்கும்.

நீங்கள் வந்து போகும் ஒரு நாடோடி. ஒரு விருந்தினர். அவ்வளவுதான்.

இதில் நீங்கள் யாருக்கு எதைச் செய்து விட முடியும் ?

நீங்கள் பொருள்களையும், மனிதர்களையும் இட மாற்றம் செய்து கொண்டு இருகிறீர்கள். அவ்வளவுதான்.

இந்த உலகம் உங்களுக்குளும் வெளியேயும் ஒரு மிகப் பெரிய சக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் இந்த மாபெரும் சக்தியின் ஒரு கூறு அவ்வளவுதான்.

இதை விட்டு நீங்கள் வெளியேற முடியாது.

உலகத்தில் இருந்து எடுத்து உலகத்திற்கே தருகிறீர்கள். இது தான் உங்கள்  வேலை.

இதில் - நான் தான் பெரிய மனிதன், நான் செய்கிறேன், என்னால் தான் முடியும் என்கிற  எண்ணம் எங்கிருந்து வந்தது ?

எதைச் செய்தாலும் அந்த சக்தி, அந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு என்ற நினைவோடு  செய்யுங்கள்.

அந்த நினைவு வரும்போது, "நான் என்ன செய்து விட்டேன்" என்ற அடக்கம் வரும்.

அது வரும்போது, கர்மாவின் பலனில் பற்று  இருக்காது.

ஒரு இரயில் வண்டியில் பயணம் செய்கிறீர்கள். போய் சேரும் இடம் வந்தவுடன்  இறங்கிக்  கொள்கிறீர்கள்.அந்த வண்டியை ஓட்டிய ஓட்டுனர், "உங்களை  இங்கே பத்திரமாக கொண்டு வந்து விட்டேனே...ஒரு நன்றி தெரிவிக்கக் கூடாதா  " என்று உங்களிடம் கேட்பது இல்லை.

ஏன் ?

இரயில் வண்டி, அந்த  நிறுவனம், பயணச் சீட்டு, அவர் சம்பளம் என்று எல்லாம் ஒரு   பெரிய இயக்கமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் ஒரு  அங்கம் அவ்வளவுதான்.

அது போல நீங்கள் என்ன செய்தாலும், இந்த மாபெரும் சக்தியில் நீங்களும் ஒரு  அங்கம் என்று  நினைத்தால், செய்யும் செயல்களில் ஒரு அர்பணிப்பு தானாகவே  வரும்.




Sunday, April 13, 2014

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம்

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம் 


पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
 ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி  = அளிக்கிறார்களோ
தத் = அதை 
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்

இலை , பூ, கனி, நீர் இவற்றை அன்புடனும் (பக்தியுடனும்) , தெளிந்த மனத்துடனும் அளித்தால் நான் ஏற்றுக் கொள்வேன் 

இறைவனிடம்தான் எல்லாம் இருக்கிறதே ? இந்த பூவும், நீரும், பழமும், இலையும்   வந்து அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

மேலும், இந்த இலையும், பூவும், நீரும், நாம் செய்தது இல்லை. அவை இயற்கையிலேயே இருக்கிறது. அதை எடுத்து இறைவனுக்கு தருவதில் நமக்கு என்ன  பெருமை ?

இவற்றை அன்புடனும், நல்ல மனதுடனும் கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன்  என்கிறான்.

சரி, அதனால் நமக்கு என்ன ?

இதை வாசித்து விட்டு, கீதை பூஜை செய்யச் சொல்கிறது. இலையும், பூவும், பழமும்  நீரும் விட்டு பூஜை செய்யச் சொல்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.


சற்று ஆழமாக யோசிப்போம்.

துன்பங்களுக்கு, கவலைகளுக்கு, மன சஞ்சலங்களுக்கு காரணமாய் இருப்பது  ஆசை.

அத்தனைக்கும் ஆசைப் படுகிறோம்.

பின் அத்தனை கவலைகளும் வரமால் என்ன செய்யும் ?

சரி, அதற்காக ஆசையை விட்டு விட முடியுமா ? ஒன்றிலும் ஆசை இல்லை விட்டால்  வாழ்கை சுவைக்குமா ? மரக் கட்டையை, கல்லைப் போல் ஆகி விட மாட்டோமா ?

பின் என்ன தான் செய்வது ?

பொருள் சேர்பதில் ஒரு சுகம்.

பொருளை  கொடுப்பதில் இன்னொரு சுகம்.

கொடுத்துப் பாருங்கள் - சுகம்  தெரியும்.

அன்பு வேண்டும், காதல் வேண்டும், என்னை நேசிப்பவர்கள் யாரும் இல்லையா  என்று அலைவதை விடுங்கள்.

நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள், அன்பை அள்ளி வழங்குங்கள் , மற்றவர்களை காதலியுங்கள்.

எப்போதும் வேண்டும் வேண்டும் என்று அலைவதை விட்டு விட்டு கொடுக்கத் தொடங்குங்கள்.

சின்ன குழந்தைகளைப் பார்த்தால் தெரியும் - அது எல்லாம் தனக்கு வேண்டும் என்று  நினைக்கும். கையில் அகப்பட்டதை எடுத்து வைத்துக்  கொள்ளும்.கேட்டால்  தராது. வலிந்து வாங்கினால் அழும்.

வேண்டும் வேண்டும் என்று அலைவது சிறு குழந்தைத்தனம்.

வளருங்கள். கொடுங்கள்.

கொடுக்க கொடுக்க பொருள்கள் மேல் ஆசை குறையும்.  மற்றவர்கள் அனுபவிப்பதை  பார்த்து மனம் மகிழும்.

"என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனின் பெற்றதன்றோ" என்று இராமன்  சொன்னது  மாதிரி.

பொருளுக்காக சிலர் அலைகிறார்கள். அன்புக்காக சிலர் அலைகிறார்கள்.

அலைச்சல் அடிப்படை.

சரி, கொடுக்கலாம்.

கொடுப்பதிலும், ஒரு ஆணவம் வந்து  விடும்.

நான் கொடுக்கிறேன், நான் பணக்காரன், என்னிடம் இருக்கிறது என்ற ஆணவம்  இல்லாமல் கொடுக்க வேண்டும் ?

அது எப்படி கொடுக்க முடியும் ?

எல்லாம் இருப்பவனிடம் போய் இலையும், நீரும், பழமும் கொடுக்கும் போது  அந்த  ஆணவம் நீங்கும்.

நான் கொண்டு வந்தது, செய்தது என்று எதுவும் இல்லை. எல்லாம் இயற்கையில் உள்ளது . நான் பொருகளை இடம் மாற்றம் செய்கிறேன், அவ்வளவுதான் என்ற எண்ணம் வரும்.


வங்கியில் ஒரு காசாளார்  இருக்கிறார். பல பேர் அவரிடம் காசோலையை கொடுத்து  பணம் பெற்றுக் கொள்கிறார்கள். "நான் இவ்வளவு பேருக்கு பணம்   கொடுத்தேன்  " என்று அவர் நினைப்பாரா ?

யாரோ ஒருவரின் கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் தருகிறார்.

பட்டுவாடா செய்வது மட்டும் தான் அவர் வேலையும்.

இந்த உலகில் நீங்களும் பட்டுவாடா செய்கிறீர்கள் . அவ்வளவுதான்.

அவ்வளவு பெரிய இறைவனிடம் இலையை கொண்டு போய் கொடுக்கும் போது  நான் தருகிறேன் என்ற எண்ணம் வராது, என்னுடையது என்று ஒன்றும் இல்லை   என்ற எண்ணம் வரும்.

முதலில் அங்கிருந்து ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து மற்றவர்களுக்கும்  கொடுக்கத் தொடங்குவீர்கள்.

கொடுக்கும் போது பற்று விடும்.

பற்று விட்டால் இருப்பதெல்லாம் சுகம் தான்.

பற்று விட்டால் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்காது.

இலையில், நீரில், பூவில், பழத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.

அன்போடு கொடுங்கள்.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்

கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

என்னது இல்லை என்று நினைத்துக் கொடுங்கள்

அவன் தந்ததை அவனுக்கே திருப்பி தருகிறேன் என்று எண்ணிக் கொடுங்கள்.

வாழ்வில் ஒரு புது இன்பம் வரும்.



Saturday, April 12, 2014

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும்

கீதை 9.25 - நினைப்பது நிறைவேறும் 


यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥९- २५॥

யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||

யாந்தி = அடைகிறார்கள்

தேவ வவ்ரதா = தேவதைகளை வணங்குபவர்கள்

தே³வாந் = அந்த தேவதைகளை

பித்ரூந் = பித்ருக்களை

யாந்தி = அடைகிறார்கள்

பித்ருவ்ரதா: = பித்ருக்களை வணங்குபவர்கள்

பூ⁴தாநி = பூதங்களை

யாந்தி = அடைகிறார்கள்

பூ⁴தேஜ்யா = பூதங்களை வணங்குபவர்கள்

யாந்தி = அடைகிறார்கள்

மத் = என்னை

யாஜிநோ = வணங்குபவர்கள்

அபி = ஆனால் 

மாம்  = என்னை

தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள், தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருக்களை நோக்கி விரதம் இருப்பவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் 
பூதங்களை நோக்கி விரதம் இருப்பவர்கள்  பூதங்களை அடைகிறார்கள் 
என்னைத் நோக்கி விரதம் இருப்பவர்கள்  என்னை அடைகிறார்கள் 


விரதம் என்றால் விடா முயற்சி, தவம், நோன்பு என்று கூறலாம்.

தவம் என்றால் என்ன என்று சொல்ல வந்த வள்ளுவர் தவம் என்பது தன் துன்பங்களை பொறுத்தல், பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருத்தல் என்றார்.

தன் உயிருக்கு துன்பம் வராமல் தடுத்தல் என்று சொல்ல வில்லை. துன்பத்தை பொறுத்தல் என்றார்.

ஏன் ?

துன்பம் எப்போது வரும் ? முயற்சி செய்தால் துன்பம் வரும். உடல் உழைக்க வேண்டும், அசதியும் சோர்வும் வரும். சோம்பிக் கிடந்தால் துன்பம் வராது. அது தவம் இல்லை. உழைப்பு தவம். செயல் தவம்.


தேவதைகளை நோக்கி விரதம் இருப்பவர்கள் என்றால் இன்பங்களை வேண்டி முயற்சி செய்பவர்கள் அவற்றை அடைவார்கள். ஒவ்வொரு தேவதையும் ஏதோ ஒரு நல்லது செய்வதற்கு தானே இருக்கிறது. அவற்றை நோக்கி விரதம் இருப்பவர்கள் அந்த நன்மையை பெறுவார்கள்.

சிலருக்கு பொருகள் மேல் ஆசை. வீடு, மனை, நகை, பணம், சொத்து என்று பலவித ஆசைகள். இவற்றை அடைய முயற்சி செய்பவர்கள் அதை அடைவார்கள்.

பித்ருக்களை என்று சொல்லும் போது பழமை, சாஸ்திரம், சம்பிரதாயம் இவற்றை கடை பிடிக்க முயற்சி செய்வோர் அதை அடைவார்கள்.

என்னை நோக்கி தவம் செய்பவர்கள் என்னை அடைவார்கள்.

சுருக்கமாக சொல்வது என்றால் எது வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்கிறார்களோ அவற்றை அடைவார்கள்.

சரி, அதனால் என்ன ?

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருக்கக் காரணம் என்ன ?

உழைப்பதற்கு பெரும்பாலோனோர் தயார்தான். உழைக்கவும் செய்கிறார்கள்.

ஆனாலும் பெரிய வெற்றிகளை பெறுவது இல்லை.

ஏன் ?

நம்மால் இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லை.

மாதம் ஐந்து ஆயிரம் சம்பாதிப்பவன் மிஞ்சி மிஞ்சி போனால் பத்து ஆயிரம் பற்றி சிந்திப்பான், ஒரு இலட்சம் சம்பளம் என்று சிந்திக்க மாட்டான்.

கீதை சொல்கிறது, நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ அதை நீங்கள் அடைய முடியும்.

இன்பம், செல்வம், ஞானம் ஏன் இறை நிலையைக் கூட அடைய முடியும்.

இருக்கின்ற வாழ் நாளோ கொஞ்ச நாள்தான்.

இந்த நாளில் எது வேண்டி தவம் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

எது கேட்டாலும் கிடைக்கும் என்றால் ஏன் சின்னவற்றை கேட்க்க வேண்டும்.

பெரிதாக கேட்போமே.

பெரிதாக சிந்திப்போமே.

என்னை அடைவார்கள் என்று கண்ணன் சொல்லுவது ஏதோ அவர் கிட்ட போய் நிற்பது அல்ல.

என் நிலையை அடைவார்கள்.

அது என்ன நிலை - தன்னைத் தான் அறிந்த  நிலை, பற்றற்ற நிலை, அன்பும், கருணையும், நிறைந்த நிலை . அந்த நிலையை அடைய முடியும்.

இதை சற்று மாத்தி யோசிப்போம் ?

நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் ?

இதைத்தான் நீங்கள் விரும்பி தவம் செய்தீர்கள். எனவே அதை  அடைந்தீர்கள்.

எதை நோக்கி விரதம் செய்தாலும் அது கிடைக்கும் என்றால், எது கிடைத்ததோ அது விரதத்தின் பலன்.

நீங்கள் புத்திசாலியாக, ஆரோக்கியமானவராக, குண்டாக, ஒல்லியாக, முட்டாளாக, நல்லவராக, கெட்டவராக எப்படி இருந்தாலும் அது பிறவியில் வருவது இல்லை. நீங்கள் விரதம் இருந்து, தவம் செய்து பெற்றது.

வேறு யாரையும் குறை சொல்லாதீர்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் ஆக்கிக் கொள்ளலாம்.

அடிப்படையான புலன் இன்பங்கள், பொருள்கள், ஞானம், இறை நிலை என்று எது வேண்டுமோ அதைப் பெறலாம்.

பிறவி அல்ல.

முன் ஜன்மம் அல்ல.

உங்கள் செயல். தவம். விரதம் காரணம்.

சில பேர் விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த விரதம், இந்த விரதம், அந்த நோன்பு, இந்த நோன்பு என்று.

சாப்பிடாமல் இருந்தால் வேண்டியது கிடைக்குமா ?

விரதம் என்றால் என்ன ?

அடுத்த ஸ்லோகத்தில் சிந்திப்போம்.







Wednesday, April 9, 2014

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 2

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 2



अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||


அஹம் =  நான்

ஹி = நிச்சயமாக

ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்


நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .

இன்பம் என்பது வெளியில் இருக்கிறதா அல்லது நமக்குள் இருக்கிறதா ? 

நல்ல உணவை ருசிக்கும் போது கண்ணை மூடிக் கொண்டு "அடடா என்ன ஒரு  சுவை என்கிறோம் "

நல்ல இசையை கேட்கும் போது நம்மை அறியாமலேயே நம் கண்கள் மூடிக் கொள்கின்றன....

இன்பத்தின் அனுபவம் உள்ளே நிகழ்கிறது...

ஒரு காலகட்டத்தில் இன்பம் என்று நினைத்தது இன்னொரு சமயத்தில்  இன்பமாக  இருப்பது இல்லை.

சிறு வயதில் கோலியும் , பம்பரமும், பட்டமும் இன்பம்  தந்தன.வயதான  காலத்தில்  அதில் இன்பம் இல்லை.

இன்று இன்பம் தருபவை நாளையும் தரும் என்பது நிச்சயம் இல்லை.

மாறும்.

அது போலத் தான் துன்பமும்.

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. நமக்குள், நம்மால் நிகழ்கின்றன.

இராஜ்ஜியம் தந்த போது பெரிய இன்பம் இல்லை - இராமனுக்கு

கானகம் போ என்று சொன்ன போதும் பெரிய துன்பம் இல்லை.

ஏன் ?

எப்படி முடிந்தது ?

இன்பம் இராஜியத்தில் இல்லை

துன்பம் கானகத்தில் இல்லை.

இன்பமும் துன்பமும் தனக்குள்  இருக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். எனவே இன்பத்திலும் துன்பத்திலும் சலனம் இல்லை. 

"அனைத்து வேள்விகளின் பலனை நானே பெறுகிறேன். இதை அறியாதவன் வீழ்வான் "

இன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த அலைச்சல்

துன்பம் நமக்குள் என்றால் ஏன் இந்த கவலை

இதை அறியும் போது மனம் இலேசாகிப் போகிறது.

வாழ்க்கை எளிதாகிப் போகிறது.

யாரோடும் கோபம் இல்லை. போராடும் வேலை இல்லை.

சிந்திப்போம்.


Tuesday, April 8, 2014

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1 


अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||


அஹம் =  நான்

ஹி = நிச்சயமாக

ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும் 
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்


நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .

கண்ணன் சொல்கிறான் "நானே வேள்விகளின் பலன்களை பெற்றுக் கொள்பவன்  (அவிர் பாகத்தை உண்பவன்)"  என்று.

இது என்ன புதுச் சிக்கலாக இருக்கிறது.

வேள்வி செய்வது நாம். அதன் பலன் நமக்குத்தானே வர  வேண்டும். யாரை நோக்கி  வேள்வி செய்கிறோமோ அவர்களுக்கு போகும் என்றால் பின் நமக்கு என்ன  கிடைக்கும் ?

நல்ல கேள்வி.

சற்று வார்த்தைகளை மாத்திப் போடுவோம்.

நானே அனைத்து  வேள்விகளிலும்  பலனைப் பெற்றுக் கொள்கிறேன் என்று  வாசிப்போம். "அனைத்து" என்ற வார்த்தையை வேள்விக்கு முன்னால் போடுவோம்.

என்ன அர்த்தம் ?

யாரை நோக்கி வேள்வி செய்தாலும், யார் எந்த வேள்வியை, யாரை நோக்கி, எந்த தெய்வத்தை  நோக்கி, எதற்க்காக செய்தாலும், நானே அதன் பலன்களை பெறுகிறேன்.

அதாவது அனைத்து வேள்விகளும் என்னைக் குறித்தே என்று சொல்கிறான்.

அனைத்து வேள்விகளின் பலன்களும் எனக்கே வந்து சேருகிறது என்கிறான் கண்ணன்.

எந்த கடவுளை வணங்கினாலும் , பூஜை செய்தாலும், வேள்வி செய்தாலும், அது   என்னைக் குறித்தே என்கிறான் கண்ணன்.

இது சரியான அர்த்தமா ?

அது அப்படியே ஒரு  இருக்கட்டும்.

நமக்கு உடல் நிலை சரி இல்லை. ஒரு மருத்துவரிடம் போகிறோம். அவர் சில  சிகிச்சை முறைகளை  சொல்கிறார்.நமக்கு சந்தேகம், அது சரிதானா என்று.  இன்னொரு மருத்துவரிடம் சென்று இரண்டாவது யோசனை கேட்க்கிறோம். எத்தனை  மருத்தவரிடம் கேட்டாலும்,  சிகிச்சையின் பலன் நமக்குத்தானே. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு  தேவதை.ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வேள்வி. எப்படி நடந்தாலும், பலன் "எனக்குத் தான்".


என்னனவோ இன்பங்களை அனுபவிக்கிறோம். நல்ல உணவு, இனிய இசை, உடை, உறவுகள், நறுமணம் என்று அத்தனை இன்பங்களையும் விரட்டி விரட்டி  அனுபவிக்கிறோம். இன்பங்கள் பல வகை, அதை அனுபவிக்கும் விதங்களும்  பலவகை....இருந்தாலும் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது நாம் தானே ?

ஓடி ஆடி பணம் சம்பாதிக்கிறோம், அதை முதலீடு செய்கிறோம். அதன் பலன்களை   பெறுகிறோம்.எங்கெங்கோ வேலை என்று அலைகிறோம் . யார் யாரிடமோ சென்று  நிற்கிறோம்.  போராடுகிறோம். பலன்களைப் பெறுகிறோம். கடைசியில் இத்தனை போராட்டங்களைச்  (வேள்விகளும்) செய்தாலும், அதன் பலனை அனுபவிப்பது "நாம்" தானே.

இன்பம் நூறு வழியில் வரலாம்.

அதை அடைய பல வழிகள் இருக்காலாம்.

அதற்காக பல போராட்டங்கள்  நடக்கலாம்.

கடைசியில் அனைத்தையும் அனுபவிப்பது யார் ? - நாம்.

இது புரியாவிட்டால் நாம் அலைந்து கொண்டே  இருப்போம்.

இதைத்தான் கண்ணன் சொல்கிறான் , இதை மனிதர்கள் அறிய மாட்டார்கள், அறியாமல்  வீழ்வார்கள் என்று.

நான் என்பதை அறிந்து கொண்டால் இந்த வீழ்ச்சி  இருக்காது.

எது எனக்கு இன்பம் தருகிறது ?

ஏன் அந்த இன்பம் எனக்கு வேண்டும் ?

இதற்கு முன்னால் இந்த மாதிரி இன்பத்தை நான் அனுபவித்தது இல்லையா ?

அந்த இன்பத்தை முன் அடைந்த பின் என்ன ஆயிற்று ?

ஏன் மீண்டும் அதன் பின் அலைகிறேன் ?

இந்த இன்பத்தின் கூடவே வரும் துன்பன்கள் என்னென்ன ?

இவற்றை அறியாத மனிதன் வீழ்வான்.

இன்னும் இதில் அறிய வேண்டியது இருக்கிறது...

மேலும் சிந்திப்போம்....