Monday, March 24, 2014

கீதை - 9.13 - மகாத்மாக்களின் இயல்பு

கீதை - 9.13 - மகாத்மாக்களின் இயல்பு 


महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥९- १३॥

மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||

மஹாத்மாந = மகாத்மாக்கள்
து = ஆனால்
மாம் = என்னிடம்
பார்த = பார்த்தா
தை³வீம் = தெய்வீக
ப்ரக்ருதிம் = இயற்கை 
அஸ்²ரிதா:  = புகல் அடைந்து
ப⁴ஜந்த்தி = சேவை செய்து
அநந்யமநஸோ = மனதில் இருந்து விலகாமல்
ஜ்ஞாத்வா  = அறிந்து
பூ⁴தா = தோற்றம்
அதிம் = ஆதியில்
அவ்யயம் = தீராத


மகாத்மாக்கள் தெய்வீக இயல்பை கொண்டு , பூதங்களின் தோற்றமாகிய என்னை , மனம் வேறு எதிலும் செல்லாமல் வழி படுகிறார்கள் 

முந்தைய ஸ்லோகத்தில்  ஆசை, செயல் மற்றும் சிந்தனை எப்படி மனிதனை அசுரனாக  மாற்றுகிறது என்று பார்த்தோம்.

சரி, அசுரர்கள் அப்படி செய்வார்கள் என்றால், மகாத்மாக்கள் என்ன செய்வார்கள்  ?

மகாத்மாக்கள்,முதலில் அசுரத் தன்மையை விட்டு தெய்வீக தன்மையை அடைகிறார்கள்.

அது மட்டும் அல்ல, தெய்வீகத் தன்மையை இயற்கையாக அடைகிறார்கள். செயற்கையாகவோ, கட்டாயமாகவோ அல்ல....இயல்பாக தெய்வீகத் தன்மையை அடைகிறார்கள்.

அது என்ன தெய்வீக தன்மை ? அது எப்படி இருக்கும் ?

முதலில் அவர்கள் சேவையில் ஈடு பட்டு இருப்பார்கள். சேவை என்பது என்ன ? பலனை எதிர் பார்க்காமல் செய்யும் வேலை சேவை.  அவர்கள் சேவை செய்வார்கள்.

இரண்டாவது, மனதை வேறு எதிலும் செலுத்தாமல் இருப்பார்கள். மனம் ஒருமுகப் பட்டு  இருக்கும். சலனம் அடையாது. காற்றில் அசையாத தீபம் போல.

மூன்றாவது, உயிர்களின் தோற்றமான என்னை வழி படுவார்கள்.  அப்படி என்றால் என்ன ?

உயிர்களின் தோற்றத்தை வழி படுத்தல் என்றால் எல்லா உயிர்களையும் வழிபடுதல் என்று அர்த்தம்.

தோற்றத்தை வழி பட்டால் அதில் இருந்து தோன்றிய அனைத்தையும் வழிபடுவதாகத்  தானே  அர்த்தம்.

குடும்பத் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினால் அது அந்த வீட்டில்  உள்ள அனைவருக்கும் அனுப்பியதாகத்தானே அர்த்தம்.

உயிர்களின் தோற்றமும், உயிர்களும் இரண்டு வேறு வேறு அல்ல.

தங்கமும், தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் , சங்கிலி, வளையல் இவை எல்லாம்  வேறு அல்ல. வடிவங்கள் மாறுகின்றன. அடிப்படை ஒன்றுதான்.

என்ன சொல்ல வருகிறார்.....

மகாத்மாக்கள் எல்லா உயிர்களையும் வணங்குவார்கள். உயிர்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று பாகு பாடு பார்க்க மாட்டார்கள்.

எல்லா உயிர்களும் ஒன்று தான், அவர்களுக்கு.

சேவை - சலனம் அடையாத மனம் - எல்லா உயிர்களையும் வணங்குவது.....இவை மகாத்மாக்களின்  இயல்பு.

Sunday, March 23, 2014

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை

கீதை - 9.12 - ஆசை, செயல், சிந்தனை 


मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥९- १२॥

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம்  மற்றும் குழப்பம்
 ஸ்²ரிதா:  = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில்  இருக்கிறார்கள்.

தவறான ஆசைகள், அந்த தவறான ஆசைகளை அடைய தவறான வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற தவறான அறிவு....இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன்  உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.


மூன்று விஷயங்களை பார்க்க வேண்டும்.

ஆசை - கர்மம் - அறிவு.


முதலில், மனதில் ஆசை விளைகிறது.

ஆசை வந்த பின், அது காரியம் செய்யத்  தூண்டுகிறது.

காரியங்களை செய்யும் போது அறிவின் துணை தேவைப் படுகிறது.

இப்படி நம் அறிவும், செயலும் ஆசைகளால் உந்தப் படுகின்றன.

ஆசை தவறான வழியில் போனால், அறிவும் செயலும் அந்த வழியிலேயே போகும்.

அப்படி போகும் போது மனிதன் அசுரனாகிறான்.

எனக்கு வேண்டியதை நான் எப்படியும் அடைவேன் என்று முனைகிறான்.

ஆசை எழும் போது அது சரியா தவறா என்று அறிய வேண்டும்.

 நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், சிந்தனையும் எதை நோக்கி என்று அறிய வேண்டும்.

எதை அடைய நாம் எத்தனிக்கிறோம் ? நம் சிந்தனை சதா சர்வகாலமும் எதை நினைத்துக்  கொண்டிருக்கிறது ? என்று நாம் அறிய வேண்டும்.

ஆசையின் பின்னால் போகும் அறிவும் சிந்தனையும் ஒரு முரட்டுத் தனத்தை உருவாக்கும்.

இங்கே ஆசை என்று சொல்லுவது வீணான ஆசை, தேவையற்ற ஆசை என்பதைக்  குறிக்கும்.

எது தேவையானது, எது தேவையற்றது என்று எப்படி அறிந்து கொள்வது ?

ஆசைகள் உங்களை எங்கே வழி நடத்துகிறது என்று பாருங்கள். அதில் இருந்து  தெரியும் அது எந்த மாதிரி ஆசை என்று.

ஆசைகளை மாற்றுங்கள்.

 செயலும் சிந்தனையும் மாறும்.

உங்கள் செயலும் சிந்தனையும் நல் வழியில் இருக்க வேண்டும் என்றால் உங்கள்  ஆசைகள்  நல்லவைகளாக இருக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள். ....

உங்கள் ஆசைகள் எவை என்று ....

உங்கள் செயலும், உங்கள் சிந்தனையும் புரியும்.

இந்த மூன்றும் தெளிவாகும் போது , நீங்கள் யார் என்று அறியத் தொடங்குவீர்கள்.

Saturday, March 22, 2014

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன்

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன் 


अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥९- ११॥

அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||

அவஜாநந்தி = அறியாமல்
மாம்  = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம் 
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்

மனித சரீரத்தில் இருப்பதால் மூடர்கள் என்னை உதாசீனம் செய்கிறார்கள். அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் 



நாம் என்பது இந்த சரீரம் மட்டும் தானா ?  உடல் தான் நாம் என்றால் உடல் தான் மற்றவர்களும் உடல் மட்டும் தான்.

சரி, நான் என்பது உடல் மட்டும் தான் என்று வைத்துக் கொள்வோம்....எந்த உடல் நான் ?

சிறு வயதில் ஒரு அடி உயரம் இருந்த உடலா, பின் வளர்ந்து இளைஞனாக இருந்த உடலா, பின் வயதான பின் , முடி நரைத்து, பல் விழுந்த வயோதிக உடலா ?

எது நான் ?

எது நீங்கள் ?

உடலைத் தாண்டி "நான்" "நீங்கள்" என்பதில் ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

நம் வாழ்க்கை உடல் சார்ந்ததாகவே அமைந்து இருக்கிறது.

எதிரில் இருக்கும் தாத்தா, குரு, உறவினர்கள் இவர்களை எப்படி கொல்வேன் என்று தயங்குகிறான்  அர்ஜுனன்.

இந்த விருப்பு, வெறுப்பு, பாசம், நேசம், அன்பு, கோபம் எல்லாம் உடல் சார்ததாகவே  இருக்கிறது.

நம் கடமையை செய்யத் தடையாக இருப்பது நாம் உடலோடு நின்று போவதால்.

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் உதாசீனம் செய்கிறார்கள்"

இப்படியும் யோசிக்கலாம்....

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் போற்றுகிறார்கள் அல்லது வணங்குகிறார்கள் "

மனித சரீரம் என்பது முடிவான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

"அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்"

இத முந்தைய ஸ்லோகத்தில் விரிவாக பார்த்தோம்.

பொருள்கள் (நகர்வன, நகராமல் இருப்பன) உருவாவதும், இயங்குவதும் இயற்கை மற்றும்  என் மேற்பார்வையில் என்று பார்த்தோம்.

ஒரு மகள் பிறக்கிறாள் என்றால் கூடவே தாயும் பிறக்கிறாள். மகள் இல்லாமல் தாய்  ஏது ? எப்படி ஒரு தாய் மகளை உருவாக்கினாளோ அதே போல் ஒரு மகளும் தாயை    உருவாகக் காரணமாய் இருக்கிறாள். 

இந்த உலகம் உருவாக இரண்டு காரணங்கள் வேண்டும்.

ஒன்று இயற்கை. 

மற்றொன்று தனி மனித அனுபவம். 

இந்த இரண்டும் சேர்ந்த கலவை தான் உலகம். 

இதில் ஒன்று இல்லாவிட்டாலும் இந்த உலகம் இல்லை. 

இதில், இயற்கை மட்டும் தான் (மனித சரீரம்) உலகம் என்று மூடர்கள் நினைக்கிறார்கள். 

பொருள்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. 

பொருள் முதல் வாதம் என்று சொல்லுவார்கள். 

Dialectical Materialism ...பொருள்தான் எல்லாம், பொருள்களைத் தாண்டி ஒன்றும் இல்லை  என்று மூடர்கள் கூறுவார்கள் என்கிறார்.

ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், இன்றைய நவீன அறிவியல் பார்பவரைப்  பொறுத்து உலகம் மாறுகிறது என்கிறது. 

Relativity என்பதன் அர்த்தம் அதுதான்.  உண்மை என்று எதுவும் தனியாக இல்லை. 

பார்ப்பவரை பொறுத்து உலகம் மாறுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

வியாசர் quantum physics ஐ கண்டு பிடித்தார் என்று சொல்லவில்லை. 

Subjective Objectivism பற்றிய சிந்தனைகள் இருந்திருக்கிறது. 

சிந்திப்போம் 




Friday, March 21, 2014

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம்

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம் 


मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥९- १०॥

மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||

மயா= என்
அ த்⁴யக்ஷேண = மேற்பார்வையில் 
ப்ரக்ருதி:  = இயற்கையில்
ஸூயதே = வெளிப் படுகிறது
ஸ = இரண்டும்
சராசரம் = நகர்வதும், நகராததும் 
ஹேதுநா = காரணத்தால்
அநேந = இந்த
 கௌந்தேய  = குந்தி புத்திரனே
ஜக³த்³ = உலகம்
விபரிவர்ததே = வேலை செய்கிறது


என் மேற்பார்வையில் அசைவனவும் அசையாததும் இயற்கையில் உண்டாகிறது. இதனால் இந்த உலகம் இயங்குகிறது. 

நிதானமாக ஆராய வேண்டிய சுலோகம்.

உலகம் அனைத்தையும் ஒன்றாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லுவது ? அசைவன, மற்றும் அசையாதன என்று கூறும் போது உலகம் அனைத்தும் அதில் வந்து விடுகிறது.

இந்த அசையும் மற்றும் அசையாத பொருள்கள் என்ன ஆகின்றன ?

இவை இரண்டு காரியங்களை செய்கின்றன.

ஒன்று , இவை உருவாகின்றன.

இரண்டாவது, அவை இயங்குகின்றன.

இப்படி அசைவன மற்றும் அசையாதவை ,  உருவாகி,இயங்கக் காரணம்  என்ன?

ஒன்று இயற்கை, இன்னொன்று என் மேற்பார்வை.

ஒன்று பொருள்களின் இயற்கை, இன்னொன்று நாம் அதை அறிந்து கொள்ளும் விதம் இவை இரண்டும் சேர்ந்து இந்த உலகை உருவாகவும் இயங்கவும் காரணமாக இருக்கின்றன.

Subjective and Objective இவை இரண்டும் கலந்ததுதான் உலகம்.

பொருள்களும், பொருள்களோடு சேர்ந்த நம் அனுபவமும் சேர்ந்ததுதான் உலகம்.

நம் அனுபவம் இல்லாமல் பொருள்களும் உயிர்களும் முழுமை பெறுவது இல்லை.

சற்று குழப்பமாக இருக்கலாம்.

சில  உதாரணம் மூலம் பார்ப்போம்.....

ஒரு இருக்கிறாள்....

அவளை ஒருவர்  மகள்  .என்கிறார்

மற்றொருவர் மனைவி என்கிறார்

மற்றொருவர் தாய் என்கிறார்

இன்னும் ஒருவர் பாட்டி என்கிறார்.....

அவள் யார் ?

பெண் என்பது அவள் இயற்கை.

மகள், மனைவி, தாய், பாட்டி என்பது எல்லாம் பார்பவர்களின் அனுபவம்.

இப்படி இந்த உலகம் இயற்கை மற்றும் தனி மனித அனுபவக் கலவையால் உருவாகிறது.

சரி, அப்படியே இருக்கட்டும்....அதனால் என்ன ?

நமக்கு விருப்பும், வெறுப்பும் ஏன் வருகிறது ?

ஏன் என்றால், மற்ற உயிர்களும், பொருள்களும் நமக்கு வெளியே நாம் இன்றி தனியாக இருப்பதாய் நினைக்கிறோம். அதனால் அவற்றின் மேல் நமக்கு விருப்பும், வெறுப்பும் வருகிறது.

வெளியில் உள்ள அனைத்தும் நம்மால் உருவானவை என்று அறிய வேண்டும்.

அப்படி அறியும் போது அவை உருவாகவும், இயங்கவும் நாமும் ஒரு காரணம் என்று உணரத் தலைப் படுவோம்.

இந்த உலகம் படைக்கப் பட்டு இயங்க நீங்களும் ஒரு காரணம்.

நீங்கள் இன்றி இந்த உலகம் இல்லை.

இந்த உலகை படைத்தவர் நீங்கள்.

இந்த உலகின் எஜமானர் நீங்கள். இங்கு உள்ளவகைளுக்கு நீங்கள் அடிமையாகலாமா ?

எதற்கு பயப்படுகிறீர்கள் ?

ஏன் இந்த ஏக்கம் ?

இவை அனைத்தும் உங்களுடையது.

அமைதியாக ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.

வேற்றுமைகள் மறையும். ஆசைகளும், ஏக்கங்களும் கரையும்.

அமைதியும் ஆனந்தமும் பெருகும்.
















Thursday, March 20, 2014

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள்

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள் 


न च मां तानि कर्माणि निबध्नन्ति धनंजय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥९- ९॥

ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||


ந = இல்லை
ச = மேலும்
மாம் = என்னை
தாநி = அவை எல்லாம்
கர்மாணி = கர்மங்கள்
நி பத்நந்தி = கட்டுப் படுத்துவது இல்லை
த⁴நஞ்ஜய = தனஞ்சய
உதா³ஸீநவத் = பற்றற்று இருப்பதன் மூலம் (உதாசீனப் படுத்துவதன் மூலம்)
அஸீநம் = அமைந்திருக்கிறது 
அஸக்தம் =  கவரப் படாமல் , பற்று இல்லாமால்
தேஷு = அந்த
கர்மஸு = கர்மங்களின்


என்னை வினைகள் கட்டுப் படுத்துவது இல்லை ஏன் என்றால் நான் அவைகளின் மேல் பற்றற்று நடு நிலையோடு இருக்கிறேன். 

வினைகள் எப்போது நம்மை கட்டுப் படுத்துகின்றன ?

நாம் அவற்றின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளும்போது அவை நம்மை கட்டுப்படுத்துகின்றன.

நமக்கு வேண்டும் என்றால் விருப்பு  ஏற்படுகிறது.

வேண்டாம் பிடிக்காது என்றால் வெறுப்பு வருகிறது.

வினைகள் நம்மை ஒன்றும் செய்வது இல்லை. அவற்றின் மேல் உள்ள விருப்பும் வெறுப்பும்  நம்மை பாதிக்கின்றன.

எப்படி ?

எப்போது ஒரு காரியத்தின் மேல் விருப்பு வருகிறது ? அதன் மூலம் நமக்கு ஏதோ ஒரு பலன் கிடைக்கும் என்றால்  அதன் மேல் விருப்பு வருகிறது.

பலன் மேல் நாட்டம் போகும் போது , பலன் அதிகம் கிடைக்க வேண்டுமே என்ற  ஆசை வருகிறது, கிடைக்காதோ என்ற பயம் வருகிறது, மற்றவன் எடுத்துக் கொள்வானோ  என்று பொறாமை வருகிறது....

வெறுப்பு எப்போது வருகிறது ?

அந்த செயலினால் நமக்கு துன்பம் வரும்  என்றால்,ஆபத்து வரும் என்றால், மற்றவர்களுக்கு (நமக்கு வேண்டாதவர்களுக்கு)  பலன் கிடைக்கும் என்றால் வெறுப்பு வருகிறது.

இப்படி விருப்பும், வெறுப்பும் வரும் போது செயலில் நாட்டம்  போகிறது. செயல் செய்வதில்  முனைப்பு போகிறது.

இலாப நட்ட கணக்குகள்  நம்மை அலைக்கழிக்கின்றன. சோர்ந்து போகிறோம்.

விருப்பு வெறுப்பு ஏன் வருகிறது என்றால் , செயலைத் தாண்டி  அது தரும் பலன்கள் மேல் மனம் செல்லும்போது விருப்பு வெறுப்பு வருகிறது.

வேலை முக்கியம் இல்லை - சம்பளம்  முக்கியம்.

சம்பளம் முக்கியம் என்று ஆன பின், அது  எவ்வளவு, எப்போது சம்பள உயர்வு வரும், எப்போது ஊக்கத் தொகை வரும், இந்த மேனேஜர் என்ன செய்யப் போகிறானோ என்று ஆயிரம் கவலைகள் வரும். வேலையில் கவனம் சிதறிப் போகும்.

செயலின் மேல் நாட்டமோ வெறுப்போ இருந்தால், அந்த செயல்கள் நம்மை கட்டுப்   படுத்தும்.அவைகளுக்கு நாம் அடிமைகளாவோம்.

பயமின்றி, ஏக்கம் இன்றி, ஆசை இன்றி, அலைச்சல் இன்றி மிக மிக சுகமாக,   ஒரு  பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , விருப்பு வெறுப்பு இன்றி .காரியம் செய்யுங்கள்.

 "என்னை கட்டுப் படுத்தாது " என்று கண்ணன் சொன்னால் , அது உங்களுக்கும்  பொருந்தும்.

பற்றற்று காரியம்  செய்து பாருங்கள்...காற்றில் மிதக்கும் இறகு போல மனம் லேசாகிப் போகும்.  


Wednesday, March 19, 2014

கீதை - 9.8 - சலனமும் பிம்பமும்

கீதை - 9.8 - சலனமும் பிம்பமும் 


प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥९- ८॥

ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||

ப்ரக்ருதிம்= இயற்கையில்
ஸ்வாம் = என்னில் இருந்து
அவஷ்டப்⁴ய = ஏற்றுக் கொண்டு , உறுதி கொண்டு
விஸ்ருஜாமி = நான் படைக்கிறேன்
புந: புந: |  = மீண்டும் மீண்டும்
பூ⁴தக்³ராமம் = உயிர் தொகுதிகளை
இமம் = இவை
க்ருத்ஸ்ம் = மொத்தமாக
அமவஸ²ம் = தன்னிச்சியாக
ப்ரக்ருதே = இயற்கை சக்தியின்
வஸா²த் = வசத்தால் , கட்டுப் பாட்டால்


என் சக்தியில் நிலை கொண்டு, இந்த உயிர் தொகுதிகள் முழுவதையும், தன்னிச்சையாக, இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன். 


சற்று குழப்பமான ஒரு சுலோகம்.

இங்கே யார் படைக்கிறார்கள் ? கண்ணனா ? இயற்கையா ?

தன்னிச்சியாக, இயற்கையின் சக்தியின்பால் பட்டு என்றும் வருகிறது.

நான் படைக்கிறேன் என்றும் வருகிறது.

எது சரி ?

இரண்டும் சரிதான்.

எப்படி ?

இதற்கு விளக்கம் பாரதியார் தருகிறார்.

குள்ளச் சாமி என்ற கவிதையில்.


பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “அறிந்தேன் என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

இந்தப் பாட்டிற்கும், கீதை ச்லோகதிற்கும் என்ன சம்பந்தம் ?

சூரியன் இருக்கிறான்.

அதன் பிம்பம் தெளிந்த கிணற்று நீரில் விழுகிறது.

குழம்பிய சாக்கடை நீரிலும் விழுகிறது.

சூரியன் என்ற மிகப் பெரிய சக்தியை நீரில் காண  முடியாது.முடியாது. கண் கூசும். சுட்டெரிக்கும்.

அதன் தன்மையை நீரில் தெரியும் அதன் பிம்பத்தில் பார்க்கலாம்.

அது போல இங்குள்ள அனைத்தும் ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு.

பிம்பம் தெரிவது நீரின் இயற்கையால் .

அந்த பிம்பம் தெரியக் காரணமாய் இருப்பது சூரியன்.

நீங்களும்,  நானும்,  இவரும் , அவரும் எல்லோரும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு. அதை நாம் பிரதி பலித்துக் கொண்டு இருக்கிறோம்.

சூரியன்  ஒன்றுதான். பிம்பங்கள் வெவ்வேறாகத் தெரியும் - நீர் நிலையின் தன்மையினால்.

ரமண மகரிஷி போன்றோரில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் , உங்களுக்குள் இருந்து வெளிப்படும் ஆற்றலும் ஒன்றேதான்.

ஒன்று தெளிந்த , அமைதியான நீர் நிலை.

இன்னொன்று கலங்கிய , குழம்பிய , சலனம் உள்ள நீர் நிலை.

சூரியனைக் கேட்டால் அது என்ன சொல்லும் ? அந்த பிம்பங்களுக்குக் காரணம் நான்தான். என் ஆற்றலால, ஒளியால் அவை தோன்றுகின்றன என்று சொல்லும்.

பின் ஏன் வேறு பட்டிருகிறது என்று கேட்டால் , அது நீர் நிலையின் இயற்கையை பொறுத்து அமையும் என்று சொல்லும்.

மீண்டும் மீண்டும் என்னை வெளிப் படுத்துகிறேன் என்று கிருஷ்ணன் கூறுவதன் அர்த்தம் என்ன என்றால் ...நீர்ப் பரப்பில், சலனம் வருகிறது. பிம்பம் கலைந்து போகிறது.

சலனம் குறைந்து தெளிவு வருகிறது....பிம்பம் சரியாக வெளிப் படுகிறது...மீண்டும் சலனம்......

அந்த மாபெரும் சக்தி உங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றால், முதலில்  சலனம் குறைய வேண்டும், கொந்தளிப்பு குறைய வேண்டும், அமைதி  வந்து சேர வேண்டும்....

உங்களை தயார் பண்ணுங்கள்.  மனதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஸ்தித ப்ரஞ்ஞனாய், சலனம் அற்று இருங்கள்.

அளவற்ற சக்தி உங்கள் மூலமும் வெளிப்படும்.



Tuesday, March 18, 2014

கீதை - 9.7 - வாழ்வின் நோக்கம் முன்னேற்றம்

கீதை - 9.7 - வாழ்வின் நோக்கம் முன்னேற்றம் 


सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥९- ७॥

ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||

ஸர்வபூ⁴தாநி =     அனைத்து உயிர்களும்

கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரக்ருதிம்  = இயற்கையில்
யாந்தி  =  பிறக்கின்றன
மாமிகாம் = என்
கல்பக்ஷயே = கல்ப காலத்தின்  முடிவில் 
புந = மீண்டும் 
தாநி = அவை எல்லாம்
கல்பாதௌ³= கல்ப காலத்தின் தொடகத்தில்
விஸ்ருஜாம் = படைக்கிறேன்
அஹம் = நான்



குந்தி மகனே, கல்ப காலத்தின் தொடக்கத்தில் நான் எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றுகின்றன. அந்த காலத்தின் முடிவில் அவை என் நிலையை  அடைகின்றன.

ப்ரக்ரிதிம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள்.  -  ,இயற்கை, சக்தி, இயல்பு, பழக்கம்.

உயிர்கள் இயற்கையில் பிறக்கின்றன.

உரை எழுதிய பல பெரியவர்கள் கல்ப காலத்தின் தொடகத்தில் நான் உயிர்களைப் படைக்கிறேன், இறுதியில் அவை என்னை வந்து அடைகின்றன என்று பொருள்  சொல்லி இருக்கிறார்கள்.

சற்று வேறு கோணத்தில் பார்த்தால்,

காலத்தின் தொடகத்தில் உயிர்கள் இயற்கையில் தோன்றுகின்றன. காலத்தின் முடிவில் அவன் என் நிலையை அடைகின்றன

என்றும் பொருள் சொல்லலாம்.

"என் நிலை"யை அடைகின்றன என்றால் என்ன ? என்னை அடைகின்றன என்று சொல்லவில்லை. என் நிலை என்றால் என்ன ? எது கிருஷ்ணனின் நிலை ?  தன்னைத் தான் அறிந்த ஒரு யோகியின் நிலை.

உயிர்களின் நோக்கம் அந்த இறை நிலையை அடைவது.

அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒரு கல்ப காலம் என்பது ஒரு குறியீடு.

பிறப்பது இயற்கை. பிறந்த பின் அவை தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். முன்னேறி முன்னேறி ஒரு இறை நிலையை அடைய வேண்டும்.

வாழ்வின் நோக்கம் முன்னேறிச் செல்வது.

நீங்கள் முன்னேருகிரீர்களா ? நேற்றையை விட இன்று நீங்கள் சிறந்தவர்களா ?

இன்றைய தினம் உங்களை நாளை ஒரு சிறந்த மனிதனாகச் செய்யுமா ?

நீங்கள் என்ன செய்து கொண்டு இருகிறீர்கள் ?

முன்னேற்றப் பாதையில் இருக்கிறீர்களா ?

வாழ்கை என்ற உந்து சக்தி நமக்கு நாளும் பாடம் நடத்துகிறது. அது மட்டும் அல்ல, தேர்வும் வைக்கிறது. தேர்வில் மதிப்பெண்ணும் தருகிறது.

தேர்வில் தேறாவிட்டால் என்ன ஆகும் ?

அதை அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  கண்ணன்.