கீதை - 9.13 - மகாத்மாக்களின் இயல்பு
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥९- १३॥
மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||
மஹாத்மாந = மகாத்மாக்கள்
து = ஆனால்
மாம் = என்னிடம்
பார்த = பார்த்தா
தை³வீம் = தெய்வீக
ப்ரக்ருதிம் = இயற்கை
அஸ்²ரிதா: = புகல் அடைந்து
ப⁴ஜந்த்தி = சேவை செய்து
அநந்யமநஸோ = மனதில் இருந்து விலகாமல்
ஜ்ஞாத்வா = அறிந்து
பூ⁴தா = தோற்றம்
அதிம் = ஆதியில்
அவ்யயம் = தீராத
மகாத்மாக்கள் தெய்வீக இயல்பை கொண்டு , பூதங்களின் தோற்றமாகிய என்னை , மனம் வேறு எதிலும் செல்லாமல் வழி படுகிறார்கள்
முந்தைய ஸ்லோகத்தில் ஆசை, செயல் மற்றும் சிந்தனை எப்படி மனிதனை அசுரனாக மாற்றுகிறது என்று பார்த்தோம்.
சரி, அசுரர்கள் அப்படி செய்வார்கள் என்றால், மகாத்மாக்கள் என்ன செய்வார்கள் ?
மகாத்மாக்கள்,முதலில் அசுரத் தன்மையை விட்டு தெய்வீக தன்மையை அடைகிறார்கள்.
அது மட்டும் அல்ல, தெய்வீகத் தன்மையை இயற்கையாக அடைகிறார்கள். செயற்கையாகவோ, கட்டாயமாகவோ அல்ல....இயல்பாக தெய்வீகத் தன்மையை அடைகிறார்கள்.
அது என்ன தெய்வீக தன்மை ? அது எப்படி இருக்கும் ?
முதலில் அவர்கள் சேவையில் ஈடு பட்டு இருப்பார்கள். சேவை என்பது என்ன ? பலனை எதிர் பார்க்காமல் செய்யும் வேலை சேவை. அவர்கள் சேவை செய்வார்கள்.
இரண்டாவது, மனதை வேறு எதிலும் செலுத்தாமல் இருப்பார்கள். மனம் ஒருமுகப் பட்டு இருக்கும். சலனம் அடையாது. காற்றில் அசையாத தீபம் போல.
மூன்றாவது, உயிர்களின் தோற்றமான என்னை வழி படுவார்கள். அப்படி என்றால் என்ன ?
உயிர்களின் தோற்றத்தை வழி படுத்தல் என்றால் எல்லா உயிர்களையும் வழிபடுதல் என்று அர்த்தம்.
தோற்றத்தை வழி பட்டால் அதில் இருந்து தோன்றிய அனைத்தையும் வழிபடுவதாகத் தானே அர்த்தம்.
குடும்பத் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினால் அது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பியதாகத்தானே அர்த்தம்.
உயிர்களின் தோற்றமும், உயிர்களும் இரண்டு வேறு வேறு அல்ல.
தங்கமும், தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் , சங்கிலி, வளையல் இவை எல்லாம் வேறு அல்ல. வடிவங்கள் மாறுகின்றன. அடிப்படை ஒன்றுதான்.
என்ன சொல்ல வருகிறார்.....
மகாத்மாக்கள் எல்லா உயிர்களையும் வணங்குவார்கள். உயிர்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று பாகு பாடு பார்க்க மாட்டார்கள்.
எல்லா உயிர்களும் ஒன்று தான், அவர்களுக்கு.
சேவை - சலனம் அடையாத மனம் - எல்லா உயிர்களையும் வணங்குவது.....இவை மகாத்மாக்களின் இயல்பு.